நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கவிஞர் மன்னிக்கப்பட்டார்

194. கவிஞர் மன்னிக்கப்பட்டார்

அரபு நாட்டில் முஸைனாக் கூட்டத்தில் கஃபுப்னு ஸுஹைர் என்ற கவிஞர் இருந்தார். சிறப்பாகக் கவி பாடுவதில் அவர் வல்லவர். அவர் புகழ் எங்கும் பரவியிருந்தது.

கவிஞர் கஃபு இஸ்லாத்தின் மீது விரோதம் கொண்டு பெருமானார் அவர்களையும், முஸ்லிம்களையும் கண்டித்துக் கவி பாடுவதையே முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தார்.

அதனால் அக்கவிஞரை எங்கே கண்டாலும் சிரச்சேதம் செய்து விடுமாறு பெருமானார் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.

கவிஞர் கஃபின் சகோதரர் முஸ்லிமாயிருந்தார். விக்கிரக வணக்கத்தைக் கை விடுமாறும், இஸ்லாத்தில் சேரும்படியும் கவிஞரை அவர் வற்புறுத்தி வந்தார்.

சகோதரருடைய அறிவுரையால் கவிஞர் மனம் மாறி, மறைமுகமாக மதீனாவுக்குச் சென்றார். அதிகாலைத் தொழுகைக்காகப் பள்ளிவாசலில் இருந்த நபி பெருமானாரைக் கண்டார். அவர்களருகே சென்றமர்ந்து கொண்டு, அவர்கள் திருக் கரத்தின் மீது தம் கையை வைத்தவராக: “இறை தூதே! நான் கவிஞர் கஃபை ஒரு முஸ்லிமாக இப்பொழுது தங்கள் முன்னிலையில் அழைத்து வந்தால், தாங்கள் அவரை மன்னிப்பீர்களா?” என்று கேட்டார்.

“ஆம்” என்றார்கள் பெருமானார் அவர்கள்.

உடனே அவர், “ஸுஹைரின் குமாரனான கஃப் என்னும் கவிஞன் நான்தான்!” என்றார்.

அவர் அவ்வாறு கூறியதும், அன்ஸாரிகளில் ஒருவர் குதித்தெழுந்து, “இறைவனின் இப்பகைவன் கழுத்தை வெட்டுவதற்கு உத்தரவு தருமாறு” பெருமானார் அவர்களை வேண்டினார்.

பெருமானார் அவர்கள், மிக அமைதியாக, “கடந்த காலத்தை நினைத்து மனந் திருந்தியவாரக அவர் வந்திருக்கிறார். எனவே அவரை விட்டு விடுங்கள்” என்று கூறி விட்டார்கள். பின்னர், ஒரு பாடலைப் பாடுவதற்கு அனுமதி தருமாறு பெருமானார் அவர்களை வேண்டினார் கவிஞர் கஃப்.

பெருமானார் அவர்கள் அவரை அனுமதித்தார்கள்.

உடனே, “பானத் ஸுஆது" என்ற சிறப்பு மிக்க ஒரு பாடலைப் பாடினார் கவிஞர் கஃப். ஐம்பத்தியெட்டுப் பாக்களைக் கொண்ட இக்கவிதை அரபு இலக்கியத்தில் புகழ் மிக்கதாகும்.

பெருமானார் அவர்கள் தங்கள் மேனியிலிருந்த மேலாடையை எடுத்து, கவிஞருக்கு அணிவித்து அவரைக் கெளரவித்தார்கள்.