நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/31. இரவச்சம்

31. இரவலரின் அவலம்
(இரவச்சம்)

இரத்தல் இழிவுதான்; என்றாலும் அதுவும் தேவையாகிறது. ஆனால் அவர்கள்படும் இன்னல் மன உளைச்சல் அதற்கு இல்லை குறைச்சல்.

ஆணவம் பிடித்தவர்கள் பணத்தை ஆளுபவர்கள்; “இந்தப் பிச்சைக்காரர்கள் நம்மால்தான் பிழைக்கிறார்கள். துப்புக் கெட்டவர்கள்; அதனால் இவர்கள் துயரத்துக்கு ஆளாகின்றனர். உள்ளவர் கை மடங்கினால் இல்லை என்பார்க்கு இல்லை வாழ்வு நிலை” என்று ஆணவத்தோடு அறை கூவல் விடுப்பவர் உளர். செல்வத் திமிர்; அதனால் அவர்கள் இப்படிச் செருக்கோடு பேசுகிறார்கள். மருண்ட மனம் உடையவர்கள், இவர்களிடம் தெருண்ட மனம் உடையவர் செல்லுதலைத் தவிர்ப்பர். உலகம் பரந்தது; உள்ளவருள் உயர்ந்தவரும் இருப்பர்; அவர்கள் உதவாமல் இரார்.

இரப்பதற்கு அஞ்சி இழிவான செயல்களில் இறங்குவர்; பழிதரும் பாவங்களையும் துணிவர்; உயிர் வாழ்க்கை உயர்ந்ததுதான்; தவிர்க்க இயலாததுதான்! அதற்காக மனிதன் தாழ்ந்தாபோக வேண்டும். சாவு என்ன கசக்கும் எட்டிக் காயா? “உறங்குவது போன்றது இறப்பு: உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு” என்பது வள்ளுவன் வாக்கு; பிறப்பும் இறப்பும் அதிசய விளைவுகள் அல்ல; அவை மனிதனுக்கு ஏற்படுகின்ற சிறு விபத்துக்கள்; அவற்றைத் துக்கி எறியத் துணிவு இருந்தால் இரந்தும் உயிர் வாழத் தேவை இல்லை. மறந்தும் அவர் இழிதொழில்களை ஏற்கத்தேவை இல்லை. மானம் பெரிது; உழைத்து வாழ முடியும்; நம்பிக்கை தேவை. உள்ளம் உறுதியாக இருந்தால் தலை நிமிர்ந்து வாழ முடியும். பிச்சை எடுக்கத் தேவை இல்லை.

இரக்கின்ற இழிவோடு அரிக்கின்ற வறுமையால், “அன்பு சுரக்கின்ற இல்லம்” என நினைத்து அவன் அடி எடுத்து வைக்கிறான். “ஏன்”டா, தடி கடா மாதிரி இருக்கிறாய்! எங்காவது வேலை செய்து பிழைக்கக் கூடாதா?” என்று எக்களிப்பால் கேட்கிறான் எழுபது லட்சத்துக்கு முதலாளி; வேலை கிடைத்தால் அவன் ஏன் உன் வீடு தேடி வருகிறான். அவன் வந்தது அறிவுரை கேட்க அன்று; பரிவுரை; பங்கீடு பெற அன்று; பண உதவி; அதுதான் எதிர்பார்க்கின்றான். கடிந்து பேசுவது மடத்தனம்; படிந்து பரிவு காட்டுதல் பெருந்தனம்; மதியாதார் வாசல் மிதிப்பது மிகவும் வேதனைக்குரிய செயல் ஆகும். இடன் அறிந்து கேட்க வேண்டும். வந்த பிறகு கடன் அறிந்து உதவ வேண்டும். இதுவே மனித இயல்; பண்பாடு; உடன்பாடு; அதற்கப்புறம் அவர்கள் பாடு.

