நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/யூதர்கள் செய்த தீங்குகள்

99. யூதர்கள் செய்த தீங்குகள்

பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வருமுன்னர், யூதர்களின் செல்வாக்கு அங்கே அதிகமாயிருந்தது.

யூதர்களில் பனூ கைனுகா, பனூ நலிர், பனூ குறைலா என்னும் மூன்று கூட்டத்தினரே முக்கியமானவர்கள். அவர்களே நிலப் பிரபுகளாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தார்கள். வியாபாரமும், கைத்தொழிலும் அவர்களிடமே இருந்தன.

யூதர்களுள் பனூ கைனுகா கூட்டத்தார் நகை செய்யும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். வீரத்திலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள். அவர்களிடம் ஏராளமான யுத்தத் தளவாடங்கள் இருந்தன.

யூதர்களுக்குச் செல்வம், கல்வி, மதம் ஆகியவற்றிலும் செல்வாக்கு இருந்தது. அதனால் அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

மதீனா வாசிகளில் மற்ற இரு பிரிவினரான ஔஸ், கஸ்ரஜ் என்னும் கூட்டத்தினர் கல்வி அறிவு இல்லாதவர்களாகவும், விக்கிரக வணக்கத்தில் ஈடுபட்டவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி உண்டான சச்சரவு காரணமாக நலிவடைந்து, யூதர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தனர்.

யூதர்களிடம் அவர்கள் கடன் வாங்கிக் கொள்வார்கள். மதீனா வாசிகளில் பெரும்பான்மையோர் யூதர்களுக்குக் கடன் பட்டவர்களாகவே இருந்தனர்.

யூதர்கள் கடன் கொடுத்தால், கடுமையான நிபந்தனைகளை விதிப்பார்கள். கடனுக்கு ஆதாரமாகப் பெண்களையும் பிள்ளைகளையும் ஈடு வைக்கும்படிச் சொல்லுவார்கள். செல்வச் செருக்கினால் விபச்சாரம் முதலிய தீய செய்கைகள் யூதர்களிடம் மிகுதியாயிருந்தன. அவர்களைக் கண்டிப்பார் எவரும் இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது, பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள். ஒளஸ், கஸ்ரஜ் என்னும் இரு கூட்டத்தினர் இஸ்லாத்தைத் தழுவினார்கள்; இவர்கள்தாம் அன்ஸாரிகள்-உதவி செய்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து ஓங்கிச் சிறப்படைந்தது.

யூத மதத்திலிருந்த மதிப்பு மக்களுக்குக் குறையத் தொடங்கியது.

ஒளஸ், கஸ்ரஜ் கூட்டத்தார் முஸ்லீம்களான பிற்கு, மிக ஒற்றுமையுடன் இருந்தார்கள்.

யூதர்கள் முன் போலக் கொடுமையான காரியங்கள் செய்ய இயலாதவர்களானார்கள்.

போர்களின் மூலமாக அன்ஸாரிகளுக்கு நிறையப் பொருள்கள் கிடைத்தன. அதைக் கொண்டு யூதர்களின் கடனைத் தீர்த்து, அவர்களுடைய கொடுமையிலிருந்து விடுபெற்றார்கள். அதனாலும், யூதர்களுடைய செல்வாக்குக் குறையத் தொடங்கிற்று.

மேலும், பெருமானார் அவர்கள் யூதர்களிடமுள்ள குறைகளை எடுத்துக் காட்டி, அவர்களைக் கண்டித்து போதனை செய்து வந்தார்கள்.

அதுவும் யூதர்களுக்குப் பெருமானாரின் மீது வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஆனால், பெருமானார் அவர்களுடன் முன்னர் செய்து கொண்ட உடன்படிக்கையை அனுசரித்து, சில காலம் வரை யூதர்கள் விரோதத்தையும், வெறுப்பையும் வெளிக்காட்டாதவாறு இருந்தார்கள்.

பின்னர், பெருமானார் அவர்களுக்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் யூதர்கள் பலவாறு இடையூறு உண்டாக்க முற்பட்டார்கள்.

ஆனால், நாயகம் அவர்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், ஆண்டவனுடைய கட்டளையை ஏற்றுப் பொறுமையுடன் இருந்தார்கள்.

இஸ்லாத்தின் கெளரவத்தைக் குறைப்பதற்காக, யூதர்கள் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார்கள். விக்கிரக வழிபாட்டுக்காரர்களிடம் யூதர்கள் சென்று “உங்களுடைய மதமே இஸ்லாத்தைவிட மேலானது” என்று சொல்லுவார்கள்.

இஸ்லாம் உண்மையான மதம் அல்ல என்றும், அதைத் தழுவியவர்களுக்கு அம்மதத்தில் நிலையான பற்று இருக்காது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடும் யூதர்கள் இஸ்லாத்தில் சேர்ந்து, மறுபடியும் யூத மதத்தில் சேர்ந்து கொள்வார்கள்.

ஒளஸ், கஸ்ரஜ் என்னும் அன்ஸாரிகளின் ஒற்றுமையே இஸ்லாத்தின் வலிமைக்கு முக்கியக் காரணம் என்பதை அறிந்து, அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி விட்டால், இஸ்லாம் நசுங்கிவிடும் என்று அவர்கள் கருதினார்கள்.

அரபி தேசத்தில் பகையை மூட்டி விடுவது மிகவும் எளிதானது.

ஒரு சமயம், மேற்படி இரு கூட்டத்தினரும், வேறு சிலருடன் கூடி ஓர் இடத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குவதற்காக, சில யூதர்கள் அங்கே சென்றார்கள். ஒளஸ், கஸ்ரஜ் கூட்டத்தினர் நலிவடைவதற்கு முக்கியக் காரணமாயிருந்த உஹதுப் போர் பற்றி யூதர்கள் மெதுவாகப் பேசத் தொடங்கினார்கள். அதனால் அக்கூட்டத்தினருக்குப் பழைய நிகழ்ச்சி நினைவுக்கு வந்து, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி விட்டது. சண்டையே மூண்டு விடும் போல் இருந்தது. ஆனால், பெருமானார் அவர்களுக்கு இச்செய்தி தெரிந்து உடனே அங்கே சென்று அவர்களைச் சமாதானப்படுத்தி வைத்தார்கள்.