நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இணைந்த அன்பு-இனிய உபசரிப்பு

17. இணைந்த அன்பு-இனிய உபசரிப்பு

பெருமானார் அவர்களும், பெருமாட்டியாரும் திருமணத்துக்குப் பிறகு, இணைந்த அன்போடு வாழ்க்கை நடத்தினார்கள்.

எந்தக் காரியமாயினும், பெருமானார் அவர்களின் விருப்பப்படியே பெருமாட்டியார் நிறைவேற்றி வந்தனர்.

தம்முடைய செல்வம் அனைத்தையும் பெருமானார் அவர்களின் ஆதிக்கத்துக்கு அர்ப்பணித்து விட்டனர் பெருமாட்டியார். பெருமானார் அவர்களின் குடும்பத்தினரையும், கூட்டாளிகளையும் பெருமாட்டியார் அன்போடு, வரவேற்று கனிவோடு உபசரித்து அனுப்புவார்கள்.

பெருமானார் அவர்களின் திருமணச் செய்தியைக் கேள்வியுற்று, அவர்களுடைய செவிலித் தாயான ஹலிமா நாச்சியார் மக்காவுக்கு வந்தனர். அவர்களை கதீஜாப் பிராட்டியார் அன்போடு வரவேற்று, இனிதாக உபசரித்து, சில நாட்கள் தங்கள் இல்லத்தில் தங்கி இருக்கச் செய்து கெளரவித்தனர். அவர்கள் விடை பெற்று ஊருக்குப் புறப்படும் பொழுது, நாற்பது ஆடுகளைப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார்கள்.