ரோஜா இதழ்கள்/பகுதி 3

3

ழியில் எந்த ஊரென்று அவளுக்குத் தெரியவில்லை. இரவு ஒன்பது மணிதான். ஓட்டல் வாயிலில் வண்டி நின்றிருக்கின்றது. கண்ணபிரானைப் பார்ப்பதற்கு அவ்வளவாக அவளுக்குப் பிடிக்கவில்லை. எனினும் கார் கதவின் வாயிலில் நின்று, “வாம்மா, போய்ச் சாப்பிடலாம்..” என்று அழைக்கிறார். ஃபாமிலி அறை.

காய்ந்த வயிறு ஆரவாரம் செய்கிறது.

வாழை இலையில் நீர் தெளித்து, மல்லிகைப்பூப் போல் சாதம்.

அரிசிக்கு யார் யாரோ எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டாலும், சோறு, வெள்ளை வெளேரென்று. கூட்டு, கறி, பச்சடி, அப்பளம், பருப்புப் பொடி, பூண்டுப் பொடி வேறு.

அவர்கள் இருவரும் பேசுவதையோ, கண்ணபிரான் இடை இடையே கடைக்கண்ணால் அவளைப் பார்ப்பதையோ உணராமல் அவள் தன் வயிற்றுப் பசியை ஒழித்துக் கொண்டிருக்கிறாள்.

அவர்கள் கட்சி மாநாட்டைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது அவ்வப்போது செவியில் விழும் சொற்களிலிருந்து புரிகிறது. கட்சித் தளபதிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். கட்சியைப் பற்றிய அறிவு அவளுக்கு இல்லாமலில்லை. முன்பு அவள் சிறு வயசில் மாமாவின் ஊருக்குச் சென்றிருந்த போது, அங்கே கோயிலுக்கு முன் கடைத்தெரு சந்தியில் அடிக்கடி பொதுக்கூட்டம் நடப்பதுண்டு. பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்பாக ஒலிபெருக்கியில் பாட்டுப் போடுவார்கள். நேரடியாக எவரேனும் பாடுவதும் வழக்கம்தான். மாமாவின் பிள்ளை நட்டுவுக்கு அப்போது இரண்டு வயசு தானிருக்கும். மாமிக்கு அவனுக்குக் கீழ் இன்னொரு குழந்தை இருந்ததால், நட்டு நோஞ்சானாக எப்போதும் அழுது கொண்டிருப்பான். அவள் நட்டுவையும் தூக்கிக் கொண்டு கோயிலுக்குப் போவதுண்டு. அவன் ஒலிபெருக்கி பாட்டைக் கேட்டால் அழமாட்டான். அந்தப் பாட்டுக்களின் பொருள் அவளை அப்போதெல்லாம் கவர்ந்ததில்லை. ஆனால், மெட்டுக்கள் திரும்பத் திரும்பப் பாடும்படி நன்றாக இருக்கும். பாட்டுக்களைக் கூட்டத்துக்கு முன்னும் பின்னும் கேட்கலாம். அப்படிப் பாட்டுக் கேட்கும் சாக்கில் அவள் பேச்சையும் கேட்க நேர்ந்ததுண்டு.

“கோயிலில் கல் சாமிக்கு மனிதனைப் போல் சோறு போடுகிறார்கள்; பள்ளியறைச் சிங்காரம் செய்கிறார்கள். வைப்பாட்டி வீட்டுக்குக்கூடக் கூட்டிப் போகிறார்கள். ஏன் கக்கூசுகள் கட்டி வைக்கவில்லை?” என்று ஒரு பேச்சாளர் கேட்க பலமாகக் கூட்டம் கை தட்டியதும் அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது.

வைப்பாட்டி வீட்டுக்குக் கூட்டிப் போவதென்றால் என்ன என்று புரியாமலும், வேறு யாரையேனும் கேட்டுத் தெரிந்துகொள்ள அஞ்சியும் குழம்பி இருக்கிறாள். ஒருநாள் அந்தக் கூட்டத்தில் யாரோ பன்றியைத் துரத்திவிட்டுச் சாணி உருண்டைகளையும் வீசினார்கள். அவள் அதில் காலை வைத்து விழுந்தும் எழுந்தும் குழந்தையுடன் அலங்கோலமாக மீண்டு வந்தாள்.

மாமா, கொடிக்கம்பை எடுத்து அவளை அடித்தார். “ஏண்டி, அம்மை அப்பனைத்தான் துடைச்சிண்டு வந்தேன்னா, புத்தி கூடவா கழுதை மேய்க்கப் போச்சு? பிராமணனைப் போட்டுத் திட்டறான், கோயில்ல சாமி இல்லேங்கறான், அசத்து அங்கே என்னடி வேலை உனக்கு?”

சுமதியக்காவின் கணவன் கம்யூனல் ஜி.ஒ. என்ற ஒன்றைப் பற்றிச் சமயம் வாய்க்கும் போதெல்லாம் பேசு வான். “பூணூல் இல்லாதவனுக்குத்தான் காலம் இது” என்று முத்தாய்ப்பு வைப்பான். அந்தக் கட்சியில் பொறுப்பாக அங்கம் வகிக்கும் ஒருவனோடு அவள் இணைந்து வந்திருப்பது இப்போது கட்டெறும்புக் கடியுண்டாற்போன்று உணர்வில் உறைக்கிறது.

