இலக்கியத் தூதர்கள்/வேளன் விடுத்த தூதன்


8. வேலன் விடுத்த தூதன்

தமிழில் சிறந்த புராணங்கள்

நந்தம் செந்தமிழ் மொழியிலுள்ள புராணங்கள் பலவற்றுள்ளும் சிறந்தனவாகத் திகழ்வன ஒன்பது புராணங்கள் என்று ஆன்றோர் உரைப்பர். அவைதாம் பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம், கோயிற் புராணம், சேது புராணம், காளத்திப் புராணம், காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம், திருக்குற்றாலப் புராணம் என்பனவாம். இவ்வொன்பது புராணங்களுள்ளும் மூன்றன. மிகச் சிறந்தனவாகக் கற்றோர் போற்றுவர். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் என்னும் இம் மூன்று நூல்களையும் சிவபெருமானுக்கமைந்த மூன்று விழிகளைப் போன்றவையென்று போற்றி மகிழ்வர். தொண்டர்தம் பெருமையைப் பேசும் திருத்தொண்டர் புராணம் பெரிய புராணம் எனப்படும். சிவகுமாரனாகிய முருகன் பெருமையை விரித்துரைக்கும் கந்தபுராணமோ ‘புராண நன்னாயகம்’ என்று போற்றப்படும்.

கந்தபுராணச் சிறப்பு

பெரிய புராணத்தை யருளிய சேக்கிழார் பெருமான் அப்புராணத்தை ‘மாக்கதை’ என்று சிறப்பித்த வாறே, கந்த புராண ஆசிரியரும் கந்த புராணத்தை ‘அறுமுகம் உடையவோர் அமலன் மாக்கதை’ என்று சிறப்பித்துள்ளார். தில்லைக் கூத்தனாகிய சிவபெருமான், ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழார் பெரிய புராணம் பாடத் தொடங்கியது போன்றே, கந்தபுராண ஆசிரியரும் காஞ்சிக் குமர. கோட்டத்து முருகவேள் ‘திகடசக்கரம்’ என்று அடியெடுத்துக்கொடுக்க, அத்தொடரையே முதலாகக் கொண்டு நூலைப் பாடினர். சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு நெருப்புப் பொறிகளே ஆறுமுகப்பெருமானாக வடிவெடுத்தனவாதலின், அப்பெருமானின் வரலாற்றைக் கூறும் கந்த புராணமும் சிவபெருமானது நெற்றிக் கண்ணுக்கு நேரானதெனப் பாராட்டப்பெறும்.

கச்சியப்பர் இருமொழிப் புலமை

காஞ்சிக் குமரகோட்டத்தில் எழுந்தருளியுள்ள முருகவேளை முப்போதும் திருமேனி தீண்டி வழிபடும் தொழும்பு பூண்டவராகிய கச்சியப்பர் வடமொழிப் புலவரும் தென்மொழிப் புலவரும் ஒருங்கே கொண்டாட இருமொழிப்புலமையும் சான்ற பெருங்கவிஞராக விளங்கினார். இத்தகைய வித்தகரைக் காஞ்சியில் வாழ்ந்து வந்த கற்றோர் பலரும் முருகன் வரலாற்றை இனிய தமிழில் பாடித்தருமாறு பலகால் வேண்டினர். முருகப்பெருமானும் ஒருநாள் இரவு, அவரது கனவில் தோன்றி, “அன்பனே! நமது புராணத்தை நற்றமிழிற் பாடித் தருக” என்று கட்டளையிட்டருளி ‘திகட சக்கரம்’ என்று முதலும் எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தருளினான்.

