நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆண்டவன் காப்பாற்றுவான்

43. ஆண்டவன் காப்பாற்றுவான்

அபூதாலிப், கதீஜா பிராட்டியார் ஆகிய இருவரின் பிரிவுக்குப் பின்னரும் பெருமானார் அவர்களுக்கு, குறைஷிகளின் கொடுமைகள் தொடர்ந்தன.

பெருமானார் அவர்கள், ஒருநாள் வழியில் போய்க் கொண்டிருக்கும் போது, குறைஷிகளின் கைக்கூலி ஒருவன் அவர்கள் தலையில் மண்ணை வாரி இறைத்து விட்டான்.

அந்த நிலையிலே அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள்.

பெருமானார் அவர்களின் புதல்வி பாத்திமா பீவி தண்ணீர் கொண்டு வந்து தலையைக் கழுவி விட்டு விட்டு, தந்தையின் மீதுள்ள பாசத்தினால் அழத் தொடங்கினார். அப்பொழுது பெருமானார் அவர்கள், “ அருமை மகளே! அழாதே! ஆண்டவன் உன்னுடைய தந்தையைக் காப்பாற்றுவான்” என்று ஆறுதல் கூறினார்கள்.