பாப்பா முதல் பாட்டி வரை/014-024

தாய்க்குப் பெண்ணாய், குழந்தைக்குத் தாயாய்

பெண்ணாகப் பிறந்து, திருமணமாகி, தாய்மை அடைவதன் மூலமே, வாழ்க்கை பரிபூரணமாகிறது.

பூப்பெய்தல், திருமணமாதல், மாதவிடாய் நின்று போதல் ஆகியவை, ஒரு பெண்ணின் மூன்று இன்றியமையாத கட்டங்களாகும்.

பெண் குழந்தைகள் விஷயத்தில் 10 வயது முதலே, பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த வயதில்தான் உடலில் உள்ள சுரப்பிகள் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்போது பெண்ணுக்கு மனப் பக்குவம் மிக மிக அவசியம். குழந்தை பூப்பெய்தப் போவதற்கான, இயற்கையின் முன்னேற் பாடாக, உடல் உறுப்புகள் வளர்ச்சி அடைதல் தொடங்கும். பால் உறவு குறித்தும், இனவிருத்தி எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும், தாய் மறைக்காமல் குழந்தைக்குப் பக்குவமாகச் சொல்ல வேண்டும். மனம் போன போக்கில் செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளையும், முன்கூட்டியே தாய் சொல்ல வேண்டும்.

தற்போது மகளின், படிப்பில் பெற்றோர் அதிகக் அக்கறை செலுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. எந்தவிதப் பாதிப்பும் இன்றி, முழுமையான கல்வி அறிவு பெற்று, மகளுக்கு வளமான வாழ்க்கை அமைய, 10 வயது ஆன உடனேயே பக்குவமாக, அனைத்து விஷயங்களையும் தாய் சொல்லித் தருவது மிகவும் நல்லது. ஏனெனில், சிறு வயதிலேயே, இவ்வாறு மனப் பக்குவத்தை, மென்மையாக ஏற்படுத்திவிட்டால் பிளஸ் 2 படிக்கத் தொடங்கும்போது, அவர்களே பொறுப்புள்ளவர்களாக மாறி, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து விடுவார்கள்.

மாதவிடாய்ப் பிரச்சனை : ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை 7-ம் வகுப்பு படிக்கும்போது, பூப்பெய்துகிறாள். பூப்பெய்துவதற்கு ஒரு மாதம் முன்பு முகத்தில் பருக்கள் வரும். இது சற்று அதிர்ச்சியாக இருக்கும். பூப்பெய்த பிறகு, பெரும்பாலும் மாதம் ஒரு முறை மாதவிடாய் வரும். சில பெண்களுக்கு இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மாதவிடாய் வரும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருவது, போகப் போகச் சரியாகிவிடும். ஆனால், தொடர்ந்து இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வந்தால், மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். பூப்பெய்த பிறகு, விட்டு விட்டு மாதவிடாய் வருவது 6 மாதத்துக்குத் தொடர்ந்தாலே, மருத்துவ சிகிச்சை அவசியம்.

மாதவிடாய்க் காலத்தில், இடுப்பில் வலி இருக்கும். சிலருக்கு மாதவிடாய்க்கு முன்பும், பின்பும் இடுப்பில் வலி இருக்கும். வலி இருக்கும் போது, வெந்நீரில் குளித்தால் சற்று நிவாரணம் கிடைக்கும். மாதவிடாய் நின்றவுடன், வலி போய்விடும். மாதவிடாய்க் காலத்தில், இடுப்பு உறுப்புகளில் ரத்த ஒட்டம் அதிகமாக இருப்பதால்,தான், இடுப்பு வலி ஏற்படுகிறது. மாதவிடாய் நின்ற பிறகும், இடுப்புவலி தொடர்ந்தால், அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில், கர்ப்பப் பை, சினைப் பையில் கட்டி இருந்தால், வலி தொடருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஸ்கேன் செய்து உரிய சிச்சை பெறுவது அவசியம்.

பெண்ணின் திருமண வயது21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஏன் ? : பெண்ணுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்; பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதிக்கக் கூடாது. ஏனெனில், 21 வயதாகும் போது தான், இடுப்பு எலும்புகள், சினைப் பை, கர்ப்பப் பை ஆகியவை, முழுமையான வளர்ச்சி அடைந்து, மகப்பேற்றுக்குத் தயாராகின்றன.

16 வயதிலோ அல்லது 18 வயதிலோ திருமணம் செய்தால், தாய்க்கு உள்ள ஊட்டச் சத்துக் குறைவு காரணமாகக் குழந்தையும் சரியாக வளராது. பிரசவத்தின் போது, குழந்தையின் தலை வெளியே வராமல், சிசேரியன் செய்ய வேண்டி வரும். பிரசவத்தைத் தாங்கக் கூடிய அளவுக்கு மனப்பக்குவம் இருக்காது. சாதாரண வலியையே, பிரசவ வலியாக நினைத்து, அழுதுகொண்டே இருப்பார்கள். ஆனால் 21 வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு, எதையும் தாங்கும் மன வலிமையும், மனப் பக்குவமும் ஏற்பட்டு விடும்.