முருகன் திருத்திய முழுநூல்

அக் கட்டளையைச் சிரமேற் கொண்டு கச்சியப்பர் கந்தபுராண நூலைப் பாடத் தொடங்கினார். நாள் தோறும் தாம் பாடிய பாடல்களை யெழுதிய ஓலைச் சுவடிகளே நள்ளிருட் பூசனை முடிவுற்றதும் முருகப் பெருமான் திருவடியில் வைத்துத் திருக்கதவத்தை அடைத்து வருவார். மறுகாட் காலையில் திருக்கதவம் திறக்கும் பொழுது, அவர் வைத்துவந்த சுவடிகளில் திருத்தங்கள் செய்யப்பெற்றிருக்கும். அத் திருத்தங்களை முருகப் பெருமானே செய்தருளினான் என்று காது வழிச் செய்தியொன்று வழங்கி வருகின்றது. ஆதலால், தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமான் திருக்கரத்தால் திருத்தம் செய்யப்பெற்ற தெய்வச் சைவத் திருநூலாகத் திகழ்வது கந்த புராணம் ஆகும்.

வீரசோழிய விதிக்கு இலக்கியம்

இத்தகைய கந்த புராணத்தை நூலாசிரியராகிய கச்சியப்பர் தாம் வழிபடும் காஞ்சிக் குமரகோட்டத்தில் அரங்கேற்றத் தொடங்கினர். அப்போது இந் நூலின் முதற் பாடலில் ‘திகழ் தசக்கரம்’ என்பது ‘திகடசக்கரம்’ என ஆனதற்கு இலக்கண விதி கூறுமாறு அவையிலிருந்தோர் வினவினர். அவ்வேளையில் ஒருவர் அங்கு விரைந்து வந்து, வீரசோழியம் என்னும் நூலிலுள்ள விதியை எடுத்துக்காட்டி, அவையோர் வியக்குமாறு விடைகூறி மறைந்தனர். அவ்வாறு வந்தவர் முருகப் பெருமானே என்று அறிந்து, கச்சியப்பரின் கவித்திறனப் பலவாறு மெச்சினர்.

நூலின் உயர்வும் உட்பொருளும்

முருகப்பெருமான் திருவருள் நலங்கனிந்த தெய்வ நூலாகிய கந்த புராணம் வீறுபெற்ற செந்தமிழ் நடையுடையது. உவமை நலஞ்செறிந்த எளிய இனிய செய்யுட்களால் இயன்றது. அணிகள் பலவும் அமைந்து சிறந்த காவியமாகத் திகழ்வது. பதினாயிரத்துக்கு மேற்பட்ட பைந்தமிழ்ப் பாக்களைக் கொண்டது. சிறந்ததோர் உட்பொருளைத் தன் னகத்தே கொண்டொளிர்வது. விதிவழி விலகிய இந்திரன் முதலான வானவர், சூரன் முதலான அசுரர்களின் வாயிலாக வினைவழி வரும் துன்பங்களால் துயரம் அடைகின்றனர். பின்பு இறைவனை நினைவு கூர்ந்து, அன்பால் வழிபாடாற்றி, முருகப்பெருமான் துணைகொண்டு சூரன் முதலானோரை அழித்து இன்புறுகின்றனர். இவ்வரலாற்றால் உயர்ந்த சமய உண்மையைக் கச்சியப்பர் திண்மையுறப் புலப்படுத்துகின்றார். ‘விதிவழி தவறிய உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வினைப் பயன்களால் வெந்துயர் எய்தும்; அப்போது இறைவனை நினைந்து அன்பால் வழிபாடு புரியத் திருவருள் வாய்க்கும்; அத் திருவருள் துணைகொண்டு மும்மலங்களை நீக்க, இறவாத இன்ப முத்திவந்துறும், என்னும் தத்துவத்தை உட்கொண்ட கந்த புராணம் சொல்லாலும் பொருளாலும் அழகுற்று விளங்குவது; உயர்ந்த வேலைப் பாட்டுடன் இழைக்கப்பெற்ற மாணிக்கம் போல்வது.

