மாவீரர் மருதுபாண்டியர்/இராமநாதபுரமும் சிவகங்கையும்



1

இராமாநாதபுரமும் சிவகங்கையும்

சோழ சீமையை ஒட்டியுள்ள கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தெற்கே வேம்பாற்றங் கரையிலான நீண்ட பகுதி மறவர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. காடும் மேடும் முல்லையும் மருதமும், பாலையும் நெய்தலுமாக அமைந்த இந்த நிலக்கூற்றில் வாழ்ந்த மக்கள் கரடுமுரடான வாழ்க்கையினைக் கொண்டு இருந்தனர். மறமும் மாண்பும் மலிந்த மாபெரும் இனத் தினரான இந்த முதுகுடி மக்களது தலைமகன் சேதுபதி என சிறப்பாக வழங்கப்பட்டார். வில்லேர் சிலை இராமன் அமைத்த வியன்சேதுவின் காவலன் என்ற சிறப்பு நிலையில், மறவர் சீமையின் மன்னர் போற்றப்பட்டனர்.

சோழ பாண்டியரது சாமந்தராக விளங்கிய இந்தக்குடியினர் பிற்காலப் பாண்டியப் பேரரசின் மறைவிற்குப் பின்னர், மதுரை மண்டலத்தில் வடக்கே இருந்து வந்த வடுகரது ஆட்சி தொடர்ந்த பொழுது, அவர்களது ஆதிக்கத்தில் அடங்கியும் அடங்காமலும் தன்னரசு நிலை எய்தினார்கள். தமிழக வரலாற்றில் இவர்களைப் பற்றிய செய்திகள் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. இவர்களில் கி.பி. 1674 முதல் கி.பி. 1710 வரை மறவர் சீமையின் மாமன்னராகத் திகழ்ந்தவர் கிழவன் என்ற ரகுநாத சேதுபதியாகும். அவரது பட்டத்து யானையைச் சிறப்பித்துச் சொல்லுமாறு இந்த மன்னரை ஒரு புலவர் பாடினார்.[1]

“கடிவாங்கு மலர்த்தடஞ்சூழ் சேதுபதி
ரகுநாதன் களி,நல் யானை
அடிவாங்கி முன்னடக்கில் வடகலிங்கம்
கிடு கிடெனும் அங்க தேசம்


  1. 1. தனிப்பாடல் - பெருந்தொகை (1935) பாடல் எண். 1294

குடி வாங்கும் கடல் ஏழும் உள்வாங்கும்
நன்னலர் தங்கோட்டை வாசல்
படி வாங்கும் அரசர்மணி முடிவாங்கும்
சேடன் முடி படியுந்தானே!”

இந்த மன்னரது முப்பத்திரண்டு ஆண்டுகால ஆட்சியில் மறவர் சீமையில் எல்லைகள் விரிந்து சோழவள நாட்டில் தென்பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தன. என்றாலும் அவரது ஆட்சியின் மாட்சியில், வீழ்ச்சியும் மெதுவாகத் தொடர்ந்தது.

இவரது படைத் தலைவர்களாக விளங்கிய கள்ளர் தலைவர்களான ரகுநாத தொண்டமானும், நமணத் தொண்டமானும், மன்னரது கட்டளைகளைச் சிறப்பாக நிறைவேற்றி அவரது அந்தரங்க நம்பிக்கைக்கு உரியவர்களாகினர். இந்த அரசியல் உறவுகளை இன்னும் நெருக்கமாக இணைத்து பிணைத்துக் கொள்ள சேதுபதி மன்னர், இவர்களது தங்கை காதலி நாச்சியாரைத் தமது இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.[1] அவர்கள் சேதுபதி மன்னரது கானாட்டுக் கோட்டைகளான திருமெய்யம், குளத்தூர் ஆளுநர்களாகப் பதவி உயர்வு பெற்றனர். கி. பி. 1710ல் மன்னர் மறைந்த பிறகு மறவர் சீமையின் அரியணைக்கு எழுந்த குழப்பங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தன்னிலை பெற்றனர். நாளடைவில் ரகுநாதத் தொண்டமான், திருமெய்யம் குளத்தூர் பகுதிகளை இணைத்து தொண்டமான் சீமை என்ற நாட்டுப்பிரிவை ஏற்படுத்தினார. அப்பொழுது புதிதாக அமைந்த கோட்டை “புதுக்கோட்டை” எனப் பெயர் பெற்றது. அந்த ஊர் அவர்களது தலைமை இடமாகவும் மாறியது.

