நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/32. அவையறிதல்

32. அவை அறிந்து பேசுக
(அவை அறிதல்)

அறிவு மிக்கவர் அங்கு ஆய்வு நடத்துகின்றனர். கூட்டம் அது என்று நாட்டம் கொண்டு கண்டவர் நுழைகின்றனர். நுணுக்கமான செய்திகளை அவர்கள் கூரிய அறிவு கொண்டு அலசி விவாதிக்கின்றனர். “முட்டை முதலா? கோழி முதலா?” என்று தேவையற்ற கேள்வியைக் கேட்டு அதற்கு ஒரு பக்கம் நின்று வாதாடுகின்றான். இதைப் பற்றி யாருமே முடிவு கண்டதில்லை. வீண் தருக்கம் அடுத்த கேள்வி “பெண் தொடக்கமா? ஆண் ஆரம்பாமா?” இவை நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை; “கடவுள் எப்பொழுது தோன்றினார்?” இது குறுக்குக் கேள்வி. அவையில் கூடிய புலவர்கள் நவையற்ற செய்திகளைப் பேசுகிறார்கள். இவர்கள் கவைக்கு உதவாதவற்றைப் பேசி அவலத்தை உண்டாக்குகிறார்கள். கூட்டம் கலவரத்தில் முடிகிறது. அவைக்கண் கற்றோர் தேவையற்றவரை அனுமதிப்பது அமைதியைக் கெடுக்கும். அசதியை உண்டாக்கும் பெரிய விஷயங்களைச் சிறியவர் முன் பேசுதல் கூடாது.

கூட்டம் இருவகைப்படும். ஒன்று சிறப்புக் கூட்டம்; மற்றொன்று பொதுக் கூட்டம். எதிலும் சில வரைமுறைகள் உண்டு; தலைவர், பேச்சாளர் என்ற பாகுபாடு உண்டு. நன்றி நவில நல்லவர் ஒருவர் நாலு வார்த்தை பேசி முடிப்பர். தலைவர் முன்னுரை பேசி முடிவுரை தருவர். பேச்சாளர் அவர் தான் தலைப்பை ஒட்டித் தலையைச் சுற்ற வைப்பார்; அவையில் அமர்வோர் அடக்கமாக அமர்ந்து சொல்வன கேட்டு அறிய முற்படவேண்டும். புரியாமல் இருந்தால் வெளியே செல்வது கண்ணியம்; அயராது அசையாது அமர்வது நாகரிகம்; வாயைத் திறக்காமல் இருப்பது அவை அறிந்து செயல்படுவது ஆகும்.

பள்ளியிலேயும் பட்டி மண்டபங்களிலேயும் சிலர் செய்யுட்களை மனப்பாடம் செய்து கடல் மடை திறந்ததுபோலக் கனத்த சொற்களில் அடித்துப் பேசுவர். கம்பனைக் கரைத்துக் குடித்துவிட்டவர்போல் இரைத்துப் பேசுவர். இவர்களைக் கல்விக் கடல் என மதித்துக் கரகோஷம் செய்து ஆரவாரித்துப் பாராட்டுவர்.

பட்டிமன்றத்துக்கு என்றே சில படைகள் திரண்டு எங்கும் வெட்டிப் பேச்சு பேசுவதையே புலமை என்று காட்டி வருகின்றனர். இவர்களில் பலர் பதிவுத் தட்டுகள், ஆழ்ந்த புலமை உடையவர் என்று கூற முடியாது. ஆனால் சொல் விற்பன்னர்; சுகமாய்ப் பேசுவர். அதற்கு இப்பொழுது கூட்டம் மிகுதியாகக் கூடுகிறது. அறிவுக்கு விருந்தாகின்றது. வரவேற்கத்தக்க வளர்ச்சி என்றே கூற வேண்டும்.

