வேங்கடம் முதல் குமரி வரை 3/015-033

15. மறைக்காடுறை மணாளர்

ந்தாறு வருஷங்களுக்கு முன்பு நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்தேன். அப்போது ஜில்லா போர்ட் நிர்வாகம் என் கையில் இருந்தது. ஜில்லா போர்டின் நிதி நிலைமை திருப்திகரமாக இல்லை. ஆரம்பப் பள்ளிகளை நடத்துவது மிக்க சிரமமாக இருந்தது. ஆதலால் பஞ்சாயத்து போர்டாராவது அல்லது தனிப்பட்ட பெரிய மனிதர்களாவது, அவரவர் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியை ஏற்று நடத்த முன்வந்தால் சர்க்கார் அனுமதியுடன் அந்தப் பள்ளிகளை அவர்களது நிர்வாகத்தில் விட்டு விடத் தயாராக இருந்தோம்.

திருப்பனந்தாளில் ஓர் உயர்தர ஆரம்பப் பள்ளியிருந்தது. அந்தப் பள்ளியை அங்குள்ள ஆதீனத் தலைவர் ஏற்று நடத்த விரும்பினார்கள். சர்க்கார் அனுமதி பெற்று அந்தப் பள்ளியை அவர்களது நிர்வாகத்துக்கு மாற்றினோம். அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்த முனைந்த ஆதீனகர்த்தர் அவர்கள் பள்ளியைத் திறந்து வைக்க என்னையே அழைத்தார்கள். ஆம். மார்ச்சு மாதம் முப்பத் தொன்றாம் தேதி ஜில்லா போர்ட் நிர்வாக அதிகாரியாக நான் மூடிய பள்ளியை, ஏப்ரல் மாதம் முதல் தேதி ஆதீனத்தார் அழைப்புக்கு இணங்கிச் சென்று நானே திறந்து வைத்தேன். அன்று நினைவு கூர்ந்தேன். அதைச் சொல்லவும் செய்தேன், இப்படி நான் ஒருவனாகவே இருந்து பள்ளியை மூடவும் திறக்கவும் செய்தது போலவே, ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்பு ஒருவருக்கு இருவராக ஒரு கோயில் கதவைத் திறக்கவும் அடைக்கவும் பாடியிருக்கிறார்கள். ஆம், அப்பரும், சம்பந்தரும் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் சென்றிருந்தபோது அக்கோயில் கதவு அடைத்து வைக்கப்பட் டிருந்திருக்கிறது. கோயில் வாயிலைத் திறக்க பாடினார் அப்பர். திரும்பவும் மூடப் பாடினார் சம்பந்தர் என்பது வரலாறு. ஒரேயொரு வித்தியாசம். நான் மூடிய பள்ளியை நானே திறந்த வைத்தேன் (பாட்டு ஒன்று பாடாமலேயே). அப்பரோ வேறு யாரோ மூடிய கதவைத் திறந்து வைத்தார். அப்படித் திறந்து வைத்த கதவையே திரும்பவும் மூடப் பாடினார் சம்பந்தர், இப்படி அப்பரும் சம்பந்தரும் திறக்கவும் மூடவும் செய்த திருமறைக்காட்டுக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் தஞ்சை மாவட்டத்திலே திருத்தருப்பூண்டி தாலூகாவிலே தென் கோடியில் உள்ள ஒரு பெரிய ஊர். திருவாரூர் அறந்தாங்கி ரயில் பாதையில் ‘திருத்துறைப்பூண்டி' ஜங்கஷனில் இறங்கி மாற்று வண்டி ஏறி வேதாரண்யம் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேரலாம். இல்லை என்றால் பஸ்ஸிலோ அல்லது காரிலோ வேதாரண்யம் சென்று சேரலாம். திருத்தருப்பூண்டியிலிருந்து முப்பது முப்பத்திரண்டு மைல் தொலைவில் இருக்கிறது வேதாரண்யம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை மைல் மேற்கு நோக்கி நடந்தால் கோயிலுக்கும் செல்லலாம்.

நான்கு வேதங்களாலும் பூசித்துப் பேறு பெற்ற இடம் ஆனதால் வேதாரண்யம் என்னும் அந்தத்தலம் மறைக்காடு என்று பெயர் பெற்றிருக்கிறது அத்தலம். இந்தக் கோயிலுள் இருப்பவர் மறைக் காடரும் அவரது துணைவி யாழைப் பழித்த மொழியாளும். இப்போதெல்லாம் கோயில் வாயில் திறந்தேயிருக்கும். அன்று வேதங்கள் பூஜித்துத் திருக்காப்பு செய்த கதவைத்தான் அப்பர்,

பண்ணின் நேர் மொழியாள்
உமை பங்கரோ!
மண்ணினார் வலஞ்செய்
மறைக் காடரோ!
கண்ணினால் உமைக்
காணக் கதவினை
திண்ணமாகத்
திறந்தருள் செய்ம்மினே!

