பாற்கடல்/அத்தியாயம்-3


3

ன் பாட்டனார் தமிழ்ப்பண்டிதர்.

அவருக்குப் பதினாறு வயதினிலே, கனவில் பிள்ளையார் வந்து அவர் வாயில் கற்கண்டு போட்டாராம். மறுதினத்திலிருந்தே வரகவியாகி விட்டார். குலதெய்வத்தின் பேரில் தோத்திரங்கள் கொட்ட ஆரம்பித்தன. அச்சு வெட்கும் அழகான கையெழுத்தில் ஒரு பெரிய நோட்டுப்புத்தகத்தில் கறுப்பு மசியில் எழுதி வைத்திருந்தார். இந்த நோட்டுப் புத்தகத்தை நான் பார்த்திருக்கிறேன். எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும், ஒரே அளவில் அடுக்கடுக்காய் எழுத்தின் மணிமாலை கண்ணைப் பறிக்கும், மனத்தை மயக்கிவிடும் வரிகளைப் படிப்பது அந்த இன்பத் திகைப்பினின்று தெளிந்த பின்னர்தான். அந்த அழகிய எழுத்துச் சரங்களே அம்பாளின் பாதகமலங்களில் சேரும் முதல் காணிக்கை.

இந்தத் தோத்திரங்கள் அவரவருக்கு மனப்பாடம் ஆன வரை, குடும்பத்தின் சோதனைக்காலத்தில் எங்களுக்கு ஆறுதல், தைரியம், நம்பிக்கை, ரட்சை, எல்லாமே அதுதான். மிக எளிமையான நடை, பாணவேடிக்கை ஏதுமிலாது அம்பாளிடம், சப்தரிஷி நாதரிடம் முறையீடுகள், தேவியுடன் தர்க்கங்கள், நேரிடை சண்டைகள், சமாதானங்கள், சாந்தங்கள், சஞ்சலங்கள், சலசலப்புகள், ஏக்கங்கள், உடனே தேறுதல்கள், திட்டுகள், அதட்டல்கள், அதிகாரங்கள், கெஞ்சல்கள் - எங்கள் குடும்ப தினசரி நடப்பில், பெருந்திருவும் பங்கான ஒரு ஆள். எனக்குத் தெரிந்தவரையில் ஒரு குளுமை இந்தப் பக்கங்களில் ஓடுகிறது. கடுஞ்சுரத்தில் நெற்றியில் முலைப்பால் நனைத்த துணியைப் போட்டுக்கொண்ட மாதிரி.

தாத்தா - தப்பு - தாத்தாவென்றால் அவருக்குக் கனகோபம் வந்துவிடும். அப்பாவென்று அழைப்போம். அப்பாவை அண்ணாவென்று அழைப்போம் - நின்றெரியும் சுடர்போல் நிமிர்ந்த ஒற்றைநாடியில், செக்கச் சிகப்பு. அம்முவாத்துக் கூட்டமே ஆண் பெண் அடங்கலாக எல்லாருமே சிவந்த மேனி - ஸோல்ஜர் கூட்டம். யாருக்கும் தோய்ந்த தோற்றம் கிடையாது.

தாத்தாவின் தம்பிமார்களும் தங்கைமார்களும் கம்பராமாயணத்தில் புகுந்து விளையாடுவார்கள். இத்தனைக்கும் பாடம் கேட்டவர்கள் அல்ல.

இந்தக் குடும்பத்தின் ரத்தத்திலேயே தமிழ் மணம் ஓடிற்று. எப்படி? தெரியாது.

என் சின்ன அத்தைப் பாட்டி, அதேசமயத்தில் என் தாயாரைப் பெற்றவள் - நன்னூல் நைடதம் படித்த வளாம். “ஸ்ரீமதி இந்தப் பாட்டில் இந்த வரி இப்படி வந்திருக்கே. இதன் இலக்கணம் சரியா?" என்று தாத்தா அவளை யோசனை கேட்டுக்கொள்வாராம். அவளும் கவிதைகள் புனைந்திருக்கிறாள்.

