முதற் குலோத்துங்க சோழன்/வேங்கிநாட்டில்

மூன்றாம் அதிகாரம்
வேங்கி நாட்டில் குலோத்துங்கன் முடிசூடுதல்
ம் இராசேந்திரன் பல கலைகளிலும் வல்லவனாய்ப் பல்லோரும் புகழுமாறு கங்கைகொண்ட சோழபுரத்தில் வாழ்ந்துவரும் நாட்களில், வேங்கி நாட்டில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த தன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் நோயுற்று வருந்திக்கொண்டிருக்கின்றனன் என்று ஒரு திருமுகம் வரப்பெற்றனன். இதனைக் கண்டதும் அவன் பெருங்கவலையுற்றுத் தன் மாமன்மாரிடம் விடை பெற்றுக்கொண்டு விரைவில் வேங்கி நாட்டையடைந்தான்; அங்குப் பிணியுற்றுக்கிடந்த தன் தந்தையின் நிலைமையைக்கண்டு பெரிதும் மனமுடைந்து, அவனை விட்டகலாது அணுக்கத்தொண் டனாயமர்ந்து, வேண்டியன புரிந்துவந்தான். அந்நாளில் சளுக்கிய இராசராசனும் தனக்குக் கடவுள் அமைத்த வாழ்நாள் முடிவுற்றமையின் கி. பி. 1062-ஆம் ஆண்டில் வானுலகஞ் சென்றனன்.[1] தந்தையின் பெரும் பிரிவிற்காற்றாது வருந்திய இராசேந்திரனும் மகன் தந்தைக்கு ஆற்றவேண்டிய தீக்கடன் நீர்க்கடன் முதலியவற்றை முடித்து, அம்மான்மாரும் ஆன்றோரும் ஆறுதல் கூற, ஒருவாறு அத் துன்பத்தினின்று நீங்கினான். பின்னர், அமைச்சரும் சுற்றத்தினரும் அவனுக்கு முடி சூட்டுவிழா நடத்தற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

இஃது இங்ஙனமாக, கீழைச் சளுக்கியரது தாயத்தினரான மேலைச்சளுக்கிய மன்னர்களுள் ஆறாம் விக்கிரமாதித்தன் என்ற ஓர் அரசன் இருந்தான். அவன் பெரிய போர்வீரன். அவனுக்கும் சோழருக்கும் அடிக்கடி பெரும்போர்கள் நிகழ்ந்துவந்தன. சோழர்கள் தெற்கேயுள்ள பல மன்னர்களை வென்று தம்மடிப்படுத்தித் தாம் முடிவேந்தர்களாய் மேன்மையுற்று விளங்கினர். அங்ஙனமே மேலைச்சளுக்கியரும் தக்கணத்தின் வடபாகத்தில் பெருமையுடன் நிலவினர். இதனால் பேராண்மையும் பெருவீரமும் படைத்த இவ்விரு அரசகுலத்தினரும் ஒருவரை யொருவர் வென்று கீழ்ப்படுத்தவேண்டுமென்ற எண்ணமும் முயற்சியும் உடையவராகவே இருந்தனர். இதற்கேற்ப, முதலாம் இராசராசசோழன் காலமுதல் சோழர்கள் கீழைச்சளுக்கிய மன்னர்களுக்குத் தம் பெண்களை மணஞ்செய்து கொடுத்து அன்னோரைத் தமக்கு நெருங்கிய உறவினராகச் செய்துகொண்டதோடு தம் ஆட்சிக்குட்பட்டிருக்குமாறும் செய்துவந்தனர். இதனால் கீழைச்சளுக்கியரது உதவி மேலைச்சளுக்கியருக்குக் கிடைக்காமற் போயிற்று. அன்றியும், சோழர்களது வலிமையும் பெருமையும் வளர்ச்சியுறலாயின. இதனையுணர்ந்த மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் தன் தாயத்தினரான கீழைச்சளுக்கியரைச் சோழர்களினின்று பிரித்துத் தன்பால் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்ற கருத்துடையவனாய்க் காலங்கருதிக் கொண்டிருந்தான். அதற்கேற்ப அவன் வேங்கியின் மன்னனாகிய இராசராசநரேந்திரன் இறந்ததை யறிந்து, அதுவே தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கோடற்குத் தக்க காலம் என்று கருதித் தன் தண்ட நாயகனான சாமுண்டராயன் தலைமையில் ஒரு படையை வேங்கி நாட்டிற்கனுப்பினான்.[2]

இச்செய்தியை யறிந்த வீரராசேந்திரசோழன் தன் முன்னோர்கள் காலமுதல் நெருங்கிய உறவினால் பிணிக்கப்பட்டிருந்த வேங்கிவேந்தரையும், தங்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாட்டையும் இழப்பது தன் ஆண்மைக்கும் வீரத்திற்கும் இழிவையே பயக்குமென்று துணிந்து ஒரு பெரும்படையோடு அந்நாட்டை நோக்கிச் சென்றான். அங்குக் கடும்போர் நடைபெற்றது. அப்போரில் மேலைச்சளுக்கியரது தண்டநாயகனான சாமுண்டராயன் என்பான் கொல்லப்பட்டான். அவனது படைகள் எல்லாம் சிதறுண்டு நாற்றிசையிலும் ஓடியுய்ந்தன. வெற்றியெய்திய வீரராசேந்திரசோழன் தன் மருமகனாகிய இராசேந்திரனுக்கு வேங்கிநாட்டில் ஒரு நன்னாளில் முடி சூட்டி, அந்நாட்டிலுள்ள மக்கள் எல்லோரையும் மகிழ்வுறச்செய்தான். அக் கீழைச் சளுக்கிய நாட்டின் ஒழுகலாற்றின்படி, நமது இராசேந்திரன் ஏழாம் விஷ்ணுவர்த்தனன்[3] என்னும் பெயரை முடிசூட்டுநாளில் எய்தித் 'தந்தையினும் சதமடங்கு தனயன்' என்ற ஆன்றோர் உரைக்கு இலக்காக அரசு செலுத்திவந்தான். அக்காலங்களில் அவனுக்கு உசாத்துணையாயிருந்து அவனது பேரன்பிற்குரியவனாய் ஒழுகிவந்தவன் விசயாதித்தன் என்ற அவனது சிறிய தந்தையே யென்பர். அவனது ஆட்சிக்காலத்தில் வேங்கிநாடு மிகச் செழிப்புற்றிருந்தது. குடிகளும் இன்புற்று வாழ்ந்துவந்தனர்.



  1. 1. S. I.T.Vol. I. No.9.
  2. 2. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் பக் - 26.
  3. 3. S. I. I. Vol. VI. No. 201.