திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/உரோமையர்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

" இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம்."- உரோமையர் 8:22-25

அதிகாரம் 7 தொகு

மணவாழ்க்கை - ஓர் எடுத்துக்காட்டு தொகு


1 சகோதர சகோதரிகளே, சட்டம் தெரிந்த உங்களைக் கேட்கிறேன்:
உயிரோடு இருக்கும் காலம் வரையில்தான்
சட்டம் ஒருவரைக் கட்டுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாதா? [1]
2 எடுத்துக்காட்டாக, மணமான பெண் ஒருவர்
கணவன் உயிரோடு இருக்கும் வரையில்தான்
திருமணச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறார்;
கணவன் இறந்துவிட்டால்,
கணவனோடு வாழ வேண்டும் என்கிற சட்டத்திலிருந்து விடுதலை பெறுகிறார்.
3 ஆகையால், கணவன் உயிரோடு இருக்கும்போது ஒரு பெண்
வேறொருவரோடு வாழ்ந்தால், விபசாரி என்னும் பெயர் கிடைக்கும்.
ஆனால், கணவன் இறந்து போனால்,
அவர் திருமணச் சட்டத்தினின்று விடுதலை பெற்றவர் ஆகிறார்,
ஆகவே பின்பு அவர் வேறொருவருக்கு மனைவியானால், விபசாரி அல்ல.
4 அவ்வாறே, என் அன்பர்களே,
நீங்கள் கிறிஸ்துவின் உடலோடு ஒன்றித்திருப்பதால்
திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள் ஆனீர்கள்;
அதன் விளைவாக இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்துவோடு
நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்;
இவ்வாறு நீங்கள் கடவுளுக்கு ஏற்ற பயன் அளிக்க முடியும்.
5 நாம் நமது ஊனியல்பின்படி வாழ்ந்தபோது,
சட்டத்தை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டு
பாவ இச்சைகள் நம்முடைய உறுப்புகளில் செயலாற்றின;
அதனால் விளைந்த பயன் சாவு.
6 ஆனால் இப்பொழுது நம்மை ஒடுக்கி வைத்திருந்த
சட்டத்தைப் பொறுத்த மட்டில் நாம் இறந்துவிட்டால்,
அச்சட்டத்தினின்று விடுதலை பெற்றோம்.
ஆகையால் எழுதப்பட்ட சட்டத்திற்குரிய
பழைய நெறியில் நாம் ஊழியம் செய்வதைவிட்டுத்
தூய ஆவி அருளும் புதிய நெறியில் ஊழியம் செய்ய முடிகிறது.

திருச்சட்டமும் பாவமும் தொகு


7 அப்படியானால் என்ன சொல்வோம்?
திருச்சட்டமும் பாவமும் ஒன்றுதானா? ஒருபோதும் இல்லை.
ஆயினும் திருச்சட்டம் வழியாய் அன்றிப்
பாவம் என்ன என்று நான் அறிந்திருக்கமாட்டேன்.
எப்படியெனில், "பிறருக்குரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே"
என்று சட்டம் சொல்லாமல் போயிருந்தால்,
அவ்விருப்பம் என்ன என்றே அறிந்திருக்க மாட்டேன். [2]
8 ஆனால், கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு
பாவம் என்னுள் எல்லாவகை ஆசைகளையும் தூண்டிவிட்டது.
ஏனெனில், சட்டம் இல்லையேல் பாவத்திற்கு உயிரில்லை. [3]
9 ஒரு காலத்தில் சட்டம் இல்லாதபோது நான் உயிர் உள்ளவனாயிருந்தேன்.
கட்டளை தரப்பட்டபோது பாவம் உயிர்பெற்றது;
10 நான் உயிரிழந்தேன்.
வாழ்வுக்கு வழியாய் இருக்கவேண்டிய கட்டளை
எனக்குச் சாவுக்கு வழியாயிற்று என்று கண்டேன். [4]
11 கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு
பாவம் என்னை ஏமாற்றி
அந்தக் கட்டளை வழியாகவே என்னைக் கொன்றும் விட்டது.


12 திருச்சட்டம் தன்னிலே தூயதுதான்;
அவ்வாறே கட்டளையும் தூயது, நேரியது, நல்லது. [5]
13 அவ்வாறாயின், நல்லது என் சாவுக்குக் காரணமாக மாறிவிட்டதா?
ஒருபோதும் இல்லை. எல்லாம் பாவத்தின் வேலைதான்!
பாவம் தன் இயல்பை வெளிப்படுத்துவதற்காக
நல்லதொன்றைக் கொண்டு எனக்குச் சாவை விளைவித்து,
இவ்வாறு கட்டளையின் வழியாகப் பாவம் தன் கொடிய இயல்பை
அளவுகடந்த முறையில் வெளிப்படுத்தியது.