திருமகள் செல்வச் செருக்கு உடையவள். அவள் எந்த இடத்திலும் நிலைத்து இருக்க மாட்டாள்; அறிவாளி, உழைப்பாளி; சேர்ப்பாளி. இவர்களிடம்தான் தங்கிக் கலகலப்பாள்; சோர்வு இருந்தால், சோம்பல் காட்டினால் அவள் சொகுசாக அவனை விட்டு நீங்கிவிடுவாள். பணத்தை வைத்துக் காப்பாற்ற முயலவேண்டும். பொருள் கைவிட்டுச் சென்றபின் கையறவு பாடினால் பயன் இல்லை. அவன் என்னவோ திட்டமிட்டே செலவு செய்தான். கஷ்டப்பட்டே வாழ்க்கை நடத்தினான். தெய்வம் கை கொடுக்கவில்லை. அது இவனைக் கைவிட்டுவிட்டது. இந்த இரண்டு காரணங்களால்தான் வறுமை வரவேற்புச் செய்கிறது. விரும்பியா ஒருவன் இரக்க வருகிறான். இரக்கமற்றவர் அதனை எண்ணிப்பாரார். எந்த நிலையிலும் பிறர் கையேந்தி வாழாமையே மேன்மைக்கு வழியாகும். ஊக்கம் அதனைக் கைவிடக்கூடாது; வறுமைக்குத் தாக்குப் பிடிப்பது வளர்ச்சியைத் தரும்.

கேட்டால் மறுக்கமாட்டார்கள்; கேட்டு இல்லை என்று சொன்னது இல்லை. திண்ணிய அன்பினர்; கண்ணியம் மிக்கவர் என்றாலும் பூவைக் கசக்கி முகர்ந்தால் பூவும் தன் மணம் கெடும். அதனை விலகி இருந்தே ரசிக்க வேண்டும். வேறு வழியில்லை; அவர்களை அணுகித்தான் அவசியத்தை ஈடு செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் உள்ளம் வேதனை அடையாமல் இருப்பது இல்லை. மனம் உருகுகிறது; வேகிறது; வேதனைப்படுகிறது. முன்பின் பழகாத ஒருவனிடம் சென்று துணிந்து கேட்டுப் பெறுவார் நிலை எண்ணிப் பார்க்கவே அச்சமாகிறது. அந்த அப்பாவிகள் எவ்வளவு துன்பப்படுவார்கள்; எண்ணிப் பார்க்க வேண்டியது. இரத்தல் அச்சம் தருவது; இது கொடியது; வாட்டம் தருவது.

அவசரப்பட்டுப் பிறர் கையேந்தும் நிலைக்குச் சிலர் சென்றுவிடுகின்றனர். கடன் கேட்கத் துணிகின்றனர். நன்கொடை என்று நவில்கின்றனர். பிறரிடம் கை நீட்டிப் பெற்று அப்படி என்ன உனக்கு ஆடம்பர வாழ்க்கை கேட்கிறது? கேட்டால் என்ன சொல்கிறான். “காருக்கு பெட்ரோல் தேவை; டி.வி. இல்லாமல் பொழுது போகாது. பட்டுப்புடவை இல்லை என்றால் பத்துக் கல்யாணத்துக்குப் போக முடியாது. நகை இல்லை என்றால் புன்னகை எதிர் ஒலிக்காது” என்று பேசுகிறார்கள். சிக்கனமாக வாழ்க, சீராக வாழ்க, இந்த இன்பத் துணைகள் இல்லாமல் வாழ முடியும். இன்பம் சுமையாகக் கூடாது. சில சமயம் துன்பங்கள் சுகத்தைத் தரும். சில தேவைகளை மறுத்து வாழ்ந்தால் மகானுபவனாக வாழமுடியும். கவலை நீங்கும். பற்றுகளே பற்றர்க்குறைக்குக் காரணம் ஆகின்றன.

மானிடர் புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கின்றனர். பிறப்பில் புதுமை இருக்கிறது. பழையன மறைகின்றன. புதியன தோன்றுகின்றன. மனிதன் புதியவன்; ஆனால் அவன் பண்பில் செயலில் எந்த வகையிலும் மாறாமல் இருக்கிறான். கஞ்சத்தனம் என்பது அவனோடு தோன்றுகிறது; மனித நேயம் அதனை அவன் மறந்துவிடுகிறான்; பிறர் துன்பம் கண்டு துடிக்கும் தாய்மை அவனிடம் அமைவது இல்லை. மனிதன் மனிதனாகவே இருக்கிறான். வானம் மாறிவிட்டது. ஆனால் மனிதன் மாறிப் பிறக்கக் கூடாதா? மேன்மைக் குணம் பெறக் கூடாதா? “மனிதன் இவன்” என்ற பாராட்டுக்கு உரியவன் பிறக்காமல் போகமாட்டான். ஒருவன் ‘தருக’ என்று கேட்க வருகிறான் என்றால் ‘பெறுக’ என்று தருவது இல்லை; அவன் மனம் கருகக் கடிந்து பேசிவிடுகிறார்கள்.