கல்வி கற்றவர் ஆறி அடங்கி ஒரு சில சொற்களே பேசுவர்; ஓசை எழுப்பி மக்களை மகிழ்விக்கத் தெரியாதவர்கள் இவர்கள்; இவர்களே சான்றோர் என மதிக்கப்படுவர். இவர்கள் பேசக் கூட்டம் கூடாது. நாட்டமும் செலுத்தார். ஆரவாரம் மிக்கது இந்த உலகம்; அறிவு நாடி அணைதல் மிகவும் குறைவு. தப்பித் தவறி முரடர்கள் மேடை ஏறிவிட்டால் கரடுமுரடாகப் பேசிக் கூட்டத்தைக் கெடுத்துவிடுவர். அவையை அடக்கி அமைதி காத்து அழகாகப் பேச வழிவகுப்பதே கற்றோர் அவை; எனவே அவை அறிந்து நாடுக அறிவு தேடுக.

எந்த அவையாக இருந்தாலும் யாரும் பேசிவிட முடியாது. பஞ்சாயத்துக் கூட்டம் என்றாலும் வரன்முறை உண்டு; பண்ணையார் பேசுகிறார் என்றால், மற்றவர்கள் திண்ணையராக அமர்ந்திருக்கமாட்டார்கள். கேள்விகள் தொடுப்பார்கள். பிறரைப் பேசவிட்டுக் கருத்துக்களைத் திரட்டி எதிர் புதிர்களை எடுத்துக்காட்டித் தீர்ப்புகள் செய்வது தக்கது ஆகும். ஊருக்கு வேண்டிய நன்மைகளை நயமுடன் பேசித் தீர்மானங்கள் முடிக்க வேண்டும். கூட்டத்தில் குழப்பம் விளைவித்துத் தம் பண வலிமை. ஆள் வலிமை காட்ட முனைவாரும் உளர்; அவர்களை அங்குப் பேச இடம் தரக்கூடாது. இவை நடைமுறையில் கொள்ளத்தக்கன.

உள்ளீடு இல்லாதவர்கள்; சுயசிந்தனை இல்லாதவர்கள் தம் அறிவால் விளக்கம் தர முடியாதவர்கள் தம் ஆசிரியர்களின் பெருமையைப் பேசி அந்த ஒளியில் குளிர் காய்கிறார்கள். இவர்கள் பட்டம் வாங்கியவராக இருக்கலாம். ஆனால், சுய சிந்தனை, சுய அறிவு எதுவுமே இல்லாதவர்கள். ஒரு சிலர் திருக்குறளை ஒப்புவிப்பார்கள். நூல் பல கற்றவர் என்பது விளங்கலாம். ஆனால் அவர்களை நுண்ணறிவு உடையவர் என்று கூற இயலாது. இவர்கள் கற்றவர்கள் என்று கூறிக் கொள்ளலாம்; அறிவாளிகள் ஆகார்.

சட்டசபைகள் ஜனநாயக அமைப்பால் உருவானவை. மக்களால் மதிக்கத்தக்கவர்கள் இவர்கள் என்று தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். அவைக்கு ஒரு தலைவர் உண்டு; அமைதி நிலைநாட்டவே அவர் அமர்ந்திருக்கிறார்; என்றாலும் ‘அமளிகுமளி’ என்று ஒரு சில செய்திகள் வருகின்றன. “மைக்குகள் கைக்கு வந்தபடி தாக்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன; சட்டைகளைக் கிழித்துக் கொண்டு எதிர்க் கட்சிக்காரர்களும் புதிர்க் கட்சிக்காரர்களும் வெளியேறுகின்றனர். காக்கிச் சட்டை அணிந்த காவல் நிலையத்தார் “ஹாக்கி விளையாடினர்” என்று இப்படித் தாக்கிச் செய்திகள் வராமல் இருப்பது இல்லை. அவை நடைமுறை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு விடை தருவன ஆகும். எப்பொழுதோ சில சமயம் இவ்வாறு நடைபெறுகின்றன என்றாலும் அவை சரித்திரத்தில் இடம்பெற்று விடுகின்றன.

கற்றோர் அவை இதுபோன்ற நிலைக்கு மாறக்கூடாது. கற்றவர் அறிவின் பிரதிநிதிகள்; ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும். இதையே ‘அவை அறிதல்’ என்று உணர்த்தப்படுகிறது.