என்று பாடித் திறந்து வைத்திருக்கிறாரே, திறந்த கதவை அப்படியே திறந்தே நின்று விடாமல் பின்னர் அடைக்கவும் பாடியிருக்கிறார் சம்பந்தர்.

சதுரம் மறைதான்
துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் ஆல்
மறைக்காட்டு உறைமைந்தா
இது நன்கு இறை வைத்து
அருள் செய்க எனக்கு உள்
கதவம் திருக்காப்புக்
கொள்ளும் கருத்தாலே.

என்பது சம்பந்தரது தேவாரம், இந்தத் தலத்தில் மணலெல்லாம் லிங்கமாவும் நீர் எல்லாம் தீர்த்தமாகவும் கருதப்படுகின்றன. இங்குள்ள கடல் வேததீர்த்தம் என்றே கூறப்படுகிறது, அதனால் இத் தலத்தையே ஆதிசேது என்பர். சீதையை மீட்கச் சென்ற ராமன் முதல் முதல் அணை கட்டத் தேடி எடுத்த இடம் இதுதான். அப்போது அங்கு வசித்த பறவைகளும் பிராணிகளும் வேதவன ஈசுவரரிடத்திலே ஆட்சேபித்திருக்கின்றன. அவரும் அக்காரியத்தில் தலையிட்டுச் சேதுவைத் தேவி பட்டணத்தருகே கட்டுவது தான் எளிது, நல்லது என்று கூறியிருக்கிறார். இது காரணமாவே ராமனும் சேதுவில் அணையைக் கட்டியிருக்கிறான்.

இன்னும் இலங்கை சென்று இராவணனை வதம் செய்து திரும்பி, ராமன் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதும் இங்கே தான் என்று தலபுராணம் கூறுகிறது. ராமனைப் பிடித்திருந்த பிரமஹத்தி தோஷமும் இந்தக் கோயிலில் உள்ள வீரஹத்தி விநாயகரை வழிபட்ட பின்னரே நீங்கிற்று. இந்த வீரஹத்தி விநாயகர் இக்கோயிலின் மேல் பிரகாரத்தில் இருக்கிறார். இத்தல விநாயகரோ சிந்தாமணிகணபதி. இக்கோயிலுக்குப் பகல் வேளையில் செல்வதைவிட இரவில் செல்வதே நல்லது. அப்பொழுதுதான் அங்கு சந்நிதியிலும் மற்ற இடங்களிலும் ஏற்றும் விளக்குகளைப் பார்க்கலாம். 'திருவாரூரில் தேர் அழகு' என்பது போல

‘வேதாரண்யத்தில் விளக்கழகு' என்பது பழமொழி ஆயிற்றே. இந்த விளக்குகளையெல்லாம் கடந்து கருவறைப்பக்கம் சென்றால் மறைக்காடு உறையும் மணாளரைக் காணலாம். அது என்ன இந்த மூர்த்தி மட்டும் மணாளர் என்ற பெயரோடு விளங்குகிறார் என்று கேட்போம். அதற்கு அந்தப் பழைய கதையையே சொல்வார்கள். பரமேசுவரனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் கல்யாணத்தைக் காணத் தேவரும் பிறரும் கயிலையில் கூட அதனால் வடதிசை தாழ, அதைச் சரி செய்ய இறைவன் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்ப, பின்னர் அவர் விரும்பியபடியே தென் திசை வந்து மணக்கோலத்திலேயே காட்சி கொடுத்தார் என்றும் தெரிந்திருக்கிறோம் அல்லவா? அதே கதை தான் இங்கும் நடந்திருக்கிறது. இக்கதையைத் தென் தமிழ் நாட்டில் உள்ள பல கோயில்களில் கேட்கலாம். என்றாலும்

இத்தலத்தில் இதைக் கேட்பதில் ஒரு விசேஷம் இருக்கிறது. கருவறையில் லிங்கத் திருவுருவுக்குப் பின்னர் உள்ள சுவரில் பார்வதி பரமேசுவரர் உப்புச உருவில் திருமணக் கோலத்தில் இருக்கின்றனர். புது மணப் பெண்ணான பார்வதியே நாணிக்கோணி உட்கார்ந்திருக்கிறாள். இந்தச் சுவர் சிற்பத்துக்கு ஆண்டுக்கு ஒரு முறைதான் திருமஞ்சனம். திருமஞ்சனம் ஆனதும் சந்தனக்காப்புச் சாத்துவார்கள். இந்தச் சந்தனக்காப்பை ஒரு வருஷம் கழித்து அடுத்த திருமஞ்சனக் காலத்தில்தான் களைவார்கள். கல்யாணமான தம்பதிகளை அப்படியே மணங்கமழ் சந்தனத்திலேயே மூழ்கடித்து வைத்து விடுகிறார்கள் பக்தர்கள். மணம் நிறைந்தவர்களாகத் திருமணத் தம்பதிகள் வாழ வேண்டும் என்ற ஆசை போலும்!

