நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. சுந்தர ஆசாரி

திரு. சுந்தர ஆசாரி

இவர் மேற் சொன்ன சுப்பிராய ஆசாரி கம்பெனியில் சத்தியகீர்த்தியாக (அரிச்சந்திரன் மந்திரி) பல வருடங்கள் நடித்தவர், நன்றாகப் பாடுவார். நடிப்புக் கலையிலும் தேர்ச்சியுடையவர், சுப்பிராய ஆசாரி கம்பெனி கலைந்த பிறகு இவர் சொந்தமாக ஒரு நாடக கம்பெனியை நடத்தினார், ஒரு முறை சென்னையில் நாடகக் கொட்டகை அகப்படாது பச்சையப்பன் கலாசாலைக்கு எதிரிலுள்ள மைதானத்தில் ஒரு கூடாரத்தை அடித்து அதில் சில நாடகங்களை நடத்தினார். அவற்றுள் ஒன்றாகிய சாரங்கதரன் நாடகத்தை நான் நேரில் பார்த்தது ஞாபக மிருக்கிறது, அச் சமயம் கதா நாயகனாகிய சுந்தராசாரியும் கதா நாயகியாகிய அப்பாவு பத்தரும் மிகவும் நன்றாய் நடித்த போதிலும் என் மனதை கவர்ந்த நடிகன் விதூஷகன் வேடம் பூண்ட கோபாலன் என்னும் ஓர் பிராமண சிறுவனே. இந்த நாடகத்தைப் பார்த்த பிறகுதான் நான் இந் நாடகத்தை கொஞ்சம் கதையை மாற்றி எழுதினேன்.