திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 101 முதல் 102 வரை

"மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்" (திருப்பாடல்கள் 119:). மூலம்: "தெ பெர்ரி திருப்பாடல்கள் ஓவிய நூல்". 15ஆம் நூற்றாண்டு. பிரான்சு.

திருப்பாடல்கள் தொகு

நான்காம் பகுதி (90-106)
திருப்பாடல்கள் 101 முதல் 102 வரை

திருப்பாடல் 101 தொகு

அரசரின் வாக்குறுதி தொகு

(தாவீதின் புகழ்ப்பா)


1 இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்;
ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்.


2 மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்;
எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்?
தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்.


3 இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன்.
நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்;
அது என்னைப் பற்றிக்கொள்ளாது.


4 வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்;
தீதான எதையும் நான் அறியேன்.


5 தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை
நான் ஒழிப்பேன்;
கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும்
உள்ளோரின் செயலை
நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்;


6 நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடித்து
என்னோடு வாழச் செய்வேன்;
நேரிய வழியில் நடப்போரை எனக்குப்
பணிவிடை புரியச் செய்வேன்;


7 வஞ்சனை செய்வோருக்கு என் மாளிகையில் இடமில்லை.
பொய் உரைப்போர் என் கண்முன் நிலைப்பதில்லை.


8 நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும்
நாள்தோறும் அழிப்பேன்;
ஆண்டவரின் நகரினின்று
தீங்கிழைப்போரை ஒழிப்பேன்.

திருப்பாடல் 102 தொகு

துன்புறுவோரின் மன்றாட்டு தொகு

(துன்புறும் ஒருவர் மனம் தளர்ந்து
ஆண்டவரை நோக்கித் தம் உள்ளக்
குமுறலை வெளிப்படுத்தும் மன்றாட்டு)


1 ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்!
என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக!


2 நான் இடுக்கண் உற்ற நாளிலே
உமது முகத்தை மறைக்காதீர்!
உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்!
நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்!


3 என் வாழ்நாள்கள் புகையென மறைகின்றன;
என் எலும்புகள் தீச்சூழையென எரிகின்றன.


4 என் இதயம் புல்லைப்போலத் தீய்ந்து கருகுகின்றது;
என் உணவையும் நான் உண்ண மறந்தேன்.


5 என் பெருமூச்சின் பேரொலியால்,
என் எலும்புகள் சதையோடு ஒட்டிக் கொண்டன.


6 நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்;
பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்.


7 நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்;
கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன்.


8 என் எதிரிகள் நாள்முழுதும் என்னை இழித்துரைக்கின்றனர்;
என்னை எள்ளி நகையாடுவோர்
என் பெயரைச் சொல்லிப் பிறரைச் சபிக்கின்றனர்.


9 சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்;
என் மதுக்கலவையோடு கண்ணீரைக் கலக்கின்றேன்.


10 ஏனெனில், உமது சினத்திற்கும் சீற்றத்திற்கும் உள்ளானேன்;
நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர்.


11 மாலை நிழலைப்போன்றது எனது வாழ்நாள்;
புல்லென நான் உலர்ந்து போகின்றேன்.


12 ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்;
உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும்.


13 நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்;
இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.


14 அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்;
அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர்.


15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;
பூவுலகின் மன்னர் யாவரும்
அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.


16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்;
அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.


17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்;
அவர்களின் மன்றாட்டை அவமதியார்.


18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென
இது எழுதி வைக்கப்படட்டும்;
படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.


19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்;
அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.


20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;
சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.


21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும்;
எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும்.


22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும்
ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர்.


23 என் வாழ்க்கைப் பாதையின் நடுவில்
ஆண்டவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்;
அவர் என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.


24 நான் உரைத்தது:
"என் இறைவா! என் வாழ்நாளின் இடையில்
என்னை எடுத்துக் கொள்ளாதேயும்;
உமது காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ?


25 முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்;
விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ!


26 அவையோ அழிந்துவிடும்;
நீரோ நிலைத்திருப்பீர்;
அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்;
அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்;
அவையும் மறைந்துபோம்.


27 நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது. [*]


28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்;
அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்!


குறிப்பு

[*] 102:25-27 = எபி 1:10-12.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 103 முதல் 104 வரை