“நான் சொல்றேன் கேள் தம்பி, தங்கச்சியை நம்ம வீட்ல கொஞ்ச நாளைக்கு விட்டிடலாம். பிரசார வேலைக்குக் குந்தகமில்லாம இருக்கும். வீட்டிலதான் பார்த்துக்க ஆளு இருக்கு. இப்ப நீ கூட்டிட்டுப் போயிக் குடும்பம் வைக்கிறது நம்ம வேலைக்கு ஒத்து வராது.”

அவள், ரசம் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் கண்ணபிரான் பேசுவது கேட்டுச் சட்டென்று நிமிர்ந்து பார்க்கிறாள்.

“என்ன, மைத்தி? அண்ணாச்சி சொல்றாப்பல...”

“என்னங்க?” என்று ஒன்றும் புரியாதவளைப்போல் கேட்கிறாள் மைத்ரேயி.

“இத பாரம்மா, தம்பி கட்சிப் பிரசார விசயமா சுற்றுப் பிரயாணம் போகவேண்டியிருக்கு. நாளைக்கு நம்ம வீட்ல தான் கூட்டிட்டுப்போயி விடப்போறோம். உனக்கு எல்லாம் வசதியா இருக்கும். நம்ம மனுஷாளுங்க இருக்கிறாங்க. நீ வித்தியாசமா நினைக்க வேணாம். அப்பப்ப தம்பி பேசிக் களைச்சு, வருவான். டானிக் வாங்கிக்கிட!” என்று ஒரு கண் சிமிட்டலுடன் பேசி நிறுத்தும் கண்ணபிரானை அவளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை.

ஆழந்தெரியாத தெப்பக் குளப்படிகளில் இறங்குகிறாள். முதற்படியில் காலை வைத்துவிட்டாள். இது அடுத்தபடி, எங்கேனும் வழுக்கிக்கொண்டு போய்விடுமோ?

வயிறு நிறைய உண்டபின் மலைவாழைப் பழங்களும் பீடாவுமாகக் காருக்குள் அவர்கள் வருகின்றனர். உட்கார்ந்தபடியே அவள் உறங்கிப் போகிறாள்.

பளிச்சென்று புலனாகாத பாதையைப் பற்றி கவலையும் பசியும் மறந்த உறக்கம்.

அவள் கண்விழிக்கும்போது நன்றாக விடிந்திருக்கிறது. வீடுகள்தோறும் தென்னை மரங்களும், பூஞ்செடிகளும் குலுங்கும் தெருவினுரடே வண்டி செல்கிறது. பெரிய சாலை, வயல்கள், தென்னை, மா மரங்களின் பசுமை, அதனிடையே கோபி நிறப் பூச்சுடன் நிமிர்ந்து நிற்கும் ஒரு வீட்டுக்குச் செல்லும் பாதையில் வண்டி செல்கிறது.

வாயிலில் குண்டு குண்டாகத் காய்த்துத் தொங்கும் குட்டை மாமரம் மிக அழகாக இருக்கிறது. கார் வரும் ஓசை கேட்டு ஒரு அல்சேஷன் நாய் ஓடிவந்து குரைக்கிறது. பணியாளன் ஒருவன் வந்து கதவைத் திறக்கிறான்.

கதவைத் திறந்துகொண்டு முதலில் கண்ணபிரான் இறங்குகிறார். பிறகு தனராஜூம் அவளும் இறங்குகின்றனர்.

படியேறியதும் வாசல் நிலை. பழைய காலப் பாணியில் தேக்கில் இழைத்த தாமரைப்பூவும் கிளிகளுமாக விளங்கு கிறது. கறுப்பாக மின்னும் தளவரிசைக் கூடம். அந்தக் கூடத்தின் வலப்புற வாயிலிலிருந்து ஒரு பெண்மணி வந்து அவளை வரவேற்கிறாள். அவளுக்கு முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயசுக்குள் இருக்கலாம். நல்ல உயரமும் பருமனுமான உடல்வாகு. சேலையைப் பின் காலின் கொசுவம் தெரியாமல் தழையத் தழைய உடுத்தியிருக்கிறாள். கையகலம் பச்சைக் கரையில் கீற்றுசரிகை போட்ட யானைக் கருமை வண்ணப் பட்டுச் சேலை. வெள்ளை ரவிக்கை இறுகப் பிடித்தாற்போல் உடலோடு ஓட்டப் பதிந்திருக்கிறது. கழுத்தில் கெட்டியான திருநீற்றுப் பட்டைச் சங்கிலியும் பவளமாலையும் அணிந்தி ருக்கிறாள். வெற்றிலைச் சிவப்பு மறாத வாய். நெற்றி கொள்ளாத திருநீறு, அவள் கட்டுக் கழுத்தி அல்ல என்று விள்ளுகிறது. கூந்தலை இருபக்கங்களிலிருந்தும் சீராகப் பகிர்ந்து செருகிக் கொண்டிருக்கிறாள். ஒரு இழை நரைக்கவில்லை.