முதல் இரவை முன்னிட்டு : திருமணத் தேதியை முன்னிட்டு, முதல் இரவுக்காக, மாதவிடாயைத் தள்ளிப்போட, மணமகள் மாத்திரை சாப்பிடுவது மிகத் தவறு. மாத்திரை சாப்பிட்ட பின்பு, மாதவிடாய் தள்ளிப்போகும் திருமணம் நடக்கும். அதே மாதவிடாய், மாதச் சுழற்சியிலேயே கருத்தரிக்கும் நிலையும் ஏற்பட்டால், கருவில் உருவாகும் குழந்தை, ஊனமாகப் பிறக்கும் ஆபத்துக்கள் அதிகம். கருத்தரித்த 4-வது மாதத்தில் ஏற்படும் வேறு பிரச்சினைகள் காரணமாக, ஸ்கேன் செய்யும்போது, குழந்தைக்கு உள்ள ஊனம் தெரியவந்து, கருச்சிதைவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, திருமணத்தை முன்னிட்டு மாதவிடாயைத் தள்ளிப்போட, மாத்திரை சாப்பிடக்கூடாது.

தவறான முறையில் கருச்சிதைவு : அனுபவமற்ற மருத்துவர்கள் மூலம் கருச்சிதைவு செய்து கொள்வதும், ஆபத்தில் முடியும். அனுபவமற்ற மருத்துவர்கள் மூலம், முதல் குழந்தையைக் கருச்சிதைவு செய்யும் நிலையில், உதிரப்போக்கு அதிகமாகி, நோய்த் தொற்று ஏற்படும். கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, தொடர்ந்து குழந்தைப் பேறே இல்லாத நிலை ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

திட்டமிடல் அவசியம் : திருமணமானவுடன், முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்வதை, அதிக காலம் தள்ளிப்போடுவது நல்ல தல்ல. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, நான்கைந்து மாதங்கள் தள்ளிப் போடுவது நல்லது. அதற்கு, நிரோத் போன்ற தற்காலிக கருத்தடைகளை ஆண்கள் பயன்படுத்தலாம்.

கருத்தடை மாத்திரைகள் வேண்டாம் : குழந்தைப் பிறப்பைத் தள்ளிபோட, பெண் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால், அதுவே மாதவிடாப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்து விடுவதும் உண்டு. தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிட்டு, பின்னர் மாத்திரை சாப்பிடாமல் கருத்தரிக்கும் நிலையில், கர்ப்பப் பையில், கரு பதிவதற்குப் பதிலாகக் கருக்குழாயிலேயே பதிந்து வளர ஆரம்பித்துவிடும். இது ஆபத்தானது. இதற்கு Ectopic Gestation என்று பெயா்.

அறிகுறிகள்: இதுபோன்று, கருக்குழாயில் கரு வளரும் நிலையில், மாதவிடாய் தள்ளிப்போகும் நிலையிலேயே வயிற்று வலி கடுமையாக இருக்கும். அதுவும் ஒருபக்கம் மட்டும் வலி கடுமையாக இருக்கும். சிறுநீர்ப் பரிசோதனை மூலம், கர்ப்பம் ஊர்ஜிதமானவுடன், இதுபோன்ற நோயாளிகளின் கர்ப்ப பையின் வாயிலை மருத்துவர்கள் தொட்ட உடனேயே அலறி மயக்கம் அடைந்து விடுவார்கள்.

சிகிச்சை : லேப்ராஸ்கோப் மூலம், கருக்குழாயில் கரு பதிந்திருப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டு, கருக்குழாயில் நேரடியாக ஊசி மருந்தைச் செலுத்தி, கருவைச் சிதைத்து விட வேண்டும்.

கர்ப்பம் தரித்தவுடன் : கர்ப்பம் தரித்தவுடன், முதல் மூன்று மாதங்களுக்கு உடல் உறவு கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில், உடல் உறவு கொள்வதால், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பம் தரித்துவிட்டோம் என்ற உணர்வே, பெண்களுக்கு வாந்தியை ஏற்படுத்தி விடுகிறது. உடலில் உள்ள ‘புரோஜஸ்டிரான்’ ஹார்மோன்களும், எச்சிஜி வேதிப்பொருள்களும், அதிக அளவில் உற்பத்தி ஆவதால், ஒவ்வாமை அதிகமாகி, வந்தி ஏற்படுகிறது. வாந்தி மூலம், உடலில் உள்ள நீர்ச் சத்து அதிகமாக வெளியேறுகிறது. வாந்தி அதிகமாக இருக்கும் நிலையில், நீர் இழப்பைத் தடுக்க, மருத்துமனையில் சேர்ந்து ‘டிரிப்ஸ்’ (குளுக்கோய்ஸ்) ஏற்றிக்கொள்வது நல்லது.

