பாப்பா முதல் பாட்டி வரை/021-024

முதுகு வலி வருவது ஏன்?

உலக மக்கள் அனைவரையும் பாதிக்கும் நோய், முதுகு வலி. அது ஒரு நாட்டின் உற்பத்தித் திறனையே பாதிக்கும். இதற்கு மூல காரணம், தகுந்த உடற்பயிற்சி இல்லாதது தான்.

இளம் வயதினர், தகுந்த உடற்பயிற்சி இல்லாமல் திடீரென ஒரு பாரத்தைக் தூக்க முயன்றால், அவர்களுக்கு முகுகு வலி ஏற்பட்டு, தசை விலகலாம். இதை மூச்சுப் பிடிப்பு என்று மக்கள் கூறுவது வழக்கம். இந்தத் தசைப் பிடிப்பு, கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகளுக்கு அதிகம் ஏற்படுகிறது.

தசைப் பிடிப்பு ஏற்படுவதைத் தடுக்க : இதற்கு, தினமும் சரியான உடற்பயிற்சி செய்வது மட்டுமன்றி ஒரு பளுவை மேலே தூக்க வேண்டுமானால், அதற்குண்டான முறையில் (Properposition) தனது கால்களையும், முதுகையும், கைகளையும் வைத்துக்கொண்டு தூக்க வேண்டும். இவ்வாறு தூக்கும்போது, தசைப் பிடிப்பு வராது. இத் தகைய தசைப் பிடிப்பு ஏற்பட்டவா்களுக்குத் தற்போது எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம், தசை விலகல் எந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது என்று அறிந்து காெள்ளலாம். எம்ஆர்ஐ ஸ்கேனில், (Disc Proplapse) (இரண்டு முதுகெலும்புக்கும் நடுவில் உள்ளதசை (disc) கடினமான வேலை செய்யும்போது, விலகி, பின்புறம் உள் நரம்பை அழுத்துவதால் வலி உண்டாகும்.) ஏற்பட்டுள்ளதைத் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். இவ்வாறு உள்ளவர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்து, நரம்பை அழுத்திக் கொண்டிருக்கும் ஜவ்வை அகற்றினால்தான் வலி குறையும்.

முதுகெலும்புகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி, விடுவதால் முதுகு வலி வரலாம். இந்த முதுகெலும்பு விலகுவதால் வரும் வலி, பெரும்பாலும் பிறவியிலிருந்தே உள்ளது. இதனால் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், எலும்பு விலகாமல் இருக்க, அறுவை சிகிச்சை மூலம், பிளேட் ஸ்குரு பொருத்த வேண்டும்.

முதுகு எலும்பு தேய்வதால்... : 50-60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் முதுகு வலி, பெரும்பாலும் முதுகெலும்பு தேய்வதால் ஏற்படும் விளைவே ஆகும். இவ்வாறு முதுகெலும்பு தேய்வதால், உண்டாகும் முதுகுவலிக்கு, அறுவை சிகிச்சை தேவைப்படாது. அவர்களுக்குத் தகுந்த உடற்பயிற்சி அளித்து, உடல் பருமனாக இருந்தால், எடையைக் குறைத்து, நிவாரணம் பெறலாம். கிட்டத்தட்ட, ஒரு மாதம் உடற்பயிற்சி செய்தும், மருந்து சாப்பிட்டும், முதுகு வலி குணமடையாவிட்டால், மேற்கொண்டு எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஸ்கேன், போன்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

மிகக் குறைந்த சதவீதம் உள்ள முதுகு வலி, தண்டு வடத்துக்கு உள்ளிருக்கும் கட்டியின் (Tumour) காரணமாகவும் இருக்கலாம். அப்படியிருந்தால் எம்ஆர்ஐ ஸ்கேன் துணையடன் கண்டறிந்து, அறுவை சிகிச்சை மூலம் சரியப்படுத்த முடியும்.

புற்றுநோயின் பிரதிபலிப்பு : அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் முதுகு வலி, உடலில் வேறு ஏதாவது பாகத்தில் உள்ள புற்றுநோயின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம். நுரையீரல், சிறுநீரகம், தைராய்டு ஆகிய இடங்களில் தோன்றிய புற்றுநோய். முதுகெலும்பையும் தாக்கி, அதனால் முதுகு வலி வரலாம்.

உட்காரும் நிலையும் காரணம் : நடுத்தர வயதுள்ள, அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோருக்கு வரும், முதுகு வலிக்குக் காரணம், பெரும்பாலும் தகுந்த உடற்பயிற்சி இல்லாததாலும், தாங்கள் அமர்ந்து வேலை செய்யும் இருக்கையில், சரியான முறையில் அமராமல் இருப்பதுமே. நாற்காலி உயராமாகவும், முதுகுத் தண்டின் பாரத்தைக் தாங்கிக் கொள்ளக் கூடியதாகவும் அமைக்கப்பட வேண்டும்.

