நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/என்னை யாரிடத்தில் ஒப்புவிப்பாய்?

45. “என்னை யாரிடத்தில் ஒப்புவிப்பாய்?”

அறியாமை மிக்க தாயிப் மக்களின் தொல்லைகள் தாளாமல், பெருமானார் அவர்கள் கடைசியாக, அருகிலுள்ள திராட்சைத் தோட்டத்துக்குப் போய் அந்தப் பந்தலுக்கு அடியில் சோர்வோடு அமர்ந்தார்கள்.

தோட்டத்தின் சொந்தக்காரர் முஸ்லிம் அல்லாத ஒருவர்.

பெருமானார் அவர்களின் அந்த நிலையைக் கண்ட அவர் தம்முடைய ஏவலாள் மூலம் ஒரு முந்திரிக் கொத்தைப் பாத்திரத்தில் வைத்துக் கொடுத்து அனுப்பினார்.

களைப்பாறிய பெருமானார் அவர்கள், இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

“ஆண்டவனே! மனிதர்களின் பார்வையில் நான் கேவலப்படுத்தப் படுவதையும் உன்னிடமே முறையிடுகின்றேன். ஏனெனில், இரக்கம் உள்ளோர் எல்லோரிலும் நீயே மிகவும் இரக்கம் உள்ளவன். நீயே பலவீனர்களைக் காப்பாற்றுகிறவன், என்னையும் நீயே பாதுகாப்பவன். என்னை யாரிடத்தில் ஒப்புவிப்பாய்? என்னைக் கொடுமைப் படுத்தும் அந்நிய விரோதியிடத்திலா? அல்லது என்னுடைய பணிகளுக்கு ஒத்துழைக்கும் நண்பரிடத்திலா? உன்னுடைய அதிருப்தியானது என் மீது இல்லாமல் இருந்தால், எனக்கு மற்றவற்றைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. உன்னுடைய பாதுகாப்பானது மிகவும் விரிவானது உன்னுடைய கோபம் என்மீது இல்லாமல் இருக்கட்டும்! என்னுடைய இன்னல்களை உன் விருப்பம் போல் தீர்த்து வைப்பாயாக! உன்னையன்றி எனக்கு வேறு சக்தியும் இல்லை. உதவியும் இல்லை!”