முஸ்லீம்களும் தமிழகமும்/சேதுபதிகள் ஆட்சியில்

14

சேதுபதிகள் ஆட்சியில்


மதுரை நாயக்க மன்னர்களுக்கு சம காலத்தவராக இராமநாதபுரம் சீமையில் தன்னரசு ஆட்சி செய்தவர்கள் சேதுபதிகள் என்ற மறவர் குடிப் பெருந்தலைவர்கள். முன்னூறு கிலோ மீட்டருக்கும் கூடுதலான கீழைக் கடற்கரைக்கு சொந்தக்காரரான அவர்களது நாடு, வரலாற்றுப் பெருமையுடையது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தக்கடற்கரை யவனர்களுக்கும் யூதர்களுக்கும் அறிமுகமாகி இருந்தது என்பதை அண்மையில் அழகன்குளம் அகழ்வில் கிடைத்த ரோமப்பேரரசரது நாணயங்களும் வண்ணக்கல்மணிகளும்.[1] பெரியபட்டினம் அகழ்வில் கிடைத்த யூதர்களது உறிப்ரூ மொழிக்கல்வெட்டும்[2] உறுதிப்படுத்துகின்றன. இன்னும் உலகப் பயணிகளான தாலமியும், பிளினியும் குறிப்பிடுகின்ற சிறந்த கடற்பட்டினங்களான மோரெல்லா, அற்றகாரு ஆகிய ஊர்களும் இந்தக் கடல்பகுதியில் இருந்து கடல் கோளினால் அழிந்து மறைந்துவிட்டன.

சேது நாட்டின் கடற்கரைப்பகுதிகளில் பன்னிரண்டு பதின் மூன்றாவது நூற்றாண்டுகளில் அராபிய வணிகர்களது அஞ்சு வண்ணங்கள் அமைந்து, அந்தப்பகுதியின் வணிகப் பொருளான முத்தையும், கைத்தறித் துணிகளையும் கீழை மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவின. அத்துடன் அந்தப் பகுதியில் சமயப் பணிகளில் ஈடுபட்ட சான்றோர்களுக்கும் பேராதரவாக இருந்து வந்தன. தங்களது நாட்டில் குடியமர்ந்த அஞ்சு வண்ணத்தாரிடம் பரிவும் பாசமும் கொண்டிருந்தனர் என்பதை சேதுபதி மன்னர்களது பட்டயங்கள் சான்று பகருகின்றன. தமிழ்ப் பணிகளுக் கும் தெய்வீக கைங்கர்யங்களுக்கும் தம்மை, அர்ப்பணித்துக் கொண்டு இருந்த திருமலை ரகுநாத சேதுபதி (கி.பி.1636-1674) குணங்குடியில் அடக்கப்பெற்றுள்ள புனிதசையதுமுகம்மது புகாரி என்ற இறைநேசரது தர்கா பராமரிப்பிற்காக, நிலக்கொடை கள் அளித்தார்.[3] இந்த மன்னரை அடுத்து அரியணை ஏறிய ரகுநாத கிழவன் சேதுபதி (கி பி.1674-1710) மீண்டும் சில நிலக்கொடைகளை அந்த தர்காவிற்கு வழங்கியதுடன் திருச்சுழியல், காரேந்தல், கொக்குளம், நாடாகுளம் பள்ளிவாசல்களுக்கும் நிலக்கொடை வழங்கிய விவரம் இராமநாதபுரம் சமஸ்த்தானம் ஆவணம் ஒன்றில் காணப்படுகிறது. மற்றும் சேதுபதி மன்னர்கள், திருச்சுழியில், காரேந்தல், கொக்குளம், நாடாகுளம், பொந்தாம்புளி, கொக்காடி, கன்ன்ராஜபுரம், நாரணமங்கலம், ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கும், இராமேசுவரம், இராமநாதபுரம், எறுபதி தொண்டி ஆகிய ஊர்களில் உள்ள தர்காக்களுக்கும் வழங்கியுள்ள அறக்கொடைகள், அந்த மன்னர்களது சமரச மனப்பான்மைக்கு சாட்சியமாக, இன்றளவும் இருந்து வருகிறது.[4]

இராமநாதபுரத்தை முதன் முதலில் கோநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி ரகுநாத கிழவன் சேதுபதி, கொடையால் தமிழ் வளர்த்த கோமான் வள்ளல் சீதக்காதி மரக்காயரை, ஆள்வினையுடைய அமைச்சராக தமது அவையில் அமரச் செய்து இருந்தார். இராமநாதபுரம் கோட்டைக்குள், மன்னரது மாளிகைக்கு அருகில் அழகிய மாளிகையொன்றையும் மரக்காயருக்கு அளித்து இருந்தார் என்ற விபரம் சீதக்காதி நொண்டி நாடகத்தில் காணப்படுகிறது. "யாதினினும் இனிய நண்ப! எம்முடன் யாண்டும் இருத்தி" என வள்ளலை மன்னர் தம்முடன் வைத்துக் கொண்டதுடன், தமது இளவல்களில் அன்பால் சிறந்தவர் என்ற பொருளில் "விசைய ரகுநாத பெரியதம்பி" என்ற விருதும் வழங்கிச் சிறப்பித்தார். மாறவர்மன் குலசேகர பாண்டியனது அமைச்சராக இருந்த சுல்தான் தக்கியுத்தீனுக்குக் கூட கிடைக்காத பேறு. கோட்டை சொத்தளம், அரண் , அமைப்புகளில் இசுலாமியர் சிறந்து இருந்தவர்கள். ஆதலால், சேதுபதி மன்னரும் அதுவரை, மண்ணாலாகிய கோட்டை மதிலுடன் விளங்கிய தமது இராமநாதபுரம் கோட்டையை அகற்றிவிட்டு, வள்ளல் அவர்களது ஆலோசனையைக் கொண்டும் பொருள் வளத்தைக் கொண்டும் முப்பத்து இரண்டு கொத்தளங்களுடன் இருபத்து ஒரு அடி உயரமும் ஐந்து அடி அகலமும் கொண்ட செவ்வக வடிவிலான கற்கோட்டையையும் முகலாய மன்னர்களது பணியில் அரண்மனையையும் அமைத்தார்.[5]இராமநாதபுரம் அரண்மனை அமைப்பிலும், அரண்மனை நிர்வாகத்திலும் சேதுபதி மன்னரது அரசியல் நடைமுறையிலும் வள்ளல் சீதக்காதிக்கு பெரும்பங்கு இருந்தது. அத்துடன் மறவர் சமையின் கடற்கரைப் பகுதி வணிகத்தை கண்காணிப்பதற்கும், கடற்கரைப்பகுதியில் மன்னரது இறையை வசூலிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. இதனால் டச்சு ஆவணங்களில் சீதக்காதி மரக்காயர் "ரிஜண்ட் பெரியதம்பி" என்று குறிக்கப்பட்டுள்ளார்.

இந்த "விஜய ரகுநாத" என்ற சேதுபதிகளது விருது, முதன்முறையாக இசுலாமியரில் வள்ளல் சீதக்காதி மரைக்காயருக்கு வழங்கப்பட்டு இருந்த பொழுதிலும், பிற்காலத்திலும் கிழக்கரையைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட மரைக்காயர் குடும்பத்தினருக்கு மட்டும் தொடர்ந்து வழங்கப்பட்டு அவர்கள் அதனை ஆவணங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர்.[6] இதனைப் போல அபிராமத்தை (கமுதி வட்டம்) சேர்ந்த சிறந்த இஸ்லாமிய பெருமகன் ஒருவருக்கு அவரது சிறப்பான வீரச்செயலுக்காக, வெற்றியாளன் என்ற பொருளில் சேதுபதி மன்னரால் “விஜயன்” என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தின் இன்றைய தலைமுறையினரும் கூட தங்களது பெயருக்கு முன்னால் விஜயன் என்ற அந்த விருதுச் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களைப் போன்று போகலுார் கிராமத்தைச் சேர்ந்த கனி ராவுத்தர் என்பவர் சேதுபதி மன்னரால் "சேர்வை” என்ற சிறப்புப்பட்டம் அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டதுடன், இன்றைய கன்னிராஜபுரம் (முதுகுளத்துார் வட்டம்) என்ற கிராமமும் அவருக்கு செல்லத்தேவர் சேதுபதி என்பவரால் தானமாக வழங்கப்பட்டது.[7] அந்த கனி சேர்வையின் வழியினர் இன்றும் அந்த "சேர்வை" என்ற சிறப்பு விகுதியைத் தங்களது இசுலாமியப் பெயருடன் இணைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

சேது நாட்டுக்குடிகளில் இசுலாமியர் சிறுபான்மையரில் பெரும்பான்மையராக இருந்து வந்தனர். இப்பொழுதும் இருந்து வருகின்றனர். பெரும்பாலும், வியாபாரத்திலும் நெசவிலும், சிறிய அளவினர் கடல் தொழில். விவசாயம், இரும்பு, செம்பு, வார்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் கீழ் நிலையில் இருந்த சாதாரண இசுலாமியர், நெவுத் தொழிலில் ஈடுபட்டு இருந்ததைப் பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இராமநாதபுரம், கீழக்கரை, எக்ககுடி, பனைக்குளம், கமுதி, கடலாடி, அபிராமம், முதுகுளத்தூர், பரமக்குடி, கோட்டைப் பட்டினம் கிழக்கரை, இராமநாதபுரம் வெளிப்பட்டினம் ஆகிய ஊர்களில் இசுலாமியர் நெசவுத் தொழிலிலும், சாயங் காய்ச்சுதலையும் மேற்கொண்டு இருந்ததாக இராமநாதபுரம் சமஸ்தான மானுவல் தெரிவிக்கின்றது.[8] அந்தப்பகுதிகள் இன்றும் - "பாவோடிகள்" எனப் பல ஊர்களில் குறிப்பிடப்பிடுகின்றன. இராமநாதபுரம் சீமையின் கைத்தறி உற்பத்தியை நேரில் பார்வையிட்டு, கும்பெனித் தலைமைக்கு, கும்பெனியாரது நாகூர் வணிகப் பிரதிநிதியான மைக்கேல் என்பவர் கி.பி. 1794ல் அனுப்பிய ரகசிய அறிக்கையில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள கீழ்க்கண்ட ஊர்களின் கைத்தறி மையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[9]

1. சித்தார்கோட்டை கிராமம் 30 தறிகள்
2. பன்னைக்குளம்  " 20 தறிகள்
3. எக்ககுடி  " 50 தறிகள்
4. போகலூர்  " 50 தறிகள்
5. ஆனையூர் பேரையூர்  " 50 தறிகள்
6. கமுதி  " 100 தறிகள்
7. திருப்பாலைக்குடி  " 20 தறிகள்
8. நம்புதாழை  " 20 தறிகள்
9. எடுத்துக்காட்டு  " 20 தறிகள்
10. எடுத்துக்காட்டு  " 20 தறிகள்
11. எடுத்துக்காட்டு  " 60 தறிகள்
12. எடுத்துக்காட்டு  " 30 தறிகள்
13. எடுத்துக்காட்டு  " 150 தறிகள்
மொத்தம் 980 தறிகள்

இவையனைத்தும் இசுலாமியரது தறிகள் கும்பெனியாரது இன்னொரு ஆவணத்தின்படி, பரமக்குடியில் மட்டும் கி.பி.1790ல் அறுநூறு தறிகள் இருந்ததாகவும் அதில் அறுபது சோனகருடையவை என குறிப்பிடப்பட்டிருப்பதுடன், இந்த தறிகளில் உற்பத்தி செய்யப்படும் துணிவகைகளை டச்சுக்காரர்கள் விரும்பி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தனர் எனவும் தெரியவருகிறது.[10] இந்த துணிவகைளில் "முறி” என்ற வகை இருந்ததும் தெரிய வருகிறது. இசுலாமியரைக் குறிக்க உதவும் "மூர்" என்ற சொல்லின் ஆதாரமாகக் கொண்டது இந்த துணியின் பெயராகும். இந்த இசுலாமிய நெசவாளிகள் பற்றிய இராமநாதபுரம் மன்னரது கி.பி. 1742ம் வருடத்திய செப்புப் பட்டயத் தொடரில் உள்ள "நமது காவல் குடியினரான துலுக்கரது "தறிக்கடமை" நீக்கி" என்ற சொற்கள் இஸ்லாமியர் பால் சேதுபதிகள் கொண்டிருந்த வாஞ்சையை “நமது” என்ற சொல் மிகவும் அழுத்தமாக வலியுறுத்துகிறது.[11]

மேலும் கி.பி. 1759ல் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்று இந்த நெருக்கத்தை காலமெல்லாம் நினைவூட்டுவதாக உள்ளது. சேது மன்னர்களது அனுமதியுடன் பாம்பனிலும், கீழக்கரையிலும் தங்களது பண்டக சாலைகளை டச்சுக்காரர்கள் அமைத்து, மன்னார் வளைகுடாவில் வணிகத்தை வளர்த்து வந்த நேரம். இலாபத்தைக் கண்டு மகிழ்ந்த அவர்கள் தங்கள் பண்டக சாலைகளைச் சுற்றி முதலில் முள்வேலிகளை அரண்களாக அமைத்தனர். அடுத்து, சிறு கற்கோட்டைகளைப் போன்று பாதுகாப்பு நிலைகளுடன் அதனைப் பலப்படுத்தினர். நிலத்தில் நிகழ்த்திய இத்தகைய ஆக்கிரமிப்புடன், அமையாமல் நீரிலும், அவர்கள் தங்களது கைவரிசையை காட்டினர். கி.பி. 1750ல் மன்னாரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு கொட்டைப்பாக்கு, அரிசி, நெல், நல்ல எண்ணை ஆகியவற்றை ஏற்றிவந்த பாய்மரக் கப்பலை டச்சுக்காரர் தங்களது அனுமதி பெறாமல் பயணத்தை மேற் கொண்டதாக காரணம் காட்டி கைப்பற்றினர். அதனுடைய சொந்தக்காரர், தாம் சேது நாட்டைச் சேர்ந்த கோட்டைப் பட்டினவாசி என்றும், சேது மன்னரது அனுமதியுடன் செல்வதாக விளக்கம் சொல்லியும் அதனை டச்சுக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அடுத்து, மன்னாரில் இருந்து கீழக்கரைக்கு வந்து கொண்டிருந்த டச்சுக்காரரது தோணியை சேதுபதியின் ஆட்கள் தடுத்து கைப்பற்றினர். இரு தரப்பிலும் ஏற்பட்ட இத்தகைய ஆத்திரம் மூட்டும் நிகழ்ச்சிகளினால் பிரச்சினை உணர்ச்சி வயமானதாகிவிட்டது. தூத்துக்குடியிலிருந்து டச்சுக்காரரது படையணி கீழக்கரைக்கு வந்தது. சேதுமன்னரது படையணியொன்றும் கிழக் கரையில் உள்ள டச்சுக்காரது பண்டகசாலையைச் சூழ்ந்து, பிரங்கியினால் அதனைத் தகர்த்து எரியும் முயற்சியை மேற்கொண்டது. சமாதானம் பேசவந்த டச்சுத் தரப்பினரும் இராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். பேச்சு வார்த்தைகள்முறிந்து பெரும் மோதல் ஏற்படும் நிலையில் சேதுமன்னரது நெருங்கிய நண்பரான கிழக்கரை வணிகர் தம்பி மரைக்காயர் என்பவரது தலையீடும் தளராத முயற்சியும் மன்னருக்கும் மாற்று நாட்டாரான டச்சுக்காரருக்கும் இடையில் பெரும் போர் ஏற்படாமல் தடுத்ததுடன், மீண்டும் அவர்கள் சமூகமான சூழ்நிலையில் வேந்தர்-வணிகர் என்ற உறவுகளை நீடிப்பதற்கு உதவின.[12]

சைவநெறியில் திளைத்து வாழ்ந்த, சிறந்த சிவனடியார்களான சேதுபதி மன்னர்கள், இசுலாத்தை வேற்று நாட்டு சமயம் என விகற்பமாக எண்ணாமல், சமயப்பொறையுடன் நடந்து வந்தனர். அதனால் அவர்களது சீமையில் இசுலாம் தழைத்தது. ஆனால், அதே காலகட்டத்தில், மறவர் சீமையில் நிலை கொள்ள முயன்ற இன்னொரு வேற்றுச்சமயமான கிறித்தவ மதத்தை வேரோடு பறித்து வீழ்த்த சேதுபதிகள் கொண்ட ஒற்றம் - குறிப்பாக அந்தோணி கிரிமினாலினி என்ற இத்தாலிய பாதிரியாரது வேதாளை என்ற படுகொலை - கி.பி. 1549 ஜான் டி. பிரிட்டோ சாமியார் ஒரியூரில் சிரச்சேதம் கி.பி. 1792ல் ஆகிய கறும் புள்ளிகளை வரலாற்றில் பார்க்கும்பொழுது, இசுலாமியரிடம் அந்த மன்னர்கள் காட்டிய சகோதர வாஞ்சை, அன்பு பரிவு, பாசம் ஆகியவை நமமை பிரமிக்கச் செய்கின்றன. இங்ஙனம், நாட்டின் வளஞ்சேர்க்கும் நல்லியல்பு வணிகர்களாகவும் அரசியல் சாமந்தர்களாகவும் இசுலாமியர், தொடர்ந்து விளங்கினர் என்பது இந்த நிகழ்ச்சிகளால் பெறப்படுகிறது.

15

பரங்கியரும், முஸ்லீம்களும்


நமது நாட்டுடன் வாணிபத்தில் தொடர்பு கொண்ட இசுலாமிய அரபிகள், மேற்கு, கிழக்கு கரைகளில் உள்ள கடற்துறைகளில் தங்கி தங்களது வாணிபத்தை வளர்த்ததுடன் இந்த மண்ணின் மலர்ச்சிக்கும் உதவியதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். ஆனால் பதினாறாவது நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தப்புனித மண்ணில் பரங்கிகளது கால்கள் பட்டவுடன் இங்கிருந்த இசுலாமியர்களது சமய வாழ்க்கையிலும் சமுதாய அமைப்பிலும் விரும்பத்தகாத மாற்றங்களும் விளைவுகளும் நிகழ்ந்தன. அந்தப் பரங்கிகள் யார்? அவர்கள் இழைத்த இன்னல்கள் யாவை? பன்னிரண்டாம் நூற்றாண்டில் அரபுத் தாயகத்தில் நடைபெற்ற சிலுவைப்போரில் கலந்து கொண்ட ஐரோப்பியர் அனைவரையும் முஸ்லீம்கள் "பரங்கி" என அழைத்தனர். "பலாங்" என்ற சொல் "பரங்" ஆகி பின்னர் "பரங்கி" ஆயிற்று. பாரசீக மொழியில் "பெரங்கி" என்றாகியது. முகலாயப் பேரரசர் பாபர், முதன் முதலில் போர்ச்சுகீசிய மக்களை "பரங்கி" என அழைத்தார்.[13] ஏனெனில் முதன் முறையாக வணிகத்திற்கு நமது நாட்டிற்கு வந்த மேனாட்டார் போர்ச்சுகல் நாட்டவர். ஆதலால் அவர்கள் பரங்கி எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் அவர்களையடுத்து இங்கு வந்த பிரஞ்சு, ஆங்கில நாட்டவரும் அதே இடு குறிப்பெயரில் வழங்கப்பட்டனர். அரபுத் தாயகத்தின் தென்கோடியில் மலர்ந்த இசுலாம். வடக்கில் பாலத்தீனம், ஸிரியா, பைஜான்டைன், ஆகிய நாடுகளில் விரைவாகப் பரவியதுடன் மத்திய தரைக்கடலின் மேற்குப் பகுதியான ஸ்பெயினிலும் பரவியது. அப்பொழுது ஸ்பெயின் நாடு, "அல் அந்தலூஸ்", "அந்தலூஷியா" என அரபு மொழியில் வழங்கப்பட்டது. சிலுவைப்போர்கள், கிறித்தவ குருமார்களது இடைவிடாத பொய்ப்பிரச்சாரம், இசுலாமிய தலைமை பீடத்தில் நிலவிய ஊழல்கள், ஒழுக்கக்கேடுகள் ஆகியவை காரணமாக, அட்லாண்டிக் மாகடலையொட்டிய ஸ்பெயின் நாட்டின் சிறு பகுதி மீண்டும் கிறித்தவ சமயப்பிடிக்குள் சென்றது. இசுலாமியருக்கு எதிராக கலவரத்தை முன் நின்று நடத்திய ஜான் என்பவன் புதிய போர்ச்சுகல் நாட்டை அமைத்து அந்த நாட்டின் அதிபரானான். அவனுடைய மகன் ஹென்றி, புதிய நாட்டை வலுவும் சிறப்பு மிக்கதாக ஆக்க வேண்டும் என்ற ஆசையினால் அல்லும் பகலும் சிந்தித்து வந்தான். அவன் கண்ட முடிவு அன்றைய ஐரோப்பிய சமுதாயத்தில் புகழும் பொலிவும் பெற்றுத் திகழ்ந்த இசுலாமியரது வாணிபச் செல்வாக்கை அழிக்க பாடுபட வேண்டும் என்பது.

அன்றைய நிலையில், இந்து மாக்கடல், பாரசீக வளைகுடா கடல், செங்கடல், மத்யதரைக்கடல் ஆகிய அனைத்து நீர்வழிகளும் இசுலாமியரது வாணிப வளர்ச்சிக்கு உதவும் ஏகபோக பகுதிகளாக இருந்தன.[14] கீழை நாட்டுப் பொருட்களுடன் அவர்களது பொருட்களையும், கப்பல், ஒட்டகம், மூலமாக வெனிஸ் நகரத்தில் நிறைத்தனர். அங்கிருந்து அவை ஐரோப்பிய கண்டம் முழுவதும் வினியோகிக்கப்பட்டன. இசுலாமியர் இதனால் பெருத்த ஆதாயம் அடைந்து வந்தனர். ஆதலால், அவர்களது வாணிபச் செல்வாக்கை அழிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய நீர்வழிக்கு மாற்று வழியொன்றைக் கண்டுபிடிக்க ஹென்றி முயற்சித்தான். காகரி என்ற இடத்தில் இதற்கான ஆய்வுக்கூடம் ஒன்றையும் அமைத்தான். அவனது உழைப்பு, ஊக்குவிப்பு காரணமாக போர்ச்சுகல் நாட்டு மாலுமிகள், அலைகடலுக்கு அப்பால் போர்டோ, காண்டோ தீவுகள் (கி.பி. 1419) மதீரியா (கி.பி. 1420) கானரி, அஜோர்தீவுகள் (கி.பி. 1431) பிரான்கோ முனை, ஸெனகல் ஆறு, கினியா (கி பி. 1445) வெர்டோ முனை (கி.பி. 1446) ஆகிய புதிய நீர், நிலப்பகுதிகளைக் கண்டுபிடித்தனர். இத்தகைய ஊக்குவிப்புகளின் தொடராக, வாஸ்கோடா காமா என்ற மாலுமி கி.பி. 1497ல் ஆப்பிரிக்க பெருங்கண்டத்தின் மேற்கு, தெற்குப்பகுதிகளைக் கடந்து இந்து மகா கடல் வழியாக கி.பி. 1498ல் நமது நாடடின் மேற்கு கரைப்பட்டினமான கோழிக்கோட்டை வந்தடைந்தார். போர்ச்சுகல் நாட்டு மன்னரது பரிந்துரை மடலுடன்.

கோழிக்கோடு மன்னர் ஸாமரின், போர்ச்சுகல் மாலுமி குழுவினருக்கு வரவேற்பு வழங்கி ஆதரவு அளித்தார். என்றாலும் அந்த மன்னரது நண்பர்களாக, அலுவலர்களாக, குடிகளா, ஏற்கனவே அங்கு இருந்து வந்த இசுலாமியரது செல்வாக்கும், செல்வ வளமும் பரங்கிகளது கண்களை உறுத்தின. வாஸ்கோடா காமாவைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் இருந்து கொங்கணக்கரை கேரளக்கரைக்கு வந்த வாணிப கப்பல்களில் விற்பனைப் பொருட்களுடன் பீரங்கிகளும் இருந்தன. ஆங்காங்கு இசுலாமியரது வாணிபக்கப்பல்களை கொள்ளையடிப்பதற்கு அவை உதவின. அத்துடன் ஸாமரின் மன்னரை அடக்கி, அஞ்சுமாறு செய்யவும் அவை பயன் பட்டன.[15] நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் கிழக்கு கரையையும் எட்டிப்பார்த்தனர். கி.பி. 1502ல் அவர்கள் தூத்துக் குடிக்கு வந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை பிரமிக்க வைத்தது. தமிழகத்திலும் இசுலாமியர், தூத்துக்குடி துறைமுகத்தை மட்டுமின்றி மன்னார் வளைகுடா பகுதி முழுவதையும் அவர்களது கட்டுபாட்டில் வைத்து இருந்தனர். அப்பொழுது காயலில் இருந்த இசுலாமிய அரசர் முத்துக்களாலான மாலையை அணிந்து காணப்பட்டதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. மீன்பிடித்தல், முத்துக்குளித்தல் ஆகிய பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டு இருந்த பரவர்கள், இசுலாமியரது இறுக்கமான பிடியில் இருந்து வந்தனர். அன்றைய நிலையில் முத்துகுளித்தல் பெரிதும் ஆதாயம் அளிக்கும் தொழிலாக இருந்தது. ஆனால், பரவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் அந்த தொழிலில் ஈடுபட முடியாத நிலையை உணர்ந்த பரங்கிகள், பொறுமையாக சூழ்நிலைகளை கவனித்து வந்தனர். முத்துக்கள் வணிகத்தைப் பற்றிய அவர்களது பொறாமையும் பேராசையும் வளர்த்தன.

மன்னார் வளைகுடாவில் கிடைத்த முத்துக்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. பாண்டிய நாடு முழுவதையும் வெற்றி கொண்ட ராஜராஜ சோழனது (கி.பி. 985-1012) கல்வெட்டுக்களிலும் இந்த முத்துக்களைப்பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வட்டம், அனுவட்டம், ஒப்புமுத்து, குறுமுத்து, கோத்தமுத்து, நிம்பளம், பயிட்டம், அம்பு, முதுங்கறடு, இரட்டை, சப்பத்தி, சிவந்த நீர், குளிந்த நீர் என்பன அவை.[16] ஆனால் இவைகளைப் பற்றி முதல் முறையாக எமுதிய வெளிநாட்டார் அல்இத்ரிசி (கி.பி. 1154) என்ற அரபு நாட்டார். கி.பி. 1292ல் பாண்டிநாடு வந்த உலகப் பயணி மார்க்கோ போலோ, மன்னார் வளைகுடாவில் பத்தலாரில் - (கப்பலாறு - பெரியபட்டனம்) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் முத்துச்சிலாபம் என்ற முத்துக்குளித்தலை நேரில் பார்வையிட்டு, அவரது குறிப்புகளில் விவரம் தந்துள்ளார்.[17] அவரைத் தொடர்ந்து தமிழகம் வந்த பிரையர் ஜோர்தனஸ் என்ற பிரஞ்சு நாட்டு பாதிரியாரும் வாங்-தா-யூவன் என்ற சீனப் பயணியும் முத்துச் சிலாபம் பற்றிய குறிப்புகளை வரைந்துள்ளனர்.[18]

முத்துக்குளித்தலில் மதுரை நாயக்க மன்னர் 96 1/2 கல்லும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் 59 கல்லும் போட்டு முத்துக் குளிக்கும் உரிமை பெற்று இருந்தனர். திருமலைமன்னர் அவருக்குரிய கல்லில் பத்துக்கல் போட்டு முத்துக் குளிக்கும் உரிமையை, அவரது பிரதிநிதியான காயல்பட்டினம் நாட்டாண்மை "முதலியார் பிள்ளை மரைக்காயருக்கு", அளித்து இருந்தார்.[19] திருமலை மன்னரிடம் காயல்பட்டினத்து மரைக்காயருக்கு. அந்த அளவிற்கு பெரும் செல்வாக்கு இருந்தது. இந்த உரிமையை போர்ச்சுக்கியரும் பின்னர் டச்சுக்காரரும் மதித்த்னர் என்றால் மரைக்காயரது அறிவாற்றலையும் ஆள்விளை உடமையையும், என்னவென்பது? மதுரை மன்னரைப் போன்று சேதுபதி மன்னர்களும் தங்களுக்குரிய முத்துக்குளித்தல் உரிமையில் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயிலுக்கும், திருப்புல்லணை ஜகநாதப் பெருமாள் கோயிலுக்கும் சலுகைகள் வழங்கி இருந்தனர்[20]. இந்த சலுகைகளின்படி அந்தக் கோயில்களுக்காக முறையே இராமேசுவரத்திலும் கீழக்கரையிலும் இருந்த மரைக்காயர் குடும்பங்கள், முத்துச்சலாபம் நடத்தினர், கி.பி. 1823ல் ஆங்கில கிழக்கிந்திய துரைத்தனம் இந்தச் சலுகைகளைப் பறிமுதல் செய்தது.

இராமேசுவரம் திருக்கோயிலுக்காக முத்துக்குளித்தவர்கள் இராமேசுவரம் சுல்தான் மரைக்காயர் குடும்பத்னர். அண்மைக் காலம் வரை, அந்தக்கோயிலின் தெப்பத்திருவிழாவிற்கு படகுகள் கொடுக்கும் "ஊழியம்" அவர்வழியினருக்கு இருந்தது. அந்தக் குடும்பத்தினரின் கண்ணியத்தையும் வாணிபச் செல்வாக்கையும் கருதிய திருக்கோயில் நிர்வாகத்தினர். கோயில் கருவறையின் திறவுகோல்களை அந்தக் குடும்பத்தினரது பொறுப்பில் கொடுத்து வைத்து இருந்தனர்.[21] இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் கோயிலுக்கு அரசினர் தர்மகர்த்தாக்கள் நியமனம் செய்த பிறகுதான் இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது. முத்துச்ச லாபம் காரணமாக தோன்றிய இந்த மரபுகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தம் தானே !

தமிழக இசுலாமியர், முத்துக்குளித்தலில் மட்டுமல்லாது அவைகளை முறையாக விற்பனை செய்யும் வணிகத்திலும் ஈடுபட்டு இருந்தனர். அவர்களது வணிக நிலையங்கள் பாண்டி நாட்டுத் தலைநகரான மதுரையிலும், இராமேசுவரத்திலும் முத்துச்சாவடி அல்லது "முத்துப்பேட்டை” என வழங்கப்பட்டன. இராமேசுவரத்தில் இருந்த முத்துச்சாவடியில் விற்பனை செய்யப்பட்ட அழகிய முத்துக்கள், கேரளக்கரையில் உள்ள கொல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கடல்வழி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக சீனப்பயணியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[22] கீழக்கரையில் இருந்த இத்தகைய முத்துப்பேட்டை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட முத்துக்களின் விற்பனையில் நூற்றுக்கு அரைப்பணம் மகமையாக அந்த ஊர் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு வழங்க அங்கு நாலுப்பட்டனத்து பதினென் விஷயத்தார்" (வணிகக்குழு) உடன்பாடு கண்டதாக அங்குள்ள கி பி. 1531ம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது.[23]

மற்றும் இசுலாமியப் பெண்டிர், முத்துக்களைக் கொண்ட பொன்னாலான வடங்கள், மாலைகள், தொங்கட்டான், நெற்றிச்சூடி, பாடகம், தோள்வளை, பீலி , மோதிரங்கள் ஆகிய அணிகளை அணிந்து வந்தனர். இசுலாமிய ஆடவர்களும் தங்களது இயற்பெயர்களுடன் “முத்தை"யும் இணைத்து வழங்கும் வழக்கமும் ஏற்பட்டது. முத்து இபுராகீம், முத்துமுகம்மது, முத்துநயினார், முத்து ஹூசேன், என்ற பெயர்கள் சில எடுத்துக்காட்டுகளாகும். இன்னும் நன்கு விளைந்த ஆனி முத்துக்களைப் போன்று, வயதிலும், வாழ்விலும் முதிர்ந்த பாட்டன்மார்களை" இசுலாமியர். "முத்து வாப்ப"' எனச் செல்லமாக அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. மேலும் தங்களது காணிகளுக்கு "முத்து வயல்" என்றும், குடியிருப்பு ஊர்களுக்கு முத்துப்பட்டனம் என்னும் இவ்வல்லங்களுக்கு "முத்துமகால்’’ என்றும் பெயர் சூட்டினர். இவைகளில் இருந்து தென்பாண்டிக்கடல் முத்துக்கள், தமிழக இசுலாமியரது வாழ்வில் பதினாறு, பதினேழு, பதினெட்டாவது நூற்றாண்டுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த வரலாற்றுச் செய்திகள் உதவுகின்றன. இதற்கிடையில் போர்ச்சுகல் நாட்டு கடல் கொள்ளைக்காரனாக தல்மேதா மாலத்திவில் தங்கரமிடடு நின்ற இசுலாமியரது வணிக கப்பல்களை கொள்ளையிட லூர்சி என்பவனை அனுப்பி வைத்தான் திரும்பும் வழியில் அவனது கப்பல் திசைமாறி இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலியையும் பின்னர் கொழும்புனையும் அடைந்தது.[24] இசுலாமியர். அங்கும் அரசியல் செல்வாக்குடன் வளமார்த்த நிலையில் இருந்ததை அவன் கண்டான் அப்பொழுது அங்கு நிலவிய அரசியல் குழப்பங்களில் தலையிட்டு, அவைகளை அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இசுலாமியரது வாணிபச் செல்வாக்கை வலுவிழக்குமாறு செய்தான். அவனைத் தொடர்ந்து பல போர்ச்சுகல் கப்பல்கள் போர் வீரர்களுடன் கொழும்பு வந்தன. இத்தகைய பின்னணியில், தளபதி ஜோ புரோலன் தலைமையில் (கி.பி.1523) கப்பல் அணி காயல் துறையை அடைந்தது. அவர்களது ஆதிக்கத்தை கிழக்கு கடற்கரையில் நிறுவ பரங்கிகள் மேற்கொண்ட திட்ட வட்டமான முயற்சியை இந்தக் கப்பல் அணி வருகை உணர்த்தியது. காலம் காலமாக இசுலாமியர்களது கட்டுப்பாட்டில் இருந்த பரவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் போர்ச்சுக்கல் பரங்கிகள் ஈடுபட்டனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இசுலாமியரது, எடுபிடியாக, அவர்களையே நம்பி வாழ்ந்தவர்களின் இதயங்களில் வெறுப்பைக் கொட்டிக்கிளறினர். அப்பொழுது அங்கு நடைபெற்ற முத்துச்சலாபத்தின் பொழுது ஒரு முஸ்லீமிற்கும் பரவ இனத்தொழிலாளிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு பெரிதுபடுத்தப்பட்டு பெரிய இனக்கலவரமாக உருவெடுக்க உதவினர். எவ்வித ஆயத்தமும் இல்லாத இசுலாமியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.பலர் கொலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சி தூத்துக்குடியில் கி.பி 1532ல் நடைபெற்றது. ஆத்திரமடைந்த இசுலாமியர், பரவர்களைப் பழி வாங்கினர். கடலிலும், நிலத்திலும் கொலைக்கு கொலை, கொள்ளை தொடர்ந்தது. அவர்களது குடிசைகள் கொடூரமான முறையில் திக்கிரையாயின. பரவர் படகுகளையும் உடமைகளையும் போட்டுவிட்டு உயிர்தப்பி ஓடினர்.[25]

மீண்டும் இசுலாமியர் அவர்களைத் தாக்கினால் .... ... ... இந்த பயத்திற்கு பரிகாரம் செய்வதாக போர்ச்சுக்கீசியர் அவர்களுக்கு சொல்லினர்: பாதுகாப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் ஒருநிபந்தனை, அவர்கள் அனைவரும் கிறித்துவமதத்தை தழுவுதல் வேண்டும். மருந்து கசப்பானதுதான். ஆனால் அப்பொழுது அவர்களுக்கு அந்த வைத்தியம் தேவைப்பட்டது. பகைமையும் பயமும் அலைக்கழித்தவர்களாக தலைகளை ஆட்டி ஒப்புதல் அளித்தனர். கொச்சியில் இருந்து போர்ச்சுக்கீசியரின் சிறிய படையணி ஒன்று அவர்களது கடற்கரை குடியிருப்பிற்கு காவலாக நின்றது. அந்த அணியின் செலவிற்காக ஆண்டுதோறும் 1500 குரஸோடா பணம் கொடுக்க பரவ ஜாதித்தலைவர் ஒப்புக் கொண்டார்.[26] அதன்பின்னர், நிபந்தனையின்படி பரவரது "பட்டங்கட்டிகள்" சிலர் கொச்சிக்கு சென்று போர்ச்சுகல் நாட்டு மத குருக்களை சந்தித்து ஆயுத உதவி பெற்றதுடன், ஒரே நாளில் 20,000 பரவர்கள் கத்தோலிக்க கிறித்துவ மதத்தை தழுவ ஏற்பாடு செய்தனர்.[27] சிறிய இடைவெளியில் மீண்டும் பரவர்கள் இசுலாமியரைத் தாக்கினர். பெரும் சேதத்தை விளைவித்தனர் சில நூறு முஸ்லீம் குடும்பங்கள் தூத்துக்குடி கடற்கரைப்பகுதியில் இருந்து இன்னும் வடக்கே, - இராமநாதபுரத்தில் - கிழக்கு கடற்கரையில் குடியேறினர். கீழக்கரையும், வேதாளையும் அவர்களது புதிய தாயகமாகின.

இந்த அவல நிகழ்ச்சிகளினால், பல நூற்றாண்டுகளாக தெற்கு கடற்கரையில் அமைதியுடனும், செல்வாக்குடனும் வாழ்ந்து வந்த இசுலாமியரது இயல்பான வாழ்க்கை, வாணிபம், சமுதாய சிறப்பு ஆகிய நிலைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இத்தகைய இழப்பை பிந்தைய ஆண்டுகளில் கூட ஈடு செய்ய இயலவில்லை என்பதை வரலாறு சுட்டுகிறது. இத்தகைய சமூக சீர்குலைவிற்கு அன்று தமிழக அரசு எனப் பெயரளவில் இருந்த வடுகரது ஆட்சிதான் காரணம் என்பதையும் வரலாறு துலக்குகிறது. பொய்மைப் பிரச்சாரத்தினால், தமிழக மக்களை ஏமாற்றி, மதுரை சுல்தான்களது ஆட்சியைக் கைப்பற்றிய வடுகர்கள், தமிழக மக்களை, குறிப்பாக கடற்கரையோர குடிகளை பரங்கிகளது குறுக்கீடுகளில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அரசின் இயலாத்தன்மை காரணமாக போர்ச்சுகல் நாட்டாரது நடமாட்டம் தெற்கு கடற்கரையில் அதிகமாகிறது. அவர்களது ஆயுதபலமும், கொடுரமான நடவடிக்கைகளும் மக்களுக்கு அச்சத்தை ஊட்டியது. ஆனால் கேரள கடற்கரை முஸ்லீம்கள், இந்த மனிதப் பிசாசுகளுக்கு பயப்படாமல், அவர்களுடன் பொருதி போராடி வந்தனர். அந்த மாவீரர்களது போராட்டக்களமாக கிழக்கு கடலின் மன்னார் வளைகுடாவும் விளங்கியது.

அப்பொழுது இலங்கையில் இருந்த மூன்று அரசுகளில் கோட்டை என வழங்கப்பட்டதும், கொழும்பை தலைநகராகக் கொண்டிருந்ததுமான அரசுக்கு இரண்டு சகோதரர்கள் போட்டியிட்டனர். அவர்களில் புவனேகபாகு என்ற மூத்தசகோதரருக்கு போர்ச்சுகீசியர் ஆதரவு கொடுத்து வந்தனர். இன்னொரு இளவரசரான மாயதுன்ன பண்டாராவிற்கு கோழிக்கோடு அரசர் ஸாமரின் ஆயுத உதவி வழங்கி வந்தார்.[28] கி.பி. 1534ல் இலங்கை சென்ற கப்பல் அணிக்கு தலைமை தாங்கிய ஸாமரின் மன்னரது தளபதி குஞ்சாலி மரக்காயர், பல இடங்களில் பரங்கிகளை எதிர்த்து அழித்தார். மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட பெரும் கப்பல் படையை குஞ்சாலி மரைக்காயர், அவரது தம்பி அலி இபுராகில் மரைக்காயர் அவரது மைத்துனர் அகமது மரைக்காயர் ஆகியவர்கள் நடத்திச் சென்றவர். அந்த அணி, ஐம்பத்து ஒரு கப்பல்களும் இரண்டாயிரம் வீரர்களும் ஐநூறு பீரங்கிகளும் அடங்கியதாக மதிப்பிடப்படுகிறது. கன்னியாகுமரிக்கருகில் பரங்கிகளை வெற்றி கொண்ட அவர்கள், கொழும்பிலிருந்து தகவலை எதிர்பார்த்து வேதாளைக்கருகில் காத்து இருந்தனர். இதனை அறிந்த மார்ட்டின் அல்போன்ஸா என்ற போர்ச்சுகல் தளபதி அறுநூறு கப்பல் படை வீரர்களுடன் விரைந்து சென்று அவர்களைத் தைரியமாகத் தாக்கினான். இராமேசுவரத்திற்கும் வேதாளைக்கும் இடையில் கடலில் 28-2-1538ல் நிகழ்ந்த இந்த உக்கிரமான போர் இந்திய கடற்போர் வரலாற்றில் ஒரு சிறந்த ஏடாக விளங்கியது.[29] கடற்போரில் வல்லவர்களான போர்ச்சுகன் பரங்கிகளிடம் கடல் வணிகரான இசுலாமியரது வீரம் எடுபடவில்லை.

பெரும்பாலான கப்பல்கள் போர்ச்சுகீசியரின் பிரங்கித் தாக்குதலினால் தீப்பற்றி அழிந்தன. உயிரிழப்பும் மிகுதியாக இருந்தது. வேதாளை கிராமத்து வடக்குப்பள்ளிவாசல் மைய வாடியில் உள்ள ஏராளமான மீஸான்கள், அந்தப் போரில் வீரமரணம் எய்திய இசுலாமியரது தியாகத்தை மட்டுமல்லாமல் தமிழக கடல் வாணிப வளத்தை நிரந்தரமாக இழந்துவிட்ட இசுலாமியரது சோக வரலாற்றையும் நினைவுபடுத்துவதாக உள்ளன. எட்டாம் நூற்றாண்டில் சீனக் கடலில் இருந்து செங்கடல் வரை பச்சைப் பிறைக் கொடிகளையும், பளபளக்கும் பதாகைகளையும் தாங்கி பவனி வந்த இசுலாமியரது வாணிபக் கப்பல்கள், வழிதவறிய ஒட்டகங்கள் போல, எங்கோ சென்று மறைந்தன. உலக நியதிக்கு ஒப்ப, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பரவும் கதிரவனது ஒளிக்கதிருக்கு மாறாக, மேற்கே இருந்து கிழக்கே பாய்ந்து பரவியதினால் இசுலாம் என்ற ஒளி வெள்ளத்தை தங்களது இதயங்களில் தேக்கியவாறு அந்தக்கப்பல்களில் சென்று, கீழை நாடுகளில் எங்கும் சமயப்பிரச்சாரம் செய்த வலிமார்கள், பக்கீர்கள், முஹாஜிரீன்கள்-ஆகிய தொண்டர் திருக்கூட்டத்தின் நடமாட்டமும் முடமாக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர், ஒரு நூற்றாண்டு வரை போர்ச்சுகல் பரங்கிகள் இலங்கை அரசியல் ஆதிக்கத்திற்கு போராடியதால் தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அத்துமீறல்களில் அவர்கள் ஈடுபடவில்லை. மாறாக, மலேஷியாவிலும் இலங்கையிலும் கிடைக்கும் இலவங்கப்பட்டை, மிளகு, ஏலக்காய் ஆகிய வாசனைப் பொருட்களை மிகுதியாகவும் விரைவாகவும் ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த அக்கரை காட்டினர். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் மன்னார் முத்துக்களைவிட, அந்த வியாபாரம் அவர்களுக்குப் பெருத்த ஆதாயம் அளிப்பதாக இருந்தது. என்றாலும், அவர்கள், தமிழக கடற்கரையில் சமயத்தைப் பரப்புவதிலும் "அஞ்ஞானிகளை" மதம் மாற்றுவதிலும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். லேவியர், ஹென்றிகஸ் ஆகிய கத்தோலிக்க கிறித்தவ பாதிரியார்களது வாழ்க்கை குறிப்புகள் இதனை விவரிக்கின்றன.[30] நாளடைவில் கிழக்காசிய வாணிபத்தில் டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியருக்கு போட்டியாக வந்ததுடன் இலங்கையில், அவர்களது அரசியல் ஆதிக்கம், ஏகபோக வாணிபம்-ஆகிய நிலைகளை அழித்தனர்.

டச்சுக்காரர்கள் மதுரை நாயக்க மன்னர்களுடனும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுடனும் நட்பு நிலையில் மன்னார்வளைகுடா முத்துக்குளித்தளிலும் உள்நாட்டில் தானிய வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தனர். தூத்துக்குடி துறைமுகம் அவர்களது பிடியில் இருந்தாலும் போர்ட்டோ நோவா என்ற இடத்தில் தஞ்சாவூர் நாயக்க மன்னரிடம் கிரையத்திற்கு வாங்கிய இடத்தில் கோட்டையும் பண்டகசாலையும் அமைத்து, இலங்கை, சுமத்திரா (தற்பொழுதைய இந்தோனிஷியா) ஆகிய நாடுகளுடன் வியாபாரத் தொடர்புகள் வைத்து இருந்தனர். இவர்கள் உலாந்தாக்காரர் என அழைக்கப்பட்டனர். சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் கைத்தறித் துணிகளை வாங்கி மேனாட்டிற்கு ஏற்றி அனுப்பும் பணியில், ஆங்காங்கு இருந்த மரக்காயர்கள் அவர்களுக்கு உதவி வந்தனர் என்பது மட்டும் தெரிய வருகிறது. ஆனால் இந்த கால கட்டத்தில் தமிழக இசுலாமியரைப் பற்றி குறிப்பிடத்தக்க செய்திகள் வரலாற்றில் காணப்படவில்லை.

இந்த நிகழ்ச்சிக்கு பதினைத்து ஆண்டுகள் கழித்து போர்ச்சுகீஸீய கடல் நாய்களை அழிப்பதற்கு இன்னொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை கோழிக்கோட்டு ஸாமரின் மன்னருடன் விஜயநகரப் பேரரசரது உறவினரும் ஆளுநருமான வித்தலாவும் அந்த முயற்சியில் இணைந்து கொண்டார். முத்துக்குளித்தலில் போர்ச்சுகீஸியர் விஜயநகர பேரரசரது பங்கினை அளிக்கத் தவறியது. தெற்கு கடற்கரையில் உள்ள மணப்பாடு, புன்னைக்காயல், தூத்துக்குடி,வேம்பாறு ஆகிய ஊர்களில் அவர்களது நிலையினை பலப்படுத்திக்கொண்டது. கன்னியாகுமரியில் இருந்து இராமேசுவரம் வரையிலான கடற்பகுதியில் வாழும் பரவர்களும் அவர்களது நாட்டு அரசியல் சட்டதிட்டங்களை அமுல் நடத்தி வந்தது.[31] இராமேசுவரம் செல்லும் பயணிகளிடம் வேதாளையில் கட்டாயமாகத் தலைவரி வசூலித்தது ஆகிய அக்கிரமச் செயல்களுக்காக அவர்களை அழித்து ஒழிப்பது என்பது வித்தலராயரின் முடிவு. ஆதலால் ஸாமரின் மன்னரது கடல்படை, மன்னார் வளைகுடாவில் கடலில் மோதும்பொழுதும் வித்திலராயரது வடுகர்படை கடற்கரைப்பகுதிகளில் உள்ள போர்ச்சுகீஸியரையும் அவர்களது கோட்டையான காவலைத்தாக்கி அழிப்பது என்பது திட்டம்.

மே 1553ல் கோழிக்கோடில் இருந்து இராப் அலி தலைமையில் வந்த நாற்பது கப்பல்கள் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள முசல்தீவைத்தாக்கி அங்கிருந்த ஏராளமான பரவர்களையும் இருபது மீன்பிடி வள்ளங்களையும் கைப்பற்றினர். பின்னர், இராப் அலி அணியில் உள்ள ஐநூறு இசுலாமிய வீரர்கள் புன்னைக்காயல் கோட்டையை தாக்கிப்பிடித்தனர். தப்பி ஓடிய போர்ச்சுக்கீசிய தளபதியையும் வீரர்களையும் எதிர்ப்புறத்தில் தாக்கிய வடுகர் படை கைப்பற்றியது. இந்த சோகச் செய்தியை கேள்வியுற்ற போர்ச்சுகீசியத் தலைமை கொச்சியில் இருந்த கப்பல்படை ஒன்றை அனுப்பி வைத்தது. புன்னைக்காயலுக்கு வந்து சேர்ந்த அந்த அணி அப்பொழுது வடக்கே, கீழக்கரை அருகில் நிலை கொண்டு இருந்த இராப் அலி அணியுடன் கடுமையான கடல்போரில் மோதியது. போர்சசுக்கீசியர், இராப் அலியின் உக்கிரமான தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் சற்று தொலைவில் உள்ள தீவுகளுக்குள ஒடி ஒழிந்தனர். அந்நிய ஆக்கிரமிப்பாளருக்கு தோல்வி. ஆனால் வெற்றியைக் கண்ட மாவீரன் இராப் அலி, போரில் தழுவிய பயங்கர காயங்களினால் உயிர் துறந்தார்.[32] தியாகி குஞ்சாலி மரக்காயரது நீண்டகால ஆசையை நிறைவேற்றிய மன நிறைவுடன் போர்ச்சுக்கீசிய பரங்கிகளது அக்கிரம ஆதிக்கம் அழியத்துவங்கியதின் அறிகுறிதான் அந்தப்போர். ஒரு நூற்றாண்டுகாலம், மன்னார் வளைகுடா பகுதியைத் தங்களது சொந்த சொத்தாக பாவித்து வந்த போர்த்து கேஸியர் கி.பி. 1658ல் புயல் காற்றில் எழுந்த புழுதியைப் போல அந்தப் பகுதியில் இருந்து மறைந்தனர்.

