வேங்கடம் முதல் குமரி வரை 3/017-033

17. மன்னார்குடி ராஜகோபாலன்

'கலையை வளர்ப்பது குழந்தையுள்ளம்தான். சீற்றமும் அழுக்காறும் துயரமும் குடிகொண்ட மனிதனது நெஞ்சிலே கலை தோன்றாது. அது கலையை அழிக்கும்; ஆக்காது' என்று ஓர் அறிஞர் கூறுகிறார். இந்த உண்மையை எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே நமது முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் முருகனையும் கண்ணனையும் குழந்தையாகப் பாவனை பண்ணியே வழிபட்டிருக்கிறார்கள். விரிந்த உலகங்கள் யாவையும் தன்னுள் அடக்கிக் காக்கும் பெரிய மாயவனாகிய திருமாலைப் பச்சிளங் குழந்தையாம் கண்ணனாகக் கொண்டாடுவதிலே ஓர் இன்பம் பெற்றிருக்கிறார்கள்.

இந்தக் கண்ணனிடத்து ஈடுபட்டு நிற்கும் அடியவர்களிடத்தில் பெரியாழ்வார் தலைசிறந்து விளங்குகிறார். வடமதுரைச் சிறைக்கூடத்திலே தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் கோகுலத்திலே யசோதையின் பிள்ளையாக வளர்கிறான், 'மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி ஆனிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்' இட்டு அன்னை யசோதை தாலாட்டுகிறாள். இந்த யசோதையாகவே மாறுகிறார் பெரியாழ்வார் கண்ணனை அனுபவிப்பதிலே. ‘வாய்த்த புகழ் மணிவண்ணா! மஞ்சனம் ஆட நீ வாராய்! என்று அழகொழுக அவனை அழைக்கிறார். இன்னும் பூச்சூட்டக் கண்ணனை அழைக்கும் அருமைதான் என்ன?

ஆநீரை மேய்க்க நீ போதி!

அருமருந்து ஆவது அறியாய்

கானகமெல்லாம் திரிந்து உன்

கரிய திருமேனி வாட,

பானையில் பாலைப் பருகிப்

பற்றாதார் எல்லாம் சிரிப்ப,

தேனில் இனிய பிரானே!

செண்பகப் பூச் சூட்டவாராய்

என்றல்லவா அழைக்கிறார். இப்படியே அவனுக்குக்காப்பிட, கோல் எழுத, முலையூட்ட எல்லாம் அழைக்கும் பாடல்கள் அனந்தம். இன்னும் அவன் கன்றுகளை மேய்த்து வருவதையும், குழல் ஊதி நிற்பதையும், அக்குழல் ஓசைகேட்டுப் பறவையும் கறவையும் தன் வயமிழந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பதையும் அவர் கூறும்போது நாமும் அந்தக் கண்ணனிடத்திலே அப்படியே ஈடுபட்டு நிற்கிறோம். இந்தக் கண்ணனாம் கோபாலனது திருவிளையாடல்களும் ஒன்றல்ல, இரண்டல்ல, முப்பத்திரண்டு என்று வகைப்படுத்தி அத்தனைக்கும் விழா எடுத்துக் கொண்டாடியிருக்கிறார்கள் நமது முன்னோர். இந்தக் கிருஷ்ணாவதார லீலைகளை யெல்லாம் காட்டி அருளிய தலம்தான் ராஜகோபாலன் கோவில் கொண்டிருக்கும் ராஜ மன்னார் குடி. அந்தத் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