முதல் இரண்டு மாதங்கள்: கர்ப்பம் தரித்த முதல் இரண்டு மாதங்கள், மிக முக்கியமான காலகட்டமாகும். ஏனெனில், குழந்தையின் கை, கால் உள்பட அனைத்து உறுப்புகளும், முதல் இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக வளர்ச்சி அடைகின்றன. இந்த இரண்டு மாதங்களில், மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையையும் சாப்பிடக்கூடாது. மாத்திரைகளைச் சாப்பிடுவது, குழந்தையின் உடல் உறுப்புகளைப் பாதிக்கும். எக்ஸ்ரே எடுக்கவே கூடாது.

கர்ப்பம் தரித்த முதல் இரண்டு மாதங்களில், காலையில் எழுந்தவுடன், வாந்தி உணர்வும், சோர்வும் இருக்கும். வயிறு காலியாக இருப்பதால், அமிலங்கள் அதிக அளவில் சுரந்து, வாந்தி வரும். மாலையில் வாந்தி இருக்காது. எளிதாக ஜீரணிக்கக்கூடிய இட்லி, பருப்பு சாம்பார், மோர், இளநீர், சூப் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். தினமும், காலை இரு வேளையும், மாலையில் இரு வேளையும், மொத்தம் 4 பெரிய டம்ளர் பால் குடிப்பது, தாய்க்கும், குழந்தைக்கும், மிகவும் நல்லது. சாத்துக்குடிப் பழச்சாறில், குளுக்கோஸ் போட்டுச் சாப்பிடுவது, குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

முதல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சோர்வு நீங்கி முகம் தெளிவாகி விடும். மிகவும் கடினமான வேலைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாது. மதியம் 2 மணி நேரம், கட்டாயம் தூங்கி, ஓய்வு எடுக்க வேண்டும். தூங்கும்போது, தாயின் உடல் உறுப்புகள் அனைத்தும், ஓய்வு எடுக்கும் நிலையில் குழந்தைக்கு அதிக ரத்தம் போகும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.

நேராக ஏன் படுத்து தூங்கக் கூடாது? : கர்ப்பிணிப் பெண்கள் நேராகப் படுத்துக் தூங்கக்கூடாது. நேராகப் படுத்துக் தூங்குவதால், தாயின் ரத்தக் குழாய்களைக் கர்ப்பப் பை அழுத்தவதால், இதயத்துக்குச் செல்லும் ரத்த அளவு குறையும். இதனால் கருவில் உள்ள குழந்தைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். எனவே, கர்ப்பிணிகள், இதயம் உள்ள இடப்புறமாக ஒருக்களித்துப் படுத்துத்தான் எப்போதும் தூங்க வேண்டும்.

அயோடின் உப்பே நல்லது : கர்ப்பம் தரித்தவுடனாவது, கல், உப்பைச் சமையலில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், இவ் விஷயத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். ஏனெனில், அயோடின் சத்து இல்லாவிட்டால், குழந்தை பிறந்தவுடன், அதற்குக் கழலை நோய்கள் வர வாய்புக்கள் உண்டு. எனவே, அன்றாடம் சமையலுக்கு அயோடின் கலந்த பாக்கெட் உப்பையே பயன்படுத்த வேண்டும்.

கர்ப்பம் ஊர்ஜிதமான உடனேயே ரத்தப் பிரிவு, ரத்த அழுத்தம், எடை, உயரம், சிறுநீரில் சர்க்கரை அளவு, சிறுநீரில் உப்பு, ஆகிய பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். கர்ப்பம் ஊர்ஜிதமானவுடன், பெண்ணின் எடை 45 கிலோவும், உயரம் 150 செ.மீரும் இருத்தால் நல்லது. முதல் மூன்று மாதங்களில், அரை கிலோ கிராம் அளவுக்கே எடை அதிகரிக்கும். 4-வது மாதத்திலிருந்து, மாதம் ஒன்றுக்கு இரண்டு கிலோ வீதம் அதிகரிக்க வேண்டும். எடை அதிகரிக்காமல் போனாலோ, அல்லது எடை 3 கிலோ அளவுக்கு அதிகரித்தாலோ, பிரச்சினை வரும். அதிக ரத்த அழுத்தம். சிறுநீரில் உப்பு, அதிக எடை காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்குக் கை, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால், கருவில் உள்ள குழந்தைக்குப் போதிய ரத்தம் கிடைக்காமல், அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். கை, கால்களில் வீக்கம் தெரிந்த உடனேயே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