16

மீண்டும் வாணிபத்தில்

 

போர்ச்சுக்கீஸிய பரங்கிகளது மிருகத்தனமான நடவடிக்கைகளாக பாதிக்கப்பட்டிருந்த மலாக்கா முதல் ஏடன் வரையிலான நீண்ட வாணிப வழியில் இசுலாமியரது மரக்கலங்கள் மீண்டும் மெதுவாக செல்லத் தொடங்கின. அவை அனைத்தும் கீழக்கரை வள்ளல் சீதக்காதி என்ற ஷெய்கு அப்துல் காதிறு மரைக்காயருடையவை, "தரணி புகழ் பெரிய தம்பி வரத்தால் உதித்த” இந்த வணிகப் பெருமகனுக்கு பதினேழாவது நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தில் எவருக்கும் வாய்த்து இராத செல்வவளம் இருந்தது. அதற்கு மேலாக, மக்கட்கு அள்ளி அள்ளி வழங்கும் அன்பு உள்ளமும் அமைந்து இருந்தது. "திரைகண்டு எழுங்கடல் மீதே தன் வங்கத்தை செல்லவிட்டு கரைகண்டவர்” என வள்ளலது கடல் வாணிபத்துக்கு புலவர் ஒருவர் கரை கண்டுள்ளார்.[33] அவரது கப்பல்கள் சீனத்து நவமணிகளையும, அச்சைனில்(கம்போடிய) இருந்து அழகிய குதிரைகளையும், மலாக்காவில் இருந்து கஸ்தூரி, அம்பர், முதலிய வாசனைப் பொருட்களையும், ஈழத்தில் இருந்து வேழங்களையும் இன்னும் பல தேசத்து பொன்னையும், மலைகள் போல கொண்டு வந்து குவித்தாக அவரது வாணிப வன்மையை இன்னொரு பாடல் அளவிடுகிறது.[34]

"செய்யி தப்துல்காதிறு மரைக்காயர் திருமணவாழ்த்து. "சீதக்காதி நொண்டிநாடகம்" என்ற இருசிற்றிலக்கியங்களுக்கும் இன்னும், படிக்காசுப்புலவர் நமச்சிவாயப்புலவர் ஆகிய புலவர் பெருமக்களது தனிப்பாடல்களுக்கும், பாட்டுடைத் தலைவராக விளங்கும் இந்த வள்ளலைப் பற்றிய போதியவரலாற்று ஆவணங்கள் கிடைக்காதது தமிழக முஸ்லீம்களது துரதிர்ஷ்டம் என்றே குறிக்க வேண்டியுள்ளது. ஈதலறத்திற்கு இலக்கணமாக, இஸ்லாமிய நெறிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்த இசுலாமிய தமிழ்த்தலைவனை முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்டோம். ஆனால் கி.பி. 1682க்கும் கி.பி. 1698 க்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான மிளகு, கைத்தறித்துணிகள் முத்து, சங்கு, ஆகிய வணிகத்தில் நேரடியாக போட்டியிட்ட டச்சுக்கிழக்கு இந்தியக் கும்பெனியாரது ஆவணங்களில் இருந்து அவரது வாணிப வளத்தை ஓரளவு தெரிந்து கொள்ளத்தக்கதாக இருக்கிறது. அவரது வாணிபக் கலங்கள் நமது நாட்டுக் கடலோர வணிகத்தில் ஈடுபட்டதுமல்லாமல்-வங்காளம்-மலாக்கா, அச்சைன் ஆகிய தூர கிழக்கு நாடுகளுக்கு சென்று வந்த விவரமும் தெரிகிறது. மற்றும், சென்னை கோட்டைகுறிப்புகளில் இருந்து வள்ளல் அவர்கள் ஆங்கில கிழக்கிந்திய கும்பெனியாரு டன் கி.பி. 1685-87ல் மிளகு, அரிசி, வாணிபம் சம்பந்தமாக கொண்டிருந்ததொடர்புகள் தெரியவருகின்றன.[35] மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்த டச்சு தளபதி படேனியாவில் உள்ள டச்சுக்கவர்னருக்கு அனுப்பிய குறிப்புகளில் இருந்து கி.பி. 1695ல் வள்ளல் சீதக்காதி டச்சுக்காரர்களுடன் வாணிபத் தொடர்புகள் கொண்டு இருந்ததையும்: மன்னருக்கும் கல்பிட்டியாவிற்கு இடைப்பட்ட கடல் பகுதியில் சங்கு குளிப்பதற்கான அனுமதி கோரிய விவரமும் தெரியவருகிறது.[36] அன்றைய காலகட்டத்தில் மன்னார் வளைகுடாவிலும், சோழமண்டலக்கரையிலும் எடுக்கப்பட்ட சங்குகள் பெரும்பாலும் வங்காளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. நமது நாட்டில் ஏனைய பகுதிகளைவிட வங்காளத்து இந்துக்கள் சங்கை சிறந்த மங்கலப் பொருளாக புனிதமுடன் போற்றி வந்தனர். வங்க நாட்டுப் பெண்கள் சங்கினால் செய்யப்பட்ட வளையல்களை சங்க காலத்து தமிழ் மகளிரைப் போல் அணிந்து வந்தனர்.

தமிழகத்துச் சங்குகள் வங்காளம் சென்ற விவரங்களை அரபி பயணி அபூசெய்து (கி.பி.851) இத்தாலிய பயணி பார் போஸா (கி.பி.1565) பொக்காரோ (கி.பி.1644) கத்தோலிக்க பாதிரியார் மார்ட்டின் (கி.பி.1700) ஆகியோரது பயணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[37] பிரஞ்சு வணிகர் தாவர்ணியரது (கி பி. (1644/89) குறிப்புகள் அந்தச் சங்குகள் வங்காளத்தில் இருந்து இன்னும் வடக்கே பூட்டானுக்கும் திபெத்திற்கும் அனுப்பப்பட்டதை தெரிவிக்கின்றன[38].

மன்னர் வளைகுடாவில் கிடைக்கும் சங்குகளில், இலங்கை கடல்பகுதி சங்குகளைவிட தமிழக கடல் பகுதி சங்குகள் அளவிலும் பருமனிலும் பெரியதாக இருந்ததால், அவைகளுக்கு நல்ல சந்தை மதிப்பு இருந்தது. இந்தச் சங்குகள், தூத்துக்குடிக்கும் தொண்டிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியிலும் கடலூருக்கு அருகிலும் மிகுதியாகக் கிடைத்தன. இந்தச் சங்குகளை கடலில் குளித்து எடுக்கும் தொழிலில் அப்பொழுது இசுலாமியர்கள் ஈடுபட்டு இருந்தனர். ஏற்கெனவே முத்துக்குளித்தலில் தேர்ந்த அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டது பொருத்தமானதொன்று இவர்களில் பெரும்பாலானவர்கள் பெரியபட்டினம் கீழக்கரை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள்[39]. இலங்கையும் ஆங்கிலேயர் ஆட்சியில் அமைந்து இருந்த சென்ற நூற்றாண்டில் கூட, இலங்கைக்கடலில் சங்கு குளிப்பதற்கு பெரிய பட்டினத்து சங்குகுளித் தொழிலாளர்கள் அனுப்பப்பட்ட விவரம்தெரிய வருகிறது[40]. இன்னும் பெரியபட்டினத்தில் சங்குகுளிகாரத்தெரு என்ற வீதியும் சங்குகுளிக்கும் தொழிலில் அனுபவமும் உள்ள ஏராளமான இசுலாமியரும் உள்ளனர்.

மேலும் தமிழக இசுலாமியரது மரக்கலங்களில் இந்தச் சங்குகள் ஏற்றப்பட்டு வங்காளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மரக்கலங்களை இயக்கிய தண்டல்களும் இசுலாமியரே. கி. பி. 1794ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான 11,20,000 சங்குகள் தேவிபட்டினம் துறையில் இருந்து கிழக்கரை எல்லே தண்டல் என்பவரது "களிமண்பார"' என்ற சரக்கு கப்பலில் ஏற்றப்பட்டு வங்காளத்திற்கு அனுப்பப்பட்டது. மீரா நயினா என்ற பிரமுகர், மன்னரது வியாபாரப் பிரதிநிதியாக கல்கத்தாவில் பணிபுரிந்தார். இந்தக்கப்பல் தேவி பட்டினம் துறைமுகத்திலிருந்து நாகூர், கட்டிக்கூர், பிம்லிபட்டினம், பச்சைமரி, ஹூக்லி துறைமுகங்களைத் தொட்டு கல்கத்தா சென்று அடைந்ததாக அரசு ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[41] வங்காளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான கடல் பயணம் நீண்ட நெடுங்காலமாக இந்த ஊர்களின் வழிதான் சென்றது என்பதை இளையான்குடி மதாறுப்புலவர் பாடிய சேதுபதி ஏலப்பாட்டு என்ற சிற்றிலக்கியமும் உறுதி செய்கிறது.[42] வங்காளத்தில் இருந்து திரும்பும் தோணிகளில் அந்த நாட்டு, அரிசி, சீனப்பட்டு, கண்ணாடிச்சாமான், லஸ்தர் விளக்குகள் போன்ற புதுமைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்றி வரப்பட்டன. வாணிபம் மீண்டும் உச்சநிலையையடைந்தாலும் தொடர்ந்து அந்த நிலைமை உறுதிபடுத்தக்கூடிய வரலாற்று, இலக்கியச்சான்றுகள் இல்லை. அப்பொழுது தமிழக வாணிபத்தில் ஈடுபட்ட டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர் பங்கும், போட்டியும் மிகுந்து இருந்தன. என்றாலும், கரையோர வாணிபத்தில் ஆங்காங்குள்ள மரக்காயர்கள் ஈடுபட்டு இருந்ததாக டச்சு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்நாட்டிற்கும் வங்கத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும், இசுலாமியரது மரக்கலங்கள், கைத்தறித்துணிகள், சங்கு, உப்பு, நெல், கரு வாட்டு சிப்பங்கள் தென்னங்கீற்றுகள், ஆகிய பொருட்களை எடுத்துச் சென்றன. தூத்துக்குடி கீழக்கரை, வேதாளைபாம்பன், தேவிபட்டினம், தொண்டி, பாசிப்பட்டினம் அதிவீரராமபட்டினம், கடலூர், நாகப்பட்டினம், போர்டோ நோவோ, பாண்டிச்சேரி ஆகிய துறைகள் இத்தகைய சரக்குகளைக் கொண்ட தோனிகள், தண்டல்களுடன் காட்சியளித்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், உள்நாட்டு வாணிபத்தில் கீழக்கரை சைய்யிது அப்துல் காதிர் மரைக்காயர் என்பவர் சிறப்புடன் இருந்ததை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வணிகப் பெருமகனைப் பற்றிய செய்திகள் கி பி.1789 முதல் கிடைக்கின்றன. இராமநாதபுரத்திலும், கீழக்கரையிலும் இவருக்கு பண்டக சாலைகள் இருந்தன. இரும்பு, ஒடு, மரம், தானியங்கள், தலைப்பாகைத்துணி, துப்பட்டா. கம்பளங்கள் ஆகிய வியாபாரங்களில் ஈடுபட்டு இருந்தார்.[43] அப்பொழுது இராம நாதபுரம் மன்னராக இருந்த விஜயரகுநாத முத்துராமலிங்க சேதுபதி (கி பி.1762-1795)யின் உற்ற நண்பனாகவும் இருந்தார் எனத் தெரிகிறது.[44]

வள்ளல் சீதக்காதி காலந்தொட்டு, கீழக்கரை இசுலாமிய தன வணிகர்களுக்கும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு மிடையே நிலவிய நேச மனப்பான்மை காரணமாகவும், இராமநாதபுரம் சீமையெங்கும் வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அப்துல் காதிர் மரைக்காயரது பொருட்களுக்கு மாமூலான சுங்கவரி விதிப்பில், இருபத்து ஐந்து விழுக்காடு சலுகை அளிக்கப்பட்டு வந்தது.[45]சேதுபதி மன்னரைச் சிறையில் அடைத்து, ஆற்காட்டு நவாப்பின் பிரதிநிதிகளாக, அந்த நாட்டை ஆண்ட ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் காலத்திலும் இந்தச் சலுகை தொடர்ந்தது. அத்துடன் கடல் துறைகளிலும் கடற்கரைப்பட்டினங்களிலும் புதிதாக வணிக நிறுவனங்களை துவக்கி வணிகத்தை வளர்ப்பதற்கும் ஆற்காட்டு நவாப் முகம்மது அலி வாலாஜா" மரைக்காயருக்கு "பர்வானா" (அனுமதி உத்தரவு) வழங்கி இருந்தார்.[46] அதன் காரணமாக அப்துல் காதிர் மரைக்காயர் திருநெல்வேலிச் சீமையிலும் அவரது வாணிபத்தை விரிவுபடுத்தினார். காயல்பட்டினம், குல சேகரப்பட்டினம், வேம்பாறு ஆகிய ஊர்களிலும், வேறு பல இடங்களிலும் பண்டகசாலைகளைத் நிறுவி இருந்தார்.[47] அத்துடன், இராமநாதபுரம் சீமையில் கும்பெனியார், குடிமக்களிடமிருந்து கிஸ்தி (தீர்வை)யாகப் பெற்ற ஏராளமான நெல்லை, அப்துல் காதிறு மரைக்காயரிடம் விற்று வந்தனர். இந்த நெல் விற்பனையில்" "ஏகபோக உரிமை"யால் பாதிக்கப்பட்ட மெய் ஜியர் என்ற டச்சு நாட்டு தானிய வியாபாரி, கும்பெனி தலைமைக்கு வரைந்துள்ள புகாரிலிருந்தும் [48] இன்னும் இராமநாதபுரம் கலைக்டராக இருந்த காலின்ஸ் ஜாக்ஸனது துபாஷான ரங்கபிள்ளை மீது எழுப்பப்ட்ட ஊழல் புகார் பற்றிய ஆவணங்களில் இருந்தும், இந்த விவரங்கள் தெரியவருகின்றன.[49]

இந்தக்கால கட்டத்தில், கீழக்கரை மாமுனா லெப்பையும், காயல்பட்டினம் சேகனா லெப்பை என்பவரும் நவமணி வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்த செய்திகளும் உள்ளன. இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இந்த தனவணிகர்களிடமிருந்து நவரத்தினங்கள் வாங்கிய விவரத்தை கும்பெனியாரது ஆவணமொன்று குறிப்பிடுகின்றது.[50] சேகனா லெப்பை என்பவர் அறிஞர் பெருமக்களால் "புலவர் நாயகம்" என போற்றப்பட்ட ஷெய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை (சேகனாப்புலவர்) ஆலிமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில் அவர், இசுலாமிய காப்பியங்களின் படைப்பாளியாக மாறுவதற்கு முன்னர்,அவரது தந்தை ஹபீபு முகம்மது லெப்பை மரைக்காயரைப் போல, முதலில் நவரத்தின வணிகராகவே வாழ்வைத் தொடங்கினார். இவர்களைத் தொடர்ந்து கீழக்கரையில் சேகு ஸதக்கத்துல்லா, முகம்மது காசீம் மரைக்காயர், ஹபீபு மரைக்காயர் போன்ற சில வணிகர்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டின் துவக்கத்தில் வாணிபத்தில் சிறந்து விளங்கினர் எனத் தெரிகிறது. அவர்களது பெரிய பண்டகசாலை கீழக்கரையில், கீழப்பண்டகசாலை என்ற பெயருடன் வழங்கப்பட்டது. அந்தப்பகுதி இன்றும் பண்டகசாலைத்தெரு என குறிப்பிடப்படுகிறது. அப்பொழுது, இராமநாதபுரம் சீமையில் வடக்கே கலிய நகரியில் இருந்து தெற்கே வேம்பாறு வரை பல உப்பளங்கள் இருந்த பொழுதும், கீழக்கரைக்கு அருகே உள்ள வாளைத் தீவு, ஆனைப் பார் தீவுகளில் இயற்கையாக விளைந்த உப்பினை அவர்கள் எடுத்து வந்து விற்ற செய்தியை கும்பெனியாரது ஆவணமொன்று தெரிவிக்கிறது.[51] இவர்கள் பலமுறை "பாக் நீர் வழியில்" முத்துக்குளித்தல் மேற்கொண்டதை இன்னொரு ஆவணம் தெரிவிக்கிறது.[52]இன்னும் இந்த நூற்றாண்டில், கடலூர், சிதம்பரம், பகுதியில் செல்வாக்குடன் இருந்த மக்தும் நெயினா, அப்துல் லெப்பை, அலி என்ற இஸ்லாமியப் பெரு மக்கள் ஆங்கில கிழக்கிந்தியா கும்பெனியாரது வணிகத்தில் அவர்களுக்கு உதவிகரமாக இருந்தனர் எனத் தெரிகிறது. அப்பொழுது ஆற்காட்டு நவாப் தாவுதுகானிடம், மக்தும் நெய்னா பலமுறை பேட்டி கண்டு, ஆங்கிலேயருக்கு பல சலுகைகளைப் பெற்றுத்தந்தாராம். பொதுவாக இந்தக் காலக்கட்டத்தில் தமிழக இசுலாமியர் வாணிப உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய வரலாற்றுச் சான்றுகள் இல்லை.

17

விந்தை மனிதர்


தமிழ்ச் சமுதாயத்தில் தாழ்வு இல்லாத குடிமக்களாக தமிழக இசுலாமியர் வணிகத்தை வளர்த்தனர். அந்த வளர்ச்சியில் விளைந்த வாழ்வின் சிறந்த பண்புகளைப் பற்றி ஒழுகிய இசுலாமிய சமய நெறிச் சான்றோர்கள் உயர்ந்து வாழ்ந்தனர். அதன் காரணமாக அரசியல் முதன்மையும் பெற்றனர். பாண்டிய நாட்டின் அமைச்சராகவும் அரசியல் தூதுவர்களாகவும் பணியாற்றி தமிழகத்திற்கு பேரும் புகழும் குவித்தனர். ஆனால் குடி தழிஇஉ கோல் ஒச்சும் கொற்றவர்களாகும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படவில்லை. ஆனால் தமிழக இசுலாமியரது நீண்ட வரலாற்றில் ஒரே ஒருவருக்கு மட்டும், மிகச் சொற்ப இடைவெளியில், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த பேறு கிடைத்தது.

மதுரை நாயக்கப் பேரரசின் இரு நூற்றுப்பத்து ஆண்டு வரலாறு ராணி மீனாட்சியின் இறப்புடன் கி. பி. 1736ல் முடிவுற்றது.[53] அதுவரை தொடர்ந்து வந்த பாரம்பரிய ஆட்சிமுறை முற்றுப்புள்ளி பெற்றது. நாயக்க மன்னர்களுக்கும் குடி மக்களுக்கும் இடையில் தரகராக இருந்து வந்த எழுபத்து இரண்டு பாளையக்காரர்கள், தடியெடுத்த தண்டல்காரர்களாகினர். இந்த நிலையில், ஆற்காட்டு நவாப் பதவிக்கு போட்டியிட்ட வாலாஜா முகம்மது அலி, சந்தா சாகிபுவை, கும்பெனியாரது ஆயுதப்படை உதவியுடன் போரிட்டு ஒழித்து, திருவாங்கூர் உள்ளிட்ட தென்னகத்தில் அரசுரிமையை நிலைநாட்டினார். ஆனால் தெற்குச் சீமை பாளையக்காரர்களில் பெரும்பான்மையோர் ஆற்காட்டு நவாப்பின் அரசியல் ஆதிக்கத்தை ஏற்று அவருக்கு ஆண்டு தோறும் அளிக்க வேண்டிய பேஷ்குஷ் (தோப்பா) பணத்தைச் செலுத்த மறுத்தனர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக யாருக்கும் கப்பத்தை செலுத்தாது தன்னாட்சி மன்னர்களைப் போல இருந்து வந்தவர்கள் ஆயிற்றே. தெல்லைச்சிமையில் நெற்கட்டுஞ்செவ்வல் பாளையக்காரர் பூலித்தேவர் தலைமையில் சில பாளையக்காரர்கள் நவாப்பின் படைகளோடு மோதுவதற்கும் ஆயத்தமாகினர். நவாப்பின், சகோதரர் மாபூஸ்கான் தலைமையிலும் கும்பெனித் தளபதி ஹெரான் தலைமையிலும் திருநெல்வேலி சென்ற நவாப். கும்பெனி படைகள் பாளையக்காரர்களை எளிதாக வழிக்கு கொண்டு வர இயலவில்லை[54]

இந்நிலையில் நவாப்பின் படைகளுக்கு உதவியாககும் கும்பெனியாரது சுதேசி சிப்பாய்கள் அணி சென்னையில் இருந்து சென்றது. அதனை தலைமை தாங்கி நடத்தியவர் மாவீரன் முகம்மது யூசுப் கான் என்பவர். அவரை கம்மந்தான் கான் சாயபு என மக்கள் பிற்காலத்தில் மரியாதையுடன் அழைத்தனர். கமான்டன்ட் என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபுதான் கம்மந்தான் என்பது. அத்துடன் சாமந்தர் என்ற தமிழ்ச் சொல்லுக்கு நேரடியான பொருள் தரக்கூடியதாகும். அவர் இராமநாதபுரம் சீமையில் உள்ள பனையூரில் பிறந்தார். இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி தஞ்சாவூர், பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் இருந்த பரங்கியரது பராமரிப்பிலும் வளர்ந்து பயிற்சிபெற்று சிறந்த போர் வீரரானார். உடல் வலிவும் உள்ள உரமும் கொண்ட அவர் வெகு விரைவில் பரங்கிகள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தளபதியாக விளங்கினார். நமது போர் முறைகளுடன் துப்பாக்கி சுடுதல், பீரங்கி வெடித்தல் ஆகிய மேனாட்டு போரில் ஒப்பாரும் மிக்காருமின்றி திகழ்ந்தார். தன்னை வளர்த்து ஆளாக்கிய பரங்கிகளுக்கு செஞ்சோற்றுக் கடனாக பல போர்களில் வெற்றியை ஈட்டித் தந்தார். கி.பி. 1752ல் திருச்சி முற்றுகைப் போரில் வாலாஜா நவாப் முகம்மதலிக்காகப் போராடிய ராபர்ட் கிளைவின் வலது கரமாக விளங்கி சந்தாசாவியும் பிரஞ்சுப்படைகளையும் படுதோல்விக்கு ஆளாக்கினார். அதே போன்று பிரஞ்சுக்காரர்கள் கி பி. 1758ல் சென்னைக் கோட்டையைத் தாக்கிய பொழுதும் கம்மந்தான் கான்சாயபு காட்டிய வீர சாகசங்களினால் வெள்ளையர் தப்பிபிழைத்தார்கள். ஆதலால் இத்தகைய, சிறந்த தளபதியிடம் நெல்லைப் பாளையக்காரர்களை அடங்கியொடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.

நவாப்பிற்கு எதிரான நெல்லைச் சீமை பாளையக்காரர்கள் அணியைப்பிளந்து தூள்தூளாக்கினர். அந்த அணிக்கு தலைமை தாங்கிய பூலித்தேவர் வாசுதேவர் நல்லூர் கோட்டைப் போரில் நடுநடுங்கும்படியாக அவரது பீரங்கிகள் முழங்கின. சரமாரியாக பாய்ந்து வந்து சர்வநாசம் செய்த பீரங்கிகள் குண்டுகளிளுள் பூலித் தேவரது மறப்படை புறமுதுவிட்டு ஓடியது. அன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் மிகச்சிறந்த வீரராக மதிக்கப்பட்ட பூலித்தேவர் கம்மந்தான் கான்சாயபுவிடம் 16. 5. 1861ம் ஆண்டு, தோல்வியுற்று இராமநாதபுரம் சீமையில் உள்ள கடலாடிக்கு தப்பி ஓடினார்.[55] பூலித்தேவருக்கு ஆயுதமும் ஆதரவும் அளித்து வந்த மைசூர் மன்னர் ஹைதர்அலியை திண்டுக்கல் போரிலும்,[56] டச்சுக்காரர்களை ஆழ்வார் திருநகரி, மனப்பாடிலும் தோற்கடித்தார்.[57] எஞ்சிய கிளர்ச்சிக்கார பாளையக்காரர்களை ஒட்டப்பிடார போரில் அழித்து ஒழித்தார்.[58] ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளாக இடைவிடாத முயற்சியுடன், மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் நவாப்பிற்காக கிளர்ச்சியிலும் போராட்டத்திலும் ஈடுபட்டு தமிழகத்தில் அரசியல் உறுதி தன்மைக்கும் அமைதி வாழ்விற்கும் ஊறு செய்து வந்த எதிர்ப்பு சக்திகள் அனைத்துடனும் பேராடி வெற்றி பெற்றார். ஐந்து ஆண்டுகள் மதுரையில் ஆளுனராக இருந்த தமது சகோதரர் மாபூஸ்கானால் கூட அடக்க முடியாத பாளையக்காரர்களைப் பல போர் முனைகளில் வென்று நாட்டில் நிரந்தரமான அமைதியை நாட்டியதற்காக நவாப் வாலாஜா முமம்மது அலி, கம்மந்தான் கான்சாகிபிற்கு பொன்னால் ஆன தட்டு ஒன்றையும் அற்புதமாக வடிவு அமைக்கப்பட்ட வாள் ஒன்றையும் பரிசாக அளித்து அவரது சேவையைப் பாராட்டினார்.

மதுரையின் ஆளுநர் என்ற முறையில் மிகக்குறுகிய காலத்தில் அரிய பல சாதனைகளைச் செய்தார். குறிப்பாக, மதுரைகரையும் அதனையடுத்த வடக்கு, வடக்கு கிழக்குப் பகுதியிலும் தங்களது பாரம்பரிய தொழிலான, திருடு, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களினால் மக்கள் சமுதாயத்தை அலைக்கழித்து அவலத்துக்குள்ளாக்கி வந்த கள்ளர்களை ஈவு இரக்கமில்லாமல் அழித்தார். மேலூர், வெள்ளாளப்பட்டி ஆகிய ஊர்களில் கோட்டைகளை அமைத்து மக்களை கள்ளர் பயத்தினின்றும் காத்தார். மேலும், கள்ளர்கள் இயல்பான வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் வகையில், பல உதவிகளை அவர்களுக்கு செய்தார். அவர்களது கொடுஞ்செயல்களுக்கு படுகளமாக விளங்கிய காடுகளை அழித்து கழனிகளை அமைத்து விவசாயத்தைப் பெருக்கினார். அதற்கான கண்மாய்களையும் கால்களையும் செம்மைப்படுத்தினார். உள்நாட்டு வணிகம், சிறப்பாக நடைபெறுவதற்கு வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதுடன் ஆங்காங்கு வணிகர்கள் தங்குவதற்கு விடுதிகள் அமைத்துக் கொடுத்தார். நெசவாளர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்களது தொழிலை விரிவுபடுத்த ஊக்குவித்தார். சாதாரண குடிமகனும் மேநாட்டு ஆயுதங்களான துப்பாக்கி, பீரங்கிகளை வடிக்கும் முறைகளையும் அவைகளுக்கான வெடிமருந்து பாரிப்புகளையும் தெரிந்து கொள்ளுமாறு செய்தார். மாதம் தவறாது திருவிழாக்கள் நடந்த மதுரை மாநகர் கோயில்களுக்கு வழங்கப்பட்ட "மான்யங்களை" கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் சொந்தத்திற்கு பயன்படுத்திக்கொண்டதால் புறக்கணிக்கப்பட்ட கோயில் நடைமுறைகளை, திருவிழாக்களை,மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக மதுரை மீனாட்சி ஆலயம் போன்ற திருக்கோயில்களுக்கு அரசு மான்யம் வழங்கி, அவை பொலிவும் அழகும் பெறுமாறு செய்தார்.[59] சுருங்கச்சொன்னால் கம்மந்தான் ஆட்சியில் நீதியும் நியாயமும் நிலைத்து தழைத்தது. கொடுமைகள் குற்றங்களும் மறைந்து அமைதி நிலவியது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அரசுக்கு சேரவேண்டிய நிலத்தீர்வையினால் அரசுக் கருவூலங்கள் நிறைந்தன. ஆற்காட்டு நவாப்பிற்கு, மதுரை திருநெல்வேலி சீமையில் இருந்து சேரவேண்டிய ஆண்டுக் குத்தகைப் பணம் ஐந்து லட்சமும் தவறாது போய்ச் சேர்ந்து கொண்டு இருந்தது. நவாப்பிற்கு ஒரே மகிழ்ச்சி. ஆனால் ... . ஆனால் ஒரு சந்தேகம்கூட. குடிமக்களது ஒத்துழைப்புடன் மிகவும் செல்வாக்காக விளங்கும் கான்சாயபு, தன்னாட்சி மன்னனாக மாறிவிட்டால்? கும்பெனியாரும் கான்சாகிபை சந்தேகக் கண்களுடன் கவனித்து வந்தனர். அதை உறுதிப்படுத்தும் சூழ்நிலை ஒன்றும் எழுந்தது.[60]

கி.பி. 1762ம் ஆண்டு நவம்பர் மாதம் திருவாங்கூர் மன்னன் தர்மராஜா பாஞ்சாலங்குறிச்சி, எட்டையாபுரம் பாளையக்காரருடன், திருநெல்வேலிச் சீமையின் தெற்குப் பகுதியில் ஏர்வாடி, திருக்குறுங்குடி ஆகிய ஊர்களைக் கைப்பற்றினார். மேலும் அவரது ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் வகையில் வடகரை சிவகிரி பாளையக்காரர்கள் செங்கோட்டையை கைப்பற்றினார். கொதித்து எழுந்த கம்மந்தான் சான் சாகிபு, திருநெல்வேலிக்கு விரைந்து சென்றார். அங்குள்ள மறவர்களைத் திரட்டி திருவாங்கூர் மன்னனது ஆக்கிரமிப்பு படைகளுடன் மோதினார். அவரே முன்னின்று நடத்திய போரில் செங்கோட்டையைக் கைப்பற்றிய ஆக்கிரமிப்பாளர்கள் புறமுதுகிட்டு ஓடினர். இன்னொரு பகுதியில், திருவாங்கூர் படை வலிமையுடன் போராடியது. தொடர்ந்து பத்துப் போர்களில் திருவாங்கூர் படைகளுடன் பொருதி பயங்கரமான இரத்தக்களரியை ஏற்படுத்தியும் கம்மந்தானுக்கு முழு வெற்றி கிட்டவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, எஞ்சிய அனைத்து ஆதரவுகளையும் எதிர்ப்பு சக்திகளையும் திரட்டி இறுதிப்போரைத் துவக்கினார். கம்மந்தானது கடுமையான தாக்குதலைத் தாங்க இயலாத ஆக்கிரமிப்பாளர்களும் கைக்கூலிகளும் நாஞ்சில் நாட்டுத் தென்கோடியில் உள்ள ஆரல்வாய்மொழி வழியாக திருவாங்கூர் நோக்கி ஓடினர். அவர்களைத் துரத்திச்சென்ற கான் சாயபு திருவாங்கூர் எல்லைக்குள் நுழைந்து நெய்யாத்திங் கரையைப் பிடித்ததுடன் தென்திருவாங்கூர் கிராமங்களைச் சூறையாடி தீயிட்டார். திருவாங்கூர் மன்னன் திகைத்துப் போய் கம்மந்தானிடம் சமாதானம் கோரி ஓடிவந்தான். அதே நேரத்தில் தம்மையும் தமது நாட்டையும் கம்மந்தான் ஆக்கிரமித்து அட்டுழியங் செய்வதாக ஆற்காட்டு நவாப்பிற்கு புகாரும் செய்தான்.[61] அத்துடன் கான்சாயபுவை ஒழித்துக்கட்ட அனைத்து உதவிகளையும் ஆற்காட்டு நவாப்பிற்கு நல்குவதாகவும் உறுதியளித்தான்.[62] ஏற்கனவே கும்பெனி கவர்னர் உத்திரவிற்கு முரணாக, பேஷ்குஷ் தொகையை ஆற்காட்டு நவாப்பிற்கு அனுப்பி வைக்காத கான்சாயபு இப்பொழுது கும்பெனியாரையோ நவாப்பையோ கலந்து கொள்ளாமல் திருவாங்கூர் மன்னர் மீது உடனடியாகப் போர்தொடுத்தது அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை அளித்தது. நவாப்பின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. அவரது கற்பனையில் கம்மந்தான் கான்சாயபு, ஆற்காட்டு நவாப்பிற்கும் கும்பெனியாருக்கும் கட்டுப்படாத தன்னாட்சி மன்னராக காட்சியளித்தார். நவாப்பினது அரசியல் சலுகைகளை முழுமையாக நம்பி இருந்த கும்பெனித்தலைமை, நவாப்பிற்காக பரிந்து செயல்பட்டது. அவரை உடனே சென்னைக்கு அழைத்தது. அதுவரை கும்பெனியாரால் ஆதரிக்கப்பட்டு கும்பெனியரது அலுவலராக இருந்து வந்த நிலையில், புதிய எஜமானரான நவாப்பிற்கு கட்டுப்பட்டு அடிமைச்சேவகம் செய்ய அவர் தயாராக இல்லை. தம்மைப்புரிந்து கொள்ளாத கும்பெனி கவர்னரது ஆணையை ஏற்று சென்னை செல்லவும் அவர் விரும்பவில்லை. இந்த நிலையில் கும்பெனியார் மதுரை மீது படையெடுக்க துணிந்தனர் பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சுவதில்லை அல்லவா?

களம் பல கண்ட கான்சாயபு கும்பெனியாரது முடிவிற்கு பயப்படவில்லை, கும்பெனியாருடன் பொருதுவதற்கான அனைத்து ஆயத்தங்களிலும் முனைந்தார். மைசூர் மன்னர் ஹைதர் அலியுடனும் பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சுக்காரர்களுடனும் தொடர்பு கொண்டார். மதுரைக் கோட்டைக்கு நுழைவாயிலாக உள்ள நத்தம் கணவாய் வழியைப் பலப்படுத்தினார். ஆனால், கும்பெனி படைகள் தொண்டமான் சீமை வழியாக மதுரைச்சீமைக்குள் நுழைந்து திருவாதவூர் திருமோகூர் ஆகிய ஊர்களைப்பிடித்து மதுரைக் கோட்டையை நெருங்கினர். திருநெல்வேலி, தொண்டி, திருச்சி ஆகிய வழிகளில் மதுரைக்கு உதவி செய்யாமல் தடுத்தனர். மதுரைக் கோட்டையையும் முற்றுகையிட்டனர். தாக்கினர். கும்பெனியாருக்கு உதவிப்படைகள் விரைந்து வந்தன. தளபதிகள் மான்சன், பிரஸ்டன் ஆகியோர் எட்டு மாதங்கள் இடைவிடாது கான் சாயபுவின் மதுரை கோட்டையைத் தாக்கினர். மதுரைக் கோட்டைக்குள் நுழைவதற்கு படாத பாடுபட்டனர். முடியவில்லை.

கும்பெனித் தலைமை தளபதிகளை மாற்றியது. போருக்கான புதிய உத்திகளை வரைந்தது. மதுரை மீதான தாக்குதலை கடுமையாக்கியது. கான்சாகிபும் சிறிதும் களைப்படையாமல் பரங்கிகளை உக்கிரமாகத் தாக்கினார். பெருத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது. பரங்கிகளுக்கு ஆனால் கான் சாகிபின் சீற்றம் தணியவில்லை. ஆற்காட்டு நவாப் வாலாஜாமுகம்மது அலியும் பெரிய தளபதி வாரன்ஸ் களத்தில் இருந்து போர் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர். என்றாலும் மதுரைக் கோட்டையில் ஒருபிடி மண்ணைக்கூட அவர்களால் அள்ளிக்கொள்ள இயலவில்லை. தமிழக வரலாற்றில் பதினைந்து மாத முற்றுகைக்கு ஆளான கோட்டையும் கிடையாது. ஒரு கோட்டையைப் பிடிக்க இவ்வளவு நீண்ட நாட்கள் போராடி தோல்விகண்டதும் கும்பெனியாரின் வரலாற்றிலும் இல்லை. ஆனால் அவர்களது துரோகச் செயல்கள் என்றும் தோல்வி கண்டது கிடையாது. போர் நீடித்துக் கொண்டு இருந்ததால் பொறுமை இழந்த கான்சாயபுவின் சில தளபதிகளை மறைமுகமாகச் சந்தித்து ஆசை வார்த்தை கூறி அன்பளிப்புகள் கொடுத்தனர்.

1764ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதின்மூன்றாம் தேதி மாலை நேரத் தொழுகையில் ஈடுபட்டு இருந்தார் கான்சாகிபு. அவருடைய திவான் சீனிவாசராவும், தளபதி மார்சன்ட் என்ற பிரஞ்சுக்காரனும் சில கைக்கூலிகள் உதவியுடன் திடீரென கம்மந்தான் மீது விழுந்து அமுக்கிப் பிடித்து கயிற்றினால் பிணைத்தனர்,[63] அரண்மனைப் பெண்கள் பயன்படுத்தும் மூடுபல்லக்கில் அவரை கடத்தி கோட்டைக்கு வெளியே எடுத்துச் செல்ல முயன்றனர். அப்பொழுது கம்மந்தானுடைய மெய்க்காவலராக இருந்த "முதலி" ஒருவர் இந்தச் சதிகாரர்களை தனது வாளால் சாடினார் அவரை துப்பாக்கியினால் ஒருவன் சுட்டுத் தள்ளினான். இன்னொருவன் அவரைவாளால் வெட்டிப்பிளந்தான். தமிழகத்தின் மிகச்சிறந்த வரலாற்று நாயகனைக் காப்பதற்கு முயன்ற அந்த வீரன், தியாகியானான்.[64] துரோகிகளது திட்டத்திற்கு வேறு எதிர்ப்பு இல்லை. கயிற்றால் பிணைக்கப்பட்டு கிடந்த கான்சாயபுவை வைகை ஆற்றின் வடகரையில் பாசறை அமைத்து இருந்த கும்பெனியாரிடம் ஒப்படைத்தனர், அந்தக் கழிசடைகள். மகத்தான வீரத்தை மனிதாபிமானமற்ற துரோகம் வென்றது. பதினைந்து மாத போரினால் பிடிக்க முடியாத "அந்த எதிரி"யைக் கண்ட பரங்கிகளுக்கு ஒருபுறம் ஆச்சரியம். இன்னொருபுறம் ஆனந்தம். அந்த துரோக கும்பலிடம் அவர் எதுவும் பேசவில்லை. அவர்கள் வழங்கிய உணவையும் தொடவில்லை. கூண்டில் அடைக்கப்பட்ட வரிப்புலிபோல வெஞ்சினத்தால் அவர் துடித்துக் கொண்டு இருந்தார்.

போர்க் கைதியாகிவிட்டதற்காக அவரது உள்ளம் பொருமியது. வாழ்க்கையின் பெரும் பகுதியை விசுவாசமில்லாத பரங்கிகளது பணியில் கழித்துவிட்டதற்காக அவரது உள்ளம் நைந்தது. அவர்களைப் பழிவாங்க வாய்ப்பு இத்தகைய வேதனை விரவிய இரண்டு நாட்கள் கழித்த பிறகு, நவாப்பும் கும்பெனியாரும் ஒரு முடிவிற்கு வந்தனர். கான் சாகிபு உயிரோடு இருக்கும் வரை அவர்களுக்கு நிம்மதி இருக்காது என்பதுதான். ஆதலால் அவரை மதுரைக்கோட்டையின் மேற்கு வாசலுக்கு அண்மையில் தூக்கிலிட்டுக் கொன்றனர். தமிழக வரலாற்றின் சிறப்புமிக்க வரலாற்றுப் பகுதி இவ்விதம் விரைவான முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

தமிழக இசுலாமியரது தன்னேரில்லாத நாட்டுப்பற்று, மான உணர்வு, போர் ஆற்றல், மனித நேய நடவடிக்கைகள் இவைகள் அனைத்தும் பொதிந்து வீரவடிவாக விளங்குகிறது. கம்மந்தானின் தியாக வரலாறு, அவரது போர்ப் பண்புகளை அவரது நாட்டுப்பணி ஆட்சியின் மாட்சியை அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் பாராட்டி உள்ளனர். ஜேம்ஸ்மில் கர்னல் புல்லாட்டன், கலெக்டர் லூஷிங்க்டன், டாக்டர் கால்டு வெல், டாக்டர் ராஜையன் ஆகியோர் கான்சாயபுவிற்கு சூட்டியுள்ள புகழாரங்கள் வரலாற்றில் பொன்னேடாக பொலிவுடன் விளங்கி கொண்டு இருக்கின்றன. அனாதையாக வளர்ந்து, மாவீரனாக உயர்ந்து, மனிதனாக வாழ்ந்து, தியாகியாக மடிந்த அவரது அற்புத வாழ்க்கை நயவஞ்சகர்களை எதிர்க்க வேண்டும், நாட்டிற்கு உழைக்கவேண்டும், நல்ல இசுலாமியராக வாழ வேண்டும், என்ற நியதிகளை நமக்கு என்றென்றும் நினைவுறுத்திக்கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் மான உணர்வும், மறப்பண்புகளும் விடுதலை வேட்கையும், அலைகடல் போல என்றென்றும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் வரை, முகம்மது யூசுப்கானின் புனித நினைவும் பூவைப்பிணைத்த மணம் போல நமது சிந்தனையில் வட்டமிட்டுக்கொண்டே இருக்கும்.[65]

18

தமிழகம் வந்த அரபி பயணிகள்



தமிழகத்திற்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாக வணிகத் தொடர்புகள் இருந்து வந்தன. ஆதலால் வணிகர்களைத் தொடர்ந்து, இஸ்லாம் தோன்றிய ஏழாம் நூற்றாண்டு முதல் இசுலாமிய சமயச் சான்றோர்களும் தொண்டர்களும் தமிழகம் வந்தனர். அத்துடன் உலகியலை உணரவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்ட பயணிகளும் வந்தனர். ஆங்காங்கு அவர்கள் சென்று, கண்டு கேட்டு வரைந்து, வைத்த பயணிக்குறிப்புகள், வரலாற்றின் சிறப்பு மிக்க ஏடுகளாக விளங்குகின்றன. தமிழகத்து அரசுகள், ஊர்கள், வாணிபப் பொருட்கள், மக்களது மரபுகள், பண்பாடுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள அவை உதவுகின்றன.

இந்த ஆவணங்களை வரைந்துள்ளவர்களில் நால்வர் பாரசீகர்கள். நால்வர், பாக்தாதைச் சேர்ந்தவர்கள். இன்னும் நால்வர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இபுனு குர்த்தாபே (கி.பி.844-48) இபுனு குஸ்தா (கி.பி.903) இபுனு பக்சி (கி.பி.902) அபூசெய்து (கி.பி.950) மசூதி (கி.பி.943-55) யாக்கத் (கி.பி. 1179) வஸ்ஸாப், ரஷிமுத்தீன், திமிஸ்கி (கி.பி.1325) இபுனு பத்தூதா (கி.பி. 1355) ஆகியோரது குறிப்புகளில் நமிழ்நாட்டைப் பற்றிய செய்திகள் ஓரளவு காணப்படுகின்றன. கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பயணிகளது குறிப்புகள் தமிழகத்தைப் பற்றிக் கூடுதலான செய்திகளை வழங்குகின்றன.[66]

இபுனுருஸ்தா, பாண்டிய மன்னனை அபிதி, அல்-காய்தி என்றும் சேர மன்னனை அரிதி, பரிதி என்றும், இபுனு குர்த்தாபே சோழனை செயில்மான் என்றும் குறித்துள்ளனர். அவரது குறிப்புகளில் இருந்து மதுரைப்பாண்டியன் அப்பொழுது மிகுந்த வலிமையுடன் விளங்கியதாகத் தெரிகிறது. அவனிடம் எழுபதினாயிரம் போர்மறவர்கள் இருந்தனர். ஆனால் பொதுவாக பாண்டியனை விட சோழன் போர்த்திறன் படைத்தவனா மதிக்கப்பட்டான்.[67] மேலும், பாண்டியனிடத்தில் யானைகள் இல்லாததால் ஐந்து குயூபிக் அடி உயரத்திற்கு அதிகமான யானைகளை ஆயிரம் தினாரா வீதம் விலை கொடுத்து வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[68] அப்பொழுது தமிழ்நாட்டு மக்கள் மந்திரசாலங்களில் நம்பிக்கை வைத்து இருந்தனர் என்றும் மனோவசிய சக்தியினால் மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுடன், மழை, குளிர் ஆகிய இயற்கை நிகழ்வுகளையும் தடைபடுத்த இயலும் என அவர்கள் எண்ணியதாக குர்த்தாடே வரைந்துள்ளார்.[69]

மற்றொரு பயணியான மசூதிபாண்டிய மன்னனை அல்காய்தி எனக் குறிப்பிட்டு இருப்பதுடன், அவனது கோநரான மதுரையை மந்தர்பின் எனவும் குறிப்பிட்டுள்ளார்.[70] மதுரைக்கும் கொல்லத்திற்கும் இடையில் சூடன் மரங்கள் மிகுந்து காணப்படுவதாகவும் வரைந்துள்ளார்.[71] இவர் கன்னியாகுமரியைப் பற்றித் தெளிவாள குறிப்புக்களைக் கொடுத்துள்ளார். அந்தப்பகுதி, இலங்கைக்கு (செரந்தீவு) எதிர்க்கரையில் அமைந்து இருப்பதாகவும், ஆதி பிதாவான ஆதம் (அலைஹிவசல்லம்) அவர்களுடைய மகன் காய்ன் வழிவந்த மக்கள் அந்தப்பகுதியில் உள்ளவர்கள் என்றும், பற்களைத் துலக்க அவர்கள் மரக்குச்சிகளைப் பயன்படுத்தியதாகவும் வரைந்துள்ளார். பெரும்பாலும் மலைகள் நிறைந்து இருப்பதால் மக்கள் கால்நடையாகவே செல்கின்றனர் என்ற குறிப்பும் காணப்படுகிறது.[72] பாண்டியனது பட்டத்து யானையைப் பற்றி அவர் குறிப்பிடும் பொழுது அந்த யானை மிகப் பெரியதாகவும் வெள்ளை நிறமாகவும் இடை இடையே கறுப்பு புள்ளிகளுடனும் காணப்பட்டதாகவும் அதன் பெயர் "நம்ரான்” எனவும் வரைந்துள்ளார்.[73]நம்பிரான் என்ற பெயர் அந்த யானைக்கு சூட்டப்பட்டு இருக்கலாம்.

இன்னொரு பயணியான இபுனுல் பக்கி, கன்னியாகுமரி ஆலயத்தில் விக்கிரக வழிபாடு நடைபெற்று வந்ததையும் வரைந்து இருக்கிறார்.[74] அவரை அடுத்து, கன்னியாகுமரி பகுதிக்கு வருகை தந்த இபுனுருஸ்தா என்பவர் , அங்கிருந்த அரசன், மிகவும் நேர்மையானவன் என்றும், குடி விபச்சாரம் போன்ற பழிச் செயல்களுக்கு மரண தண்டனை வழங்கி வந்தான் என்றும், குற்றங்களை ஆய்வு செய்து தண்டனை வழங்க எண்பது நீதிவான்கள் அவனது பணியில் இருந்தனர். என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மன்னரது மகனாக இருந்தாலும் நீதி (வான்கள் முன்னர் குற்றவாளிக் கூண்டில் நின்று பதில் சொல்ல வேண்டிய முறை இருந்தது என்றும் அவரது குறிப்புகள் தெரிவிக்கின்றன.[75] மேலும், பாண்டிய மன்னனுக்கு யானைகளை வாங்கும் பொழுது, காடுகளில் பெருந்தீயினூடே அச்சமின்றி ஓடும் யானைகள் தான் போர்களுக்குப் பொருத்தமானது என தேர்வு செய்யப்பட்டனவென்றும் வரைந்துள்ளார்.[76]

இவரையடுத்து, தமிழகம் வந்த அல்பரூனி இந்தியாவின் பல பகுதிகளையும் குறிப்பிட்டு வரையும்பொழுது இராமேசுவரம் சேது அணை, சிரந்தீவுக்கு (இலங்கை) எதிர்க்கரையில் இருப்பதாக வரைந்துள்ளார்.[77] இவர்கள் அனைவரையும் விட திமிஸ்கி என்ற பயணிதான் அப்பொழுது அரபி பயணிகள் பயன்படுத்தி வந்த மேற்குக்கரையின் கொல்லத்தில் இருந்து, கிழக்குக்கரையில் உள்ள முத்துப்பள்ளி(ஆந்திர நாட்டுக் கரையில் உள்ளது) வரையான கடற்கரை பட்டினங்கள் பற்றிய விவரங்களைத் தெளிவாகத் வரைந்துள்ளார். அவரது குறிப்புகளில் அதிரை (அதிராம்பட்டினம்) அபத்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிவீரராம பாண்டியன் (கி.பி. 1502-97) என்ற பிற்கால பாண்டியன் நினைவாக எழுந்த ஊர் இது என தஞ்சாவூர் கெஜட்டியர் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த பாண்டியனுக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கடல்துறை இருந்து வந்தது திமிஸ்கியின் குறிப்புகளில் இருந்து தெரிகிறது. மேலும், அவர், திண்டா (தொண்டி) தக்தான் (தேவிபட்டினம்) பத்தன் (பெரியபட்டினம்) காயின் (கானப்பேர்) என்ற காளையார் கோவில் ஆகிய ஊர்கள் மாபாரின் சிறந்த பட்டணங்கள் என குறித்துள்ளார். இன்னும் அவர் குறிப்பிட்டுள்ள பல ஊர்களை, இன்று இனங்கண்டு கொள்ள முடியவில்லை.

அடுத்து, உலகப் பயணியான இபுன் பதுாதா, இலங்கையில் இருந்து மாலத்தீவுகளுக்கு பயணம் செல்லும் வழியில் கடல் கொந்தளிப்பினால் அவரது கப்பல் கிழக்கு கரையில் ஒதுக்கப்பட்டு கி பி. 1355ல் கரையேறினார். பாண்டியநாட்டை நேரில் காணும் வாய்ப்பு அவருக்கு இவ்விதம் தற்செயலாக ஏற்பட்டது. அப்பொழுது, மதுரையில் ஆட்சி செய்த சுல்தான் கியாஸீதீன் தமகானி, தகவல் அறிந்து இபுனு பதூதாவை அரசு மரியாதையுடன் மதுரைக்கு அழைத்துக் கொண்டார். கப்பல் வசதி பெற்று அவர் பயணத்தை தொடர்வதற்கு பருவக்காற்று சாதகமாக இல்லாததால் இடைப்பட்ட மூன்று மாத காலத்தில் அவர் மதுரையிலும், பத்தனிலும்(பெரியபட்டினத்தில்)தங்கினார். அப்பொழுது அவர் வரைந்துள்ள விவரமான குறிப்புகள் தமிழக வரலாற்றிற்கு பயனூட்டுவதாக உள்ளன. அவைகளில் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[78]

பத்தனுக்குச் சென்றதைப் பற்றி அவர் வரைந்திருப்பது...... "அந்த முகாமை விட்டு பத்தன் நகருக்குப் போய்ச் சேர்ந்தேன்" அது கடற்கரையில் உள்ள பெரிய அழகிய நகரம். சிறப்பாக குறிப்பிடத்தக்க கப்பல் துறையும் அங்கு இருந்தது. உறுதியான தூண்களைக் கொண்டு மரத்தாலான பெரிய தளம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டு இருந்தது. அதனை அடைவதற்கான வழியும், மூடுபாதையும் முழுவதும் மரத்தினால் அமைக்கப்பட்டு இருந்தது. எதிரிகளது தாக்குதல் ஏற்பட்டால் துறைமுகத்தில் உள்ள கப்பல்கள் அனைத்தும் இந்தத் தளத்துடன் பிணைக்கப்பட்டுவிடும். வீரர்களும் வில்லாளிகளும் இந்தத் தளத்திற்கு சென்று விடுவார்கள். இதனால் எதிரிகள் இவர்களைத் தாக்கி காயங்கள் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போய்விடும் ... ... ... இந்த நகரில் ஒரு அழகிய தொழுகைப் பள்ளி இருக்கிறது. கல்லினால் அமைக்கப்பட்டது. கொடிமுந்திரியும் மாதுளையும் ஏராளமான அளவில் கிடைக்கின்றன. இறைநேசர் ஷேக் முகம்மது அல் கிபுறியை அங்கே சந்தித்தேன். தோளில் சரிந்து படியும் அளவு நீண்ட தலைமுடியினையுடைய பக்கீர் ஒருவரும் அவருடன் இருந்தார். அவர் வெளியுணர்வு இல்லாத தியான நிலையில் இருந்தார் சிங்கம் ஒன்றை வளர்த்து பழக்கப்படுத்தி வைத்து இருந்தார். அதுவும் பக்கீருடன் அமர்ந்து உண்டது. முப்பதுக்கும் அதிகமான பக்கீர்கள் அந்த இறைநேசருடன் இருந்தனர். அவர்களில் ஒருவர் புள்ளிமான் ஒன்றை வைத்து இருந்தார். அதுவும் அங்கேயே இருந்தது. அந்தச் சிங்கத்தின் குருளையினால் புள்ளிமானுக்கு எந்த தொந்தரவும் இல்லை. நானும் அந்தப் பட்டணத்தில் தங்கினேன்.