இத்துடன் இவர்களுக்கு முன்னமேயே இத் தென்திசை நோக்கிவந்து அகத்தியரும் இந்தக் கோயிலில் இருக்கிறார். இங்கு மாத்திரமா இருக்கிறார்; இக்கோயிலுக்குத் தெற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள தலத்திலும் இருக்கிறார். அந்தத் தலத்தின் பெயரே அகத்தியான் பள்ளி, அங்குள்ள இறைவன் அகத்தீஸ்வரர். அம்மையோ பாகம் பிரியாள். இன்னும் வேறு என்ன சான்று வேண்டும், இறைவன் அகத்தியர்க்குத் தன் திருமணக்கோலத்தை இத்தலத்தில்தான் காட்டினான் என்று நிரூபிக்க? இன்னும் அப்பர் பெருமான் தமது திருத்தாண்ட கத்திலே இம்மறைக்காட்டு உறையும் மணாளனைச் சிறப்பாக வேறே பாடிப் பரவியிருக்கிறார்.

மூரி முழங்கு ஒலிநீரானான்
கண்டாய், முழுத்தழல்போல் மேனி
முதல்வன் கண்டாய்,

ஏரி நிறைந்தனைய செல்வன்
கண்டாய், இன்னடியார்க்கு இன்பம்
விளைப்பான் கண்டாய்,

ஆரியன்கண்டாய், தமிழன்
கண்டாய், அண்ணாமலை உறையும்
எம் அண்ணல் கண்டாய்

வாரிமத களிறே போல்வான்
கண்டாய், மறைக்காட்டு
உறையும் மணாளன்தானே.

என்ற பாடலை எத்தனை தரம் பாடினாலும் உடல் புளகிக்கத் தானே செய்கிறது.

இத்தலத்தில் இந்த மணாளரையும் முந்திக்கொண்டு அருள்பாலிக்க இருப்பவர் தியாகேசர். வேதாரண்யம் சப்த விடங்கத் தலங்களில் ஒன்று என்பதை முன்னமேயே அறிந்திருக்கிறோம். இங்கு எழுந்தருளி இருப்பவர் புவனவிடங்கர். அவர் ஆடும் நடனம் பிருங்க நடனம். உற்சவக் காலங்களில் இவர் சதா ஆடிக்கொண்டே ஆஸ்தானம் வரை எழுந்தருளுவார் என்கிறார்கள். இந்தத் தியாகேசருக்கு எதிரே சுந்தரர் பரவையுடன் எழுந்தருளி இருக்கிறார். சேரமான் பெருமானையும்உடன் கூட்டிக் கொண்டு சுந்தரர் இங்கு வந்திருக்கிறார் என்பது வரலாறு. அவர்தான் மறைக்காட்டீசரோடு அவரது துணைவியான யாழைப் பழித்த மொழியாளையும் மறவாமல் பாடியிருக்கிறார்.

யாழைப் பழித்தன்ன மொழி
மங்கை ஒருபங்கன்
பேழைச் சடைமுடிமேல் பிறை
வைத்தான் இடம்பேணில்
தாழைப் பொழில் ஊடே சென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக் குரங்கு
உண்ணும் மறைக்காடே.

என்பதுதானே அவரது தேவாரம், ஆதலால் நாமும் மறவாது யாழைப் பழித்த மொழியாள் சந்நிதிக்கும் சென்று வணங்கலாம். இத்தலம் எழுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்று. இந்த இடமே சுந்தரிபீடம் என்பர். மென் மொழியாள் மாத்திரம் அல்ல. அழகாலுமே மற்றவர்களை வெல்லும் பெருமை பெற்றவள் இந்த அம்பிகை. இத்துடன் இங்குள்ள துர்க்கையின் சந்நிதியும் மிகுந்த சாந்நித்யம் வாய்ந்தது. இங்குள்ள காட்சி கொடுத்த நாயகர் என்னும் செப்புப் படிமமும் காணவேண்டிய கலை வடிவம்.