நூலின் அமைப்பும் சிறப்பும்

மேலும், இந்நூல் இலக்கண மேற்கோளாகக் காட்டப்பெறும் சிறந்த இலக்கியமாகும். இந்நூலாசிரியர் ஒரு பொருளைக் குறிக்கும்போது அதன் பெயராகிய பல சொற்களாலும் குறிப்பிடுவர். இவர் நடையிலே தொனிப் பொருள் சிறந்திருக்கும். இந்நூலின் நடை, தெளிந்த நீரோட்டம் போன்று ஒரே தன்மையாக வீறுபெற்றுச் செல்லும் நல்லியல்புடையது. இந்நூலின்கண் சைவாகமங்களின் கருத்துக்களும், வேதோபநிடதங்களின் கருத்துக்களும் இனிது விளக்கப்படுகின்றன. கச்சியப்பர் வாழ்ந்த காலம்

இனிக் கம்பரே கந்த புராணத்தைப் பாட இருந்தனர் என்றும், கச்சியப்பர் அதனை முன்னரே பாடியுள்ளார் என்பதை அறிந்து இராமாயணத்தைப் பாடத் தொடங்கினர் என்றும் காது வழிச் செய்தியொன்று வழங்குகின்றது. இது குறித்துக் ‘கச்சியப்பர் என்னும் சுறாவா கந்த புராணக் கடலைக் கலக்கியது?’ என்று கம்பர் வினவியதாகப் பழமொழியொன்று வழங்கும். இதனால் கச்சியப்பர், கம்பர் காலத்திற்குச் சிறிது முற்பட்டவர் என்று கருதலாம். வீரசோழிய இலக்கண விதியைக் கடைப்பிடித்த கச்சியப்பர் அவ் வீரசோழிய காலத்துக்குப் பின்னும், கம்பர் காலத்துக்கு முன்னும் வாழ்ந்தவராதல் வேண்டும்.

கதையமைப்பில் இருநூல்களின் ஒற்றுமை

இவ்வுண்மை கந்த புராணம், இராமாயணம் ஆகிய இரு நூல்களின் கதையமைப்பில் உள்ள ஒற்றுமைகளால் தெள்ளிதிற் புலனாகும். இலங்கையில் இராவணன் நிறுவிய அரசு இராமனது வில்லால் அழிந்தது. வீரமகேந்திரத்தில் சூரன் அமைத்த அரசு முருகனது வேலால் முறிந்தது. இராவணன் நெடுந்தவம் புரிந்து பெற்ற வரத்தாலும் வலிமையாலும் தேவரையும் மூவரையும் வென்றான். மாநில மன்னர், அவன் படைவலி கண்டு அஞ்சி அடி பணிந்தனர். இத்தகைய வீரஞ் செறிந்த வேந்தன் கும்பகருணன் முதலான தம்பியரோடும், மேகநாதன் முதலான மைந்தரோடும் இலங்கையிற் சிறந்து விளங்கினான். வானவர் அந்நாட்டில் வாயடங்கிப் பணிபுரிந்தனர், எங்கும் அறம் தளர்ந்து, மறம் வளர்ந்தது. இவ்வாறே சூரனும் பெருந்தவம் புரிந்து அண்டங்கள் பலவற்றை யும் ஆளும் அரிய வரம் பெற்றான். விண்ணவரைப் பிடித்து வந்து, தன் நகரமாகிய வீரமகேந்திரத்தில் சிறைவைத்தான். சிங்க முகன் முதலான தம்பியரோடும், பானுகோபன் முதலான மைந்தரோடும் மாண்புற்று விளங்கினான்.