ஏற்கனவே கிழவன் சேதுபதியின் ஆட்சியில் நாலுகோட்டை பாளையக்காரரான பெரிய உடையாத் தேவருக்கு[2] மன்னரிடத்தில் நல்ல செல்வாக்கு இருந்தது. இராமநாதபுரத்தின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட திருவுடையாத் தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதி தமது மகள் அகிலாண்டீசுவரி நாச்சியாரை, பெரிய
  1. 2 Rathakrishna Iyyer, Manual of Pudukottai State (1932) р.31
  2. 3 மறவர் சீமையின் எழுபத்துநான்கு பாளையங்களில் சிவகங்கையை அடுத்த நாலுகோட்டையும் ஒன்று.
உடையாத் தேவரது மகன் சசிவர்ண பெரிய உடையாத் தேவருக்கு திருமணம் செய்து கொடுத்து, நாலுகோட்டைப் பாளையத்தின் தகுதியை ஆயிரம் வீரருக்கான பாளையமாக உயர்த்தினார்.[1] மருமகனை தொண்டித் துறைக் காவலராகவும் பின்னர் வெள்ளிக்குறிச்சி [2] மாகாண ஆளுநராகவும் நியமனம் செய்தார். ஆனால் கி.பி. 1725ல் விஜயரகுநாத சேதுபதி மறைவை யடுத்து தோன்றிய ஆட்சிக் கிளர்ச்சியில் அவர் பதவியை இழந்து, தஞ்சை மராத்திய மன்னரிடம் தஞ்சம் அடைந்தார். [3]அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் திருப்பத்தினால் இராமநாதபுரம் சீமையில் ஐந்தில் இரண்டு பகுதிக்கு மன்னராகும் வாய்ப்பை சசிவர்ணத்தேவர் பெற்று கி.பி. 1730ல் “சிவகெங்கைச் சீமை” என்ற புதிய வளநாட்டை நிறுவினார்.[4] மதுரை திருமலை மன்னர் சூழ்ச்சியினால் கி.பி. 1639ல் மறவர் சீமையை ஐந்தாகப் பிரிக்க முயன்ற பொழுது பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த மறவர்கள். அப்பொழுது மறவர் சீமை இரண்டாக, வடபகுதி பிரிக்கப்பட்டதற்கு எவ்வித எதிர்ப்பும் இயற்றவில்லை. அதனை ஏற்றுக் கொண்டனர். என்றாலும், இந்தப் பிரிவினை காரணமாக மறவர் சீமை, தமிழக அரசியலின் தனித் தன்மையை - வலுவை இழந்து வந்தது என்பதை அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள் தோலுரித்துக் காட்டின. கிழவன் சேதுபதி அமைத்த இராமநாதபுரம் தன்னரசு, சிவகங்கை பிரிவினை காரணமாக அளவில் சிறிய அரசாகியது.

அதேபோல, பாண்டிய மண்டலம் முழுவதையும் இருதுாற்றாண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திய மதுரை நாயக்க அரசும், ராணி மீனாட்சியின் மறைவுடன், கி.பி 1786ல் அழிந்தது. அந்த அரசின் நிலையில் புதிய ஆளவந்தார் என ஆற்காடு நவாப் தோன்றினார். கி.பி. 1751 ல், நவாப் வாலாஜா முகம்மது அலி திருச்சி, மதுரை, திருநெல்வேலிச் சீமைகளில் இருந்த பாளையக் காரர்களை ஆயுதவலிமையால் அடக்கி, அவர்களிடமிருந்து ஆண்டுதோறும் கப்பத்தொகையைப் பெற்று வந்தார். இந்தப் பாளையக்காரர் அனைவரும் முன்னர் நாயக்க மன்னர்களுக்குக் கட்டுப்பட்டு இருந்து வந்தவர்கள்.8 அதேபோல தமிழகத்தில் தன்னரசாக இருந்த தஞ்சாவூர், இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை மன்னர்களையும் வருடப் பணம் கோரி நிர்ப்பந்தித்து வந்தார் வாலாஜா முகம்மது அலி. ஆனால் மறவர்கள் அவரது கோரிக்கையை நிறைவு செய்யவில்லை. அதுவரை, அவர்கள் யாருக்காவது கப்பம் செலுத்தி பழக்கப்பட்டு இருந்தால் தானே! என்றாலும் நவாப் வாலாஜா முகம்மது அலியிடம், நேச உறவுடன் நடந்து வந்தனர். நவாப்பும் அன்றைய குழப்பமான அரசியல் சூழ்நிலை காரணமாக, மறவர்களை மிகுதியாக நெருக்கி கப்பம் கோரவில்லை. திருநெல்வேலி பாளையக்காரர்களது சிறு அணியொன்று நெற்கட்டும் செவ்வல் பாளையக்காரர் பூலித்தேவர் தலைமையில் நவாப்பின் ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ச்சிகளில் ஈடுபட்ட பொழுதும. நவாப்பின் மதுரை ஆளுநரான கம்மந்தான்கான் சாகிபு நவாப்பின் நடவடிக்கைகளினால் வேறுபட்டு நவாப்பையும் அவரது கூட்டாளியான பரங்கிகளைப் பகைத்துப் போர் தொடுத்த பொழுதும், மறவர் சீமை மன்னர்களும் புதுக்கோட்டை தொண்டமானும் நவாப்பிற்கு உறுதுணையாக இருந்தனர். காலத்தாற் செய்த நன்றியை மறந்த நவாப் முகம்மது அலியின் கண்களில், இராமநாதபுரம் சீமையும், சிவகங்கை சீமையும் உறுத்திக் கொண்டு இருந்தன. நல்லதொரு வாய்ப்பை அவர் எதிர்பார்த்து இருந்தார் என்பது மறவர் சீமை மன்னர்களும் புரிந்து கொள்ளவில்லை.