தஞ்சை ஜில்லாவிலே, மன்னார்குடித் தாலுகாவில் தலைநகராய் இருப்பதுதான் ராஜமன்னார்குடி. தஞ்சை திருவாரூர் ரயில் பாதையில் நீடாமங்கலம் ஸ்டேஷனுக்குச் சென்று அங்கு ரயில் மாற்றி மன்னார்குடிக்குச் செல்லலாம். இப்படியெல்லாம் ரயில் ஏறவும் இறங்கவும் வேண்டாம் என்று நினைத்தால், தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் முதலிய எந்த ஊரில் இருந்தும் பஸ்ஸில் இவ்வூர் போய்ச் சேரலாம். இல்லை என்றால் கார் வசதி செய்து ‘ஜாம் ஜாம்' என்றுகோயில் வாயிலிலேயே போய் இறங்கலாம். ஏதோ யமுனா தீர விஹாரியாக இருந்த இந்த ராஜகோபாலன், ஏன் இத்தனை தூரம் தெற்கு நோக்கி வந்து இங்கு தங்கியிருக்கிறான் என்ற அறிய விரும்பினால் அந்தத் தல வரலாற்றை ஒரு திருப்புத் திருப்ப வேணும். -

இத்தென் தமிழ் நாட்டிலே காவிரிக்குத் தெற்கே இரண்டு யோசனை தூரத்திலே சண்பக மரங்கள் அடர்ந்த சண்பகக் காடு ஒன்று இருந்திருக்கிறது. அங்கு முனிவர் பலர் இருந்து தவம் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் வாஹிமுகர்: அவருக்கு இரண்டு பிள்ளைகள் கோப்பிரளயர், கோபிலர் என்று. இருவரும் தங்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யம் வேண்டித் துவாரகையில் உள்ள கிருஷ்ண பகவானை நோக்கித் தவம் புரிகிறார்கள். இவர்களை நாரதர் சந்திக்கிறார். இவர்களிடம் 'துவாரகையிலுள்ள கிருஷ்ணன்தான் தான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு வைகுண்டத்துக்கே திரும்பப் போய்விட்டனே; அவனை நோக்கி இங்கு தவம் புரிவானேன்?' என்று சொல்கிறார். பின் கிருஷ்ண சாக்ஷாத்காரம் பெற, காவிரியின் கிளை நதியான ஹரித்திரா நதிக்கரையில் தவம் செய்யச் சொல்கிறார். அப்படியே அவர்கள் தவம் செய்கிறார்கள்.

தவத்துக்கு இரங்கி, பரந்தாமன் எழுந்தருளுகிறான். அவர்கள் விரும்பியவிதமே அன்று கண்ணனாகப் பிருந்தாவனத்தில் திரிந்த கோலத்தையும் அங்கு அப்போது செய்த லீலைகளையும் மறுபடியும் இவர்களுக்காகச் செய்து காட்ட இசைகிறான். அப்படியே கோபாலன் தனது திருவிளையாடல் முப்பத்திரண்டையும் செய்து காட்டிய தலம்தான் தக்ஷிண துவாரகை என்னும் இந்த மன்னார்குடி. ஆகவே இத்தலத்துக்குச் சென்றால் அங்குள்ள கோயிலில் கண்ணனது திருவிளையாடல்களையெல்லாம் கண்டு களித்து அந்தப் பழைய துவாரகைக்கே போய் வந்த பலனைப் பெறலாம்.

அவதரித்தது, பூதகியை வதஞ் செய்தது, யசோதை மடியில் தவழ்ந்தது, பாலுண்டது, மாடு மேய்த்தது, வெண்ணெய் திருடி உண்டது, உரலில் கட்டுண்டு கிடந்தது, காளிங்க நர்த்தனம் செய்தது, கோபிகைகளோடு ஜலக்கிரீடையாடியது, அவர்களது வஸ்திராபஹரணம் பண்ணியதெல்லாம் இக்கோபாலனது பால லீலைகள், வயது முதிர்ந்து இளைஞனான பின்னர் ருக்மிணி சத்யபாமைகளை மணம் புரிந்தது, பஞ்சவர்க்காகத் தூது நடந்தது, பார்த்தனுக்குச் சாரதியாக அமர்ந்து அவனுக்குக் கீதோபதேசம் செய்ததெல்லாம் அவன்றன் லீலைகள்தாமே. இப்படியே முப்பது முப்பத் திரண்டு கோலங்களில் அவன் தன் திருவிளையாடல்களைக் கோப்பிரளயருக்கும், கோபிலருக்கும் காட்டியிருக்கிறான்: இத்தனை கோலங்களையுமே இந்தத் தலத்திலே நடக்கும் திருவிழாக்களில் இன்றும் கண்டு மகிழ்கிறார்கள் பக்தர்கள்.

