வாழ்க்கை விநோதம்/வெள்ளைக்காரரும் வெள்ளிக்கிழமையும்

வெள்ளைக்காரரும்
வெள்ளிக்கிழமையும்

“இன்றைக்கு என்ன, திங்கட்கிழமையா? அடடா, 7 1/2 முதல் 9 வரை ராகுகாலம் அல்லவா? இந்த நேரத்திலே இந்த நல்ல காரியத்தை ஆரம்பிக்கப்படாது” என்று நம் நாட்டில் எத்தனையோ பேர் சொல்லுகிறார்கள் ராகு காலத்தைப் போலவே, எமகண்டம், கரிநாள் முதலியவைகளெல்லாம் அநேகருக்குப் பிடிப்பதில்லை.

இப்படிப்பட்டவர்களைப்பற்றிக் கூறும்பொழுது, “செச்சே, இவர்களெல்லாம் என்ன, இப்படிப் பத்தாம் பசலிகளாக இருக்கிறார்களே! மேல்நாட்டிலெல்லாம்.இது போலவா நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிரறார்கள்? அதனால்தான் அவர்கள் இவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறார்கள்” என்று சிலர் சொல்வதுண்டு.

ஆனால், அந்த மேல்நாடுகளிலுள்ள சில நம்பிக்கைகளைப்பற்றிக் கேள்விப்படும்போது, “அடடா, இந்த வெள்ளைக்காரர்களுக்கு நாம் எவ்வளவோ தேவலையே!” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!

அவர்களில் அநேகருக்கு வெள்ளிக்கிழமை என்றால் பிடிக்கவே பிடிக்காது. வெள்ளிக்கிழமையில் எந்தக் காரியத்தையுமே ஆரம்பிக்க மாட்டார்கள். திருடன்கூட வெள்ளிக்கிழமையன்று திருடமாட்டானாம்.

“டேய், நாளைக்கு கோர்ட்டிலே உன்னை விசாரிக்கப் போகிறார்கள்” என்று போலிஸ் அதிகாரி ஒரு திருடனிடம் கூறினால், “ஐயையோ! வேண்டாமைய்யா, இறைக்கே விசாரிக்கட்டும். அல்லது நாளை மறுநாள் விசாரிக்கட்டும். நாளைக்கு வெள்ளிக்கிழமை. வேண்டவே வேண்டாமய்யா” என்று கெஞ்சுவானாம். ஏன் தெரியுமா?

வெள்ளிக்கிழமை வரும் குற்றவாளிகளுக்கு, தண்டனை அநேகமாக இரண்டு மடங்குதான் இருக்குமாம். மூன்றுமாதம் சிறைவாசம் கொடுக்க வேண்டிய குற்றத் துக்கு ஆறுமாதம் கொடுத்துவிடுவார்களாம், அநேக நீதிபதிகள்.

வெள்ளிக்கிழமை கல்யாணம் செய்துகொள்வது கூடாதாம்! அப்படிச் செய்துகொண்டால், கணவனோ அல்லது மனைவியோ சீக்கிரத்தில் இறந்துவிடுவார்களாம் அல்லது கணவனுக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு விவாகரத்துச் செய்துகொள்ள வேண்டிய நிலை வந்துவிடுமாம்!

ஒருவருககு இரவில் தூக்கம் வரவில்லையாம். உடனே தம் மனைவியைக் கூப்பிட்டு, “நீ படுக்கையை என்று திருப்பிப் போட்டாய்? வெள்ளிக்கிழமைதானே! உண்மையைச் சொல்!” என்றாராம்.

“இல்லையே!” என்றாளாம் அவர் மனைவி.

“இல்லவே இல்லை; பொய் சொல்லுகிறாய். நீ வெள்ளிக்கிழமை படுக்கையைத் திருப்பிப் போட்டதால் தான் துக்கமே வரவில்லை” என்றாராம் அவர்!

ஒருவர் மற்ருெருவருக்குக் கடிதம் எழுதுகிறார். அது மிகவும் இரகசியமான கடிதம். அதைப் படித்து முடித்ததும், அதை நெருப்பில் கொளுத்தப் போகிறார், அவர். ஆணால், அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தால்,அதை நிச்சயம் கொளுத்தமாட்டார். மறுநாள்தான் கொளுத்துவார்.

ஏன் தெரியுமா? வெள்ளிக்கிழமை கொளுத்தினால் கடிதம் எழுதியவருக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமாம்.

வெள்ளிக்கிழமை இரவு ஒரு கனவு கண்டால் அது கட்டாயம் பலித்துவிடுமாம் பரீட்சையில் தோற்றுப் போவதாகக் கண்டாலும் சரி, கிரிக்கெட் ஆட்டத்தில் ஜெயிப்பது போலக் கண்டாலும் சரி, கழுத்தை யாராவது திருகுவது போலத் தோன்றினாலும் சரி-அது சீக்கிரத்தில் பலித்துவிடுமாம்!