கி.பி. 1772 மே மாத இறுதியில் மறவர்களைத் திடீரெனத் தாக்க நவாப் திட்டமிட்டார். கும்பெனியாரது ஆயுதப்படைகளைத் துணையாகக் கொண்டு அவரது மகன் உம் - தத்துல் - உம்ரா, கும்பெனித் தளபதி ஜோசப் ஸ்மித் ஆகியோரது கூட்டுத் தலை மையில் ராணுவ அணியொன்று திருச்சியிலிருந்தும்9 மேஜர் பான் லோர் தலைமையில் இன்னொரு அணி மதுரையிலிருந்தும்10 மறவர் சீமைக்குள் புகுந்தன. தங்களது தன்னரசு உரிமையை நிலைநாட்டப் போராடிய மறவர் சீமை அரசுகள் ஆயிரக்கணக்கான மறவர்களை களபலி கொடுத்து தோல்வியுற்றன. பதினோரு வயதான இராமநாதபுரம் இளவரசர் முத்துஇராமலிங்க சேதுபதி, அவரது தாயார், தமக்கையருடன் திருச்சிக்கோட்டையில் பாதுகாப்புக் கைதியாக சிறை வைக்கப்பட்டனர்.11காளையார்கோவில் போரில் நவாப்பின் அணியைப் பொருதிய சிவகங்கை மன்னர் முத்துவடுகனாத பெரிய உடையாத்தேவர். பரங்கியரின் குண்டினால் உயிர் இழந்தார்.12 அவரது விதவை ராணி வேலு நாச்சியார் தமது ஒரே பெண் குழந்தையுடன் பிரதானி தாண்டவராய பிள்ளையுடனும் மைசூர் மன்னர் ஐதர் அலியின் பகுதியான விருபாட்சியில் (திண்டுக்கல் நகரிலிருந்து வடமேற்கே இருபது கல் தொலைவில் அன்றைய மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது) தஞ்சம் புகுந்தார்.13

மன்னர் இல்லாத இரண்டு சீமை மக்களும் ஆற்காட்டு நவாப்பின் ஆட்சியைப் புறக்கணித்து ஆங்காங்கு கிளர்ந்து எழுந்தனர். கைகலப்புகளும் மோதல்களும் தொடர்ந்தன. நவாப்பின் நிர்வாகம் நிலை குலைந்தது. மிகவும் பாதுகாப்பான கோட்டைகளுக்குள் மட்டும் இருந்து கொண்டு நவாப்பின் பணி யாளர்கள் செயல்பட்டனர்.14 ஆற்காட்டு நவாப்பிற்கும் வெள்யர்களுக்கும் எதிராக, ஐதர்அலி கி.பி. 1780ல் கர்நாடகப் போரைத் துவக்கிய பொழுது, திண்டுக்கல் கோட்டையில் இருந்த படைப்பிரிவு ஒன்றை மருது சகோதரர்கள் தலைமையில் சிவகங்கை சீமைக்குள் செல்லுமாறு பணித்தார். அவர்களும் மக்களது ஆதரவுடன் நவாப்பின் கூலிப்படைகளை சிவகங்கை மண்ணில் இருந்து விரட்டி அடித்தனர்.15 எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சிவகங்கை மீண்டும் தன்னாசாக இயங்கியது. ராணி வேலு நாச்சியாரது பாரம்பரிய ஆட்சிக்கு பக்கபலமாக மருது சேர்வைக்காரர்கள். பிரதானிகளாக இருந்து பணியாற்றினார்.16