இந்தக் கோயில் வாயிலுக்கு முன் எழுந்து நிற்பது கருடகம்பம். ஐம்பத்து நாலு அடி உயரம் உள்ள இந்தக் கம்பத்தில் கருடன் அஞ்சலி ஹஸ்தராய் மேற்கு நோக்கி ராஜகோபாலனை வந்தித்த வண்ணம் இருக்கிறார். அந்தக் கம்பத்திலேயே தீபம் வைக்கவும்வகை செய்திருப்பதால் அதுவே தீப ஸ்தம்பமும் ஆகிறது. இதனை வலம் வந்தே கோயில் வந்து சேர வேண்டும். இந்தக் கோயில் ஐந்து பிரகாரங்களோடு கூடிய விஸ்தாரமான கோயில். இங்குள்ள கோபுரங்கள் மொத்தம் பதினாறு. அவற்றில் கீழைக் கோபுரம் 154 அடி உயரமுள்ள பெரிய கோபுரம். இந்த வாயிலைக் கடந்தே வெளிப் பிரகாரமான நாச்சியார் ரதவீதிக்கு வரவேணும். இதற்குள் அமைந்தது காசிப் பிரகாரம்; அதற்குள் அமைந்தது சண்பகப் பிரகாரம். இதுவே அன்றையச் சண்பகாரண்யமாக இருந்திருக்க வேணும்.

இன்றைய தலவிருட்சம் புன்னையும் இங்கே தான் இருக்கிறது. இதற்குள்ளேதான் கருடப் பிரகாரம். இதையும்

கோயில் - மன்னார்குடி

கடந்தே தான் கரு வறையைச் சுற்றியுள்ள திரு உண்ணாழிப் பிரகாரம். இந்தப் பிரகாரங்களில் எல்லாம் எத்தனையோ மண்டபங்கள். இத்தனையும் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்தாலே கோயில் எத்தனை பெரியது என்று தெரியும். இந்தக் கோயிலை, இந்தக் கோயிலின் காசிப் பிரகாரத்தைச் சுற்றி நிற்கும் மதில் வானளாவி நிற்கும். திருவாரூர்த் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, வேதாரண்யம் விளக்கு அழகு, காஞ்சீபுரம் குடை அழகு, திருவரங்கம் நடை அழகு என்பது போல் மன்னார்குடி மதில் அழகு என்பதும் பிரசித்தமானதாயிற்றே. இந்த மதில், இந்தப் பிரகாரம், இந்த மண்டபங்கள் எல்லாவற்றையும் கடந்தே கருவறையில் இருக்கும் பெருமாளைச் சேவிக்க வேணும்.

அங்குள்ள மூலவர் வாசுதேவன் நான்கு திருக்கைகளோடு சேவை சாதிப்பான், இவர் பிரம்மாவாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பர். இவருக்கு முன்னால் உத்சவ மூர்த்தியாய் எழுந்தருளியிருப்பவரே ராஜகோபாலன், வலக்கையில் மாடு மேய்க்கும் கோலும் இடக்கையை சத்யபாமையின் தோள்களிலும் வைத்துக் கொண்டு ஆனிரை சுற்றி நிற்கக் கோலாகலமாகக் காட்சி தருகிறான். ராஜகோபாலன் நல்ல வடிவழகு உடையவன். பின்னே விரித்த குழலும், முன்னே முடித்த கொண்டையும், கருணை பொங்கும் கண்களும், புன்முறுவல் பூத்த முகமும் உடையவனாய் இருக்கிறான். வலக்காலை அழுத்தி, இடக்காலைச் சிறிது சாய்த்துச் சதங்கை அணிந்த திருவடிகளோடு காட்சி தருகிறான்.

