வாழ்க்கை விநோதம்/வரியில்லா வருமானம்

வரியில்லா வருமானம்

‘இடது கைக்குத் தெரியாமல், வலது கையால் கொடுப்பது தர்மம்’ என்றார் இயேசுநாதர்.

ஆனால், இடது கைக்குத் தெரியாமல் வலது கையால் லஞ்சம் வாங்குவதில், இயேசுநாதரையும் மிஞ்சக் கூடியவர்கள் இன்று உலகத்தில் பெருகி வருகின்றனர்.

யுத்தத்தில், எல்லாவற்றிற்கும் பஞ்சம் வந்தது. ஆனால், லஞ்சம் வாங்குவது மட்டும், பஞ்சமில்லாது வளர்ந்து வருகிறது.

லஞ்சம் வாங்கும் சிலர், “நான் அவரிடம் வாங்கியதை, லஞ்சம் என்று எப்படிச் சொல்ல முடியும் ? நான் செய்த உதவிக்காக, அவர் எனக்கு அளித்த சன்மானம் இது” என்று கூறலாம். நேரான வழியில் காரியத்தைச் செய்து, பலபேர் அறியப் பெறுவது சன்மானம். அதற்கு மதிப்பு உண்டு. ஆனால், இரகசியமான வழியில், முறை தவறிக் காரியம் செய்து இரகசியமாகவே பணம் பெறுவதை, எப்படிச் சன்மானம் என்று சொல்ல முடியும்? “ஹோட்டல் மானேஜருக்கு நான் எட்டணாக் கொடுத்தேன். அவர் எனக்கு, இலவசமாகச் சாப்பாடு போட்டார்” என்பது போலத்தான் இது இருக்கிறது.

“உள்ளே அதிகாரியைப் பார்க்கவேண்டுமா? அப்படியானால் என் கையில் எட்டணாவை வை. சமயம் பார்த்து உள்ளே தள்ளி விடுகிறேன்' என்கிறான் டபேதார்.

அதிகாரியைப் பார்ப்பதற்குக்கூடப் பணம். சுவாமி தரிசனத்துக்குக் கூட, இரண்டணா நாலணாதான். ஆணால் அதிகாரியைப் பார்க்கவோ எட்டணா!

ஒரு பெரிய கம்பெனி. அங்கு இருக்கும் சாமான்களைச் சுலபமாகப் பெறுவது கடினம். ஆனல், சாமான்கள் வியாபாரம் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. நேரான வழியில் செல்பவர்களுக்கு அல்ல ; சுற்றுப் பாதையில் வருவோர்களுக்கே கிடைக்கின்றன.

அதன் மானேஜர் வீட்டின் முகப்பில், முன்பெல்லாம் பெரிய நாய் ஒன்று கட்டிக் கிடக்கும். கரடி போன்ற உருவம். நிறமும் அப்படியே. இப்பொழுது, அந்த நாயை அங்குக் காணோம்! காரணம், யுத்தத்துக்கு முன்னால், அவருக்குக் கடன் அதிகமாக இருந்ததாம். அதனால் கடன்காரர் தொந்தரவும் அதிகம். வீட்டுக்குள் யாராவது நுழைந்தால், நாய் குரைக்க ஆரம்பித்துவிடும். (சில சமயங்களில் கடித்துவிடுவதும் உண்டாம்!) ஆகையால் கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்குள் நுழைவதற்கே அஞ்சி, வந்த வழியே திரும்பிவிடுவார்களாம். ஆனால், யுத்தம் வந்த பிறகோ, அந்த நாய் அங்கே இருப்பது.தொந்தரவாய்ப்போய்விட்டதாம். ஏனென்றால், காகிதக் கூட்டுக்குள் ஐம்பது, நூறு என்று வைத்து, வீடு தேடி ரகசியமாகக் கொடுக்க வருபவர்களுக்கு, உபசரணை செய்ய வேண்டாமா? அதனால்தான், நாய்க்கு அங்கே வேலை இல்லை !