"இதற்கிடையில் யோகி ஒருவர், சுல்தானது வீரியத்தை அதிகரிக்க மாத்திரைகள் தயாரித்தார். அதில் இரும்பு தாதுக்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. சுல்தான் கூடுதல் அளவில் அவைகளை உட்கொண்டதால் அவருக்கு உடல் நலிவு ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் பட்டினத்தை அடைந்தார். நான் அவரைச் சந்தித்தேன். அவருக்கு எனது அன்பளிப்பையும் கொடுத்தேன். அங்கு தங்கி இருந்த பொழுது, அவர் கடற்படை தளபதி குவாஜா கருணை வரவழைத்து “மாலத்தீவு பயணத்திற்கான கப்பல்களை ஆயத்தப்படுத்துங்கள், கூடுதலாக ஒன்றும் வேண்டாம்” என உத்திரவிட்டார். நான் வழங்கிய அன்பளிப்பிற்கான பெறுமானத்தை வேறு அன்பளிப்பாகக் கொடுக்க முனைந்தார், நான் மறுத்துவிட்டேன் ... ... சுல்தான் பட்டினத்தில் பதினைந்து நாட்கள் தங்கி இருந்தார். பிறகு தலைநகருக்குப் புறப்பட்டார். "அவர் புறப்பட்டுச் சென்ற பிறகு பதினைந்து நாட்கள் நான் பட்டினத்தில் தங்கி விட்டு விசாலமான விதிகளையுடைய பெரிய நகரமான மதுரைக்குப் புறப்பட்டேன்". அந்த நகரை தனது கோநகராகச் செய்தவர் எனது மாமனார்-சுல்தான் ஷரிபு ஜலாலுத்தீன் அஸன்ஷா, தில்லியைப் போன்று தோற்றம் தரும்படி அதனை அக்கறையுடன் அவர் நிர்மாணித்தார். "தான் மதுரையை அடைந்தபொழுது, அங்கு ஒரு கொள்ளை நோய் பரவி இருந்ததைப் பார்த்தேன். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக மடிந்தனர். அந்த நோயினால் தாக்கப்பட்டவர் இரண்டு அல்லது மூன்றாவது நாளில் இறப்பு எய்தினர். எங்கும் நோயாளிகளையும் இறந்தவர்களையும் கண்டேன். இளைய அடிமைப் பெண்ணொருத்தியை விலைக்கு வாங்கினேன். உடல் நலிவு இல்லாதவள் என எனக்கு உறுதி கூறப்பட்டது. ஆனால் அடுத்த நாளில் அவள் இறந்து விட்டாள். சுல்தான் அஸன்ஷாவிடம் அமைச்சராகப் பணியாற்றிய நடுவரின் மனைவி என்னைச் சந்திக்க ஒரு நாள் வந்தாள். அவளுடன் எட்டு வயது நிரம் பிய சிறுவன் ஒருவனும் வந்திருந்தான், அறிவும் ஆற்றலும் மிக்கவனாக இருந்தான். தனது வறுமை நிலையைப் பற்றிச் அவள் சொன்னாள். அவருக்கும் அந்தச் சிறுவனுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிவைத்தேன் அவர்கள் இருவரும் உடல் நலம் மிக்கவர்களாக காணப்பட்டனர். ஆனால் அடுத்த நாள், அந்த தாய் என்னிடம் வந்தாள். தனது மகள் திடீரென இறந்து விட்டதாகவும், அவனது அடக்கத்திற்குரிய துணிவேண்டும் (கபன்) எனக்கோரினாள். .... சுல்தான் மரணமடையும் பொழுது அவரது அத்தானி மண்டபத்திற்குச் சென்று இருந்தேன். நாற்றுக்கணக்கான பெண் பணியாளர்கள் நெல் குத்துவதற்காகவும் சமையல் பணிக் கெனவும் அழைத்து வரப்பட்டனர். அவர்களும் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கு தரையில் வீழ்ந்து மடிந்தனர்.

“சுல்தான் கியாஸுத்தீன் மதுரைக்கு திரும்பிய பொழுது, அவரது தாய், மனைவி, மகள் ஆகியோர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர் மூன்று நாட்கள் தங்கி இருந்தார். பிறகு அவர் ஒரு மைல் தொலைவில் உள்ள ஆற்றுக்குச் சென்றார். ஆற்றங்கரையில் கோயில் ஒன்று இருந்தது. அவரை வியாழக்கிழமையன்று சந்தித்தேன். அரசாங்க காஜியாருடன் என்னை அங்கு தங்கி இருக்குமாறு செய்தார். கூடாரங்கள் அமைக்கப்பட்ட பொழுது மக்கள் விழுந்தடித்து நெருக்கி ஓடி வந்ததைப் பார்த்தேன். அவர்களில் ஒருவன் சுல்தான் இறந்துவிட்டார் என்று சொன்னான். இன்னொருவன் அவரது மகன் இறந்துவிட்டார் என உறுதி கூறினான். விசாரணையின் பொழுது சுல்தானிள் இளவல் இறந்தது தெரியவந்தது. சுல்தானுக்கு வேறு மகன் இல்லை. அவருடைய நோயை இந்த இழப்பு மிகுதிப்படுத்தியது. அடுத்த வியாழக்கிழமை அவரது தாயார் இறந்தார். மூன்றாவது வியாழக்கிழமை சுல்தானும் இறந்துவிட்டார். ... [79]

அடுத்து, பட்டமேறிய சுல்தான் நசிருத்தீன் பற்றி, இபுன் பதூதா,[80]

".... ... .... நாஸிருத்தீன் , இறந்து போன சுல்தானின் ஒன்று விட்ட சகோதரர். தில்லியில் அலுவலராக இருந்தவர். கியாசுதின், சுல்தான் ஆனவுடன் நாஸிருத்தீன் பயந்து பிச்சைக்கார வேடத்தில் ஒடிப்போனார். ஆனால் அவரது ஒன்று விட்ட சகோதரருக்கு பின்னர், அவர் ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியின் விளையாட்டு. நாஸிருத்தீன் அரியணையேறியவுடன் அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்தனர். கவிகள் புகழ் மாலைகளைச் சூட்டினர். அவர்களுக்கு சிறந்த பரிசில்களை அவர் வழங்கினார். முதலில் எழுந்து அவருக்கு வாழ்த்துக் கூறியவர் காஜிஸ்த்ரூஸ்ஜமான். அவருக்கு வாழ்த்துக்கு ஐநூறு பொற்காசுகளையும், சீருடைகளையும் சுல்தான் வழங்கினார். அடுத்து வந்தவர், நீதவான் வஜீர்-அல்-காஜி, அவருக்கு சுல்தான் இரண்டாயிரம் வெள்ளிக்காசுகளை வழங்கினார். எனக்கு முன்னுாறு பொற்காசுகளையும், சீருடையையும் கொடுத்தார். பக்கிரிகளுக்கும் ஏழைகளுக்கும் தானம் வழங்கினார். முதன்முறையாக, போதகர் ஒருவர் புதிய ஆட்சியாளரின் பெயரை இணைத்து முதல் பிரசங்கம் செய்தவுடன், பொன், வெள்ளி தட்டில்களிலிருந்து தினாரையும், திரம்மாவையும் அவர்மீது சொரிந்தனர். சுல்தான் கியாஸ்தீனது நல்லடக்கம் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. அவரது புதை குழியருகே நாள்தோறும் திருமறை ஒதப்பட்டது. திருமறையின் பத்தாவது பகுதியை ஒதி முடித்த பின்னர், குழுவில் இருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மக்கள் வயிறார உண்டனர். வந்து இருந்தவர்கள் தகுதிக்கு தக்கவாறு வெண் பொற்காசுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நாற்பது நாட்கள் இவ்விதம் தொடர்ந்து நடைபெற்றன. இனி ஒவ்வோர் ஆண்டும் இதே மாதிரியான தருமம் மேற்கொள்ளப்படும்.... ... ...” *

மற்றுமொரு பயணியான வஸ்ஸாப், தமிழ்நாட்டு வணிகம் பற்றிய குறிப்புகளில்.[81]" ............... ஹிஜிரி ஆண்டு 692ல் மாபாரின் மன்னர் தேவர் இறந்து போனார். ஏராளமான செல்வங்களையும் அவர் விட்டுச் சென்று இருந்தார். ஏழாயிரம் பொதி மாடுகளில் ஏற்றபட்ட நவமணிகள், பொன், வெள்ளி ஆகியவை அவரையடுத்து பட்டமேறிய அவரது சகோதரர் பங்கிற்கு ஒதுக்கப்பட்டது. மாலிக் ஆஜம் தக்கியுத்தீன் முதன் மந்திரியாக தொடர்ந்து பணியாற்றினார். இன்னும் சொல்லப் போனால் ஆட்சியாளரான அவரது பெயரும் புகழும் ஆயிரம் மடங்கு உயர்ந்தன.

"வணிகம் மூலமாக ஏற்கனவே பெற்றிருந்த செல்வ வளதுடன், சீனத்தில்இருந்தும் இந்தியாவில் இதரப்பகுதிகளில் இருந்தும் மாபாருக்குள் எத்தகைய சாமான்கள், பொருட்கள், இறக்குமதி செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர் கட்டளையிட்டார். அவரது முகவர்களும் பணியாளர்களும் முதன் முதலில் தேர்வு செய்யும் வரை ஏனையவர்கள் அந்தப் பொருட்களை வாங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.அவருக்குத்தேவையான பொருட்கள் தேர்வு செய்யப்பட்டவுடன், அவைகளை அவருடைய கப்பல்களில் அல்லது மற்ற வியாபாரிகள் கப்பல்களில் அவரது சொந்தத்தீவிற்கு அனுப்பப்பட்டன. மாலிக் குல் இஸ்லாமின் தேவைப்பொருட்கள் தேர்வு செய்யப்பட்டு பெற்றுக் கொள்ளப்படும் வரை. ஏனைய வணிகர்கள் பேரம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எஞ்சியவை கீழை, மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இத்தகைய விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் உள்நாட்டு சந்தைக்குரிய பொருட்கள் வாங்கப்பட்டன. கீழைக்கோடியில் உள்ள சீன நாட்டில் உற்பத்தியான பொருள், மேலைநாட்டில் பரவத்தக்க வகையில் வியாபாரம் நடைபெற்றது. இதற்கு முன்னர் இந்த உலகம் இத்தகைய வியாபாரத்தைக் கண்டதில்லை. . . . . . மாலிக் இ-ஆஜம் தக்கியுத்தின் மாலிக்குல் இசுலாம் ஜமாலுத்தீன் ஆகிய இரு நிபுணர்களது உயர்வும், சிறுப்பும் மாபாரை விட இந்தியாவின் இதர பகுதிகளில், பெரும்அளவில் மதிக்கப்பட்டது. தொலைதுாரத்து மன்னர்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு தோழமையுடன் பழகி வந்தனர். அவர்களது எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் வெளியிட்டு, அடிக்கடி மடல்கள் அனுப்பி வந்தனர்.’’

இவ்விதம் அரபுப் பயணிகள், கண்டதையும் கேட்டதையும் அவர்களது பயணக் குறிப்புகளில் பதிவு செய்து வைத்துள்ளனர். மேலும் கிராமங்களில், உண்மையை பெறுவதற்கு காய்ச்சிய எண்ணையில் கையை நனைக்கச் செய்தல், காய்ச்சிய இரும் புக்கம்பியை கையில் துரக்கிக் கொண்டு நடத்தல் ஆகிய மூட நம்பிக்கைகள் முந்தைச் சமுதாயத்திலும் இருந்ததை சுலைமான், இபுனுபதுரதா ஆகியோரின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[82] தாடி, மீசை வைத்துக் கொள்ளுதல், காதுகளைத் துளையிட்டு கடுக்கன் அணிந்து கொள்ளுதல், பொன்னாலான கம்பிகளை, வளையல்களை அணிதல், போன்ற பழக்க வழக்கங்களை இபுனு பதூதா குறிப்பிட்டுள்ளார். அன்றைய தமிழகத்தில் பேணப்பட்டு வந்த இந்தப் பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகிய வைகளைத் தெரிந்து கொள்வதற்கும், இஸ்லாம் என்ற புத்தொளி தமிழ்ச் சமுதாயத்தில் புகுந்து ஊடுருவிய நிலைகளைப் புரிந்து கொள்வதற்கும் அரபு நாட்டு பயணக் குறிப்புகள் பயன்படுகின்றன.

19

சமுதாயப் பிரதிபலிப்புகள்


தமிழகத்தின் வாணிபச் சிறப்பிற்கு உதவிய அராபிய இஸ்லாமியர்களது செல்வாக்கு, தமிழகத்தின் அரசியல் சமுதாய நிலைகளில் பிரகாசித்தன. நல்லவிதமான வாணிபத்திற்கு நாணயத்துடன் நாணயமும் தேவை. கடைச் சங்க இலக்கியங்களில், நாணயங்களைப் பற்றிய குறிப்புகள் இல்லை. பண்ட மாற்று முறை அப்பொழுது இருந்ததை "பகர் விரவு நெல்லின் பலவரி யன்ன ... ..." என்ற மலைபடுகடாம் தொடர் சான்று பகருகிறது. அன்றைய பாணர்களுக்கு, வேந்தர்களும் வள்ளல்களும் அன்பளிப்பாக பூவுடன் பொன்னும் பொற்றாமரையும் வழங்கி மகிழ்ந்த செய்திகளை பதிற்றுப் பத்தும் புறநானூறும் பொலிவுடன் முழங்குகின்றன. காலப் போக்கில் யவனர்களது தொடர்பு ஏற்பட்டவுடன், பண்டமாற்றுப் பொருளாக அவர்கள் வழங்கிய பொன், வெள்ளி, நாணயங்கள் தமிழ்நாட்டில் செலாவணியாக பயன்படுத்தப்பட்டன. கிரேக்க, லத்தீன் மொழிகளில் தங்க நாணயம் "தினேரியஸ்" எனவும், வெள்ளி நாணயம் “திரம்மா” எனவும் பெயர் பெறும். இந்த நாணயங்களில் தங்க நாணயம் நான்கு கிராம் எடையுடைது பத்து திரம்மா, ஒரு தினேரியஸ்-க்கு சமமானது. அதனைப் போன்று திரஹம் பிரஞ்சு நாட்டு ஒரு பிராங் அல்லது அமெரிக்க நாட்டு பத்தொன்பது "சென்டி"ற்கு சமமான மதிப்பு டையதாக இருந்தது. தமிழகத்து நாணயச் செலாவணிக்கு பயன்படுத்தப்பட்ட முதல் நாணயங்கள் அவைகளே கிறித்துவிற்குப் பின்னர் மூன்றாவது நூற்றாண்டுவரை அவைகள் தமிழக நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டன என்பதும் அதுவரை தமிழகத்தில் நாணயங்கள் அச்சிடப்படவில்லை அல்லது உலோக வார்ப்புகளாக உருப்பெறவில்லை என்பதும், தெளிவு. பிற்காலத்தில்தான் பல்லவர்களும் பாண்டியர்களும், சோழர்களும் தங்களது ஆட்சிக் காலங்களில் பலவிதமான நாணயங்களை வெளியிட்டனர்.

அவையனைத்தும் காசு என்றே வரிசைப்படுத்தப்பட்டன. பொன்னாலான காசு, மாடை, பணம், கட்டி என வழங்கப்பட்டது. "வாசி, தீரவே காசு தாரீர்” என்பது ஏழாம் நூற்றாண்டு சம்பந்தரது தேவாரம். அவைகளை அடுத்து வெளியிடப் பட்ட செப்பு பணமும் காசு என்றே வழங்கப்பட்டது. இந்தச் சொல் பிற்காலத்தில் கயிக்சா (caisa) என போர்த்துகேசிய மொழியிலும் காசு (cashit) இணைத்துக் கொண்டதும் ஆகும்.

கி.பி. பதினான்காம் நூற்றாண்டு தொடக்கம் வரை, தமிழ்நாட்டுச் செலாவணியாக அரபிகளது தங்க நாணயமான தினாரு வெள்ளி நாணயமான திர்கமும், தமிழ் மக்கள் கைகளில் தவழ்ந்ததை பல கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது. மதுரை, தஞ்சை, திருப்பத்துார், அருப்புக்கோட்டை திருத்துறைப் பூண்டி குடுமியான்மலை. திருப்பராய்த்துறை, திருவடந்தை ஆகிய ஊர்க்கோயில் கல்வெட்டுக்களில் தினார், தினாரா எனவும், திர்கம் திரம்ம எனவும், பொறிக்கப்பட்டுள்ளன. இங்ங்னம் ராஜராஜன் விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் ஆட்சியிலும், பராந்தகன் நெடுஞ்சடையன் ஸ்ரீவல்லபன், வீரபாண்டியன், மாறவர்மன் சடையவர்மன், சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலங்களிலும் அரபிகள் தமிழ் முஸ்லீம்களாக இருந்தது போன்று அவர்களது நாணயங்களான தினரும் திர்கமும், தமிழக நாணயங்களாக செலாவணியில் இருந்து வந்துள்ளன.

திருரா என்பது பொற்காசு, எழுபத்து ஒன்றரை பார்லி தானிய மணிகளுக்குரிய நிறை உடையதென்றும், கோதுமை தானிய மணிகள் அறுபத்து எட்டுக்குச் சமமானது என்றும், மித்கல் என்றும் அரபி மொழி நிறுத்தல் அளவையாக குறிக்கப்பெற்றுள்ளது. ஏழாம் நூற்றாண்டில், கிரேக்க நாட்டில் இந்த நிறைக்கு அறுபது மணிகள் சமமாகக் கொள்ளப்பட்டது. திரம்மா என்பது வெள்ளிக்காசு, அதற்கான நிறை பலவிதமாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இமாம் உமறு (அலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் இந்த நாணயம் பதினான்கு காராட் நிறையுடையதாக அமைக்கப்பட்டது. இந்த இரண்டு நாணயங்களும் திருக்குர் ஆனில் சூரா 12:20ல் சொல்லப்பட்டுள்ளது. பின்னர் காஷ் (CASH) என ஆங்கிலத்திலும் பிற்காலத்தில் உருப்பெற்றுள்ளன.[83] தமிழகத்திற்கு அரபிகளது வாணிபத் தொடர்பு ஏற்பட்டவுடன் அந்த நாட்டு தீனார், திர்ஹம், நாணயங்கள் தமிழ்நாட்டில் தமிழக நாணயங்களாக பதினான்காவது நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அரபு நாடுகளுடன் வாணிபம் செய்த அரபிகளுடன் தமிழக மக்கள் கொண்டிருந்த நெருக்கமான நட்புச் சூழ்நிலையும் இத்தகைய பொருளாதார நாணயப் புழக்கத்திற்கு ஏற்ற காரணமாதல் வேண்டும்.

இந்த நாணயங்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கொங்கணத்திலிருந்து ஆந்திர கடற்கரை வரை வியாபித்திருந்த மேலைச் சாளுக்கிய அரசின் செலாவணியில் இருந்தன. அந்த காலக்கட்டத்தில், அங்கு அராபியர்கள் மிகுந்த அன்புடனும், மதிப்புடனும், நடத்தப்பட்டதை அப்பொழுது அங்கு பயணம் மேற்கொண்டிருந்த சுலைமான் போன்ற வரலாற்று ஆசிரியர்களது குறிப்புகள் சான்று வழங்குகின்றன.[84] தமிழகத்தின் வடக்கு எல்லையில் சாளுக்கிய அரசு அமைந்து இருந்ததின் காரணமாக அந்த நாட்டு அரசியல் செயல்பாடுகளின் செல்வாக்கினை பிரதிபலிப்பாக அரபு நாட்டு நாணயங்கள் தமிழ்நாட்டு செலாவணியில் ஈடுபடுத்தபட்டிருக்க வேண்டும். இந்த இரு காசுகளும் முந்தைய தமிழகத்தின் பழங்காசுடன் செலாவணியில் ஒருசேர வழங்கப்பட்ட செய்திகளும் உண்டு. ஒரு சில கல்வெட்டுகளில் இருந்து அரபு நாட்டு திரமத் (திர்கம்) திற்கு தமிழகத்தின் பழங்காசிற்கும் உள்ள மதிப்பினைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. "பழங்காசு முக்காலே மாகாணிக்கு, திரமம் ஒன்றே காலாகவும், அரைப்பழங்காசுக்கு திரமம் முக்காலும்” என ஒரு கால கட்டத்திலும், பழங்காக அரைக்கு திரமம் ஒன்றரையாக ஒரு சமயம் இருந்ததாகவும் செய்யாறு, கும்பகோணம், கல்வெட்டுகளில் காணப்படுகின்றன ஆனால் தினரா (தினார்) வுக்கு என்ன மதிப்பு இருந்தது என்பதை சுட்டுகின்ற ஆவணங்கள் கிடைக்கவில்லை. எட்டாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டுவரை தமிழகச் செலாவணியில் இருந்த இந்த நாணயங்களது பெயர்களுக்கான மூலம் கிரேக்க மொழியில் உள்ளது. தினேரியஸ் என்ற சொல் “தினார்” எனவும், திரக்மா என்ற சொல்’ "திர்கம்" எனவும் அரபு மொழியில் உருப்பெற்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பே கிரேக்க நாட்டிற்கும், அரபு மக்களுக்கும் இடையில், சமூக, கலாச்சார தொடர்புகள் இருந்தன. உமையாக்கள் ஆட்சியின் பொழுது அவை பல நிலைகளிலும் முன்னேற்றம் கண்டன. ஆதலால், அரபிகள் தங்களது பொன், வெள்ளி நாணயங்களை கிரேக்க பாணியிலும் பெயரிலும் தயாரித்து வெளியிட்டனர். இந்த நாணயங்களில் அரபு நாட்டிற்கொப்ப வடிவமைப்பில் மாற்றங்களை கலீபா உமர் அவர்கள் ஏற்படுத்தினார். குறிப்பாக செவ்வக வடிவில் இருந்த திர்கம் நாணயத்தை, வட்ட வடிவில் அமைத்து அதில் "அல்லாஹ்" "பரக்கத்" என்ற சொற்களைப் பொறிக்குமாறு செய்தார்.[85] அவரைத் தொடர்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களான உமையாக்கள், அப்பாளியாக்கள் ஆட்சியின் பொழுது இந்த நாணயங்களின் அச்சிலும் நிறையிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டதை வரலாறு கூறுகிறது. என்றாலும் அபத்அல் மாலிக் என்ற உமையா கலிபாதான் முதன் முதலாக அரபிய தினாரை தமாஸ்கஸ் நகரில் இருந்து கி.பி. 695 வெளியிட்டார். இராக்கில் இருந்த அவரது ஆளுநர் அல்ஹஜ்ஜாஸ் வெள்ளியிலான முதல் அரபி திர்கம் நாணயத்தை கூபா நகரில் கி.பி. 696ல் தயாரித்து வெளியிட்டார்.[86]

திர்கம் என்பது மற்றொரு வகையான வெள்ளி நாணய மாகும். இதனுடைய நிறை, 5, 6, 9, 10 மிஷ்கள் என ஒரு சிலரும் 10, 12, 20 காரட் என்று வேறு சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.[87] தமிழகத்தின் இந்த நாணயம் "திரம்மா" என வழங்கப்பட்டது.

இந்த வகையான அரபு நாட்டு நாணயங்கள், தமிழகத்தில் செலாவணியில் இருந்ததை சான்று பகரும் பழமையான கல்வெட்டுக்கள் பல உள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர் திருத்தளியாண்ட நாயனார் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டில் பாண்டிய மன்னர் மாறன் சடையனது (கி.பி.792-835) பத்தாவது ஆட்சியாண்டில், ஆந்தனப் பெண்மணியொருத்தி அந்தக் கோயிலில் விளக்கெரிக்க பத்து “தினார்களை” வழங்கிய செய்தி உள்ளது.[88] இதனைப் போன்று திர்கமும், "திரம்மா" என சோழர்களது பழங்காசுடன் இணைத்து வழங்கப்பட்டது. கி. பி. 985ம் ஆண்டு உத்தம சோழனது ஆட்சியில் திருக்கொம்பியூர் கல்வெட்டில் "அஞ்சு வண்ணத்தால் வந்த ஈழக்காசு" என்ற தொடர் காணப்படுகிறது "பொலியூட்டாகக் கொண்ட பழங் காசு முக்காலே மாகாணியால் பொலியும் திரமம் நன்னே காணும். "... ... ... ... ... ... ... .... கடனுக்கு திங்கள் காசு திரமம் பலிசை பொலிவதாக ... ... .... ...." "இரவு சந்தி விளக்கெரிய வைக்க திரமம் நாலும் ... ... ..." என்பன ராஜராஜ தேவனது தஞ்சைப்பெருவுடையார் கோவில் கல்வெட்டுக்களில் காணப்படுபவையாகும்.[89] திருவிடந்தை, திருப்பராய்த்துறை ஆகிய ஊர்களில் படியெடுக்கப்பட்ட விக்கிரம சோழ தேவரது கல்வெட்டுக்கள் கி.பி. 1122, 1131 ல் சோழ நாட்டில் திர்கம் (திரம்மம்) புழக்கத்தில் இருந்ததை நினைவூட்டுகின்றன. கி.பி. 1246ம் ஆண்டைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி கல்வெட்டும் இந்த உண்மையைத் தெரிவிக்கின்றன.[90] குலோத்துங்க சோழ தேவரது 36வது ஆட்சியாண்டு குடுமியாமலைக் கல்வெட்டு, ".... .... அடைக்காய முதிற்கு இலையமுது, இட, திருமெய்ப்பூச்சிற்கு 48வது முதல் திங்கள் அஞ்சு திரமமாக ஆட்டறுபது திரமமும் இறுக்கக்கட வார்களாகவும்" என முடிகிறது. இன்னும், பாண்டிய நாட்டில் திர்கம் நாணயம் செலாவணி பற்றி பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அவர்கள், தமது ஆங்கில நூலான "பாண்டியப் பேரரசில்" வரைந்துள்ளார்.[91] மற்றும் பாண்டிய மன்னர்கள் சடையவர்மன், வல்லப தேவர், வீரபாண்டிய தேவர், சுந்தரபாண்டிய தேவர், மாறவர்மன் சுந்தர பாண்டிய தேவர், சடையவர்மன் குலசேகரன் ஆகியவர்களது கல்வெட்டுக்களும் இந்த உண்மையை உணர்த்துகின்றன.[92] இன்னும், தென் பாண்டிச் சீமையைச் சேர்ந்த அருப்புக்கோட்டை, சுத்தமல்லி, ஆகிய ஊர்களில் உள்ள பதின் மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுக்கள் திர்கத்தைக் குறிப்பிடுகின்றன. அருப்புக்கோட்டை ஆலயமொன்றின் அறங்காவலர்கள் நிலக்கிரையத்தை நெல்லாகவும் திரமமாகவும் பெற்றதாகச் செய்தி உள்ளது.[93] சுத்தமல்லி என்ற ஊருக்கு அண்மையில் உள்ள குலசேகரப் பேரேரியை ஆழப்படுத்தி செம்மை செய்ய கி பி. 1204ல் பாண்டியன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் 100 திரம்மாக்கள் வழங்கியதை அந்த ஊர் கல்வெட்டு சுட்டுகிறது.[94] மேலும், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன், ஆகியோர் ஆட்சியின் அரசிறையாக செலுத்த வேண்டிய தொகை இவ்வளவு திரமம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பதினாறு மாநிலத்தில் விளைவிக்கப்பட்டுள்ள வரகு, தினை, ஆகிய பயிர்களுக்கு ஒரு திரம்மமும் இதர புஞ்சை பயிர்களுக்கு அரை திரம்மமும் வரியாகச் செலுத்தப்படவேண்டும். என நிகுதி செய்யப் பட்டிருந்தது.[95] மற்றும், மாறவர்மன் சுந்தரபாண்டியனது ஆட்சிக்காலத்தில் "எள், வரகு, தினை, புளிங்கு விளைந்த நிலத்தின்" மாத்தால் திரமம் ஒன்றேகால் இறுப்பதாக அந்தராயம் வசூலிக்கும் ஆணையை மேலக்கொடுமலூர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.[96] அந்த அரசரது ஆட்சியின் (கி.பி. 1215ல்) அஞ்சு மேனி திரம்மம் என்ற பிறிதொரு அரபு நாணயமும் தமிழ் மக்களிடையில் செலாவணியில் இருந்தது தெரியவருகிறது.[97] பாண்டிய நாட்டில் அரபிகளது குடியேற்றமான அஞ்சுவண்ணத்தார் வழங்கிய நாணயம் தான் வழக்கில் அஞ்சுமேனி திரமம் ஆகிவிட்டது. இந்த அரபுகளது திரமம் அப்பொழுது தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த பழங்காசுகளுடன் ஒரு சேர" செல்லும் நாணயமாக விளங்கியது. ஒன்பதாவது நூற்றாண்டில் மூன்று திரமம் இரண்டு பழங்காசுகளுக்குச் சமமாக மதிப்பிடப்பட்டது. பதினொன்றாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் ஆறு திரமம் ஒரு பழங்காசிற்கும் இராமநாதபுரத்தில் ஏழு திரமம் ஒரு பழங்காசிற்கும் சமமாக கருதப் பெற்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டில், ஏழு திரமம் ஆங்கில நாட்டு அஞ்சு ஷில்லிங் எட்டே கால் பென்ஸ் அளவிற்கு சமமாக இருந்ததாக கல்வெட்டு ஒன்று சொல்கிறது.[98] இத்தகைய நாணயப் புழக்கம் மிகுதி காரணமாக, அவைகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க அரபிகளால் தமிழ்நாட்டில் நாணய தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. கொற்கையிலும், தொண்டியிலும் அத்தகைய நாணய முத்திரை சாலைகள் இருந்தன. அந்த இடங்கள் கொற்கை மாறமங்கலத்தில் "அஃக சாலைத் தெரு" என்றும் தொண்டியில் "அன்ன சாலைத் தெரு" என்றும், இன்றும் குறிப்பிடப்படுவதிலிருந்து அந்த முத்திரை சாலைகள் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளை அறிய முடிகிறது. அரபுகளது இந்த நாணயச் செலாவணி ஆந்திர நாட்டில் பதினாறாவது நூற்றாண்டு வரை நீடித்தாலும், பாண்டிய நாட்டில் பதினான்காவது நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. மதுரையில் சுல்தான்கள் ஆட்சி ஏற்பட்டதும், அவர்கள் தில்லி சுல்தானைப் பின்பற்றி, வெளியிட்ட வெள்ளி, செம்பு நாணயங்கள் மக்களிடையே செலாவணிக்கு வந்தபிறகு, அரபிகளது தினாரும், திர்கமும், செலாவணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. என்றாலும் விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் அவைகள் மக்களிடையே புழக்கத்தில் தொடர்ந்து இருந்ததை கொண்டவீடு கல்வெட்டு குறிப்பிடுகிறது.[99] இந்த நவீன காலத்திலும், அரபுநாடுகள் சிலவற்றில் தினாரும் திர்கமும் செலாவணியில் இருந்து வருகின்றன. குவைத், பஹ்ரைன் நாடுகளில் தினாரும், செளதி அரேபியாவில் திர்கமும் சர்வதேச செலாவணியுடைய நாணயங்களாக இருந்து வருகின்றன. இவைகளுக்கு எல்லாம் மேலாக ஐரோப்பிய நாடான யூகோஸ்லாவியாவில் நாணயச் செலாவணியும் தினாரில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பல நூற்றாண்டுகளாக தமிழ்ச் சமுதாயத்தின் புறக்கணிக்க முடியாத குடிமக்களாகிய தமிழக இஸ்லாமியரைப் பற்றிய ஆழமான சிந்தனையும் அக்கரையும் கொள்ளாத வரலாற்று ஆசிரியர்கள், முஸ்லீம்களது வரலாற்றினை மறைத்தது போல அவர்கள் தமிழக நாணயச் செலாவணிக்கு வழங்கிய இஸ்லாமிய நாணயங்கள் பற்றியும் வரலாற்றில் எவ்வித விவரங்களும் அளிக்க வில்லை. இதற்கு, அவர்களுக்கு அரபி மொழியில் உள்ள இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களில் பயிற்சி இல்லாதது அடிப்படை காரணமாக இருக்கலாம்.


20

இணைப்பும் பிணைப்பும்

அரபு நாடுகளுடனான தமிழரது வாணிகம், இந்த வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கியது. வணிகர்களாக தமிழகம் வந்த அரேபிய இஸ்லாமியர் நாளடைவில் தமிழக இஸ்லாமியராக மாறியது, தமிழ்ச் சமுதாயத்தில் தலைமுறை தலைமுறையாக பேணப்பட்டு வந்த பண்பாடு, நாகரீகம் ஆகிய நிலைகளில் புதிய கலப்புகளும் வார்ப்புகளும் நிகழ்வதற்கு நெம்புகோலாக உதவின. தமிழக, கலை, இலக்கியம், வாழ்க்கை இயல் சமய ஒழுகலாறுகளில் அவை காலூன்றி பரிணமித்து பிரதிபலித்து நின்றன.

சோழர் ஆட்சிக் காலத்தில் நாகையில் புத்த விகாரமொன்று நிறுவ அனுமதி அளிக்கப்பட்டதை ஆனை மங்கலச் செப்பேடு விவரிக்கிறது. காலப்போக்கில் எத்துணையோ விதமான மதக் கோட்பாடுகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மன்னர்களால் மதிக்கப்பட்டாலும், இஸ்லாம் மதத்திற்கு ஏற்பட்ட சூழ்நிலையும் ஆதரவும், வேறு எந்த மதத்திற்கும் ஏற்படவில்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம். இதயபூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சிலரானாலும், இஸ்லாமிய சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டு எதிர்ப்பு அணியில் சேராதவர் பலர். இஸ்லாத்திற்கு ஆதரவு திரட்ட அனல்வாதம், புனல்வாதம் போன்ற நேரிடையான கொள்கை விளக்கங்களுக்கு அவசியம் ஏற்படவில்லை. இதன் காரணமாக, தமிழ் மண்ணில் ஆழமாக வேரோடிய இந்த புதிய வித்திற்கு தமிழ்ச் சமுதாயம் அனுகூலமான விளைநிலமாகவே விளங்கியது.

தங்கள் வாழ்க்கை நெறியை வல்லவன் வகுத்தருளிய திரு மறையின் படி வகுத்துக் கொண்டாலும், தாங்கள் வாழும் சூழ்நிலை, சமூக அமைப்பு காரணமாக தங்களுக்கு இல்லாத பழக்க வழக்கங்களை வெறுத்து ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவைகளை அவர்கள் பொறுத்துக் கொள்ளவேண்டியது இயல்பாகிவிட்டது. வரலாற்று நிகழ்ச்சிகள் சில இதனை வலியுறுத்துகின்றன. பாண்டியன் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1262) ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரையில் உள்ள தீர்த்தாண்ட தானத்துக் கல்வெட்டில் “... ... ... .... இவ்வூரில் இருக்கிற அஞ்சு வண்ணமும் மணிக் கிராமத்தாரும். ஆரியரில் சாமந்த பண்டசாலையும் பட்டாரியரும் தோயா வத்திரச் செட்டிகளும் தென்னிலங்கை வலஞ்சியரும் கைக்கோளரும் தூசுவரும், வாணியரும், நீண்ட கரையாருங்கூடி .... ... கோயில் திருமுன்னிலே நிறைவுறக் கூடியிருந்து .... ...." அந்த ஊர் திருக்கோவிலில் திருப்பணி பற்றிக் கலந்து முடிவு எடுத்தனர்.[100] இந்த கலந்துரையாடலுக்கும் ஒரு மித்த முடிவிற்கும் இஸ்லாமியர்களான அஞ்சு வண்ணத்தவரும் கட்டுப்பட்டதாகத் தெரிகிறது. இது பதின்மூன்றாம் நூற்றாண்டில் மட்டுமல்ல. தொடர்ந்து பிந்தைய நூற்றாண்டுகளிலும் தமிழக இஸ்லாமியர் தாங்கள் வாழும் சமுதாயத்தை சேர்ந்த இந்து சகோதரர்களின் மத உணர்வுகளை மதித்தவர்களாக சமயப் பொறையுடன் வாழ்ந்தனர், என்பதற்கு இன்னும் இரண்டு கல்வெட்டுச் செய்திகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன.

முதலாவது, மதுரையில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சி நடைபெற்றபொழுது கி பி. 1719 ல் நிகழ்ந்த சம்பவம். மதுரை மாவட்டம் வெற்றிலைக்குண்டு கிராமத்தில் ஆலய மொன்றைப் பராமரிப்பது சம்பந்தமாக அந்த ஊரின் குடிகளான கோமுட்டி, கவண்டன், கைக்கோளன், நாடார், வாணியர், செட்டி, நத்தமடை, இஸ்லாமியர் ஆகிய எட்டு சமூகங்களின் பிரதிநிதிகளும் கூடிய கூட்டத்தில் தங்களது வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு ஈவுத் தொகையை அந்த தர்மத்திற்கு அளிக்க ஒவ்வொரு சமூகத்தினரும் உடன்பட்டதாலும், அந்த எட்டு சமூகப் பிரதிநிதிகளில் இஸ்லாமியரது பிரதிநிதியாக லெவை ராவுத்தன் என்பவரும் கலந்து கொண்டு இணக்கம் தெரிவித்திருப்பது தெரியவருகிறது.[101]

இன்னொரு நிகழ்ச்சி, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த அகமதுபேட்டை முஸ்லீம்களைப் பற்றியதாகும். அவர்கள் தாங்கள் வாணிகம் செய்யும் ஊர்களில், குற்றால நாதர் நித்திய பூசைக்கட்டளை வகையறாவுக்கு மகமைப் பணம் கொடுக்க கி.பி. 1788ல் இணங்கி எழுதிய பட்டயமாகும்.[102] இதோ அந்தப் பட்டய வாசகம்.

““சாலிவாகன சகாப்தம் 1710 ம் வருடம் செல்லா நின்ற கொல்லம் 964 ஆண்டு கீலக வருடம் கார்த்திகை மாதம் 25 ம் தேதி குற்றாலநாத சுவாமி கட்டளைக்கு அசரது வாவா சாயபு அகமது பேட்டை மணியம் இஸ்மாயில் ராவுத்தன் முதலான பலரும் எழுதிக் கொடுத்தபடி பட்டயமாவது, சுவாமிக்கு நித்திய விழா பூஜையில் கட்டளை வைத்துவரும்படி படித்தரப் படிக்கி, நடத்திவரும் வகைக்கு, நாங்கள் எல்லோரும் வகை வைத்துக் கொடுத்து ஏறு காற்று, இறங்கு காற்று வாகைச்சை ஒன்றுக்கு, மருவுருட் சட்டை ஒன்றுக்கு கால் மாகாணிப் பணம் வீதமும் நடையொறுக்கு மாகாணி பணம் வீதமும் இன்னொன்றுக்கு அரை மாகாணி வீதமும் இந்தப்படிக்கு திருநெல்வேலி காந்திமதியம்மன் சிறுகால மகிமை காந்திமதி மகிமைப் படிக்கு தென்காசி ஆமது பேட்டையில் உள்ள வனிதசேகர செங்கோட்டை, புலியறை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப் பேட்டை, சுரண்டைச் சந்தை, முதலான துறையிலும் மகமை வைத்துக் கொடுத்தபடியினாலே மாசம் மாசம் உள்ள பணத்தை வாணிபம் கணக்குப் பார்த்து வாங்கிக் கொண்டு சுவாமிக்கு கட்டளை என்றென்றைக்கும் நடத்தி வருவோமாகவும் ... ...”” என முடிவு பெறுகிறது அகமது பேட்டை இஸ்லாமியர் இணக்கம் தெரிவித்துள்ள அந்தப்பட்டயம்.[103]

இத்தகைய சமயப் பொறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாகவும் பிற அரசியல் ஊக்குவிப்புகள் காரணமாகவும் அன்றைய தமிழகத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களுக்கு அரசியலார் பலவித சலுகைகளை அளித்தனர். அவைகளில் சில செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. மதுரையில் இரண்டாவது பாண்டியப் பேரரசின் கர்த்தாவாக விளங்கிய சடையவர்மன் சுந்தரபாண்டியன் தனது எட்டாவது ஆட்சியாண்டில் மதுரைக்கு கிழக்கே உள்ள கீட்செம்பி நாட்டின் பெளத்திர மாணிக்கப் பட்டினத்து கீழ்பால் உள்ள சோனக சாமந்தப்பள்ளிக்கு ஆம்புத்துார் முதலான ஊர்களை இறையிலியாக ஆணையிட்டு உதவினான்.[104] அடுத்து, மதுரையில் அரியணை ஏறிய சுந்தரபாண்டியன் மதுரை மாநகர இஸ்லாமியப் பிரதிநிதியான ஹாஜி தாஜுத்தின் அவர்களை காஜியாக அங்கீகரித்ததுடன் அவர்களது குடியேற்றப் பகுதியில் (இன்றைய மதுரை காஜிமார் தெரு) அந்த சிறுபான்மை மக்களது வழிபாட்டிற்கு தொழுகைப்பள்ளி யொன்றையும் நிர்மாணிக்க உதவினான். மேலும் அந்தப் பள்ளியின் பராமரிப்புச் செலவிற்காக விரகனூர், புளியங்குளம், கிராமத்தையும் முற்றூட்டாக வழங்கி உத்திரவிட்டான்.[105] இந்தப் பாண்டியரைப் போன்று சேர மன்னனான உதயமார்த்தாண்டனும், தமிழக இஸ்லாமியர்களுக்கு உதவிய செய்தியும், உள்ளது. அவர் காயல் பட்டினத்திற்கு வருகை தந்தான். அப்பொழுது காயல்துறை சேரநாட்டின் ஆட்சி வரம்பிற்குள் அமைந்திருந்தது. அந்த ஊரின் அண்மையில் உள்ள காட்டு மக்தூம் பள்ளிக்கும் வருகை தந்த விபரம் அங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. அதன் வாசகப்படி, அந்தப்பள்ளி அன்று முதல் உதயமார்த்தாண்ட பெரும்பள்ளி என அழைக்கப்பட்டதுடன், அந்த பள்ளியின் காதியாரன அபுபக்கரும் உதயமார்த்தாண்ட காதியார் என அழைக்கப்பட்டார். அந்தபள்ளியின் பராமரிப்பிற்காக சோனாடு கொண்டான் பட்டினம் என வழங்கப்பட்ட அந்த காயல்துறையில் ஏற்றுமதி, இறக்குமதி கொள்ளும் பொருளுக்கு, நான்கு பணத்திற்கு கால் பணம் வரியாக வசூலிக்கும்படி சேரமன்னது ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.[106] இது நிகழ்ந்தது, கி.பி. 1387ல்

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் செம்பி நாட்டையாண்ட சேதுபதிகள் தமிழக இஸ்லாமியர்களது தொழுகைப்பள்ளி, தர்ஹா, ஆகியவைகளுக்கு பல நிலக்கொடைகளை வழங்கினர். அந்த அறக்கொடைகள் தொடர்ந்து தற்பொழுதும் பயன்பட்டு வருகின்றன. அதன் விபரங்களை சேதுபதிகளின் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் விளக்குகின்றன. மறவர் சீமையின் மாண்பை உயர்த்திய சேது மன்னர்களில் சிறப்புற்று விளங்கிய திருமலை சேதுபதி, தமது நாட்டில் குணங்குடி கிராமத்தில் (இராம. மாவட்டம் திருவாடானை வட்டம்) அமைந்துள்ள ஸையது முகம்மது புஹாரி (வலி) அவர்களது தர்ஹா (அடக்கவிடம்) பராமரிப்பிற்காக கி.பி. 1675இல் நிலகொடை வழங்கினார்.[107] அவரை அடுத்து அரியணையேறிய கிழவன் ரகுநாத சேதுபதி காரேந்தல் (காமராசர் மாவட்டம் திருச்சுழியல் வட்டம்) மீராசாகிப் பள்ளிக்கு விளைநிலங்களை விட்டுக் கொடுத்தார். மற்றொரு சேது மன்னரான முத்துக்குமார விஜயரகுநாத சேதுபதி கி.பி. 1744ல் குணங்குடி பள்ளிவாசலுக்கு மேலும் பல நிலங்களை வழங்கினார்.[108] இதே சேது மன்னர் தமது சீமையில் உள்ள ஏனைய இஸ்லாமியரது புனித இடங்களான இராமேஸ்வரம் ஆபில் காபில் தர்ஹா, இராமநாதபுரம் ஈசா சாகிபு தர்ஹா, ஏறுபதி சுல்தான் சையது இபுராகிம் (வலி) தர்ஹா ஆகிய நிறுவனங்களுக்கு முறையே பக்கிரி புதுக்குளம், (இராம. வட்டம்) கிழவனேரி, ஏறுபதி, மாயாகுளம் ஆகிய கிராமங்களை (முதுகுளத்துார் வட்டம்) முற்றூட்டாக வழங்கியுள்ள செய்திகள், அவரது தான சாசனங்களில் வரையப்பட்டுள்ளன.[109] மேலும், இவர் கமுதி வட்டம் பூலாங்கால் பள்ளிவாசலுக்கும், இராமநாதபுரம் வட்டம் நாரணமங்கலம் சுல்தான் பள்ளி வாசலுக்கும், பல ஏக்கர் விளைநிலங்களை வழங்கி பள்ளிவாசல் தர்மத்திற்கு உதவி இருக்கிறார்.[110] இவரை அடியொற்றி இவரது வழியினரான முத்து விஜயரகுநாத சேதுபதியும் பூலாங்கால் பள்ளி வாசலுக்கு நிலக்கொடைகளை வழங்கி உள்ளார்.

இவர்களைப்போன்று, தமிழக இஸ்லாமியரிடம் பரிவும் பாசமுங்கொண்ட நாயக்கமன்னர்களும் அவர்களது மத உணர்வுகளை மதித்து அறக்கொடைகள் வழங்கினார்கள். கி.பி. 1585ல் தஞ்சையை ஆண்ட செவப்ப நாயக்கர் அந்த நகரில் அடக்கம் பெற்றுள்ள இறைநேசரது தர்ஹாவிற்கு வருகை தருகிற இஸ்லாமிய துறவிகளது பராமரிப்பிற்காக பத்து ஏக்கர் பரப்பு காணியை அன்பளிப்பாக வழங்கினார்.[111] திருநெல்வேலி நகரில் உள்ள பள்ளியை பராமரிக்க கி.பி. 1692ல் மதுரை நாயக்க மன்னன் விஜயரங்க சொக்கநாதன் நிலைக்கொடை அளித்தான்.[112] இந்த மன்னரது வழி வந்த நாயக்க அரசிகளான ராணி மங்கம்மாளும், ராணி மீனாட்சியும் கி.பி.1701லும் கி.பி.1733 லும் மகான் நத்ஹர் (வலி) பாபாவின் திருச்சி தர்ஹா பராமரிப்பிற்கு சில கிராமங்களை இறையிலியாக வழங்கினார்கள்.[113] திருச்சியையடுத்த அம்மாபட்டி ஜமீன்தார், தமது ஜமீனில் இஸ்லாமியர்கள் தங்கி வாழ்வதற்கென ஒரு கிராமத்தை 17வது நூற்றாண்டில் தானமாக வழங்கினார். அந்த ஊர், இன்று ஜமீன் ஆத்துார் என இப்பொழுது சிறந்து விளங்குகிறது.[114]

இவர்களது முன்னுதாரணத்தைப் பின்பற்றி, தென்பாண்டிச் சீமையில் உள்ள ஜமீன்தார்களும், சிறு பாளையக்காரர்களும். இஸ்லாமியர், ஆங்காங்கு, மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் தொடர்ந்து வாழ்ந்து வரவும் இவர்களது, உழைப்பு, தோழமை, தொண்டு, ஆன்மீக வழிகாட்டுதல்கள், தமிழ் மக்களுக்குப் பயன்படும் வகையிலும், தங்களது அன்பளிப்புகளை நிலக்கொடைகளாக வழங்கினர். குறிப்பாக கி.பி. 1739 இல் மதுரை வட்டத்தில் காமாட்சி நாயக்கர் என்பவரும்[115] கி.பி. 1776ல் ஊத்துமலை சின்ன நயினாத்தேவர் என்ற மருதப்பத்தேவரும்[116] கி. பி. 1784ல் சிவகங்கை முத்த வடுக நாததேவரும்[117] இஸ்லாமியரது பள்ளிகளுக்கும், தர்ஹாக்களுக்கும் பல நிலக்கொடைகள் வழங்கிய செய்திகள் உள. இவை அனைத்திலும் சிறப்பான செய்தி, தமிழகத்தில் சமய ஒருமைப் பாட்டில் ஒரு சிறந்த சின்னமாக விளங்கும் நாகூர் ஆண்டகையின் தர்ஹாவில் கி.பி. 1753 ல் தஞ்சை மன்னன் துல்ஜாஜி, பல திருப்பணிகள் செய்ததுடன் அந்த தர்ஹாவின் பராமரிப்பிற்காக பதினைந்து கிராமங்களை வழங்கி இருப்பதாகும்.[118] கமுதி பள்ளிவாசளை நிருமாணிக்க 200 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லுத்தேவர் என்பவர் 78 ஏக்கர் நிலக்கொடை வழங்கினார். இவை போன்று தமிழ்ச் சமுதாயத்தில், தமிழக இஸ்லாமியர்களுக்கும். மற்றவர்களுக்கும் இடையில் நிலவிய சமூக ஒற்றுமை, செளஜன்யம், தொடர்ந்ததற்கான பல சான்றுகள் காலத்தால் அழிக்கப்பட்டு விட்டதால் அவை நமக்கு கிடைக்கவில்லை.

இங்ஙனம், தமிழ்ச் சமுதாயத்தில் இஸ்லாமியர்களது ஆத்மீக தேவைகளை மதித்து உதவிய இந்து சகோதரர்களுக்கு, தங்களால் இயன்ற வகையில் இஸ்லாமியர்களும் ஒத்துழைப்பும் உதவியும், நல்கிய செய்திகளை ஒரு சில ஆவணங்கள் அறிவிக்கின்றன. காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகளையும் அவரது காஞ்சி மடத்தைப் பற்றியும் அறியாதார் இருக்க முடியாது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இம்மடத்தில் பூசையும், அன்னதானமும் நடைபெறுவதற்காக தில்லி பேரரசர் பகதுர்ஷா 115 வராகன் தானம் வழங்கி கி.பி. 1710ல் ஆனையொன்று பிறப்பித்தார். செங்கை மாவட்டம் மேல்பாக்கம் கிராம வருவாயிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு பாரசீக தெலுங்கு சமஸ்கிருத வாசகங்களுடைய அந்த செப்பேடு உள்ளது.[119] அவைகளில் இன்னொன்று சேலம் மாவட்டம் மின்னக்கல் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ருக்மினி சமேத கோபால கிருஷ்ணன் ஆலயத்திற்கு, தமிழ் நாட்டின் வடமேற்குப் பகுதியை சில ஆண்டுகள் தமது ஆட்சிக்குள் வைத்திருந்த மைசூர் மன்னர் திப்புசுல்தான், ஆண்டுதோறும் 575 வராகன் மான்யம் வழங்க ஏற்பாடு செய்ததாகும். அத்துடன் கோயம்புத்து ருக்கு அருகில் உள்ள குறிச்சி என்ற ஊரில் உள்ள செல்லாண்டி அம்மன் கோயிலுக்கும் அவர் பல மானியங்களை வழங்கி உள்ளார்.[120] மேலும், அவர் பூரீரங்கப்பட்டினம், பெருமாள் கோயில், சிருங்கேரி சாரதா பீட மடம், குருவாயூர் கிருஷ்ணன் கோயில், ஆகிய சமய சார்புடைய நிறுவனங்களுக்கு அளித்துள்ள தானங் களை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமுடையதாகவும்.[121] அவையனைத்தையும் ஒன்று சேர இணைத்துச் சிந்தித்தால், திப்பு சுல்தானைப் பற்றி தமிழ்நாட்டில் உலவுகின்ற ஒரு சில கட்டுக் கதைகளை சுட்டெரித்துவிடும் சரித்திரச் சான்றுகள் இவையென்பதை உணரமுடியும். அத்துடன் சிறந்த பேரரறிஞரும் விடுதலை வீரருமான அந்த மன்னனை, மக்கள் மத்தியில் இழிவு படுத்துவதற்காக அவரது பரம வைரிகளான வெள்ளைப் பரங்கிகள் திரித்துவிட்ட பொய்மைச் சரடுகள் அவை என்பதும் புலப்படும்.