அதேநேரத்தில், இராமநாதபுரம் சீமையிலும் மக்களது கிளர்ச்சி ஆறுமுகக்கோட்டை மாப்பிள்ளைத்தேவர் தலைமையில் உச்சநிலையை அடைந்தது. வேறு வழி இல்லாமல், நவாப் சிறையில் இருந்த இளம் சேதுபதி மன்னரை விடுதலை செய்து மறவர் சீமையின் மன்னராக அங்கீகரித்தார்.17 மீண்டும், இராமநாதபுரம் அரசு கட்டிலில் அமர்ந்த முத்துராமலிங்க சேதுபதி மன்னர், தமது அரசுரிமையைப் பறித்து தம்மை ஒன்பது ஆண்டு காலம் சிறையில் அடைத்து வைத்து இருந்த நவாப்பையும், அவரது எடுபிடிகளான கும்பெனியாரையும் மறந்துவிடவில்லை. இடையூறு செய்தவர்களை யானை எப்பொழுதும் மறப்பதில்லை அல்லவா ! இதற்கிடையில், நவாப்பிடம் சலுகைகளைப் பெற்று இறுமாந்து இருந்த பாங்கிகள், இராமநாதபுரம் மன்னரை ஒரு தன்னரக மன்னாக மதிக்காமல், நெல்லைச் சீமைப் பாளையக்கார்களிடம் நடந்து கொள்ளும் பாணியில் நடந்து வந்தனர். மேலும் அவரது சீமையில் கைத்தறித்துணி உற்பத்தியை ஏக போகமாகக் கொள்முதல் செய்யவும், தானிய வியாபாரம் செய்வற்கும், சுங்கவரி விலக்கையும் சலுகைகளையும் இராமநாதபுரம் சீமையின் பிரதான துறைமுகமான பாம்பன் நீர்வழிப் போக்குவரத்தில் முன்னுரிமைகளையும் எதிர்பார்த்தனர். ஆனால் மன்னரது உறுதியான நடவடிக்கையால் ஏமாந்து வெறுப்படைந்தனர்.18

அடுத்து, இராமநாதபுரம், சிவகங்கை அரசுகளுக்கிடையே நிலவிய அரசியல் பிணக்குகளை பரங்கிகளது தலைமை அவ்வப் பொழுது தீர்த்து வைத்து சமரசம் செய்து வைக்காமல் அவைகள் பிரச்சினைகளாகி, பெரும் சிக்கல்களாக மாறுவதற்கு உதவினர். இதனால் பகைமை வளர்ந்து இராமநாதபுரம் அரசரும், சிவகங்கைப் பிரதானிகளும் எல்லைப் போர்களில் ஈடுபட்டனர். அதே சமயம், இராமநாதபுரம் மன்னர், புனித சேதுமண்ணில் இருந்து பேராசை பிடித்த ஆற்காட்டு நவாப்பின் மேல் ஆதிக்கத்தையும் அவரது எடுபிடிகளான கும்பெனியாரது எதேச்சாதிகாரத்தையும் எடுத்து எறிவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டார். பாண்டிச்சேரியைத் தலைமை இடமாக கொண்டிருந்த பிரஞ்சுக்காரர்களுடன் இரகசியமாகத் தொடர்பு கொண்டு ஆயுத உதவி பெறுவதற்குப் பாடுபட்டார்.19 மேலும் இலங்கையில் உள்ள டச்சுக்காரர்களது உதவியுடன் இராமநாதபுரம் சீமையில் ஆயுதசாலைகள் அமைத்து வந்தார்20. எல்லாம் ரகசியமாக நடைபெற்று வந்தன. ஆனால் கி பி. 1792ல் திடீரென கும்பெனியார் நவாப்புடன் செய்து கொண்ட உடன்படிக்கை மூலமாக, மறவர் சீமையின் வருடப்பணத்தை (நவாப்பிற்குப் பதிலாக அவர்களே) வசூலித்துப் பெற்றுக் கொள்ளும் உரிமையை மூன்று ஆண்டுகளுக்குப் பெற்றனர்.21 இதனால் மறவர் சீமை கும்பெனியாரது நேரடியான தலையீட்டிற்கு இலக்காகியது.

