வெற்றிக்கு எட்டு வழிகள்/006-010

நாணயமான மனிதனும் தோல்வியடயலாம்; ஆனால், அவன் நாணயமாக இருந்து வருவதால் தோல்வியடையவில்லை; அவனுடைய தோல்வி தகைசான்றதாவே இருக்கும் அவனுடைய குணவியல்புக்கும் புகழுக்கும் ஊறு விளைவிக்காது. குறிப்பிட்ட திசையில் அவனுக்கு திறமையில்லாததன் விளைவாக ஏற்படும் தோல்வியும் கூட, அவனுடைய திறமைகளுக்குப் பொருத்தமான ஏதேனும் ஒன்றிற்கும், அதன் காரணமாக இறுதியான வெற்றிக்கும் வழிகாட்டும் வகையுமாகவே இருக்கும்.

அஞ்சாமை – நாணத்தைத் தொடர்ந்தே வருகின்றது. நாணயமுள்ள மனிதன் தெளிவான கண்ணும், மனவுறுதியுடன் நிற்கும் பார்வையும் கொண்டிருக்கின்றான். அவன் தன் கூட்டாளிகளை முகத்திலேயே உற்றுப் பார்ப்பதுடன், அவனுடைய பேச்சு நேரடியானதாகவும், அமைதியுடையதாகவும் இருக்கும். பொய்யானதாகவும், ஏமாற்றுபவனாகவும் இருப்பவன் தனது தலையைத் தொங்கவிடுகின்றான்; அவனுடைய கண்கள் குழம்பிக் கலக்க முற்றுப் பார்வைக் கோணலுடன் இருக்கின்றன. அவன் பிறிதொரு மனிதனைக் கண்ணில் ஏறிட்டுப் பார்க்க முடிவதில்லை. உறுதியற்றதாகவும், நிறைவற்றதாகவும் இருப்பதால் அவனுடைய பேச்சு அவநம்பிக்கையையே உண்டு பண்ணுகின்றது.

நாணயமற்ற மனிதர் எப்போதும் அச்சத்துடனேயே இருக்கின்றனர். அவர்கள் கடன் பட்டதற்காக அஞ்சுவதேயில்லை. ஆனால், தம் கடன்களைச் செலுத்த வேண்டுமே என்பதற்காகவே அஞ்சுகின்றனர். அவர் தம் கூட்டாளிகளைக் கண்டு அஞ்சுகின்றனர். அதிகாரிகளைக் கண்டு அஞ்சுகின்றனர். தம் செயல்களால் விளையும் விளைவுகளுக்காக அஞ்சுகின்றனர். மேலும் தம் குற்றச் செயல்கள் வெளிப்பட்டு விடக் கூடாதே என்பதற்காகவும், எந்த விநாடியிலும் தம்மைச் சூழ்ந்துவிடக்கூடிய அவற்றின் விளைவுகளுக்காகவும் இடைவிடாது அச்சம் கொண்டிருக்கின்றனர்.

நாணயமுள்ள மனிதன் அச்சத்தின் இச் சுமையனைத்தும் களைந்தவனாக இருக்கின்றான். அவன் கவலையற்றுத் தன் கூட்டாளிகளிடையே நிமிர்ந்து நடப்பவனாகவும் இருக்கின்றான்; எந்தக் குணத்தையும் பாவனை செய்து கொள்ளாதவனாகக் கடமையில் தவறாதவனாகக் கெஞ்சுதல் இல்லாதவனாகத் தன்னியல்போடு இருப்பவனும், கணக்குக் கண் காண்பவனுமாக இருக்கின்றான். எவ்வித வஞ்சனையோ ஊறு விளைத்தலையோ செய்யாத நிலையில் அஞ்ச வேண்டியவர்யாருமிலர்; அவனுக் கெதிராகக் கூறப்படுவது எதுவாயினும் அது அவன் நற்பயனுக்காகவே சேர்ந்துதவும்.