தில்லிப் பேரரசரது பிரதிநிதியாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஆற்காடு நவாப்களில் ஒருவரான அன்வர்திகான், திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஆலயத்தில் சுவாமி திருமேனி ஒன்றைச் செய்வித்து உதவினார். இன்னும் அந்ததிருமேனி ஆற்காட்டு நவாப்பை நினைவூட்டும் வகையில் “அனவரநாதன்" என வழங்கப்பட்டு வருகிறது.[122] இதனைப் போன்ற திருவுத்திர கோசமங்கை திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள தென்னாடுடைய சிவனுக்கு, திருவாட்சி இல்லாத குறையை நீக்கி, மதுரை முகம்மது இசுமாயில் என்ற இஸ்லாமிய குடிமகன் எட்டு அடி உயர வெங்கல திருவாட்சியை தயாரித்து வழங்கி இருக்கிறார்.[123] அந்த ஆலயத்தில் பழமையான சிறப்புப் பொருட்களில் ஒன்றாக அந்த திருவாட்சி இன்றும் காட்சி அளித்துக் கொண்டு விளங்குகிறது. இத்தகைய சமய பேதங்கள் நீங்கிய நட்புச் சூழ்நிலையில் தமிழக இஸ்லாமியர்கள், வாழ்ந்த வாழ்க்கை நிகழ்ச்சி சில வற்றை வரலாறு நமக்கு நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது. கி.பி. 1311 ல் தென்னாட்டு அரசியலில் குழப்பம் நிலவியது. பாண்டியப் பேரரசு தளர்ந்து மெலிந்த சிம்மத்தைப் போன்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது. தாயாதிச் சண்டைகள் குடுபிடித்து, தங்களது கட்சிக்கு வெளி உதவியை நாடிக் கொண்டிருந்த நேரம், அப்பொழுது தில்லி பேரரசரின் தளபதி மாலிக் நாயிப் கர்நாடகத்தில் துவார சமுத்திரத்தில் ஹொய்சாள மன்னருடன் போரில் ஈடுபட்டிருந்தான். மதுரை அரசு கட்டிலைப் பெற சுந்தரபாண்டியன் தில்லியில் அலாவுதின் அவைக்குச் சென்று உதவி கோரினான். சுந்தரபாண்டியனுக்கு உதவ தில்லி தளபதிக்கு கட்டளை அனுப்பப்பட்டது. தில்லிப் படைகள் மதுரை நோக்கிப் புறப்பட்டன. வழியில் கண்ணனுார், கொப்பத்தில் வீரபாண்டியன் படைகளை, தில்லி தளபதி மாலிக் கபூர் போரில் சந்தித்தான். தோல்வியுற்றான். கைது செய்யப் பட்ட வீரபாண்டியனது வீரர்கள், தில்லி தளபதி முன்பு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் பெரும் அளவில் தமிழக இஸ்லாமியர்களும் இருப்பதை அறிய தளபதிக்கு கோபம் பொங்கி வழிந்தது. தான் ஒரு முஸ்லீம் என்பதை அறிந்தும் தனக்கு உதவாமல், தனக்கு எதிராக, இந்து மன்னனான வீரபாண்டியனுக்காக போரிட்ட “இனத்துரோகிகள்” என அவர்களைக்கருதி கொன்று விடும்படி உத்தரவிட்டான். அந்த வீரர்களும், தாங்கள் எதிரியின் வாளால் மடியவிருப்பது உறுதி என உணர்ந்து, எஞ்சிய சில வினாடிகளையும் இறைவனது சிந்தனையில் கழிக்க இஸ்லாமிய தாரக மந்திரத்தை (லா இலாஹ இல்லல்லாஹீ) முணு முணுத்தனர். இறைவன் ஒருவன் என்ற அந்த ஏகத்துவ முழக்கம், தளபதியின் உள்ளத்தில் அச்சத்தை ஊட்டியது. இஸ்லாமியன் ஒருவன் பிறிதொரு இஸ்லாமியனை எதிரியாகக் கருதாமல் உடன்பிறந்த சகோதரனாகக் கருதவேண்டும் என்ற சமய உணர்வு மேலிட அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்து ஆணையிட்டான். இதனை நேரில் கண்ட வரலாற்று ஆசிரியர் “அமிர்குஸ்ரு” வீர பாண்டியனுக்காகப் போரிட்ட தமிழக இஸ்லாமியர் தோற்றத்தில் வேறு பட்டவர்களாக இருந்தாலும், இஸ்லாத்தினின்றும் மாறுபட்டவர்களாக இல்லாததாலும் இஸ்லாமிய தாரக மந்திரத்தை முழக்கியதாலும் உயிர்பிழைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.[124]

பதினாறாவது நூற்றாண்டின் துவக்கத்தில் கிழக்கு கடற்கரையில் போர்த்துகேசியரின் செல்வாக்கும் பிடிப்பும் வலுத்திருந்தது. காரணம் அப்பொழுது மதுரையை மையமாகக் கொண்டிருந்த விஜயநகர நாயக்கர் பிரதிநிதிகள் கடல் கரைப் பகுதிகளில் கவனம் செலுத்தவில்லை. கப்பற்படை அவர்களிடம் இல்லாததும் அதற்கு முக்கியமானதொரு காரணமாகும். கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் தங்கள் சமயப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போர்த்துகேசியர், வேதாளையில் ஒரு மண் கோட்டையொன்றைக் கட்டி அங்கு ஒரு படையணியை நிலை கொள்ளுமாறு செய்தனர். அத்துடன் அதற்கு அண்மையில் இராமேஸ்வரம் சாலையில் ஒரு அகழியையும் தோண்டி, இராமேசுவரம் செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவுடன் அவர்களிடம் சங்கம் வசூலித்து வந்தனர். அதனால் பயணிகளுக்கு தொந்தரவு மற்றும் இராமேசுவரத்தில் உள்ள குருக்களது வருமானமும் பாதிக்கப்பட்டது.

இதனை நிவர்த்தி செய்ய வந்த நாயக்கர் படையுடன், அங்குள்ள இஸ்லாமியரும் பெரும் அளவில் சேர்ந்து கொண்டு போர்த்துக்கேசியருக்கு எதிராகப் போரிட்டதும், அவர்களை அழித்து வேதாளையை விட்டு அவர்கள் கடல் மார்க்கமாக ஒடுமாறு செய்தனர். இராமேஸ்வரம் யாத்திரை செல்லும் பயணிகள் சிரமம் நீங்கியது. இது நிகழ்ந்தது. கி.பி. 1549ல்.

தமிழகம் போந்த இசுலாமிய மனிதப் புனிதர்களில் முக்கியமானவர் நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகையார். பதினைந்தாம் நூற்றாண்டில், தமிழகத்தில் அன்பையும், சகோதர உணர்வையும் மக்களிடையே தளிர்க்கச் செய்தவர்கள் அவர்கள். செயற்கரிய செய்வர் பெரியர் என்ற வள்ளுவத்துக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து சமுதாயத்தின் சகல துறைகளிலும் ஏக தெய்வ நம்பிக்கையும், சகிப்புத்தன்மையும், கமழச் செய்த சான்றோர். அவரது இளவலான பாபா பக்ருத்தீனும் மறை வழி நின்று மனித நேயம் காத்து வந்தார். ஒரு சமயம் சேது நாட்டிற்கும் சோழநாட்டிற்கும் இடைப்பட்ட கானாட்டில் அவர் தங்கி இருந்த பொழுது, அந்த வழியில் தஞ்சையில் இருந்து இராமேசுவரம் தலயாத்திரை சென்ற அந்தணப் பெண் மணிகள் எழுவரை ஆறலைக் கள்வர்கள் வழிமறித்தனர். நிராதரவாக நின்று தவித்த அவர்களது நிலை கண்டு நெஞ்சுருகிய இறைநேசர் அவர்கள், தமது அறிவுரையினால், கள்ளர்களைத் திருத்தி அந்தணப் பெண்களைக் காக்க முற்பட்ட பொழுது, கள்வர்களால் கொலையுண்டு மடிந்தார். தாய்க்குலத்திற்கு ஏற்றம் காண முனைந்து தியாகியான அவரது நினைவு என்றென்றும் போற்றிப் பரவத்தக்க தொன்று. மதத்தை எதிர்த்து அறத்தைக் காக்க முற்பட்ட அவரது நினைவை, “காட்டுபாவா சாகிபு அம்மானை” “காட்டுபாவா சாகிபு காரணீகம்” என்ற சிற்றிலக்கியங்கள் காலமெல்லாம் போற்றிப் பரவி நிற்கின்றன. புதுக்கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள அந்தப் புனிதரது அடக்கவிடத்தில் (காட்டுபாவா சாகிபு பள்ளிவாசல்) நடைபெறும் கந்துாரி விழாவில் கள்வர் இனத்தவர் மிகுந்த மன நெகிழ்வுடன் இன்றும் ஈடுபடுதல் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்ச்சியைப் போன்ற இன்னொரு அவல நிகழ்ச்சி தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.பி. 1614ம் ஆண்டு பட்டயம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது.[125] இந்தப் பட்டயத்தின்படி பிராமணப் பெண் ஒருத்தி வல்லத்தில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் பொழுது காட்டுப்பாதையில் கள்ளர்கள் அவளை வழிமறித்தனர். அந்தச் சமயம் அந்தப்பாதையில் வந்த இசுலாமிய துறவியிடம் (பக்கீரிடம்) அடைக்கலம் கோரினாள் துறவியும் அந்த பிராமணப் பெண்ணுக்காக கள்ளரிடம் பரிந்து பேசி அவளுக்கு ஊறு இழைக்க வேண்டாமென்று கெஞ்சினாள். ஆனால் அவர்கள், பக்கிர் சாயபுவை குத்திபோட்டார்கள் அவள் நாக்கை பிடிங்கிக் கொண்டு செத்துப்போனாள். இந்தப் பெண்ணுக்காக இசுலாமியத்துறவியும், இசுலாமியத் துறவியின் நிமித்தம் இந்துப் பெண்ணும் தங்களது இன்னுயிரைப் பறி கொடுத்த பாங்கினை அந்தப் பட்டயம் சொல்லுகிறது.

தென்னகத்தை கைப்பற்ற அனுப்பப்பட்ட தில்லி பேரரசர் அவுரங்கஜேப்பின் படைக்கு செஞ்சிக்கோட்டையில் பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது. எத்தனையோ குறுநில மன்னர்களையும் அவர்களது கோட்டைகளையும் எளிதில் முகலாயப் பேரரசில் இணைத்த தில்லி தளபதிகளுக்கு செஞ்சி ஒரு பெரிய வினாக் குறியாக இருந்தது. வீரத்தையும் விவேகத்தையும் ஆதாரமாகக் கொண்டு முகலாயப் படைகளை எதிர்த்தவர்கள் கூட முகலாயப் படை பலத்தின் முன்னே இலவம் பஞ்சைப் போல பறந்தோடி மறைந்தனர். அல்லது இனத் துரோகிகளின் வஞ்சனையால் எளிதில், காட்டிக் கொடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டனர். ஆனால், செஞ்சிக் கோட்டை கி.பி. 1714 இல் தில்லி ஏகாதி பத்தியத்தை எதிர்த்து நின்றது. தேசிங் (தேஜ் சிங்) மன்னனது சுதந்திர ஆர்வம் இறுதிவரை குறையவில்லை. ஆனால் கோட்டைக்குள் இருப்பில் இருந்த எல்லாப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை. முடிவு முற்றுகையைத் தகர்க்க இறுதிப்போர் தொடுப்பதைத் தவிர வேறுவழி இல்லை என்ற நிலை. எதிரிக்கு அடிபணிந்து வாழ்வதைவிட மாற்றானை எதிர்த்து மோதி மடிந்து விடுவது புனிதமானது என தேசிங்கு மன்னன் முடிவு செய்தான். தனது முடிவை தனது உயிர்த் தோழன் மஹமத்கானுக்குச் சொல்லி அனுப்பினான்.

அப்பொழுது மஹமத் கான் வழுதாவூரில் மனமேடையில் இருந்தான். மங்கல வாத்தியங்கள் முழங்கிய இனிய ஓசையை மறைத்து, போர் முரசின் படபடப்பு கோட்டை மதில்களில் இருந்த போர் முரசுகள் அதிர்ந்தன. தனது வாழ்க்கைத் துணைவியின் கரம் பற்றும் மங்கல விழாக் கற்பனைகளில் ஆழ்ந்து இருந்த அவனது சிந்தனையை அந்தப் போர்ப்பரணி கலைத்தது. அவ்வளவுதான் மகமத்கான் வீறு கொண்டு எழுந்தான். வாளையும் வேலையும் அவனது கரங்கள் விரைந்து ஏந்தின. அவனது, மனக்கோலம் இமைப்பொழுதில் போர்க்கோலமாக மாறியது. ஆட்டுக்கிடையிலே புகுந்த அரிமா போல போர்க் களத்தில் புகுந்தான். தனது உயிர்த் தோழனான தேசிங்கிற்கு உறுதுணையாக நின்று போராடினான். தனது நண்பனைச் சூழ்ந்த முகலாயப் பெரும்படையைச் சின்னா பின்னமாக்கினான். என்றாலும், புற்றிசல் போல புறப்பட்டு வந்த எதிரிகளின் ராட்சத தாக்குதலின் முன்னால், ஆற்றலும் பேரார்வமும் மிக்க அந்த இளைஞனது போராட்டம் எடுபடவில்லை. பாரதப் போரில் வீழ்ந்த பிதாமகர் பீஷ்மரைப்போல, செஞ்சிப்போரிலே மகபத்கான் மடிந்து தியாகியானான்.[126] நாட்டுப்பற்றுடனும் நட்புணர்வுடனும் போராடி மடிந்த தேசிங்கு ராஜாவின் நல்ல துணைவனாக மகமத்கானது மகத்தான தியாகத்தை மக்கள் மறுக்கவில்லை. தேசிங்கு ராஜன் கதைபாடும் நாடோடிப் பாடகர்கள் இன்னும் உடுக்கை இழந்தவனை போல, இடுக்கண் களைந்த அவனது வீரவடிவை, அரிய நட்புணர்வை புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்மண்ணில், மலர்ந்து, மனம் பரப்பி காலவெளியிலே மறைந்துவிட்ட இந்த இனிய மலர்கள், காலமெல்லாம் மக்கள் மனத்தில்,வரலாற்றில், மனம்பரப்பும் வாடாமலர்களாக விளங்கி வருகின்றன. நமது தாயகத்தின் சமய ஒற்றுமையையும் மனிதாபிமான உணர்வுகளையும் உந்து சக்தியாகக் கொண்டு ஆன்ம நேய ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க எழுந்த இளம் உள்ளங்கள் அல்லவா அவர்கள்!.


21

சமயமும், விழாக்களும்


தமிழ்ச்சமுதாயத்தை இணைத்தும் பிணைத்தும் பற்றி பிடித்துக் கொண்டுள்ள இஸ்லாம், ஏகத்துவ நெறியை அடிப்படையாகக் கொண்டது. உருவமற்ற ஒரே பரம்பொருளை உள்ளத்தில் இருத்தி வைத்து வழிபடுவது என்பது ஒவ்வொரு இஸ்லாமியரது தவிர்க்க முடியாத ஐந்து கடமைகளில் ஒன்றாகும். தலைமுறை தலைமுறையாக, தமிழகத்தை தாயகமாப் பெற்ற இஸ்லாமியர் தங்கள் சமயத்தின் ஐந்து ஆதார நெறியினைப் பற்றி, பேணி வருகின்றனர். ஆனால் அவர்கள் வாழ்ந்து வருகிற தமிழ் மண்ணில் பல தெய்வ வழிபாடு பல நூற்றாண்டுகளாக பெரும் பாலான மக்களது சமய உணர்வாக நிலைத்து வந்துள்ளது. அதனைப் பிரதிபலிக்கும் பல விழாக்களும் ஆண்டு தவறாமல், பல ஊர்களில், பலவிதமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருத்தணியில் திருப்படிவிழா, காஞ்சியில் கருடவிழா, திருவண்ணாமலையில் கார்த்திகைதீபம், கும்பகோணத்தில் குட முழுக்கு, பழனியில் தைப்பூசம், மதுரையில் சித்திரைப் பெருவிழா, இராமநாதபுரத்தில் நவராத்திரி, இராமேசுவரத்தில் மகா சிவராத்திரி, இவை போன்ற ஏராளமான பெரும் விழாக்களையும் சிறு விழாக்களையும், பார்த்து கிளர்ச்சி பெறும் பொழுது தமிழக இஸ்லாமியர்களது உள்ளத்தில் இறை நம்பிக்கை, வழிபாடு ஆகிய நிலைகளில் மாறுபாடோ குறைபாடோ ஏற்படுவது இல்லை. என்றாலும் இந்த விழாக்களின் சில அம்சங்கள் இஸ்லாமியரது விழாக்களிலும் புகுந்து இருப்பது வெளிப்படையான தொன்றாகும்.

குறிப்பாக, நபிகள்நாயகம் அவர்களது பெண் வழிப் பேரர்களான ஹுஸைன் அவர்களும் அவரது சுற்றத்தினரும் ஒரு சேர, 10.10.668ல் அழிக்கப்பட்ட “கர்பலா”[127] படுகொலையை நினைவூட்டும் முஹர்ரம் மாத நினைவு நாட்கள் பல ஊர்களில் பெருவிழாவாக கொண்டாடப்பட்டன. அண்மைக்காலம் வரை இந்த விழாவில் முதல் பத்து நாட்களின் இறுதி நாளன்று திமிதித்தல், நிகழ்ச்சிக்கு பிறகு, அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவற்றின் மீது மறைந்த நபி பேரர்களது நினைவுச் சின்னங்களுடனும் அலங்கார ரதத்துடன் (தாஜியா) ஊர்வலமாகக் செல்லும். இந்த ஊர்வலத்தில் இஸ்லாமியர் தங்கள் உடல் வலிமையையும் திறமையையும் எடுத்துக்காட்டும் வகையில் பல களரிகளில் ஈடுபடுவார்கள். வாள் சண்டை, மற்போர், சிலம்பம், தீப்பந்த விளையாட்டுகளுடன் மாறுவேடம் புனைந்து மகிழ்ச்சி ஊட்டுதலும் உண்டு. ஊரின் கோடியில் உள்ள குளத்தில் அந்த நினைவுச் சின்னங்களை நீரில் நனைத்து நீத்தார் விழாவை முடித்து திரும்புவது வழக்கம்.

மிக்க மனத்துயரத்துடன் அனுஷ்டிக்க வேண்டிய இந்த நினைவு நாளை, ஆரவாரத்துடன் கலகலப்பாக கொண்டாடுவதற்கு காரணம் தமிழக கோயில் விழாக்களின் பின்னணி தான் எனக் குறிப்பிட வேண்டியதில்லை. இங்ஙனம் முகரம் விழா கடந்த சில நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இன்றும், இராமநாதபுரம், இராமேஸ்வரம், காரைக்குடி, புதுக் கோட்டை ஆகிய ஊர்களில் "மகர் நோம்பு (முகர்ரம் நோன்பு) பொட்டல்" இருந்து வருவது இந்த விழாவிற்கான ஒதுக்கிடமாக அமைந்திருந்ததை நினைவூட்டுகிறது. இந்த முகர்ரம் நோன்பு பல நூற்றாண்டுகளாக தமிழில் மானோம்பு என வழங்கி வருகிறது. அதனையொட்டியே "மானோம்புச் சாவடி" (தஞ்சாவூர்) "மானோம்புக் கிடாய்வரி" (இராமநாதபுரம்) ஆகிய புதிய சொற்கள் தமிழ் வழக்கில் வந்துள்ளன.[128] விழிப்புணர்வு காரணமாக, இந்த விழா பெரும்பாலான இஸ்லாமிய மக்களால் அண்மைக் காலங்களில் புறக்கணிக்கப்பட்டு விட்டன. சில ஊர்களில் மட்டும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவைப் போன்று, சில கந்தூரி விழாக்களும் தமிழகத்து இந்து சகோதரர்களின் திருவிழாக்களின் சாயலில் நடைபெற்று வருகின்றன நாகூரில் சாகுல்ஹமீது ஆண்டகை அவர்கள் கந்தூரி, ஏறுபதியில் சுல்தான் சையது இபுராகீம் ஷஹீது (வலி) அவர்கள் கந்தூரி, மதுரையில் முகையதீன் ஆண்டவர்கள் கந்தூரி ஆகியவைகள் பெரிய கப்பல், தேர் போன்ற அலங்காரங்கள் (தாஜியா) ஆரவாரத்துடனும் வான வேடிக்கைகளுடனும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. பாமர மக்களின் ஈடுபாட்டைக் குறிக்கும் இந்த விழாக்கள், இஸ்லாமிய சமய உணர்வுகளையே அல்லது நெறிமுறைகளையோ, சுட்டிக் காட்டுவதில்லை. என்றாலும், இந்த விழாக்களில் இந்து சகோதரர்களும் ஆர்வத்துடனும், ஆழ்ந்த பற்றுடனும் பங்கு கொண்டு விழாக்களில் புனிதத்தை பெரிதுபடுத்துவது குறிப்பிடத்தக்கது. சென்னைப் பெருநகரில் உள்ள இந்துக்களில் ஒருபிரிவினர் இஸ்லா மியரது முகரம் நாட்களை “அல்லா பண்டிகை” என ஆரவாரத்துடன் கொண்டாடி வருவதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

இதனை விட இன்னும் விசேடமான செய்தி என்னவென்றால் தமிழகத்து திருக்கோயில் விழாக்களில் இஸ்லாமியர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அமைத்து அனுஸ்டித்து வருவதாகும். உதாரணமாக, மதுரையில் ஆண்டுதோறும் நடை பெறும் சித்திரைப் பெருவிழாவை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. இந்த விழாவில் பிரதான நிகழ்ச்சி. அழகர்மலைக் கோவிலில் இருந்து அழகர் பெருமாள், குதிரை வாகனத்தில் மதுரை மாநகருக்கு ஆரோகணித்து வருவதாகும். தனது தங்கையான மதுரை இறைவி மீனாட்சியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக. ஆனால், மதுரையின் வட பகுதியை-வையை ஆற்றங்கரையை-அவர் அடைந்தவுடன், ஏற்கனவே, அவர் தங்கையின் திருமணம் நிறைவேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஏமாற்றத்தினால் அவர் மதுரை நகருக்குள் நுழையாமல் மதுரைக்கு கிழக்கே வையைக்கரையில் உள்ள வண்டியூருக்கு சென்றுவிடுகிறார். அங்கு தமது அன்புக் கிழத்தியான “துலுக்கச்சி நாச்சியார்” இல்லத்தில் தங்கிவிட்டு அடுத்த நாள், மீண்டும் அழகர்மலை திரும்புவதான நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெளர்ணமியில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை சற்று ஆழமாகச் சிந்தித்தால் சில உண்மைகள் தெளிவாகும். மதுரை மீனாட்சியின் திருமணம் என்பது ஹலாஸ்ய புராணத்தில் விவரிக்கப்படும் நிகழ்ச்சியாகும். புராண நிகழ்ச்சிகளுக்கு வரலாற்று வரம்பு எதுவும் இடையாது. கி.பி 1623 க்கு முன்னர் அழகர் மலைக்கோவிலில் இருந்து அழகர் பெருமாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் புறப்பட்டு தேனூர் சென்று வரும் தீர்த்தவாரி வழக்கம் இருந்தது. இந்த நிகழ்ச்சியை மதுரைச் சித்திரைத் திருவிழாவாக மாற்றியமைத்தவர் மன்னர் திருமலை நாயக்கர் ஆவார். மதுரை வட்டாரத்தில் பெரும்பாலான மக்கள் ஆடிமாதத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் விழாவிற்கான மாதமாக வசந்தகால சித்திரையையும், விழா நடக்கும் ஊரான தேனூருக்குப் பதில் தமது கோநகரான மதுரையையும் அவர் தேர்வு செய்து மாற்றியமைத்தார். இத்தகைய அண்மைக்கால நிகழ்ச்சியில், "துலுக்கச்சி நாச்சியார்" என்ற பாத்திரத்தை புராணக் கடவுளான அழகர் பெருமாளுடன் இணைத்து இருப்பது தமிழகத்து சமுதாய நிலையில் சமூக ஒற்றுமையைப் பேன வேண்டும் என்ற முன்னவர்களது உயரிய நோக்கம் போலும்! இதனைப் போன்ற இன்னொரு நிகழ்ச்சி, திருவரங்கம் திருக்கோயில் சம்பந்தப்பட்ட தொன்றதாகும். அத்துடன் சித்திரைத் திருவிழாச் சம்பந்தப்பட்ட துலுக்கச்சி நாச்சியார் கதைக்கு உரிய கருவும்கூட. இந்தக் கோவிலின் மூலவர் ரங்கமன்னாரது (அழகிய மனவாளர்) பொன்னாலான திருமேனி கி. பி. 1311 ல் நிகழ்ந்த மாலிக்கபூர் படையெடுப்பின் பொழுது ஏனைய அணி மணிகளுடன் கொள்ளைப் பொருளாக தில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அந்தக் கோயிலின் ஒழுகுச் செய்தி அறிவிக்கிறது.[129] ரங்க மன்னாரது திருமேனியை நாள்தோறும் தரிசித்து மகிழ்ந்த சேவிகை ஒருத்தி திருவரங்கம் அண்மையில் உத்தமர் கோயிலில் வாழ்ந்து வந்தாள். ரங்க மன்னார் திருமேனி எடுத்துச் செல்லப்பட்டதை அறிந்து, அதனை மீட்டுவதற்காக தக்க துணையாக அறுபது பேர்களை திரட்டி தில்லி சென்றாள். அங்கே தில்லி பாதுஷாவை தமது ஆடல் பாடல்களாலும், "ஐக்கினி" என்ற களியாட்டத்தினாலும் அகமகிழச் செய்து தங்க மன்னார் திருமேனியை பரிசுப் பொருளாக பெற்றுத் திரும்பினாள்.[130] இந்த சேவிகை “பின் சென்ற வல்லி” என வழங்கப்படுகிறார். இந்த வரலாற்றின் இன்னொரு பகுதி சுவை மிகுந்ததாக இருக்கிறது.

ரங்க மன்னாரது திருமேனி தில்லியில் இருந்த பொழுது அதனைத் தனது விளைாட்டுப் பொருளாகக் கொண்டிருந்த பாதுஷாவின் மகள் நாளடைவில் அந்த திருமேனியின் அழகில் மயங்கி மானசீகக் காதல் வயப்பட்டு இருந்தாள். தனக்கு தெரியாமல், தனது தந்தையார் அந்த திருவுருவச் சிலையை ஜக்கினி ஆட்டக் குழுவினருக்கு பரிசுப் பொருளாக வழங்கி விட்டதை அறிந்து ஆறாத் துயரடைந்தாள். அதே அவல நிலையில் அவளது உயிர் பிரிந்து விடுமோ என அச்சமுற்ற டில்லி பாதுஷா அதனை மீண்டும் தேடிப் பெறுவதற்கு தில்லியிலிருந்து தெற்கே ஒரு படையணியை இளவரசியின் பொறுப்பில் அனுப்பி வைத்தார். தங்களை இளவரசி தொடர்ந்து வருவதை அறிந்த பின் சென்று வல்லியினது சகாக்கள் ரங்கமன்னாரை திருவரங்கத்திற்கு கொண்டு செல்லாமல் வழியில் திருப்பதி மலையில் மறைத்து வைத்துவிட்டனர். ஆனால் நேரடியாக திருவரங்கம் சென்ற தனது முயற்சியில் தோல்வியுற்ற இளவரசி, திருவரங்கத்தில் காத்து இருந்து மரணமடைந்ததாக அந்தக் கோயில் ஒழுகு கூறுகிறது.[131] இந்த புதிய "ராதையின்" திருவுருவை திருவரங்ககோயிலில் கருவறைக்கு வெளியே உள்ள மைய மண்டபத்தின் வடகிழக்குப்பகுதியில் ஒவியமாக அமைத்து நாள் தோறும் உரிய வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த "தில்லி நாச்சியாருக்கு" கோதுமை ரொட்டியும், இனிப்பு சுண்டலும் பருப்பு பாயாசமும், சிறப்பாக படைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வழிபாடு திருப்பதி திருக்கோயிலிலும் நடைபெற்று வருகிறது. இவள் “சாந்து நாச்சியார்” “பீவி நாச்சியார்” “துலுக்க நாச்சியார்” என வைணவர்களால் பேதமில்லாமல் பெருமிதத்துடன் வழங்கப்பட்டு வருகிறார். ரங்க மன்னார் திருமேனி திருவரங்கத்தைவிட்டு அந்நியர் படையெடுப்பின் பொழுது மூன்று முறை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதிலும், அதனை மீண்டும் கோவிலில் பிரதிஷ்டை செய்ததிலும் முரண்பாடுகளான செய்திகள் இருந்தாலும் இந்த “துலுக்க நாச்சியார்” பற்றிய செய்திகளில் வேறுபாடு எதுவும் இல்லை, என்பதை திருவரங்ககோயில் ஒழுகு உறுதிபடுத்துகிறது.[132]

இத்தகைய புராணமும் வரலாறும் கலந்த இன்னொரு நிகழ்ச்சி புதுக்கோட்டை மானுவலில் இடம் பெற்றுள்ளது.[133] புதுக்கோட்டைக்கு அண்மையில் கோவில் பட்டி என்று ஒரு கிராமம் உள்ளது. இதனை யொட்டிய திருவாப்பூரில் உள்ள கன்னி ஒருத்திக்கும் திருச்சிராப்பள்ளியில் இருந்த மலுக்கனுக்கும் (இஸ்லாமிய இளைஞன்)க்கும் இடையில் மாறாத காதல் மலர்ந்தது அந்த இளைஞன் ஒவ்வொரு நாள் இரவிலும் திருச்சியிலிருந்து குதிரைச்சவாரி செய்து வந்து தனது காதலியைச் சந்தித்துச் செல்வது வழக்கம். இந்த இளம் உள்ளங்களது காதல் அங்கு காவல் தெய்வமாக விளங்கிய "மலைக்கறுப்பருக்குப்" பிடிக்க வில்லையாம். தமது எல்லையில் களவொழுக்கத்தில் திளைத்து வந்த மலுக்கனை ஒருநாள் இரவு மலைக்கறுப்பர் கொன்றுவிட்டார். மீளாத் துயரில் ஆழ்ந்த அந்தக் கன்னி தனது இதயக்கோவிலின் தெய்வமாக விளங்கிய அந்த இசுலாமிய இளைஞனுக்கு அவன் கொலையுண்ட இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைத்தாள். அது நாளடைவில் கோவிலாக மாறி இன்று மலுக்கன் கோவில் என வழங்கப்படுகிறது.

மதுரை மாநகரில் நடைபெறும் இன்னொரு திருவிழா, சொக்கநாதக் கடவுள் திருவாதவூரடிகளுக்காக நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல். ஆண்டுதோறும் ஆவணித் திங்கள் மூல நட்சத்திர நாளன்று, இந்தத் திருவிழா மதுரை மீனாட்சி சுந்தரர் கோயிலில் நடைபெறுகிறது. மாணிக்க வாசகருக்காக கிழக்கு கடற்கரையில் இருந்து குதிரைகள் கொண்டு வந்த அரபு வணிகருக்குப் பதிலாக இசுலாமியர் ஒருவரைக் குதிரை கொண்டு வரச் செய்து விழா நடத்தும் பழக்கம் அண்மைக்காலம் வரை அந்தக் கோயிலில் இருந்து வந்தது. அதைப்போல இராமநாத புரம் அரண்மனையில் உள்ள சேதுபதி மன்னர்களது குடும்பக் கோயிலான ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் நடைபெறும் நவராத்திரி பூசையின்பொழுது, பிரசாதத்தை முதன்முதலில் பெறக் கூடிய தகுதி கன்னிராசபுரம் நாட்டாண்மை அப்துல்கனி சேர் வைக்கு இருந்து வந்தது. சேதுபதி மன்னருக்கு எதிரான போர் ஒன்றில் அப்துல் கனி சேர்வைக்காரர் ஆற்றிய அருந்தொண்டினைக் சிறப்பிக்கும் வகையில் அத்தகைய தனிச் சிறப்பினை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மன்னர் வழங்கி இருந்தார்.[134] இப்பொழுது சேதுபதி மன்னரும் இல்லை. இந்த மரபும் கைவிடப்பட்டுவிட்டது.

இன்னொரு செய்தி இராமநாதபுரம் சீமையில் உள்ள குணங்குடி சையது முகம்மது புகாரி(வலி) அவர்களது தர்காவின் பராமரித்து வரும் உரிமை, அந்த ஊருக்கு அண்மையில் உள்ள துடுப்பூர் அம்பலக்காரர் என்ற இந்துக் குடும்பத்தினருக்கு இருந்து வருவது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அறங்காவலர் முறையாகும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கும் இதர சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழி வழியாக வந்துள்ள பிணைப்பிற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேறு என்ன வேண்டும். இந்தப்புனித அடக்கவிடத்தின் பராமரிப்பிற்கு உடலாக என்றென்றும் உதவுவதற்கு இராமநாதபுரம் மன்னர்கள் திருமலை ரகுநாத சேதுபதியும், ரகுநாத கிழவன் சேதுபதியும் பல நிலமான்யங்களை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.)


22

கட்டுமானங்கள்


தமிழக இஸ்லாமியர்களான சோனகர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் வாணிபச் செருக்கினாலும், அரசியல் ஊக்குவிப்பு களாலும், வேறு எந்த நாட்டாரும் தமிழகத்தில் எய்தாத, எய்தி இயலாத இலக்கிற்கு வளர்ந்து உயர்ந்து நின்றதை வரலாற்றில் பார்க்கிறோம். இந்த வளர்ச்சியின் சாயல் அவர்கள் வாழ்ந்த தமிழகத்தின் நிலையான வாழ்க்கையின் பல கோணங்களிலும் பிரதிபலித்து நின்றதை அந்தக் கால கட்டத்தின் கட்டுமானம். மருத்துவம், கைவினைக் கலைகள், இலக்கியம் ஆகியவற்றில் காண முடிகிறது. அவர்களது மாளிகைகள் மேனிலை மாடங் களுடன் கூடிய உன்னதமாக உயர்ந்து காணப்படவில்லை. வானது நானும் படியாக அவர்களது கொடைத்திறன் தான் உயர்ந்து விளங்கியது. ஆனால் அவர்கள் வலசையாக வாழ்ந்த மனைகளில் தூய்மையும் எளிமையும் இணைந்து துவங்கின. “சோனக மனையிற்றுாய ... ...” என்பது கம்பன் வாக்கு.[135] என்றாலும், எல்லாம் வல்ல இறைவனை வழிபடுவதற்கான தொழுகைப் பள்ளிகளையும் இறைநேசர்களது அடக்க விடங்களையும் அவர்கள் சிறப்பாக அமைத்து மகிழத்தவறவில்லை. புதிய சமயத்தில் அவர்களுக்கு உள்ள அளவு மீறிய ஆர்வத்தையும் அவைகள் பிரதிபலித்தன.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இந்த அமைப்புகள், அதுவரை கட்டுமானக் கலையில் புகுத்தப்படாத புதிய உத்திகளையும், நிலைகளையும் சுட்டிக்காட்டின. நாளடைவில், அவைகளில், மத்திய ஆசிய இஸ்லாமியரது கலைத் திறனும், கீழை நாட்டு திராவிட கலைப் பண்பாடுகளும் இணைந்து நிலை கொண்டன. சோழர்களால் துவக்கப்பட்ட குடவரை, செங்கப் படை, சிறு கற்றளி, குடவரை அமைப்புக்கள், பிற்கால பல்லவர், பாண்டியர், நாயக்கர், பாணியில் எழுநிலை மாடங்களுடன் கூடிய விண்ணகரங்களாக உயர்ந்தன. ஆனால், இந்தச் சோனகர்களது பாணியிலான கட்டுமானங்கள் அளவில் சிறியவையாகவும் அழகில் சிறந்தனவாகவும் அமைந்தன. குறிப்பாக இந்த கட்டுமானங்களின் “வளைவுகள்”. "உள்ளொடுங்கிய விதானங்கள்" உப்பரிகை மாடங்கள் போன்ற உத்திகள் புதுமையானவையாக தோற்றுவிக்கப்பட்டன. தமிழக கட்டுமானங்களில் அதுவரை அவை இடம் பெற்று இருக்கவில்லை.

பொதுவாக தமிழக கட்டுமானங்களில் - வாயில், முகப்பு, சாளரம் போன்ற அமைப்புகள் நேராக நிறுத்தப்பட்ட இரண்டு சட்டங்கள் நிலைகளுக்கிடையில் பிறிதொரு சட்டத்தை குறுக்கில் இணைத்து பொருத்தப்பட்டன. இவை தலைகீழாக எழுதப்பட்டுள்ள “ப” எழுத்துப் போன்று (Π) காட்சியளித்தன. இத்தகைய, இணைச்சட்டம் இல்லாமல் அமைக்கப்படும் கட்டிடங்களை கும்பாஸ் அல்லது கும்பா என்று அழைப்பது உண்டு. இந்த முறையில் நிர்மாணிக்கப்பெறும் கட்டிடங்களது உட்பகுதி காற்று அழுத்தம், காற்றுக்குறைவு அல்லது புழுக்கம் ஆகியவைகள் குறைந்ததாக இருந்தது. மேலும், இத்தகைய கட்டிடங்களின் பக்கவாட்டுச் சுவர்களுக்கு பாரமான கற்பாளங்களைத் தாரிசாகத் தாங்க வேண்டிய நிர்பந்தமும் குறைவு. இந்த கட்டுமானங்களில் பிறிதொரு முறையும் கையாளப்பட்டது. அவைகளில் வளைவு அல்லது குதிரை லாட வளைவு எனப்படுவதாகும்.

துவக்கத்தில் இந்த வளைவான அமைப்புகள் தமாஸ்கஸ் நகரப் பள்ளிவாயிலில், கி.பி. 705ல் அல்வாலித் என்ற இஸ்லாமிய சிற்பியால் ஏற்படுத்தப்பட்டன.[136] பிறகு இஸ்லாமியர் ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டை வெற்றி கொண்டு ஆட்சி செய்த பொழுது, அங்கு இந்த முறை பரந்த அளவில் கடைப் பிடிக்கப்பட்டது. காலத்தையும் வென்று காட்சியளித்துக் கொண்டிருக்கும் அந்தக் கலைப்பேழைகளான கட்டிடங்களை இன்றும் ஸ்பெயின் நாட்டின் நகரங்களான கிரானடா, செரவில், கார்டபோ ஆகிய நகரங்களில் கண்ணாரக் காணலாம். ஐரோப்பிய பிரபுக்கள் மாளிகைகளிலும் தேவாலயங்களிலும் இந்தப் புதிய முறை “மூரிஸ் பாணி” என்ற பகுப்புடன் பின்பற்றப்பட்டது. அங்கிருந்து உலகின் பல நாடுகளிலும் இந்த புதிய முறை, கட்டுமானங்களில் பின்பற்றப்பட்டது. ஸிரிய - எகிப்திய, இந்திய - பெர்ஸிய, இந்திய-சீன பாணிகள் எனக் குறிக்கப்பட்டவைகளில் இவை ஊடுருவி நிற்கின்றன. ஏற்கனவே அந்தந்தப் பிராந்தியங்கள், நாடுகளின் நடைமுறையில் உள்ள கட்டுமான முறையில், இஸ்லாமியரது இந்தப் புதிய உத்திகளும் கலந்து பொலிவதுதான் மேலே சொன்ன பாணி அல்லது பகுப்பு என்பதாகும். நமது நாட்டுக் கட்டுமானங்களை பொறுத்த வரையில், ஆசிரியர் ஜான் மார்ஷல், “இந்த இரு வகையான பாணிகளுக்கும் பொதுவான இணைப்பை ஏற்படுத்துகின்ற ஆதாரமான தன்மை, இஸ்லாமிய இந்து கலை அழகை உள்ளடக்கியவை என்ற உண்மைதான். ஒன்றைப்போன்று மற்றொன்றிலும் அலங்காரம் முதன்மையானது. இருமுறைகளும் தங்களது மாட்சிக்கு அதனையே சார்ந்துள்ளன.”எனக் குறிப்பிட்டிருப்பது இங்கு சிந்திக்கத்தக்கதாக உள்ளது. வானளாவிய கோபுரம் போன்ற கட்டுமானங்களில் “மினாரத்” என்ற புதிய அமைப்பும் இஸ்லாமிய கட்டுமான முறையாகும். இந்த மினாராக்கள் தரைமட்டம் முதல் சிகரம் வரை ஒரே சீராகவோ அல்லது கீழிருந்து மேலே செல்லச் செல்ல குறுகலாகவோ அமைப்பதும் உண்டு. அதற்கான உள் கூட்டு பாதையும் மினாராவிற்குள்ளாக அமைக்கப்பெறும். இந்த வகை ஸ்துாபிகளை பள்ளிவாயில்களில் முதன் முறையாக கி.பி. 673இல் பயன்படுத்தியவர் கலிபா முஆவியா என்பவர். இந்தக் கட்டுமானங்களில், வண்ணமும் அழகும் பொருந்தி வழிந்து நிற்பதற்கான புதிய வகையொன்றையும் அவர் ஏற்படுத்தினார். மேலும் கட்டுமான அலங்காரங்களில் மனித, மிருக தோற்றங்களை சேர்த்தல், இசுலாமிய கோட்பாடுகளுக்கு . முரணானதென்ற காரணத்தால் அவைகளை தவிர்ப்பதற்கு வண்ணக் கண்ணாடிகளைப் பதித்து அழகுப்படுத்தும்முறை "மொஸாயிக்” என வழங்கப்பட்டது. இந்த முறை கி. பி. 684ல் அல் ஸூபைர் என்பவரால் புகுத்தப்பட்டது.[137]

மேலே கண்ட புதிய அமைப்பு முறைகளைக் கொண்ட பள்ளி வாயில்களையும் தர்காக்களையும் தமிழகத்து இஸ்லாமியர் அப்பொழுது பெரும்பான்மையினராக வாழ்ந்த பட்டினங்களில் நிர்மானித்து வந்தனர். ஆனால், அவைகளை இன்று காண்பது அரிதாக உள்ளது. எனினும், காலத்தின் சீற்றத்திற்கும், ஆட்சியாளரின் அழிமானத்திற்கும் அப்பாற்பட்டதாக, இன்றும் நிலைத்துள்ள சில தொன்மையான அமைப்புகளை இங்கு பார்ப்போம். திருச்சிராப்பள்ளியில் உள்ள பழமையான பள்ளிவாசல் ஒன்றில் இஸ்லாமியரின் வில் வளைவுகளைக் காணலாம். இந்தப் பள்ளிவாயில் கி. பி. 714ல் நிர்மணிக்கப்பட்டது.[138] திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்திற்கு அண்மையில் இன்று சிதைந்த நிலையில் இந்தப் பள்ளிவாசல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த அமணப் பள்ளியின் வடிவில், மிகவும் சிறியதாக முழுவதும் கல்லினால், அமைக்கப்பட்டுள்ளது. ஹாஜி அப்துல்லா-பின்-ஹாஜி அன்வர் என்பவரால். அப்பொழுது அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்த இஸ்லாமியரது வழிபாட்டுத் தலமாக அந்தப்பள்ளி நிர்மாணிக்கப்பட்டதாக தெரிகிறது. இஸ்லாமிய கட்டுமானக் கலையின் ஒரு சிறு பிரதிபலிப்பு இந்தப்பள்ளியின் அமைப்பு என்று இதனைக் கொள்ளலாம்.

இன்னொரு பழமையான பள்ளி, தமிழக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கீட் செம்பி நாட்டு பவித்திர மாணிக்கப் பட்டினத்துக்கீழ்பால் சோனக சாமந்தப்பள்ளி” யாகும். பிற்காலப் பாண்டியரது பேராதரவில் சிறந்து இருந்த சோனகர் ஒருவர் நிர்மாணித்த இந்தப் பள்ளிக்கு, நிவந்தமாக ஆம்புத்துார், மருதுார் முதலிய கிராமங்களை திருப்புவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் என்ற பாண்டியப் பேரரசன் கி.பி. 1276ல் வழங்கிய ஆணையொன்றில் இந்தப் பள்ளி குறிக்கப்பட்டுள்ளது.[139] கொழும்புவிலிருந்து மாலத்தீவு நோக்கி பயணமான உலகப் பயணி இபுனுபதூதாவின் கப்பல் மன்னார் வளைகுடாவில் பாறை ஒன்றில் மோதி பயணம் தடைப்பட்டதால் இராமநாதபுரம் கிழக்கு கரையில் உயிர் தப்பி கரை ஏறினார். பின்னர், மதுரை சுல்தானது உதவியுடன் தனது பயணத்தைத் துவக்குவதற்கு முன்னர் சில நாட்கள் மதுரையிலும் பின்னர் “பவித்திர மாணிக்கப்பட்டினத்திலும்” தங்கினார். கி.பி. 1344ல் இந்தப்பட்டினத்தை அவர் அரபு மொழியில் சுருக்கமாக "பத்தன்" என்று குறிப்பிட்டு இருப்பதுடன் அந்தச் சோனக சாமந்தப்பள்ளியை “முற்றிலும் கல்லாலான அழகிய பள்ளி” என தமது குறிப்புகளில் வரைந்துள்ளார்.[140] இன்றைய திருப்புல்லாணி கிராமத்திற்கு அண்மையில் உள்ள பெரியபட்டினம் என்ற ஊரில் உள்ள கல்லாலான பள்ளியைத் தான், அவர் அங்ஙனம் குறித்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஊகமாகும். இதற்கு பொருத்தமான பலதடையங்கள் அங்கே உள்ளன.[141] பதின்மூன்று பதினான்காம் நூற்றாண்டுகளில் சிறப்புற்று இருந்த இந்த கடற்துறை, கடந்த ஆறு நூற்றாண்டுகளில், காலக்கோளினால் சிதைந்து பூம்புகாரைப்போன்று சிற்றுாராக சிறுமையுற்றதினால் அங்குள்ள இந்தப் பள்ளி சிதைந்து புறத்தோற்றத்தில் மாற்றங்களுடன் தொழுகைக்கூடம் மட்டும் அப்படியே இருந்து வருகிறது. அங்கு இடம் பெற்றுள்ள பதினெட்டு கல்தூண்களை மட்டும், ஆதாரமாகக் கொண்டு அந்தப் பள்ளியின் கட்டுமான வகையை கணிப்பது இயலாத ஒன்றாகும். ஆனால் அந்த துண்களின் அமைப்பில் இருந்து அந்தப் பள்ளிவாசல் தொன்மையானது என்பது மட்டும் உறுதியாகிறது.

இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த இன்னும் இரண்டு பள்ளி வாசல்கள் பாண்டியரின் தலைநகரான மதுரையில் உள்ளன. முதலாவது மதுரையின் தென்மேற்கு மூலையில் உள்ள காஜிமார் தெருவில் உள்ள சிறிய தொழுகைப் பள்ளியாகும். பாண்டியன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக் கப்பட்ட தென்றும், இதனைப் பராமரிக்க அந்த மன்னனால் மதுரையை அடுத்துள்ள விரகனுார் புளியங்குளம் வழங்கப்பட் வழங்கப்பட்டுள்ளது. என்றும் தெரிய வருகிறது.[142] பள்ளியின் கட்டுமானம் நீண்ட சதுர வடிவில் திராவிட கட்டுமான பாணியில் அமைக்கப்பட்ட கல்துரண்களுடன் காட்சி அளிக்கிறது. ஏற்கனவே அங்கு அமைக்கப்பட்ட பள்ளி சிதைவுற்றதால், அங்கு நாயக்கர் ஆட்சியின் பொழுது இந்தக் கட்டுமானம் அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும். மற்றது மதுரைப் பெருநகரின், வைகை ஆற்றில் வட கரைக்கு அணித்ததாக உள்ள கோரிப்பாளையம் சுல்தான் அலாவுதீன் அவர்களது தர்காவாகும். கி.பி. 1050ல் மாலிக்-உல் முல்க் என்ற தளபதியுடன் சமயப் பணிக்காக மதுரை வந்த ஹஜரத் சுல்தான் அலாயுத்தீன் என்ற இறை நேசரின் அடக்க இடத்தின் மீது கட்டப்பட்டுள்ள கட்டுமானமாகும். இதனை சுல்தான் அலாவுதீன் தர்கா என மக்கள் வழங்கி வருகின்றனர். இஸ்லாமிய கட்டுமான முறையில் கீழே விரிந்து மேலே சுருங்கிய கும்பாஸ் (குப்பா) அமைப்பில் காட்சியளிக்கிறது தரைமட்டத்திலிருந்து இருபத்து இரண்டு அடி உயரத்தில் முடிவு பெறும் இந்த கும்பாஸ் அறுபத்து ஒன்பது அடிகற்றளவில் சுமார் பன்னிரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பாஸ் முழுவதும் ஒரே கல்லால் அமைக்கப்பட்டதாக குறிக்கப்பட்டுள்ளது.[143] இத்தகைய கும்பாஸ் முறை அடக்கவிடங்கள் கீழக்கரை ஜாமியா மஸ்ஜிது பள்ளியின் எதிர்புறத்திலும், ஏறுபதி சுல்தான் இப்ராகீம் ஷஹீது (வலி) அடக்கவிடத்திலும், இராமநாதபுரம் நூர் சாகிப் (வலி) அடக்கவிடத்திலும், புதுக்கோட்டைக்கு அண்மையில் காட்டுபாவா சாகிபு அடக்க விடத்திலும் உள்ளன. மற்றும் தொண்டி திறப்புக்காரர் தர்கா, புனித சேகு அபுபக்கர் சாயபு, முத்துராமலிங்கப்பட்டினம் புனித சையது முகம்மது சாயபு, பாசிப்பட்டினம் புனித நெய்னா முகம்மது சாகிபு தர்கா, கோட்டைப்பட்டினம் புனித ராவுத்தர் சாயபு. முத்துப்பட்டினம் புனித சேகு தாவுது, அதிராம் பட்டினம் புனித ஹாஜா அலாவுதீன் அடக்க இடங்களும் கும்பாஸ் முறையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் இவை பிற்காலத்தில் - சுமார் மூன்று நூற்றாண்டு கால இடைவெளியில் நிர்மாணிக்கப் பட்டவை. அடுத்து, காயல்பட்டினத்தில் உள்ள பழைய குத்பா பள்ளிவாசல் அமைப்பும் தமிழக இஸ்லாமியரது தொன்மையான அமைப்பில் ஒன்றாகும். இந்தப்பள்ளி முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. சதுர வடிவில் உள்ள இந்தப்பள்ளியில் வளைவுகளோ, கும்பாஸ் விதானங்களோ, மினரட்டுகளோ இல்லாமல் எளிமையாக அழகுடன் காட்சியளிக்கிறது. காயலில் பாண்டியன் மாறவர்மன் குலசேகரனது (கி.பி. 1274-1310) பேரவையில் பிரதான அலுவலராக விளங்கிய பெரு வணிகர் சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரால் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டதாகும், அவர், அரபு நாட்டில் இருந்து காயல்பட்டினத்தில் குடியேறியவரானாலும். அப்பொழுதைய நடைமுறையில் இருந்த "மூரிஸ்" முறையைப்பின்பற்றி இந்தப் பள்ளியை அமைக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதும் புலனாகவில்லை.