கல்லாத மூடர் சிலர் அழகுபடப் பேச முடிகிறது என்பதற்காக அவர்களும் கவி அரங்கு ஏறி விடுகிறார்கள். அந்தக் கவிதைகள் தனி மனிதர் புகழ்ச்சிகளாக அமைகின்றன. அதனால் அவை சிறப்புப் பெறுவது இல்லை. மானுடம் பாடுபவனே மகாகவி; தனிமனிதர் துதிபாடுபலர் பழங்கால அரசு அவைக் கவிஞர்; மக்கள் கவிஞர் அல்லர். புகழ்ச்சிக்கே கவிதை என்ற நிலை மாறிப் புதுமைக்குக் கவிதை என்ற நிலைபெற வேண்டும். உணர்வுக்கு முதன்மை தருவது. உள்ளத்துக்கு உலகை ஊட்டுவது; பள்ளத்தில் கிடப்பவரைத் துள்ளி எழச் செய்வது. இந்த அடிப்படையில் இவர்கள் எழுத்து எழுச்சி அமைந்தால் பாராட்டப்படுவர். வெறும் சொல்லடுக்குகள் கவிதை ஆகாது; இவர்கள் அவை ஏறுவதால் அறிஞர்கள் அங்கு இடம்பெறுவது இல்லை. கற்றவர்கள், சிந்தனைமிக்கவர்கள்; கற்பனை உள்ளவர்; இவர்களே அவை ஏறிக் கவிதை அரங்கேறத் தகுதி படைத்தவர் ஆவர்.

வெறும் சொல்லடுக்குகள் வேசியர் தம் புனைவு ஆகும். கற்ற அறிஞர் சொற்கள் கருத்து ஆழம் மிக்கவை; காசுக்கு என்று கவிதை பாடி ஓசைகளை எழுப்பித் தம்மைக் கவிஞர்கள் என்று பேட்டி அளித்துக் கொண்டு இருக்கின்றனர். இன்று ஒசைதான் கவிதை என்று மோசமான நிலையை அடைந்து விட்டது. விளக்கமாகக் கூறட்டுமா? திரைப் பாடல்கள் வெறும் இரைச்சல், கவர்ச்சிக் கன்னிகள் இவர்களை வைத்து ஆடவைத்து ஆபாசத்தை விற்பனை செய்கின்றனர். இப்படி எழுதுகிற திரைப்பட விமர்சனங்கள்; கவிதை ஒன்று இரண்டு சில கருத்துக் கொண்டவை. பல ஆட்டுக்கு ஏற்ற ஓசைத் தாளங்கள்; ஒரே கூளங்கள், இவை பாடல்கள்; மறுக்கவில்லை; கவிதைகள் ஆகா.

விளக்க உரை செய்தால் அதற்கு விருத்தி உரை என்று பெயர். தொல்காப்பியப் பாயிரத்துக்கு என்றே ஒரு விருத்தி உரை உள்ளது. இவ்வளவும் கூறவல்லவன் தமிழ்ப் புலவன். புலமை பெற்று உயர்பவனே அவை அறிந்து பேச வல்லவன் ஆகிறான்.

நூல்பல கற்றவராக இருக்கலாம். நுண்ணறிவு படைத்தவராக இருக்கலாம். அவர்கள் நிறைகுடமாக இருக்க வேண்டும். வாதங்கள், பிரதிவாதங்கள் அவையின்கண் நடைபெறலாம். அவற்றிற்கு அஞ்சாமல் தக்க விடை தரும் தகவு அமைய வேண்டும்.

ஆசிரியத் தொழில் செய்வோர் மாணவர் தரமறிந்து நிலை அறிந்து அவர்கள் வினா அறிந்து விடை தரல் வேண்டும். 'சுட்டுப் போட்டாலும் படிப்பு வராது. குட்டிச் சுவராகப் போ” என்று சாபம் கொடுப்பவர் ஆசிரியர் ஆகார்.

கல்வித் தகுதி மட்டும் போதாது; பண்பாடு கூட்டல் தேவை. கல்வி மனப் பழக்கம்; பண்பாடு செயற்பழக்கம் அது சில சமயம் ‘குடி’ப் பழக்கத்தாலும் அமைவது. அதாவது பிறந்த குடியின் பின்னணி, சார்பு, வளர்ப்பு இவையும் கற்றவனை மதிக்கத்தக்கவனாக ஆக்குகிறது. எனவே கல்வியோடு பண்பும் கலந்தால் அவையின்கண் அவனை அனைவரும் பாராட்டுவர். கல்வி கற்றவர் என்று கருதுவர்.