கும்பெனியார், தங்களுக்குரிய வருடப்பண வசூலுடன் அமையாமல், மறவர் சீமையில் உற்பத்தியாகும் கைத்தறித்துணிகளின் ஏற்றுமதியில் ஏகபோக கொள்ளைக்கு முயன்றனர். இந்த முயற்சிக்கு சேதுபதி மன்னர் இணங்காததுடன், அதனை வன்மையாக எதிர்த்தார். மேலும், கும்பெனியாரது மேலிடமும், கும்பெனியாரின் குட்டி தேவதையான கலைக்டரும் பிறப்பிக்கும் கட்டளைகளுக்கு பணிய அடியோடு மறுத்தார்.22அதனால், கும்பெனியாரின் சீற்றத்தை நேரடியாக அரசியல் நிலையில் சமாளிப்பதற்கும் தயாராகி வந்தார். ஆனால், கும்பெனியார் அவர்களது திட்டத்தை நிறைவேற்றுவதில் முந்திக் கொண்டனர். சேதுபதி மன்னர் எதிர்பாராத நிலையில் 8-2-1795ம் தேதி அதிகாலையில் திடீரென இராமநாதபுரம் கோட்டையை அவர்கள் தாக்கிப்பிடித்தனர். இராமநாதபுரம் மன்னரைக் கைது செய்து மீண்டும் திருச்சிக் கோட்டையில் பாதுகாப்புக் கைதியாக அடைத்தனர்.23 குற்றச்சாட்டு, நீதி விசாரணை, தீர்ப்புரை - எதுவுமே இல்லை. உலகத்தின் மிகப் பழமையான ஜனநாயக அரசியலைப் பெற்று இருந்த வெள்ளைப் பரங்கிகளின் அரசியல் விவேகத்திற்கு இந்த நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணம். தன்னுரிமை காக்கப் புறப்பட்ட தன் மானச் செம்மல், சேதுபதி மன்னர் பதினான்கு ஆண்டு செல்லரித்துப்போன சிறைவாழ்க்கையினால் 24-2-1809ல் சென்னையில் மறைந்தார்.24

ஆனால், மன்னர் இல்லாது மனங்குமுறிய மறக்குடி மக்களது ஆவேசம் இரண்டு கிளர்ச்சிகளாக உருப்பெற்றன. முதலில் கி. பி. 1797ல், இராமநாதபுரம் சீமையின் தென்பகுதியில் கும்பெனியாருக்கு வரி செலுத்த மறுக்கும் குடிமக்கள் கிளர்ச்சியொன்று எழுந்து பரவியது. அப்பொழுது கும்பெனிக் கலெக்டராக இருந்த கலெக்டர் காலின்ஸ் ஜாக்ஸன் விரைவான நடவடிக்கை எடுத்து அதனை அடக்கி ஒடுக்கினார்.25 ஆனால் மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து அதே முதுகுளத்துார் பகுதியில் மக்கள் கிளர்ச்சி எழுந்தது. ஆயுதப்புரட்சியாக இராமநாதபுரம் மன்னரது சேவையில் இருந்த மயிலப்பன் என்ற குடிமகன் இந்தக்கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.26கும்பெனியாரிடம் குரோதமும் வெறுப்பும் கொண்டிருந்த பாஞ்சாலங்குறிச்சி, குளத்துார் காடல்குடி, சாத்துர் போன்ற பாளையக்காரர்களும் இந்தக் கிளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். கிளர்ச்சி சூறாவளி போலப் பாவியது. நாற்பத்து ஒரு நாட்கள் தொடர்ந்து பரவிய இந்தக் ,கிளர்ச்சியும். பாளையங்கோட்டை, மதுரைப் பாசறைகளில் இருந்து வந்த கம்பெனிப் படைகளின் கொடூரமான தாக்குதலால் அடக்கி நசுக்கபட்டது. இவர்களுக்கெல்லாம் மேலாக, இராமநாதபுரம் மன்னர் மீது கொண்டிருந்த முன் விரோதம் காரனமாக சிவகங்கை சேர்வைக்காரர்களது மறவர் படையும், கிளர்ச்சியின் கொடுமுடியாக விளங்கிய கமுதிக் கோட்டைப் பகுதியில் கிளர்ச்சிக்காரர்கள் பலர், வீரமரணம் அடைந்து தியாகிகள் ஆவதற்கும் உதவின.27 இங்ஙனம் நூற்றுக்கணக்கான வீரர்களது தியாகத்தினால் வளர்ந்த இந்த அந்நிய எதிர்ப்பு இயக்கம், துரோகிகளால் தளர்ந்தது. முதுகுளத்துார் அமில்தார். ஆப்பனூர் மறவர்கள், சித்திரங்குடி நாட்டார்கள்; அபிராமம் வீசுகொண்டத் தேவன். போன்ற சொந்தமண்ணின் மீது முற்றும் பற்று இல்லாத முண்டங்களால், கும்பெனியாரது ஒடுங்கி நடுங்கிய கைகள் ஓங்கி, உயர்ந்து, உறுதி பெற்றன.