இராமனும் வேலனும்

உலகில் மறம் பெருகி அறம் அருகும்பொழுது இறைவன் தோன்றி, மறத்தினை வேரோடு அறுத்து, அறத்தினைச் சீரோடு நிறுத்துவான் என்பது ஆன்றோர் கருத்தாகும். அதற்கேற்ப அரக்கர்கோன் செய்த கொடுமையால் இராமன் அவதரித்தான். அசுரர் கோன் விளைத்த தீமையால் முருகன் அவதரித்தான். சீதையைச் சிறை மீட்பதற்கு இராமன் வில்லுடன் எழுந்தான். சயந்தன் முதலான வானவரைச் சிறை மீட்பதற்கு முருகன் வேலுடன் விரைந்தான்.இலங்கை வேந்தன் தங்கையாகிய சூர்ப்பணகையே அண்ணன் அழிந்தொழிய வழிதேடினாள். சூரன் தங்கையாகிய அசுமுகியும் தன் அண்ணன் அரசோடொழிதற்கு அடிகோலினாள். அழகே உருவாயமைந்த சீதையைக் கவர்ந்து சென்று தன் அண்ணனிடம் சேர்க்க எண்ணினாள் சூர்ப்பணகை. அதனால் இராமன் தம்பியாகிய இலக்குவனால் மூக்கறுபட்டுத் தமையனிடம் ஓடி முறையிட்டாள்.

அசமுகியும் சூர்ப்பணகையும்

பொன்னாடு துறந்து பொன்னி நாட்டையடைந்த இந்திரன் சிவமணங் கமழும் சீர்காழிப் பதியில் பொழில் ஒன்றையமைத்து,அங்குத் தன் தேவியுடன் தங்கியிருந்தான். தனித்திருந்த அவன் தேவியைச் சூரன் தங்கையாகிய அசமுகி கண்ணுற்றாள். அவளைத் தன் தமையனிடம் கொண்டு சேர்க்க விரும்பிய அசமுகி, பலவாறு இழித்துரைத்து எடுத்துச் செல்லத் துணிந்தாள். அவ்வேளையில் சோலையைக் காவல் புரிந்த மாகாளன் வெளிப்பட்டு அசமுகியின் கையை வாளால் வெட்டி வீழ்த்தினான். இலக்குவனால் மூக்கிழந்த சூர்ப்பண கையைப் போன்று மாகாளனால் கையிழந்த அசமுகி கதறியழுதாள். வீரமகேந்திரத்தில் வீற்றிருந்த சூரனை நினைத்து ஓலமிட்டாள். அவனது அவையிற் புகுந்து தனக்கு நேர்ந்த சிறுமையை முறையிட்டாள்.

இராமன் விடுத்த தூதன்

இராம தூதனாகிய அனுமன் இலங்கையடைந்தான். அவன் சிறையிலிருந்த செல்வியாகிய சீதையைக் கண்டு ஆறுதல் கூறினான். வீரமாநகரமாய் விளங்கிய இலங்கையில் விண்ணவர், அரக்கர்கோன் அடிபணிந்து தொண்டு புரியும் நிலையினைக் கண்டு வியந்தான். இராவணன் அரசவையடைந்து இறு மாந்திருந்த அவன் செவிகளில், தன்னை ஆட்கொண்ட நாயகன் பெருமையை நன்றாக எடுத்துரைத்தான். அறநெறி தவறிய அவ்வரசனை நோக்கி, “உன் செல்வம் சிதையாதிருக்க வேண்டுமாயின் உடனே சீதையை விடுக; உனது ஆவியை ஒரு பொருளாகப் போற்றுவாயாயின் அப் பெருமான் தேவியை விடுக” என்று அவ்வனுமன் அறுதியிட்டு உறுதியாக உரைத்தான்.