புதிதாக உத்தியோகம் பெற்ற ஒருவரிடம் லஞ்சம் கொடுக்க ஒருவன் வந்தான். அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். வந்தவன் ஏமாற்றத்துடன் போய் விட்டான். அவன் தலை மறைந்தவுடன், அந்த ஆபீஸிலுள்ள சகோரக் குமாஸ்தாக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து

லஞ்சத்தை மறுத்த குமாஸ்தாவை `கிடுக்கித் தாக்குதல்' செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

‘என்னங்காணும், கொண்டுவந்து ஒரு மனுஷன் கொடுக்கிறான். வேண்டாம் என்று சொல்லிவிட்டீரே! ரொம்ப அழகாயிருக்கிறது. பரம்பரையாய் நடந்து வருவதை வீணாய்க் கெடுக்கப் பார்க்கிறீரே! எங்கள் பிழைப்பிலெல்லாம் மண்ணைப்போடத் தீர்மானித்துவிட்டீரோ ?’ என்று சரமாரியாகப் பொழிந் துவிட்டார்களாம்.

இந்த நிகழ்ச்சியை அந்த லஞ்சம் வாங்காதவர், தமது நண்பர் ஒருவரிடம் கூறினார்.

இதைக் கேட்ட அவரது நண்பர், “அப்படித்தானப்பா இருக்க வேண்டும். நீ ரொம்ப நல்லவனப்பா” என்று மெச்சினார்.

ஆனால், அதற்குள் அவர், “நான் என்ன செய்வது? உத்தியோகம் ஆகி இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள்ளேயா லஞ்சம் வாங்குவது? இன்னும் கொஞ்ச நாளாகட்டும் என்று இருந்தேன். அதற்குள்ளேயே இந்தப் பயல்கள், இப்படி எரிந்து விழுகிறான்களே!” என்று வருத்தப்பட்டாராம் !

***

ஒரு பத்திரிகை சம்மந்தமான வேலை ஒன்று, நடக்க வேண்டியதிருந்தது. பத்திரிகை மானேஜர், அந்த வேலையை முடிப்பதற்கு உதவி செய்யும்படியாக, அது சம்மந்தமான உத்தியோகஸ்தரைக் கேட்டுக்கொண்டார். அவரும் முடித்துத் தருவதாக வாயளவில் சொன்னாரே தவிர, செய்கையில் காட்டாதிருந்தார்.

வாய்ப் பேச்சில் மசியமாட்டார் போல் தோன்றியதால், பத்திரிகை மானேஜர், தம் கையில் வைத்திருந்த பத்திரிகையை, அவர் கண்ணுக்குத் தெரியும்படி புரட்டிக் கொண்டேயிருந்தார். உத்தியோகஸ்தரின் கண்பார்வை மானேஜர் செய்கையில் விழுந்தது. உடனே, “இதுதானா நீங்கள் வெளியிடும் பத்திரிகை? இங்கே கொண்டாரும். (புரட்டிப் பார்த்துவிட்டு) அடடா! நன்றாயிருக்கிறதே! நான் படித்துவிட்டுத் தரட்டுமா” என்றார். இவரும் ‘சரி’ என்ரறார்.

பத்திரிகை கை மாறியது; கண்சாடை நடந்தது; காரியம் முடிந்தது. பத்திரிகையா லஞ்சமாகக் கொடுக்கப் பட்டது? அதுதானில்லை. அதற்குள்ளே இருந்த ஒரு பச்சை நோட்டுத்தான் அப்படிச் செய்தது.

***

சாதாரண விஷயங்களில் கூட, இந்த ‘ரகசிய சன்மான’த்தைக் காணலாம்.

“மத்தியானப்பூசை ஆகி, கதவு திருக்காப்பிட்டாய் விட்டது. இனி, இப்பொழுது திறக்கமாட்டோம்” என்கிறார் கோயில் அர்ச்சகர்.

“அடடே, அப்படி யெல்லாம் சொல்லக் கூடாது. ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருக்கிறோம். அவசியம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சாயங்கால வண்டியிலேயே ஊருக்குப் போக வேண்டும்" என்கிறார் குடும்ப சமேதராக வந்த அயலூர்வாசி. “அப்படியானால் மூன்று அர்ச்சனைகள் பண்ண வேண்டும். அர்ச்சனை ஒன்றுக்கு இரண்டணா” என்று நிபந்தனை போடுகிறார், வழக்கமாக ஒர் அணா வாங்கும் அர்ச்சகர்.

வந்தவர், “அதற்காக என்ன? இவ்வளவு தூரம் வந்து சுவாமி தரிசனம் செய்யாமலா போவது? சரி” என்று பணத்தைக் கொடுக்கிறார். கதவு திறக்கிறது. அர்ச்சகர் அன்பொழுகப் பேசி, கடைசியில் சன்மானமும் பெறுகிறார் !