சிவகங்கைச்சீமை : சிவகங்கைச் சீமையை நவாப்பிடமிருந்தும் கும்பெனிப் படையினிடமிருந்தும் விடுவித்த மருது சேர்வைக்காார்கள் ராணிவேலு நாச்சியாரை சிவகங்கைச் சீமையின் அரசியல் தலைவியாக அமரச்செய்து, அவர்களே பிரதானிகளாக இருந்து நிர்வாகத்தை இயக்கி வந்தனர்.28 ராணியிடம் பெரிய மருதுவிற்குள்ள அந்தரங்க தொடர்பு காரணமாக அவரது சகோதரரான சின்ன மருதுவின் நடவடிக்கைகளில் சுயேச்சையான சிந்தனையும் இயல்பான முரட்டுத்தன்மையும் பிரதிபலித்தன. என்றாலும், அவரது கட்டளைகளுக்கு எதிரான கருத்துக்கள் அங்கு எழவில்லை. அவர் எதைச் செய்தாலும் அவரை ஆதரிப்பதற்கு மக்கள் தயாராக இருந்தனர். காரணம் சின்ன மருதுவிற்கும் பொதுமக்களுக்கும் நெருங்கிய இணைப்பும் உறவும் இருந்தது. எந்த நேரத்திலும் குடிமக்கள் அவரைச் சந்தித்துக் குறைபாடுகளைச் சொல்லித் தீர்வு காண்பதற்கு ஏற்றவாறு அவர் பாதுகாப்பற்ற மாளிகை யொன்றில் குடியிருந்து வந்தார்.29 குறுகிய காலத்தில் இந்தப் பிரதானிகள் மக்களது முழுமையான செல்வாக்கைப் பெற்றனர். சிவகங்கைச் சீமையின் உண்மையான ஆட்சியாளராக அவர்கள் விளங்கினர்.

கி.பி. 1783 ஜூலைமாத இறுதி, ஆற்காட்டு நவாப் கும்பெனிப் படையை மீண்டும் சிவகங்கைச் சீமைக்கு அனுப்பி அவருக்குச் சேரவேண்டிய கப்பத்தொகையை வசூலித்து வருமாறு உத்தரவிட்டார். அந்த அணிக்கு தளபதி புல்லர்டன் தலைமை தாங்கிச் சென்றான் 30இதனை அறிந்த பிரதானிகள், அந்தப் பரங்கிப் படையை காளையார்கோவிலில் எதிர்த்துப் பொருதுவது என முடிவு செய்தனர். ஆனால், அப்பொழுது கள்ளர் நாட்டில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காததாலும் அங்கும் பரங்கிகளது அடக்குமுறையும் பேயாட்டமும் தொடர்ந்ததாலும் மருதுசேர்வைக்காரர். அப்பொழுது கும்பெனியாருடன் இணக்கமாக நடந்து கொள்ள முடிவு செய்து, நவாப் நிர்ணயித்த ஒருலட்சம் ரூபாயினை வருடப்பணமாகச் செலுத்துவதற்கும் இணங்கினர். தவணைப் பணத்தில் ஒரு பகுதியாக ரூபாய் நாற்பதாயிரத்தை தளபதி புல்லர்ட்டனிடம் கையளித்தனர்.31

