பதிற்றுப்பத்து/ஒன்பதாம்பத்து

பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை

பாடியவர்: பெருங்குன்றூர்கிழார்

பாட்டு - 81 தொகு

உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளம்கெழு கமம்சூல்
அகல்இரு விசும்பின் அதிர்சினம் சிறந்து
கடும்சிலை கழறி விசும்(பு)அடையூ நிவந்து
5  காலை இசைக்கும் பொழுதொடு புலம்புகொளக்
களிறுபாய்ந்(து) இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
அரசுபுறத்(து) இறுப்பினும் அதிர்விலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
10 மாஇரும் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத்
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்
கெடாஅ நல்லிசைத் தம்குடி நிறுமார்
இடாஅ ஏணி வியல்அறைக் கொட்ப
15 நா(டு)அடிப் படுத்தலின் கொள்ளை மாற்றி
அழல்வினை அமைந்த நிழல்விடு கட்டி
கட்டளை வலிப்பநின் தானை உதவி
வேறுபுலத்(து) இறுத்த வெல்போர் அண்ணல்
முழவின் அமைந்த பெரும்பழம் இசைந்து
20 சா(று)அயர்ந் தன்ன கார்அணி யாணர்த்
தூம்(பு)அகம் பழுனிய தீம்பிழி மாந்திக்
காந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவலர் இரவலர்க்(கு) ஈயும்
சுரும்(பு)ஆர் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்
25 பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து
மின்உமிழ்ந் தன்ன சுடர்இழை ஆயத்துத்
தன்நிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்(கு)ஈர் ஓதி ஒள்நுதல் அணிகொளக்
கொடுங்குழைக் கமர்த்த நோக்கின் நயவரப்
30 பெருந்தகைக்(கு) அமர்ந்த மென்சொல் திருமுகத்து
மாண்இழை அரிவை காணிய ஒருநாள்
பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்
முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
தூஎதிர்ந்து பெறாஅத் தாஇல் மள்ளரொடு
35 தொல்மருங்(கு) அறுத்தல் அஞ்சி அரண்கொண்டு
துஞ்சா வேந்தரும் துஞ்சுக
விருந்தும் ஆக நின்பெருந் தோட்கே. (81)


பெயர்: நிழல்விடு கட்டி
துறை: முல்லை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 82 தொகு

பகைபெரு மையின் தெய்வம் செப்ப
ஆர்இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல்சமம் தொலைத்த வினைநவில் யானை
5  கடாஅம் வார்ந்து கடும்சினம் பொத்தி
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்(து) இயல
மறவர் மறல மாப்படை உறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை ஆர்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை
10 இன்ன வைகல் பல்நாள் ஆகப்
பாடிக் காண்கு வந்திசின் பெரும
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
15 புகன்றுபுகழ்ந்(து) அசையா நல்லிசை
நிலம்தரு திருவின் நெடியோய் நின்னே. (82)


பெயர்: வினைநவில் யானை
துறை: முல்லை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 83 தொகு

கார்மழை முன்பின் கைபரிந்(து) எழுதரும்
வான்பறைக் குருகின் நெடுவரி பொற்பக்
கொல்களிறு மிடைந்த பஃறோல் தொழுதியொடு
நெடுந்தேர் நுடங்குகொடி அவிர்வரப் பொலிந்து
5  செலவுபெரி(து) இனிதுநின் காணு மோர்க்கே
இன்னா(தூ) அம்மஅது தானே பல்மா
நாடுகெட எருக்கி நன்கலம் தரூஉம்நின்
போர்அருங் கடும்சினம் எதிர்ந்து
மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே. (883)


பெயர்: பஃறோல் தொழுதி ( = பல் தோல் தொழுதி)
துறை: தும்பையரவம்
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 84 தொகு