“வா தம்பி, நேத்துத்தான் சொல்லிட்டிருந்தேன். நாளைக்குக் கூட்டம்னு சொல்லிட்டுவந்து கோயமுத்தூர் பையன் விசாரிச்சிட்டுப் போச்சி. காலையிலே வரும்னு சொன்னேன். வா, தம்பி தனராசு...” என்று வரவேற்றவள் மைத்ரேயியைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

“தெரியுமில்ல? தம்பி...” என்று கண்ணபிரான் குறிப்பாகக் கூறிப் புன்னகை செய்ய, தனராஜ் உடனே, “கும்பிடறேன் அத்தை...” என்று அவள் கால்கள் தொட்டுப் பணிகிறான். மைத்ரேயி சில விநாடிகள் நின்றாலும் தானும் விழுந்து பணிகிறாள்.

“நல்லா இருக்கணும். ஏந்தம்பி? சொல்லாம கொள்ளாமயா கலியாணம் முடிக்கிறது? வாம்மா உள்ளே, உம் பேரென்ன?” என்று மைத்ரேயியை அவள் அழைக்கிறாள்.

“இவங்க அண்ணாச்சிக்குச் சின்னம்மா, எனக்குப் பெரியம்மா...” என்று தனராஜ் அறிமுகம் செய்து வைக்கிறான்.

“அது பேரென்னன்னு சொல்லவேண்டாமா?”

“மைத்ரேயி” என்று மைத்ரேயியே மொழிகிறாள்.

"எனக்கு வாயிலியே நுழையாது போலிருக்குதே? வாங்க வாங்க இட்டிலி காப்பி எல்லாம் ரெடியாயிருக்கும்...” என்று கூப்பிட்டு விட்டு உள்ளே நடக்கிறாள். அந்த அறையைக் கடந்து இன்னொரு பெரியகூடம். கூடத்தின் நடுவே கொத்து விளக்கு. பெரிய புகைப்படங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன.

எங்கும் சாதாரணமாகக் காணக்கூடிய காந்தி, நேரு, சுபாஷ், விஜயலட்சுமி படங்கள் அல்ல.

அண்ணாதுரை படத்தை மட்டுமே அவளால் புரிந்து கொள்ள முடிகிறது. கண்ணபிரானின் தகப்பன், மாமன் என்று உறவு வட்டத்தில் உள்ளவர்களாகவும் இருக்கலாம்.

பெரிய கூடத்தையும் கடந்து குளியலறைப் பக்கம் செல்கையில் அந்தப் பெரிய வீட்டின் பரப்பையும் நவீன வசதிகளையும் கண்டு வியக்கிறாள். “பல் துலக்கப் பல்பொடி இருக்குது. இந்தா முகம் துடைச்சிக்கத் துண்டு-” என்று அந்தம்மாள் உபசரிக்கும்போது அவள் மனம் நெகிழ்கிறாள். இது யார் வீடோ? அவள் இதுவரையிலும் இப்படி ஒரு கனிவையும் ஆதரவையும் நுகர்ந்ததில்லையே?

“உட்காரம்மா?” என்று அந்தம்மா இன்னோர் அறைக்கு அவளை அழைத்துச் சென்று உபசரிக்கிறாள். அங்கு ஒரு குடும்பத்தினர் கூடி உணவு கொள்ளும் மேசையும் நாற்காலிகளும் இருக்கின்றன.

கண்ணபிரானும் தனராஜும் அங்கு வரவில்லை. அவர்கள் மாடிக்குப் போயிருக்கிறார்கள் போலிருக்கிறது.

மேசையில் ஒரு வாழையிலைத் துண்டைப் போட்டு அதில் ஆவி பரக்கும் இட்டிலிகளையும் சட்டினியையும் அவளே வைக்கிறாள்.

மைத்ரேயிக்கு மிகவும் கூச்சமாக இருக்கிறது.

“நீ சாப்பிடலிங்களா?”

“நாமான் காலையிலே பலகாரம் சாப்பிடறது வழக்கமில்ல. நீ சாப்பிடு. செத்தப்போனா வடிவு வரும்.

"ராவெல்லாம் பிரயாணம் பண்ணிக் களைச்சிரிப்பே. எண்ணெய் மிளகாப்பொடி போடட்டுமா?”

“வாண்டாங்க, இது போதும்-”

“நேத்து எப்ப பொறப்பட்டீங்க. பட்டணத்திலேந்து?”

“எனக்கே முன்னப் பின்ன தெரியாது. திடீர்னு வந்து கிளம்புன்னாங்க-”

“அவங்க எப்பவும் இப்படித்தான். உனக்கு எந்த ஊர்ம்மா?”

“மாம்பாக்கம்-”அவள் தலை நிமிரவில்லை.

“தாய் தகப்பனெல்லாம் இருக்கிறார்களா?”

மைத்ரேயி குனிந்த தலை நிமிராமல் இல்லை என்று விள்ளுகிறாள்.

ஒரு பொட்டுக் கண்ணீர் இலையில் விழுகிறது.