இவை மட்டுமா? வெள்ளிக்கிழமை நகம் வெட்டுவது கூடாதாம். அப்படி வெட்டினால், அது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடுமாம்! மிகவும் கஷ்டப்படுகிறவனை, ‘இவன் வெள்ளிக்கிழமை பிறந்திருக்கிறான் போலிருக்கிறது’ என்றும் சிலர் சொல்வதுண்டாம்!

இந்த வெள்ளிக்கிழமையைப் போலவே அவர்களுக்கு மிகவும் வேண்டாத எண் 13.

“டேய், மூன்று பேராகச் சேர்ந்து போகாதீர்கள். காரியம் குட்டிச்சுவராய்ப் போய்விடும்” என்று நம்மில் சிலர் சொல்வதில்லையா? அது போலவே, 13-ஆம் தேதி,

13 பேர்கள்-இதிலெல்லாம் அவர்களுக்கு ஒரு வெறுப்பு இருக்கிறது.

ஒரு விருந்து நடக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதற்கு 13 பேர்களே வந்திருந்தால் 14-ஆவதாக ஒருவரை வலிய இழுத்து வந்து எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். ஏனென்றால், 13 வேண்டாத எண் அல்லவா?

அதே விருந்துக்கு 12 பேர்களே வந்திருந்தால் கூட அங்கே நிம்மதி இராது. எல்லோரும் அவச், அவச் என்று அள்ளிப் போட்டுக்கொண்டு எழுந்து விடுவார்களாம். ஏனென்றால், யாராவது இன்னொருவர் அங்கே வந்துவிட்டால், 13 ஆகிவிடுமல்லவா ? அதனால்தான் !

சில இடங்களில் 13 பேர்கள் விருந்து சாப்பிடுவார்கள். ஆனால், ஒவ்வொருவரும் அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு முன்னால் எழுந்திருக்கப் பார்ப்பார்கள். ஏன் அவர்கள் இப்படி அவசரப்பட வேண்டும் ? கடைசியாக, அதாவது 13-ஆவதாக எழுந்திருப்பவர் அந்த வருஷத்துக்குள்ளே இறந்துபோய்விடுவாராம் ! எப்படி இந்த நம்பிக்கை !

இந்த 13 என்ற சொல்லைக் கேட்டதுமே, அதிகமாகப் பயப்படுகிறவர்கள், பிரெஞ்சுக்காரர்கள்தாம். பிரான்ஸ் தேசம் முழுவதுமே 13 என்ற எண் வெறுக்கப்படுகிறது !

அங்கே, 13 என்ற எண் உள்ள வீட்டில் யாருமே குடியிருக்கமாட்டார்களாம் ! 13-ஆவது எண் போட்ட வீடே அநேகமாக அங்கு இருப்பதில்லையாம்!

வீதியில், ஒவ்வொரு வீட்டு நம்பரையும் பார்த்துக் கொண்டே போனால் 12-ஆம் நம்பர் வீட்டுக்கு அடுத்தது

‘12A’ என்ற வீடு இருக்கும்; அதற்கு அடுத்தது 14-ஆம் நம்பர் வீடுதான்; 13-ஆம் நம்பர் வீடு இருக்காது ! அப்படி யிருந்தாலும், அந்த வீட்டுக்குக் குடிவருகிறவர்கள், அதை மாற்றி ‘12.A’ என்று எழுதிவிடுவார்களாம்!

பெரிய பெரிய மாலுமிகள், ஆகாய விமானிகளெல்லாம் 13-ஆம் தேதியன்று புறப்படமாட்டார்களாம். 13-ஆம் தேதியுடன் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து கொண்டால், நிச்சயம் புறப்படவே மாட்டார்கள்.13-ஆம் தேதி,வெள்ளிக்கிழமை, அதுவும் 13 பிரயாணிகளுடன் புறப்பட வேண்டியது வந்துவிட்டால், வேலையே போவதானாலும் சரிதான்; புறப்படமாட்டார்களாம்.

கிழமையிலே வெள்ளிக்கிழமையையும், தேதியிலே 13-ஆம் தேதியையும், அவர்கள் வெறுத்து விலக்குவது போலவே, மாதத்திலே மே மாதத்தையும் அவர்கள் வெறுக்கிறார்கள்.

இந்த நம்பிக்கைகளோடுமட்டும் வெள்ளைக்காரர்கள் நிற்கவில்லை. இன்னும் என்ன என்னவெல்லாமோ நம்பிக்கைகள் அவர்களிடம் இருக்கின்றன.

அறைக்குள்ளே குடையை விரிக்கக் கூடாது. மேஜைமீது இரண்டு கத்திகளை ஒன்றை ஒன்று குறுக்கிடும்படி வைக்கக்கூடாது. ரொட்டியைக் கத்தியில் குத்திக்கொண்டு வறுக்கக் கூடாது. 2 பேர் ஒரே கோப்பையில் கை கழுவக் கூடாது. (அப்படிக் கழுவினால், இருவருக்கும் சீக்கிரத்தில் சண்டை வந்துவிடுமாம்!) ஏணியைச் சுவரோடு சாய்த்து வைத்திருக்கும் போது, சுவருக்கும் ஏணிக்கும், இடையே போகக் கூடாது. இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ!