நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உங்களை நம்புகிறோம்

28. உங்களை நம்புகிறோம்

தம் நெருங்கிய உறவினர்களுக்கு பகிரங்கமாகப் போதனை செய்யுமாறு ஆண்டவனிடமிருந்து தெய்வீக வெளிப்பாடு வந்தது.

பெருமானார் அவர்கள் குறைஷிகளைத் தங்களுடன் மக்காவுக்கு அருகில் உள்ள குன்றுக்குக் கூட்டிக் கொண்டு போய் அக்குன்றின் மீது நின்று கொண்டு, "குறைஷிகளே! இக்குன்றின் பின்புறத்தில் ஒரு படை உங்களைத் தாக்க வந்து கொண்டிருப்பதாக நான் சொன்னால், அதை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள்.

“ஆம், நாங்கள் நம்புவோம். ஏனெனில், நீங்கள் எப்பொழுதும உண்மையையே பேசுபவர்கள் என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்” என்றார்கள் அவர்கள்.

உடனே நபி பெருமானார், “இறைவன் ஒருவனே என்று நீங்கள் உண்மையாக விசுவாசம் கொள்ளவில்லையானால், உங்கள் மீது கடுமையான துன்பம் வந்து இறங்கும் என்று இப்பொழுது நான் எச்சரிக்கிறேன்,” என்றார்கள்.

அவர்கள் அவ்வாறு கூறியதும் குறைஷிகளுக்குக் கோபம் மிகுந்தது.

பெருமானார் அவர்களின் பெரிய தந்தையான அபூலஹப், பெருமானார் அவர்களை அவதூறாகப் பேசியதோடு, அவர்களை நோக்கி மண்ணை வாரி இறைத்தார். பின்னர் குறைஷிகள் மனவருத்தத்தோடு திரும்பிப் போய்விட்டனர்.