வேலன் விடுத்த தூதன்

அங்ஙனமே வீரமகேந்திரத்தை யடைந்த முருக தூதனாகிய வீரவாகுவும் அந் நகரின் சிறப்பையெல்லாம் கண்டு வியந்தான். அங்கு வானவர் அசுரரை வணங்கி ஏவல் புரியும் இழிநிலையைக் கண்டு இரங்கினான். மீனெடுத்து வரும் ஈனத்தொழிலை வானவர் புரிந்து வருதலைக் கண்டு பெரிதும் வருந்தினான். இந்திரன் மைந்தனாகிய சயந்தன் சிறையிருந்த இடத்திற்கும் சென்று, அவனைத் தேற்றினான். நகரை முற்றும் சுற்றிப் பார்த்த அவ் வீரவாகு, சூரன் பேரவையைச் சார்ந்தான். அச் சூரனிடம் வேலேந்திய முருகன் பெருமையை விளக்கி யுரைத்தான். முத் தொழில் புரிந்தருளும் இறைவனே முருகனாய்த் தோன்றியுள்ள சிறப்பினை விரித்துரைத்தான். ‘நின் கிளையொடு நெடிது வாழ நீ விரும்பினால் இப்பொழுதே விண்ணவரைச் சிறையினின்றும் விடுக; வேலேந்திய முருகன் திருவடியைப் பணிக’ என்று தூதரை யோதினான்.

வேந்தர் இருவரின் வீழ்ச்சி

இலங்கையை அழித்து மீண்ட அனுமனைப் போன்றே வீரவாகுவும் மகேந்திர நகரை யழித்துத் திரும்பினான். இறுதியில் இலங்கை வேந்தன் இராமனொடு போர்புரிந்து வீழ்ந்தான். சூரனும் வேலனுடன் கண்டோர் வியப்புறக் கடும்போர் புரிந்து மாண்டொழிந்தான். இராவணன் மனைவியாகிய மண்டோ தரியும், சூரன் மனைவியாகிய பதுமையும் கற்புநெறி வழுவாமல் தத்தம் கணவருடன் உயிர் நீத்தனர். இங்ஙனம் முதலிலிருந்து முடிவுகாறும் கதையமைப்பில் பெரிதும் ஒற்றுமையுடைய இராமாயணம், கந்த புராணம் ஆகிய இருபெருங் காவியங்களும் தமிழகத்தில் நிலவும் வைணவம், சைவம் ஆகிய இரு சமயங்களின் உண்மைகளை இனிதின் விளக்குவனவாகும். வேலன் தூது விடுத்தல்

வானவரைக் கொடுஞ் சிறையில் இட்ட அசுரர் கோமானாகிய சூரனது உயிரைக் கவருதற்கு வந்த வடிவேல்முருகன், முதலில் ஒரு தூதனை விடுத்து அவனது கருத்தை அறிய விரும்பினான். அச் சூரனுடன் வீரப் போர் தொடங்கு முன்னே ஆற்றல் மிக்க தூதன் ஒருவனை அனுப்புதலே அறநெறியாகும் என்று மலரவனும் மாயவனும் கூறினர் அது கேட்ட வேல் வீரனாகிய முருகன் அருகே நின்ற வீர வாகுவை அருளொடு கோக்கினான். “வீரனே! நீ மகேந்திர நகருக்கு இன்றே விரைந்து சென்று சூரனைக் கண்டுவரல் வேண்டும்; அவன்பால் இந்திரன் மைந்தனையும் ஏனைய வானவரையும் உடனே சிறையினின்று விடுவித்தல் வேண்டும் என்றும், அறநெறி வழுவாமல் அரசாள வேண்டும் என்றும் அறிவிப்பாய்; அசுரர் கோன் அதற்கு இசையானாயின் அவன் இனத்தை அடியோடு அழித்தற்கு வடிவேல் எடுத்து நாளையே நாம் போருக்கு வருவோம். இஃது உண்மையென்று உரைத்து மீள்க” என் பணித்தருளினான்.