நெருக்கடிகள் அனைத்தின்போதும் உதவி புரிந்து, இடர்ப்பாடுகளை ஆண்மையுடன் பொருது வெல்ல உதவி செய்து, முடிவில் அவனிடமிருந்து கவரப்பட முடியாத மேன்மையையும் அஞ்சாமையே மனித வாழ்விற்கு ஒரு வலிமையான அரணாகும்.

இலக்கு : சால்பு ஊட்டி வளர்க்கின்ற குணவியல்பு வலிமையின் நேரடியான விளைவேயாகும். சால்புடைய மனிதன் நேரடியான குறிக்கோள்களும், வலிமையும் அறிவுக் கூர்மையுள்ள உட்கோள்களும் கொண்ட மனிதனாவான். அவன் ஊகிப்பதுமில்லை, இருளில் உழைப்பதுமில்லை. அவனுடைய திட்டங்கள் அனைத்தும் அவனுடைய குணவியல்பு வார்த்தெடுக்கப் பட்டிருக்கின்ற குணவியல்புத் திறத்தில் சிறிதளவைக் கொண்டதாகவே இருக்கும்.

எந்தச் சூழ்நிலையைப் பொறுத்தும் மிகவும் பரந்த நோக்கத்தைக் கொண்டிருக்கின்ற அதே வேளையில் நுணுக்கங்களையும் அவற்றுள்ளடங்கிய நியதிகளையும் விரிபொருள் அகங்கொள்ளும் வகையில் புரிந்து கொள்ளும் நிலை அவனுக்கு அளிக்கின்ற உயர்ந்த ஆற்றலையும் கையாளுகின்றான். ஒழுக்க நெறி எப்போதும் வேளைக்கேற்ற பொருத்தமெனும் அனுகூலத்தை உடையதாயிருக்கின்றது. அதனுடைய உட்கோள்கள் எப்போதும் மேற்பரப்பினின்றும் மிகுந்த ஆழத்தை யடைந்து விடுகின்றது; எனவே, அது மிகுந்த உறுதிப்பாடும், மிகுந்த வலிமையும், நீடித்த நிலைபேறும் கொண்டதாயிருக்கின்றது. சால்பைப் பொறுத்த வரை அதில் ஒர் இயற்கையான நேர்முகப் பாங்கும் இருக்கின்றது; இது, மனிதன் செய்வது எதுவாயினும் அவன் நேராக இலக்கை நோக்கிச் செல்ல உதவியளிப்பதுடன், தோல்வியை ஏறத்தாழ இயலாத தாக்கிவிடுகின்றது.

வலிமைமிக்க மனிதர் வலிமைமிக்க இலக்குகளைக் கொண்டிருக்கின்றனர். வலிமைமிக்க இலக்குகள் வலிமைமிக்க பேறுகளுக்கு வழிகாட்டுகின்றன. சால்புடைய மனிதன் பிற மனிதர் அனைவரையும் விட உயர்ந்த வலிமையுடையவனாக இருக்கின்றான்; தனது வாழ்வெனும் வாணிபத்தை அவன் நடத்துகின்ற தீர்க்கத்தின் கண் அவனுடைய வலிமை காணக்கிடக்கின்றது; மதிப்பு, பாராட்டு, வெற்றி இவற்றைப் பணிக்கின்ற தீர்க்கமாகும் அது.

வெல்லக் கூடாமை : ஒரு மேம்பட்ட பாதுகாப்பாகும்; ஆனால், நிறைவான தூய்மையும், அழிக்க முடியாத சால்புமுடைய மனிதனையே அது காக்கின்றது. மிகமிகச் சிறு திறமான நுட்பத்திலும் கூடச் சால்பின் நியதியை என்றுமே மீறாதிருத்தலாவது, மறைமுகக் குத்தல் பேச்சு, அவதூறு, பொய்யான விளக்கம் இவற்றின் தாக்குதல்கள் அனைத்தும் தன்னை வெல்லக் கூடாத நிலையிலிருப்பதாகும். இவற்றில் ஒரு பகுதியிலே யாயினும் தோல்வியுற்று விடுகின்ற மனிதன், ஊறுபடத்தக்கவனேயாவான்; கண்ணனின் குதிகாலில் பாய்ந்த அம்பைப் போன்று தீமையெனும் அம்பு அப்பகுதியில் புகுந்து அவனைக் கீழே வீழ்த்திவிடும். தூய்மையானதும், நிறைவானதுமான சால்பு, தாக்குதல், ஊறு அனைத்திற்கும் எதிரான சான்றாகும்; அதனைக் கொண்டிருப்போர் எதிர்ப்பு, கொடுமை அனைத்தையும் அச்சமில்லாத் தீரமுடனும், விழுமிய உள்ளச் சமநிலையுடனும் பெற வகை செய்கின்றது.