கொஞ்சம் உற்று நோக்கினால் ஒரு காதில் தாடங்கமும் ஒரு காதில் குண்டலமும் அணிந்திருப்பது தெரியும். ஐயோ! இது என்ன கோலம்? பெண்கள் அணியும் தாடங்கம் இவன் காதில் எப்படி வந்தது என்று நினைப்போம். இவன்தான் கோலாகலப் புருஷன் ஆயிற்றே, ஹரித்திரா நதியிலே இறங்கி கோபிகைகளுடன் ஜலக்கிரீடை செய்திருக்கிறான். அக்கிரீடைக்கு முன்னர் எல்லோரும் அவரவர் ஆடை அணிகளைக் களைந்து கரையிலே வைத்திருக்கின்றனர். ஜலக்கிரீடை முடிந்து அவசரம் அவசரமாகக் கரையேறி ஆடை அணிகளைத் திரும்பவும் அணிகிறபோது இந்தக்கோபாலன் தெரியாமல் ஒரு கோபிகையின் தாடங்கத்தையே எடுத்து அணிந்து கொண்டிருக்கிறான். அந்தக் கோலத்திலேயே இன்றும் சேவை சாதிக்கிறான். இவன் விட்டு விட்ட குண்டலம் எந்தக் கோபிகையின் காதில் ஏறியிருக்கிறதோ? அத்தனை கோபியரில் அந்தக் கோபிகையை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது?

வாசுதேவனையும் ராஜகோபாலனையும் தரிசித்தபின் வெளியே வந்து தென்பக்கம் போய் அங்கு தனிக்கோயிலில் இருக்கும் செங்கமலத் தாயாரையும் தரிசிக்கலாம். பிருகு மகரிஷி. தவம் செய்து லக்ஷ்மியையே தம் மகளாகப் பெறுகிறார். அவள், ‘மணந்தால் பரந்தாமனையே மணந்து கொள்வேன்' என்று தவமிருந்து வாசுதேவனை மணந்திருக்கிறாள். அவளை வடமொழியில் ஹேமாப்ஜநாயிகா என்றுகிறாள். அவளை வடமொழியில் ஹேமாப்ஜநாயிகா என்று அழைக்கிறார்கள். ஹேமாப்ஜம் என்றால் பொற்றாமரை என்றுதானே பொருள். அவளையே செங்கமல நாச்சியார் என்று நல்ல தமிழ்ப் பெயராலேயே அழைக்கிறார்கள்,

இக்கோயில் பிரகாரங்களில் லக்ஷ்மி நாராயணன், அனந்த
சக்கரத்தாழ்வார்

பத்மநாபன், வெங்கடேசப் பெருமாள், வைகுண்டவாசன் முதலிய மற்றைய விஷ்ணுவின் பல கோயில்கள் இருக்கின்றன. ஆண்டாளுக்கும் சக்கரத் தாழ்வாருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. இன்னும் ஆழ்வாராதியர் எல்லாம் தனிக் கோயிலிலேயே இருக்கிறார்கள். இத்தனை இருந்தும் இங்குள்ள ராஜ கோபாலனோ அல்லது வாசுதேவனோ ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்படவில்லை. ஆதலால் நூற்றெட்டுத் திருப்பதியில் ஒன்றாகக் கணக்கிடப்படவும் இல்லை. ஆனால் ஸ்ரீ வைஷ்ணவ பரம்பரையில் கடைசி ஆச்சாரியரான மண்வாள மாமுனிகளின் அபிமான ஸ்தலம் என்ற சிறப்பு உண்டு இத்தலத்துக்கு. ஸ்ரீராமானுஜர் 'ஒரு நாயகமாய்' என்ற திருவாய் மொழிப் பாசுரத்தை மைசூர் திருநாராயணபுரத்து பெருமானுக்குச் சமர்ப்பித்ததுபோல் மணவாள மாமுனிகளும் ‘தீரப்பாரையாமினி' என்னும் திரு வாய் மொழியின் பத்தாம் பாட்டை இந்த ராஜ கோபாலனுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். பாடல் இதுதான்.