மற்றும், இராமேஸ்வரத்தில் உள்ள தொழுகைப்பள்ளி, வரலாற்றுதொன்மை வாய்ந்தது ஆகும். இதனை கி.பி. 1311 ல் தென்னக படையெடுப்பின் இறுதி நிகழ்ச்சி என குறிப்பிடத்தக்க வகையில் தில்லி பேரரசர் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் கபூர் அமைத்தார்.[144] கி. பி. 1318 ல் அங்கு மற்றொரு படையெடுப்பிற்கு தலைமை தாங்கிச் சென்று தில்லி திரும்பிய தளபதி குஸ்ருகான் அந்த பள்ளியில் மராமத்து பணிகளை மேற்கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுகிறது.[145] இந்தச் சிறு பள்ளிவாயில் முழுவதும் கல்லினால் அமைக்கப்பட்டு நீண்ட சதுர வடிவில் உள்ளது. வழிபாட்டு பேரவையை உள்ளடக்கியதாக முகப்பிலும் தெற்கிலும் வடக்கிலுமாக நீண்ட பத்திகளுடன் விளங்குகிறது. இன்ன பாணியிலான கட்டுமானம் எனக் குறிப்பிடும் வகையில் அங்கு எவ்வித நுணுக்கமான வெளிப்பாடுகள் எதுவும் இல்லை. தளபதி மாலிக்காபூரின் படையெடுப்பின் பொழுது, சுருங்கிய காலததில் அவசரப்பணியாக இந்தக் கட்டுமானத்தை அமைத்திருக்க வேண்டும் என்பதே இதற்கு தெளிவான விடை. அடுத்து, குறிப்பிடப்பட வேண்டிய பள்ளி, கீமுக்கரையில் உள்ள ஜாமியா மஸ்ஜிது என அழைக்கப்படும் தொழுகைப் பள்ளியாகும். அங்கு தொழுகைப் பள்ளிகள் பல இருந்த பொழுதிலும், வரலாற்றுச் சிறப்பும் கட்டுமானச் செறிவும் கலந்து விளங்குவது - இந்த பள்ளிவாசல் ஒன்றேதான். ஏன் தமிழகத்திலேயே இத்தகைய கலைப் பேழையாக விளங்கும் பள்ளிவாசலை வேறு எங்கும் காண முடியாது! பதினேழாம் நூற்றாண்டின் திராவிட கட்டுமான பணிக்கு கட்டியம் கூறும் இந்தக் கலைப் படைப்பை இஸ்லாமிய உலகிற்கு காணிக்கையாகத் தந்தவர் காலமெல்லாம் புகழப்படுகிற வள்ளல் சீதக்காதி என்ற ஷெய்கு அப்துல் காதர் மரைக்காயரும் அவரது இளவல் பட்டத்து அபுபக்கர் மரக்காயரும் ஆவர். நீண்ட சதுர வடிவில் நான்கு சுவர்களும், இருபத்து நான்கு தூண்களும், விதானமும் - அனைத்தும் நல்ல வெள்ளைப்பாறைக் கல்லால் வடிவமைக்கப்பட்டு விளங்குகின்றன. ஆலயங்களில் உள்ள திருச்சுற்றாலை போன்று கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த அமைப்பில், சிற்பிகளின் கைத்திறன் சிற்றுாண்கள் சாளரம், அனைத்திலும் கனிந்து ஒளிர்கின்றது. இவைகளில் இஸ்லாமிய சமய கோட்பாடுகளுக்கு இணங்க உருவங்கள் எதுவும் இல்லாமல் மலர்கள், கொடிகளுடன் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

வரலாற்றுத் தொடர்புடைய இன்னொரு இஸ்லாமிய கட்டுமானம் நாகூரில் உள்ள புனித சாகுல்ஹமீது ஆண்டகையின் அடக்க இடமாகும். இந்த இறைநேசரிடம் முழுமையாக, ஆன்ம பூர்வமாக ஈடுபட்டு, அடிமையாகிவிட்ட, தஞ்சை மன்னர் பிரதாபசிங், இந்தக் கட்டிடத்தை நிலையான அன்புக் காணிக்கையாக அமைத்து முடித்து இருக்கிறார். அங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்றிலிருந்து இந்தக் கட்டுமானம் முழுவதும் பதினேழு நாட்களில் கி.பி. 1757 ல் அமைத்து முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.[146] இவ்வளவு குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பிரமாண்டமான கட்டுமானத்தில் கலை நுணுக்கமான உத்தி எதனையும் எதிர்பார்த்தல் இயலாத ஒன்று. என்றாலும், இந்த தர்காவை ஒட்டி எழுப்பட்டுள்ள ஏழு கொடி மாடங்களும் தமிழக கட்டுமானக் கலைக்கு புதுமையானவை. உலகில் இத்தகைய கொடி மாடங்கள் முதன்முறையாக ஸிரிய நாட்டில், ஏழாவது எட்டாவது நூற்றாண்டுகளில் கண்காணிப்பு மேடை போன்று உயரமாக எழுப்பப்பட்டன.[147] அதனையொட்டி, பின்னர் கிறிஸ்தவ தேவலாயங்களில் சதுர வடிவில் மணிக் கூண்டுகளாக, உயரமாக அமைக்கப்பட்டன. பிற்கால இஸ்லாமிய கட்டுமான அமைப்பான 'மினாரா'க்களுக்கு இத்தகைய கட்டுமானமே முன்னோடியாகும்.

பத்தொன்பது நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்ட இஸ்லாமிய கட்டுமானங்களில் மீண்டும் இஸ்லாமிய உத்திகள் தேங்கி மிளிர்கின்றன. காரணம் அப்பொழுது தமிழகத்தில் பெரும்பகுதி ஆற்காட்டு நவாப்பின் ஆதிக்கத்தில் இருந்தது. அதனால் அரசியல் ஆதரவுடன் அமைக்கப்பட்ட அந்த கட்டுமானங்களில் இஸ்லாமிய உத்திகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அவைகளை நன்கு அறிந்து இருந்த சிற்பிகளும், கல்தச்சர்களும் அப்பொழுது தமிழகத்தில் ஏராளமாக இருந்தனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆற்காட்டு நவாப் மாளிகை போன்ற ஒரிரு கட்டுமானத் தொகுதிகளைத் தவிர ஏனையவை அனைத்தும் இறைவழிபாட்டிற்காக ஆங்காங்கு அமைக்கப்பட்ட தொழுகைப் பள்ளிகளாகும். சென்னைப் பெருநகரிலும், தஞ்சை, திருச்சிராப் பள்ளி, மதுரை, இராமநாதபுரம் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள பெரும்பாலான தொழுகைப் பள்ளிகள் இந்தக் கால கட்டத்தையும், வகையையும் சேர்ந்தவையாகும்:

இன்னொரு அற்புதமான படைப்பு காயல்பட்டினத்தில் உள்ளது. தமிழகத்தில் வேறு எங்கும் காணப் பெறாத இஸ்லாமிய கட்டுமான கலைச் சின்னத்தை கி.பி. 1865ல் பாக்தாத் மெளலானா என அழைக்கப்பட்ட சமயச் சான்றோர் நிர்மானித்துள்ளார். பாக்தாத்திலிருந்து காயல்பட்டினத்திற்கு குடிபெயர்ந்த அவர் அந்தக்கால கட்டத்தில் சுமார் நாற்பதினாயிரம் ரூபாய் செலவில் ஆறு வருட காலத்தில் இதனை கட்டி முடித்துள்ளார்.[148] இஸ்லாமியரின் ஞான மார்க்கமான காதரியா தர்க்காவை பின்பற்றுபவர்கள், ஒன்று கூடி அமர்ந்து திவ்விய நாம பாராயணம் (திக்ரு) செய்வதற்குப் பயன்படும் பொது மண்டபமாக இதனை அமைத்தார்.

தமிழக கட்டுமானக் கலையில் முழுமையான இஸ்லாமியப் பகுப்பினைப் பறைசாற்றும் பாணியில் விளங்குகின்ற இந்த வில் விதமான மண்டபம், நாற்பத்து இரண்டு அடி உயரமும் நூற்று இருப்பத்தாறு அடி உட்புறச் சுற்றளவும் கொண்டதாக கவிக்கப்பட்ட தேங்காய் மூடி போன்ற அமைப்பில் காணப்படுகிறது. உட்புறத்தில் எவ்வித விட்டங்களோ, சட்டங்களோ பயன்படுத்தாமல் "கும்பாஸ்", அமைப்பாக உள்ள இதனை "மஹ்ழறா" என அழைத்து வருகின்றனர். கூடும் இடம் என்ற பொருளில் உள்ள அரபுச் சொல்லான மஹ்ழறா.[149] தமிழில் வழங்கப்படுகிற பல அரபுச் சொற்களைப் போன்று இந்த கட்டுமானமும் அரபுச் சொல்லில் மாற்றம் இல்லாமல், அப்படியே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள் தொழுகைப் பள்ளிவாசல் மட்டும் மேலே கண்ட பகுப்புகளில் வரையறுக்க முடியாததாகும். காரணம் இந்தப் பள்ளிவாசலை நிர்மாணித்தவர், மைசூர் அரசரது ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்து வந்த அந்தப் பாளையத்தின் ஆளுநகராக விளங்கிய செய்யது சாகிபின் மனைவியும் திப்பு சுல்தானின் அத்தையுமான அம்ருன்னிஸா பேகத்தின் நினைவாக அந்த தர்காவும் தொழுகைப் பள்ளியும் நிர்மானிக்கப்பட்டது. அவைகளின் பராமரிப்பிற்காக 360 ஏக்கர் கொண்ட நிலத்தையும் மேட்டுப்பட்டி கிராமத்தையும் மன்னர் திப்புசுல்தான் அளித்தார்.[150] இந்தப் பள்ளியும் இஸ்லாமிய கட்டுமானத்திற்கு ஏற்றதொரு எடுத்துக் காட்டாக எளிய அழகிய மிடுக்கான தோற்றத்துடன் விளங்குகிறது.

இந்தக்கால கட்டத்தைச் சேர்ந்த இன்னொரு பழமையான அமைப்பு சென்னைப் பெருநகரில் சேப்பாக்கம் கடற்ரையோரம் உள்ள நவாப் வாலாஜா முகம்மது அலியின் மாளிகை ஆகும். ஆற்காட்டிலிருந்து தமது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்ட நவாப் முகம்மது அலி அப்பொழுது சென்னைக் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயரின் பண்டகசாலையினையும் கோட்டையையும் அடுத்து கி.பி. 1763ல் இந்த அழகு மாளிகையை அமைத்தார்.[151] பற்பல தொகுதிகளான கட்டிடங்களையும் பூங்கா, நீச்சல்குளம் ஆகியவைகளுடன் விளங்கிய இந்த மாளிகை, ஆங்கிலேயரது ஆட்சியில் அழிமானம் எய்தியது. ஆனால் கால்சா மகால், ஹீமாயூன் மகால், திவானே கான்வாரா ஆகிய பகுதிகள் மட்டும் எஞ்சி நின்று இந்த நாட்டின் பாரம்பரிய கலைக்கு பல்லாண்டு பாடிக் கொண்டிருக்கிறது.

கி. பி. 1801 ல் ஆற்காட்டு நவாப்பினது ஆட்சியை தமிழக வரலாற்றில் இருந்து அகற்றி விட்டு, தமிழக நிர்வாகத்தினை நடத்திய ஆங்கிலப் பேரரசின் பிரதிநிதிகளாக கிழக்கிந்திய கம்பெனியார், தங்களது ஆட்சியின் பொழுது, சில பொதுக் கட்டுமானங்களை அமைத்தனர். கட்ந்த கால ஆடம்பரத்தையும் நிகழ்காலத் தேவையையும் உள்ளடக்கியதாக அவை அழகுடன் மிளிர்கின்றன. குறிப்பாக, சென்னை தலைமை நீதி மன்றம், கோவை விவசாயக் கல்லூரி, மதுரை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியன இவை அனைத்திலும் இஸ்லாமிய கட்டுமானப்பகுப்புகளான வில்வளைவு, உள்ளொடுங்கிய விதானம், சாய்ந்த, வளைந்த படிக்கட்டுக்கள் சிறு மினாராக்கள் போன்றவைகளை, பல அளவுகளிலும், முறைகளிலும் பயன்படுத்தி அழகு ஊட்டி உள்ளனர்.

இத்தகைய இஸ்லாமிய கட்டுமானக் கலை ஊடுருவலினால் தமிழக கட்டுமானக் கலையின் தொன்மையும், அழகும், கம்பீரமும், புதிய பரிணாமங்களில் பிரதிபலித்து நின்றன. கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகளது சிந்தனையும், செயல் திறனும் இந்தப் புதிய கலப்பினால் வளர்ந்து முதிர்ச்சி பெற்றுள்ளன. இந்த வளர்ச்சி மனித நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் தொடர்ந்து பலனளிைக்கும். அது போழ்து கடந்த பற்பல நூற்றாண்டுகளாக, மனித ஆற்றலும், அழகுணர்வும் கலந்து மலர்ந்துள்ள பிரம்மாண்டமாள் கட்டுமானங்களின் கவிதை ஒலியில், இறைவனது சாந்திமார்க்கமான இஸ்லாத்தின் இதய துடிப்பும் எதிரொலிக்கும்.

23

கல்வெட்டுகளும் செப்பேடுகளும்


தமிழக வரலாற்றைத் தெளிவாக வரைவதற்கு தக்கசாதனமாக தமிழகத்தின் முடியுடை மன்னராக விளங்கிய சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், நாயக்கர்களும் தங்களது ஆட்சிக் காலத்தில் பொறிக்கச் செய்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அமைந்துள்ளன. அவைகளில் இருந்து அன்றைய ஆட்சிமுறை, ஆட்சிக்குட்டட்ட நாடுகள், அரசியல் நிகழ்ச்சிகள், அரும்பெரும் செயல்கள், போன்ற பல செய்திகள் பெறப்படுகின்றன. கால வெள்ளத்தில் அழிந்து போன வரலாற்றின் கூர்மையான விளிம்புகளின் விளக்கமாகவும் அவை விளங்குகின்றன. ஆனால், இந்தச் செய்திகள், தமிழக இஸ்லாமியர்களைப் பற்றி அவர்களது தொன்மை, பண்பாடு, பழக்கவழக்கங்கள், தமிழ்ச்சமுதாயத்தில் அவர்களது பங்கு, என்பன போன்ற பலவற்றைப் புரிய வைக்கும் முழுமையான அளவில் உதவவில்லை. காரணம், தமிழகத்தில் இஸ்லாமியர்களது அரசு, ஆட்சி, ஒரு நூற்றாண்டு கால அளவில கூட தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறவில்லை. ஆதலால் இஸ்லாமிய மன்னர்களோ ஆளுநர்களோ வழங்கிய சாசனங்களை வரலாற்றில் காண்பது அரிது.

என்றாலும், தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு முதல் அரபுக் குடா நாடுகளில் இருந்து வணிகத்திற்காகவும் சமயப் பணிக்காகவும், இஸ்லாமியர் குடிபுகுந்தது, தொழுகைப்பள்ளி, நிர்மானம், அரசியல் ஊக்குவிப்புகளுக்கு உரியவர்களாக விளங்கியமை, இறையிலிகள் பெற்றமை, தமிழ் மக்களுடன் இணைந்து செயல்பட்டமை, போன்ற செய்தித் தொடர்கள் சில கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் குறிக்கப்பெற்று இருப்பதால், அவைகளையே நமது ஆய்வுக்குரிய தமிழக இஸ்லாமியரைப் பற்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எனக் கொள்ளுதல் பொருத்தமாகும்.

முதல் கல்வெட்டு

அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களது இறைமறையை, அன்னார்கள் காலத்திலேயே தாங்கி வந்த தவச் செல்வர்களான ஸஹாபி தமீம் உல் அன்சாரியினுடையதும் ஸஹாபி உக்காஸா வினதுமான அடக்க இடங்கள் முறையே கோவளத்திலும் முகம்மது பந்தரிலும் அமைந்துள்ள போதிலும் திருச்சிராப்பள்ளியில் முகம்மது அப்துல்லா-பின்-ஹாஜி முகம்மது அப்துல்லா நிர்மாணித்த தொழுகைப் பள்ளியில் வரையப்பெற்றுள்ள ஹிஜிரி 114 (கி.பி. 734)ம் வருட அரபிக் கல்வெட்டு தான்தமிழகத்தில் நமக்கு கிடைத்துள்ள தொன்மையான இஸ்லாமியக் கல்வெட்டாக கொள்ள வேண்டும். தமிழகத்தில் எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாமியர் தங்கிவாழத் துவங்கினர் என்பதை ஆதாரப்பூர்வமாகக் காட்டுகிறது இந்த சாசனம். இஸ்லாமியர்களது புதிய குடியிருப்புகள் திருச்சிராப்பள்ளியில் மட்டும் அல்லாமல் பாண்டியனது தலைநகரான மதுரையிலும், அந்த நாட்டின் கீழைப் கடற்கரையெங்கும் அஞ்சுவண்ணங்களாக அமைந்து இருந்தன. அதனை இராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்ட தானக் கல்வெட்டு சான்று பகர்கின்றது. அந்தக் கல்வெட்டில் "இவ்வூரில் இருக்கிற அஞ்சு வண்ணமும், மணிக்கிராமத்தோரும் ஆரியர் சாமாந்த பண்டக சாலையும், பட்டாரியரும், தோயா வத்திரச் செட்டிகளும், தென்னிலங்கை வலஞ்சியரும், கைக்கோளரும் தூக வரும், வாணியரும், நீண்ட கரையாரும், கோயில் திருமுன்பிலே நிறைவறக்கூடி இருந்து” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[152]

சோனகர்களது அஞ்சுவண்ணம் தமிழகத்தில் பல பகுதிகளில் அமைந்து இருந்ததை பல இலக்கியச் சான்றுகள் தெரிவித்தாலும் இந்தக் கல்வெட்டின் வாசகம் தான் வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ளது. சங்க இலக்கியங்கள் சுட்டுகின்ற யவனச்சேரிகள் போன்று. சோனகரது அஞ்சுவண்ணமொன்று மதுரைப் பெருநகரில்,ஒன்பது பத்தாவது நூற்றாண்டில் இருந்தது.சோனகர் பதினாயிரம் பொன்கொடுத்து, கூன்பாண்டியனிடமிருந்து கைக்கொண்ட காணி உரிமை பற்றிய வழ்க்கு ஒன்று பின்னர் கி.பி. 1573 ல் மதுரை மன்னரான முத்துவீரப்ப நாயக்கரால் தீர்வு பெற்றதை மதுரை கோரிப்பாளையம் கல்வெட்டு அறிவிக்கிறது.[153]

வணிகர்களாக வந்த சோனகர், நாளடைவில் இந்த மண்ணின் மாண்புக்குறிய மக்களாக நிலைத்துவிட்டனர், அவர்களுக்கு பத்தாவது நூற்றாண்டில் சோழர்களது ஆட்சியிலும், பன்னிரண்டாவது, பதின்மூன்றாவது நூற்றாண்டில், பிற்காலப் பாண்டிய அரசுகளிலும், நல்ல சமூக சூழ்நிலைகளும் அரசியல் ஊக்குவிப்புகளும், உதவின. "தஞ்சைப் புறம்பாடி ராஜ்ய வித்தியாதரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாவூர்" (சாமுன் என்று இருத்தல் வேண்டும்) என்ற ராஜராஜ சோழனது தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டிலும் "திருமந்திர ஓலை நாயகனான கங்கைகொண்ட சோழபுரத்து ராஜ வித்தியாதரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாவூர்" என ராஜேந்திர சோழனது கோலார் கல்வெட்டிலும் சோனகரது பெருந்தலைவர் ஒருவர் குறிப்பிடப்பட்டுள்ளார். இவருக்கு, "இராஜேந்திர சோழபுரத்து இராச விச்சாதீரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாவூர் பரஞ்சோதியான சோழ சுந்தர்வப் பேரரயன்" எனப்புகழுரை சூட்டப்பட்டுள்ளது.[154] சோழர்களது பேரவையை அலங்கரித்த இந்தச் சோனகரைப் போன்று, பாண்டியரது அரசியல் பணியிலும் சோனகர் ஒருவர் சாமந்தராக இருந்தார் என்பதை திருப்புல்லாணி கோயிலில் உள்ள கோனேரின்மை கொண்டானான பாண்டியன் சடையவர்மனது எட்டாம் ஆண்டு கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. பாண்டிய படைப்பிரிவின் சாமந்தனரக விளங்கிய சோனகர் ஒருவர் பெயர் அறியத்தக்கதாக இல்லை பவுத்திரமாணிக்க பட்டினத்தில் அமைத்த பள்ளிக்கு நிவந்தமாக ஆம்புத்துார் மருதூர் முதலான ஊர்களை இறை இலியாக இருந்து வர பாண்டியன் கோனேரிண்மை கொண்டான் ஆணை இட்டான். இந்த ஆணை,

"... ... ... கீட் செம்பிநாட்டு பவித்திர மாணிக்கப்பட்டினத்தில் கீழ்பால் சோனக சாமந்தப் பள்ளியான பிழார்ப்பள்ளி ஆழ்வாருக்கும், இவர் செய்ய திருவாய் மலர்ந்தருவிய படிக்கு .... .... ...." என நீண்டு தொடர்கிறது.[155]

பதினான்காம் நூற்றாண்டின் துவக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருக்களர் கல்வெட்டு, பாண்டியரது, அரசு கட்டிலுக்கான போட்டியில் பாண்டிய நாட்டு முஸ்லீம்கள், சுந்தர பாண்டியனைச் சார்ந்து நின்று உதவிய உண்மையை வெளிப்படுத்துவதுடன் அந்த உள்நாட்டுப் பூசலினால் உருக்குலைந்த தமிழகத்தையும் அந்தக் கல்வெட்டுத் தொடர் கீழ்க்கண்டவாறு உணர்த்துகிறது.[156]

".... ... .... .... முன்னாள் இராஜராஜன் சுந்தர பாண்டியத் தேவர் துலுக்கருடன் வந்த நாளிலே, ஒக்கூருடையாரும், இவர் தம்பிமாரும், அனைவரும், அடியாரும் .... ... .... செத்தும் கெட்டுப் போய் அலைந்து, வரும் வெள்ளத்தாலும் கலகத்தாலும் பாழாய் இருக்கிற அளவிலே .... ..." என்று இதே காலத்தில் தென்பாண்டி நாடு சேர மன்னன் உதயமார்த்தாண்டனது ஆட்சியில் அமைந்து இருந்தது. அங்கும் இஸ்லாமியர் அரசின் ஆதரவுக்கு உகந்தவர்களாக இருந்தனர் என்பதை காயல்பட்டின கல்வெட்டு ஒன்றிலிருந்து தெரிகிறது. அந்த கல்வெட்டின் வாசகம்,

"சோனாடு கொண்டான் பட்டினத்து ஜும்மா பள்ளிக்கு உதய மார்த்தாண்டப் பெரும்பள்ளி எனப் பெயருங் கொடுத்து அவ்வூரில், காதியாரான அவூவக்கருக்கு உதய மார்த்தாண்ட காதியார் எனப் பேரும் கொடுத்து இந்தப் பள்ளிக்குச் சுவந்திரமாக இந்த சோனாடு கொண்டான் பட்டினத்துறையில், ஏற்றுமதி இறக்குமதி கொள்ளும் பொருளிலும், விலைப்படி உள்ள முதலுக்கு நாலு பணத்துக்கு கால் பணமாக உள்ள விழுக்காடு கொள்ளும்படி ... ... ... ..."[157]ஆணையிடுகிறது.

கி.பி. 1330-78 வரை மதுரையில், தன்னாட்சி செய்த சுல்தான்களின் ஆட்சிக் காலத்து பொறிக்கப்பட்ட நான்கு கல்வெட்டுக்கள் இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கிடைதுள்ளன. அதுவரை தமிழக கல்வெட்டுக்கள் வரையப்பட்டுள்ள வகையினின்றும் அவை, மாறுபட்டுள்ளன. அவைகளில் இருந்து சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

"இராசாக்கள் தம்பிரானுக்கு 761 () பங்குனி மாதம் 5ம் தேதி பொன்னமராவதி நாட்டு நாட்டாரோம் விரையாச் சிலை உள்ளிட்ட ஊரவருக்கும் கோட்டியூர் உள்ளிட்ட ஊரவரும் பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசாவது

"இராசாக்கள் தம்பிரானார் சூரக்குடி அழியச் செய்வதாக மஞ்சிலிக எலிசுகானை , ஆசம் காத்தானை, முஸாக் கான்கானை, இராசாத்தி கானுடனே பரிகாரம் ஏவப்பட்டு, சூரக்குடியும் அழியச் செய்து, மாத்துார் குளத்திலே விடுதியா விரைச்சிலை, கோட்டியூர் ஊரவர்களைக் கானச் சொல்லி அருளிச் செய்தபடியாலே, இவ்வடிகள் கண் அளிவுக்கு இராசாக்கள் தம்பிரானார் தோசது கானுக்கும் எங்களுக்கும் பிரமாணம் வரகாட்டி அருளினபடி ... ... ..." [158]

" ... ... .... ஆதி சுரத்தானுக்கு .... ... சித்திரை .... தியதி பூர்வபட்சத்து ஏகாதேசியும் திங்கட் கிழமையும் பெற்ற பூசத்து நாள் பொன்னமராவதி நாட்டு இராசிங்கமங்கலத்து ஊராக

"இசைந்த ஊரவர்க்கு கானநாடான விருதராச பயங்கர வளநாட்டு ஆதனுார் ஊராக இசைந்த ஊரோம் காவல் பிரமானம் பண்ணிக் கொடுத்த பரிசாவது துலுக்கர் கலகமாய் எங்குங்

"கட்டாளும் பிடியாமல் பரிகரித்து வேறு ஒருவர் இவ்விடங்களில் நிலை நரருங் கொள்ளாமல் பரிகரித்து "கள்வனுார் அடித்துக் கொண்டு போன கன்றுங்காலியும் விடுவித்து தந்து

"நாங்கள் இங்கு இருக்குமளவும் சோறு பாக்கும் ஆராய்ந்து எங்களைப் பரிகரித்துக் கொண்டு போக வேணு மென்கிற ... ... .... [159] “.... ... .... மகாமதி சுரத்தானுக்கு யாண்டு பங்குனி எ/ந்தியதி நாள் பொன்னமராபதி நாட்டு பனையூர் குள மங்கலத்து ஊரக இசைந்த ஊரவரோம் குளமங்கலத்தில் தரகு காரியமாக இரண்டு ஊரும் படை பொருது ஆளும்பட்டு ஊரும் அழிந்து வேண்டின நிக்கே போய் மீண்டும் ஊரிலே குடி புகுதுகையில் எங்களில் குடி இராதபடியாலே நகரத்தாரும் கம்மாளருக் கூடி எங்களைச் சேர இருக்கையில் ... ... ...[160]

இவைகளிலிருந்து நான்கு உண்மைகள் பெறப்படுகின்றன.

அ) முதன்முறையாக இஸ்லாமியரின் ஹிஜிரி ஆண்டு கல்வெட்டில் கையாளப்பட்டுள்ளது.

ஆ) தமிழகத்தின் ஏனைய கல்வெட்டுக்களில் காணப்படுவது போல் இவைகளில் மன்னரது விருதாவஸிகள் பயன்படுத்தப்படவில்லை.

இ) சம்மந்தப்பட்ட இஸ்லாமியப் பெயர்கள் தமிழின் ஒலி வடிவத்திற்கு ஏற்ப தமிழுருப்பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈ) கல்வெட்டின் நடை கொடுந் தமிழாகவோ, கொச்சைத் தமிழாகவோ இல்லாமல் நல்ல பழகு தமிழாக அமைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இஸ்லாமியக் கல்வெட்டிலும் மாற்றம் காணப்படுகின்றன. கி.பி. 1749ல் வரையப் பெற்றுள்ள ஆற்காட்டு நவாப்பினது கல்வெட்டு ஒன்றில்,

"... ... .... மகா மண்டலேசுவர மேதின மீசுர, அனேக சதுரங்காதிபதி, கெடிமண்ணியம் சுல்த்தானன், நாவலப் பெருந்தீவு நவமணி வேந்தன், பூர்வ, தட்சிண, பச்சிம, உத்திர, சது சமுத்திராதிபதி தில்லி ஆலங்கீர்ஷா மம்மதுஷா பிரிதிவி ராஜ்ஜியம் பண்ணி அருளா நின்ற சாலிவாகன சகாப்தம் 1645க்கு மேல் செல்லா நின்ற சோப கிருது பூரீசோமவாரத்தில் பூர்வ பக்ஷத்து
  1. Nagasamy, Dr. R. “The Hindu" - 26.10.1986
  2. ARE - 35 (B)/1942-43
  3. இராமநாதபுரம் சமஸ்தானம் நிலமாண்யமணக்கு.
  4. இராமநாதபுரம் சமஸ்தானம் நிலமான்ய கணக்கு மற்றும் இராமேசுவரம் ஆபில் காபில் தர்கா செப்பேடு, ஏறுபதி செய்யது இபுறாஹிம் (வலி) தர்கா, செப்பேடு இராமநாதபுரம் ஈசாசாயபு தர்கா செப்பேடு.
  5. Rajaram Rao. T. Manual of Ramnad Samasthanam (1898 (р.232
  6. அமீர்அலி. என்.ஏ.-வள்ளல் சீதக்காதி வாழ்வும் காலமும்.(1982) பக் : 194
  7. Madurai District Reconds - Vol 4669. p. 90, 91.
  8. Rajaram Rao-T. Manual of Ramnad Samasthanam (1828)P.P. 160. 17O. 175
  9. Tamilnadu Archives-Public Consultations Vol. 184. A, 12. 2. 1 793-PP. 862-65
  10. Tamilnadu Public Consultations
  11. சேதுபதி மன்னர் செப்புபட்டயம் எண். 28 (இராமேசுவரம் திருக்கோயில் கும்பாபிஷேக மலர் — 1965)
  12. Seshadri Drr S. - Sethupthis of Ramnad (un Published Thesis) pages. 96-97,
  13. P. E. Peris and R.B.Naish — Ceylora and Portughese. (1986) P.26
  14. Fr. Pereira - History of Ceylon - page. II
  15. Arunachalam - History of Pearl fisheries of Tamil Coast. (1952) p.p. 17.18
  16. நாகசாமி Dr. ஆர் - தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் (1969) பக். 13, 44.
  17. Arunachalam-History of Pearl fisheries 1952 p. 63.
  18. I bid p.p. 78:80
  19. I bid
  20. சேதுபதி மன்னர் செப்பேடுகள்.
  21. சொக்கு சுப்பிரமணியம் - சிந்துபாடும் சேது நாடு - திருச்சிராப்பள்ளி. (வானொலி வடிவம்) 1985
  22. Appadorai Dr. Economic Conditions of S. India(1OOOAD-15OOAD)
  23. A.R. 396/1907.
  24. Fr. Pereira. History of Ceylon p. p. 10-11
  25. Krishnasamy - Dr. A. - Tamil Country under Vijaya Nagas(1964) P-P. 235 - 236
  26. Arunachalam - History cf Pearl fishery of Tamil Coast(1952) p. 19.
  27. Arunachalam - History of pearl Fishery of Tamil coas(1952)
  28. Fr. Pereira History of Ceylon – p.p. 23.24
  29. Whitevvay - Rise of Portughece Povver in India (1899)
  30. Dorsey - Portughese Discoveries, Missions in Asia and Africa р.147
  31. Sathianathaiar—History of Madura Nayaks (1924)(appendix)
  32. Krishnasamy Dr. A.—Tamil Country under Vijayanagar Rule i. (1964) p. p. 240 : 241
  33. தனிப்பாடல் - நமச்சிவாயப்புலவர்
  34. உமறுப்புலவர் - சீதக்காதி திருமண வாழ்த்து கண்ணிகள் 75-83-1952
  35. அமீர் அலி - என், சீதக்காதி சமயமும் வாழ்வும் (1993)
  36. Memoir of Hendrick Zwaardecroom (1911) p. 9.
  37. Arunachalam-History of pearl Fishery of Tamil Coast(1952)
  38. Ibid
  39. கமால் - எஸ். எம். - இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக்குறிப்புகள் (1984) பக். 75
  40. Madura Dist. Records - vol. 4673. 15-8-1825.
  41. Tamilnadu Archives - Military Consultations vol. 105 A р. 2622.
  42. அமீர் அலி N. கேப்டன் - இசுலாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர் (1973) பக். 41, 42.
  43. Revenue Consultations — Vol. 62. A.p.p. 1796-9.
  44. Madurai Collectorate. Records - Vol. 1140 - 18-10-1802 p.141
  45. Ibid
  46. Madurai Collectorate Records. Vol. 1178 p. 4 to 71.
  47. Revenue Consultations vol. 91A. 15-12–1797 p. 45. 64
  48. Revenue consultations vol. 91A. p. 45, 61
  49. கமால் Dr. எஸ்.எம்-விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) பக், 156-157
  50. Tamilnadu Archives-Revenue Consultations. vol. 62A p. p. 17, 96, 97
  51. Madurai Collectonate Reconds vos. 4681. B. 26-2-183:p.p. 33–34
  52. Ibid 17-1-1833 p.p. 20-25 Tamilnadu Archives-Public Consultations vois XIII, X,XXVII ХХХ.
  53. Sathyanathaier – History of Madura Nayaks (1924) p. 224.
  54. Rajayyan Dr. K.-History of Madurai. (1972)
  55. M. C. C. VOL. 9. 25. 5. 1761 p : 58
  56. M. C. C. VOL. 8. 11. 2. 1760 p.p. 293 : 296
  57. Ibid 5. 7. 1760 р. 218.
  58. Ibid 4, 7. 1760 р. 213 M. C. C. VOL. 9. 26. 6. 1761. p : 78
  59. Rajawan Dr K . History of Madurai (19724) P.P. 210: 211
  60. M.C.C. Vol. 10 14-11-1762 p. 31.4
  61. M. C. C. VOL 12 – 4. 2. 1763. p.p. 356:397
  62. Military Despatches — VOL 3 p.p. 84.85
  63. Caldwell Dr. — Political and General History of Trinelveli Dist. (1881) P.130.
  64. Hill. S. C. - Yousceffkhan. Rebell Commendent p. 2.20 (1940)
  65. lbid p. 225
  66. Mohamed Hussain Nainar. Dr -Arab Geogrephers Knowledge of S. India (1942) P. 19, 20
  67. |bid р. 168
  68. Md. Hussain Nainar–Arab Geogrep hers Knowledge of S. India (1942
  69. |bid - p. 121, 134
  70. Ibid – p. 173
  71. Ibid - p. 173
  72. Ibid - p. 176
  73. Ibid p. 159
  74. Ibid p. 17S
  75. Ibid p. 109
  76. Ibid р. 169
  77. Nilakanta Sastri - Foreign Notices of s. India (1972)р, 132.
  78. Neelakanta Sastri Foreign Notices of S, India (1972) р. 278
  79. Ibid p. 252
  80. Ibid p. 282, 283
  81. Ibid p. 165
  82. Ibid
  83. Appadorai Dr. A. Economic Condituions of S. India (130(AD - 1500AD) v.I.
  84. Md: Hussain Nainar-Arab Geographers Knowledge of S. indi,(1944)p.p. 162, 163
  85. Tabari — vol. 2. p. 939
  86. Philip K. Hitty History—of the Arabs
  87. Thomas Patrick Hujhes - Dictionary of Islam (1929) p.84
  88. A. R. 136/1908 - திருப்புத்துார்.
  89. நாகசாமி ஆர். தஞ்சைப்பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் (1968)
  90. தமிழ்நாடு தொல்பொருள் துறைகல்வெட்டுஎண் 1976/105-78
  91. Nilakanta Sastri K.A - Pandia kingdom (1929) p. p. 98, 193, 196, 118, 123, 143, 217
  92. Pudukottai state inscriptions No. 260, 262. 292. 265, 269, 305, 306, 307, 308, 328,
  93. AR 412/1914 - Aruppukottai
  94. AR 459/1914 - Aruppukottai
  95. AR 399/1907 - Suddhamalli
  96. AR 399/1907 - Melakodumaloor
  97. Appadurai Dr. A– Econamic Contions of S. India (From 1000 HD – 1500 AD) vol II.
  98. ARE 284 / 1923
  99. AR 242 / 1892 கொண்ட வீடு
  100. AR 598/1926 தீர்த்தாண்டதானம்
  101. List of Copper Plates No 65 A of Mr. A. Sewe II
  102. AR 43/1946 (C.P).
  103. AR 43 / 1946 (C. P)
  104. AR 116 / 1903 - திருப்புல்லாரிை
  105. Hussaini Dr. S.A.R - History of Pandia Соuntry p. 55
  106. AR 311/1964 காயல்பட்டினம்
  107. Sevvell - List of Copper plates
  108. Antiquities vol I. p. 298.
  109. சேதுபதி மன்னர் செப்பேடுகள்.
  110. இராமநாதபுரம் சமஸ்தான நிலமான்ய கணக்கு.
  111. Sewell - Copper plates No. 53.
  112. Ibid
  113. MER / 911 p. p. 89.90.
  114. அப்துல் ரஹீம் M.R.M. இசுலாமிய கலைக்களஞ்சியம் (1970) தொகுதி பக் 628.
  115. Sewell – Copper plate No. 43
  116. Ibid
  117. A. S. S. I. Vol 4
  118. Rangacharya - List of inscriptions – vol. – 2 (1919) p. 13. 46
  119. GOPINATH RAO – Copper Plate Inscriptions — (1916) pp. 113-20x
  120. Rangacharya - List of inscriptions vol. II.
  121. Bowring – Haider and Tippu.
  122. ஆயிசா பேகம் - தமிழ்நாட்டு வரலாற்றுக் கருத்தரங்கு (1979) பக் : 295
  123. மதுரை செய்யது இசுமாயில் சாயபு - சகம் 1706ல் (1784). திருவாட்சியை வழங்கியது அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
  124. Elliott—History of India - vol Ill p. 90.
  125. தஞ்சாவூர் மன்னர் செப்பேடு. தொல்லியல் கருத்தரங்கு - (1983) பக்கம். 3
  126. Srinivasachari - History of Gingi Fort,
  127. Philips Hitti – History of the ARABS (1970) p. 190
  128. Rajaram Rao T – Manual of Ramnad Samasthanam (1898) р. 22
  129. Hari Rao, V. – KOIL OLUGU (1961 ) p. 25
  130. Krishnasamy Ayyangar Dr. S. - History of South India and Mohammedan Invaders (1928) p. 114.
  131. Hari Rao V. – Koil Olugu (1961) p. 27
  132. Ibid p. 28
  133. Vktarama lyer K.R. - Manual of Pudukottai State (1938) Vol. I
  134. இந்தச் செய்தியை அன்புடன் தெரிவித்தவர் சேதுபதி மன்னர் வழியினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதபுரம் திரு. ஆர். காசிநாத துரை அவர்கள்.
  135. கம்பராமாயணம் - சுந்தர காண்டம் - ஊர் தேடு படலம். பாடல் எண். 112 (207)
  136. Philip K. Kitti – History of Arabs (1977) p. 265
  137. பிறையன்பன் - கலையும் பண்பாடும் (1962) பக் 99
  138. ஹமீது கே.பி.எஸ். - இரண்டாவது இசுலாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர் (1973) பக். 308 310
  139. A.R. 116/1903 திருப்புல்லானி.
  140. Nilakanta Sastri-Foreign Notices of South. India (1972)р. 281.
  141. கமால் எஸ்.எம். - தமிழக வரலாற்று கருத்தரங்கு (1978)பக்கம் : 308 : 310
  142. Hussaini S.A.O. Dr. History of Pandia Kingdom (1952) p. 55
  143. Hursaini. S. A. Dr – History of Pandiya Kingdom (1952)
  144. Krishnasami Ayyangar Dr. S. - Soulth India and her Mohammedan Invaders (1924)
  145. Elphinstone – History of India p. 340
  146. Sewell - List of Copper plates
  147. Philips H. Kitty-History of the Arabs (1972) p. 265
  148. சையது அஹமது எம்.கே. ஹாபிஸ் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கட்டுரைக்கோவை (1978) பக் 234
  149. Ibld
  150. Board’s Misc. Register. 1811.
  151. “The Hindu” (3.9.1963) Former Residence of Nawab of Arcot
  152. A. R. 598/1926 தீர்த்தாண்டதானம்
  153. A. R. 77/1905 கோரிப்பாளையம்.
  154. A. R. 402 / 1903 திருப்புல்லாணி
  155. A. R. 112 / 1905 மன்னர்கோவில்
  156. A R 642 / 1902 திருக்களர்.
  157. A. R. 311 / 1964 - வீரபாண்டியன் பட்டினம்
  158. திருக்கோலக்குடி கல்வெட்டு
  159. ராங்கியம் கல்வெட்டு
  160. பனையூர் (புதுக்கோட்டை) கல்வெட்டு
ஸப்தமியும், அனுகார நாம யோகம் தை லாகரணமும் மகா நட்சத்திரமும் பெத்த நாளில் ஜெயங்கொண்ட தொண்டை மண்டலத்தில், தெண்ட கண்டு நாட்டில், ஊத்துக்காட்டுக் கோட்டத்தில் கருநாடக சுபா திவான்பாட்சா துல்லார்கான்- பகதூர் ராச்சியம் பண்ணுகையில் .... ... ....” என்ற மணிப்பிரவாள நடை அன்னியரான ஆற்காடு நவாப் ஆட்சியில், பயன்படுத்தப் பட்டுள்ளதால் அன்றைய நிலையில் செந்தமிழ் வழக்கு சோபையற்று விளங்கியது தெரியவருகிறது.

கல்வெட்டுகளைப் போன்று, காலத்தையும், கடந்து சென்றவர்களின் சாதனையையும் கட்டியம் கூறுபவை பட்டயங்கள் என்ற செப்பேடுகள். ராஜேந்திர சோழனது ஆனைமங்கலச் செப்பேடுதான் இஸ்லாமியர்களைப் பற்றிய பழமையான செப்பேடாக உள்ளது. இந்தச் செப்பேட்டில், சத்திரிய சிகாமணி வளநாட்டு பட்டணம் கூற்றத்து சன்னமங்கலத்து மத்யஸ்தன் துருக்கனகுமது" கையெழுத்திட்டுள்ளார். பத்தாவது நூற்றாண்டில் சோழர்களது ஆட்சியில் இஸ்லாமியர்கள் அஞ்சு வண்ணத்தைச் சேர்ந்தவர்களாக மட்டுமல்லாமல் தமிழ்ச் சமுதாயத்தில் தக்க சிறப்புடன் வாழ்ந்தனர் என்பதை சூசகமாக சொல்லும் செய்தி தான் இது. தொடர்ந்து பாண்டியப் பேரரசிலும், தமிழக இஸ்லாமியர்களுக்கு தனி சலுகையும் சிறப்பும் இருந்தன. ஆனால் அவைகளை விளக்கக்கூடிய செப்பேடுகள் எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும் மதுரையில் உள்ள காஜிமார் தெருவில் உள்ள தொழுகைப் பள்ளியை நிர் மாணிப்பதற்கு உதவியதுடன் அதனைத் பராமரிக்கவும் மதுரையை அடுத்த விரகனூர் கிராமத்தை முற்றுாட்டாக வழங்கி உத்திர விட்ட சந்தரபாண்டியனது செப்பேடு இன்றும் அந்தப் பள்ளியின் நிருவாகியிடம் இருப்பதாகத் தெரிகிறது. நூற்றாண்டுகள் பல முடிந்த பொழுதும், ஏகத்துவ நெறியைப் போதித்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்கி வந்த தமிழக இஸ்லாமியர் பால் ஆட்சியாளரது அன்பும் அனுதாபமும் தொடர்ந்தன என்பதை தஞ்சை மராட்டிய மன்னர்கள், இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது செப்பேடுகள் பல தெரிவிக்கின்றன, அனுமந்தக்குடி, இராமேஸ்வரம், ஏறுபதி, இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய ஊர்களில் அடக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய தவச் செல்வர்களிடம் பெருமதிப்புக் கொண்டு அந்தப் புனித இடங்களைப் பராமரிக்கவும், விளக்கு ஏற்றவம், அங்கு வருபவர்களுக்கு உணவு படைக்கவும், பல நூறு ஏக்கர் விளை நிலங்களை நிலக்கொடையாக திருமலை சேதுபதி, கிழவன் என்ற முத்துக் குமார விஜயரகுநாத சேதுபதி, குமார முத்து குமார சேதுபதி ஆகியோர் வழங்கினர். இன்றும், அந்த தர்மங்கள் தொடருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில். பெரும்பாலும் சேது நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் நெசவாளர்களாக இருந்தனர் என்பதை சேதுபதிகளது பிற செப்பேடுகளில்” நமது காவல்குடியான துலுக்கர் போட்டால் தறியொன்றுக்கு ஒரு பணமும்" என்ற தொடர்கள்[1] விளங்குகின்றன. நாகூரில் அடக்கம் பெற்றுள்ள புனித சாகுல் ஹமீது ஆண்டகை அவர்கட்கு மராட்டிய மன்னர் துல்ஜாஜி 1753ல் கிராமங்களை வழங்கிய செப்பேடுகள் மோடி மொழியில் உள்ளன. அந்த கட்டத்தில் நெல்லை மதுரை மாவட்டங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் இதர பிரிவினர்களுடன் இணைந்து பொதுநலனில் அக்கரை கொண்டர்களாக இருந்தனர் என்பதை பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெத்திலைக் குண்டு, குற்றாலம் ஆகிய ஊர்களது இரு செப்பேடுகள் தெரிவிக்கின்றன.[2]

இந்தச் செப்பேடுகளில் இங்கு குறிப்பிடத்தக்கவை கி.பி. 1738ல் இராமேசுவரம் ஆபில் காபில் தர்காவிற்கும் இ.பி. 1745 ல் ஏறுபதி சுல்தான் சையிது இபுராகீம் ஷஹீது (வலி) அவர்களது தர்காவிற்குமாக வழங்கிய சர்வமானிய நிலக் கொடைகள் பற்றியவை. அவைகளை வரலாறு புகழ வழங்கியவர் அப்பொழுது இராமநாதபுரத்தில் அரசோச்சிய சைவத்துரை என வழங்கப்பட்ட முத்துக்குமார விஜயரகுநாத சேதுபதி மன்னராவர். இராமேஸ்வரம் தர்காவிற்கு பக்கிரிபுதுக்குளம் என்ற பேரூரை நிவந்தமாக வழங்கும் அந்தப் பட்டயம். தமிழக இசுலாமியரது சுய உணர்வுகளை மன்னர் நன்கு அறிந்து இருந்ததும் மேலே கண்ட செப்பேடுகளில் வாசகங்களிலிருந்து புலப்படுகிறது தமிழகச் செப்பேடுகளின் சொற்றொடர் அமைப்பில் இங்ஙனம் ஒரு புதிய பாணியையும் இந்த மன்னர் உருவாக்கி உதவி இருப்பதையும் இந்த வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இதுவரை இங்கு குறிப்பிடப்பட்ட கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தமிழக வரலாற்றின் தவிர்க்க முடியாத காலகட்டத்தில், அந்நியர்களாக இந்த தமிழ் மண்ணில் அடியெடுத்து வைத்த சிறு பிரிவினரான இஸ்லாமியர், ஒருசில நூற்றாண்டு காலத்தில் இந்த மண்ணின் மணத்துடன் மலர்ந்து, மக்களுடன் கலந்து, இந்த மண்ணின் மைந்தர்களாக, மகிபதிகளாக, மொழி, அரசியல் பண்பாடு, ஆகிய துறைகளில் உயர்ந்த நின்ற வித்தையை விளங்க வைக்கும் கருவூலங்களாகக் காட்சி அளிக்கின்றன. பொதுமக்களது கவனத்தினின்றும், வரலாற்று ஆசிரியர்களது ஆய்வுகளினின்றும் தொடர்பு இல்லாமல் இருக்கும் இந்தக் கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும் இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்தால் தமிழக இஸ்லாமியரது வரலாறு மட்டுமின்றி, தமிழகத்தின் உண்மையான வரலாற்றையும் வெளிக்கொணர முடியும் என்பதில் ஐயமில்லை.

24

இலக்கிய அரங்கில்


வாழையடி வாழையாக வளர்ந்து வந்துள்ள தமிழக இஸ்லாமியர்களின் வரலாறு என்பது கடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளை அடக்கியுள்ள ஏடாகும். எத்துணையோ துறைகளை எடுத்து இயம்புகின்ற அந்த ஏட்டிலே அவர்களது தமிழ்த் தொண்டு என்பதும் ஒரு சிறப்பான பகுதியாகும். அதனை வரலாற்றுப் பார்வையில் பகுத்து நோக்குதல் அவசியமாகும். பொதுவாகப் பிற்காலப் பாண்டியரது பெருமை மிக்க ஆட்சியில், தமிழ்க் குடிகளாக விளங்கிய சிறுபான்மைத் தமிழக இசுலாமியர், அரசியல் ஊக்குவிப்புகளால் உயர்ந்து வாணிபச் சிறப்புடன் சமுதாயச் சிறப்பையும் எய்தினர். அதுகாறும் ஆங்காங்கு அஞ்சு வண்ணங்களில் தனித்து, ஒதுங்கி வாழ்க்க அவர்கள், நாளடைவில் பெருநகர்களிலும் குடியேறி பிற பகுதியினருடன் கலந்து வாழும் வாய்ப்பைப் பெற்றனர். வாணிபச் சாத்துக்களினாலும், அரசியல் பணிகளினாலும் தமிழ் மொழியுடன் அவர்கள் கொண்டிருந்த தொடர்பு, அதனைக் கற்றுத் தேர்ந்து தெளியும்படி செய்தது. ஏற்கனவே அவர்களது தாய்மொழியான அரபும், பார்சியும், காலப்போக்கில் தொடர்மொழியாகிவிட்டதுடன், அவர்களது வழிமொழியான தமிழ்மொழி அவர்களது வாய்மொழியாகி தாய்மொழியாக வாய்த்துவிட்டது.

ஆதலால், இஸ்லாமிய சமய சிந்தனைகளை இறைமறையில் கருத்துக்களை, தமிழக மக்களிடம், குறிப்பாக தமிழகத்தின் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள், தமிழ் மூலம் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க முயற்சிகளில் ஈடுபட்டனர். அதற்கென அவர்கள் தேர்வு செய்த ஒரே முறை, தமிழை அரபு வரிவடிவில் அமைத்து வழங்கியது ஆகும். அதனையே பிற்காலத்தில் அரபுத் தமிழ் என அருமையுடன் சொல்லி வந்தனர். தங்களுக்குள்ள ஒரளவு தமிழ்ப் பயிற்சியைக் கொண்டு தமிழ் ஒலிவடிவிற்கிணைய அரபு மொழியில் வரி வடிவம் அமைக்கப்பட்டதுதான் இந்த புதுத்தமிழ். தமிழ்மொழியின் உயிர் மெய்களான 'ள, ங , ன, ட' ஆகிய எழுத்துக்களுக்கேற்ற ஒலிக்கூறு கொண்ட எழுத்துக்கள் அரபு மொழியில் இல்லாததால் இந்த தமிழ் எழுத்துக்களுக்கு பொருத்தமாக ஒலிக்கின்ற அரபு எழுத்துக்களுக்கு முன்னும் பின்னும் மேலும் கீழும் சிறு குறியீடுகளைச் சேர்த்து தக்க ஒலியை உண்டாக்க பயன்படுத்தினர். இதன் காரணமாக அரபு நெடுங்கணக்கு எழுத்துக்கள், இருபத்து எட்டில் இருந்து முப்பத்து ஆறு ஆக உயர்ந்தது. தமிழ் மொழியின் அனைத்து உயிர்மெய் எழுத்துகளையும் இணைத்து ஒலிக்கும் முறை இதனால் உருவாக்கக்கப்பட்டது.

