நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தொழுகைக்கு அழைத்தல்

63. தொழுகைக்கு அழைத்தல்

இஸ்லாத்தின் பிரதான கொள்கை ஒரே இறைவனை வணங்குதல்.

எல்லோரும் ஒன்று கூடி வணங்குவதே மேலானது. அவ்வாறு கூடிச் செய்யும் வணக்கத்துக்கு, மக்களை எல்லாம் அழைப்பதற்கு எவ்வித ஒழுங்கும் ஏற்படுத்தப் படாமல் இருந்து வந்தது. மக்கள் முன்னும் பின்னும் தங்கள் நோக்கம் போல் வந்து, தொழுது வந்தார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில், மக்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு ஒரு திட்டமான அடையாளம் இல்லாததால், தொழுகை நேரத்தில் மக்களை அழைத்து வருவதற்காகச் சிலரை நியமிக்கலாம் எனப் பெருமானார் கருதினார்கள். ஆனால், அவ்வாறு செய்வது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதால், எல்லோரும் கூடி ஆலோசித்தனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை கூறினார்கள்:

“தொழுகை நேரத்தில், மக்கள் பார்க்கும்படியான உயரமான இடத்தில் ஒரு கொடியைக் கட்டச் செய்யலாம்” என்றார் ஒருவர்.

“தொழுகை நேரத்தில், மணி அடிக்கச் செய்யலாம்” என்றார் மற்றொருவர்.

“சங்கு ஊதலாம்” என்றனர் சிலர். “அடையாளத்துக்காக, நெருப்பைக் கொளுத்தலாம்” என்று சிலர் கூறினர்.

அவற்றை எல்லாம் பெருமானார் அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

இறுதியாக, உமர் அவர்கள், (இப்பொழுது நடைமுறையில் இருந்து வரும்) பாங்கு-தொழுகைக்காக அழைக்கும் முறையை பெருமானார் அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் மகிழ்ச்சியோடு அதை ஒப்புக் கொண்டார்கள்.

முதன்முதலாக, அம்முறை, அந்தப் புதிய பள்ளி வாசலிலேயே தொடங்கப்பட்டது.