உன்னதனமான ஒழுக்க விதிகளை மெய்யறிவுடன் ஏற்றுக் கைக்கொண்டொழுகுவதினின்றும் பிறக்கின்ற உள்ள ஆற்றலையும், மன அமைதியையும், எத்துணையளவு திறமையும், அறிவாற்றலும் அல்லது வாணிப மதிக் கூர்மையும் தர இயலாது. ஒழுக்க ஆற்றலே உயர்ந்த ஆற்றலாகும். உண்மையான ஆக்கத்தை நாடுபவன் இவ் ஆற்றலை கண்டறியட்டும்; தன் மனத்திலும், தன் செயல்களிலும் அவன் அதை ஊட்டி வளர்க்கட்டும்; அவன் வெற்றியுறுகிறபோது வையகத்தின் வலிமைமிக்க தலைவர்களின் வரிசையில் தானும் இடம் பெற்றுவிடுவான்.

சால்பெனும் தூண் அத்துணை வலிமையும் திண்மையும் கொண்டதாகும். தனது வாழ்வெனும் கோயிலுள் அதன் நடுநிலை பிறழாத வேலைப்பாட்டைக் கட்டி முடிப்பவனே மனிதர் அனைவரையும் விட மேலான அருளும் ஆக்கமும் பெற்றவனாவான்.

முறைப்பாடு

குழப்பத்திற்கு இடமின்றிச் செய்துவிடுகின்ற ஒழுங்கமைப்பு என்னும் அறமே முறைப்பாடு. இயற்கையான உலக ஒழுங்கமைப்பின்கண் ஒவ்வொன்றும் அதனதன் இடத்திலேயே அமையப் பெற்றிருக்கின்றது; எனவே, மிகவும் சரி நுட்பமான இயந்திரத்தைவிடக் கூடுதலான சரி நுட்பத்துடன் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. விண்ணில் ஏற்படும் ஒழுக்கக் கேடு உலக அழிவையே குறிக்கும்; மனிதன் செய்யும் காரியங்களில் ஒழுக்கக்கேடு அவனுடைய வேலைப்பாட்டையும், ஆக்கத்தையும் அழிக்கின்றது.

பல கலப்பான நிறுவனங்கள் அனைத்தும் முறைப்பாடு மூலமே உருவாக்கப்பட்டிருக்கின்றன. முறைப்பாடின்றி எந்த வாணிபமும் அன்றிச் சமூகமும் பெரிய உருவளவைகளுக்கு வளர்ச்சியடைய இயலாது; வணிகர், நிறுவனங்களை ஒழுங்கமைப்பவர், இவர்க்கு இந்த அறமுறையே முதன்மையான கருவியாகும்.

ஒழுங்கமைப்பில் கருத்துான்றுங்கால் அது வெற்றியைப் பெருக்கும் என்பது ஒருபுறமிருக்க, ஒழுங்கமைப்பில்லா மனிதனும் வெற்றியடைந்து விடக்கூடிய பல துறைகளும் உள்ளன. ஆனால், முறைப்பாடுள்ள ஒரு மேலாளரின் கைகளில் தனது வாணிபத்தை முழுமையாக ஒப்படைக்கவில்லையெனின் வாணிபத்தில் அவன் வெற்றி காண இயலாது. அதன் மூலம் அவன் தன் சொந்தக் குறைபாட்டிற்கும் கழுவாய் கண்டு கொள்பவனாகின்றான்.

