நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/படைதிரண்டு மக்காவை நெருங்குதல்

152. படை திரண்டு மக்காவை நெருங்குதல்

மக்காவுக்குப் போகும் வழியில், அரபிக் கூட்டத்தாரில் பலர், பெருமானார் அவர்களின் படையோடு ஆங்காங்கே சேர்ந்து கொண்டார்கள்,

மக்காவுக்குச் சிறிது தூரத்தில் இருந்த மர்ருஸ் ஸஹ்ரான் என்னும் இடத்தில், முஸ்லிம் படையினர் முகாம் இட்டனர்.

அந்த இடத்துக்கு அருகில் இருந்த மேட்டில், ஒவ்வொருவரும் தனித்தனியாக, அடுப்பு மூட்டிச் சமையல் செய்யுமாறு பெருமானார் அவர்கள் படையினருக்குக் கட்டளையிட்டார்கள்.

அவ்வாறே படைவீரர்கள் பதினாயிரம் அடுப்புகளை மூட்டி, சமையல் செய்ய முற்பட்டார்கள். அதனால் அந்த வட்டாரம் முழுவதும் ஒரே ஒளிமயமாய் இருந்தது.

இதனால் முஸ்லிம்களின் படைபலத்தைக் கண்டு கலங்கி, எதிர்க்காமல் மக்காவுக்குள் குறைஷிகள், தங்களை விட்டு விடுவார்கள். இரத்தம் சிந்தாமலிருக்கும் என்பதற்காகவே நாயகம் அவர்கள் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தார்கள்.

பெருமானார் அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் அவர்கள், முன்னதாக மக்காவிலிருந்து புறப்பட்டு வந்து, வழியில் முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

அது வரை படையெடுப்பை அறியாத குறைஷிகள், திடீரென மேட்டுப் பகுதி எங்கும் ஒரே வெளிச்சமாய் இருப்பதைக் கண்டு, வியப்பும், திகைப்பும் அடைந்தனர்.

அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு, முஸ்லிம் படை தங்கியிருக்கும் இடத்துக்கு அருகில் வந்து, மேட்டுப் பகுதியைக் கூர்ந்து நோக்கினார்கள். வெகு தூரம் வரை அங்கே நெருப்பு எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு கலக்கம் அடைந்தனர்.

“இவ்வளவு, அடுப்புகளையும், ஏராளமான படைகளையும் இதுவரை கண்டது இல்லையே” என வியந்தனர்.

இவ்வாறு அபூ ஸுப்யான் குழு சொல்லிக் கொண்டிருக்கும் போது, அந்த இருட்டு நேரத்தில், அபூ ஸுப்யான் பேரைச் சொல்லிக் கூப்பிட்ட குரல் கேட்டது. யார் தம்மைக் கூப்பிட்டது என அவர் திரும்பிப் பார்த்தார்.

பெருமானார் அவர்களின் சிறிய தந்தையான அப்பாஸ் அவர்களே அவ்வாறு கூப்பிட்டார்கள் என்பது தெரிய வந்தது.

பதினாயிரம் முஸ்லிம் வீரர்கள் படையெடுத்து வந்திருப்பதையும், அவர்களை எதிர்க்க இயலாது என்பதையும் மக்காவுக்குப் போகிறவர்கள் மூலமாகக் குறைஷிகளுக்கு முன்கூட்டியே அறிவித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, பெருமானார் அவர்களின் கோவேறு கழுதையின் மீதேறி, மக்காவை நோக்கி அப்பாஸ் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.