“த்ஸ-த்ஸ-இலையிலே. பலகாரத்தை வச்சிட்டு வருத்தமான சங்கதியைக் கேக்குறேன். நானொரு மட்டி-”

“இல்லீங்க-” என்று மைத்ரேயி கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். “நான் பிறந்து நினைவு தெரிஞ்சதிலேந்து சாப்பிடுறியாம்மான்னு பரிவு காட்டுறவங்க நீங்கதான்னு நினச்சேன். கண்ணில் தண்ணி வந்திட்டது-”

“அடாடா- பாவம். ஏம்மா, சின்னப்பவே அவங்க இறந்திட்டாங்களா?” அனுதாபமும் பரிவும் ஒருவகையில் அவற்றுக்கு மூலமான உண்மையை மறைத்து, எதிராளியின் கவடற்ற உள்ளத்தைக் கொள்ளையடிக்கக் கூடியவை. மைத்ரேயி உடனே தன் துயர வரலாற்றைக் கொட்டத் தொடங்கிவிடுகிறாள்.

“நான் பிறந்தபோதே எங்கம்மா போயிட்டாங்க. எங்கையா ஒரு பெரிய வெள்ளைக்காரக் கம்பெனியில் மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற பதவியில் இருந்தாராம். எங்கப்பா நான் பிறக்குமுன்னமே இன்னொரு பெண்ணைக் கட்டி எல்லாம் அவளுக்கேன்னு வச்சிட்டு நாலைஞ்சு வருஷத்திலே செத்தும் போனார். எங்கக்கா தான் என்னை வளர்த்தது-"

“என்ன கஷ்டம்! இப்படித்தான் சில பொம்பிளைங்க, இரண்டாம்தாரம்னு வந்ததும் பேயாப் போயிடுதுங்க ஏம்மா! இப்ப, உங்க அக்கா, மாமன் சம்மதிச்சித்தான் தம்பியைக் கட்டிட்டியா?”

மைத்ரேயி தலையைக் குனிந்துகொண்டு விரலால் கோலமிடுகிறாள்

“எனக்கு இருந்த ஒரே உறவை அத்திட்டுத்தான் வந்திருக்கிறேன்-”

மளமளவென்று பல துளிகள் வீழ்கின்றன.

“அவங்க சம்மதிக்கலே. பின்ன கலியாணத்தை ஆருதான் நடத்தி வச்சாங்க?”

“யாருமே நடத்தலே. இந்த மணிமாலை மகாபலிபுரத்தில் வாங்கினது.”

“தேவலாமே? கோயிலில்லாத மகாபலிபுரத்துக் கல்லுங்களுக்கு முன்ன மணிமாலையைப் போட்டுக் கல்யாணம் நீங்களே நடத்திட்டீங்களாக்கும்” என்று அவள் சிரிக்கிறாள்.

காப்பி குடித்த பிறகு அவள் அடுத்தாற் போல் ஒட்டி இருக்கும் இன்னொரு அறைக்கு அழைத்துச் செல்கிறாள். அந்த அறையின் ஓர் புறம் மாடிக்குச் செல்லப் படி இருக்கிறது. அங்கும் சுவரில் படங்கள் இருக்கின்றன. கண்ண பிரானின் இளம் பருவத் தோற்றங்கள். மனைவி, குழந்தை களுடன் ஒரு படம். அதே குழந்தை, சிறுவனாக பத்து, பதினைந்து வயசுத் தோற்றங்களில் சில படங்கள், உருத்திராட்சமும் திருநீருமணிந்த சுவாமிகள் ஒரு படத்தில் வீற்றிருக்கிறார். அலமாரியில் அந்தப் படத்தினடியில் சாம்பிராணி வத்தி வைக்கும் இரண்டு யானைப் பொம்மைகளும் ஒரு ஜோதி விளக்கும் இருக்கின்றன. இன்னொரு திறந்த ஷெல்ஃப் முழுவதும் கத்தையாகப் பழுப்பேறிய பத்திரிகைத்தாள் அடுக்குகள். மலிவுப் பிரசுரங்களாகத் தோன்றும் சிறு புத்தகங்கள்.

“அவங்க, உங்க தம்பிங்களா?”

“யாரு, இந்த ஆட்டுக்காரனைக் கேக்குறியா? எனக்கு மகன். அவனுக்குக் கலியாணம் கட்டிட்டு, அவங்கையா என்னையும் விட்டிட்டாரு...”

அவள் இயல்பாகப் பேசினாலும், அவளுக்கு சுருக் கென்று உதைக்கிறது. தன் தந்தையைப் பற்றிப் பேசி, இளைய தாரங்கள் கொடுமைப் படுத்துவார்கள் என்ற கருத்தைத் தெரிவித்து விட்டாளல்லவா!

“இதான் இவன் பெண்சாதி, பெங்களுரில் பெரிய வியாபாரம். ரெண்டு மக்க அங்கேயே படிக்கிதுங்க. ரெண்டு ஆணு, ஒரு பொண்ணு. அதான் அங்கேயே பாதி நா போயிடுவா. தங்கச்சி வடிவு பக்கத்திலேதான் இருக்கு. இப்ப வரும். எண்ணெய் மண்டியாபாரம் அந்தாளுக்கு...” என்று படத்தைக் காட்டி விவரம் கூறுகிறாள்.

“இதோ புஸ்தகம் பேப்பரெல்லாம் இருக்கு. நீ படிச்சிட்டிரு. உங்க வீடுமாதிரி நினைச்சுக்க. நான் போயி சமயக் கட்டில் அவன் என்ன செஞ்சிட்டிருக்கிறான்னு பார்க்கிறேன்...” என்று சொல்லிவிட்டு அவள் போகிறாள்.

