நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உயிர்த் தியாகம்

87. உயிர்த் தியாகம்

சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது,ஒரு சமயம் குறைஷிகளின் படை, பெருமானாரின் பக்கமாகத் தாக்கத் தொடங்கியது. தாக்குதல் பலமாக இருந்தது.

அப்பொழுது பெருமானார் அவர்கள், “எனக்காக உயிர் கொடுப்பவர்கள் யார்?” என்று கேட்டார்கள்.

ஸியாத் இப்னு ஸகன் என்பவர், ஐந்து அன்ஸாரிகளுடன் பெருமானார் அவர்கள் எதிரே வந்து, “அந்தச் சேவையை நான் ஏற்கிறேன்” என்றார்.

அவரும், அவருடன் வந்த தோழர்களும், பெருமானார் அவர்களைப் பாதுகாப்பதற்காக வீரமாகச் சண்டையிட்டனர். ஒருவர் பின் ஒருவராக அவர்கள் உயிர் துறந்தனர். அந்நேரம் முஸ்லிம் படைவீரர்கள் திரும்பி வந்தனர். பகைவர்களைப் பின் வாங்கச் செய்தனர்.

ஸியாதியின் உடலை, அருகில் கொண்டு வருமாறு பெருமானார் அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்பொழுது அவர் குற்றுயிராக இருந்தார். ஸியாதின் தலையை, நீட்டிய தங்கள் கால் மீது தாங்குதலாக வைத்துக்கொண்டார்கள் அந்த நிலையிலேயே ஹலரத் ஸியாதின் உயிர் பிரிந்தது.