உன்னித்து மற்றொரு தெய்வம்
தொழாள், அவனையல்லால்
நும் இச்சை கொல்லிநும் தோள்
குலைக்கப்படும், அன்னைமீர்
மன்னப்படு பறைவாணனை
வண் துவாரபதி மன்னனை ஏத்துமின்
ஏத்துதலும் தொழுது ஆடுமே.

என்பது நம்மாழ்வார் பாசுரம். முன்னமேயே இத்தலம் தக்ஷிண துவாரகை என்று வழங்கப்படுகிறது என்பதைத் தெரிந்திருக்கிறோம். அந்தத் தென் துவாரகையையே வளப்பமுள்ள துவாரகை - வண் துவாரகை என்று நம்மாழ்வார் குறித்தார் போலும்.

புராண ரீதியில் இக்கோயிலைச் சௌராஷ்டிதேசத்து அரசன் ராஜசேகரன் கட்டிப் பல கைங்கர்யங்கள் செய்தான் என்று தெரிகிறோம். யக்ஞசீலன் என்ற அந்தணனை அவமதித்தது காரணமாக அந்த ராஜசேகரன் பைத்தியம் பிடித்து அலைய அவன் இத்தலத்துக்கு வந்து ராஜ கோபாலனைச் சேவித்துப் பைத்தியம் நீங்கினான் என்பது புராணக் கதை, சரித்திர பூர்வமாக ஆராய்ந்தால் இக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரியும். இக்கோயிலில் ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றில் முதல் குலோத்துங்கன் காலத்தியது இரண்டு, மற்றவை திரிபுவன சக்ரவர்த்தி ராஜராஜதேவர், ராஜ ராஜேந்திர சோழ தேவர், கோனேரின்மை கொண்டான் காலத்தியவை. முதற் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டின்படி இக்கோயில் அவனது 43-ஆம் ஆண்டில் அதாவது கி.பி. 1113-ல் விஸ்தரிக்கப்பட்டிருக்கவேண்டும். ராஜாதி சதுர்வேதிமங்கலம், குலோத்துங்க சோழவிண்ணகரம் என்றெல்லாம் இத்தலம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. தஞ்சை நாயக்க மன்னரில் ஒருவரான விஜயராகவன் இக்கோயிலின் பெரும்பகுதியைக் கட்டியிருக்கிறான். அவனது சிலைவடிவம் மகா மண்டபத்தில் இருக்கிறது.

இந்தக்கோயிலை மட்டுமே பார்த்துவிட்டுத் திரும்பி விட்டால், தலம் முழுவதையும் பற்றித் தெரிந்ததாக ஆகாது. இங்குள்ள முக்கிய தீர்த்தம் ஹரித்திரா நதி என்னும் பெரிய தெப்பக்குளம்தான். இத் திருக்குளத்தின் விஸ்தீரணம் இருபத்து மூன்று ஏக்கர். திருவாரூர் கமலாலயத்தை விடச் சிறியதுதான் என்றாலும் நல்ல புராணப் பிரசித்தி உடையது. இங்குதான் ராஜகோபாலன் கோபிகைகளோடு ஜலக்கிரீடை செய்திருக்கிறான். இந்தக் குளத்தின் மத்தியில் ஒரு மண்டபம் அல்ல, மதிலுடன் கூடிய ஒரு சிறு கோயிலே இருக்கிறது. அக்கோயிலினுள் வேணுகோபாலன், ருக்மிணி சத்யபாமா சமேதனாக எழுந்தருளியிருக்கிறான். வசதி செய்து கொள்ளக் கூடுமானால் இவர்களையும் தரிசித்துவிட்டே திரும்பலாம்.