இன்னும் இத்தலத்திலே ஒரு சிறப்பு இந்தக்கோயிலில் விளக்கு அழகு என்பதை முன்னரே சொன்னேன். அந்த அகல் விளக்குகளுக்கு எல்லாம் நெய் ஊற்றியே விளக்கேற்றி யிருக்கிறார்கள் அந்தக் காலத்தில், அப்படி ஊற்றிய நெய்யை உண்ண ஓர் எலி வந்திருக்கிறது. உண்ணும் பொழுது சுடர் அதன் மூக்கில் பட்டிருக்கிறது. அதனால் திரி தூண்டப்பட்டிருக்கிறது. அணையும் தறுவாயிலிருந்த விளக்கைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்த காரணத்தால், அந்த எலியை மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாய்ப் பிறக்க அருள் செய்திருக்கிறார் மறைக்காடர்.

இத்தனை பிரசித்தியடன், இத்தலம் பெருமக்கள் புலரது பிறப்பிடமாகவும் இருந்திருக்கிறது. திருவிளையாடல் பாடிய பரஞ்சோதி முனிவரும், எண்ணரிய பாடல்களை எழுதிக் குவித்த தாயுமானாரும் இத்தலத்திலேயே பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். அந்தப் பழைய காலத்தில் விசுவாமித்திரர் இங்குள்ள தல விருட்சமாகிய வன்னியின் அடியில் தவங்கிடந்துதான் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றிருக்கிறார், யாக்ஞவல்கியரும் மைத்திரேயியும் இங்கு தங்கியிருந்து அவர்களது அறிவொளியைப் பரப்பினார்கள் என்றும் அறிகிறோம். நிரம்பச் சொல்வானேன்? நாம் அறிய, நம் நாட்டின் சுதந்திர இயக்கத்தில் உப்புச் சக்தியாகிரகம் பண்ணத் தேர்ந்து எடுத்த இடமும் இதுதானே. சர்தார் வேதரத்தினம் இன்றும் அங்கிருந்து சமூக நலப் பணிகள் பல புரிகிறார் என்பதும் நாம் தெரிந்ததுதானே.

சகர புத்திரர்களில் ஒருவனாகிய அம்சுமான் என்பவனே முதன் முதல் இந்தக் கோயிலைக் கட்டினான் என்பர். பஞ்ச பாண்டவர் தங்களது வனவாச காலத்தில் இங்கு வந்து பஞ்ச.லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார்கள் என்றும் புராணம் கூறுகிறது. ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்கள் பல பிற்காலச் சோழ மன்னர்களுடையவை. விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தியதும், தஞ்சை மராத்தியர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. சோழர்களால் கட்டிய கோயிலே விரிவடைந்திருக்கிறது என்று தெரிகிறோம். இத்தலத்துக்கு அருணகிரிநாதர் வந்திருக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள முருகனது திருப்புகழைப் பாடியிருக்கிறார்.

கோதில் தமிழ் கான
கும்ப முனிவற்கா மணஞ்செய்
கோலம் அளித்து ஆளும்
உம்பர் கோனே!
கோகனத்தாள் வணங்கி
கோடிமறைக் காட்மர்ந்த பெருமாளே!

என்று அப்பனையும் மகனையும் சேர்த்துப் பாடியிருக்கிறார். கோடி மறைக்காடு என்ற உடனே நமக்குக் கோடிக்கரை ஞாபகம் வரத்தானே செய்யும். வந்ததே வந்தோம், கொஞ்சம் எட்டி நடைபோட்டு அகத்தியான்பள்ளி சென்று அகத்தீஸ்வரரையும் வணங்கி விட்டுப் பின்னும் நான்கு மைல் சென்று கோடிக் குழகரையும் தரிசித்து விட்டே திரும்பலாமே, கோடிக்கரையில் உள்ள கோடிக்குழகர் பேராசிரியர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நவீனம் மூலம் நமக்கு முன்னமேயே அறிமுகமானவர் தானே. சமுத்திர ஸ்நானம் செய்ய விரும்புவர்கள் மாத்திரமே கோடிக்கரைவரை செல்லவேணும். கோயிலுக்கு மட்டும் போக விரும்புபவர்கள் ஒரு மைலுக்கு இப்பாலேயே குழகர் கோயிலுக்குச் செல்லலாம். வழியில் ஒரு மணல்மேடு ஏறி ராமர் பாதத்தையும் தரிசித்துக் கொள்ளலாம். கோடியில் அமிர்த கடேசுரரும் மையார் தடங்கண்ணியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். அமுததீர்த்தம் என்னும் கிணறு பிரகாரத்தில் இருக்கிறது. ஒரு விசேஷம். இங்குள்ள சுப்ரமணியர் ஒரே முகமும் ஆறு திருக்கரங்களும் கொண்டவராய் இருக்கிறார். இவற்றையெல்லாம் பார்த்து விட்டே திரும்பலாம்.