பெரிய தொழில் வாணிப நிறுவனங்கள் அனைத்தும் திட்பமுடன் வரையப்பெற்ற முறைப்பாட்டு நெறிகளின் போக்கிலேயே படி வளர்ச்சி பெற்றிருக்கின்றன. அதில் எதையேனும் மீறுதல் வாணிபத்தின் திறமைக்கும், சேமத்திற்கும் அழிவினை உண்டாக்கிவிடும். இயற்கையிலுள்ள பல கலவைப் பிழம்புகளைப் போலவே, நுணுக்கங்களில் அதிநுட்பக் கருத்துச் செலுத்துவதன் மூலமே, சிக்கலான தொழிலோ பிற நிறுவனங்களோ கட்டமைக்கப் பெறுகின்றன. சிறப்பான குறிக்கோளைத் தவிர பிற ஒவ்வொன்றைப் பொறுத்தும் அக்கறையற்றிருக்கலாம் என ஒழுங்கில்லா மனிதன் எண்ணுகின்றான். ஆனால், வழிவகைககைளப் புறக்கணிப்பதன் காரணமாக அவன் குறிக்கோளையே முறிக்கின்றான். நுணுக்கங்கள் சீர் கெடுக்கப்படுவதால் அங்கக் கட்டுப்பாடு அழிகின்றது; நுணுக்கங்களைக் கருத்துான்றிக் கவனியாது புறக்கணிப்பதால் எந்தப் பணியும், அல்லது நிறுவனத்தின் வளர்ச்சியும் தடைபடுகின்றது.

ஒழுங்கில்லா மக்கள் மிகப்பெரிய அளவில் நேரத்தையும், ஆற்றலையும் யாழ்படுத்துகின்றனர். பொருள்களைத் தேடுவதில் சிதறடிக்கப்பட்ட நேரம் ஒழுங்கமைவுடன் பேணிக் காக்கப்பட்டிருப்பின் எவ்வகை வெற்றியையும் பெறுதற்கு அவர்களுக்கு உதவி புரியப்போதுமானதாகும். ஏனெனின், எதைப் பெறுவதாயினும் சோம்பலுடைய மக்கட்கு என்றுமே இடமிருப்பதில்லை. அவர்களுக்குத் தேவைப்படுகின்ற எப் பொருளாயினும் அவர்கள் தேடியே ஆகவேண்டும், அதுவும் வழக்கமாக நெடுநேரம் தேடியாக வேண்டும். ஒரு பெரும் தொழிலை நிறுவுவதற்கோ சாதனையின் உச்சிகளை அறிந்து காணுவதற்கோ தேவைப்படுகின்ற அத்துணையளவு ஆற்றல், பொருள்களை நாடும் தேட்டம் உண்டு பண்ணுகின்ற எரிச்சல், இழிவான உள்ளநிலை, ஏமாற்றம் இவற்றில் வீணாக்கப்படுகின்றது.

ஒழுக்கமுடைய மக்கள் தம் நேரம், ஆற்றல் இரண்டையுமே பேணிக் காக்கின்றனர். அவர்கள் எதையுமே இழப்பதில்லை. எனவே, எதையுமே தேடிக் கண்டுபிடிக்கத் தேவையுமில்லை. ஒவ்வொன்றும் அதற்குரிய இடத்திலேயே இருக்கின்றது. இருளிலாயினும், அதன் மீது உடனேயே கையை வைத்துவிடலாம். அவர்கள் அமைதி உடையோராகவும், ஆழ்ந்து ஆராய்பவராகவும் இருக்க நன்கு தகுதி பெற்றவரேயாவர். எனவே, எரிச்சல், மோசமான உள்ளநிலை, தம் சொந்த ஒழுங்கமைவு இன்மைக்காகப் பிறரைத் தூற்றுதல் ஆகியவற்றைக் காட்டிலும் மிகுந்த நலனுடைய எதிலேனும் தம் மனத்தின் ஆற்றல்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு துறவியின் புனிதமான போக்குகளைப் போன்று வாணிப உலகத்தின் துறைகள் அனைத்திலும் முறைப்பாட்டின் தேவைகள் அத்துணை கண்டிப்பானதும், துல்லியமானதுமாகும். ஒருவனின் செல்வச் செழிப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மிகச் சிறிய தனிப்பட்ட காரியத்திலும் அவற்றை மீற இயலாது. செல்வமெனும் உலகில் ஒழுங்கமைப்பு விதி ஓர் இரும்புக்கைத் தேவையாகும். அதைத் தவறாது கடைப்பிடிப்பவன் நேரம், மனநலம், பணம் இவற்றைச் சேமிப்பவன் ஆகின்றான்.