தாத்தாவின் தமையனார் ஐயாதான் எழுத்து வாசனைகூட இல்லாமல், வீட்டுக்குப் பூசணிக்காய் கட்டினமாதிரி. ஐயா, கீரிப்பிள்ளை - அது இஷ்டப்பட்டால் அடங்கின மாதிரியிருக்கும். ஆனால் முற்றிலும் அதை மனிதன் தன் இஷ்டத்துக்குப் பழக்கி விட முடியாது. தன் எதேச்சையை அதனால் விட்டுக் கொடுக்க முடியாது.
ஒரு திவசம், திங்கள், நாள், கிழமையன்று சகோதர சகோதரிகள் அவரவர் குடும்பத்துடன் ராமசாமி அண்ணா வீட்டில் கூடும்போது வீடு அமர்க்களம்தான். எல்லோரும் வாட்டசாட்டம், கிங்கரவாகு. பட்ட சாலையில் ஏதோ ராவணசபை கூடின மாதிரிதான் இருக்கும். அவர்கள் பேச்சும் சர்ச்சையும்கூட அப்படித் தான். உற்சாகத்தில் (சில சமயங்களில் சொந்த சண்டையாகக்கூட மாறிவிடும்) உயர்ந்துவிட்ட உரத்த குரலில், கூடத்தில் நடக்கும் இலக்கிய சர்ச்சையைக் கேட்க ரேழியில், திண்ணையில், வாசலில், கூட்டம் கூடி நிற்கும். அந்த நாளில் மக்களுக்கு சுவாரஸ்யம் இது போன்ற விஷயத்தில்தான். இப்பத்தான் மாறிமாறி அலுக்காமல், விவித்பாரதி. அது கெட்டால் ரேடியோ சிலோன் - "மச்சானைப் பார்த்தீங்களா?” வருடக் கணக்கா மச்சானைத் தேடியாகிறது. மச்சான் கிடைத்துவிட்டாலும் தேடல் மட்டும் ஓயாது. வேண்டாம் என் ஒட்டத்தை என்னால் முடிந்தவரை நினைவின் சந்தோஷ ஜலங்களிலேயே நடத்திச் செல்லவேணும். ”ஏ சுந்தரம்” இம்போசிஷன் சித்தப்பாவின் தந்தை) - ”இந்த ராமன், காவிய நாயகன், தனியா என்னத்தைக் கிழிச்சுட்டான்? ஒரு லக்ஷ்மணன், ஹனுமான், ஒரு சுக்ரீவன், கேவலம் ஒரு வாணர சைன்யம் இல்லாவிட்டால் அவன் கதி என்ன? நாறிப்போயிருப்பான்.” ”விபீஷணன், ப்ராத்ரு த்ரோகியை மறந்துட்டியே! அண்ணனைக் காட்டிக் கொடுத்த பாவி!” “சுக்ரீவன் இன்னொரு ப்ராத்ரு த்ரோஹி (இந்தப் பிரயோகத்தில் என்ன மோகமோ? அண்ணன் பெண்டாட்டியைப் பெண்டாளுகிறானாம். சொந்த நியாயம் பேசும்போது வானரம், மற்ற சமயத்துக்கு அவதார புருஷன்!”

”உஷ் - தாரையைப் பதிவிரதை லிஸ்டில் சேர்த் திருக்குடா !”

”ராமன் கேஸ் மட்டும் என்ன, ஓயாமல் சீதைக்கு அழுதுண்டு! அவனை அவனுக்கு அப்பப்போ ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு!” “சீதை என்ன லேசுப்பட்டவளா? கிழிச்ச கோட்டைத் தாண்டியவள்தானே! லசுஷ்மணனை என்ன மட்டமாய்ப் பேசியிருக்கிறாள்! வலைச்சி தோற்றாள்!”

“உஷ் - சிதம்பரம்!”

"என் இஷ்டம், பேசுவேன். நீ யார் கேட்க?"

"ஆமாண்டாப்பா, நீ போலீஸ் டிபார்ட்மெண்ட் ஆச்சே! உன்னை யார் கேட்பது?”

"லக்ஷ்மணன் ஒரு ஏமாளிடா! என்ன சுகத்தைக் கண்டான்?”

"தலைவிதி யாரை விட்டது?”

“ராவணனும்தான்! வரம் கேட்கும்போது நரனை விட்டதுதானே அவன் நாசத்துக்குக் காரணமாச்சு”

"நாசத்துக்குக் காரணம் சீதை. சீதை பிறக்க லங்கை அழிய !"

"அவள் லங்கிணிடா, அவளால் ராமன் மட்டும் சுகப்பட்டானா?”

"ராவணன் சுகப்பட்டானா ?”

