நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மற்றொரு தூதர் வருகிறார்

125. மற்றொரு தூதர் வருகிறார்

குறைஷிகள் நன்றாக ஆலோசித்து, தங்களில் வாக்குச் சாதுரியமானவரான ஸூஹைலுப்னு அம்ரு என்பவரைத் தூதராக, பெருமானார் அவர்களிடம் போய்ப் பேசுமாறு அனுப்பினார்கள்.

“நாயகமும், அவர்களுடன் வந்த முஸ்லிம்களும், அவ்வருடம் மக்காவுக்குள் நுழையக் கூடாது” என்ற நிபந்தனையின் பேரில், சமாதானம் பேச வேண்டும் என்று குறிப்பாகச் சொல்லி அனுப்பினார்கள்.

குறைஷிகளின் தூதர் ஸூஹைல் பெருமானாரிடம் வந்து, குறைஷிகளின் கட்சியை எடுத்துச் சொன்னார். வெகு நேரம் வரை பேச்சு நீடித்தது. இறுதியாக, சில நிபந்தனைகளின் மீது சமாதானம் முடிவாகியது.

நாயகம் (ஸல்) அவர்கள், அலீ அவர்களை அழைத்து சமாதான உடன்படிக்கையை எழுதும்படிக் கட்டளை இட்டார்கள்.

இஸ்லாமிய மரபுப்படி உடன்படிக்கையை ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்” என்று எழுதத் துவங்கினார்கள் அலீ (ரலி) அவர்கள். ஆனால், அரபி தேசத்தார் தொடக்கத்தில், 'பிஸ்மிக்க அல்லாஹூம்ம' என்றுதான் எழுதுவது வழக்கம்.

அவ்வாறே எழுத வேண்டும் என குறைஷித் தூதர் ஸூஹைல் வற்புறுத்தினார். பெருமானார் அவர்களும் அதற்கு இணங்கினார்கள். பிறகு, அவ்வாறே எழுதப்பட்டது.

பின்னர், அலீ அந்த உடன்படிக்கையில், “முஹம்மதுர் ரஸூல்- இறைவனின் தூதர் முஹம்மது அவர்களுக்கும்..." என்று எழுதத் துவங்கினார்கள். உடனே ஸூஹைல் பெருமானார் அவர்களிடம், “நாங்கள் உங்களை இறைவனின் தூதராக ஒப்புக் கொண்டிருந்தோமானால், உங்களுக்கும் எங்களுக்கும் எதற்காக மன வேறுபாடு உண்டாக வேண்டும்? ஆகையால், உங்கள் பெயரையும் உங்கள் தந்தையின் பெயரையும் மட்டுமே எழுத வேண்டும்” என்று சொன்னார்.

அதற்குப் பெருமானார் அவர்கள், “நீங்கள் என்னை, நபியாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், ஆண்டவன் பேரில் சத்தியமாக நான் ஆண்டவனுடைய தூதனாகவே இருக்கின்றேன்” என்று கூறிவிட்டு, அலி அவர்களிடம் ஸூஹைல் கூறியவாறே எழுதுமாறு சொன்னார்கள்.

பெருமானார் அவர்களிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பின் காரணாக, அலி அவர்கள், “தங்களுடைய திருப்பெயரை நான் ஒருபோதும் அழிக்க மாட்டேன்” என்று கூறி விட்டார்கள்.

அதன் பின்னர், பெருமானார் அவர்கள், அந்த வார்த்தை எழுதப்பட்டிருந்த இடத்தைக் காண்பிக்கும்படி கேட்டு, தங்கள் திருக்கரத்தாலேயே அதை நீக்கினார்கள்.

அடுத்து சமாதான நிபந்தனைகள் எழுதப்பட்டன.