ஏன் வருகிறான்? எதனால் வருகிறான்? எப்படி வருகிறான்? எவ்வாறு வருகிறான்? சிந்தித்துப் பார்க்க வேண்டியது. அதைச் சிந்தித்துப் பார்க்கச் சீர்மை இல்லை. இது ஒரு விஞ்ஞான உண்மை; சில உந்துதல்கள் காரணம் ஆகின்றன. “இல்லாமை” அவனை வந்து நெருக்குகிறது. என் செய்வான்? படித்தவன்தான், பண்பாளன்தான், அறிந்தவன்தான், வேறு வழி இல்லை தாழ்ந்து விடுகிறான். கூனிக் குறுகி அவன் உன்முன் வந்து நிற்கிறான். ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போதும் அவன் மனம் இடித்து உரைக்காமல் இல்லை. இதை உணராமல், ‘இல்லை’ என்று ஒரே சொல்லில் அவனை அனுப்ப நினைக்கிறார்கள்! என் செய்வான்? அவன் எப்படி வாழ்வான்? உயிர் அதனைப் போக்கும் சுருக்குக் கயிறு; அந்த மறுப்புச் சொல் பொறுப்பற்ற செயல்; கொலைஞர்கள் இவர்கள்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை தெரியுமா? ஒருவன் முந்திக் கொண்டான். தங்க நாணயங்கள் சேர்த்துக் குவித்துக் கொண்டான். அடுத்த வீட்டுக்காரன் அவன் பிந்திச் சென்றான். கால் கை பிடிபட்டு உதைபட்டான். அவரவர் அதிருஷ்டம் அது. வாய்ப்புகள் சிலரை வாழ வைக்கின்றன. சிலரைத் தாழ்த்துக்கின்றன. ஏழையும் வாழ்கிறான். செல்வனும் வாழ்கிறான். ஏறக்குறைய ஒருவனுக்கு ஒருவர் உதவி செய்து கொண்டுதான் வாழ வேண்டும். இல்லாதவர் இருப்பவனைக் கேட்டுப் பெறுவது தவறாகாது. அவசியம்; இதில் ஆவேசப்படத் தேவை இல்லை. அவசரத்திற்கு உள்ளவனைக் கேட்பது இழிவு அன்று: ஆனால் அந்த மடையன் அதை உணர்வது இல்லை; ‘ஈக’ என்று கேட்டுவிட்டாலே ஈனமாகப் பார்க்கிறான். செல்வச் செருக்கு அவன் ஆணவத்தைத் தூண்டுகிறது; அவன் நல்ல குணங்கள் மறைகின்றன. அடுத்த வீட்டுக்காரனாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் தவிர்ப்பது நல்லது; உறவு கெடாது. ஏதோ பகை வெறுப்பு இல்லாமல் வாழ முடியும். கேட்பது தவறு அன்று. தராதவன் அவன் கருமி, அதனால் விலகி நிற்பது நல்லது.

வைர அட்டிகை கதை தெரியுமா? திருமணத்துக்குச் செல்லப் பக்கத்து வீட்டுக்காரியிடம் ‘வைரச் சரடு’ இரவல் கேட்டாள். அங்கே அதைத் தொலைத்துவிட்டாள். என் செய்வாள்? கடன் உடன் வாங்கிப் புதிய வைரச்சரடு வாங்கி எதுவும் விளக்காமல் பக்கத்து வீட்டுக்காரியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டாள். இந்தக் கடனுக்காகக் காலமெல்லாம் உழைத்தாள். ஓடாய்த் தேய்ந்தாள். பக்கத்து வீட்டுக்காரி கேட்டாள். "நீ பேரழகியாக இருந்தாய். இன்று சீர் கெட்டு விட்டாயே ஏன்?” என்று விசாரிக்கிறாள். “எல்லாம் வைரச் சரடுதான்” என்று விளக்கம் கூறுகிறாள்.

“அடிப்பாவி அது வைரம் அன்று; வெறும் போலிக் கல்” என்றாள். அதிர்ச்சி ஏற்பட்டது. “இரவல் வாங்குவது எவ்வளவு தீது” என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டாள். பக்கத்து வீட்டுக்காரி அந்த வைர அட்டிகையைத் திருப்பித் தந்தாள்; அஃது அவளுக்கு அழகு சேர்க்கவே இல்லை. ஒரு சிலர் கொடுத்தும் கெடுத்தும் விடுகின்றனர். இயன்றவரை பிறரைக் கேட்காமல் இருப்பது நல்லது; உறவுகள் நீடிக்கும். இல்லை என்று மறுத்தாலும் அவர்கள் வேதனைப்படுவர். என் செய்வது?