ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்/ஆண்மை போகாது




ஆ ண் மை போ கா து

என்னிடம் வருகிறவர்களிடம் நான் மூன்று குழந்தைகள் பெற்றதும் ஆப்பரேஷன் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவது வழக்கம். சிலர் "நீங்கள் கூறுவது நியாயம்தான். மூன்று குழந்தைகள் போதும், இரண்டுகூடப் போதும் என்று சில வேளைகளில் தோன்றுகிறது. ஆனால் ஆப்பரேஷன் செய்துகொள்ளச் சொல்லுகிறீர்களே, ஆப்பரேஷன் செய்தால் குழந்தை பிறக்காது என்றால் ஆப்பரேஷனால் ஆண்மை போய் விடுமல்லவா ? அது உண்டாகாமல் இருப்பதற்காகக் காளைக்குக் காயடிக்கிறார்களே, தாங்கள் கூறும் ஆப்பரேஷனும் அது போன்றதுதானே ? என்று கேட்கிறார்கள்.

இவர்கள் நினைப்பது தவறு. நான் கூறும் ஆப்பரேஷனால் ஆண்மை போகாது, அத்துடன் நான் கூறும் ஆப்பரேஷன் வேறு, காயடிக்கும் ஆப்பரேஷன் வேறு. இரண்டையும் விளக்குகின்றேன்.

இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் கருவுண்டாக்கும் சக்தியையே ஆண்மை என்று எண்ணுகிறார்கள். ஆனால் கருவுண்டாக்கும் சக்தி வேறு. ஆண்மைச் சக்தி வேறு. ஒருவனுடைய கோசம் குய்யத்துள் நுழையக் கூடிய அளவு கட்டியாக ஆகுமானால் அப்போதே அவன் கலவி செய்யமுடியும். அந்தக் கலவி செய்யும் சக்தியே ஆண்மைச் சக்தியாகும். சில கணவன்மார் கலவி செய்வார்கள், ஆயினும் அவர்களுடைய மனைவிமார்க்குக் கருவுண்டாகிக் குழந்தை பிறவாதிருக்கும். இதிலிருந்து கலவி செய்யும் சக்தி வேறு, கருவுண்டாக்கும் சக்தி வேறு என்பதும், கருவுண்டாக்கும் சக்தி இல்லாதிருந்தபோதிலும் கலவி செய்யும் சக்தியாகிய ஆண்மை இருந்துகொண்டே இருக்கும் என்பதும் விளங்கும்.

ஆண்மகனுடைய விதைகள் இருவித நீர்களை உண்டாக்குகின்றன. ஒன்றை அகச்சுரப்பு என்றும் மற்றதைப் புறச்சுரப்பு என்றும் மருத்துவர்கள் கூறுவர். அகச்சுரப்புதான் ஆணினிடம் மீசைமுளைக்கச் செய்யும், பருவகாலத்தில் குரலை மாறச்செய்யும், உடம்பை ஆண் உருவம் கொள்ளச் செய்யும், பெண்ணிடம் காதல் கொள்ளச் செய்யும், கலவி செய்தற்கேற்றவண்ணம் கோசத்தைக் கட்டியாக்கும். ஆகவே ஆண்மை அல்லது கலவி செய்யும் சக்தியைத் தருவது இந்த அகச் சுரப்பேயாகும்.

கலவியின் இறுதியில் கோசத்திலிருந்து புறச் சுரப்பு நீர் குய்யத்துள் பாயும். அந்த நீர் விந்து எனப் பெறும். அதில் மிதக்கும் விந்துயிர்களில் ஒன்று பெண்ணின் சினைக்குழாய்க்கு வரும் முட்டையுடன் கலக்கும் போது கருவுண்டாகும். ஆகவே அகச்சுரப்பு நீர் கலவி செய்யும் சக்தியைத் தரும், புறச்சுரப்பு நீர் கரு உண் டாக்கும் சக்தியைத் தரும்.

நான் கூறும் “விந்துக்குழாய் வெட்டுதல் என்னும் ஆப்பரேஷனைச் செய்தால் புறச்சுரப்பு நீர் உண்டாகாது, அதனால் கருவுற்பத்தியாகாது. அவ்வளவே. ஆப்பரேஷனால் அகச்சுரப்பு நீர் உண்டாவது நிற்காது, அதனால் கலவி செய்யும் சக்தியாகிய ஆண்மை போகாது, அதுமட்டுமல்ல, புறச்சுரப்பு நின்று விடுவதால் அகச் சுரப்பு அதிகப்படும், அதனால் ஆண்மை சக்தி மிகும் என்றே மருத்துவர்கள் கருதுகிறார்கள். 

இரண்டாவதாக

நான் கூறும் விந்துக்குழாய் வெட்டுதல் என்னும் ஆப்பரேஷன் வேறு, காளைகளுக்குக் காயடித்தல் என்னும் ஆப்பரேஷன் வேறு. காயடித்தல் என்பது விதைகளை நீக்கிவிடுதல் என்பதாகும். விதைகளை நீக்கிவிட்டால் அகச்சுரப்பு நீருமில்லை, புறச்சுரப்பு நீருமில்லை. ஆண்மகன் ஒருவனுக்கு அவ்விதம் செய்தால் அவன் கலவியும் செய்யமுடியாது, கருவுண்டாக்கவும் முடியாது. அதனால் விதையை நீக்கும்போதே அதாவது அகச்சுரப்பு நீரை இல்லாமற் செய்யும்போதே ஆண்மை போகும். நான் கூறும் ஆப்பரேஷனால் புறச் சுரப்பு நீர் மட்டுமே உண்டாகாது. அகச்சுரப்பு நீர் உண்டாகிக்கொண்டே இருக்கும். அதனால் ஆண்மை போகாது, இருந்துகொண்டே இருக்கும். கணவன் கலவி செய்வான், முன்போல் இன்பம் துய்ப்பான், ஆனால் குழந்தை மட்டும் பிறக்காது.

ஆதலால் கணவன்மார்களே! ஆப்பரேஷனால் ஆண்மை போகாது. அதிகப்படவே செய்யும், அஞ்ச வேண்டியதில்லை, ஆப்பரேஷனைச் செய்து கொள்ளுங்கள், நன்மையே அடைவீர்கள்.


விக்டோரியா மகாராணியார்
1841 சனவரி 15ம் நாள்
தம் மாமா பெல்ஜிய அரசருக்கு எழுதிய கடிதம்

அன்புமிக்க மாமா அவர்களே நான் மீண்டும் குழந்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பமாட்டீர்கள். நான் குடும்பத்தைப் பெருக்கினால் நமக்கும் நாட்டுக்கும் நன்மை உண்டாகாது. எனக்குத் துன்பமும் அசெளகர்யமுமே உண்டாகும். அதிகமாகக் குழந்தைகள் பெறுவது பெண்களுக்கு எத்துணைக்கஷ்டமான காரியம் என்பதை ஆண்கள் எண்ணிப் பார்ப்பதேயில்லை.