நாளடைவில் பிரதானிகளுக்கும் ராணி வேலு நாச்சியாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. மருது சேர்வைக் காரர்களை ஆதரிப்பவர்களும் ராணியை பின்பற்றுபவர்களுமான அரசு ஊழியர்களும் குடிமக்களும் என இரு அணிகளாகப் பிரிந்தனர். இந்த நிலையில் தமது சீமையில் உள்ள குழப்பவாதிகளை அடக்கி நாட்டில் அமைதியை நிலவச்செய்யுமாறு நவாப்பை வேலு நாச்சியார் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே தமக்கு வருடப் பணத்தை சரியாக அனுப்பி வைக்கவில்லையென்று காரணத்தினாலும், இராமநாதபுரம் சீமையில் புகுந்து அட்டுழியம் செய்ததாக வரப்பெற்றுள்ள புகார்களின் ஆதாரத்தைக் கொண்டும் சிவகங்கை பிரதானிகள் மீது பாய்வதற்கு நவாப் துடிதுடித்துக் கொண்டிருந்தார். ஆனால் கும்பெனியார் அப்பொழுது நவாப்பிற்கு தவத் தயங்கி வந்தனர். 32அப்பொழுது, ராணி வேலு நாச்சியார் ஆர்காடு நவாப்பிற்கு அனுப்பிய கடிதத்தில்" ... ... ... முன்பு நீங்களும் நவாப் முத்தபார்கானும் என்னைச் சந்தித்த பொழுது எனது எதிரிகளை துரத்தியடிக்கப் போவதாக தெரிவித்தீர்கள். இாண்டாவது நாள் இங்கிருந்து சென்று, கொல்லங் குடியைக் கைப்பற்றிய பிறகு மருதுவைச்சேர்ந்த இருபது ஊர் நாட்டுத் தலைவர்கள் என்னிடம் வந்து விசுவாசம் தெரிவித்தனர். மருது சேர்வைக்காரர்களைப் பிடித்து வருமாறும், அவரது ஆட்களை ஒழித்து விடுமாறும் கூறி அனுப்பி வைத்தேன். பின்னர் கொஞ்ச காலத்திற்கு முன்னர் வரை, மருது சேர்வைக்காரர்கள் எனக்கும், எனது அரசாங்கத்திற்கும் விரோதமாக செயல்பட்டு வந்ததை நவாப்பிற்குத் தெரிவித்தேன். அவரும் என்னை குத்புதீன் கான் பொறுப்பில் வைத்து அரசையும் என்னிடம் ஒப்புவித்தார். மருது சேர்வைக்காரர்களையும் என்னிடத்தில் நேர்மையாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளுமாறு கட்டளை இட்டனர். ஆனால் அவரிகள் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளனர். ... ...” என குறிப்பிட்டு இருந்தார்.33

கும்பெனித்தளபதி கர்னல் ஸ்டுவர்ட் தலைமையில் சிவகங்கை நோக்கி படை எடுப்பு துவங்கியது. வழியில் புதுக்கோட்டைத் தொண்டமானது மூவாயிரம் படைவீரர்களும் கும்பெனித் தளபதியின் உதவிக்கு ஓடோடி வந்தனர்.34 இராமநாதபுரம் கோட்டையில் இருந்து உதவிப்படை யொன்றும் தளபதி மார்ட்டின்ஸ் தலைமையில் புறப்பட்டுச் சென்று கொல்லங்குடி அருகே தளபதி ஸ்டுவர்ட்டுடன் 13-5-1789ல் சேர்ந்து கொண்டது. மருது சேர்வைக்காரர்களது அணியில் கருமருந்து வெடி அணி இருந்தும் கூட, அங்கு நடந்த போரில் கும்பெனிப் படையினது முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த இயலவில்லை. ஆதலால் காளையார் கோவிலைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிக்கு அவர்கள் பின் வாங்கினார்.35 இதற்கிடையில் தளபதி ஸ்டுவர்ட்டுக்கு மதுரை, தஞ்சை, திருச்சியில் இருந்து அடுத்தடுத்து உதவி அணிகள் வந்து கொண்டிருந்தன. இவைகளுக்கெல்லாம் மேலாக மருதுசேர்வைக்காார்கள் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக அமர்த்தப்பட்டிருந்த பிரஞ்சுத் தளபதி டூபிரே கும்பெனியார் பக்கம் சேர்ந்து கொண்டு மருது சேர்வைக்காரர்களது ராணுவ அணிகள் நிலைகள், ஆயுத இருப்பு. காளையார்கோவில் கோட்டைக்கான குறுக்குப் பாதைகள். பற்றிய துப்புகளைத் தெரிவித்துவிட்டான்.36 துரோகத்திற்கு எதிரே வீாாதி வீரர்களும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லையே 14-5-1789ம் தேதி காளையார் கோவில் கோட்டை எதிரில், நடந்த போரில் கும்பெனிப்படை சிவகங்கை கிளர்ச்சிக்காரர்களைத் தோற்கடித்தது37மருது சேர்வைக்காரர்கள் திருப்பத்துாருக்குப் பின்னடைந்தனர். அங்கிருந்து மைசூர் அரசுப் பகுதியான விருபாட்சியில் புகலிடம் பெற்றனர்.38 சிவகங்கைச் சீமை குழப்பம் நீங்கியதாகக் கருதி நான்கு மாதங்கள் தங்கி இருந்த கும்பெனிப்படை திருச்சிக்குத் திரும்பியது.39 ராணி வேலு நாச்சியாரது பாதுகாவலுக்கு மட்டும் ஒரு சிறிய அணி சிவகங்கையில் தங்கி இருந்தது.