'கஷ்டத்தைக் கொண்டுவருவதே அவள் ராசி"

"தெரிஞ்சு தான் ஜனகன் கலியாணத்தோடு அவளைக் கை கழுவிவிட்டான்."

”அவள் என்ன நியாயமா ராஜவம்சமா? மண்ணில் கண்டெடுத்த குந்துமணிதானே? அவளே யார் ராக்ஷசியாகவே இருக்கலாம். இல்லாட்டா சிவதனுசைத் தூக்க முடியுமா? ராக்ஷசி அல்ல பேய். வேதவதி, அது இதுன்னு சொல்லிக்கிறது இருக்கட்டும். இந்த ராமாயணத்தைத் தற்காலிகத்துக்குக் கொண்டுவந்து இந்தச் சூழ்நிலையில் பாத்திரங்களை வெச்சுப் பார்க்கணும்! அப்போ லக்ஷ்மணன் இவ்வளவு சாதுவாயிருப்பானா?”

”இல்லை உன்மாதிரி பெண்டாட்டி தாஸனாகியிருப்பான்!” கூடம் முழுக்கக் கொல்லென்று உருட்டுச் சிரிப்பு.

”ஷட்அப்” கொஞ்சநேரம் மெளனம்.

”ஐயா எங்கே?” ஏதோ ஒரு குரல் கேட்கிறது.

“எங்கானும் யார் எருமை மாட்டுக்கேனும் பிரசவம் பார்த்துண்டிருப்பான்.”

“சரி சரி கொஞ்சம் எழுந்திருங்கோ எல்லோரும்.” என் பாட்டி சமையலறையிலிருந்து ஆஜராகிறாள். ”பெருக்கிட்டு இலை போடணும்.”

“என்ன சமையல் மன்னி!”

”கத்தரிக்காய் வெத்தல் குழம்பு, கத்தரிக்காய் வதக்கல் கறி.”

”பேஷ், மன்னி கை கேட்கணுமா ?”

”கத்தரிக்காய் ஏது - ஐயா கொண்டுவந்தானா, பக்கத்துக் கொல்லையிலிருந்து திருடி வந்தது? கொல்லைக்குச் சொந்தக்காரன் நாளைக்குப் போய்ப் பார்க்கிற போதுன்னா தெரியப்போகிறது!”

“என்ன தெரியப் போகிறது? பிச்சை, கேஸ் பிடிக்க அலையறான்!”

“சப்-இன்ஸ்பெக்டரில்லையா?”

அவன் வயிற்றுக்குள்ளேதான் பண்ணின கத்தரிக் காயில் பாதிக்குமேல் போகப் போகிறது. ஏண்டா பிச்சு, நாளுக்கு ஒரு சுத்து பெருத்துண்டே போறயே. எங்கு போய் இது நிற்கும்? ஒருநாள் 'டப்'……."

”கத்தரிக்காய் வெளியே கொட்டும்.”

”அப்போ பிச்சுவுக்குக் கேஸு ருசு கிடைச்சாச்சு.”

”அவன் வயிற்றிலேயே.”

”அப்போ கேஸ் ஐயா மேலா, பிச்சு மேலா?”

"இல்லை, கத்தரிக்காய் கொல்லைக்காரன் மேலே, கத்தரிக்காயைப் பயிர் செய்ததற்காக, போலீசுக்குக் குற்றவாளியைப் பிடிக்க வேண்டாம். யாராவது ஒரு ஏமாளி கிடைச்சாப் போதும். அவ்வளவுதான்!”

“லசுஷ்மணன் மாதிரி.”

"ராமனே கொஞ்சம் மக்குத்தான். எங்கே சுறுசுறுப்பாயிருந்திருக்கான் ?”

”புனர்வசு நக்ஷத்திரம் கொஞ்சம் அப்படி இப்படித்தான்.”

“இருந்தாலும் அதிர்ஷ்டம் இருக்கு. ஆள்கட்டு இருக்கு. பிறத்தியார் தொடையில் கயிறு திரிக்க ஆளும் அப்பப்போ கிடைக்கிறான்.”

”உழைக்கிறவன் ஒருத்தன். பேரைத் தட்டிண்டு போறவன் இன்னொருத்தன். அகஸ்தியன், உத்திர காண்டத்தில் ராமனுக்கு நாஸுக்காக ஞாபகப்படுத்தறார் பார். இந்திரஜித் ஸம்காரம்தான் ராவண ஸம்காரத்தைவிடப் பெரிசுன்னு!”

”நியாயங்களின் பங்குகள் அன்றிலிருந்து இன்று வரை மூடு சூளைதான். என்னவோ ஒரு ஒரு நாளா கழியறது. எப்படியோ கழியறது. அது ஒண்ணுதான் உண்மை. மற்றவையெல்லாம் புளுகு”

"ராமண்ணா நோட்புக்கே கதின்னு இருக்காப் போல.”

”பூர்வஜன்மத்தில் குசேலனாயிருந்திருப்பானோ? அவர் கிருஷ்ணா கிருஷ்ணான்னுண்டு இருந்தாரே!” புர்வஜன்மமென்ன, குசேலோபாக்யானம் இப்பவும் தான் தொடர்கிறது. ரூபாய்க்கு எட்டுப் படி அரிசி - கொல்லையில் தானாய் முளைத்த கீரை. ஆனால் பலவந்த உபவாசங்கள் அப்பப்போ குடும்பத்தில் நேர்ந்துகொண்டிருக்கும்.

தாத்தாவுக்குச் சம்பளம் பதினைந்து ரூபாய். குடும்பம் ஏற்கெனவே பெரிசு. ஐயா, தனக்குக் கட்டினவள் இறந்ததும், குழந்தைகளுடன் அண்ணா வீட்டுக்கு வந்து தங்கிவிட்டார். மறுமணம் செய்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் காளை வயது.

இந்தக் குடும்பமும் சிறியதல்ல. மூன்று பிள்ளைகள். இரண்டு பெண்கள். தவிர ஸ்ரீமதி தன் மூன்று குழந்தைகளுடன் சீக்கிரமே அண்ணாவாத்துக்கு வந்துவிட்டாள்.

தம்பிமார் குழந்தைகள் இங்குதான் பிரசவம். ஒழுங்கையறைக்கு கர்ப்பக்ரஹம் என்ற பெயர். தன் இருட்டுக்கும் அது வருடத்தில் சராசரி பாதி வேளைக்கேனும் படும் பயனுக்கு முற்றும் தகும். மிச்சக் காலத்துக்கு அங்குதான் பழையது மூலை, சிவப்பு எறும்பு, பிள்ளையார் எறுப்பு, கட்டெறும்பு, சாதத்தில் கண்டு குழந்தைகள் முனகினால் மன்னி ரெடியாக பதில் வைத்திருப்பாள்: "இரட்டைக் கடுகு, இரட்டை மிளகு" தப்பி விழுந்திருக்கும். அப்படியே எறும்பைத் தின்னாலும் கண்ணுக்குக் குளுமை. எண்ணாயிரம் வயசு, படிக்கிற பையன்களுக்கு நாக்கைப் பாரு. சோற்றைப் பழித்தால் நாளைக்கு இதுவும் கிடைக்காது. முன்பிடிக்குப் பின் பிடி கப்பிட்டு எழுந்து பள்ளிக் கூடத்துக்கு ஒடற வழியைப் பாருங்கடா!”

ஒருநாள் கிழமை, திவசம், திங்கள் என்று குடும்பத்துடன் தம்பிமார்கள் நான்கு நாள் முன்னதாகவே வந்து உட்கார்ந்துவிட்டால் கேட்க வேண்டாம். அந்தக் காலத்தில் மலைகளுக்குச் சிறகு இருந்ததாம். பறந்து வந்து பட்டணங்கள் மேல் இறங்கி உட்கார்ந்துவிடுமாம். ”அண்ணா! அண்ணா !” என்று உயிரை விடுவது வார்த்தையோடு சரி. அண்ணா என்ன பண்ணுவார் என்று நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்.

தாத்தா - தப்பு அப்பா எப்படி - சமாளித்தார்? நோட்புக்கில் மணிமணியான எழுத்தில் நிரப்பிக் கொண்டிருப்பார். அவர் காதில் எதுவும் விழாது. போடவும் பாட்டிக்கு தைரியம் கிடையாது. பெருந்திருவே துணை.

தாத்தாவுக்கு கம்பீர சாரீரம், கேட்ட பாக்கியம் எனக்கு உண்டு.

”தாராமல் இருப்பாளோ? அவள் என்ன சத்தியம் மறந்தவளோ ?”

அவர் பாட்டை அவர் பாடுகையில் அந்த வெண்கலநாதம் இப்பவும் செவியில் ஒலிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-3&oldid=1532454" இலிருந்து மீள்விக்கப்பட்டது