இந்த முறையில், அரபுச் சொற்களின் இன்றியமையாத சொற்கள் அவைகளின் அரபு மூல உச்சரிப்பு குன்றாமல் அவைகளின் இயல்பான வளமையும், வன்மையும், மென்மையும். இனிமையும், இணைந்து அப்படியே தமிழில் ஒலித்தன. குறிப்பாக அல்லாஹூ- (இறைவன்) ரஸூல் (இறைத் துாதர்) ஆலிம் (மார்க்க மேதை) கலிபா (மார்க்க தலைவர்) தரிக்கா (ஞான வழி) போன்றவை அந்தச் சொற்களில் சில. இத்தகைய தொருமுறை தமிழுக்கு புதுமையான தொன்றாக இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் இந்திய துணைக் கண்டத்தில் மேற்குக்கரையிலும், வங்கத்திலும் அரபிகள் இத்தகைய தொரு முறையை மேற்கொண்டிருந்தது தெரியவருகிறது. இதனைப் போன்று, அரபியர்கள் இந்தியாவில் நிலைகொள்வதற்கு முன்னர் கிழக்கு ஆப்ரிக்க தன்ஜானிய நாட்டில் வாணிபத் தொடபுர் கொண்டு இருந்தனர். அதனால் அங்கு வழங்கப்பட்ட சுவாஹிலி மொழியையும், பின்னர் மலேசியா இந்தோனிஷிய நாடுகளின் ஜாவி மொழியையும் அரபு மொழி வடிவில் வழங்கி வந்ததை அந்தந்த நாட்டு வரலாறுகள் தெரிவிக்கின்றன.

திருமறைக்கான விரிவுரையும் நபிகள் நாயகம் அவர்களது நல்லுரைகளை ஆதாரமாகக் கொண்ட நடைமுறை விளக்கங்களும் இந்தப் புதிய வரி வடிவில் தமிழகத்தில் இடம்பெற்றன இத்தகையதொரு முறையை, பதினான்காவது பதினைந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ பாஷ்யக்காரர்களும் தமிழகத்தில் மேற்கொண்டு இருந்தனர். அவர்களது சமய நூலான நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு விரிவான உரைகளை மிகுதியும் வடமொழிச் சொற்களின் துணைகொண்டு புதிய உரை நடையொன்றில் அவர்கள் வரைந்துள்ளார். அவை தமிழ் உரையாக இருந்தாலும், அவைகளின் வரி வடிவம் கிரந்தத்தில் உள்ளது. சில உரையாசிரியர்கள் இந்த கிரந்த எழுத்துக்களுக்கிடையில் வடமொழிச் சொற்களையும் அப்படியே வழங்கி உள்ளனர். இதனை "மணிப்பிரவாள நடையென" இணைத்து பெயரிட்டனர். நாட்டு விடுதலைக்குப் பின்னர், மொழி உணர்வுப் பற்று காரணமாக அண்மைக் காலத்தில் இந்த தமிழ் நடை கைவிடப்பட்டு மறைத்துவிட்டது.

எனினும், இதனையொத்த அரபுத் தமிழ், தமிழக இஸ்லாமியரிடையே இன்னும் வாழ்ந்து வருகிறது. வழக்கில் இருந்தும் வருகிறது. அரபு மொழியில் உள்ள கலைஞானங்களை அறிந்து கொள்வதற்கான எளிய சாதனமாக தொடர்ந்து பயன்பட்டு வருகிறது. இந்தவகைத் தமிழில் படைக்கப்பட்ட தொன்மையான ஆக்கங்கள் எதுவும் நம்மிடையே இன்று இல்லை. ஆனால் இருநூற்று ஐம்பது ஆண்டு கால வரையறைக்குட்பட்ட அரபுத் தமிழ் நூல்கள் மட்டும், தமிழகத்திலும் ஈழத்திலும் மார்க்க கல்வி பெறும் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருந்து வருகின்றன. இவைகளுள் வள்ளல் சீதக்காதியின் ஆசானாக விளங்கிய ஞானி சதக்கத்துல்லா (வலி) வின் இளையரும் அரபு வித்த கருமான ஞானி ஷாம் ஷிகாபுதீனது அரபுத்தமிழ் நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இங்ஙனம் தமிழக இசுலாமியரின் தமிழ்-அரபுத் தமிழாக வளர்ந்து அடுத்த சில நூற்றாண்டுகளில் தனித்தமிழாசி காப்பியத் தமிழாக மணங்கமழ வழி துலக்கியது.

இவ்விதம் தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியர், அதே காலத்தில் பிற சமயத்தினர், பல துறைகளைச் சேர்ந்த பலநூறு இலக்கியங்களைத் தமிழில் படைத்து இருப்பதை படித்து அறிந்தனர். பிற்காலத்தில் பெளத்த, சமண, வைணவச் சார்புடைய சமய இலக்கியங்களாக அவை பகுக்கப்பட்டுள்ளன. சமயப் பற்றும், சமுதாயப் பிடிப்பும் தாய் மொழித் தேர்ச்சியும் விஞ்சி ஒளிர்கின்ற அந்த நூல்களை காதாறக் கேட்டு, கண்குத்திப் படித்துச் சுவைத்தும் அவைகளின் இனிமையில் ஈடுபட்ட அவர்களது இதயம், தங்களது சான்றோர்களையும் சான்றோர் வாழ்வினையும் சொல்லக்கூடிய நூல்கள் தங்களது தமிழ்மொழியில் இல்லையே என ஏங்கியது. அவர்களது நினைவிலே இனித்து, நெஞ்சத்திலே நிலைத்து அதனால் எழுந்த ஊக்கமும், நாளடைவில் உருப்பெற்று உயர்ந்தது தான் இன்று நம்மிடையே எஞ்சி உள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் செல்வங்களாகும்.

காலத்தின் அழிவுக் கரங்களில் இருந்து தப்பிப் பிழைத்த தொன்மையான பேரிலக்கியங்கள் எதுவும் தமிழக இஸ்லாமியருக்கு கிட்டவில்லை. என்றாலும், பல்சந்தமாலை என்ற பழம் நூலின் எட்டுப்பாடல்களை மேற்கோளாகக் கொண்ட "களவியற் காரிகையை" பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் முதன்முறையாக வெளியிட்டுள்ளார்கள். தமிழ் இலக்கிய உலகிற்கு, குறிப்பாக இஸ்லாமிய தமிழ் இலக்கியப்பட்டியலுக்கு அணி சேர்க்கும் இந்தப் பாடல்களை இலக்கிய உலகிற்கு வெளிக் கொணர்ந்த அன்னாருக்கு இஸ்லாமியர் என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர். இந்தப் பாடல்களில் இருந்து பல்சந்த மாலை ஆசிரியரது பெயரும். காலமும் அறிந்து கொள்வதற்கு இல்லை. ஆனால், இதுவரை அச்சில் கொணரப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பாடல்களில் தொன்மையானவை இவை என்பதை அறுதியிட்டுச் சொல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் தமிழக இஸ்லாமியரது தமிழ்ப்பணிக்கும் இந்த நூல் முன்னோடியாக அமைந்துள்ளது.

பொதுவாக, தமிழ் மொழியின் தொன்னுாற்று ஆறு வகையான சிற்றிலக்கியங்களின் பட்டியலில் பல்சந்தமாலை என்ற பகுப்பும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டு இலக்கண நூலான பன்னிருபாட்டியலில் "பல்சந்த மாலை” என்ற பகுப்பு பேசப்பட்டுள்ளது. பதினைந்தாவது நூற்றாண்டு இலக்கியமான பிரபந்த திரட்டும்,

"பத்துக்கொரு சந்தம் பாடி பா நூறாக வைத்தல்........" என பல்சந்தமாலை அணி இலக்கணப்படி வாடல், ஊடல், கூடல் என்ற அகத்துறைகளை அங்கமாகக்கொண்டு தொகுக்கப்படுவது இந்தப் பாமாலை. தமிழ் இலக்கியத்தில் இத்தகைய பல்சந்த மாலை வேறு எதுவும் புனையப்பட்டு இருப்பதாக இதுகாறும் செய்தி இல்லை. மேலும் கிடைத்துள்ள இந்த பல்சுத்தமாலைப் பாடல்களில்

"வில்லார் நுதலிய நீதிமன்றே சென்றுமேவுதின் சூது
எல்லாம் உணர்ந்த ஏழ்பெரும் தரங்கத்து இயவனர்கள
"இய்வன ராசள் கலுபதி தாமுதல் எண்ண வந்தோர் . . . . .
"இறையாகிய கலுபா முதலானோர் யானைகளின் . . . . .
"கலைமதி வாய்மைக் கலுழ்பா வழிவருங் கற்பமைந்த . . . . .

என்று பாடல் தொடர்களில் இயவனராசன், கலுபா-கலுல்பா, கலுபதி, என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக யவனர் என்ற சொல் சங்க இலக்கியங்களிலும், பின்னர் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பெருங்கதை ஆகிய படைப்புகளிலும் தமிழகம் புகுந்த பிற நாட்டாரைக் குறிக்க கையாளப்பட்டுள்ளது. இந்தச் சொல்லின் பிரயோகம் இறுதியாக, பதின்மூன்றாம் நூற்றாண்டைக் சேர்ந்த நச்சினார்க்கினியது உரையிலும் காணப்படுகிறது. பிற்கால இலக்கியங்கள் எதிலும் காணப்படாத இந்தச்சொல் பல்சந்தமாலையில் தான் இடம் பெற்றுள்ளது. இந்தக் காரணத்தினால் இந்தநூல் பிற்கால இலக்கியம் அல்ல வென்பதை உறுதிப்படுத்த முடிகிறது. அடுத்து, கலுபா என்ற சொல்லின் ஆதாரத்தைக் கொண்டு. அல்லாவைத் தொழுகின்ற இயவனர்களது அரசன் கலுபா என்பதும், வச்சிரநாட்டில் வகுதாபுரிக்கு இறைவன் என்பதும் பெறப்படும், காலிப் (Caliph) என்ற அரபுச் சொல்லின் தமிழாக்கம் தான் இந்த கலுபா என்ற சொல் என்பது சிலரது முடிவு. இந்தச் சொல்லின் அரபு வழக்கை ஆய்வு செய்யும் பொழுது அந்த முடிவு பொருத்த மற்றது என்பதும் பெறப்படுகிறது.

ஸிரியா நாட்டிலும், ஸ்பெயின் நாட்டிலும் எட்டாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் ஆட்சி புரிந்த அப்பாஸிய மன்னர்களும், பத்து, பன்னிரண்டு நூற்றாண்டுகளில் மிஸ்ரு (இன்றைய எகிப்து) நாட்டை ஆட்சி செலுத்திய பாத்திமத் கிளை அரசர்களும் தங்களது பெயர்களுடன் இணைத்துக் கொண்ட அரசியல் விருதுப்பெயர் "இறைவனது பிரதிநிதி" என்பதே இந்தச் சொல்லின் பொருளாகும். அண்ணல் நபிகள் நாயக (ஸல்)த்தைக் குறிக்க திருமறையில் கலிபத்துல் ரசூல் என்றும், கலிபா-யெ-ரசூல், என்றும் பிரயோகம் வந்துள்ளது.[3] ஆனால் இந்தப் பாடல்களில் எளிதாக கலிபா எனக் குறிப்பிடாமல் கழுபா என குறிககப்படடுளளது. கலிமில்லா (இறையருள் பெற்ற வெற்றியாளன்) என்ற அரபுச் சொல்லின் திரிபாக இந்தச்சொல் அமைதல் வேண்டும் என எண்ணுதற்கும் இடமுள்ளது. கி.பி. 1223 முதல் ஸ்பெயின் நாட்டை ஆட்சி செய்த முகம்மது அபு-அல் அகமது என்ற பேரரசன் இதே விருதைப் புனைந்து கொண்டு இருந்ததும் ஈண்டு சிந்திக்கத் தக்கதாக இருக்கிறது. ஆதலால் இந்தச் சொல்லைப் பலசந்தமாலை ஆசிரியர் பயன் படுத்தியதிலிருந்து இந்த நூல் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என முடிவிற்கு வருதல் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இலங்கைப் பேராசிரியர் ஒருவர் பல சந்த மாலை பாடலின் இலக்கண அமைதியை ஆய்வு செய்து இந்த இலக்கியம் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என கருத்து தெரிவித்துள்ளார்.[4]

மேலும் இந்த பல்சந்த மாலையின் பாட்டுடைத் தலைவனாகிய கழுபா, வச்சிர நன்னாட்டு வகுதாபுரிக்கு இறைவன் என்பது அந்த மாலையில்

“நகுதாமரை மலர் வாவி சூழ் வச்சிர நாடர் தங்கள்
வகுதாபுரியன்ன ........"

என்ற பாடலிலிருந்து பெறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வச்சிரநாடும், வகுதாபுரியும் எந்தப் பகுதியில் எந்தக்கால எல்லையில் அமைந்து இருந்தன என்பதைப் புலப்படுத்த போது ஆதாரம் இல்லை. இசுலாமியரது கோநகரானமான பகுதாதைப் போன்று சிறப்புற்றிருந்த பெருநகர் என்ற பொருளில் வகுதாபுரி என இலக்கிய வழக்கு பெற்று இருப்பதாக சில நூல் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எகிப்து நாட்டுப் பட்டணமான காஹிரா (கெய்ரோ)வில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்ற பொருள் கொள்ளும்படி காயல்பட்டின முஸ்லிம்கள் இலக்கிய வழக்காக, காயல் பட்டினத்தை காயினூர் என வழங்கி இருப்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கதாக உள்ளது.

நூறு நாமா பாடிய வகுதை அகமது மரைக்காயர், காயலின் வளமையைக் கூற "காகிறு நாட்டு வளம்" என்ற பகுதியை அந்த நூலில் சேர்த்து இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.அந்தப் புலவர் காகினுாராகிய காயலை, வகுதை நன்னாட்டில் இருப்பதாகப் பாடியுள்ளார். களவியல் காரிகையைப் பதிப்பித்த பேராசிரியர் திரு. வையாபுரிப்பிள்ளை, "வகுதாபுரியை இக்காலத்தில் காயல்பட்டினம் என வழங்குவர்" என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் முற்காலத்தில், வகுதாபுரி" எந்நாடுங்கொண்ட இறைவன் வச்சிரநாடான்” (கண்ணி-66) "மானாபரன் செய்ய வகுதாபதிக் கிறைவன்’" (கண்ணி-15) என பெரும் புலவர் உமறுகத்தாப் அவர்கள் வள்ளல் சீதக்காதி மரைக்காயரது திருமணக் கோலத்தைக் கண்ணாரக் கண்டு, களிகூர்ந்து, திருமண வாழ்த்து பாடும் பொழுது, வச்சிர நாட்டையும் வகுதையையும் குறிப்பிடுகிறார். இன்னும் சீதக்காதி "நொண்டி நாடக ஆசிரியரும்", 'வகுதையில் வாழ் மண்டலிகன்’

"திருவுலாவிய வகுதை நகர் வருகருணை வாருதி
"வகுதை நகர் சீதக்காதி... ... ...

என வள்ளல் சீதக்காதி மரைக்காயர் கீழக்கரை மாளிகையில் கொலுவீற்று சிறப்புற்று இருந்ததைப் பாடியுள்ளார்.

இவைகளுக்கு எல்லாம் மேலாக, காயல்பட்டினத்து புலவர் நாயகமான ஷெய்கு அப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம் புலவர் அவர்கள் கீழக்கரை தான்” அந்த "காயல்" "வகுதை" என்பதை ,

"பவத்தடையறுத்து பலன்தருநெறியின்
"தவத்துறை பயிலுரு சான்றவர் வாழும்
வகுதை யம்பதியான் . . . . என்றும்,
"வையமெல்லாம் தனிக்கீர்த்தி வழங்கவருங்
கருணைமுகில் வகுதை வேந்தன்..."

என கீழக்கரை வள்ளல்கள் முகம்மது காசீம் மரைக்காயரையும், ஷெய்கு சதக்கத்துல்லா மரைக்காயரையும், புகழ்ந்துரைப்பதில் இருந்து கீழக்கரை தான் புலவர் நாவில் பொருந்திய வகுதை என்பது விளக்கமும் துலக்கமும் பெறுகிறது.

[5] மேலும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆங்காங்கு பரவலாக அரபிகள், தமிழக இசுலாமியராக நிலை பெற்றுக் கொண்டிருந்தனர். அப்பொழுது பாண்டியப் பேரரசரான மாற வர்மன் குலசேகர பாண்டியனது ஆட்சியில் தமிழகத்திற்கும் அரபுத்தாயகத்திற்கு இடையில் விறுவிறுப்பான குதிரை வாணிபம் நடைபெற்று வந்ததும் இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். தமிழில் தேர்ச்சி பெற்று, காப்பியம் படைக்கின்ற தகுதியையோ அல்லது தமிழ்ப்புலவர் ஒருவரது இலக்கியப் படைப்பினை காணிக்கையாகப் பெறக் கூடிய தகுதியையோ இசுலாமியப் பெருமகன் ஒருவர் அப்பொழுது பெற்று இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் அந்த நூற்றாண்டிலே இந்த நூலும் இயற்றப் பட்டிருந்தால் அதனைத் தொடர்ந்து இசுலாமிய இலக்கியங்கள் வேறு எதுவும் பதினாறாவது நூற்றாண்டு முற்பகுதி வரை ஏன் இயற்றப் படவில்லை என்ற வினாவும் எழுகிறது.

அத்துடன் பதின்மூன்று, பதினான்காவது நூற்றாண்டுகளில்தான் அரபிக்குடா, பாரசீகப்பெருங்குடா நாடுகளில் இருந்து அரபிகள் பெருமளவில் மாபாரிலும் (தமிழக கடற்கரைப் பகுதி) ஈழத்திலும், மலேசியா தீபகற்ப நாடுகளிலும் குடி பெயர்ந்து வந்துள்ளனர் என்பதை வரலாற்றில் அறியும் பொழுது அரபிகள், தமிழ்ச் சமுதாயத்தில் இணைந்து கலந்து, தமிழக இசுலாமியர்களாக தமிழ் மக்களாக மாறியது பதினைந்து, பதினாறாவது நூற்றாண்டு என முடிவிற்கு வருவதே ஏற்புடைய தொன்றாகும். ஆதலால், அவர்கள் பேசுந்தமிழைப் பிறப்புத் தமிழாகக் கொண்டு பெருமையுடன் வாழத்தொடங்கியதும் அந்த நாற்றாண்டுகளில்தான்.

பதினான்காம் நூற்றாண்டின் இடையில் தமிழகம் போந்த அரபு நாட்டுப் பயணியான திமிஸ்கி கிழக்கு கடற்கரைப் பட்டினமான பத்தினி என்ற பட்டினத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த ஊருக்கு அடுத்துள்ள வஜ்ரம் - அல் - தவாப் "என்ற கோயில் இருப்பதாகவும் அந்தக் கோயிலுக்கு இந்து சமய மக்கள் பக்தி பரவசத்துடன் வந்து பூமியில் உருண்டு புரண்டு சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதாக தமது குறிப்புகளில்

[6] பதித்துள்ளார் வஜ்ரம் என்பது தருப்பை புல்லைத் குறிப்பதால் இந்த ஊர் திருப்புல்லாணியாக அமைதல் வேண்டும். மேலும் இராம காதை "பொருள் நயந்து நன்நூல் நெறியடுக்கிய புல்லில் கருணையங்கடல் கிடந்தது” என இராமன் அங்குபுல்லைப் பரப்பி படுத்து இருந்ததாக குறிப்பிடுவதும் மற்றும் இன்னொரு பிற்கால இலக்கியமான புல்லையந்தாதி "விருப்புறப்புற்பரப்பி ஆங்கண விரும்பித்துாங்கும் தருப்பையான் . . . " எனக் குறிப்பிட்டு இருப்பதும் இங்கு சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

அண்மையில் மேற்கொண்டுள்ள ஆய்வில் இருந்து பத்ணி என்பது இராமநாதபுரம் வட்டத்தில் உள்ள பவித்திர மாணிக்க பட்டினம் என்ற பெரியபட்டினம் என்பது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆதலால் "வஜ்ரம்-அல்-தவாப்" உள்ள நாடு புல்லாரணியநாடு, புல்லங்காடுநாடு, வச்சிரநாடு, பாண்டிய நாட்டு கிழக்கு கடற்கரையில் இஸ்லாமியர் வாழ்ந்த-இசுலாமிய குறுநில மன்னர் ஆளுகைக்குள் அமைந்த பகுதி என்பது பெறப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அரபிகள் பாண்டிய நாட்டில், வைப்பாறு, வைகை ஆகிய இரு நதிகளுக்கு இடையில் மன்னர் வளைகுடாவை அடுத்த தென்கிழக்குப் பகுதியின் பல இடங்களில் குடியேறி இருந்தால் என பேராசியர் ஹூசைன் குறிப்பிடுவதும் இந்தப் பகுதியாக இருக்கலாம்.[7]

மேலும், தமிழகம், வடுகரது ஆட்சியின் கீழ் வந்த பிறகு, பதினைந்து பதினாறாவது நூற்றாண்டில் ஆங்காங்கு பாண்டிய இளவல்கள் விஜயநகர மேலாதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக பல ஊர்களில் குறுநில மன்னர்களாக இருந்து வந்துள்ளனர். அவர்களைப் போன்று பிற்காலப் பாண்டியரது ஆட்சியிலும், அடுத்து மதுரை சுல்தான்களது ஆட்சியிலும் வாணிப, அரசிய செல்வாக்கு பெற்ற பல அரபிகளும் கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் குறுநில மன்னர்களைப் போன்று அதிகாரம் செலுத்தி வந்துள்ளனர். கி.பி. 1498ல் போர்த்து கேசிய தளபதி ரொட்டிரிகோ, காயல்பட்டினத்திற்கு வந்த பொழுது, அந்தப் பகுதி அரபு மன்னரது ஆட்சிக்குட்பட்ட கோநகராக விளங்கியதைக் குறிப்பிட்டுள்ளார்.[8] கி.பி. 1515ல் காயல் கடற்கரையைப் பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் பர்போஸா, பழைய காயலையும் கீழக்கரை முஸ்லீம்களையும் குறிப்பிடும் பொழுது, அங்கு அரசரை போன்று செல்வ வளமும், அரசியல் செல்வாக்கு மிக்க முஸ்லிம் ஒடுவர் இருந்தார் என்றும், அங்குள்ள முத்துச்சிப்பி பாறைகளுக்கு அவர் தீர்வை வசூலித்து வந்தார் என்றும், அவரது ஆணைக்கும் தீர்ப்பினுக்கும் அனைத்து முஸ்லீம்களும் கட்டுப்பட்டு நடந்தனர். “என வரைந்துள்ளார். கி.பி. 1523ல் அங்கு போந்த இன்னொரு போர்த்துக் கீசிய நாட்டைச் சேர்ந்த கிறித்துவ பாதிரியார்கள் குழு ஒன்று. அங்குள்ள இசுலாமியர் பெரும் எண்ணிக்கையினரான பரவர்களை அடக்கி ஆண்ட சூழ்நிலையையும், அதன் காரணமாக கி.பி. 1532ல், அந்தப் பரவர்களில் பலர் இந்து சமயத்திலிருந்து, ஏசு மதத்திற்கு மதம் மாற்றம் அடைந்த விவரத்தையும் குறிப்பிட்டுள்ளது.[9] மற்றும் கி.பி. 1678ல் இராமநாதபுரம் மன்னர், உடையான் திருமலை சேதுபதி வழங்கிய செப்பு பட்டயமொன்றில் பொறிக்கப்பட்டுள்ள விருதாவளியில், அவர் வல்லமை மிக்க யவன அரசர்களை வென்றதாக தெரிகிறது.[10] இந்த நிகழ்ச்சிகளில் இருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை இசுலாமியர்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் அரசியல் பிடிப்பு இருந்து வந்த விவரமும், இத்தகைய தொரு குறுநிலக்கிழார் தான் பல்சந்தமாலையின் பாட்டுடைத் தலைவனாகிய கலுபா என்பதும், ஊகிக்க முடிகிறது. அத்துடன் இஸ்லாமிய முதல் தமிழ் இலக்கியமான "ஆயிரம் மசாலா" கி.பி.1572ல் அரங்கேற்றம் பெற்றதில் இருந்து தொடர்ந்து அடுத்து அடுத்து பல இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்துள்ளன.

மேலும், தமிழ் இலக்கியத்தில் "மாலை” என்ற பகுப்பைச் சேர்ந்த சிற்றிலக்கியம் எப்பொழுது படைக்கப்பட்டது என்ற ஆய்வையும் இங்கு மேற்கொள்ளுதல் பயனுடையதாக அமையும் என்பது உறுதி. முதல் முறையாகத் தமிழில் மாலை என்ற சிற்றிலக்கியம், பதினென் கீழ்க்கணக்கு நூலான “திணைமாலை ஐம்பது”க்குப் பிறகு ஆறாவது நூற்றாண்டில் காரைக்கால் அம்மையாரது “திருவிரட்டை மன்னி மாலையும்” எட்டாவது நூற்றாண்டில் என்ற புலவரது “மூத்த நாயனார் இரட்டை மணிமாலை” “சிவபெருமாள் திருவிரட்டை மணி மாலையும்என்பது உறுதி. முதல் முறையாகத் தமிழில் மாலை என்ற சிற்றிலக்கியம், பதினென் கீழ்க்கணக்கு நூலான “திணைமாலை ஐம்பது”க்குப் பிறகு ஆறாவது நூற்றாண்டில் காரைக்கால் அம்மையாரது “திருவிரட்டை மன்னி மாலையும்” எட்டாவது நூற்றாண்டில் என்ற புலவரது “மூத்த நாயனார் இரட்டை மணிமாலை” “சிவபெருமாள் திருவிரட்டை மணி மாலையும்” பதினோராவது நூற்றாண்டில் நம்பி ஆண்டார் நம்பியின் “திரு உலா மாலையும்” வெளிவந்துள்ளன. இரண்டாவது குலோத்துங்கன்னைப் பற்றி பன்னிரண்டாவது நூற்றாண்டில் பெரும்புலவர் கூத்தர்பிரானால் “பிள்ளைத்தமிழ் மாலையொன்று இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. (இந்த நூல் கிடைக்கவில்லை) அடுத்து, “மாலைகள்” இலக்கியங்கள் பதினைந்தாவது நாற்றாண்டில் தான் மிகுதியாகப் படைக்கப்பட்டுள்ளன. திருப் பனந்தான் திருமடத்தைச் சேர்ந்த அம்பலவாண தேசிகர் “அதிசய மாலை”யையும், “நமச்சிவாய மாலை”யையும் யாத்துள்ளனர். அடுத்து, வேதாந்த தேசிகரது, “நவரத்தின மாலை”, “திருச் சின்னமாலை”, என்பன அவை. மணவாள மாமுனிவரது “உபதேச ரத்தினமாலை“ குகை நமச்சிவாயரது “பரமரகசிய மாலை” ஆகியவை பதினைந்தாம் நூற்றாண்டில் குமரகுரு பரரது “இரட்டை மணிமாலை”, “சகல கலா வல்லிமாலை”, அழகிய சிற்றம்பலக் கவிராயரது “தனசிங்கமாலை” சிவப் பிரகாச சுவாமிகளது “நால்வர் நான் மணிமாலை”, “கைத்தல மாலை” “சோணசலமாலை” முதலியன பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இன்னும் பிற்காலத்தில் படைக்கப்பட்ட மாலைகள் பட்டியலை இங்கு குறிப்பிடுவது இயலாத காரியமாகும். காரணம், இஸ்லாமியப் புலவர்கள் மட்டும் இயற்றியுள்ள மாலைகளின் எண்ணிக்கையே இருநூறுக்கு மேற்பட்டவை ஆகும். இதனை இணைப்பு பட்டியலில் காண்க.

பதினாறாவது நூற்றாண்டில் இறுதியில் வாழ்ந்த இசுலாமியப் பெரும்கனான வண்ணப் பரிமள புலவர் அதிசய புராணம் என்ற “ஆயிரம் மசாலா” வைப்படைத்து அளித்தார். அவரை அடுத்து ஆலிப்புலவரது “மி.ராஜ் மாலை”, கனக கவிராயரது கனகாபிஷே, மாலை, உமறுப்புலவரது “சீறாப்புராணம்”, பனீ அகமது மரைக்காயரது “சின்னச்சீறா”, போன்றவை தோன்றின. இவைகளுக்கு எல்லாம் முன்னோடியாக பதினைந்து பதினாறாவது நூற்றாண்டில் பல்சந்த மாலை புனையப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒருமித்த கருத்தாகும். ஏற்கனவே பெளத்த, சமண, சைவ, வைணவ நெறிகளை தமிழ் இலக்கிய வார்ப்புகளாக அழகுத்தமிழில் வடித்து தமிழுக்கு அணி சேர்த்து இருந்த அரிய பணியை, தமிழக இசுலாமியரும் இந்த நூற்றாண்டுகளில் இருந்து தொடர்ந்து வந்துள்ளனர். இதனால், இஸ்லாமிய நெறிகளைக் கூறும், நூற்றுக்கணக்கான சிற்றிலக்கியங்கள், பேரிலக்கியங்களை படைத்து இஸ்லாமியத் தமிழ் என்ற தனியொரு பகுப்பினையும் தமிழுக்குத் தந்துள்ளனர்.

இசுலாமியத் தமிழர் என்று தொகுத்து அழைக்கும் வகையில், மக்கட் பிரிவினராக அவர்கள் மாறியதும் அவர்களது வாய்மொழியான தமிழ்மொழி, தாய் மொழியாகியது. அதனைப் பயின்று பேசி, ஆய்ந்து அகம் மகிழ்ந்து கன்னித்தமிழில் கனிவுறும் காவியங்கள், புனைய வேண்டும் என்று வேட்கையும் அவர்கட்கு எழுந்தது. காரணம் அப்பொழுது காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும், தமிழில் படைக்கப்பட்டு அவை தமிழ் மக்களால் பெரிதும் உவந்து ஒதப்பட்டு வந்தன. இறை மணங்கமழும் தேவாரமும் திருப்பாசுரங்களும் இனிய இசையோடு முழங்கின. அவைகளைக் கேட்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நபிமார்களது வாழ்வும், நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள் அருளிய உபதேசங்களும் (ஹதீஸ்களும்) அவர்களது நெஞ்சத்தை நெருடின. திருக்குர் ஆனும். தப்ஸீரும், ஹதிஸீம் தாய்மொழியான தமிழில் இருந்தால் இதயத்திற்கு இன்னும் நெருக்கமாகவும் இதமாகவும் இருக்கும் என்ற எண்ணங்கள் அவர்களிடம் இழையோடின.

அதுவரை, அன்றாட வாழ்க்கையில் தொழுகை, பாராயணம், பிரார்த்தனை ஆகியவைகளுக்காக அரபு மொழியையும் திருக்குர்ஆனையும், ஆழமாகப் பயின்று வந்த இசுலாமியப் பெருமக்கள், தமிழ்மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய பகுப்புக்களுக்கான ஏடுகளையும் ஆர்வமுடன் படித்தனர். அதன் முடிவு, இசுலாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி என பெருமை கொள்ளும் வகையில் இலக்கியங்களைப் படைத்து தாய் மொழிக்கு அணிவித்து அழகு பார்த்தனர். சுவைத்துச் சுவைத்து இன்ப சுகம் கண்டனர். இசுலாத்தின் இலக்கான ஏகத்துவத்தை முழக்கப்பிடும் படைப்புகளாக, இறைத்துாதர்கள் தாவூது நபி, சுலைமான் நபி, இபுராகிம் நபி, மூஸாநபி, யூசுப்நபி, முகம்மதுநபி, ஆகியோர் பற்றிய புராணங்கள், அண்ணல் முகம்மது (அல்) அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய காவியங்கள், முகையதீன் அப்துல் காதர் ஜீலானி, ஏர் வாடி சுல்தான் சையது இபுராகீம் (அலி), ஆஜ்மீர் குவாஜாசாகிப் (வலி), நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை - ஆகிய இறைநேசர் பற்றிய இலக்கியங்கள்; இன்னும் ஏராளமான சிற்றிலக்கியங்கள் — இவை போல்வன.

அந்தாதி, அம்மானை, அலங்காரம், ஏசல், கலம்பகம், கிஸ்ஸா, கும்மி, குறவஞ்சி, கீர்த்தனை, கோவை, ஞானம், பதம், பள்ளு, படைப்போர், பிள்ளைத்தமிழ், சதகம், சிந்து, மஞ்சரி, மசாலா, மாலைகள், முனாஜாத், நாமா, லாவணி, வண்ணம், வாழ்த்து என்ற பல்வேறு சுவையும் துறையும் கொண்ட இலக்கிய வடிவங்கள் இசுலாமியத் தமிழ்ப் புலவர்களால் உருவாக்கப்பட்டன. இவைகளில் கிஸ்ஸா, முனாஜாத் மசாலா, நாமா, படைப் போர் என்பன முழுவதும் தமிழுக்குப் புதுமையான கலைவடிவங்கள் இலக்கியப்படைப்புகள். கன்னித்தமிழுக்கு இசுலாமியர் வழங்கிய காணிக்கைகளாக காலமெல்லாம் கட்டியங் கூறி நிற்கின்றன அவை. இத்தகைய எழில்மிகு இலக்கியங்களை இசுலாமியப் புலவர்கள் படைப்பதற்கு அவர்களது தமிழுணர்வு காரணமாக இருந்தாலும் அவைகளை அன்று ஆவலுடன் ஏற்றுக் கொள்வதற்கு, அனைத்து இசுலாமியர் மட்டுமல்லாமல், அன்றைய தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதுமே முனைந்து நின்றது. இல்லையெனில் இத்துணை இலக்கியங்கள் தமிழக இலக்கிய வரலாற்றின் அடுத்தடுத்து தலையெடுத்து இருக்கமுடியாது. அதிலும் குறிப்பாக வடுகர்களது ஆட்சியில் வடமொழியும், தெலுங்கும், அரசியல் ஆதரவு பெற்ற அரசு மொழியான பேறு பெற்ற நிலையில், தமிழுக்கு இவ்வளவு சிறப்பா? அதிலும் தமிழ் இலக்கிய உலகிற்கு புதியவர்களான தமிழக இஸ்லாமியப்புலவர்களால் இதற்குச் சான்றாக இரண்டு வரலாற்று நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். நமக்கு கிடைத்துள்ள இஸ்லாமிய இலக்கியங்களில் தொன்மையாகக் கருதப்படும் “ஆயிரம் மஸாலா” என்ற அரிய நூல் மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்தினர் முன் கி.பி. 1572ல் அரங்கேற்றம் பெற்றுள்ளது. இதனை அந்நூலாசிரியரது பாயிரம்,

“அந்தமுறு மதுரைதனில் செந்தமிழோ"
சங்கத்தில் அரங்கம் ஏற்றி — — —”

என அறிவிக்கின்றது. மற்றொரு நிகழ்ச்சி இந்நூலை அடுத்து இஸ்லாமிய தமிழ் உலகிற்கு கிடிைத்த இணையற்ற இலக்கியக் கொடை ஆலிப்புலவரது மிஹராஜ் மாலையாகும். இதனைப் புனைந்த செவ்வல் மாநகரின் செந்தமிழ்ப் புலவர் இஸ்லாமியர்கள் மிகுதியாக வதியும் கோட்டாறு நகரில் அரங்கேற்றுவதற்கு ஆசைப்பட்டார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். என்றாலும் அன்றைய நிலையில் இஸ்லாமியருக்கு இலக்கியப் படைப்பு ஒன்றின் அரங்கேற்றம் என்பது அவர்களுக்கு முற்றும் புதுமையான செயலாக இருந்தது. அதனால் அம்முயற்சியில் ஈடுபாடும் இணக்கமும் இல்லாது இஸ்லாமியர் காணப்பட்டனர். என்றாலும் அதே நகரில் வாழ்ந்த இந்து கைக்கோளர் தலைவரான பாவாடைச் செட்டியார் என்ற பைந்தமிழ் ஆர்வலரது முயற்சியினால் கி.பி. 1590ல் கோட்டாறு கைக்கோளர் கூடிய சபையில் சிறப்பாக அரங்கேற்றம் பெற்றது. இந்நிகழ்ச்சிகளை இன்றும் நினைக்கும் பொழுது நெஞ்சமெல்லாம் தமிழ் போல இனிக்கின்றது. தாய்மொழியான தமிழ், சாதி, இனம், மதம் ஆகிய குறுக்கு கோடுகளைக் கடந்து நாயக மொழியாக விளங்கி வந்துள்ளதை இந்த நிகழ்ச்சிகள் நினைவூட்டுகின்றன. திறமான புலமையெனில் தமிழோர் பாராட்டி பெருமை செய்தல் இயல்புதானே.

இதனை மதுரைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவா தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அரபு மொழியில் பயிற்சி பெற்றார் அல்லர், அறபு எழுத்துக்களை வாசிக்கவே அறிந்து இருந்தனர். இவர்களிடையே சமயப் பற்றை உண்டாக்கும் பொருட்டு இவர்களுக்கு இலகுவில் விளங்கக்கூடிய தமிழ்மொழியில் நூல்கள் எழுத வேண்டி நேர்ந்தது. எனவே இசுலாமியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தமிழ், நூல்கள், தமிழ் நாட்டு முஸ்லீம்களுக்கு பயன்படக்கூடிய முறையில் இயற்றப்பட்டன. இந்நூல்கள் பெரும்பாலும் அரபு மொழியில், உள்ள இசுலாமிய முதல் நூல்களையே பின்பற்றி இயற்றப்பட்டன” என பிறிதொரு காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

[11]

ஆனால் இது தொடக்கநிலை. பின்னர் அரேபியர்களுக்கும் தமிழ்மக்களுக்கும் ஏற்பட்டு இருந்த கலாச்சார வணிகக் கலப்பால், மொழிநிலையிலும், இலக்கிய நிலையிலும் தமிழ்ச்சமுதாயம், பல புதிய கலாச்சாரக் கூறுகளைத் தன்னுள் ஐக்கியப்படுத் திக்கொண்டது.அரபியர்கள் பரப்பிய இசுலாமிய சமயம் பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல், மெல்ல மெல்ல தமிழ்ச் சமுதாயத்தில் தங்கள் சுவடுகளைப் பதித்து வந்தது. — — — இசுலாமிய கலாச்சாரப் பாதிப்பால், தமிழ் இசுலாமியப் பண்பாட்டின் ஒருசில இணைப்பாலும், பல இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள் தமிழ் மண்ணில் பிறப்பெடுக்கத் தொடங்கின....” என வரைந்துள்ளார். காரணங்கள் எதுவானாலும் கன்னித் தமிழுக்கு புனையப்பட்டுள்ள இஸ்லாமியரது இலக்கிய்த் தொண்டு என்ற அழகுத் தோரண்ங்கள் எண்ணிறந்தன என்பது வரலாறு.

இவைதவிர, தங்களது மூதாதையரது இலக்கியக்கருவூலங்களை மறுத்து, ஊமையராய், குருடர்களாய், செவிடர்களாய் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த அன்னியச் - சூழ்நிலையில், இசுலாமியத் தமிழ்ப்புலவர்கள், தங்களது தேர்ந்த மொழியாற்றலை, தெளிந்த சமய உணர்வுகளை வெளியிடுவதற்கு மட்டுமல்லாமல் தமிழ்மக்கள் அனைவரது தளர்ந்த உள்ளங்களில் தமிழ்ப்பற்றை ஊட்டி, உயிர்ப்பிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கிலும் உந்துதலிலும் இந்த இலக்கியீங்களை அவர்கள் படைத்துள்ளனர். தொட்டாலே கைமணக்கும் தூய தமிழ்ப் பாக்களால் தொடுக்கப்பட்ட அவைகளில் பல, காலத்திற்கு எட்டாம்லே மறைந்து விட்டன.

இசுலாமியத் தமிழ்ப்புலவர்கள் தங்களது இலக்கியங்களில், தாங்கள் உணர்த்தப்போகும் செய்திகளுக்கு அரபிய, பாரசீக. துருக்கி, உருது சொற்களைக் கொணர்ந்து, தமிழ்மொழியின் யாப்பிற்கு இயைந்தவாறு முழுக்க முழுக்க அதே சொற்களை உரிய பொருள் சிதைவிருமல் இருப்பதற்கு அப்படியே

[12] கையாண்டு இருக்கின்றனர். சில சமயங்களில் சிறு மாறுதல்களுடனும், அவைகளைப் புகுத்தி இருப்பதை பல இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன.

அசர், பஜர், லுஹற் :- பாரசீக சொற்கள்
‘,பொருளில் அசர் லுகர் பஜறுளவும் பரிபூரணமாய் -
– ஞானமணிமாலை

அத்தஹிய்யாத் - பாரசீக சொல்
"அத்தகி யாத்தி ஆர்ந்திரு பொருள்கான்
– மி.றாசுமாலை பாடல் 593

அமான் - பாரசீக சொல்தமிழில் அம்சாரியை பெற்று "அமானம்" ஆகியுள்ளது.
"கன்திரு. மகனாக கவிதை உள்ளிடத்து அமானம்
- முகையதீன் புராணம் - பாடல் 10:23

ஹாலிம் - அரபி சொல் தமிழில் "ஆசிம்" என திரிபு பெற்றுள்ளது.
"நிலமிகை ஆசிம் குலம்பெயர் ஒங்கு..."
– சீறாப்புராணம் - பாடல் 687

இஜ்ஜத் - அரபி சொல்
"அரத்தொடும் இஜ்ஜத்தாம் எனப்பகர்ந்தனர்
- முகியத்தின் புராணம் - பாடல் 44:32
 
வலிமா - அரபி சொல் தமிழில் ஒலிமா என திரிபு பெற்றுள்ளது.
"வந்தவர் விருப்பிறண்ணும் வகை ஒலிமாவும் ஈந்தார்
– நாகூர் புராணம் - பாடல் 8:122

ஹதிஸ் - அரபி சொல் தமிழில் "கதிது" என திரிபு பெற்றுள்ளது.
"சொல்லரும் புகழ் தூதர் கதீதுகள்
சின்னச் சீறா - பாடல்: 34:155
 
குறைஷ் – அரபி சொல்
"குறைசியப் குலத் தொரு மதனை
- சீறாப்புராணம் - பாடல் 4:63

லக்காத் - பார்சி சொல்
"பரிகடனென்றும் சக்காத்துப் பொருளலால்
- குதுபுநாயம் - பாடல்:243

குத்துபா - பார்சி சொல்
“சொல்லிய வணக்கத்திற்குரிய கொத்துபா பள்ளி....
-புதுகுஷ்ஷாம். பாடல். 47:49

தஸ்பீ - அரபி சொல்
“நிறத்தகு மனியின் செய்த நெடுந் தசு பீகு தன்னை
முகியுத்தீன் புராணம் - பாடல். 11:41


இவை போன்ற பிறமொழிச் சொற்கள் ஏற்கெனவே தமிழ் வழக்கில் இருந்த காரணத்தாலும், அவைகளை அவர்கள் நன்கு புரிந்து கொள்ள இயலும் என்ற காரணத்தினாலும், இசுலாமியத்தமிழ்ப் புலவர்கள் இத்தகு அரபி, பாரசீக சொற்களை சரளமாக பயன்படுத்தி உள்ளனர்.

அள்ளல உஹதாக நின்றமரம்
ஆதி ரகுமத்தாய்ப் பூத்துப் பூத்து
வல்லற் கொடியாகப் படர்ந்து காப்த்து
பகுதி அஹதாகக் காலியாமே
சொல்லத் தகுமல்லல இப்பொருளை
சுருட்டி மறைக்கின்றேன் ஷரகுக்காக
எல்லை யறிந் துன்னை வணங்க வல்லவர்க்கு
இரங்கி இருப்போனே துணை செய்வாயே”
- தக்கலை பீர் முகமது (வலி)

“நல்ல ஷரி அத்து லித்தாச்சுது
நலமாம் தரீக்கத்து மரமாச்சுது
எல்லை ஹகீக்கத்து பூவாச்சுது
இலங்கும் கனியாச்சு மஃரிபத்து
- நூகுலெப்பை ஆலிம்

இன்னும் ஆர்வம் மிகுதியாக அரபிக் கசீத்தாக்களை அப்படியே தமிழ்ப்பாடலைப் போன்றே பாடிப்படைத்து மகிழ்ந்த புலவர்களும் உண்டு.

மேலும் அரபி கஸீதாக்களை அப்படியே அழகும் பொருளும் வடிவும் வழக்கும் மாறாமல், தமிழில் வடித்த செய்திகளும் உண்டு. பூஸரி (ரஹ்) அவர்களது புர்தாஷரிபு அரபி பகுதி,

“கஸ்ஸஹ்ரி/ ஃபீதர ஃபின்/வல் பத்ரி/ஃபீ ஷரஃ பின்
வல்பஹ்ரி/ ஃபீகரயின் / வத்தஹ்ரி/ ஃபீ ஹிமரி.”

நமது அருமைத் தமிழில்-அதே கண்ணி,

“மலர் போல்வார் மென்மையிலே மதிபோல்வார் மேன்மையிலே
அலை போல்வார் ஈகையிலே ஆண்மையின்ரிற் காலமொப்பார்”

மதுரை-கர்திறு முகைய்தீன் மரைக்காயர்

என தூய தமிழ்ச் சர்மாகத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதனைப் போன்றே உருதுமொழி கவிஞர்களது. “கஜல்களும்” தமிழ்மொழிக் கவிகளாக இசுலாமியப் புலவர்களால் ஏற்றம்பெற்றுள்ளன. இத்தகைய மொழிக்கலப்பால் இசுலாம்வளர்த்தது. இனிய தமிழ் இல்க்கியங்கள் பெருகின. மேலும், இலக்கியத்தமிழ் பயன்பெற்றதுடன் இயல் தமிழும் சொல் வளம் பெற்றது.

இசுலாமியப் புலவர்வழி நின்று, தமிழக இசுலாமியர், தங்களது அன்றாட வாழ்க்கையில், ஏராளமான அரபி, பார்சி, துருக்கி, உருதுச் சொற்களைப் பயன்படுத்தினர். இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். அவைகளில் பட்டியல்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களது மொழி வழக்கில் இனிய தூய தமிழ்ச் சொற்களும் இருந்து வருவது பெருமைப் படத்தக்கதாக உள்ளது. தமிழக இசுலாமிய மக்கள் இந்த நற்பணியை, பெருமையுடன் பாடுகிறார் ஒரு புலவர்.

பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய், மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தை யுரை பிறர், சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே!

-நாகூர் புலவர் ஆபீதீன்

இன்னும் இவைபோல, தொழுகை, நாச்சியார், பசியாறுதல், வெள்ளாட்டி, குடிப்பு, பெண்டுகள், நடையன், நோவு போன்ற தனித்தமிழ்ச் சொற்களும் தமிழக இசுலாமியரது வழக்கில் இன்றும் இருந்து வருவது தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதாகும்.


15

வரலாறு தொடருகிறது



வரலாறு என்பது வற்றாத வளமான ஜீவநதி. அதன் போக்கில், வளைவும், வீழ்வும், விரைவும், இயல்பும் காணப்படலாம். ஆனால் அதன் இலக்கு முன்னோக்கி ஒடிக் கொண்டே இருப்பதாகும். தமிழக இசுலாமியர்களது வரலாறும் அந்த நிரந்தர நியதிக்கு விலக்கானதல்ல. தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைக்குரிய பங்குதாரர்களாகிய அவர்களது நிலையில் இழைவும் குழைவும் ஏற்பட்டுள்ளது. இறையுணர்வு விஞ்சிய சமயச்சான்றோர்களாக வளமெல்லாம் குவித்த வணிகவேந்தர்களாக, அறிவார்ந்த ஆட்சியாளராக, ஆற்றல் மிகுந்த போர் மறவர்களாக விளங்கியது எல்லாம் அவர்களுக்கு கடந்தகாலமாகிவிட்டது. சமூக கல்வி பொருளாதார துறைகளில் பின்னடைந்தவர்களாக, நலிவும் மெலிவும் பெற்றவர்களாக வாழ்ந்து வருவது நிகழ்காலமாக உள்ளது. ஒரு சில இசுலாமியர் தங்களது தொழில் திறமையினாலும் அரசியல் செல்வாக்கினாலும், தோல், தோல் பொருட்கள் “விவசாய விளைபொருட்கள், வெளிநாட்டு வியாபாரத் தொடர்பு கள் காரணமாக சிறிது வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், தமிழக இசுலாமியர் என்ற பெரும் அமைப்பில் இவர்கள் மிக மிகச் சிறு பான்மையினராக இருப்பதால் அவர்களது முன்னேற்றமும் வளர்ச்சியும் தமிழக இசுலாமியர் எய்திய ஏற்றம் என மொத்தத்தில் கொள்வது இயலாததொன்று. மாறாக மனத்தை நெருடக்கூடிய வகையில், ஆயிரக்கணக்கான தமிழக இசுலாமியர், அரபு நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், புருனை நாடுகளிலும்” “வயிறு வளர்ப்பதற்காக” தொழில் செய்து வருகின்றனர். அவர்களது உழைப்பும் வாழ்வும் அந்தந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் மலர்ச்சிக்கும் பயன்பட்டுவருகின்றன. இவர்களால் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்ப்பது எங்ஙனம்? அவர்களது உழைப்பையும் ஊதியத்தையும் நம்பி, தமிழ் நாட்டில் வாழ்கின்ற அவர்களது உற்றார் உறவினர்கள் தன்னிச்சையான முறையில் கல்வியும், தொழில் முன்னேற்றமும் காண்பது எப்பொழுது? அறிவும் ஆற்றலும் பெற்றுள்ள ஏனைய சிறுபான்மை பெரும்பான்மை மக்களுடன் இவர்களும் இணைந்து தேசிய உணர்வும் ஒருமைப்பாடும் பெறுவது எவ்விதம்?. . . . . .

தமிழக இஸ்லாமியரைப் பற்றிய இக்கட்டான இந்த வினாக்களுக்கு விடைகள் வழங்க வேண்டியது எதிர்காலம். என்றாலும்; “பழங்கால மேகங்கள் வருங்கால மழை படைக்கும்” என்று கவிஞர் ஒருவரது வாக்கிற்கிணங்க பழமையில் நனைத்தால்தான் புதுமைகள் புலப்படும், வரலாற்று உணர்வும் பழமை பற்றிய சிந்தனைகளும் அவைகளை ஊக்குவிக்கும் என்ற கருத்தில், போக்கில் தமிழக இசுலாமியரை பல புதிய வரலாற்று, இலக்கியத் தடயங்களுடன் எடுத்துக் காட்டுவது இந்த தொகுப்பு. இது ஒரு தொடக்க முயற்சி.

எனினும் வரலாறு தொடர்கிறது. ... ...