மனித சமூகத்தில் நிலைபேறு கொண்டுள்ள ஒவ்வொரு சாதனையும் முறைப்பாடென்னும் அடிப்படையிலேயே அமைவு பெற்றிருக்கின்றது. எனவே, முறைப்பாடு பின்னிழுக்கப்படின் முன்னேற்றம் முடிவுற்று விடும் என்பது உண்மையே. சான்றாக இலக்கியத்தின் பெருஞ்சாதனைகளை எண்ணிப் பார்க்கலாம்; புகழ் சான்ற ஆசிரியர்கள், மேதகு மேதைகளின் நூல்கள், மாபெரும் கவிதைகள், எண்ணிலடங்கா உரைநடை நூல்கள், பெரும்புகழ் கொண்ட வரலாறுகள், உள்ளுயிர் தூண்டும் சொற் பொழிவுகள், மனித இனத்தின் சமூகத் தொடர்புகள், அதன் சமயங்கள், சட்டஞ் சார்ந்த அதன் கட்டளைகள், நூலறிவெனும் பரந்த சேமவளம் இவற்றையெல்லாம் எண்ணிப்பாருங்கள். மொழியின் வியப்பிற்குரிய இந்த வளப்பங்கள், ஆக்கங்கள் அனைத்தையும் எண்ணிப் பாருங்கள். பின்பு, இவை அனைத்தும் தமது தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், தொடர்ச்சிக்கும் இருபத்தாறு எழுத்துகளின் முறைப்பாடான பாகுபாட்டுத் திட்டங்களையே சார்ந்திருப்பதை ஆழ்ந்து நினைத்துப் பாருங்கள். சில நிலையான விதிகளின் கண்டிப்பான எல்லைக்குள் இருப்பதால் இப்பாகுபாட்டுத் திட்டம் அழிவில்லாத, அளவில்லாத பயன்களை உடையதாயிருக்கின்றது.

மேலும், கணிதத்தின் வியப்பிற்குரிய செயற்பாடுகள் அனைத்தும் பத்து எண்களின் முறைப்பாடான பாகுபாட்டுத் திட்டத்திலிருந்தே தோன்றியுள்ளன. அதேபோன்று, திட்டஞ் செய்யப்பட்டுள்ள குறிக்கோளைச் சாதித்துவிடுகின்ற வகையில் ஆயிரக் கணக்கான உறுப்புகளும் ஒன்று சேர்ந்து இதமாகவும், ஏறத்தாழ ஓசையின்றியும் இயங்குகின்ற மிகவும் சிக்கலான இயத்திரப் பொறி, பொறியியல் விதிகள் சிலவற்றை முறைப்பாடாகக் கடைப்பிடிப்பதினின்றும் கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

சிக்கல் மிகுந்த ஒன்றை முறைப்பாடு எவ்வாறு சிக்கலறுக்கின்றது, கடினமானதை அது எவ்வாறு எளிதாக்குகின்றது. எல்லையில்லாத் தரத்தவான நுணுக்கங்களை அது எவ்வாறு ஓர் ஒழுங்கமைதியின் மையவிதியுடன் தொடர்புபடுத்தி, முழுமையான சீர்மையுடனும், குளறுபாடு ஒரு சிறிதும் இல்லாது நிலையிலும் கையாண்டு காரணங் காட்ட வழிவகுக்கின்றது என்பதையும் நாம் இங்குக் காணலாம்.