சாய்வு நாற்காலி நல்லது : உணவுக்குப்பின் ஓய்வெடுத்துக்கொள்ள, துணியால் செய்யப்பட்ட சாய்வு நாற்காலியைப் பயன்படுத்துவது நல்லது. அதில் உள்ள துணி, உடலை ஒட்டியிருப்பதால், உடலின் பளு, பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அலுவகங்களில் வேலைக்குச் செல்வோர் தினமும் காலை, மாலை இரு வேளையும், குறைந்தது 15 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காலையில் வெறும் வயிற்றிலும், இரவு உணவுக்கு முன்பும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உணவுப் பழக்கம் : புதுவிதமான உணவுப் பழக்கங்களால் முதுகுவலி வருகிறது. மாமிச உணவு, எண்ணெய்ப் பொருள்கள், ஆகியவை ஒரு சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் முதுகு வலி வருகிறது. இவ்வாறு முதுகு வலியினால் பாதிக்கப்படுவோர், எந்த உணவு உட்கொண்டால் வலி வருகிறது என்பதை உணர்ந்து, அதைத் தவிர்த்து விட்டால் குணமடையலாம்.

Rheumatsm என்ற சரவாங்கி மிகக் கொடிய நோய். ஒவ்வாமையல் தான் இது வருகிறது என்று கருதப்படுகிறது. மாமிசம், முட்டை, மீன் போன்ற உணவு வகைகள், ஒரு சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், வலி வரலாம். மது அருந்தினாலும், ஒவ்வாமை ஏற்படும், முதுகு வலி ஏற்படும்.

இவ்வாறு முதுகு வலி உள்ளவர்கள், காலையில் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் தசைகளைத் தளர்ச்சியடைச் செய்ய வேண்டும். தனது உடல் நிலையை அறிந்து, அதற்கேற்ற உடற்பயிற்சி செய்தால், முதுகு வலியைப் பெரும்பாலும் தவிர்த்து விடலாம்

எலும்புமுறிவு சிகிச்சை: சாலை விபத்து, தொழிற்சாலை விபத்துகளால், எலும்பு முறிவு ஏற்படலாம். எலும்பு முறிவு, ரத்தக்காயம் இல்லாமல் இருக்குமானால், அதில் ஆபத்து இல்லை, ரத்தக் காயத்துடன் உள்ள எலும்பு முறிவுக்கு, மிக்க கவனத்துடன் மருத்துவம் செய்ய வேண்டும். ரத்தம் கசிந்தால், ரத்தம் வீணாவது மட்டுமின்றி, இத்தகைய எலும்பு முறிவால், மிகச்சுலபமாக நோய்க்கிருமிகள் பரவி, எலும்பில் சீழ் பிடிக்கலாம்.

எலும்பில் சீழ் பிடிக்காமல், இந்த எலும்பு முறிவுகளைக் குணப்படுத்த, மிக விரைவில் சிகிச்சை செய்யப்பட வேண்டும். ரத்தக்காயத்துடன் கூடிய, எலும்பு முறிவானால், சுமார் 5 மணி நேரத்துக்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

ரத்தக் காயம் இருந்தால் பவுடர் கூடாது : இத்தகைய நோயாளிக்கு, உடனடியாக ரத்தம் செலுத்துவதால், எலும்பில் சீழ் பிடிக்காமல் பாதுகாக்கவும், விரைவில் எலும்பு கூடவும் ஏதுவாகும். ரத்தக் காயம் ஏற்பட்ட எலும்பு முறிவில், எந்த விதமான எண்ணெய், பவுடர், ஆகிய எதை வைத்தும் கட்டுப்போடக் கூடாது. தேவையற்ற பொருள்களை ரத்தக் காயத்தில் வைப்பதால், கிருமிகள் உடலினுள் சென்று, எலும்பிலும், தசையிலும் சீழ் பிடிக்க நேரலாம். ரத்தம் கசிந்து கொண்டிருக்கும் காயத்தில், சுத்தமான தண்ணீரில் அலசிய துணியை வைத்து, கட்டுக்கட்டி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

முதுகெலும்பு முறிவு : எலும்பு முறிவில் மிகவும் கொடுமையானது, முதுகெலும்பு முறிவு தான். முதுகெலும்புக்குள் இருக்கும் தண்டுவடம் (Spinal cord) அடிபட்டு, கால்கள் இரண்டும் செயலிழந்து போகும். இத்தகைய முதுகெலும்பு முறிவினால் ஏற்பட்ட தண்டுவடச் சிதைவுக்கு, வெகு விரைவில் முதுகெலும்பை நேராகப் பொருத்தி, ஸ்குரூ - பிளேட் பொருத்தி, நோயாளியை நடமாட வைக்கலாம்.

இவ்வாறு முதுகெலும்பு உடைந்து கால்கள் செயலிழந்து போன நோயாளிக்கு மறுவாழ்வு கொடுக்க அறுவை சிகிச்சையும் மறுவாழ்வுப் பயிற்சியும் (Rehabitation) மிக முக்கியம். இத்தகைய நோயினால், சிறுநீர், மலம் கழிப்பது செயலற்றுப் போகும்.

ஊனமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம், உடல் ஊனத்தைச் சரி செய்து அவர்களின் தோற்றத்தை அழகுபடுத்தலாம். உடல் ஊனத்துடன் பிறந்த குழந்தைகளுக்கு, ஒரு வயது ஆவதற்கு முன்பே, அறுவை சிகிச்சையை ஆரம்பித்து விடலாம். கணுக்கால் வளைவு (Glub foot) முழங்கால் வளைவு ஆகியவற்றை அறுவை சிகிச்சை முலம் குணப்படுத்தலாம்.

பிறவியிலேயே முதுகெலும்வு வளைவாக இருப்பதால், குழந்தைகளில் தோற்றம் மாறுபட்டு, 15—20 வயது ஆகும்போது, அவர்களது தோற்றம் பொலிவிழந்து போகிறது. இத்தகைய முதுகெலும் வளைவு (Scolosis) இளமையிலேயே கவனிக்கப்படாமல், பல பெண் குழந்தைகள் திருமண வயதின்போது, மருத்துவரை அணுகுகிறார்கள். இந்த நோயைக் குழந்தையாக இருக்கும் போதே கவனித்தால், உடற்பயிற்சி மூலமாகவும், தேவைப்பட்டால், அறுவை சிகிச்சை மூலமாகவும் சரி செய்யலாம்.

எதிர் விளைவுகளைத் தடுக்கும் நவீன சிகிச்சை: அன்றாட வாழ்க்கை மிகவும் துரிதமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்நாளில், எலும்பு முறிவின் காரணமாக, யாரும் கட்டுப் போட்டுக்கொண்டு, 2-3 மாதம் வீட்டில் இருக்க இயலாது. அதனால், எலும்பு முறிவுக்கு அறிவை சிகிச்சை மூலம் பிளேட் மற்றும் ஸ்குரூ பொருத்தி, கிட்டத்தட்ட 2-3 வாரத்தில், அவரை வேலைக்கு அனுப்பி விடலாம். தற்போது Image internisfier TV Screen மூலம் எலும்பு முறிவு இடத்தை, அறுவை சிகிச்சை செய்யாமலே, ஸ்டெய்ன் லேஸ் ஸ்டீல் ராடு உள்ளே பொருத்தப்பட்டு, அறுவை சிகிச்சையால் வரக்கூடிய எதிர் விளைவுகள் தடுக்கப்படுகின்றன.

எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு, அதற்காகக் கட்டுப் போட்டுக் கொண்டால், சதைகள் பலவீனமாகாமல் இருக்கத் தக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தசைகள் பலவீனமாகி எலும்பு கூடுவதற்கு நாளாகும். கால்சியம், வைட்டமின், புரதம் கொண்ட சத்துணவு, எலும்பு விரைவில் கூடுவதற்கு உதவுகிறது.

குழந்தைகளுக்கு மாவுக் கட்டே போதும் : பொதுவாக, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உண்டாகும் எலும்பு முறிவை, அறுவை சிகிச்சை இல்லாமல், மாவுக்கட்டு மூலமாகச் சரி செய்து விடலாம். வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளக்கு எலும்பு முறிவு, விரைவில் குணமாகிவிடும். எலும்பு முறிவு ஏற்பட்ட பாகத்தைத் தலையணை மேல் உயரமாக,வைத்து, மூட்டுக்களையும் அசைத்துக் கொடுத்து, வீக்கம் ஏற்படாமல் செய்ய வேண்டும்.

எத்தகைய கட்டுப் போட்டிருந்தாலும், உடற்பயிற்சி மிக அவசியம். கட்டுப் போட்ட பாகத்தைப் பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டால், அந்தப் பாகத்துக்கு பலம் குறைந்து, ஊனம் ஏற்படலாம். அந்தப் பாகத்துக்கு உடற்பயிற்சி அளிக்காவிட்டால் அது இறக்கமடைந்து விடும்.

தலைக்காயம் : இரண்டு சக்கர வாகனங்களால் ஏற்படக்கூடிய விபத்துக்களால் தான், அதிகமாக எலும்பு முறிவு ஏற்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், ஹெல்மட் அணியாமல் செல்வதால், தலையில் காயமடைந்து, உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இவ்வாறு வேகமாகச் சென்று, உயிரிழப்பவர்களில் 20 சதம் பேர், தலைக் காயம் காரணமாக உயிரிழக்கின்றனர்.

தலையில் அடிபட்டு, மூளைக்குள் ரத்தக் கசிவு இருப்பதை, சி.டி. ஸ்கேன் செய்து பார்த்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, உயிரைக் காப்பாற்றி விடலாம். பாதிக்கப்பட்ட எலும்புக்குள் பொருத்தப்படும் ஸ்குரூ, துரு ஏறாத, கார்பன் இல்லாத ஸ்டெயினால் ஸ்டீல் பிளேட் மிகவும் சிறந்தது. 30-40 ஆண்டுகள் வரை இதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை. வயது குறைவாக உள்ளவர்ளுக்கு, உள்ளே இருக்கும் பிளேட்டை, 2-3 ஆண்டில் எடுத்துவிடுவது நல்லது. 70-80 வயது ஆனவர்களுக்கு மீண்டும், அறுவை சிகிச்சை செய்து, பிளேட்டை நீக்க வேண்டிய அவசியம் இல்லை.