எடுத்(து)ஏ(று) ஏய கடிப்புடை அதிரும்
போர்ப்(பு)உறு முரசம் கண்அதிர்ந் தாங்குக்
கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி
நுதல்அணந்(து) எழுதரும் தொழில்நவில் யானைப்
5  பார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல்
பூழியர் கோவே பொலம்தேர்ப் பொறைய
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப
கொடிநுடங்(கு) ஆர்எயில் எண்ணுவரம்(பு) அறியா
பல்மா பரந்தபுலம் ஒன்(று)என்(று) எண்ணாது
10 வலியை ஆதல்நற்(கு) அறிந்தனர் ஆயினும்
வார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்
கால்முளை மூங்கில் கவர்கிளை போல
உய்தல்யா வதுநின் உடற்றி யோரே
வணங்கல் அறியார் உடன்(று)எழுந்(து) உரைஇப்
15 போர்ப்(பு)உறு தண்ணுமை ஆர்ப்(பு)எழுந்து நுவல
நோய்த்தொழில் மலைந்த வேல்ஈண்(டு) அழுவத்து
முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ(டு)
உரும்எறி வரையின் களிறு நிலம் சேரக்
காஞ்சி சான்ற செருப்பல செய்துநின்
20 குவவுக்குரை இருக்கை இனிதுகண் டிகுமே
காலை மாரி பெய்துதொழில் ஆற்றி
விண்டு முன்னிய புயல்நெடும் காலைக்
கல்சேர்பு மாமழை தலைஇப்
பல்குரல் புள்ளின் ஒலிஎழுந் தாங்கே. (84)


பெயர்: தொழில்நவில்யானை
துறை: வாகை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 85 தொகு

நல்மரம் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்அவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேல் முத்தைத் தம்மென
5  முன்திணை முதல்வர் போல நின்று
தீம்சுனை நிலைஇய திருமா மருங்கின்
கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைச்
சூடா நறவின் நாள்மகிழ் இருக்கை
அர(சு)அவை பணிய அறம்புரிந்து வயங்கிய
10 மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்
நனவில் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே. (85)


பெயர்: நாடுகாண் நெடுவரை
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 86 தொகு

உறல்உறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்(று)அமர்க் கடந்த வெம்திறல் தடக்கை
வென்வேல் பொறையன் என்றலின் வெருவர
வெப்(பு)உடை ஆடூஉச் செத்தனென் மன்யான்
5  நல்இசை நிலைஇய நனம்தலை உலகத்(து)
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
பாடுநர் புரவலன் ஆடுநடை அண்ணல்
கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும்
10 புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானே. (86)


பெயர்: வெம்திறல் தடக்கை
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 87 தொகு

சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து
தெண்கடல் முன்னிய வெண்தலைச் செம்புனல்
ஒய்யும் நீர்வழிக் கரும்பினும்
5  பல்வேல் பொறையன் வல்லனால் அளியே. (87)


பெயர்: வெண்தலைச் செம்புனல்
துறை: விறலியாற்றுப்படை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 88 தொகு

வையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாது
கடவுள் பெயரிய கானமொடு கல்உயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத்
தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்
5  துளங்(கு)இரும் குட்டம் தொலைய வேல்இட்(டு)
அணங்(கு)உடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து
பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று
நாம மன்னர் துணிய நூறிக்
கால்வல் புரவி அண்டர் ஓட்டிச்
10 சுடர்வீ வாகை நன்னன் தேய்த்துக்
குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ(டு)
உருகெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்றம் எய்திய பெரியோர் மருக
15 வியல்உளை அரிமான் மறம்கெழு குருசில்
விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பின்
உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
ஆர்எயில் அலைத்த கல்கால் கவணை
நார்அரி நறவின் கொங்கர் கோவே
20 உடலுநர்த் தபுத்த பொலம்தேர்க் குருசில்
வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந
நீநீடு வாழிய பெரும நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றரும் தெய்வத்துக் கூட்ட முன்னிய
25 புனல்மலி பேரியா(று) இழிதந் தாங்கு
வருநர் வரையாச் செழும்பல் தாரம்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
ஓவத் தன்ன உருகெழு நெடுநகர்ப்
பாவை அன்ன மகளிர் நாப்பண்
30 புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு
தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து
திருவில் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்(பு)உறு சேட்சிமை
35 அருவி அருவரை அன்ன மார்பின்
சேண்நாறு நல்இசைச் சேயிழை கணவ
மாகம் சுடர மாவிசும்(பு) உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பல்நாள்
ஈங்குக் காண்கு வந்தனென் யானே
40 உறுகால் எடுத்த ஓங்குவரல் புணரி
நுண்மணல் அடைகரை உடைதரும்
தண்கடல் படப்பை நாடுகிழ வோயே. (88)


பெயர்: கல்கால் கவணை
துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 89 தொகு

வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோ(டு)உறு மடமான் ஏறுபுணர்ந்(து) இயலப்
புள்ளும் மிஞிறும் மாச்சினை ஆர்ப்பப்
பழனும் கிழங்கும் மிசைஅற(வு) அறியாது
5  பல்ஆன் நல்நிரை புல்அருந்(து) உகளப்
பயம்கடை அறியா வளம்கெழு சிறப்பின்
பெரும்பல் யாணர்க் கூலம் கெழும
நன்பல் ஊழி நடுவுநின்(று) ஒழுகப்
பல்வேல் இரும்பொறை நின்கோல் செம்மையின்
10 நாளின் நாளின் நாடுதொழு(து) ஏத்த
உயர்நிலை உலகத் (து) உயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேம் தோன்றி
நோய்இலை ஆகியர் நீயே நின்மாட்(டு)
அடங்கிய நெஞ்சம் புகர்படு(பு) அறியாது
15 கனவினும் பிரியா உறையுளொடு தண்எனத்
தகரம் நீவிய துவராக் கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
வாழ்நாள் அறியும் வயங்குசுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின்
20 வாள்நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே. (89)


பெயர்: துவராக் கூந்தல்
துறை: காவல்முல்லை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 90 தொகு

மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப
அச்(சு)அற்(று) ஏமம் ஆகி இருள்தீர்ந்(து)
இன்பம் பெருகத் தோன்றித் தம்துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக்
5  கழிந்தோர் உடற்றும் கடும்தூ அஞ்சா
ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலம்தந்து
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
அகல்வையத்துப் பகல்ஆற்றி
10 மாயாப் பல்புகழ் வியல்விசும்(பு) ஊர்தர
வாள்வலி உறுத்துச் செம்மை பூஉண்(டு)
அறன்வாழ்த்த நற்(கு)ஆண்ட
விறல்மாந்தரன் விறல்மருக
ஈரம் உடைமையின் நீரோர் அனையை
15 அளப்பரு மையின் இருவிசும்(பு) அனையை
கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை
பல்மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உருகெழு மரபின் அயிரை பரவியும்
20 கடல்இகுப்ப வேல்இட்டும்
உடலுநர் மிடல்சாய்த்தும்
மலயவும் நிலத்தவும் அருப்பம் வெளவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்
25 கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே
மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே
எழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மறை
இரங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந
வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய
30 விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே
உரவுக்கடல் அன்ன தாங்(கு)அரும் தானையொடு
மாண்வினைச் சாபம் மார்(பு)உற வாங்கி
ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை
வார்ந்துபுனைந் தன்ன வேந்துகுவவு மொய்ம்பின்
35 மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில்
ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு
காழ்எஃகம் பிடித்(து)எறிந்து
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும
40 வீங்குபெரும் சிறப்பின் ஓங்குபுக ழோயே
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழைசெத்(து) ஆலும்
தண்புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி
வெம்போர் மள்ளர் தெள்கிணை கறங்கக்
45 கூழ்உடை நல்இல் ஏறுமாறு சிலைப்பச்
செழும்பல இருந்த கொழும்பல் தண்பணைக்
காவிரிப் படப்பை நல்நா(டு) அன்ன
வளம்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
ஆறிய கற்பின் தேறிய நல்லிசை
50 வண்(டு)ஆர் கூந்தல் ஒண்தொடி கணவ
நின்நாள், திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்(டு)ஓர் அனைய வாக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி
வெள்ள வரம்பின ஆ(க)என உள்ளிக்
55 காண்கு வந்திசின் யானே செருமிக்(கு)
உரும்என முழங்கும் முரசில்
பெருநல் யானை இறைகிழ வோயே. (90)


பெயர்: வலிகெழு தடக்கை
துறை: காட்சிவாழ்த்து
வண்ணம்: ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்


பதிகம் தொகு

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்றமகன்
வெருவரு தானையொடு வெய்(து)உறச் செய்துசென்(று)
இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
5  அருமிளைக் கல்லகத்(து) ஐந்(து)எயில் எறிந்து
பொத்தி ஆண்ட பெரும்சோ ழனையும்
வித்தை ஆண்டஇளம் பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வாஞ்சி மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி
10 மந்திர மரபின் தெய்வம் பேணி
மெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானைப்
புரைஅறு கேள்விப் புரோசு மயக்கி
அருந்திறல் மரபின் பெருஞ்சதுக்(கு) அமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்(து)இவண் நிறீஇ
15 ஆய்ந்த மரபில் சாந்தி வேட்டு
மன்உயிர் காத்த மறுஇல் செங்கோல்
இன்இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: நிழல்விடு கட்டி, வினை நவில் யானை, பஃறோல் தொழுதி,
தொழில் நவில் யானை, நாடுகாண் நெடு வரை, வெந்திறல் தடக்கை,
வெண்டலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை:
இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க என்று உவகையின்
முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் ப
டைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல
வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் தான்விட்டான் அக்கோ.
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.