மைத்திரேயி அந்த மலிவு விலைப் புத்தகக் கட்டைப் பார்க்கிறாள். அவை அனைத்தும் காதல் நவீனங்கள் என்பது தலைப்பைப் பார்க்கும்போதே தெரிகிறது. அதன் ஆசிரியர்களின் பெயர்கள் புதிய புதிய பெயர்களாக இருக்கின்றன.

இந்தப் புத்தகங்கள் அவள் அந்தத் தனி வீட்டில் புழுங்குகையில் கிடைத்திருந்தால் பிரித்துப் பார்த்துக் கொண்டு பொழுது போக்கி இருப்பாளாக இருக்கும். இப்போது, காய்ச்சல் அடிக்கும் ஒருவனிடம் வெங்காயப் பகோடாவை வைத்தாற் போலிருக்கிறது. பிரித்துப் படிக்கவில்லை.

எனினும் என்ன செய்வதென்று புரியாமல் பத்திரிகை தாள் அடுக்கைப் பிரிக்கிறாள்.

அது கட்சிப் பிரச்சார இதழ் என்பது பார்க்கும்பேதே அவளுக்குப் புரிகிறது. அவற்றில் வந்திருக்கும் தலைப்புகளை, செய்திகளை கட்டுரைகளைப் படிக்கப் படிக்க அவள் செவிமடல்கள் சிவக்கின்றன.

பார்ப்பணீயம் பறந்து போக விரட்டியடிப்போம் வாரீர்!

‘ஏழைக் குடி மக்களே, ஒன்று படுங்கள்!’ என்றெல்லாம் தலைப்புகளிட்டு உணர்வைக் கிளறும் வகையில் வெறுப்பூட்டும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன

அந்த இதழ்களில் வெளியான புரட்சிக் கவிதைகளில் அவளுடைய நாயகனின் பெயர்தான் இருக்கிறது.

குடிப் பெருமை, குலப் பெருமை என்று எந்த மேன்மையையும் மைத்ரேயி அனுபவித்திருக்கவில்லை. எனினும், தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்தின் பெண்களைக் கற்பிழந்தவர் களென்றும் ஆண்களைக் காமுகர்களென்றும் திருப்பித் திருப்பிக் கூறுவதை அவளால் எற்க இயலவில்லை.

தன்னை இனிமையான சொற்களால் உபசரித்து, இதெல்லாம் படி என்று எதற்காகச் சொல்லிவிட்டுப் போகிறாள்? உன் குலத்தினர் மற்றவரைச் சுரண்டிக் கொண்டு தரையில் வைத்து நசுக்கிக் கொண்டு ஏகபோகமாக உல்லாச வாழ்வில் ஊறிக் கொம்மாளமிடும் அநியாயம் இனி நடக்காது என்று தெரிந்து கொள் என்று சொல்வதாகக் கொள்ளலாமா?

அந்த நேரத்தில் மைத்ரேயிக்குத் தன் மணவாளனைக் கூட்டிக்கொண்டு எப்படியேனும் இந்த இடத்தை விட்டு ஒடிவிடவேண்டும் என்று தோன்றுகிறது. “நீங்கள் இம்மாதிரி எல்லாம் எண்ணுவது சரியல்ல, கெட்டவர்களும் நல்லவர்களும் எல்லாச்சாதிகளிலும் இருக்கிறார்கள்” என்று அவனுக்கு உண்மையை அறிவுறுத்தத் துடிக்கிறாள். அதற்கு விளக்கம் கொடுக்க, ஆதாரபூர்வமான அறிவு அவளுக்கு இல்லை. எனினும், அவளுடைய உணர்வுக்கு அவர்கள் மிகையாக எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது.

எத்தனை நேரம் அந்த காகிதங்கள் விரித்துப் போட்டுக் கொண்டு புழுங்கிக் கொண்டிருந்தாளோ?

அந்தம்மை உள்ளே வருகிறாள், அவளுடைய கையில் ஒரு புதிய பட்டுச் சேலையும் இணைந்த வண்ணத்தில் வெல்வெட் சோளியும் இருக்கின்றன.

“உன் பேரு எனக்கு வாயில வரதில்ல, ராணின்னு கூப்பிடுகிறேன். ராணி, குளிச்சிட்டு நல்லா டிரஸ் பண்ணிக்கச் சொல்லுன்னுது தம்பி. இன்னிக்கு, இங்கே உங்களுக்கு விருந்து...”

புத்தம் புதிய பட்டுச்சேலை, கத்திரிப்பூ வண்ணத்தில் ஒரு பக்கம் சரிகைப்பூ வேலை செய்த கரை. வெல்வெட் சோளியை அந்த அம்மை பிரித்துக் காட்டுகிறாள். “புதிசு. வடிவுதான் தச்சுக்கிட்டது. பிறகு அளவு சரியில்லைன்னு போட்டுட்டுப் போயிட்டுது. உனக்குச் சரியாயிருக்கும்...”