ஓர் ஊரிலிருந்து, மற்றோர் ஊருக்கு இரவு நேரத்தில் சாமான்கள் ஏற்றிக்கொண்டு வண்டிக்காரர்கள் சென்றார்கள். நடுவே, ஓர் ஊரைத் தாண்டிப் போக வேண்டியதிருந்தது. அந்த ஊரில் பாதுகாப்பு அதிகம். ஊர்க்காப்பு சங்க அங்கத்தினர்கள் மும்முரமாக வேலை நடத்திவந்தனர்; அவர்கள் வண்டிக்காரர்களை, “நீங்கள் இரவில் வண்டிகளை இங்கேயே அவிழ்த்துப் போட்டு விட்டு, நாளைக் காலையில்தான் போகவேண்டும்” என்று தடுத்தனர்.

அங்கு, திருட்டு அதிகமாய் இருந்ததால், திருடின சாமான்களை, இரவில் வண்டிகளில் ஏற்றிச் சென்றுவிடுவார்கள் என்ற சந்தேகத்தாலேயே அப்படிச் செய்தனர். வண்டிக்காரர்கள் எவ்வளவோ மன்றாடினார்கள்; பயனில்லை. கடைசியில் ஒரு வண்டிக்காரன், “என்ன சாமி, நாங்கள் என்ன பண்ணுவது? இரவு பூராவும் விணாய்ப் போய்விடுகிறது. சம்பளத்துக்குக் காவல் காப்பவர்களாக இருந்தாலும் ஓரணா இரண்டணாக் கொடுத்துச் சரிக்கட்டிப்பிடலாம். உங்களுக்கு நாங்க என்னத்தைக் கொடுக்கிறது ? இல்லை, கொடுத்தாத்தான் வாங்குவீங்களா?” என்றானாம்.

***

உண்மையிலே , லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் ஆபத்தான சமாச்சாரந்தான். லஞ்சம் கொடுப்பவன், ‘இவர் வாங்குவாரா? அல்லது கோபித்துக்கொள்வாரா?’ என்று ஏங்குகிறான். வாங்குபவனோ, ‘மேலே தெரிந்து விட்டால் வேலை போய்விடுமே!’ என்று பயப்படுகிறான்.

ஆனால் என்ன பயமாயிருந்தாலும், லஞ்சம் பெருகி வளர்வதைப் பார்த்தால், தைரியசாலிகள் பெருகுகிறார்கள் என்றே எண்ண வேண்டியதிருக்கிறது!

குமாஸ்தாவாக இருந்தால், அந்த ஆபீஸிலுள்ள பியூனைக்கேட்டு லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. மானேஜராயிருந்தால், அவருடைய கார் டிரைவரைக் கேட்க வேண்டியதிருக்கிறது. பெரிய அதிகாரியாக விருந்தால், இதற்குமுன் அவர் லஞ்சம் வாங்கிய துண்டா என்று அவருடைய பூர்வ சரித்திரத்தை அறிய வேண்டியதிருக்கிறது.

***

எனக்குத் தெரிந்த ஒருவர், ஒரு கூட்டத்தில் லஞ்சத்தைப் பற்றிப் பிரமாதமாகப் பேசி, “லஞ்சம் வாங்குவது மிகவும் மோசமாகும். அது, அயோக்கியர்கள் செய்யும் வேலை” என்று முடித்தாராம். கூட்டம் முடிந்ததும் அநேகர் இவருடைய பேச்சுக்கு மெச்சி, மேடை மீது வந்து கை கொடுத்தனராம்.

“இப்படிக் கை கொடுத்தவர்கள் எல்லாம் இரண்டு கையாலும் லஞ்சம் வாங்கித் தின்று கொழுத்தவர்கள்” என்றார், எனது நண்பர்.

“ஏன், கை கொடுக்கும் போதே, அவர்கள் லஞ்சம் வாங்குபவர்கள் என்று, அவர்கள் கைகளே சொல்லி விட்டனவோ ?” என்று கேட்டேன்.

“இல்லை. இவர்களெல்லாம் லஞ்சம் வாங்காத பரம யோக்கியர்கள் என்று, கூட்டத்தில், இருந்தவர்கள் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம். அதனால்தான் இப்படி முந்திக் கொண்டு கை கொடுக்க மேடைக்கு வந்தனர். இவர்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே !” என்றார்,

கை கொடுக்கும் போதே, என் நண்பர், இவர்களைக் கையோடு பிடித்துவிட்டார். ஆனாலும் , விட்டுவிட்டாரே! ஆமாம், அவரால் என்ன செய்யமுடியும், மனச்சாட்சியை விற்பவர்களுடன் ?