வீரவாகு வீரமகேந்திரம் அடைதல்

வேலன் ஆணையைச் சிரமேல் தாங்கிய வீரவாகு, இந்திரன் முதலிய தேவரிடம் விடைபெற்றுக் கடற் கரையின் அருகமைந்த கந்தமாதன மலையின்மீது ஏறினான். அம்மலையின் உச்சியில் நின்று முருகப் பெருமான் திருவடியைத் தொழுது தியானித்தான். வானவர் கண்டு வியக்கும் பேருருவைக் கொண்டான். சூரனது நகரமாகிய வீரமகேந்திரத்தின் மீது பாயத் துணிந்து காலையூன்றினான். வேலனை வாழ்த்தி வானில் விரைந்தெழுந்து பறந்தான். இடையில் அசுரர்களால் ஏற்பட்ட இடையூறுகளை யெல்லாம் வென்று சூரனது வீரமாநகரை யடைந்த வீரவாகு, வேலன் திருவடியை வாழ்த்தி வணங்கினான். அப் பெருமான் திருவருளால் ஓர் அணுவின் உருவங் கொண்டு மகேந்திர மாநகரின் வளங்களைக் கண்டு வியந்தான். சயந்தனும் வானவரும் சிறையிருந்த இடத்தைக் கண்டு சிந்தைநைந் துருகினான்.

வானவர் வாழ்த்தைப் பெறுதல்

இந்திரன் மைந்தனாகிய சயந்தனுக்கு இன்னுரை கூற எண்ணிய வீரவாகு ஆறெழுத்து மந்திரத்தை அன்புடன் ஓதினான். அவ்வேளையில் சிறைச் சாலையைக் காத்துநின்ற அசுரர் மந்திர வலையிற்பட்டு மயக்குற்றனர். உடனே, அவ் வீரவாகு சிறையினுள்ளே புகுந்து சீரிழந்து வாடும் சயத்தன் முன்னே அமர்ந்தான். தன்னக் கண்டு வியந்து நின்ற சயந்தனுக்குத் தன் வரலாற்றை எடுத்துரைத்தான். வேலன் விடுத்த தூதனாய் வந்தடைந்த சிறப்பினை விரித்துரைத்தான். அவனது மொழிகளைக் கேட்ட இமையவர் அனைவரும் மனமகிழ்வெய்தினர். ‘வேலன் விடுத்த தூதனே! நீ வெற்றி எய்துக!’ என்று வாழ்த்துக் கூறி வழியனுப்பினர்.

சூரன் அத்தாணியில் வீரவாகு

அவ்விடத்தினின்று வான் வழியே விரைந்து பறந்த வீரவாகு, சூரனது மாளிகையைச் சார்ந்த செய் குன்றின்மேல் நின்று அவனது அரண்மனை வளத்தை யெல்லாம் கூர்ந்து நோக்கினான். பின்னர் அங்கிருந்து எழுந்து, வீரனாகிய சூரன் வீற்றிருந்த அத்தாணி மண்டபத்தை யடைந்தான். மேரு மலையை வில்லாகக் கொண்ட மேலவன் மைந்தனாகிய வேலவன் விடுத்த தூதன் யான்; இச்சூரன் அரியாசனத்தில் வீறுடன் இருக்க, எளியனாய் அவன்முன் சென்று நிற்றல் எம் பெருமான் பெருமைக்கு இழிவைத் தரும் என்று எண்ணினான். அப்பெருமான் திருவடியை நினைந்து உருகினான். அந்நிலையில் முருகவேள் திருவருளால் பேரொளி வீசும் பீடமொன்று விரைவில் அங்கு வந்துற்றது. அதனைக் கண்ட வீரவாகு, ‘இஃது எம் பெருமான் அனுப்பியருளிய ஆசனம் போலும்!’ என்றெண்ணி அகமகிழ்ந்து அதன் மீது ஏறியமர்ந்தான்.