முறைப்பாடு, முன்னேற்றத்திற்கும், உலகிலுள்ள கோடிக்கணக்கான மக்களில் ஒவ்வொருவரும் தமக்கெனவோர் இடத்தை நாடி மாறுபட்ட குறிக்கோள்களும், விருப்பங்களும் கொண்டு போட்டியிடுகின்ற அதே வேளையில் அவர்களை நிறைவான ஒரே முழுமையில் ஒருசேரப் பிணைப்பதற்கும் அடியாதாரமாக இருக்கின்ற முறைகளில் ஒன்றாகும் என்பது உண்மையே.

முறைப்பாடு எவ்வாறு மேம்பாட்டுடன் உறவு கொண்டுள்ளது என்பதை நாம் காணலாம். ஏனெனின், வாணிபம், சட்டம், சமயம், அறிவில் அரசியல், ஏன் மனித முயற்சியின் ஒவ்வொரு துறையிலும் நிலைபேறு கொண்டதும், மீறக் கூடாததுமான விதிகளை நிறுவுவதில் உடனடியானதும், தப்பமுடியாததுமான இன்றியமை யாமையை உணருகின்ற ஒருசிலரின் ஒழுங்கமைப்பு ஆற்றலால் முறைப்பாடென்னும் ஒழுங்கில் பயிற்றுவிக்கப்படாத பல தனித்தனியான ஆள்கள் அவரவர் இடத்திலேயே அமர்த்தப்பட்டு விடுகின்றனர். ஏனெனின், இரு மனிதர்கள் கூடிய நேரத்திலேயே குழப்பத்தைத் தவித்தற் பொருட்டு இருவரும் ஒத்துணருகின்ற ஏதேனும் பொது அடிப்படை தேவைப்படுகின்றது. ஒரே சொல்லில் கூறுவதெனின் அவர்களுடைய செயல்களை ஒழுங்குபடுத்த ஏதேனும் முறைப்பாடு தேவைப்படுகின்றது.

குழப்பத்திற்கு இடங்கொடுக்க இயலாதபடி வாழ்க்கை மிகவும் குறுகியதாகும். தடையையும், தாழ்வையும் நீக்குகின்ற முறைப்பாடென்னும் சாலையின் வழியே அறிவுவளர, முன்னேற்றம் முன் செல்கின்றது; எனவே, தனது அறிவையோ வாணிபத்தையோ முறைப்படுத்துடன், தன் பின் மரபினர் தான் விட்டுச் சென்ற இடத்திலிருந்து திறந்த மனத்துடன் அதைத் தொடங்க உதவும் வகையில் அதைச் சிக்கலறுத்து மேன்மையுடையதாக்கித் தருபவனாகிறான்.

ஒழுங்கு முறைக்கும், கட்டுப்பாட்டிற்குமான ஓர் உள்ளார்ந்த விருப்பும், அத்தகைய ஒழுங்கு முறையினின்றும் தோன்றுகின்ற மன அமைதியும், திறப்பாடும் கொண்டு பொருத்தமின்மையைத் தவிர்க்காத நிலையில் எவ்விதமான குறிப்பிடத்தக்க வெற்றியும் இருக்கவியலாது. ஒழுங்கு முறையை வெறுப்போர், கட்டுப்பாடற்றுக் குழப்பமுற்றதாய் இருக்கின்ற மனமுடையோர், தமது சிந்தனை பழக்க வழக்கங்கள், தம் காரியங்களை நிறுவகித்துக் கொள்ளுதல் இவற்றில் கவனமின்றியும், ஒழுங்கின்றியும் இருப்போரான மக்கள் மிகுந்த வெற்றி கொள்ளவோ, ஆக்கம் பெருக்கவோ இயலாது. தமது வாழ்வைத் தொந்தரைகள், துன்பங்கள், இடர்ப்பாடுகள், சிறிய நச்சரிப்புகள், இவற்றால் நிரப்பிக் கொள்கின்றனர். ஏற்புடைப் போக்கில் வாழ்வை ஒழுங்குபடுத்துங்கால் இவை அனைத்தும் அழிந்துபடும்.