தமிழக இசுலாமியரது வழக்காறுகள்
தமிழ்க் சொற்கள்
அத்தா கசம்
அம்மா கரண்டி
அம்பா கரண்டகம்
அடுப்பங்கரை கரைச்சல்
அலைவாய்க்கரை களரி
அலைவாய்க்கரைவாடி கண் எச்சில்
அசதி கண்ணுக்கரண்டி
அசமந்தம் கண்ணேறு
அடுக்களை காவடி
அடை கொல்லை
அப்பம் சங்கை
ஆப்பம் சம்பல்
ஆவத்தி சிரிப்பாணி
ஆணம் சீரணி, சீக்கு
இசைவு சுளுவாக
இறைச்சி சுண்டல்
இரணம் சேர்மானம்
ஈனம் சோறு
ஈனத்தனம் தலைக்கணம்
ஈறு தட்டுக்கெட்டு
ஈறுகோலி தறுதலை
உறக்கம் தடா
உண்ணுதல் திராணி
உவப்பு துலுக்கம்
உறி துலாம்பரம்
எழுவான் துவையல்
ஏலம் துணைக்கறி
எண்ணைக்குத்தி தொழுகை
ஒழுக்கம் தொழுகைப்பள்ளி
ஒச்சம் நடையன்
ஓதுதல், ஓதிமுடித்தல் நன்மாராயம்
ஓங்காரித்தல் நாசுவன்
கஞ்சி நாச்சியார்
நொந்து கொள்ளல் புளியாணம்
நொந்து போதல் புழக்கம்
நோக்காடு புழுக்கை
நோவு பொரிக்கன் சட்டி
நிரப்பம் மச்சு
நெய்ச்சோறு மருதாணி
நேர்ச்சை மன்றாட்டம்
நொம்பலம் மாங்கலியம்
நோன்பு மாங்கலிய கூழ்
நோன்புக்கஞ்சி மாய்ச்சல்
பசியாறுதல் மாறுபாடு
பதனம் முக்குழி
பள்ளி முந்தி
பருப்பு ஆனம் முருக்கு
படுவான் முற்றம்
படிக்கம் மிளகு தண்ணி
பிள்ளை மிடா
பித்தி வட்டா
பிள்ளைகுட்டி வியஞ்சனம்
பிழை வெள்ளாடடி
புட்டகம் வேசை
 


தமிழக இசுலாமியரது இசுலாமியச் சொற்கள்
 
அல்லாஹ் முல்லா
அவுலியா முகந்
வலி கத்தீப்
நபி முஸலீலா
ரசூல் மிம்பா
பயஹாம்பர் பயான்
இஸ்லாம் இமாம்
ஈமான் கியம்
கலிமா ருக்ஊ
தக்கா ஸக்தா
ஜக்காத் ரக்அக்
ஜன்னத் தரீக்கா
கியாமம் தைக்கா
மஸ்ஜின் பாத்திகா
வகித் துவா
பஜிர் ஆமீன்
லுஹர் ஹவுல்
அசர் சுன்னத்
மக்ரிபு பற்ழு
இஷா வாகிபு
ஜும்ஆ அதானி
லைவாத் ஸப்
இக்காமத் அக்தார்
தக்பீர் முத்தவல்லி
நிய்யத் பக்கீர்
ஸலாத் மூமின்
ஜில்லா முஸ்லீம்
நபில் முன்சீப்
தராவீஹ் அமீனா
மஸ்ஜிது இஜ்ஜத்
தப்ரூக் நஜர்
பரக்கத் கிரஸ்ததார்
ரஹ்மத் தாசில்தார்
மெளல்வீ அமீல்தார்
பௌஸ்தார் கிதாப்
கிலேதார் கலம்
ஹிஜரத் குர் ஆன்
கிதாப் ஜீஸ்வு
அதாப் நுக்கத்
ஹதியா வாப்பா
மகஷர் உம்மா
மதிஹபு தர்பார்
அநபி பட்டா
ஷாபி ராஜினாமா
ஆகிரத் குஸ்தி
ஜியார்த் வாபஸ்
தர்கா துனியா
ஹயாத் கௌமு
மவுத் உம்மத்
வபாத் ஹஜ்
மைய்யத் உம்ரா
ஜனாஸா தவாபு
கபன் தீன்
கத்தம் கிப்லா
இத்தா மௌல்து
தலாக் ஹவால்
மகர் ஹராம்
கபூல் ஹதியா
நிக்காஹ் பிதினா
வலிமா கத்தை
கச்சேரி உதிக்கும்
புகார் பத்வா
கர்தார் நிக்காஹ்
வாய்தா ஜிப்பா
பஸ்லி கமிஸ்
வக்கீல் மோஸ் தல
அசல் சம்ரா
நகல் காமான்
அமல் சராசரி
சுமார் கராமத்
குல்லா மூகியத்
ஸபர் மூபத்
ஸபூர் கினாம்
மின்னாகி ருஹ்
அக்கல் குத்பி
கைதி அளிலியா
ஹக்கீம் தராசு
வசூல் பாங்கு
ஜவாப் பீங்கான்
பைசல் வரவா(இல்லை)
சந்தா கல்கண்டு
வகையறா கஸ்தூரி
ஷர்பத் துதி முஸாபிர்
பிரியாவி மத்ரஸா
குருமா பரி
ஹல்வா கரூர்
ஆகிரத்
 

தமிழ் வழக்கு மாற்றத்துடன்
அவுக அவர்கள்
இவுக இவர்கள்
ஒடல் உடல்
ஒலகம் உலகம்
ஒவப்பு உகப்பு
ஒலக்கை உலக்கை
ஒரல் உரல்
ஒசரம் உயரம்
ஒரைப்பு உரைப்பு
ஒவர்ச்சி உயர்ச்சி
இரெணம் இரணம்
இப்ப இப்பொழுது
நேத்து நேற்று
பொறை பிறை
எடம் இடம்
நெலம் நிலம்
நெறம் நிறம்
 

தமிழ் வழக்கில் அரபுச் சொற்கள்
(மாற்றத்துடன்}

1. இனாம் (இன்னும்)
2. ஹரா (ஹரஃ)
3. மகசூல் (மஹ்சூல்)
4. மிராசு (மிராஃத்)
5. பர்கர் (பாரக்கி)
6. வாரிசு (வாரித்)
7 ஹத்து (ஹகி)
8. ருஜு (ருஜுஸ்)
9. ராஜி (ராஸி)
10. லாயக் (லாயிக்)
11. தாயத்து (தஃலிஸ்)
12. மராமத்து (முராம்மத்)
13. ரையத் (ராரியத்)
14. பதில் (பகல்)
15. கம்மி (கம்மீ)
16. அல்வா (ஹல்வா)
17. கேசரி (கிஷரி)
18. கமீஸ் (காமிஸ்)
19. கடுதாசி (கிர்தாஸ்)
20. தகராறு (தக்றார்)
21 குயர் (கரஸ்)
22. ரீம் (ரிஸ்மா)
23. ரஸிது (ரசிது)
24. தக்கல் (தாக்கில்)
25. பசலி (பசில்)
26. மாமூல் (மஹமூல்)
27. மாஜி (மாஜி)
28. மைதானம் (மைதான்)
29. உருமாலை (ருமால்)
30. தினுசு (தினுசு)
31. ஆபத்து (ஆபத்)
32. சைபர் (ஸிபர்)
33. ஹஜானா (ஹஸானா)
34. மகஜர் (மஹஸர்)
35. ஜாமீன் (ஸாமின்)
36. திவான் (தீவானி)
37. தாவா (தஃவா)
38. தாலுகா (தஅறுக்கா)
39. ஜில்லா (ஸில்லா)
40. வஜா (வஸா)
41. ஜப்தி (ஸப்தி)
42. மசோதர் (மஸ்தா)
43. ஷரத் (ஷர்த்)
44. ஸிக்கூர் (ஸ்க்ர்)
45. அதான் (அகான்)
 
 

முஸ்லிம் தமிழ்ப் புலவர்களது


காணிக்கைகள்

அந்தாதி

1.
2.
3.
4.
5.
6.
7.

8.
9.

10.
11.
12.

13.
14.
15.

16.

திருமக்கா திரிபந்தாதி
திரு மதீனத்து அந்தாதி
திரு மதினத்து வெண்பா அந்தாதி
திரு மதினத்து யமக அந்தாதி
திரு மதினத்து பதிற்றுப் பத்தந்தாதி
நாகை அந்தாதி
மதினத்து அந்தாதி

மதினத்து அந்தாதி
திரு நாகூர் திரிபு அந்தாதி

திரு கோட்டாற்று பத்திற்றுப்பத்து அந்தாதி
திரு பகுதாது அந்தாதி
காரை அந்தாதி

பதாயிகுபத்திற்றுப்பத்து அந்தாதி
மதினா அந்தாதி
சொர்க்கத்து அந்தாதி

கண்டி பதிற்றுப்பத்து அந்தாதி

நாகூர் குலாம் காதிறு நாவலர்
திருச்சி, பிச்சை இபுராகீம் புலவர்



காயல் சேகனாப் புலவர்
பனைக்குளம் அவதானம் அப்துல் காதர் புலவர்
மீர் ஜவாதுப் புலவர், எமனேஸ்வரம்
சதாவதானம் ஷெய்குதம்பி பாவலர், கோட்டாறு

அருள்வாக்கி, அப்துல் காதிறுப்புலவர்
சுல்தான் அப்துல் காதிர் புலவர் காரைக்கால்
அசனா லெப்பைப்புலவர், யாழ்ப்பாணம்
சக்கரைப்புலவர்
சிந்துக்களஞ்சியம் முகமது புலவர் பனைக்குளம்
அருள்வாக்கி




அம்மானை

1.

2.
3.
4.
5.

6.
7.

கதிஜா நாயகி திருமண வாழ்த்து அம்மானை
காட்டுபாவா சாகிபு அம்மானை
சந்ததி அம்மானை
பப்பரத்தி அம்மானை
நபி அவதார அம்மானை

அலியார் அம்மானை
கிசுவா அம்மானை



முத்துமுகம்மது புலவர்
கோஜா சைய்து முகமது புகாரி
சையது மீராப்புலவர், மதுரை
வண்ணக்களஞ்சியப் புலவர்
(உமறுப்புலவரின் மைந்தர்)

காத்தான் குடி அகமது புலவர்




 

கலம்பகம்

1.

2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

கண்டிக் கலம்பகம்

குவாலியர் கலம்பகம்
திரு.மதீனாக்கலம்பகம்
நாகைக் கலம்பகம்
பகுதாது கலம்பகம்
மதினாக் கம்பகம்
பதாயிகுக் கலம்பகம்
மக்காக் கலம்பகம்
மதினாக் கலம்பகம்
விஜயன் அப்துல் ரஹ்மான் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்
குலாம் காதிர் புலவர்(நாகூர்)
பிச்சை இபுராகீம் புலவர்
மீர் ஜவாதுப் புலவர்
குலாம் காதிர் நாவலர் நாகூர்
""
""
ஷெய்கப்துல் காதிர் நாயினார்
ஜீவரத்னக் கவி
ம. காதிறு கனி
எம். கே. எம். அப்துல் காதர் ராவுத்தர் (புலவர்)




கும்மி

 
1. காரண அலங்காரக்கும்மி — தம்பி சாகிபு புலவர்
2. காரணக்கும்மி — ஷைய்கு தாவுது
3. காரணக்கும்மி — முகமது இபுராகிம் சாயபு
4. காட்டுபாவா சாகிபு கும்மி (1905) — அருள் வாக்கி அப்துல் காதிர்
5. கும்மிப்பாட்டு — காதிர் முகையதீன் புலவர்
6. மாப்பிள்ளை லெப்பை ஆலிம் சீவிய சரித்திரக் கும்மி — முகையதீன் கவிராஜர்
7. ஷெய்கு முஸ்தபா வலி காரணக்கும்மி — - -
8. திருக்காரண சிங்காரக்கும்மி — மதார் புலவர்
9. மானுக்குப் பிணை நின்ற மகுடக்கும்மி — பீர் காளைப் புலவர்
10. மெஞ்ஞானக் கும்மி — கச்சியம்மாள்
11. அலங்காரக்கும்மி — முகம்மது மீராசாயிபு புலவர்
12. தீன்விளக்கக்கும்மி — வேடசந்தூர் சுல்தான் முகம்மது சாயபு
13. மீன் வேட்டைக்கும்மி — ஹஸன் பாவா ராவுத்தர்
14. ஞானப்பெண் கும்மி — ஈழம் அமீது என்னும் சாகிபு துரை
15. ஷெய்கு அஸ்ரப் (வலி) கும்மி — பேருவளை அகமது லெப்பை மரைக்காயர்
16. பரிபூரண கும்மி — எ. எஸ். எம். ஷேக்முகம்மது
17. காட்டுபாவா சாகிபு கும்மி — எஸ். எம். சுல்தான் அப்துல் காதிர்
18. நாகூர் காதர் அவுலியா பேரில் புகழ்ச்சிக்கும்மி — ஷேக் அப்துல் காசீம் சாகிபு
19. நான்கு மந்திரி கும்மி காதிர் முகைதீன்
20. சிங்கை ஜிகார் பிரயாணக் கும்மி வி. கி. ஷேக் முகம்மது பாவலர்

 

கோவை

1. ஆசாரக் கோவை அப்துல் மஜிதுப்புலவர்
2. சம்சுத்தாசீம் கோவை சதாவதானம் ஷெய்கு தம்பி
3. கொள்கை மணிக் கோவை கான் முகம்மது புலவர்
4. நாகைக் கோவை சதாவதானம் ஷெய்கு தம்பி பாவலர்
5. பதானந்த கோவை சிததிரக்கிவி சையிது இமாம் புலவர்
6. பொன்மொழிக்கோவை கவிஞர் இறைநேசன்
7. மக்காக் கோவை செவத்த மரைக்காயர் (காரை)
8. மதினாக் கோவை வாப்பு நயினார் புலவர்
9. மக்கா கோவை குலாம்.காதிறு நாவலர்
10. மதுரைக் கோவை
11. மும்மணிக்கோவை
12. முகம்மது இஸ்மாயில் கோவை சதாவதானம் ஷெய்கு தம்பி பாவலர்
13. மெஞ்ஞானக் கோவை அருள்வாக்கு அப்துல் காதிறு
14. முகம்மது காசீம் பொன் மொழிக்கோவை இறைநேசன்
15. விஜயன் அப்துல் ரகுமான் அகப்பொருட் பல்துறைக்கோவை சோதுகுடி அப்துல் காதிர் புலவர்

காவியம்

1. மூசாநபி காவியம் சையிது இஸ்மாயில் லெப்பை மரைக்காயர்
2. தில்லி காவியம் சித்திரக்கவி சையது. இமாம் புலவர்
3. யூசுபு நபி காவியம் கறுத்த சதக்குத் தம்பி புலவர்
4. சாதுலி நாயகம் மலுக்கு முகம்மது முகைதீன் லெப்பை ஹாசியார்
5. அலி பாது ஷா காப்பியம் மதுரை பீர் கான் புலவர்
 

குறவஞ்சி

 
1. குறமாது மீரான்கனி அன்னாவியார்
2. தௌஹீது குறவஞ்சி சுல்தான் அப்துல் காதிர் புலவர்
3. ஞானக்குறம் தக்கலை பீர் முகம்மது அப்பா
4. ஞான ரத்தினக்குறவஞ்சி
5. ஞான ஆசாரக்குறவஞ்சி மௌலானா அப்துல் இபுராகீம் காதிர்
6. பிஸ்மில் குறம் தக்கலை பீர் முகம்மது அப்பா
7. மெய்ஞான குறவஞ்சி அருள்வாக்கி அப்துல் காதிர்
மெஞ்ஞான குறவஞ்சி முஹம்மது லெப்பை
8. மெய்ஞான குறவஞ்சி கச்சிப்பிள்ளை அம்மாள்
9. ஞானரத்தின குறவஞ்சி நயினா முகம்மது புலவர்
முசுக்கன் குறவஞ்சி முஹம்மது லெப்பை
 

சதகம்

1. அப்துல் ரஹ்மான் அரபிச் சதகம் பவானிப் புலவர்
2. சில வாத்துச் சதகம் மீரான் நயினார் புலவர்
3. சிறாசதகம் முகம்மது சுல்தான் மரைக்காயர்
4. முகைதீன், ஆண்டவர் சதகம் மஸ்தான் சாகிபு புலவர்
5. மெய்ஞான சதகம் முகித்தின் சாகிபு
6. மெய்ஞான சதகம் பஷீர் அப்பா நாயகம்
7. திரு நபி சதகம் பொதக்குடி அப்துல் ரஹிமான்
8. பத்து சதகங்கள் மச்சரேகை சித்தன்
9. குதுபு சதகம் கிதுருமுகம்மது மரைக்காயர்
10. மதினமா நகர் தோத்திர சதகம் கருணை அகமது தாஸ்
11. இரசூல் சதகம் கவிஞர் அப்துல் காதிர்
12. முனாஜாத் சதகம் சுல்தான் அப்துல் காதர் மரைக்காயர்
13. தரிசனமாலை சதகம் மீரான் சாகிபு
 

சிந்து

1. அபுரூபரெத்தின அலங்காரச் சிந்து பலபுலவர்கள்
2. எண்ணைச் சிந்து மரக்காயர் புலவர்
3. ஒலி நாயகர் அவதாரச் சிந்து மஹ்முது இபுராகிம் லெப்பை (ஜெயவீரமங்கலம்)
4. கப்பற்சிந்து ஹம்ஸா லெப்பை
5. தர்கா கப்பல் சிந்து முகைதீன் பிச்சை புலவர்
6. கோவை மணிச்சிந்து முகம்மது இபுராகிம் கான் புலவர்
7. நாகூர் ஆண்டவர் காரணச் சிந்து பீர்கானைப்புலவர்
8. பலவர்ணச் சிந்து அப்பாஸ் ராவுத்தர்
9. பயஹம்பர் பலவர்ணச் சிந்து மதுர கவி செய்கப்துல் காதிர் புலவர் (முத்துப்பேட்டை)
10. பூவடிச் சிந்து காளை அசனவிப்புலவர் (மேலப்பாளையம்)
11. ரத்தினச் சிந்து முகம்மது ஷாஹுமஸ்தான்
12. நவநீத ரத்னலங்காரர் சிந்து சீனி காதிர் முகைதீன் (தொண்டி)
13. மதினாச் சிந்து பெரியபட்டினம் முகம்மது முகைதீன் புலவர்
14. அற்புத வெள்ளச் சிந்து வி முகம்மது அலிப்புலவர்
15. அலங்கார காவடிச் சிந்து
16. திரு நாகை தொண்டிச் சிந்து எச் இசுமாயில் கான் சாகிப்
17. அலங்காரச் சிந்து ஜே. எம். கனிசாகிப்
18. புகழ் அலங்காரச் சிந்து டி. என். ஜலால சாகிப்
19. தங்கச் சிந்து எம். காசிம் கான்
20. வேடிக்கைச் சிந்து முகம்மது அலாவுத்தீன் வி. முகம்மது அலிப் புலவர்
21. பலசந்தவழிநடை அலங்காரச் சிந்து வி. ஏ. கே. முகம்மது அப்துல்லா ராவுத்தர்
22. அலங்கார வழிநடைச் சிந்து அப்துல் ஹமீது
23. வழிநடை அலங்காரச் சிந்து பி. எம். கே. முகைதீன் ராவுத்தர்
24. பழனி ஆண்டவர் வழிநடை சிந்து காதிர் முகைதீன்ராவுத்தர்
25. குலுமாயி அம்மன் அலங்காரச்சிந்து எஸ். காதர் இபுராகீம் எஸ். கே. நாகைய நாயக்கர்
26. மூளி அலங்காரி நொண்டிச்சிந்து எச். இசுமாயில் கான் சாகிபு
27. வழிநடைச் சிங்கார சிந்து சப்ஜி சாகிப்
28. மகா பிரளயச்சிந்து க. வி. முகம்மது மீரான்
29. ரங்கோன் வழிநடைச்சிந்து ப. ரா. செய்யது அப்துல்சாகிப் (இளையான்குடி)
30. வண்ணச்சிந்து மானாமதுரை மஸ்தான்கனி அம்பலம்
 

ஞானப்பாடல்

1. ஞானப்புகழ்ச்சி தக்கலை பீர்முகம்மது அப்பா
2. ஞானப்பால்

3. ஞானப்பூட்டு

4. ஞானக்குறம்

5. ஞான ஆனந்தக்களிப்பு

6. ஞான நடனம் தக்கலை பீர்முகம்மது அப்பா
7. ஞான சித்தி

8. ஞான உலக உருளை

9. ஞானக் கண்

10. ஞானத்துறவு கோல்

11. ஞான மெய்ஞான சரநூல்

12. ஞான விகடச் சமர்த்து

13. திருநெறி நீதம்

14. ஞானானந்த ரத்தினம் அப்துல்கனி புலவர்
15. ஞானரத்தின சாகர மதாரிப்யா குஞ்சாலி சாகிபு
16. ஞான ஒப்பாரி செய்யிது அலி வாலை குருமஸ்தான்
17. ஞானோதயப் புஞ்சம் ஷைக் உதுமான் லெப்பை
18. ஞானப்பிரசன்னாகர ரத்தினம் செய்யிது முகம்மது காதிரி
19. ஞானக் களஞ்சியம் பஷீர் அப்பா என்ற முகையதீன் சாயபு
20. ஞான ரத்தின சாகர மதாரிப்யா காடைலெப்பை கலீபாசாகிபு
21. ஞானரை வென்றான் சின்ன ஆலிம் அப்பாபுலவர்
22. ஞான வாக்கியம் ஷெய்கு அப்துல் காதிர் வாலைமஸ்தான்
23. மெய்ஞானத்தூது ஷெய்கு முஸ்தபா ஆலீம்
24. ஞான முச்சுடர் பதிகங்கள் தக்கலை பீர்முகம்மது அப்பா
25. மெஞ்ஞான புகழ்ச்சி ஷெய்கு முகம்மது அபதுல்லா சாகிபு வாத்தியார்
26. மெஞ்ஞான ஆனந்தக் களிப்பு ஷெய்கு பஷீர் அப்பா
27. ஞானாமிர்த சாகரம் ரசூல்பீவி
28. ஞானப்புகழ்ச்சி ஷெய்கு மன்சூர் லெப்பை
29. ஞான ரத்தினாவள் தக்கலை பீர் முகம்மது அப்பா
30. மெஞ்ஞானத் திருப்பாடல் ஞானியர் சாகிபு
31. தக்கலை பீர் முகம்மது அப்பா
32. ஷெய்கு முகையதீன் மலுக்கு முதலியார்
33. மெஞ்ஞான திறவுகோல் அப்துல் ரகுமான் புலவர்
34. அருணோதய ஆணந்தம் முகம்மது ஹனிபா
35. தத்துவ ஆனந்ததீபம் முகம்மது மஸ்தான்புலவர்
36. மெஞ்ஞானத் தெளிவு முகம்மது மஸ்தான் புலவர்
37. பரம்பொருள் விளக்கம்
38. காமிய - நிஸ்காமிய நிரூபணம்
39. மனோன்மணி கண்ணிகள்
40. மனோன்மணி கண்ணிகள் குணங்குடியார்
41. பரா பரக் கண்ணிகள்
42. மெய்ஞான குறவஞ்சி அருள் வாக்கி
43. ஞானானந்தக்களிப்பு சீனி முகம்மது புலவர் இளையாங்குடி
44. நாகூர் கந்தூரிப் பாடல்கள்
45. ஞான காரணம் ஞானியார் சாகிபு
46. ஞான தோத்திரம்
47. ஞான பஃறொடை
48. ஞான அம்மானை
49. ஞான குருவடி விளக்கம்
50. ஞானத் திருந்தானம்
51. ஞானத் திருப்புகழ்
52. ஞான வேதாட்சா வருக்கம்
53. ஞான பிள்ளைத்தமிழ்
54. ஞானக்கும்மி
55. ஞான அந்தாதி
56. ஞான ஆனந்தம்
57. ஞான ஏகாதசம்
58. ஞான தேவராகம்
59. ஞானக் விண்ணப்பம்
60. ஞான ஆனந்தவதி
61. ஞான வாழ்த்து
62. ஞான கீதாமிர்தம்
63. ஞான மன்றாட்டம்
64. ஞானான பிரசின்னா ரத்தினம் காயல் செய்யது முகம்மதுல் காதிரி
65. திரு ஞானப்பத்து கண்ணகுமது மகுதும் முகம்மது புலவர்
66. மனோபாஷிதப் பதிஞானம்
67. மெய்ஞான மங்கள விவாகம் முகைதின் பிச்சை புலவர்
 

கீர்த்தனம்

1. சீறாகீர்த்தனம் செய்யிது அபுபக்கர் புலவர்
2. காரை மஸ்தான் கீர்த்தனம் அமுதகனி சாகிபு மரைக்காயர்
3. கப்படா சாகிபு கீர்த்தனம்
4. உறுதி மாலைக் கீர்த்தனம் சையிது ஹாஜிக்கு உம்மா
5. பெருமானார் மீது கீர்த்தனம் முகமது மஸ்தான் புலவர்
6. சுகிர்த மெஞ்ஞான சங்கீர்த்தனம் புலவர்
7. மதுரவாக்கிய கீர்த்தன ரஞ்சிதம் பீர்முகம்மது புலவர்
8. ஆனந்த கீர்த்தனை முகம்மது சுல்தான் மரைக்காயர்
9. பஞ்சாமிர்த கீர்த்தனை அப்துல் ரஷீது ஆலீம்
10. அலங்கார கீர்த்தனம் கௌது பாவா ஷெய்கு முகம்மது
11. கீர்த்தனைச் சொத்து சரீபு சாயபு
12. மெஞ்ஞான ரத்னம் லங்கார கீர்த்தனம் தக்கலை பீர்முகம்மது அப்பா முகம்மது ஹம்சா லெப்பை
13. திருப்பதம் என்று வழங்கா நின்ற கீர்த்தனம் பா. அகமதலி
14. கீர்த்தன ரஞ்சிதம் பி. எஸ். முகம்மது அப்துல்லா லெப்பை ஆலீம்
15. நவரச கீர்த்தனம் ஷேக் தாவுது
16. பக்திரச கீர்த்தனம் எப். எம். அப்துல்லாகான்
17. கீர்த்தனை மாலிகை எஸ். எம். சையதுமுகம்மதுஅலி
18. மெஞ்ஞான அமிர்த சங்கீத கீர்த்தனம் ஹாலின் முகைதீன் ஆலிம் சாகிபு
19. சங்கீத கீர்த்தன மாலிகை எம். ஏ. முகைதீன் அப்துல் காதிர் புலவர்
20. கனகரத்தின கீர்த்தனை எம். எஸ். பக்கீர் முகம்மது லெப்பை
21. நவரச கீர்த்தனை முகம்மது அப்பாஸ்
22. நவரச கீர்த்தன மஞ்சரி பத்தமடை முத்துக்கனி ராவுத்தர்
23. மெஞ்ஞான விளக்க முத்தக கீர்த்தனை முகம்மது ஷா மஸ்தான் சாகிப்
24. கீர்த்தன மாளிகை சையது முகம்மது ஹாலீம் சாகிபு
25. சம்பூர்ண ஞான சமரச கீர்த்தனம் சாகீர் முகைதீன் முஸ்தான் சாகிபு
26. அமிர்த மெஞ்ஞான அலங்கார கீர்த்தனம் கே. நயினார் முகம்மது
27. பேரின்ப நவரச கீர்த்தன அமிர்தம் சையது இமாம் சாகிபு
28. முகம்மதிய ஜாவலி கீர்த்தனம் கே. சிவகுர்யநாராயண பிள்ளை
29. சுவராஜ்ய சதேசிக் கீர்த்தனை எஸ். எஸ். சையது முகம்மது
30. மதுர வாக்கிய கீர்த்தனா சங்கிரகம் காயல் மஹமூது புலவர்
31. பத்திரச கீர்த்தனை என். முகம்மது அயினுத்தீப் சாகிபு
32.
33. அப்துல் ஹமீது கான்
34. பஜனைக் சீர்த்தனங்கள் இஸ்மாயில் கான்
35. கீர்த்தனை திரட்டு (1891) முகம்மது அப்துல் காதிர், இலங்கை
 
திருப்புகழ்
1. ஆதமலை திருப்புகழ் பிச்சை இபுராகீம் புலவர்
2. சந்த திருப்புகழ் (1909) அருள்வாக்கி, அப்துல் காதிறு
3. நவரத்தினத் திருப்புகழ் அளகு லெப்பை புலவர், யாழ்ப்பாணம்
4. (நாயகம்) திருப்புகழ் காசீம் புலவர், காயல்
5. நாயகத் திருப்புகழ் பிச்சை இபுராகீம் புலவர்
6. முகைதீன் ஆண்டவர் திருப்புகழ் செய்யிது முகைதீன் கவிராஜர்
7. திருப்புகழ் பாமாலிகை சுல்தான் மரைக்காயர்
8. மனோரஞ்சித திருப்புகழ் சைய்யது முகம்மது அப்துல்ரகுமான்
9. பாத்திமா நாயகி புகழ் கே. பி. ஏ. முகம்மது
10. வைத்திய திருப்புகழ் தனிப்பாடல்களும் ஹக்கீம் முகம்மது அப்துல்லா
11. முகைய தீன் ஆண்டவர் பேரில் திருப்புகழ் கண்ணகுமதுமகு தும் முகம்மது புலவர்

பதம்

1. பதங்கள் சாகுல் ஹமீது
2. பலவித்துவான்கள் பதம் மக்தும் முகம்மது
3. காரைக்கால் வழி நடைப்பதம் அப்துல் அஜிஸ் மரைக்காயர்
4. முனாஜத்து பதம் எம். ஐ. ராவுத்தர்
5. சல்ராத் பதம் காதிர் முகைதீன் ராவுத்தர்
6. விகித்திர பதம் ஷேக் சாகிப்
7. நாகூர் பதம் காதிர் முகைதீன்
8. தௌகீது மாலையும் பதமும் முகம்மது சீனிப்பலவர்
9. நாகூர் காதர் அவுலியா பதம் ஷேக் நூர் சாகிப்

பள்ளு

1. திருமக்கா பள்ளு ரஹீம்கான் சாகீப்

படைப்போர்

1. செய்தத்து படைபோர் குஞ்சு மூசாப்புலவர்
2. மலுக்கு முலுக்கின் படைப்போர் கண்ணகுமது மருதும் புலவர்
3. இரவு சூல் படைப்போர்
4. இந்திராயன் படைப்போர் (ஹி 1150) அசன் காளைப்புலவர்
5. இபுனியன் படைப்போர்
6. உச்சிப்படைப்போர் அசன் காளைப்புலவர்
7. தாக்கிப் படைப்போர் - அசன் காளைப்புலவர்
8. காசிம் படைப்போர் அப்துல் காதிது ராவுத்தர்
9. சக்கப் படைப்போர் முகைதீன் புலவர்
10. வடோசி படைப்போர் வரிசை முகைதீன் புலவர்
11. ஹுசேன் படைப்போர் காளை அசனலிப் புலவர்
12. சல்கா படைப்போர் குஞ்சு மூஸாப்பலவர்
13. தபுகசுப் படைப்போர் செய்யது முகம்மது புலவர்
14. இறவு சுல்கூல் படைப் போர் குஞ்சு மூசுப்புலவர்
15. காசீம் படைவெட்டு மதுரை பீர்கான் புலவர்

மஞ்சரி

1. புகழ்ப்பா மஞ்சரி நெய்னா மரைக்காயர்
2. கீர்த்தன மஞ்சரி நெய்னா மரைக்காயர்
3. தேவார மஞ்சரி நெய்னா மரைக்காயர்
4. சங்கீர்த்தன மஞ்சரி அப்துல் மஜீது புலவர்
5. நாயகவாக்கியமஞ்சரி ஷெய்கு தம்பி புலவர்
6. பாமஞ்சரி பீர்முகம்மது புலவர்
7. வினோதபதமஞ்சரி அருள்வாக்கி
8. பாமஞ்சரி முகம்மது
9. தோத்திர மஞ்சரி எம். பி. அப்துல் அஜீஸ்
10. களதந்திரமஞ்சரி த. குலாம் ரசூல்
11. நீதிசாரமஞ்சரி ஹக்கீம் முகம்மது
12. ரஸவாதமஞ்சரி ஹக்கீம் முகம்மது
13. ஞானகுலமஞ்சரி அப்துல்லா சாகிபு
14. மெத்தாள மஞ்சரி எம். ராவுத்தர்
15. நவரத்தின மஞ்சரி எப். எம். ஏ. காஜாமுகைதீன்
16. கீர்த்தனை மஞ்சரி இ. எஸ். பக்கீர் மஸ்தான்
17. புகழ்பா மஞ்சரி அகமது இபுராகீம்
18. தியான மஞ்சரி மீரா நாயினார் கா-கமுதி
19. கரமகவிமஞ்சரி பலவர் சோதுகுடி
20. பிரதாப மஞ்சரி எம். கே. எம். அப்துல்காதிர்

பிள்ளைத்தமிழ்

1. நபி நாயகம் பிள்ளைத்தமிழ் பீர் முகம்மது புலவர் (தொண்டி}
2. நபி நாயகம் பிள்ளைத்தமிழ் செய்யது அனபியா சாகிபு
3. நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் ஷெய்கு மீரான் புலவர்
4. நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ் நாஞ்சில் ஷா
5. ரசூல் நாயகம் பிள்ளைத்தமிழ் மீரான் சாகிபு புலவர் (மேலப்பாளையம்)
6. பாத்திமா நாயகி பிள்ளைத்தமிழ் மீரான்சாகிபு புலவர்
7. பெருமானார் பிள்ளைத்தமிழ் காஜா முகைதீன்
8. முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் மீர் ஜவாது புலவர்
9. முகைதீன் பிள்ளைத் தமிழ் சையது முகைதீன் கவிராயர்
10. முகைதீன் ஆண்டவர் காரண பிள்ளைத்தமிழ் (1895) அருஸ்ஸாகினி அப்துல் காதிறு புலவர்
11. உமருகுருவில்லா பிள்ளைத்தமிழ் ...௸
12. நாகூர் பிள்ளைத்தமிழ் சாகுல் ஹமீதுப் புலவர்
13. நாகூர் பிள்ளைத்தமிழ் நாகூர் ஆரிபு நாவலர்
14. நாகூர் பிள்ளைத்தமிழ் பிச்சை இபுராகீம் புலவர்
15. மீரான் சாகிபு பிள்ளைத்தமிழ் பாட்சா புலவர்
16. சாகுல் ஹமீது நாயகம் பிள்ளைத்தமிழ் மேலப்பாளையம் பவஷீர் அப்பா
17. தைக்காசாகிபு பிள்ளைத் தமிழ் (பேரில்) திருச்சந்தம் 1914 அருள் வாக்கி
18. நாகூர் மீரான் பிள்ளைத்தமிழ் மதுரகவி பாட்சா புலவர்
19. நபிச்சக்கரவர்த்தி நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ் தை. கா. காதர்கனி
20. ஆயிஷா நாயகி பிள்ளைத்தமிழ் கவி. கா. மு. ஷெரிப்
21. ஸாலிஹ் வலியுல்லா பேரில் திருச்சந்த பிள்ளைத்தமிழ் ஷெய்கு முகம்மதுமைதீன் லெப்பை
22. நத்ஹர் வலி பிள்ளைத்தமிழ் பிச்சை இபுராகிம்புலவர்
23. ஞான பிள்ளைத்தமிழ் ஞானியார் சாகிபு
24. ஷெய்குதாவுது கலிமில்லா சொர்ணகவி நயினார்
பிள்ளைத்தமிழ் முகம்மது பாவா புலவர்
25. கோட்டாற்று பிள்ளைத்தமிழ் ஷெய்கு தம்பி புலவர்
26. தைக்கா சாகிபு (வலி) பிள்ளைத்தமிழ் அப்துல் காதிர்
27. சையிது முகம்மதுபீர் தங்கல் பிள்ளைத்தமிழ் மீராக்கனி புலவர்
28. ஸாலிஹ் (வலி) திருச்சந்த பிள்ளைத்தமிழ் ஷெய்குமுகம்மது காதிர் மீரா லெப்பை
29. திருச்சந்த பிள்ளைத்தமிழ் அருள் வாக்கி
30. நபிகள் நாதர் பிள்ளைத்தமிழ் கவிஞர் மு. சண்முகம்
31. பாளையம் கேசிஎம் பிள்ளைத்தமிழ் கவிஞர் ஆரிபு

பாடல் திரட்டு

1. குணங்குடி மஸ்தான் திருப்பாடல் திரட்டு
2. ஞானியார்சாய்பு திருப்பாடல் திரட்டு
3. தக்கலை பீர் முகம்மது திருப்பாடல் திரட்டு
4. மெளனகுரு ஷெய்கு மஸ்தான் திருப்பாடல் திரட்டு
5. செய்கப்துல் காதிர் நயினார் லெப்பை பாடல் திரட்டு
6. ஐதுருசு நயினார் புலவர் பாடல் திரட்டு
7. அசனா லெப்பை பாடல் திரட்டு
8. பல புலவர் பாடல் திரட்டு
9. ஞானத்திருப்பாடல் திரட்டு
10. திருமெய்ஞான திருப்பாடல் திரட்டு
11. பல வண்ணத்திரட்டு அருள்வாக்கி அப்துல்காதிர்
12. ஞான மணித்திரட்டு
13. திருப்பாடல் திரட்டு சின்னமகுது மகுதும் புலவர்
14. காலாங்குடி மச்சரேகை சித்தர்பாடல் திரட்டு
15. திருமெய்ஞான சாகரத் திருப்பாடல் திரட்டு ஹைருலஸா சுலைமான் சாதிக்
16. திருப்பாடல் திரட்டு சித்திரகவி செய்யது இமாம் புலவர்
17. திருப்பாத திரட்டு ஏ. கே. பிச்சை இபுராகிம்புலவர்
18. பலபாட்டுத்திரட்டு
19. பிரபந்ததிரட்டு வி. கே. எம். அப்துல்காதர்
20. மனோரஞ்சித திரட்டு எம். பி. முகம்மது ஜனனி
21. சித்திரகவி முதலிய பல்வகை புலவர் நாயகம்
22. மெஞ்ஞான அற்புத முறுத்தும் கீர்த்தனையும் பதிகமும் முகைதீன் சாகிப்
பிரபந்ததிரட்டு

புராணம்

1. சீராப்புராணம் உமறுப் புலவர்
2. சின்னச்சீறா பனி. அகமது மரைக்காயர்
3. புதுருஸ் ஷாம் சேகனாபுலவர்
4. மூசாநபி புராணம் முகம்மது நுாறுத்தின்
5. கோட்டாற்றுப்புராணம் அருள்வாக்கி அப்துல்சாதிர்
6. நாகூர் புராணம் (1893) குலாம் காதர் நாவலர்
7. முகிய்யதன் புராணம் பத்ருத்தின் புலவர்
8. ஆரிபு நாயக புராணம் அசனாலெப்பை (யாழ்)
9. தீன்விளக்க புராணம் வண்ணக்களஞ்சிய புலவர்
10. திருக்காரணப்புராணம் சேகனாப்புலவர்
11. கெளது நாயகர்காரண புராணம் சொண்டாவககம்மது ஷரிபு
12. ராஜநாயகம் வண்ணக்களஞ்சிய புலவர்
13. வேதபுராணம் காயல் பெரிய லெப்பை ஆலிம்புலவர்
14. சீறு சரிதை யாழ் சேகுதம்பி பாவலர்

பதிகம்

1. மும்மணிப்பதிகம் மஸ்கூது ராவுத்தர் - ராஜபாளையம்
2. குணங்குடி பதிகம் சையது முகைதீன் புலவர்
3. மெளன கிமைகிய பதிகம் காதீர் முகைதீன் ராவுத்தர்
4. முருசாத் பதிகம் ஹஸ்ரத் ஷெய்னா பாவா ஷெய்கு அப்துல் காதிரிய்யா புலவர்
5. பிரான்மலைப்பதிகம் (1887) அருள்வாக்கி, அப்துல்காதிறு
6. தேவாரப்பதிகம் -ஜை-
7. கண்டி சிகாபுத்தின் வலிபதிகம் அருள்வாக்கி
8. முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது (வலி) பதிகம்
9. சலவாத்துப் பதிகம்
10. பதாயிகுப் பதிகம்
11. காணுமிய்யா சாகிபு (வலி) பதிகம்
12. சம்சுகான் (வலி) பதிகம்
13. அஹ்மது பதிகம் சீனிமுகம்மது புலவர்
14. மும்மனியாரப்பதிகம் எஸ். சையது போ. நா. மஸ்ஹீது ராவுத்தர்
15. உரம்சாகிபு என்னும் குரங்கு மஸ்தான் அவர்கள் திருப்பதிகம் அப்துல்ரகீம்
16. பரப்பிரம்மபதிகம் அப்துல் காதிர் எம். கே. எம்.சோதுகுடி
17. தாளமுச்சுடர் பதிகங்கள் தக்கலைபீர்முகம்மது கலிபா
18. ஹக்கு பேரில் பதிகம் கண்ணகுமது மகுதும் முகம்மது புலவர்
19. மக்கா பதிகம்
20. பகுதாது பதிகம்
21. நாகூர் பதிகம்
22. காகினுார் பதிகம்

நாமா

1. நூறு நாமா சையிது அகமது மரைக்காயர்
2. அலி நாமா சையது முகம்மது அன்பியா
3. இபுலிசுநாமா சையிது அபூபக்கர் புலவர்
4. இதுஷாது நாமா ஷாமுநெய்னாலெப்பை
5. தொழுகை உறுதி நாமா
6. நபிகத்தில் நாமா அப்துல் காதிர் சாகிபு
7. பராஸ்நாமாவும் ஆளுநாத்நாமாவும் வாலை அப்துல்லகாப்
8. மிஸ்ராக்நாமா மதாறு சாகிபுபுலவர்
9. முதல் சோஷாநாமா வாலை அப்துல் வகாப்
10. ஸக்கராத் நாமா அப்துல் காதிர் சாகிபு
11. ஸக்கராத் நாமா
12. தஜ்ஜால் நாமா முகம்மது இபுராகீம்
13. தொழுகை நாமா மாலிக் சாகிபு புலவர்
14. பதுஜ நாமா அப்துல் வஹாப்
15. முனாஜாத் நாமா முகம்மது இஸ்மாயில்
16. ஒலுவு நாமா முகம்மது கமாலுத்தீன்
17. முக்காக் நாமா பி. அப்துல் வஹாப் காவில்
18. ஷேக் அகமது ஆலிம் சாகிபு
19. கோஷா நாமா அப்துல்வஹாப்
20. மஜ்னு நாமா மக்காம் புலவர்
21. தொழுகை நாமா அபுல் பார்க்
22. ஊஞ்சல் நாமா இபுராகீம் காதர் சாகிப்
23. அல்ஹம்து என்னும் நாட்டை நாமா
24. வத்கரநாமா முகம்மது கமாலுத்தீன்
25. தொழுகை நாமா மாலிக் சாகிப்புலவர்
26. நூர் நாமா செய்யிது அகமது புலவர் (காயல்)

நாயகம்

1. ஆரிபு நாயகம் குலாம் காதிறு நாவலர்
.2 இராஜநாயகம் மீசல் வண்ணக்களஞ்சியம்
3. குத்பு நாயகம் சேகனாப்புலவர்
4. ஷாதலி நாயகம் முகம்மது முகைதீன்புலவர்

மசாலா

1. ஆயிரம் மசாலா வண்ணப்பரிமளப் புலவர்
2. நூறு மசாலா பல புலவர்கள்
3. வெள்ளாட்டிய மசாலா சையிது அப்துல் காதர் லெப்பை

மாலைகள்

1. அடைக்கலமாலை சின்னமரைக்காயர் என்ற அப்துல்காதிர் ஆலிம், (கீழக்கரை)
2. அருள்மணி மாலை செ.ஆ.சீனி ஆபில் புலவர்
3. அருள்மக்கா காரணமாலை முகம்மது லெப்பை ஆலிம்
4. அருள்மணிமாலை பாட்சா புலவர்
5. அனபிமத்ஹபுபறுலு மாலை முகம்மது மீரா லெப்பை
6. அஜபு மாலை குஞ்சு மூஸாப் புலவர்
7. அதபு மாலை ஷாமுநைனாலெப்பை ஆலிம்
8. அருக்கான் மாலை மீரான்கலி அன்னாவி
9. அகந்தெளியுமாலை முகம்மது ஹம்ஸா லெப்பை
10. அபுஷகுமா மாலை செய்தக்காதி புலவர்
11. அருண்மணி மாலை அட்டாவதானம், பாட்சா புலவர்
12. ஆரிபு மாலை அருள்வாக்கி
13. இறையருள் மாலை பேராசிரியர் கபூர்
14. ஈடேற்ற மாலை பீர்முகம்மது சாகிபு
15. ஏகதெய்வ தோத்திர மாலை சையிது முகம்மது புலவர் ஆலிம்
16. கன்கங்கராமத் மாலை சையிது ஹாகியா உம்மா
17. இராஜமணி மாலை பக்கீர் மதார் புலவர்
18. கனகாபிஷேக மாலை கனக கவிராயர்
19. கல்வத்து மாலை காளை அசன அலிபுலவர்
20. கல்வத்து நாயகம் இன்னிசை மாலை ஷெய்கு தம்பி பாவலர்
21. காரணமாலை
22. கல்யான புத்அத் மாலை முகம்மது மீரான் மஸ்தான் புலவர்
23. கியாமத் அடையாள மாலை தருகா உமறு கத்தாப் புலவர்
24. கோத்திரமாலை சேகனாப்புலவர்
25. கலிதத்துப் புர்தா மாலை ம.கா.மு. காதிர் முகைதீன் மரைக்காயர்
குருங்கோத்திரமாலை குலாம் காதிர் புலவர்
26. குத்புநாயக பாமாலை முகம்மது லெப்பை ஆலீம்
27.
28.
29. கேசாதிபாதமலை நாகூர் முகம்மது புலவர்
30. ஒசியத்துமாலை
31. உபதேசமணிமாலை ஷெய்கு உதுமான் ஹகீம் சாயபு
32. சமுத்திரமாலை குலாம் காதிறு நாவலர்
சக்திதானந்த மாலை
33. சனி எண்ணமாலை பாலகவி பக்கீர் சாகிபு
34. சதகமணிமாலை பண்டித முகம்மது அபூபக்கர்
35. சலாத்துல் அரிகான் மாலை ஷாமுநெய்னா லெப்பை ஆலீம்
36. சின்ன ஹதீது மாலை ஷாம் விகாபுத்தீன் (வஸி)
37. சீறா காரணமாலை ஷெய்கு தம்பி புலவர்
38. சுல்தானுல் ஆரிபீன் மாலை சையிது ஹாஜியா உம்மா
39. சுல்தானிய மாலை அப்துல் காதிர் ஆலீம் அபிராமம்
40. சுல்தான் இபுராகீம் இபுனு அதிகம் காரணமாலை
41. சுன்னத் நபி ஸலவாத் யூசுபு
42. ஞானப் பிரகாச மாலை அருள் வாக்கி
43. ஞானமணி மாலை பீர்முகம்மது அப்பா
44. ஞானமதி அழகுமாலை மீராசா ராவுத்தர்
45. ஞானமணி மாலை சீனி ஆபில் புலவர்
46. ஞானமணி மாலை பாட்சா புலவர்
47. தர்ம ஷபா அத் மாலை ஷேக்கனாப் புலவர்
48. தமீம் அன்சாரி மாலை ஷெய்கு லெப்பை
49. தபுபா மாலை அஹ்மதி மர்தி மவுலா சாகிபு
50. தக்க கருத்துமாலை முகம்மது மீரான் மஸ்தான் சாகிபு
51. தம்பாக் மாலை
தங்கா மாலை குலாம் காதிது நாவலர்
52. தஸ்பீக் மாலை கார்பா லெப்பை புலவர்
53. திரு தற்கலை ஈரட்டகமாலை வுைகு பாவா சுலைமான் காதிரி
54. திருமணி மாலை சேகனாப் புலவர்
55. திருமறை மாலை பேராசிரியர் கபூர்
56. திரு மதீனத்து அந்தாதி மாலை அ.கா. இபுராகீம் புலவர்
57. திரு மதீனத்து அந்தாதி மாலை அருள்வாக்கி
58. திரு மதீனத்து மாலை பிச்சை இபுராகீம் புலவர்
59. தீதாறுமாலை ஷெய்கு பீர்முகம்மது
60. தீன்மாலை அகமது நெய்னாப் புலவர்
61. தறஜாத்மாலை குலாம் காதிது நாவலர்
62. தோகைமாலை ஷாம் ஷிகாபுத்தீன் (வலி)
63 தீன்விளக்க சந்தமாலை சீனி ஆபில் புலவர்
64. தொண்டி மோனகுரு ஷைகுமஸ்தான் மீது நான்மணி மாலை பிச்சை இபுராகீம்புலவர்
65. நபிமணி மாலை சா. அப்துல் காதர்
66. நபிகள் மீரானின் தோத்திர மாலை ஷைகு அப்துல்சாதிக்
67. நவமணிமாலை மரைக்காயர் புலவர்
68. நவமணிமாலை ஐதுருஸ் நயினார் புலவர்
69. நளின மொழிமாலை நெய்னாமுகம்மது புலவர்
70. நஸீகத்துல் மூமினின் மாலை காதிர் முகைதீன் புலவர்
71. நல்லதம்பி சர்க்கரையார் நான்மணி மாலை கே. அப்துல் சுக்கூர்
72. நாகை மணிமாலை அட்டாவதானம் பாட்சாப் புலவர்
73. நாலுயார்கள் மாலை ஷாம் ஷிகாபுத்தீன் (வலி)
74. நாளித்து மாலை உதுமான் லெப்பை
75. நாகை மணிமாலை ஹஸ்ரத் ஜெய்லானி பக்கீர் லெப்பை ஆலிம்
76. நெஞ்சறிவு மாலை ஷாம் ஷிகாபுத்தீன் (வலி)
77. நூறு திருநாம முனாஜாத் மாலை ஷெய்கப்துல் காதிறு
78. பலுாலுான் அசுசாபி மாலை அமுதகனி சாகிபு மரைக்காயர்
79. " வேதாளை கொந்தலகான் புலவர்
80. பலது மாலை மதார் ஹஸீம் அலி
81. பஞ்சரத்ன மாலை ஜயிலானி பக்கீர் லெப்பை ஆலிம் சாகிபு
82. பங்குமாலை அல்லாபிச்சை புலவர்
83. பன்னிரண்டு மாலை ஷைகு அப்துல் காதிர் லெப்பை (கீ)
84. பகுதாது மலை பிச்சை இபுறாகீம் புலவர்
85. பிக்ஹுமாலை காதிர் முகைதீன் அண்ணாவியார்
86. புகாரி மாலை காதர் ஷம்சுத்தீன் புலவர்
87. புதுமொழி மாலை அருள்வாக்கி
88. புகாரிமாலை கார்பா லெப்பை புலவர்
89. பூர்ணசந்திரன் மாலை அப்துல் காதிர் ஆலீம் (அபி)
90. பதாநந்தமாலை முகம்மது சுல்தான் மரைக்காயர்
91. பேரின்ப ரஞ்சிதமாலை அருள்வாக்கி
92. மஅரிபத் மாலை ஷாம் ஷிகாபுத்தீன் (வலி)
93. பெரிய ஹதீது மாணிக்க மாலை "
94. மகிழம்பர் மாலை முகம்மது முகியத்தீன் புலவர்
95. பெண்புத்திமாலை முகம்மது ஹுசேன் புலவர்
96. மாணிக்கமாலை செயிது முகம்மது
97. பொன்னரியமாலை மின்னா நூர்தீன் புலவர்
98. முகிய்யத்தீன் மாலை பக்கீர் மதார் புலவர்
99. முகையதீன் ஆண்டவர் பிச்சை இபுராகீம் புலவர்
100. மகபூபு சுபுகானி மாலை "
101. முதுமொழிமாலை உமறுப்புலவர்
102. மீஸான்மாலை ஷைகு முஸ்தாபா (வலி)
103. மீரான்சாகிபு முனாஜாத் ரத்தினமாலை
104. மெய்ஞானத் தங்கப் பாட்டுமாலை
105. மகாமதி மாலை எம். எம். காதிர்
106. மஃரிபத்து மாலை தக்கலை பிர்முகம்மது அப்பா
107. முகைதீன் மாலை முகம்மது மீரான் மஸ்தான் சாகிபு
108. மெஞ்ஞான மாலை கச்சுப்பிள்ளை
109. மனமங்கல மாலை ஆவிப்புலவர் அப்துல்ரஹ்மான் ஆலிம்
110. மி.வி.ராஜ் மாலை ஆலிப் புலவர்
111. முஸ்தபா மாலை கார்பாலெப்பை புலவர்
112. மான்பணி மாலை முகமது அப்துல் காதிர் புலவர்
113. மதினாபுரி மாலை கான்முகம்மது புலவர்
114. முகைதீன் ஆண்டவர் மாலை