எடுப்பாகக் கொங்கைகள் தெரிய வெட்டித் தைத்திருக்கிறார்கள். சேலையும் இரவிக்கையும் ஆசைப்பட்டு மாயும் உள்ளத்தைச் சுண்டி இழுத்தாலும் அவளால் கைநீட்டி வாங்க முடியவில்லை. நூறு ரூபாய்க்கு மேல் பெறும் சேலையும் சோளியும், அவளுக்கு எதற்காக எடுத்துக் கொடுக்கிறார்கள்?

அவள் தயங்கும் போது ஆவலில் துள்ளும் உள்ளம் ஓர் புறம் போலிக் கவுரம் பாராட்டிக் கொண்டு நிராகரித்து விடாதே என்று கையை நீட்டச் சொல்கிறது.

தன் காதலன் சம்பாதித்து ஒரு போலிப் பட்டுத் துணி வாங்கிக் கொடுத்திருந்தால்கூட இதைவிடப் பெருமையாக இருக்கும். அந்த மாதிரி வெட்டுச் சோளி அணிந்துகொள்ள வேண்டும் என்று அவளுக்கு ஆசை உண்டு. ஆனால் அக்கா எவ்வளவுக்கு அவளை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தாள்! இறுகப் பிடித்த ரவிக்கை போட்டுக்கொள்ளக்கூடாது. சேலைத் தலைப்பை நீளமாக விட்டுப் போர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுசிறு ஆசைகளுக்கெல்லாம் அணை போட்டுத் தடுத்ததினால் தான் அவள் இப்படி ஒரேயடியாகக் கட்டுப் பாட்டை மீறியிருக்கிறாளோ?

சேலையும் சோளியும் அவளைச் சீண்டிச் சீண்டி சிரிக்கின்றன. குளித்துவிட்டு அவற்றை அணிந்துகொள்கிறாள்.

தலையை வாரிக்கொண்டு அவள் வருகையில் முன் கூடத்தில் யார் யாரோ ஆண்கள் வந்துகொண்டிருப்பதும் பேசுவதும் கலகலப்பைக் கூட்டுகின்றன.

முழங்கைக்கு மேல் சிவப்புக் கயிற்றுத்தாயத்துக் கட்டிக் கொண்டு கருங்காலி உடலைக் காட்டிக் கொண்டிருக்கும் ஆள் ஒருவன் வாழையிலை நறுக்குகிறான். அவன் திரும்பிப் பார்க்கும்போது அந்த முகத்தைக் காண அச்சம் மேலிடுகிறது மைத்ரேயிக்கு. கண்கள் சிவந்து, பெரிய பயில்வான் மீசையுடன் தோன்றும் அவன் சாத்துவீகமான சமையலை வாழை இலையில் வட்டிப்பவனாகத் தோன்றவில்லை. கோழியை வெட்டிக் குருதிக்களரியில் அதன் குடலை வேறாக்குபவனைப் போல் அவளுக்குத் தோன்றுகிறது. பிறந்த நாளிலிருந்து பழகிய பழக்கமோ, உடலில் ஒடும் இரத்தத்தின் இயல்போ, அவளுக்கு அன்று அங்கே உணவு கொள்ளக் கூடப் பிடிக்காது போலிருக்கிறது.

“வா, வாம்மா, வடிவு... ஏன் இவ்வளவு நேரம்” என்ற குரல் கேட்கிறது.

“இங்கன்ன, கலியாண விருந்தா, மாநாட்டுக் கூட்டத்துக்கு விருந்தா?” என்று சிரித்துக் கொண்டு வரும் வடிவை மைத்ரேயி பார்க்கிறாள். கல்லிழைத்த தோடும் லோலாக்கும் டாலடிக்கின்றன. குறுகிய நெற்றி; அகன்ற கண்கள். கறுப்பாக இருந்தாலும் அவள் சிரிக்கும்போது பற்கள் பளீரேன்று தெரிகின்றன. நீண்ட பின்னலை கிரேப் சேலையின் நிறத்துக்கேற்ப, ரோஸ் வண்ண நாடாவினால் முடிந்திருக்கிறாள்.

“இதாம்மா...” என்று அவள் மைத்ரேயியைக் காட்டும் போது வடிவு சிரிக்கிறாள்.

“அண்ணன் நல்லாத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாரே... வச்சகண் வாங்க மனசில்லா. அம்மணியம்ம...” என்று வடிவு கூறிக் கொண்டிருக்கையிலேயே ஒரு நாலு வயசுச் சிறுமியைத் தாக்கிக் கொண்டு அவனும் கண்ணபிரானும் அங்கு வருகின்றனர்.

“பாத்தியா வடிவு, தம்பி செலக்ஸனை ?...” என்று கண் சிமிட்டும் கண்ணபிரான், “மகாபலிபுரத்திலே சாமியில்லாத கல்லுக்கு முன்னே கருமணி கட்டி, கல்யாணம் முடிச்சானாம்” என்று தெரிவிக்கிறான்.

“அண்ணே, நான் ஒத்துக்க மாட்டேன். இது சீர்திருத்தக் கல்யாணமில்லே” என்று வம்பு செய்கிறாள் வடிவு.

“ஒத்துக்காட்டா வேண்டாம்...?” என்று புன்னகைக்கிறான் தனராஜ். பேபி அவனிடம் இருந்து இறங்கி தாயிடம் வருகிறாள்.