முறைப்பாடற்ற மனம் பயிற்சியற்ற மனமே. உடற்பயிற்சிப் போட்டிகளில் பயிற்சி செய்யாத போட்டியாளர் கவனமுடன் பயிற்சி செய்துள்ள எதிராளியுடன் வெற்றியுறப் போட்டியிட முடியாதவாறு போல, பயிற்சியற்ற மனம் வாழ்வெனும் போட்டியில் நன்கு ஒழுங்குபட்ட மனங்களுடன் ஈடுசெலுத்தவியலாது. எதுவாயினும் சரியே என்றெண்ணுகின்ற ஒழுங்குறுத்தப்படாத மனம் நன்கு ஒழுங்குறுத்தப்பட்ட மனங்களின் பின்னொதுங்க விரைந்து வீழ்ச்சியடைகின்றது.

பொருள் சார்ந்ததோ, மனஞ்சார்ந்ததோ ஒழுக்கநெறி சார்ந்ததோவான வெகுமதிகளாயினும், வாழ்வின் வெகுமதிகளைப் பெறும் கடுமையான போட்டியில் மிகச் சிறந்தனவே, அதற்குத் தகுதியுடையன என்பதை ஒழுங்குறுத்தப்பட்ட மனங் கொண்டோரே நன்கறிவர். 

ஒரு மனிதன் தன்னுடைய வேலையைச் செய்யவருங்காலையில் தன் கருவிகளைக் காண முடியாமலோ தனது கணக்கில் இலக்கங்களைச் சமநிலைப்படுத்த முடியாமலோ தனது மேசையின் திறவுகோலைக் காணமுடியாமலோ தன் சிந்தனைகளுக்கு விடைகாண முடியாமலோ போய்விடின் அவன் தானே உண்டுபண்ணிக் கொண்ட துன்பங்களில் தத்தளிப்பவனாவான். அதே போது, ஒழுங்குமுறையான போக்குடைய அண்டை வீட்டுக்காரன் தன்னுரிமையுடனும், களிப்புடனும் வெற்றிகரமான சாதனையின் ஊக்கமூட்டும் உச்ச நிலைகளை அளந்து கொண்டிருப்பான்.

கவனமற்றதோ சிக்கலானதோ திறமை வாய்ந்த மனங்களின் மிகவும் அண்மைக் காலத்திய வளர்ச்சிகளுக்குப் பின் தங்கி நிற்ப்பதோவான வழிமுறையைக் கொண்டுள்ள வணிகனுடைய நல் வாய்ப்புகள் நலிவுற்றதாக இருப்பின், அவன் தன்னைத் தானே குறை கூறிக்கொள்ள வேண்டியதுதான். அதனோடு, மிகவும் உயரிய தனிப் பயிற்சியுடையதும், பயனிறுதியுடையதான வழிமுறைகளைத் தனது நிறுவனத்தில் கையாள வேண்டிய தேவையையும் அவன் அறிந்துகொள்ள வேண்டும். காலத்தையும் உழைப்பையும் குறைத்து முழுநிறைவு, முதிர் சிந்தனை காரிய வரைவு இவற்றைப் பெருக்க உதவுகின்ற ஒவ்வொன்றையும் ஒவ்வொரு புதுமையையும் கருத்தையும் கைக்கொள்ள வேண்டும்.

உயிரினம், வாணிபம், குணவியல்பு, நாடு, பேரரசு ஆகிய ஒவ்வொன்றும் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற சட்டம் முறைப்பாடேயாகும். உயிரணுவிற்கு உயிரணு, துறைக்குத்துறை, கருத்துக்குக் கருத்து, சட்டத்திற்குச் சட்டம், குடியினத்திற்குக் குடியினம் ஓர் ஒழுங்கான வரிசையிலும், தரவாரியாகவும் ஒன்று சேர்க்கப் படுவதாலேயே தொழில் நிலையங்கள், நிறுவனங்கள் அனைத்தும் பெருமளவில் பெருகி வளர்ந்து முழுநிறைவு நிலை எய்துகின்றன. தனது வழிமுறைகளைத் தொடர்ச்சியாகச் சீர்ப்படுத்திக் கொண்டிருக்கின்ற மனிதன் ஆற்றலைப் பெருக்குவதில் பயனடைபவனாகின்றான்; எனவே, வணிகன் தன் வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் வளப்பமுடைய வனாகவும், புதியது புனைபவனாகவும் இருக்க இந்நிலை அவனைத் தகுதியுடையவனாக்குகின்றது.