மனிதருக்குள்ளே போராட்டம் தொகு


14 திருச்சட்டம் ஆவிக்குரியது என்பது நமக்குத் தெரிந்ததே;
ஆனால் நான் ஊனியல்பினன்; பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன்.
15 ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை;
எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை;
எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன். [6]
16 நான் விரும்பாததைச் செய்கிறேன் எனில்
சட்டம் நல்லது என நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்றாகிறது.
17 ஆனால் அவ்வாறு செய்வது என்னுள் குடிகொண்டிருக்கும் பாவமே; நான் அல்ல.
18 ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில்,
நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும்.
நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை;
அதைச் செய்யத்தான் முடியவில்லை.
19 நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை;
விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20 நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால்,
அதை நானாகச் செய்யவில்லை;
என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.


21 நான் நன்மை செய்ய விரும்பினாலும்,
என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது.
இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கிறேன்,
22 நான் கடவுளின் சட்டத்தைக்குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன். [7]
23 ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்;
என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது;
என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது.
24 அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்!
சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?
25 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்;
அவருக்கு நன்றி!
சுருங்கச் சொல்லின், என் மனத்தால்
கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கும் நானே
என் ஊனியல்பினால் பாவத்தின் சட்டத்திற்கும் கட்டுப்பட்டிருக்கிறேன்.


குறிப்புகள்

[1] 7:2 = 1 கொரி 7:39.
[2] 7:7 = கலா 3:19.
[3] 7:8 = 1 கொரி 15:56.
[4] 7:10 = எசே 20:11.
[5] 7:12 = 1 திமொ 1:8.
[6] 7:15 = கலா 5:17.
[7] 7:22 = 2 கொரி 4:16.


அதிகாரம் 8 தொகு

தூய ஆவி அருளும் வாழ்வு தொகு


1 ஆகவே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு
இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.
2 ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு
வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம்
பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது.
3 ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த
திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார்.
அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த்
தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார். [1]
4 ஊனியல்புக்கேற்ப நடவாமல்,
ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம்
திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார்.


5 ஏனெனில், ஊனியல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம்
அந்த இயல்புக்கு உரியவற்றின்மீதே இருக்கும்;
ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டம்
ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும்.
6 ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே;
ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். [2]
7 ஏனெனில் ஊனியல் மனநிலை கடவுளுக்குப் பகையானது;
அது கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது.
8 ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.


9 ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால்,
நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள்.
கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல.
10 பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும்,
கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்;
அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்.
11 மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி
உங்களுள் குடிகொண்டிருந்தால்,
கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே
உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே
சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.[3]


12 ஆகையால் சகோதர சகோதரிகளே,
நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை;
அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை.
13 நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்;
ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால்,
நீங்கள் வாழ்வீர்கள்.[4]
14 கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.
15 மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை
நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை;
மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே
பெற்றுக் கொண்டீர்கள்.
அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம்.
16 நாம் இவ்வாறு அழைக்கும்போது
நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும்
நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார்.
17 நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம்.
ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள்,
கிறிஸ்துவின் பங்காளிகள்.
அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்;
அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம். [5]

வரப்போகும் மாட்சி தொகு


18 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள்
எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு
ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன்.
19 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப்
படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
20 ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது;
தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை;
அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று;
எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை.[6]
21 அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு,
கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும்
தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.[7]
22 இந்நாள்வரை படைப்பு அனைத்தும்
ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.
23 படைப்பு மட்டும் அல்ல;
முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும்
கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை,
அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.[8]
24 நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது.
எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது.
கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது.
ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா?
25 நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது
அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.


26 இவ்வாறு தூய ஆவியார்
நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்;
ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது
என்று நமக்குத் தெரியாது;
தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத
நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.[9]
27 உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள்
தூய ஆவியாரின் மனநிலையை அறிவார்.
தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில்
இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.
28 மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு,
அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு,
அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்
என்பது நமக்குத் தெரியும்.
29 தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்
தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக்
கடவுள் முன்குறித்து வைத்தார்;
அச்சகோதரர் சகோதரிகள் பலருள்
தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார்.[10]
30 தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்;
தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்;
தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

கடவுளின் அன்பு தொகு


31 இதற்குமேல் நாம் என்ன சொல்வோம்?
கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?
32 தம் சொந்த மகனென்றும் பாராது
அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள்,
தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?
33 கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்?
அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே.
34 அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்?
இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு
கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு
நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!
35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது?
வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா?
ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?


36 "உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம்,
வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்"


என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ![11]
37 ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால்
மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்.
38 ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ,
நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ,
39 உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ,
வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய்
அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது
என்பது என் உறுதியான நம்பிக்கை.


குறிப்புகள்

[1] 8:3 = திப 13:39
[2] 8:6 = கலா 6:8.
[3] 8:11 = 1 கொரி 3:16.
[4] 8:13 = எபே 4:22-24.
[5] 8:15-17 = கலா 4:5-7.
[6] 8:20 = தொநூ 3:17-19.
[7] 8:21 = 2 பேது 3:13.
[8] 8:23 = 2 கொரி 5:2-5.
[9] 8:26 = யாக் 4:3, 5.
[10] 8:29 = 1 கொரி 15:49; பிலி 3:21.
[11] 8:36 = திபா 44:22.


(தொடர்ச்சி):உரோமையர்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை