திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோனா/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

நினிவே மாநகர் மக்கள் நெறிகெட்டவராய் வாழ்ந்து, பாவச் சேற்றில் உழன்று கொண்டிருந்தனர். ஆகவே, அந்நகருக்கு அழிவு வரப்போகிறது என்று அறிவிக்க, கடவுள் யோனாவை அனுப்பினார்.

"யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்:...ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது." - யோனா 2:1,10

கடவுளின் கருணைக்கு அளவு இல்லை; எல்லையும் இல்லை. கனிவு காட்டுவதில் நல்லார் பொல்லார் என்று அவர் வேற்றுமை பாராட்டுவதும் இல்லை. அவரது வாக்கைக் கேட்டு மனம் மாறும் அனைவர்க்கும் அவர் மன்னிப்பு அருள்கின்றார். அடித்தலைவிட அணைத்தலே அவரது இயல்பாகும். பாவிகளின் அழிவையல்ல, அவர்களது மனமாற்றத்தையே அவர் விரும்புகின்றார்.

நினிவே மக்களும் யோனா அறிவித்ததைக் கேட்டு மனம் மாறிக் கடவுளின் மன்னிப்பைப் பெற்றனர். ஆனால் அதைக் கண்டு மனம்பொறாத யோனா சினங்கொண்டார். கடவுளோ அவருக்கும் கருணை காட்டித் தம் இயல்பை வெளிப்படுத்தினார். இக்கருத்துகளை இந்நூல் நயம்பட எடுத்துக் காட்டுகின்றது.

இயேசு கிறிஸ்து தம்முடைய பணியையும் உயிர்ப்பையும் பற்றிப் பேசுகையில், யோனாவை அடையாளமாகச் சுட்டிக் காட்டியது இங்கே குறிப்பிடத்தக்கது.

யோனா தொகு

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. யோனாவின் அழைப்பும் கீழ்ப்படியாமையும் 1:1 - 2:1 1357 - 1358
2. யோனாவின் மன்றாட்டு 2:2-10 1358
3. நினிவேயின் யோனா 3:1-10 1359
4. யோனாவின் சினமும் கடவுளின் இரக்கமும் 4:1-11 1359-1360

யோனா (The Book of Jonah) தொகு

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1 தொகு

யோனாவின் கீழ்ப்படியாமை தொகு


1 அமித்தாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. [1]
2 அவர், "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய்,
அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி.
அவர்கள் செய்யும் தீமைகள் என்முன்னே வந்து குவிகின்றன" என்றார்.
3 யோனாவோ ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணித்
தர்சீசுக்குப் [2] புறப்பட்டார்.
அவர் யோப்பாவுக்குப் போய்,
அங்கே தர்சீசுக்குப் புறப்படவிருந்த ஒரு கப்பலைக் கண்டார்;
உடனே கட்டணத்தைக் கொடுத்து விட்டு,
ஆண்டவர் திருமுன்னின்று தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி,
அதில் இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணப்பட்டார்.


4 ஆனால் ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார்.
கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று;
கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது.
5 கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும்
தம் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள்.
கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக
அவர்கள் அதிலிருந்த சரக்குகளைக் கடலில் தூக்கியெறிந்தார்கள்.
யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
6 கப்பல் தலைவன் அவரிடம் வந்து,
"என்ன இது? இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு.
நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள்.
ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம்.
நாம் அழிந்து போகாதிருப்போம்" என்றான்.


7 பிறகு கப்பலில் இருந்தவர்கள்,
"நமக்கு இந்தப் பெரும் தீங்கு யாரால் வந்தது என்று கண்டறியச்
சீட்டுக் குலுக்குவோம்" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
அவ்வாறே அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.
8 சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது.
எனவே, அவர்கள் அவரை நோக்கி,
"இப்பொழுது சொல். இந்தப் பெருந்தீங்கு யாரால் வந்தது?
உன் வேலை என்ன? எங்கிருந்து வருகிறாய்?
உன் நாடு எது? உன் இனம் எது?" என்று கேட்டார்கள்.