ஏனெனில், கோயில்களையோ குணவியல்புகளையோ, வாணிபங்களையோ சமயங்களையோ கட்டமைப்போர் புவியில் தீரர்களாயிருக்கின்றனர். அவர்களே மனித இனத்தின் காவலர்களாயும், முன்னோடிகளாகவும் இருக்கின்றனர். முறைப்பாட்டுடன் கட்டமைப்பவன் ஒரு படைப்பாளியும், பாதுகாவலனும் ஆவான். அதே போது, ஒழுங்கற்ற மனிதன் சிதைத்துச் சின்னாபின்னப் படுத்திவிடுகின்றான். ஒருவன் கட்டுப்பாடு எனும் ஒழுங்குமுறையைக் கைக்கொண்டு, பாதுகாத்து, ஒவ்வொரு நுணுக்கத்தையும் அதற்குரிய இடத்தில் வைத்து, ஒவ்வொரு துறையையும் அதன் குறிப்பிட்ட கடமையில் ஈடுபடுத்தித் தனது குறிப்பிட்ட பணியை ஒட்டிய மிக எளிய விளக்கத்தையும் எக்கணத்திலும் ஆய்வுக்காகவோ தேவையைப் பொறுத்தோ கொண்டுவருதல் இயலுவதாக இருக்கும் நிலையில் அத்துணைத் திறப்பாட்டுடனும் நிவுைடனும் வரிசையும், வகையும் படுத்திக் கொள்வானேயாயின், அம்மனிதனுடைய ஆற்றல்களின் வளர்ச்சிக்கோ, குணவியல்பின் நிறைவுக்கோ, அவனுடைய நிறுவனத்தின் செல்வாக்கிற்கோ அவனுடைய வாணிபத்தின் செழிப்பிற்கோ எல்லை கட்டவே இயலாது.

தாம் கூறுவதைக் காட்டிலும் தாம் செயல்படுவதில் நுட்பமுடனிருக்கப் பல மக்கள் முயற்சி மேற் கொள்கின்றனர்; ஆனால், இங்குக் கூடப் பலரைத் திறப்பாடற்றவராகவும், தகுதியற்றவராகவும் ஆக்கி, விடாமுயற்சியும் தாங்குகையும் வேண்டப்படுகின்ற எந்த உழைப்பிற்கும் அவர்களைத் தகுதியற்றவராக்கி விடுகின்ற நுட்பப் பிழை சாதாரணமேயாகும். தன்னுடையவோ தன் பணி முதல்வருடையவோ நேரத்தின் ஒரு பகுதியதை தன் தவறுகளைத் திருத்தும் முயற்சியில் வழக்கமாகச் செலவிடுகின்ற மனிதனோ தன் தவறுகளைத் திருத்தும் பொருட்டுப் பிறிதொருவன் பணிக்கமர்த்தப் படவேண்டிய நிலையிலுள்ளவனோ நடைமுறை உலகில் எப் பதவியையும் வகிக்கத் தக்கவனன்று. அவர்கள் ஆக்கம் படைத்தோரின் வரிசைகளின் நடுவே ஓரிடத்தைப் பெறுகின்ற வாய்ப்பு அதனினும் குறைவு.

தனது குறிப்பிட்ட வெற்றியை நோக்கிச் செல்லும் வழியில் சில தவறுகளேனும் செய்யாத மனிதன் என்றுமே வாழ்ந்ததில்லை. ஆனால், தன் தவறுகளைக் கண்டறிந்து அவற்றை விரைந்து நீக்கி, அவை சுட்டிக் காட்டப்படுகிறபோது மகிழ்ச்சியடைபவனே திறமை வாய்ந்தவன். நேர்மனச் சார்புடைய மனிதன். வழக்கமான, நிலையாக நீடிக்கும் நுட்பமின்மையே மறம். தன் தவறுகளைக்