“நீ மாமனுக்குப் பேசிக் காட்டினியா...?” என்று கேட்கிறாள் வடிவு.

“பேசத் தெரியுமா?, ஐய, ஊமைன்னு நினைச்சேன் ?”

“நிசமா அண்ணே? மேடைப் பேச்சு வருது. உம்பொண்ணு இப்பவே பெரிய பேச்சாளியாயிட்டாளேன்னு அவரு சிரிக்கிறாரு. ஈரோட்டார் வீட்டு விசேஷத்துக்குப் போயிருந்தமா? அப்ப பெரியவங்கல்லாம் வந்து மண மக்களை வாழ்த்திப் பேசினாங்களா? அப்படியே வீட்டுக்கு வந்து பொடி பொடிக்கிது.”

“எங்கே, சொல்லும்மா !”

பேபி பதுங்கிக் கொள்கிறாள்.

“சொன்னியானா மாமன் இப்ப ஐஸ்கிரீம் வாங்கிவரும்” குழந்தை மழலை மாறாக் குரலில் பேசுகிறாள். மெதுவாக, தெளிவில்லாமலிருந்தாலும் புரிகிறது.

“தகைமை சார்ந்த தலைவர் அவர்களே, கண்ணினுமினிய நண்பர்களே, தோளோடிணைந்த தோழர்களே, அன்பு வணக்கம்...”

“ம், அப்புறம் ?”

...கோயிலில் இருக்கும் கல்லைக் காட்டி, உயிரில்லாத சடங்கு செய்து ஊரை ஏமாத்துபவன் யார்? தன்மானமுள்ள தமிழனை ஆதிக்கஞ் செலுத்தி அடக்கி ஒடுக்குபவன் யார்? ஒண்ட வந்தது பிடாரியாகி ஊர் மக்களைத் துரத்தியது எது?” ‘ஹ’ என்று அவர்கள் கைகொட்டி சிரிக்கின்றனர். பேபியை எடுத்துக்கொண்டு தனராஜ் முத்த மழை பொழிகிறான். இரத்தம் கன்றி அடித்துவிட்டாற் போல் குன்றிக் குறுகி நிற்கிறாள் மைத்ரேயி, அந்தப் பட்டுச் சேலையும் ரவிக்கையும் முட்களாய் மாறி உறுத்துகின்றன. பூத்திரி மத்தாப்பூவைக் கொளுத்தி வைக்கோற் போரில் போட்டாற்போல் அறியாக் குழந்தையின் மழலையில் நஞ்சு கலக்கிறார்களே என்று வெதும்புகையில் விருந்துக்கு ஒவ்வொருவராகக் கூடத்தில் வந்து அமருகின்றனர்.

“போம்மா, போய் உட்காரு..."என்று அவளிடம் அம்மணியம்மா கூறுகிறாள்.

“எனக்குப் பசி இல்லே. நான் அப்புறமாச் சாப்பிடறேங்க...” என்று மெதுவான குரலில் கூறிச் கூசி நிற்கிறாள்.

“அட நல்லாத்தானிருக்கு! மணி ஒண்ணரை, இன்னுமா பசியில்லே? வடிவு! தம்பியைக் கூப்பிட்டுச் சொல்லு!”

கொத்துக் கொத்தாக வெள்ளையும் கருப்பும் சிவப்புமான துண்டுகளுமாகக் கூடம் கலகலக்கும் கூட்டத்தில் வடிவு லோலாக்குகள் மின்னச் சிரித்துச் சிரித்துப் பேசு கையில் இந்தச் செய்தி போகிறது.

“ஒ..! அண்ணே ! புதுமாப்பிளை அண்ணே ! அண்ணி யார் நீங்க வந்து கரந்தொட்டு அழைச்சாத்தான் விருந்துண்ண வருவாங்களாம் !...”

அவள் கத்துவதைச் செவியுறும் மைத்ரேயி விடுவிடென்று பின்னும் கேலிக்கூத்துக்காளாகாமல் கூடத்துக்கு வந்துவிடுகிறாள்.

கொல்லென்று படிகிறது அமைதி. சுவரோடு சாய்ந்த மின்னல் கொடி போல் நிற்கும் அவளையே எல்லாரும் பார்க்கின்றனர்.

கருந்திரிகள் போல் என்ணெய்ப் பளபளப்புடன் விளங்கும் முடிகள். நாசூக்கான பூச்சி மீசைகள், முரட்டுத்தனத்தின் வெளியீடுகளாகத் தெரியும் கண்கள். இப்படிச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவளுடைய கண்களில் பட்டுக் கருத்தில் படிந்து பீதியைத் தோற்றுவிக்கின்றன.

“தலைப் பக்கத்து இலையில் தம்பி உட்காரட்டும்” என்று கண்ணபிரான் அழைக்கிறான்.

“அண்ணியார் பக்கத்தில்...வாங்க...நான் தோழி இந்தப் பக்கம்..” என்று மறுபக்கம் வடிவு அமர்ந்து கொள்கிறாள்.

எல்லோரும் அமர்ந்து கொண்டான பிறகு, ஒரு அண்ணன் எழுந்து திருமண வாழ்த்துக் கூறுகிறார்.