ஏன் உணர்ச்சிவசப்படக் கூடாது : கர்ப்பிணிகள் உணர்ச்சிவசப்படுவதோ, கோபப்படுவதோ நல்லது அல்ல. ஏனெனில், கோபப்படும்போது, அட்ரீனலின், சுரப்பிகள் அதிகமாகச் சுரந்து, ரத்தக் குழாய்கள் சுருங்கி கருவில் உள்ள குழந்தைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

ரத்தப் பிரிவு ஏன் முக்கியம்? : கருத்தரித்தவுடன் ரத்தப் பிரிவைக் கட்டாயம் சோதனை செய்து கொள்ள வேண்டும். தாயின் ரத்தப் பிரிவு (ஆர்எச்) நெகட்டிவாக இருந்தால், கர்ப்ப காலத்தின் ஏழாவது மாதத்தில், ஒரு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் ரத்தப் பிரிவு பாசிட்டிவாக இருந்தால், தாயின் கருப்பையில் உள்ள எதிர் அணுக்களை அழிப்பதற்குக் குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் ஊசி போட வேண்டும். அப்படிப் போடாவிட்டால் அடுத்த கரு உருவாகும் போது அது தங்காமல் போய்விடும்.

மூன்று ஆண்டுகள் வரை : முதல் குழந்தைக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு, அடுத்த குழந்தையைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பது தான் நல்லது. அப்போதுதான், முதல் குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதோடு, தாயும் தன் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளமுடியும்.

கருத்தரிப்பைத் தடுக்கும் முறைகள் : முதல் குழந்தை பிறந்தவுடன் மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் கருத்தரிப்பைத் தடுக்கலாம். மாத விலக்கான 5-ம் நாள் தொடங்கி, தொடர்ந்து 22 நாள்கள் மறக்காமல், மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலம், கருத்தரிப்பை தடுக்கலாம்.

மாத்திரைகளைச் சாப்பிட மறந்து விடக்கூடும் என்பதால் பெரும்பாலான பெண்கள் காப்பர்-டி அணிந்து கொள்கின்றனர். ஆண்களுக்கான நிரோத் கருத்தடைச் சாதனத்தைவிட, காப்பர்-டி மிகுந்த பாதுகாப்பானது காப்பர்-டியை ஒரு முறை அணிந்துகொண்டால், மூன்று ஆண்டுகளுக்கு கவலை இல்லை.

கருத்தடை அறுவைசிகிச்சை : குழந்தைகள் வளர்ந்த பிறகு கருத்தடை அறுவை சிகிச்சையை (டியூபக்டமி) பெண்கள் செய்து கொள்வது நல்லது.

குழந்தைப் பிறப்பைத் தடுக்க, ஆண்களும் உதவ முடியும். வாஸ்க்டமி அறுவை சிகிச்சையை ஆண்கள் செய்துகொண்டால், குழந்தைப் பிறப்பைத் தடுத்து விடலாம். விரைப் பையின் மேல்புறத்தில் மிகச் சிறிய வெட்டு ஏற்படுத்தி, வாஸ் டெபரேன்ஸ் நாளத்தின் ஒரு பகுதியைத் துண்டித்தலே, வாசக்டமி அறுவை சிகிக்சையாகும்.

அவசியம் ஏற்பட்டால், கருத்தடை செய்துகொண்ட பெண்களுக்கோ, அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண்களுக்கோ, மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை பிறக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விடலாம்.

மாதவிடாயிலிருந்து விடுதலை : பெண்களுக்கு 45 முதல் 47 வயதாகும்போது, மாதவிடாய் நின்று விடும். முதுமை அடைந்துவிட்டோம் என்ற உணர்வை அது ஏற்படுத்தும். அதே சமயம், மாதத் தொல்லை போச்சு என்ற விடுதலை உணர்வும் தோன்றும்.

அறிகுறிகள் : கை-கால்-இடுப்பு வலி, அதிகச் சோர்வு, உடல் உஷ்ணமாக இருத்தல், தலையிலிருந்து கால் வரை வியர்த்தல், ஆகியவை மாதவிடாய் நிற்கப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகள்.

மாதவிடாய் நிற்கும் காலத்தில், குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக நடந்துகொள்ள வேண்டும். சிரமமான வேலைகளைப் பெண்கள் செய்யக்கூடாது. மருத்துவரின் ஆலோசனையுடன வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்டால், உற்சாகமாக இருக்கலாம். 50 வயதிலும் மாதவிடாய் நிற்காவிட்டால், மருத்துவரிடம் ஆலோசனை கலப்பது அவசியம்.