ஆனால் மருது சகோதரர்களும் அவரது ஆதரவாளர்களும் அடுத்த ஐந்து மாதங்களில் சிவகங்கைக்குத் திரும்பி வந்தனர். திடிர்த் தாக்குதலினால் நவாப்பினது பாதுகாப்புப்படையை நிலை குலையச் செய்து, நிலைமையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர். இதனை அறிந்த நவாப்பும் கும்பெனியாரும், ஆலோசனைகள் செய்து மருது சேர்வைக்காரர்களுடன் ஒரு உடன் பாட்டிற்கு வந்தனர். காரணம் மைசூர் மன்னர் திப்புசுல்தானது உதவி மருதுசேர்வைக்காரர்களுக்குக் கிடைத்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்ற பயம் அவர்களுக்கு. ராணி வேலு நாச்சியாரது மகளை மணந்து இருந்த சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவரை சிவகங்கை அரசராக ஏற்பது என்றும், அவரது பிரதானிகளாக மருதுசகோதரர்கள் பணியாற்றுவதென்றும், நவாப்பிற்கு சிவகங்கை அரசு ஆண்டுதோறும் மூன்று லட்சம் ரூயினை வருடப்பணமாக செலுத்த வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.60 இந்த உடன்பாடு மருது சகோதரர்களுக்காகவே ஏற்பட்டதுபோன்ற குறைபாடு ராணி வேலு நாச்சியாருக்கு ஏனெனில் சிவகங்கை இளவரசி வெள்ளச்சியின் கரங்களைப் பற்றுவதற்கு கருதியும் உரிமையும் பெற்று இருந்த பாடமாத்தூர் கெளரி வல்லய ஒய்யாத் தேவரைப் புறக்கணித்து, சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவரை சிவகங்கை அரச குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தியவர்களே மருது சேர்வைக்காரர்கள்தான் என்றாலும், அன்றைய அரசியலில் வலுப்பெற்று இருந்த ஆற்காட்டு நவாப்பையும் அவரது கூட்டாளியான கும்பெனியாரையும் பகைத்து ஒதுக்கத்தக்க துணிச்சலும் பலமும் ராணிவேலு நாச்சியாருக்கு இல்லை. கும்பெனியாருக்கு நிலைமை தெளிவாகப் புரிந்து இருந்த பொழுதிலும், மைசூர் மன்னர் திப்புவின் ஆதரவாளர்களான மருதுசகோதரர்கள் மூலம், தமிழ்நாட்டில் திப்புவின் படையெடுப்பு அபாயத்தைத் தோற்றுவிக்க அவர்கள் விரும்பவில்லை.[5] இவைகளுக்கு எல்லாம் மேலாக, நாளடைவில் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் கும்பெனியாருக்கும் நவாப்பிற்கும் விசுவாசமுள்ள நண்பர்களாக மாறினர். அவர்களது செல்வாக்கு வளர்ந்தது. கும்பினி தளபதி கர்னல் வெல்ஷின் தோழமையும் கலைக்டர் சுல்லிவனின் தொடர்பும் சிவகங்கை சீமைக்கும் கும் பெனியாருக்குமிடையே நெருக்கத்தை மிகுதிப்படுத்தின.

  1. 4 Rajaram Row T. Manual of Ramnad Samasthanam (1891) p. 237.
  2. 5 திருப்பூவணத்தையடுத்து வைகை ஆற்றின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஊர்.
  3. 6. Revenue Consultations, vol. 122; p. 1102
  4. 7. Annasamy Ayyer - Sivaganga Origin and its Litigations (1899) Page. 4
  5. Rajayyan K. Dr : Histoty of Madurai (1974,) p. 308.