“தமிழ் குலத்தைத் தரணியில் நிலைநிறுத்த தந்த வரிசையில் புகழார்ந்த பெயரைத் தேடிக்கொண்ட செம்மலே! மொழிக்கும் இனத்துக்கும் மூச்சுள்ளவரைத் தொண்டாற்றும் உறுதி கொண்ட ஊழியனாய் உழைக்கும் உத்தமா! அன்று வள்ளுவரும் வான் புகழ் இளங்கோவும் வள்ளல் சாத்தானும் வந்த பரம்பரையில் எம் உள்ளங்கள் இனிக்க இனிக்க கவிமழை பொழிவிக்கும் தீதறு இளங்கவியே! ஆரியம் என்றொரு மாயையில் மூழ்கி அடிமைகளாய், அபலைகளாய், அல்லலுறு கையில் நேரிய செஞ்சுடராய் ஒளிகாட்டும் எம்முன் ஒளி வீசும் ஏற்ற மிகு நல் விளக்கே! ஈண்டு, எம் தமிழ் இனம் தரணியில் தலை நிமிர்ந்து நிற்க, ஈடெமக்கில்லை என்று பீடு நடை போட, அன்று தமிழன் கண்ட வாழ்வே வாழ்வு என்று மேலோர் இயம்பும் மொழி வழி நின்று, களவு முன்னும் கற்பு பின்னுமென்று கன்னியொருத்தியின் கருத்தைக் கவர்ந்து...” இங்கே சற்றே நிறுத்திஅவர்களைப் பார்க்கையில் ஆரவாரம் மேலிடுகிறது. ஆகா ஆகா என்றும் அற்புதம் அற்புதம் என்றும் புகழ்மொழிகள். அதுவரையிலும் பேதையாய் மூச்சுத்திணர அமர்ந்திருக்கும் மைத்ரேயிக்கு, தன்னைச் சுற்றி இறுக்கியிருந்த பட்டிழைகள் வெடித்து விட்டாற் போலிருக்கிறது. உள்ளெழுச்சி கண்களில் நீரை நிறைக்கிறது. எனினும் தலைகுனிந்து விழுங்கிக் கொள்கிறாள்.

பின்னும் அந்த வாழ்த்துரை தொடர்கிறது. அழகுப் பந்தலுள் ஆங்காங்கே நச்சுமுனை ஊசிகள் அவளுக்கு மட்டும் உறுத்தப் புகுத்தியிருக்கின்றனர். அவனை, அவளுடைய காதலனை, பகை வீட்டிலிருந்து வெற்றி மாலையுடன் பெண்ணணங்கைச் சிறைகொண்டு வந்த வீரன் எனப் பாராட்டிப் புகழ்கின்றனர்.

“எல்லோரும் ஒர் குலம்; எல்லோரும் ஓரினம்; அதுவே தமிழ்க்குலம், தமிழினம்” என்று முழக்குகிறார்கள்.

ஒருவழியாகக் கையொலிகள் நீண்டொலிக்க வாழ்த்துரைகள் முடிகின்றன. தனராஜ் எழுந்து நன்றி நவில்கிறான்.

“அண்ணன்மாரே, இளவல்களே, என்னுள்ளம் தழுதழுக்கிறது. உணர்ச்சி மிகுதியினால், என் நா குழைகிறது நன்றி மிகுதியினால், நமது இனம், நமது பண்பாடு, நமது மொழி என்று ஒன்று சேர்ந்து இருக்கும் இக்காலை, இத்திருமண வாழ்த்தையும் விருந்தையும் என் கண்ணினுமினிய அண்ணன் கண்ணபிரான் ஏற்பாடு செய்தது; நான் எதிர்பாராதது. நாம் ஆண்டாண்டுக் காலமாய் ஒரு அந்நியனுக்கு மட்டுமில்லை நம் நாட்டிலேயே நம்மை அடிமைகொண்டு நம்மீது ஆதிக்கம் செலுத்திய ஒரு மாயைக்குக் கட்டுப்பட்டிருந்தோம். நமக்குள்ள ஆற்றலெல்லாம் எளிய கிராமங்களிலும், மூலை முடுக்குகளிலும், முடிவெட்டும் குடில்களிலும் உடை தைக்கும் ஒத்தைக் கடைகளிலும் சிதறிக் கிடக்கின்றன.

துளிகளெல்லாம் ஒன்று சேர்வோம். நம் தளபதிகள் ஜனநாயக முறையிலே எதிர்த்துப் போராடுவோம் என்று முழக்கி இருக்கின்றனர். அதை இந்தத் தமிழகமெங்கும் பரவச் செய்யும் ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிடமும் என்னிடமும் இருக்கிறது, என்று நான் உணருகிறேன். சாதியுடன் நாம் தொடுக்கும் போரில் அடையும் வெற்றியாக இந்தக் கலப்பு மணத்தைக் கொள்வதாகச் சற்றுமுன் கூறிய அண்ணன் பெருமிதம் கொள்ளச் செய்தார் என்னை. இங்குள்ள இளவல்கள் இதை இதயத்தில் வைத்துக்கொள்ளட்டும்..”

மைத்ரேயி செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

பாயசமும் வடையும் கறிகட்டுப் பச்சடியும் அவளுக்கு விருந்தாக இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_3&oldid=1115339" இலிருந்து மீள்விக்கப்பட்டது