சூரன் வினாவும் வீரன் விடையும்

வீரவாகுவின் செயலைக் கண்ட சூரன் வெஞ்சினங் கொண்டு உடம்பெல்லாம் வியர்க்கவும், விழிகளில் தீப்பொறி பறக்கவும் பற்களைக் கடித்தான். ‘இங்குத் துணிந்து வந்த நீ யாவன்?’ என்று வினவினான். அது கேட்ட வீரவாகு, ‘அசுரனே! இந்திரன் துயரைப் போக்கித், தேவரைச் சிறையினின்றும் நீக்கி, அவர்க்குப் பண்டைச் சிறப்பையெல்லாம் ஆக்கி வைத்தற்கு ஆதி முதல்வனாகிய முருகவேள் திருச்செந்துரில் எழுந்தருளியுள்ளான்; அப்பெருமானுக்கு அடியவன் நான்; நின் தம்பியாகிய தாரகனையும் கிரவுஞ்சம் என்னும் பெரு வெற்பையும் எளிதிற் கொன்றொழித்த வேல் வீரனாகிய குமரவேள் உன்னிடம் இன்னருள் கொண்டு என்னைத் தூது அனுப்பினான்; வானவர்க்குத் தந்தை முறையினரான காசிப முனிவர் தந்த மைந்தனாகிய நீ அவ்வானவரைச் சிறைசெய்தல் முறையாமோ? நீ வேத நூல் முறையினின்றும் விலகினாய், அற்பமான பொருள்களில் ஆசை கொண்டாய் அளவிறந்த காலம் நீ அருந்தவம் புரிந்து இறைவன்பால் அழியாத ஆயுளையும் செல்வத்தையும் பெற்றாய்; அவற்றைத் தவருண நெறியிலே சென்று அழித்துக் கொள்ளுதல் தகுமோ? நீயும் நின் சுற்றமும் நீண்ட செல்வத்துடன் வாழ வேண்டுமாயின் வானவரைச் சிறையினின்றும் விடுக! அறநெறியிலே அரசு புரிக! அங்ஙனம் செய்யத் தவறினால் செவ்வேள் இங்கு எழுந்தருளி, நின்னையும் நின்னைச் சேர்ந்த அசுரர் கூட்டத்தையும் கொன்றொழித்தல் உறுதியாகும்” என்று தூதரை யோதினான்.

சூரனின் வீரமொழி

வீரவாகு விளம்பிய சொற்களைக் கேட்ட சூரன் மனத்தில் கடுஞ்சினம் மூண்டது. அவன் கையொடு கையறைந்து கடுமையாகப் பேசத் தொடங்கினான். “ஆயிரத்தெட்டு அண்டங்களையும் வென்று, இணையற்ற தனியரசு புரியும் எனக்கு இச்சிறுவனோ அறிவுரை சொல்லத் தலைப்பட்டான்? அசுரர் குலத்தை வருத்திய வானவரைச் சிறையில் கொணர்ந்து அடைத்தது தவருகுமோ? முருகனாகிய இச்சிறுவன் தந்தையார் எனக்கு முறையாக அளித்த வரங்கள் விணாகுமோ? போர் புரிந்து என்னை வெல்ல வல்லார் யாரே? நான் அவ்வானவரை விடமாட்டேன்; ஏதும் அறியாத இளம்பிள்ளையின் சொல்லைக் கேட்டு, இங்குத் தூதனாக வந்த உனக்கு உயிர்ப்பிச்சை தந்தேன்; பிழைத்துப் போவாய்” என்று சூரன் வீரமொழி கூறினான்.