9 அதற்கு அவர், "நான் ஓர் எபிரேயன்.
நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய
ஆண்டவரை வழிபடுபவன்" என்று சொன்னார்.


10 மேலும், தாம் அந்த ஆண்டவரிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறினார்.
எனவே, அவர்கள் மிகவும் அஞ்சி,
"நீ ஏன் இப்படிச் செய்தாய்," என்று கேட்டார்கள்.
11 கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக் கொண்டிருந்ததால்
அவர்கள் யோனாவிடம்,
"கடல் கொந்தளிப்பு அடங்கும்படி
நாங்கள் உன்னை என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்கள்.


12 அதற்கு அவர், "நீங்கள் என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள்.
அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்;
நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள்.
உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல்
என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும்" என்றார்.


13 ஆயினும், அவர்கள் கரை போய்ச் சேர
மிகுந்த வலிமையுடன் தண்டு வலித்தனர்;
ஆனால் அவர்களால் இயலவில்லை.
ஏனெனில், கடலின் கொந்தளிப்பு மேலும் மிகுதியாகக் கொண்டேயிருந்தது.
14 அவர்கள் அதைக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கதறி,
"ஆண்டவரே, இந்த மனிதனுடைய உயிரின் பொருட்டு
எங்களை அழிய விட வேண்டாம்;
குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக
எங்கள் மீது பழி சுமத்தவேண்டாம்.
ஏனெனில், ஆண்டவராகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப
இவ்வாறு செய்கிறீர்" என்று சொல்லி மன்றாடினார்கள்.
15 பிறகு அவர்கள் யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்;
கடல் கொந்தளிப்பும் தணிந்தது.
16 அதைக் கண்டு அந்த மனிதர்கள்
ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினார்கள்.
அவர்கள் ஆண்டவருக்குப் பலி செலுத்தினார்கள்;
பொருத்தனைகளும் செய்து கொண்டார்கள்.


17 ஆண்டவர் ஏற்பாடு செய்திருந்த படியே
ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று.
யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார். [3]


குறிப்புகள்

[1] 1:1 = 2 அர 14:25.
[2] 1:3 - நினிவே நகருக்கு எதிர்த்திசையிலிருந்த ஓர் ஊர்.
இது ஸ்பெயின் நாட்டில் இருந்ததாகக் கருதப்படுகிறது.
[3] 1:17 = மத் 12:40.


அதிகாரம் 2 தொகு

யோனாவின் மன்றாட்டு தொகு


1 யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு,
தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்:


2 "ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில்
நான் உம்மை நோக்கி மன்றாடினேன்.
நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர்.
பாதாளத்தின் நடுவிலிருந்து உம்மை நோக்கிக் கதறினேன்;
என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர்;


3 நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்;
தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழந்துகொண்டது.
நீர் அனுப்பிய அலை திரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன.


4 அப்பொழுது நான்,
'உமது முன்னிலையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டேன்;
இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்'
என்று சொல்லிக்கொண்டேன்.


5 மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை அழுத்திற்று;
ஆழ்கடல் என்னைச் சூழ்ந்தது;
கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.


6 மலைகள் புதைந்துள்ள ஆழம் வரை நான் கீழுலகிற்கு இறங்கினேன்.
அங்கேயே என்னை என்றும் இருத்தி வைக்கும்படி,
அதன் தாழ்ப்பாள்கள் அடைத்துக் கொண்டன.
ஆனால், என் கடவுளாகிய ஆண்டவரே,
நீர் அந்தக் குழியிலிருந்து என்னை உயிரோடு மீட்டீர்.


7 என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த போது,
ஆண்டவரே! உம்மை நினைத்து வேண்டுதல் செய்தேன்.
உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது.


8 பயனற்ற சிலைகளை வணங்குகின்றவர்கள்
உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக் கைவிட்டார்கள்.


9 ஆனால், நான் உம்மைப் புகழ்ந்து பாடி
உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்;
நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
மீட்பு அளிப்பவர் ஆண்டவரே"
என்று வேண்டிக்கொண்டார்.


10 ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட,
அது யோனாவைக் கரையிலே கக்கியது.


(தொடர்ச்சி): யோனா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை