பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/ஜீன் மாறுபாடு

11. ஜீன் மாறுபாடு

ஒரு குடியானவன் சமையலறைக்குப் பின் புறத்திலே ஒரு பீச் (Peach) கன்று தற்செயலாக முளைத்திருப்பதைப் பார்த்தான். அவனுக்கு அதன்மேல் பிரியம் வந்துவிட்டது. ஜாக்கிரதையாக அதை வளர்க்க ஆரம்பித்தான். அது வளர்ந்து பூத்துக் காய்த்துப் பழுத்தது. என்ன அதிசயம்! அந்தப் பழம் அதே இனத்தைச் சேர்ந்த மற்ற மரங்களின் பழங்களைப் போலல்லாமல் ஆழ்ந்த நிறமும், அதிக ருசியும் கொண்டிருந்தது.

அதனால் அந்த அமெரிக்கக் குடியானவன் அந்தப் பீச் மரத்திலிருந்து பல கன்றுகள் உண்டாக்கினான். அவையெல்லாம் தாய்ச் செடியைப் போலவே நல்ல பழங்களைத் தந்தன.

லெண்டன் நியூமன் என்ற மற்றோர் அமெரிக்க இளைஞன் தன் தந்தையுடன் ரோஜாச் செடி வளர்ப்பதில் ஈடுபட்டிருந்தான். சீனாவிலிருந்து வந்த ஒரு வகை ரோஜாச் செடியுடன் வேறொரு வகை ரோஜாச்செடியை ஒட்டிப் புதிய செடி ஒன்றை அவன் உண்டாக்கினான். ஒரு நாள் அவன் ரோஜா மலர்களைப் பறித்துக் கொண்டிருக்கும் போது ஒரு செடியில் மட்டும் முள்ளே இல்லாமல் இருப்பதைக் கவனித்தான். அதிலிருந்து 26 பதியங்கள் வைத்தான். அவை ஒன்றில் கூட முள்ளே கிடையாது!

இம்மாதிரி இயற்கையில் ஏற்படுகிற மாறுதல்களெல்லாம் ஜீன்மாறுபாட்டைப் (Mutation) பொறுத்தே இருக்கின்றன. அதுஎப்படி உண்டாகிறதென்று சொல்ல முடியாவிட்டாலும் இந்த மாறுபாட்டால்தான் நாம் இன்று வளர்த்து வரும் பல செடிகளும் மிருகங்களும் தோன்றியுள்ளன.

ஒரு ஜோடி ஈக்களை ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு வளர்த்து வந்தால் பல தலைமுறைகளைச் சேர்ந்த புதிய ஈக்களைப் பார்த்து விடலாம். அப்படி வளர்க்கும் போது உடலமைப்பில் மாறுபட்ட புதிய ஈக்கள் தோன்றியதைக் கண்டிருக்கிறார்கள். சிவப்பான கண்களுக்குப் பதிலாக வெள்ளை நிறமுள்ள கண்களுடைய ஈக்கள் பிறந்திருக்கின்றன; இறகே இல்லாத ஈக்கள் தோன்றுகின்றன. இவ்வாறு தோன்றுவதற்கு ஜீன் மாறுபாடே காரணமாகும்.