115. முப்புகழ்பாமாலை முகம்மது அப்துல் காதிர்(வலி)
116. முகாஷா பாமாலை பிச்சை இபுராகீம் புலவர்
முசுஹபா மாலை (1899) குலாம் காதிர் புலவர்
117. முகைதீன் மாலை ஷேக் அப்துல் காதிர் நயினார்
118. முன்கிரின் மாலை நயினா முகம்மது புலவர்
119. தைக்காசாகிபு மாலை செய்யிது ஹஸன் மெளலானா


120. தூதுரையின் மாலை குஞ்சு மூஸாப் புலவர்
121. ஷரிகஅத் மாலை அப்துல் காதர் லெப்பை
122. ஷிபாமாலை ஹஸ்ரத் ஷெய்குபாவா ஷெய்கு சுலைமானுல் காதிரிய்யா
123. ஷீபுசான மாலை அம்மனி அம்மாள்
124. ஷரிஅத்மாலை ஷெய்கு அப்துல்காதிர் லெப்பை(எ)நெய்னா லெப்பை
125. ஸலாத்து மாலை குஞ்சு மூஸாப் புலவர்
126. ஷீபத்து மாலை கார்பா லெப்பை புலவர்
127. ஹபீபு அரசர் மாலை சைய்யது ஹாஜியா உம்மா
128. ரோசு மிசாக்குமாலை தக்கலை பீர் முகம்மது அப்பா
129. யூசுபு நபிமாலை
130. ஞான மணிமாலை தக்கலை பீர் முகம்மது அப்பா
131. பல்சந்தமாலை
132. வழிநடை பைத்துமாலை அருள்வாக்கி
133. அடைக்கல மாலை "
134. பிரபந்தமாலை முகமது ஜைரூப் கவுஸ் புலவர்
135. பாத்திமா நாயகத்தின் மாலை சி.அப்துல் காதர்
136. மணிமுத்து மாலை ஆலிம் சாகிபு
137. ஜுத்ரிமாலை ஷேத்சாகுல் ஹமீது சாகிபு ஹக்கீப்
138. மகரியத் மாலை எம்.ஏ.நைனா முகம்மது பாவலர்
139. அறிவு மாலை பி.எம்.அகமது புலுமுகம்மது
140. பொன்னரிய மாலை எம்.ஏ.நயினா முகம்மது பாவலர்
141. முகைதீன் மாலை முகம்மது ராவுத்தர்
142. தங்கப்பாட்டு மாலை ஷேக்பாவா(ஷெய்கு)
143. திருமெஞ்ஞான சாகர சங்கீர்த்தன பாமாலை ஷேக் மதார்
144. தோத்திரப்பா மாலை முகம்மது இசுமாயில் ஹக்கீம் புலவர்
145. நவமணிப்பாமாலை எம்.ஏ.ஷேக் தாவூது ராவுத்தர்
146. பறுலு மாலை முகம்மது யாக்கூப் சாகிப்
147. பாதுகாப்பு மஜ்னு மாலை முகம்மது அப்துல்லாலெப்பை
148. ஜெய்கூத்துமாலை ஷேக் முகைதீன் லெப்பை
149. நஸிகத்துல் மூமீன்மாலை டி.ஏ.காதர் மைதீன் புலவர்
150. ரஹிமான்மாலை ஏ.என்.காஜாமுகியித்தீன்
151. நஸீயத்துல் மும்மணிமாலை முகம்மது இபுராகீம் சாகிபு
152. காரணமஜ்ஜாத்மாலை ஷைகு சுலைமான் சாதிபாளி சாகிப்
153. கற்பமாலையும் நஸீகத் எம்.ஏ.அப்துல் லெப்பை ஆலிம்
154. சுகானந்த மாலை என். மீரான் முகைதீன்
155. குத்புமணிமாலை மதாறுப் புலவர்
156. மெஞ்ஞான அருமைக் காரணமாலை காயல் உமர் ஒலியுல்லா சாகிபு
157. கோத்திரமாலை புலவர் நாயகம் சேகனாப்புலவர்
158. ரஸூல்மாலை ஷாம் ஷீகாபுதீன் வலி நாயகம்
159. அதபு மாலை "
160. ஞாயத்துல் இக்திகார் மாலை "
161. உலமா மாலை "
162. நபிமாலை "
163. ஸூரத்துல் குர்ஆன் மாலை "
164. புத்திமாலை "
165. கல்யானபித் அத்துமாலை ஷாம் ஷீகாபுதீன் வலி
166. நஸீகத்து மாலை

167. குத்பாமாலை

168. ஹனபி மத்ஹபு மாலை

169. மஃரிபா மாலை

170. புகையிலை விலக்கு மாலை

171. அஞ்ஞானமாலை

172. மின்ஹாஜ் மாலை

173. தன்பாக் மாலை

174. கத்தூர் பித் அத்து மாலை

175. மீதுன் மாலை
176. சின்ன ஹதீது மாலை
177. இசையருள் மாலை .... ஆ .மு.ஷர்பு தீன் புலவர் (மருதமுனை )
178. ஆஷிக்கு அவதார மாலை 179. ரமலான் மாலை ... செயிதுமு ஹமது இசுமாயில் ஆலீம் (1357)
180. அருள்மணி மாலை பல்சுவை (கலிதினபி திஸ்லா) .... அருள்வாக்கி
181. மர்யம் பீபிமர்தியா மாலை ... G.M.S சிராஜ் பாக்கவி
182. பக்தி ஆனந்த பாத்திமுத்து மாலை
183. முத்துமணி மாலை ... உதுமான் லெப்பை கலிபா சாகிபு
184. சரசுவதி மாலை
185. யா குயத்பா மாலை ... அப்துல் அமது ஆலீம்
186. யா சையதி மாலை
187. முகாஷபா மாலை .... குலாம் காதிர் நாவலர்
188. ரசூல் மாலை ... காயல் ஷாமு லெப்பை நயினர்

பல்சுவை

1. இஸ்லாமிய பாடல்கள் ... புலவர் ஆபீதீன்
2. அனுகூல பிஞ்சம் .... காளை அசனவிப் புலவர்
3. உமர் கய்யாமின் ரூபாயாத் ..... அப்துல் காதர் லெப்பை
4. காந்தி மாலிகை ... பீர்முகம்மது புலவர்
5. கையது நிலை ... முகம்மது ஆரிபு புலவர்
6. சுன்சுல் கராமத் .... குலாம் காதிறு நாவலர்
7. கவிதைத் தொகுப்புஏடு .... சித்திரக்கவி சையிது இமாம் புலவர்
8. கான் சாயபு சண்டை
9. குருதோத்திரப்பாடல் ... குலாம் காதிறு நாவலர்
10. சேதுபதி ஏலப்பாட்டு .... மதார் புலவர்
11. சந்தாதி யசுவமேதம் .... சீவரத்தினக்கவி

12. சித்திரக் கவிப்புஞ்சம் அருள்வாக்கி
13. சீறாவண்ணமும், சித்திரக்கனியும் அலிக்களஞ்சியம்
14. சீறாப்புராண சாரம் ஆ.மு.ஷர்புதீன்
15. சீறா உல்லாசம் காதர் பாட்சா சாகிபு
16. சங்கீத சிந்தாமணி சாகுல் ஹமீது புலவர்
17. சுஅபில் ஈமான் (மதுரை) ஜமாலுத்தீன் புலவர்
18. தமிழ்ச்சங்க மான்மியம் அப்துல் காதிறுப்புலவர்
19. திருமண வாழ்த்து உமறு கத்தாப்புலவர்
20. திருநாகை திருவாசகம் பாட்சா புலவர்
21. துஆ இரப்பு — —
22. தோத்திரப் புஞ்சகம் மக்கள் அப்துல் ஹமீது புலவர்
23. திருமணக்காட்சி சேக்காதி நயினார் புலவர்
24. நாயக வெண்பா அப்துல் மஜீது புலவர்
25. தோத்திரப்பிரகாசம் காதிர் அசனா மரைக்காயர்
26. நாகைப்பத்து மதுரகவி, பாட்சா புலவர்
27. நாகூர் காரண சதுர்பிரபந்தம் அப்துல் ரஹ்மான்
28. நீதி வெண்பா ஷெய்கு தம்பி பாவலர்
29. நபிநாயகம் பேரில் ஏசல் சாகுல் ஹமீது புலவர்
30. பாலவித்வான் ஏசல் பாலகவி, பக்கீர் சாயபு
31. புகழ்ப்பா முகம்மது முகையதீன் புலவர்
32. புகழ்ப் பாவணி அசனா லெப்பை புலவர் (யாழ்)
33. சொர்க்க நீதி சேகனாப்புலவர்
34. மழைப்பாட்டு நயினார் முகம்மது பாவா புலவர்
35. முகைதீன் ஆண்டவர் பேரில் தாய்மகள் ஏசல் சாகுல் ஹமீதுப்புலவர்
36. மழைமுழக்கம் மதனிசாயபு
37. மாலிகாரத்னம் சையது ஹாஜியா உம்மா
38. மரணவிளக்கம் முகம்மது இபுராகீம் சாயபு
39. முறையீடும் பதிலும் முகம்மது ஆரிபு புலவர்
40. ஸைவாத்துப்பாட்டு உதுமான் நயினார் புலவர்
41. ஸொராப் ருஸ்தம் முகம்மது ஆரிபு புலவர்
42. சரமகவி மாலிகை செய்யது முகம்மது ஆலிம்
43. சரமகவிக் கொத்து அருள் வாக்கி
44. சீதக்காதி நொண்டி நாடகம்.

45. பாத்திமா நாயகி புகழ் முகம்மது இஸ்மாயில்
46. புகழுதயப் புஞ்சகம் மீரான் சாகிபு புலவர்
47. மகத்துவ முத்தாரம் முகைதீன் பிச்சை புலவர்
48. இன்னிசை வெண்பா மகதூம் மஸ்தான்
49 தொழுகை ரஞ்சித அலங்காரம்
50. நவமணிக் கீதம் அருள் வாக்கி
51. இசைவருள் மாலை ஆ.மு. ஷர்புதீன் புலவர்
52. இதோப தேசம்

53. நாயகப் பேரொளி மம்மது மைதீன்
54. புலவராற்றுப்படை குலாம் காதிறு புலவர்
55. புலவர் ஆற்றுப்படை கவி. சேகுஅலாவுதீன் (புத்தளம்)
56. பிரபந்த புஞ்சம் அருள்வாக்கி
57. நாயகத்திருமேனி முகம்மது மூஸா
58. யூசுப்-சுலைகா சாரண பாஸ்க்கரன்
59. ரஞ்சிதபாகம் எம்.ஏ. பக்கீர் முகைதீன்
60. ஞானோதயப்புஞ்சம் ஷேக் உதுமான் லெப்பை
61.

ஷேக் பக்சி லெப்பை
62. தேசிய கீதம் முகைதீன் சாகிப்
63. தேசிய பாடல் வி.என். சாகுல் ஹமீது
64. காந்தி மாலிகை எம். பீர்முகம்மது சாகிபு
65. கதர் கீர்த்தனம் கே.பி, அத்தாது இபுறாகீம்
66. சுகிர்தமெஞ்ஞான சங்கீர்த்தனம் மன்சூர் மீரா சாகிபு அப்துல் காதிறு லெப்பை அலிமா புலவர்
66. நாகை கொச்சகம் மதுரகவி பாட்சா புலவர்
68. மெஞ்ஞான மனதலங் காரப்புகழ்ச்சி ஷெய்கு முகம்மது அப்துல்லா
69. நாகூர் நாயகர் பஞ்ச ரத்தினம் அப்துல் காதிறு எம்.கே.எம். சோதுகுடி
70. ஏரல் பீறுஷா அம்மாள் ஹதீது அகமது லெப்பை ஆலீம்
71. பீறுஷா அம்மாள் ஹதீது (இலங்கை) ஷி ஹாபுதீன்
72. குத்பு நாயக நிர்யாண மான்மியம் மு. சுலைமான் லெப்பை புலவர்
73. முஹிய்யீதின் ஆண்டவர்கள் பேரில் ஒருபா ஒரு பஃது கண்ணருமதுமருதும் முகம்மது புலவர்
74. சத்ருசங்காரம் புலவர் நாயகம் சேகனாப்புலவர்
75. மதுரை தமிழ்ச்சங்க மான்மியம் எம். கே.எம். அப்துல்காதிறு புலவர்
76. நபி நாயகர் பஞ்சரத்தினம்
77. யானைக்காதல் முகையதீன் கற்புடையார்
78. நெல்லை நிறநிதநலிமணம் மௌல்லி, சிராஜ்
 

வண்ணம்

1. சீறாவண்ணம் கலிக்களஞ்சியப்புலவர் (ஈழம்)
2. திருக்காரண வண்ணம் இளையான்குடி பாட்சாப் புலவர்
3. தீன் விளக்க வண்ணம்

4. பஞ்சரத்தின வண்ணம்

5. கொம்பு இல்லா வண்ணம் காலாங்குடிஇருப்பு மீரான் கனிப்புலவர்
6. பலவி தவண்ணங்கள் வண்ணக்களஞ்சிய புலவர்
7. சீறா திருப்புகழ் வண்ணம் தாராபுரம் அப்துல் கயூம்
8. நபிபெருமனார் (ஸல்) மீது எண் கலைவண்ணம் அருள்வாக்கி
9. முகையதீன் ஆண்டவர் பேரில் எண் கலை மென்னிசை வண்ணம் அருள்வாக்கி
 

அலங்காரம்

1. தொழுகை புகழ் அலங்காரம் டி.எம். ஜனாபாகரன்
2. தொழுகை ரஞ்சித அலங்காரம் டி. முகம்மது ஹுசைன்
3. சிங்கார அலங்காரம் எஸ்.கே. முகம்மது இசுமாயில் லெப்பை

முனாஜத்

1. முனாஜாத் மைமூன் பிவி
2. முனாஜாத் சோலை முகம்மது ஹுசேன்
3. முனாஜாத் சதகம் சுல்தான் அப்துல் காதிர் மரைக்காயர்
4. குத்புநாயகம் முனாஜாத் பீர்காளை புலவர்
5. முனாஜாத் மாலிகை செய்யிது முகம்மது ஆலீம் புலவர்
6. ஆற்றாங்கரை நாயகி பேரில் முனாஜாத் செய்யது முகம்மது ஆலீம் புலவர்
7. மஜ்மு முனஜாத்

8. மெய்ஞான அற்புத முனாஜாத்

9. முனாஜாத் முகம்மது அப்துல் காதர்
10. ரகுமான் பேரில் முனாஜாத் மேலப்பாளையம் சாகுல் ஹமீது புலவர்
11. இல்றியாசு நபி பேரில் முனாஜாத் சாகுல் ஹமீதுப்புலவர்
12. முகம்மது(ஸல்) பேரில் முனாஜாத் அருள்வாக்கி
13. முஹயத்தீன் முனாஜாத் பத்லுத்தீன் புலவர் (யாழ்)
14. தப்ரேமுனாஜாத்

15. காஜா பந்தே நவாஸ் முனாஜாத்

16. நபிகள் பேரில் முனாஜாத் அப்துல் காதிர் ஆலீம்
 

வாழ்த்து

1. கதிஜா திருமண வாழ்த்து
2. சீதக்காதி பேரில் திருமண வாழ்த்து உமறு கத்தாப் புலவர்
3. கலியான வாழ்த்து இ. முகம்மது அப்துல் காதிர் ராவுத்தர்

ஏசல்

1. நபி நாயகம் பேரில் ஏசல் சாகுல் ஹமீது புலவர்
2. பாலவித்வான் ஏசல் பாலகனி பக்கீர் சாயபு
3. முகையதீன் ஆண்டவர்கள் பேரில் தாய்மகள் ஏசல் சாகுல் ஹமீதுப்புலவர்
4. பீருஷா அம்மாள் ஏசல் அகமது லெப்பை ஆலீம்
 

கிஸ்ஸா

1. யூசுப் நபி கிஸ்ஸா மதாறு சாகிபு புலவர், அய்யம்பேட்டை
2. சையித்தூன் கிஸ்ஸா வாலை பாவா சாகிபு, பேட்டை ஆலிம்புலவர்
3. பீபி மரியம் கிஸ்ஸா அப்துல் காதிர் சாகிப்
4. தமீமுல் அன்சாரி கிஸ்ஸா

5. ஷமீனன் (வலி) கிஸ்ஸா முகம்மது இபுராகீம் ஆலிம் சாகிபு
6. அய்யூப் நபி கிஸ்ஸா அப்துல் வஹாப் சாகிப்
 

லாவணி

1. சிங்கார வழி நடைலாவணி செ.அ.சீனியாபீல் ராவுத்தர்
 

தாலாட்டு

1. பஞ்சரத்தினத் தாலாட்டு காளை அசனலிப்புலவர்
 

தூது

1. குருகுவிடு தூது

இந்த தொகுப்புரை வரைய பயன்பட்ட நூல்கள்

தமிழ்:
1. சங்க இலக்கியங்கள்
2. இசுலாம் வளர்த்த தமிழ் : மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடு
3. தமிழ் இலக்கிய அரபுத்தமிழ் கையகராதி :

4. இசுலாமிய தமிழ் இலக்கிய கட்டுரைக் கோவை : டாக்டர் சி. நயினார்முகம்மது
5. இலக்கிய கருவூலம் : ஆர். பி. எம். கனி
6. இராமப்பையன் அம்மானை : தஞ்சைசரசுவதி மகால்(பதிப்பு)
7. இசுலாமிய இலக்கிய ஆராய்ச்சி மலர் (திருச்சி) :
8. சிவசம்பு புலவர் பாடல் திரட்டு (இலங்கை) :
9. சீதக்காதி வாழ்வும் காலமும் : கேப்டன் என். ஏ. அமீர் அலி எம்.ஏ.,
10. சீதக்காதி நாண்டி நாடகம் : முகம்மது ஹுசேன் நயினார் (பதிப்பு)
11. கலையும் பண்பாடும் : பிறையன்பன் (இலங்கை)
12. கலாசார ஒருமையும் பண்பாடும் : ஜி. ஜான் சாமுவேல்
13. களவியற் காரிகை : வையாபுரிபிள்ளை (பதிப்பு)
14. கான்சாயபு சண்டை : இலங்கைபதிப்பு
15. இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் : டாக்டர் எஸ். எம். கமால்
16. விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் :

17. பெருந்தொகை : மதுரை தமிழ்ச்சங்க பதிப்பு
18. திருவிளையாடற்புராணம் : பெரும்பற்றபுவியூர் நம்பி
19. திருவிளையாடற்புராணம் : பரஞ்சோதி முனிவர்
20. தீனெறி விளக்கம் : வண்ணக்களஞ்சியப்புலவர்
21. ஷஹீது சரிதை : முகம்மது இபுறாகீம் லெப்பை
22. பிரபந்த திரட்டு : உலக தமிழாராய்ச்சி நிறுவனம் (பதிப்பு)
23. இராம. சமஸ்தான நிலமானிய கணக்கு :
24. தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்கள் : டாக்டர். இரா. நாகசாமி
25. இசுலாமிய கலைக்களஞ்சியம் (தொகுதிகள்-3) : எம். ஆர். எம். அப்துற்றகீம்
26. தொண்டிமா நகர் :

27. புலவர் நாயகம் நிருபச்செய்யுட்கள் : பதிப்பு “ஹஸன்”


ஆங்கில நூல்கள்:

MANUALS:

1. Manual of Madura District : A.V. Baliga

2. Manual of North Arcot : A.F. Cox

3. Manual of Tanjore : Hemingway

4. Manual of Madura Country : A. Nelson

5. Manual of Ramanathapuram Samasthanam : T. Rajaram Row

6. Manual of Tinnelvely : A.J. Stuart

7. Manual of Thiruchirappalli : H.A. Stuart

8. Manual of Pudukottai State : K.R. Venkatarama Iyer

 

GAZETTEERS:

1. District Gazetteer of Madura : W. Francis

2. District Gazetteer of North Arcot : A. Ramasamy

3. District Gazetteer of Ramanathapuram : A. Ramasamy

4. District Gazetteer of Salem : A. Ramasamy

5. District Gazetteer of Tinnelvely : Pate

6. District Gazetteer of Tanjore : –

 

INSCRIPTIONS:

1. Archaelogical Survey of India. Vols IV and VIII : Dr. Burgess

2. Historical Inscriptions of South India : Dr. S. Krishnasamy Ayyargar

3. Topographical List of Inscriptions (Three Volumes) : K. Rangacharya

4. South India Temple Inscriptions (Three Volumes) : K.N. Subramanian

5. Tirumalai Tirupathi Inscriptions (3. Vols) Pudukottai State : Tiruppathi Devasthanam

6. Pudukottai State Inscriptions : Gopinath Rao

 

TAMILNADU ARCHIVES RECORDS:

1. Board's Misc. Registers

2. Military Country Correspondents.

3. Madras District Records

4. Public Consultations

5. Revenue Consultations

 

OTHER BOOKS:

1. Economic Conditions of South India : Dr. A. Appadora

2. History of Pearl Fishery : A. Arunachalam

3. Hand Book of Tanjore : Dr. Baliga

4. History of India : Elphinstone

5. Mahavamsa : Dr. Geiger

6. History of Pandya Country : Dr. S.A.O. Hussains

7. History of Orissa : W.W. Hunter

8. Yousuff Khan, the rebel commandant : S.C. Hill

9. Muslims and their Heritage : Q. Hyder

10. Short Rule of Muslims in India : Iswari Prashad

11. Tamil Country under Vijayanagar : Dr. A. Krishnasamy

12. South India and her Mohammadan Invaders : Dr. S. Krishnasamy Ayyangar

13.

14. From Akbar to Aurangazib : W. Moreland

15. Concise History of Ceylon : Dr. Nicholas and Paranavithana

16. Pandiyan Kingdom : K. Nilakanta Sastry

17. History of Sri Vijaya : K. Nilakanta Sastry

18. South Indian Studies (Vols. 2) : Dr. R. Nagasamy

19. Foreign Notices of South India : K. Nilakanta Sastry

20. Discoveries, Missions in Asia, and Africa : D. Orsey

21 History of Ceylon : Fr. Pereira

22. History of Madurai : Dr. K. Rajayyan

23. History of Arabs : Prof. Philip. H. Kitiy

24. History of Madura Nayaks : S. Sathianathaier

25. Tamilagam in 17th Century : S. Sathianathaier

26. Chronology of Early Tamils : K.N. Shivaraj

27. Islam : J.W.H. Stabut

28. Dictionary of Islam : Thomas Patridge Huihes

29. Castes and Tribes of South India (6 Vols) : E. Thurston

30. Words and their Significane : Prof. S. Sethu Pillai

31. Studies of History of Third Dynasty of Vijayanagar : N. Venkataramanayya

32. An Historical Requisition :

33. Rise of Portugheese Power : Whiteway

34. Memoir of Hendrik Zwardecroon : —

35. Early History of Andhra Country : K. Gopalachari

பெயர் பக்கங்கள்

பெயர் பக்கங்கள்

அகமது துருக்கன் 21
அகமது பேட்டை 145
அகப்பாட்டு 6
அஞ்சுமன் 19
அஞ்சுவண்ணம்18, 19, 20, 33, 65,91: 180
அஞ்சு வண்ணத்தினர் 18,19
அஞ்சு வண்ணபள்ளி 18
அணைக்கரை 90
அதிவீரராம பாண்டியன் 193
அதிராம்பட்டினம் 54, 193, 113, 129
காஜா அலாவுதீன் 168
அதில்ஷா 81
அந்தோணி கிரிமினாலிஸ் 97
அந்திராயம் 90
அந்தலோஸ் 99
அபுசெய்து 112, 126 அப்துல் காதிர் மரைக்காயர் 75, 113, 114
அப்துல்லா பின் முகம்மது அன்வர் 16
அப்பிரிக்காட் பழம் 11
அபிதான சிந்தாமணி 22
அபிராமம் 93, 94
அப்துல்கனி சேர்வை 162
அப்துல் காதிர் ஜெயிலானி 195
அப்துல் ரஹ்மான் ஸாமிரி 16
அப்துல் ரஹ்மான் (வலி) 15
அபிசீனியா 56
அப்துல் லெப்பை 116
அப்பாஸ் 68
அப்பாஸிய மன்னர் 189
அடியார்க்கு நல்லார் 35
அட்லாண்டிக் மாகடல் 99
அமீர் இஸ்கந்தர் 67
அமீர் குஸ்ரு 51
அம்பா 11

அம்மாபட்டி ஜமீன் தார் 148
அம்மோன்ரா 3
அம்ருன்னிஸா 172
அபுபக்கர் 177
அரபி வணிகர் 17, 20
அரபிகள் 7, 8, 10, 11, 12, 41, 47, 190, 134
அரபிக்குடா 190
அரபி நாட்டு பயணி 190
அரபுதாயகம் 1, 3, 9, 99, 183, 184, 185
அரிசில் கிழார் 1
அரிக்காமேடு 5
அரபத்தான் காடு 18
அருப்புக்கோட்டை 140
அருணகிரிநாதர் 40
அலி இபுராகீம் மரைக்காயர் 105
அலியார்ஷா 15
அலெக்சாந்தர் நெல்சன் 20
அல் இதிரிசி 100
அல்லா 184, 187
அல் அசதி அல்பசரி 16
அல்பரூணி 118
அல்லா பண்டிகை 158
அலெக்சாந்தர் 6
அலெக்சாந்திரியா 1, 3, 7
அழகன்குளம் 1, 5, 81
அழகிய சிற்றம்பலக் கவிராயர் 193
அவுரங்கஜேப் 153
அற்றகாரு 91
அனுமந்தக்குடி 15, 180
அன வரதநாதர் 150
அன்னாம் 9, 12
அஹமது இபுனு மஜீத் 7
அணாது 199
அஜ்மீர் குவாஜா 195

ஆதம் (அலை) 15
ஆதிபிதா 129
ஆரிய சக்கரவர்த்தி 74

ஆமை ஓடு 10
ஆபில் காமில் தர்ஹா 181
ஆதி சுல்தான் முல்க் 65

பெயர் பக்கங்கள்

பெயர் பக்கங்கள்

ஆட்டி கோஸ் 11
ஆம்புத்தூர் 166
ஆலம்கீர் பாதுஷா 179
ஆலிப் புலவர் 193, 196
ஆரல் வாய் மொழி 121
ஆழ்வார் திருநகரி 119

ஆனைப்பார் தீவு 116
ஆனை மங்கல செப்பேடு 21 , 180
ஆயிரம் மசாலா 192, 195
ஆற்காடு நவாப் 121, 122, 123, 171

இராம பையன் அம்மானை 57, 86, 87
இராமநாதபுரம் 56, 61, 63,81 92, 105, 180, 181
இராமேஸ்வரம் 74, 78, 79, 102, 106, 108, 109, 152, 180
இராமராயர் 186
இராமநாதபுரம் சீமை, 91, 116, 119
இராமநாதபுரம் கோட்டை 92, 93
இராப் அலி 109
இராஜராசன் சுந்தர பாண்டியன் 177
இராஜேந்திர சோழன் 33
இபுனுபக்கி 126

இபுனு பதூத்தா 81, 129, 135, 166
இபுனு குர்த்தாபே, 126, 127
இபுனு ருஸ்தா 126, 127, 128
இஸ்மாயில் ராவுத்தன் 145
இம்ரான் 68
இளையான்குடி 59
இலங்கை 12, 13, 69, 105
இந்தோணிசியா 14
இத்தாலி 11
இஸ்லாமியர் 9, 85, 86, 88, 89, 93, 94, 95, 99, 102, 103, 104, 105, 163, 164, 174, 179, 182
இந்துமாக் கடல் 11, 99
இமயம் வரை 189

ஈயம் 10
ஈழம் 73, 190

ஈழம்பூர் 90

(உ)

உத்திரப்பிரதேஷ் 45
உதய மார்தாண்ட பெரும் பள்ளி 177
உதயமார்தாண்டகாதியார் 177
உமறுபுலவர் 189

உமையர் 68
உடையான் திருமலை சேதுபதி 192
உறையூர் 5, 16

(எ)

எக்ககுடி 54, 94
எகிப்து 1, 3, 58
எட்கார் தர்ஸ்டன் 44
எட்டி 65

எட்டையாபுரம் 121
எமனேஸ்வரம் 49
எல்லேதண்டல் 113

(ஏ)

ஏடன் 110
ஏமன் நாடு 1
ஏனாதி 65, 68, 180

ஏர்வாடி 18, 81, 92, 121
ஏர்வாடி சுல்தான் செய்யது இபுராகிம், 195

பெயர் பக்கங்கள்

பெயர் பக்கங்கள்

(ஒ)

ஒட்டக் கூத்தர் 27, 40

ஒக்கூர் உடையார் 177


(ஓ)

ஓட்டப்பிடாரம் 119

(க)

கங்காதேவி 82
கம்பராயண சரித்திரம் 88
களிய நகரி 116
கம்மந்தான் 118, 120, 121,122, 123
கடலாடி 4, 119
கமுதி 94
கல்கத்தா 113
கண்டததேவி 115
கரூர் 2
கர்பலா 157
கடாரம் 9
கங்கை கொண்ட சோழபுரம் 21
கண்னணூர் கொப்பம் 81
கள்ளர்கள் 120
கம்பன் 163
கருநாடகசுபா 180
கலிமில்லா 188
களவியல் காரிகை 186
கபிலர் 193
கன்னிராசபுரம் 92, 94, 162
கனகாபிசேக மாலை 193
கனக கவிராயர் 193
கலிபா 184, 188, 192
கனிராவுத்தர் 94
காயல் பட்டினம் 25, 39, 75. 114, 115, 169, 191
காட்டு மகதுரம் பள்ளி 146
காட்டு பாவா சாகிபு தர்ஹா 153, 168
காட்டுபாவாசாகிபு காரணீகம் 153
கால்ஷா மகால 173
காசீம் (வலி) 15
காஹிரா 188
கானப் பேர் 129
காலின்ஸ் ஜாக்சன் 115
காரைக்கால் அம்மையார் 193

காமாட்சி நாயக்கர் 148
காஞ்சி சங்கராச்சாரி 149
கம்பர் 27
கான்டன் 9
காசிசெட்டி 26
காஞ்சிபுரம் 27
காமாட்சி நாயக்கர் தங்கல் 43
கூத்தார் பிரான் 193
காஜி தாஜுத்தின் 64
காஜிமார் தெரு 180
காஜியார் தோப்பு 64
காஜி மொகல்லா 64
கைத்தலமாலை 193
கந்தர் அலங்காரம் 40
கந்தர் கலிவெண்பா 40
கடம்பர் 38
கம்பர் 27
கமுதி 54
கடைய நல்லூர் 54
கஜினி முகம்மது 57
கலிபா-யெ-ரசூல் 187
கம்பராயன் 191
கீழ்க்கரை 78, 78, 93, 97, 110, 112, 113, 116, 126
கீழப்புலியூர் 90
கீழப்பண்டக சாலை 115
கீட் செம்பி நாடு 166, 153, 168
கீழக்கரைஜாமியா மஸ்ஜிது 167
கீழக்கரை 189
கிரேக்கம் 1, 2, 4
கிலாடியஸ் ஸீசர் 3
கிளியோ பத்திரா 2
குமார கம்பணன் 81, 82, 83
குணங்குடி 92

பெயர் பக்கங்கள்

பெயர் பக்கங்கள்

குருவாயூர் கிருஷ்ணன் கோயில் 150
குஞ்சாலி மரைக்காயர் 150, 106, 109
குமரி 5, 26, 73, 74
குலோத்துங்கன் 27, 65, 38, 69
குளச்சல் 59
குமரி 59, 127, 128
குலசேகரபட்டினம் 114
குத்பு சாகி 42
குரவைக் கூத்து 35
குதிரைச் செட்டி
” வழிக்காடு 39
” வழிக்குளம்
” கொடை
” வரி 42
” தானம்
” பந்தி
குமார கம்பணன் 67
குப்ளாய்கான் 75, 76
குத்புதின் 80
குலசேகரபாண்டியன் 62, 63
குஸ்ரூ கான் 79, 169
குற்றாலம் 181
குகை நமசிவாயர் 197
குமர குருபரர் 187
கும்பாஸ் 164, 168, 169, 172
குற்றால நாதசாமி கட்டளை 152
கொல்லம் 9, 10, 65, 67
கொங்கணக்கரை 24, 137
கொக்குளம் 92
கொக்காடி 92
கொடுமணம் 2
கோட்டைபட்டினம் 89, 94
கோரிப்பாளையம் தர்ஹா 20, 168
கோலார் கல்வெட்டு 21
கோழிக்கோடு 100, 105, 109
கோட்டாறு 196
கோட்டியூர் 178

கோட்டைப்பட்டினம் ராவுத்த சாயபு 168
கோவில்பட்டி 161
கோல் கொண்டா 58
கோதரிஸாமலை 15
கோவளம் 15
கோட்டயம் 15

(ச)


சகீது பந்தர் 15
சம்மாங்காரர் 50
சம்மாந்துரை 42
சடையவர்மன் சுந்தர பாண்டின் 33
சடையவர்மன் வீரபாண்டியன் 168, 144
சன்ன மங்கலம் 180
சாரதா பீடம் 42
சாந்து நாச்சியார் 160
சிக்கந்தர் மலை 67
சிக்கந்தர் ஷா 67
சித்தார்கோட்டை 54
சித்திரைத் திருவிழா 159
சிலப்பதிகாரம் 5, 7
சீன நாடு 9, 14, 69. 75, 134
சீனா 9, 10, 12
சீதக்காதிவள்ளல் 34, 75, 50, 51, 92, 93, 110, 114, 169,170, 185
சீதக்காதி நொண்டி நாடகம் 57, 92, 190
சீதக்காதி திருமணவாழ்த்து 189
சீனியப்பா தர்ஹா 76, 123
சீவகசிந்தாமணி 38, 187
சீறாப்புராணம் 44
சுந்தரபாண்டியன் 28, 77
சுந்தரமுடையான் 76
சுல்தான் கியாவுதீன் 81, 129
சுல்தான் அலாவுதீன் 131
சுல்தான் ஜமாலுதீன் 73, 74, 75, 80, 131, 169
சுல்தான் நசுருதீன் 132
சுல்தான் செய்யது இபுராகிம் 15, 62, 65, 168
சுல்தான் பள்ளிவாசல் 147

சுத்தமல்லி 140
சூடாமணி நிகண்டு 35
செம்பொன்மாரி 33,
செஞ்சி 83, 153
செவப்பநாயக்கர் 148
சேகனா லெப்பை 115
சேதுபதி 86, 91, 101
சேதுபதி செல்லத்தேவர் 99,
சேதுபதி திருமலை 29. 86, 92, 88, 89, 162, 181
சேதுபதி கிழவன் 162, 181, 91
சேதுபதி குமாரமுத்து 116
சேதுமூலம் 82
சைலாமன்னன் 2
சைய்யது பக்ருதீன் 90
சைய்யது முகம்மது புகாரி 92
சைய்யது முகம்மது சேகுதாரல் 39
சொக்கநாத நாயக்கர் விசையரங்கன் 148
சோனகர் 23, 53
சோனகர் யவனர் 23
சோனகர் பட்டினம் 26
சோனகர் கூத்து 35
சோனக சாமந்தபள்ளி 166
சோனகம் 22, 35
சோனகன் சாவூர் 21, 65, 176
சோனகன் பேட்டை
சோனகன் விளை 19
சோனக வரி 33
சோனக சிடுக்கு 33
சோவியத் யூனியன் 45
சோழிய முஸ்லீம் 50
சோதுகுடி அப்துல் காதர் ராவுத்தர் 54
சோழ மண்டலக்கரை 83
சோணசயிலமாலை 191
சோணாடு கொண்டான்பட்டி 177
சௌ - கூ - பெ 10
டச்சுக்காரர் 95, 96, 97, 101, 102 109 107 111, 119
டச்சு பண்டக சாலை 97


நகரத்தார் 45, 79
நத்தமடை 144
நவாப் முகமதலி 113, 172
நயினார் 52
நயினார் கோவில்
நயினார்பேட்டை 52
நயினார்புரம் 52
நயினார் அகரம் 52
நத்தர்பாவா 16
நசுருதீன் 80
நமச்சிவாயப் புலவர் 111, 193
நச்சினார்க்கினியர் 187
நவரெத்தின மாலை 193
நமச்சிவாயமாலை 193
நபிகள் நாயகம் 194
நாலாயிர திவ்விய பிரபந்தம் 185
நாகபட்டினம் 19, 75, 113
நாகூர் 181
நாட்டுக் கோட்டையார்
நாடாகுளம் 92
நாடார் 144
நாரணமங்களம் 92
நாயக்கர் 82
நானாதேசிகள் 65
நிக்கோலஸ் பரணவிதான நிசாமுதீன் 76
நீரோமன்னன் 2
நெல்லை 61
நெய்யாற்றங்கரை 121
தஞ்சாவூர் 21, 61, 118, 171
தம்பி மரைக்காயர் 97
தமிழர் 10
தளவாய் கம்பணன் 89
தஞ்சாவூர்கோவில் 90, 108, 176
தவனியர் 112
தர்வேஷ் 61
தமாஷ்கஸ் 164
தரீக்கத் 199
தப்சீர் 194
தன்ஜானியா 184
தமீமுல் அன்சாரி 14, 175
தரீக்கா 184
தரகனார் 52
தண்டல் 49

தணக்கன்குளம் 68
தாலமீ 4, 91
தாமிரிக்கா 5
தாமிரபரணி 83
திருச்சிராப் பள்ளி 15, 61, 81
திருப்புல்லாணி 34, 64, 191, 118, 123, 129, 166, 171
திருப்புடைமருதூர் 31
திண்டுக்கல் 59, 119
திருகுர் ஆன் 194
திருக்களர் 28, 177
திணை மாலை 193
திரு இரட்டைமணி மாலை 193
திரு உலா மாலை 193
திருப்பாசுரம் 194
திருவால வாயுடையார் புராணம் 134
திருவிளையாடல் புராணம்
திருருச்சுழியல் 92
திருகுறுங்குடி 121
திருவாங்கூர் 69, 82, 121, 122
திருவரங்க கோயில் 161
திருவாதவூரடிகள் 161
திருபுவன சக்கரவர்த்தி 166
திருநெல்வேலி 90, 121, 171
திருகோலக்குடி 81
திருபரங்குன்றமலை 67
திருப்பாண்டியன் 67, 68
திப்பு சுல்தான் 172
திருமோகூர் 122
திருப்புத்தூர் 54
திம்முராவுத்தர் 43
திபேத் 112
தில்லி 57, 80, 81, 129
திவான் பாட்சா 180
திருக்களர் கல்வெட்டு 79
திருக்கோயிலூர் கல்வெட்டு 74
திர்ஹம் 135
திரம்மா 135, 138, 140, 141
தினார் 138
தினேரியஸ் 135
திமிஸ்கி 126, 129, 190
திவாகர நிகண்டு 32
திருவண்ணாமலை 82

திசை ஐநூற்றுவர் 65
தீர்த்தாண்டதானம் 19
துருக்கமாலை 51
துருக்கவேம்பு 31
” நாடு 29
துலுக்க மல்லி 31
” பசலை 31
” பயிறு 31
”கடுவன் 31
துக்ளக் 57
துவாரசமுத்திரம் 75
துலுக்க நாச்சியார் 159, 160
துல்ஜாஜி 181, 149
தூத்துக்குடி 48, 87, 104, 108, 109, 112
தேவிபட்டினம் 9, 48, 129
தேவாரம் 194 35
தொண்டி 48, 92, 123, 129)
தொண்டி திறப்புக்காரர் பள்ளிவாசல் 168
தொண்டி சேகு அபுபக்கர் சாகிபு தர்ஹா 168
தொண்டை மண்டலம் 82
தொண்டமான் சீமை 122
பந்தர் 2, 65
பசிபிக் பெருங்கடல் 10
பல்சந்தமாலை 16, 24, 186
பணத்தளை 29
பழனி 54
பவுத்திர மாணிக்க பட்டினம் 62, 83, 79, 146, 165. 167
பஞ்சவர் 62, 63
பஞ்சபாண்டியர் 65
பத்துப்பாட்டு 65
பட்டினப்பாலை 65
பதிற்றுப்பற்று 65
பராக்கிரம பாண்டியன் 65
பராந்தகன் 69, 134
பரஞ்சோதி முனிவர் 31, 38, 39
பனையூர் 81
பனங்குடி 39
பனைக்குளம் 54

பஞ்சாப் 45
பத்தன் 70, 79, 167
படேவியா 111
பச்சை மரி 113
பக்கிரி புதுக்குளம் 181
பரங்கி 97
பரங்கிப்பேட்டை 15
பக்ருதீன் அகமது 76
பட்டணத்து அபுபக்கர் மரைக்காயர் 170
பனி அகமது மரைக்காயர் 193
பவணந்தியர் 35
பாக்தாது 11
பாலத்தீனம் 1
பாரசீகம் 15, 12, 35, 40, 58, 61
பெருங்குடா 190
பாரசீக மொழி 19, 98, 183
பாபிலோனியா 1
பாப்போயி 2
பாரியூர் 28
பார்போஸா 112
பாவா சத்துருதீன் 56
பாவா பக்ருத்தீன் 152
பாமினி 58
பாண்டிய நாடு 62, 63
பாசிப்பட்டினம் 48
பாம்பன் 48, 96
பாஹரைன் 71
பாவா தர்ஹா 90, 142
பாவாடை செட்டியார் பாண்டிச்சேரி 113, 118,
பாத்திமத் கிளை 187
பாக்தாத் மௌலானா 171
பாவோடி 94
பாஷ்யக்காரர் 184
பின்சென்றவல்லி 160
பிரபந்த தராட்டு 44
பிள்ளை மரைக்காயர் 88, 89
பிம்ளிபட்டினம் 113
பிரதாப்சிங் 170
பிளினி 3, 90
பிஜி 14
பீஜப்பூர் 58

பீவி நாச்சியார் 160
பீர் 61
புள்ளைக்காயல் 87, 108, 109
புகார் 5, 65
படிக்காசு புலவர் 111
புரூட்டஸ் 2
புட்டங்கட்டி 115
புதுகை 5
புத்தாமியான்பள்ளி வாசல் 89
புருணை 14, 201
புளியங்குடி 54
புலவர் உமர் 44
புல்லந்தை 68
புதுக்கோட்டை 81, 161
புவனேகபாகு 73, 105
புல்லாரண்யம் 191
புல்லங்காடு 191
புல்லையந்தாதி 191
பூம்புகார் 3, 7, 167
பூட்டான் 112
பூலித்தேவர் 118, 119
பெரும்பற்ற புலியூரார் 34, 40
பெரியபட்டினம் 54, 68, 71, 81, 82, 129
பெரிபுளுஸ் 4
பேகம்பூர் 172
பேரையூர் 53
போர்த்து கீஸியர் 87, 88, 104, 105, 106
மக்கம் 38
மங்கம்மாள் 90
மகமூதுபந்தர் 15
மக்தும்நெய்னா 116
மகர் நோன்பு 157
மதுரை அரசு 82
மதுரை நகர் 5, 61, 65, 77, 79, 80, 83, 102, 119, 165, 120, 123, 129, 161
மதுரை கோட்டை 88, 89
மதுரை சுல்தான் 82, 83, 105
மதுரை விஜயம் 81
மதுரை காஞ்சி 37, 41
மத்யபிரதேஷ் 45

மஹமத்கான் 154
மதீரியா 99
மலைக்கறுப்பர் 161
மலாகிகா 110
மலேசியா 50, 107, 184, 190
மாதாறுப்புலவர் 113
மசூதி (பயணி) 126
மலிந்தி நாடு 8
மணப்பாடு 87, 108, 119
மணிக்கிராமம் 65
மணிமேகலை 7
மரக்காயர் 48, 44, 52
மரக்காயர்பட்டிணம் 49
மரக்கலராயர் 48
மரக்கலமினிசு 48
மரக்கலசுதந்திரம் 49
மரக்காணம் 49
மருதப்பத்தேவர் 148
மலைபடுதடாம் 135
மன்னார் 26
மன்னார் கோட்டை 65
மன்னார் வளைகுடா 87, 100, 112, 166
மறவர் சீமை 97
மஹ்ழரா 172
மாபார் 58, 74, 79, 80, 129, 131. 134, 190
மாபூஸ்கான் 118
மாலத்தீவு 129, 166, 103
மாலிக் ஆஜம் 131
மாலிக்கபூர் 78, 169, 159
மாலிபத்தன் 70
மாலிக் இபுனு தீனர் 16
மாலிக் உல் முல்க் 61, 168
மார்க்கோபோலோ 65, 69, 71, 101
மார்சென்ட் 123
மார்ட்டின் அல்போன் ஸா 106
மாணிக்கவாசகர் 18|
மாறவர்மன்குலசேகரன் 70, 75, 77, 93
மாயதுன்னபண்டாரா 105
மார்டின்பாதிரியார் 112
மாமுனாலெப்பை 115
மானோன்புச்சாவடி 157
மாளவிகாக்கினிமித்திரம் 5

மிகுராஜ்மாலை 19, 196
மீசல் வண்ணக்களஞ்சியம் 68
மீரா நயினா 113
மீனாட்சி திருமணம் 159
முத்து 1, 2, 3, 11
முத்துப்பள்ளி 59, 129
முத்துப்பேட்டை 102, 103
” இபுராகிம் 103
” மகால் 103
” வாப்பா 10.3
” முகம்மது 103
” ஹீசைன் 103
முகம்மது உக்காசா 15
முகம்மது பின் துக்ளக் 80
முதுகுளத்தூர் 94
முதலியார் பிள்ளை மரைக்காயர் 101
முத்து வீரப்ப நாயக்கர் 176
முகம்மது யாகுப் கான் 118
முகம்மது காசீம் மரைக்காயர் 189
முத்தொள்ளாயிரம் 38
முல்லைப்பாட்டு 6
மூவருலா 38
மேலப்பண்டகசாலை 115
மேட்டுப்பட்டி 172
யவனர் 5, 7, 8, 22
யவனச்சேரி 17
யவனப்பாடி 17
யவனத்துருக்கர் 18, 23
யவனிகை 23
யமுனை 6
யாழ்ப்பாணம் 26, 88
யுவான் சிங் 96
யூதர் 91
யோனாகர் 6
ரஷீத்தீன் 70, 126
ரஹ்மத்பூர் 90
ரங்கப்பிள்ளை 115
ராகவ ஐயங்கார் மகாவித்வான் 22

ராகுத்த ராயன் 43
” மிண்டன்
” பட்டி
” நல்லூர்
” வயல்
” பாளையம்
” தர்கா
” குப்பம்
” இறையிலி
ராங்கியம் 81
ராணிமீனாட்சி 117, 90, 128
ராணிமங்கம்மா 90, 148
ராபர்ட்கிளைவ் 118
ராஜராஜதேவன் 82, 101, 136
ராஜகம் பீரசம்புவரயர் 82
ராஜேந்திரசோழன் 180
ராஜசிங்கமங்கலம் 54
ராஜபாளையம் 58
ராவுத்தர் 27, 45, 40, 42, 44
ராவுத்தராயன் 40, 42
ராவுத்தர்சாகிபு 89
ருஸ்தம்கான் 89
ருஷ்யா 11
ரோட்ரிகோ 191
வச்சிர நாடு 188, 189, 191
வகுதாபுரி 188, 189
வடுகர் 83, 85
வள்ளல் சீதக்காதி 189
வலஞ்சியர் 65
வண்ணப்பரிமள புலவர் 193
வாணி 63
வாலிநோக்கம் 68
வாரங்கல் 69
வாளைத்தீவு 116
வாலாஜாமுகம்மது அலி 117, 120
வாஸ்கோடாகாமா 7, 100
விவிலியம் 1
வித்தலராயர் 108, 109
விக்கிரமன் 186
விரகனூர் 180
விரையாச்சிலை 178
வீரபல்லாள 78, 80

வீரபாண்டியன்பட்டினம் 81
வீரப்ப நாயக்கர் 20
வீரபாண்டியன் 78, 186
விஜயன் அம்பலம் 54
விஜயநகர பேரரசு 12, 83, 108
வெத்திலைக்குண்டு 54, 181
வேதாளை 48, 105, 106, 107, 152
வேம்பாறு 86, 108, 114
வையாபுரி பிள்ளை 186
வைகை 191
வைப்பாறு 191
ஸபர் 16
ஸக்காத் 198
ஸதாத்த நாமா 63
ஸஹீது சரிதை 63. 68, 69
ஸாமரின் 1000, 105
ஸாலமன் 1
ஸாம் ஷிகாபுத்தீன் 185
ஸிரந்தீப் 15, 779
ஸிஸிலி 11 ஸிராஜ் தக்கியுத்தின் 76
ஸிரியா நாடு 1, 61, 165, 11
ஸியாகரஸ் 49
ஸீலைமான் 9
ஸையது இபுராகிம் ஷகீது 15, 63, 65
ஸையது முகம்மது புகாரி 15
ஷரீக்கத் 199
ஷெய்கு அப்துல் காதிர் மரைக்காயர் 50
" முகம்மது 88
" சதக்கத்துல்லா 115, 189
" அப்துல் காதிர்நெய்னா லெப்பை ஆலீம் 18
ஷேபா அரசு 1
ஷேக் ஜக்கியித்தின் 16, 70, 71, 77

ஜமால்தீன் 70, 71, 77
ஜக்கினி 159
ஜாவா 9
ஜியாரத் 16
ஜெருஸேலம் 1
ஜெர்மனி 11
ஜான் 99
ஜான்.டி பிரிட்டோ 97
ஹபீபு மரக்காயர் 49, 75, 115
ஹஜ் 16
ஹதீஸ் 198

ஹஜரத் அலியுத்தீன் 63, 64
ஹாஜி சையித் தாஜீத்தீன்
ஹாஜி-அப்துல்லா-பின்-அன்வர் 1
ஹாஜி தாஜீத்தீன் 146
ஹைதர் அலி 119
ஹிப்ரு 5, 99
ஹிப்பாலஸ் 3, 4
ஹிஜாஸ் இபுனு யூசுப் 24
ஹிஜாஸ் இபுனுகுஸாம் 25

 





பதிப்பு : தமிழரசு தொல்பொருள்-ஆய்வுத்துறை


  1. சேதுபதி மன்னர் செப்பேடுகள்
  2. Antiques – vol I
  3. Philips H. Kitti – History of the Arabs (1977)
  4. மதுரை பல்கலைக் கழகம் - இஸ்லாமியத் தமிழ் இலக்கிய தொகுதி I (1986) பக்கம். 87.
  5. புலவர் நாயகம் நிருபச் செய்யுட்கள் (ஹஸன் பதிப்பு) 1980 பக்கம். 65-66
  6. Md. Hussain Nainar - Arab geographers Knowledge of S. India (1942) p. p. 44.116
  7. Hussiani Dr. S. A. O. History of Pandya Country (1972) p.47
  8. Arunachalam- History of Pearl Fishery in Tamil Coast p. 92, 94
  9. M.L. James – The Book of Duarte Barbosa, (London)vol Il p. p. 115 - 23
  10. A. S. S. vol. 4 No : 8 p : 59
  11. 1. ஜான் சாமுவேல் - பண்பாட்டுக் கலப்பும் இலக்கிய ஒருமை யும் (1986) பக்: 104
  12. சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவனம் - இஸ்லாமுய இன்பத்தமிழும் (1976) பக் 19.