நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/நல்ல காரியங்களையே செய்வீர்களாக!

204. “நல்ல காரியங்களையே செய்வீர்களாக!”

மனிதன் தன்னுடைய செயலினாலேயே மறு உலகில், இலாப நஷ்டத்தைப் பெறுகிறான் என்பதை விளக்கிக் காட்டுவதற்காகப் பெருமானார் அவர்கள், “ஆண்டவனுடைய தூதரின் புதல்வியான பாத்திமாவே! ஆண்டவனுடைய தூதரின் மாமியாகிய ஸபிய்யாவே: ஆண்டவனிடம் செல்வதற்காக நீங்கள் நல்ல காரியங்களைச் செய்யுங்கள். ஆண்டவனிடமிருந்து நான் உங்களைத் தப்புவிக்க முடியாது” என்று சொன்னார்கள். ஆண்டவனுடைய தூதர் என்ற முறையில், பெருமானார் அவர்கள் அவனுடைய கட்டளைகளை வாக்கினாலும், செயலினாலும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதே தங்களுடைய கடமை எனக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவனுடைய உத்தரவு இல்லாமல் ஒரு சட்டத்தையும் தாமாக ஏற்படுத்தவில்லை என்பதை விளக்குவதற்காகப் பெருமானார் அவர்கள், “'நியாயமானது' 'விலக்கப்பட்டது' சம்பந்தமான விஷயங்கள் எதுவும் என்னால் உண்டானதாக நினைக்காதீர்கள். ஆண்டவன் தன்னுடைய வேதத்தில் எதை ஆகுமானதாக்கி இருக்கின்றானோ, அதையே நானும் ஆகுமானதாக்கியுள்ளேன். ஆண்டவன் எதை விலக்கி இருக்கின்றானோ, அதையே நானும் விலக்கி இருக்கின்றேன்” என்று சொன்னார்கள்.