வேலன் பெருமையை விளக்குதல்

இம்மொழிகளைக் கேட்ட முருகதூதனது உள்ளத்தில் பெருஞ்சினம் முறுகி எழுந்தது; மெய்ம்மயிர் சிலிர்த்தது; கண்கள் சிவக்தன. “மன்னுயிர்க்கு இன்னுயிராய், தன்னேரில்லாத் தலைவனாய், அனைவர்க்கும் அம்மையப்பராய் அமர்ந்த பரம்பொருளே அறுமுகப் பெருமான்; எங்கும் நிறைந்து இன்னருள் புரியும் அப்பெருமானுக்கு எங்கும் திருமுகங்கள்; எங்கும் திருவிழிகள்; எங்கும் திருச்செவிகள்; எங்கும் திருக்கரங்கள்; எங்கும் வீரக்கழல்புனைந்த திருவடிகள்; எங்கும் அவன் திருவுருவமே. இத்தகைய பேராற்றல் படைத்த பெருமான், வானவர் துயரைப் போக்கவும், அசுரக்களையை வேரறுத்து அறப்பயிரைக் காக்கவும் இங்கு எழுந்தருளியுள்ளான்; அப்பெருமான இழிந்த சொற்களால் இகழ்ந்துரைத்த உன் நாவை அப்போதே அறுத்திருப்பேன்; உன்னுயிரைபும் பிரித்திருப்பேன்; என் தலைவனாகிய வேலன் என்னை அதற்காக அனுப்பவில்லையாதலின் உன்னை உயிரோடு விடுகிறேன்; வேற்படைக்கு இரையாக இருப்பவனே! இன்னும் ஒரு நாள் உயிர் வாழ்ந்திரு; மீண்டும் ஒரு முறை உறுதி கூறுகின்றேன்; நீயும் நின் சுற்றமும் வாழ விரும்பினால் வானவரைச் சிறை வீடு செய்க! பகைமை யொழித்துப் பரம்பொருளாகிய முருகன் திருவடியைப் பணிக!” என்று அச்சூரனுக்கு நல்லுரை பகர்ந்தான்.

அசுரரை அழித்துச் செந்திலை அடைதல்

வீரவாகுவின் சீரிய உரைகள் சூரனது உள்ளத்தில் சினத்தையே விளைத்தன. ‘விரைவில் இவனைப் பிடித்துச் சிறையில் இடுக’ என்று அசுர வீரர்க்கு ஆணையிட்டான். அந்நிலையில் வீரவாகு ஆசனத்தைவிட்டு எழுந்தான். தன்னை வளைந்த அசுரர் தலைகளின் சிகையைப் கரத்தாற் பிடித்து நிலத்தில் அடித்தான். பின்பு சூரனை நோக்கி, “நீ என் ஆண்டவனது நெடுவேலால் மாண்டொழிவாய்; அது காறும் ஐம்புல இன்பங்களை ஆரத் துய்த்திரு; நான் போய் வருகிறேன்” என்று கூறிப் புறப்பட்டான். அப்போது அவன் அமர்ந்திருந்த அரியாசனமும் வானத்தில் எழுந்து மறைந்தது. பெருமான் அருளால் உலகளந்த திருமாலைப் போல் நெடியதோர் உருவங் கொண்டு நின்றான். அறம் திறம்பிய அசுர வேந்தன் வீற்றிருந்த அத்தாணி மண்டபத்தைச் சின்னா பின்னமாகச் சிதைத்தான். தன்னை எதிர்த்துத் தாக்கிய அசுர வீரர்களையெல்லாம் அழித்தொழித்தான். கருங்கடல் கடந்து கந்தமாதன மலையைச் சேர்ந்த செந்திற் பதியினை வந்தடைந்தான். அன்பினால் என்பும் உள்ளமும் உருகவும், விழிகளில் ஆனந்த வெள்ளம் பெருகவும், முருக வள்ளலின் திருவடியை வணங்கினான். தான் தூது சென்று மீண்ட செய்தியைப் பணிவுடன் பகர்ந்து நின்றான்.

இங்ஙனம் வேலன் விடுத்த தூதனய்ச் சூரனது வீரமகேந்திரம் அடைந்த வீரவாகு தலைமைத் தூதனுக்குரிய தகுதிகள் பலவும் படைத்தவன் என்பதை அவன் கூறிய மொழிகளாலும், சீரிய செயல்களாலும் அறிந்து மகிழலாம்.