உமார் கயாம்/17. தேடித் தேடிக் காணாமல் திரும்பி வந்து சேர்ந்தானே!

17. தேடித் தேடிக் காணாமல் திரும்பி வந்து சேர்ந்தானே!

பலநாள் கழுதையின் மீது பயணம் செய்து கடைசியாக ஒருநாள் மாலையில் நிசாப்பூருக்கு வந்து சேர்ந்தான் உமார். இடுகாட்டுக்குப் போகும் பாதையில் இறங்கிக் கொண்டு அந்தக் கழுதைக் காரனுக்கு நன்றி கூறினான். பூட்டிக்கொண்டு வந்த தன்னுடைய கோபுரம் எப்படியிருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டே அதை நோக்கி நடந்தான். எங்கு யாரும் இருக்க மாட்டார்கள், என்று எண்ணினானோ அங்கு அவன் பலப்பல மாறுதல்களையும், பலப்பல புதிய ஆட்களையும் கண்டு வியப்படைந்தான்.

கோபுரத்தைச் சுற்றியிருந்த சுவருக்குள்ளே புதுப்புதுக் கட்டிடங்கள் காட்சியளித்தன. அழகான பல பூஞ்செடிகள் நிறைந்து ஒரு தோட்டம் உருவாகியிருந்தது. இரண்டு தோட்டக்காரர்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள். கோபுரத்தின் மேலேயிருந்த வரந்தைச் சுவர் ஓரமாக வெண்கலக் கருவிகள் பல ஒளிவீசிக் கொண்டிருந்தன. இன்னும் பலப்பல மாறுதல்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டு வெளியே நின்று கொண்டிருந்த உமாரிடம், தாடி வைத்திருந்த வேலைக்காரன் ஒருவன் மரியாதையாக வந்து நின்று சலாம் வைத்தான்.

“தலைவரே! தங்கள் வரவு நல்வரவாகுக! தங்கள் வேலையைத் தொடங்குவதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து வைத்திருக்கிறோம். தயவுசெய்து உள்ளே வருகிறீர்களா?” என்று மிக வினயத்தோடு வரவேற்றான். தூசிபடிந்த மேனியும், அழுக்கடைந்த உடையும், பித்துப் பிடித்தவன் போன்ற தோற்றமும் உடைய உமாரை அந்த வேலைக்காரன் ஏதோ ஒரு விசித்திரமான பிராணியைப் பார்ப்பது போல் பார்த்தான்.

“சரி” என்று சொல்லிவிட்டு உமார் உள்ளே சென்றான். நேராகத் தன்னுடைய பொருள்கள் இருக்கும் கூடத்திற்குச் சென்றான். அங்கேயிருந்த பொருள்கள் அனைத்தும் வைத்தது வைத்தபடியேயிருந்தன. யாரும் எதையும் தொடவேயில்லை. பட்டுத்திரையும் அதில் பொறிக்கப்பட்ட பறக்கும் பாம்பும் அப்படியே முன்போலவே தொங்கிக் கொண்டிருந்தன. அவனுடைய படுக்கையின் ஒரு புறமாகத் தலையணிகள் அடுக்கி வைக்கப்பெற்றிருந்தன.

“ஏதாவது செய்திகள் கிடைத்தனவா? எனக்காக அனுப்பப்பட்ட ஒருசெய்தி வந்து சேர்ந்ததா?” என்று அந்த வேலைக்காரனை உமார் கேட்டான்.

“தலைவரே! தினந்தினமும் டுன்டுஷ் பிரபு அவர்களிடமிருந்து ஒரு செய்திவரும்.தாங்கள் வருகை புரிந்துவிட்டீர்களா? என்ற கேள்வியாகத்தான் அந்தச் செய்தியிருக்கும்! இதோ, இப்பொழுது கூடத்தாங்கள் வந்துவிட்டீர்கள் என்ற செய்தியை, நிசாம்பூரில் தெரிவிப்பதற்காக ஒரு பையனை அனுப்பிவிட்டேன்” என்றான்.

“வேறு எந்தவிதமான செய்தியும் இல்லையா? ஏதாவது கடிதம் கொடுக்கப் படவில்லையா?”

“இல்லை, வேறு எந்தவிதமான செய்தியும் கிடையாது! எந்தக் கடிதமும் இங்குக் கிடைக்கவில்லை.”

பலகணிக்கருகிலே போய், ஒரு தாழ்ந்த நாற்காலியிலே உமார் உட்கார்ந்தான். வேலைக்காரன் ஒரு வெள்ளிக் கூசாவிலே தெளிந்த தண்ணீர் கொண்டுவந்து அவனுடைய பாதங்களைக் கழுவினான். அப்பொழுது நல்வாழ்த்துக் கூறியபடி ஒரு மனிதன் உள்ளே வந்தான். வெள்ளிய தாடியுடன் கூடிய அந்த மனிதன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். மேன்மைக்குரிய நிசாம் அவர்களால், பாக்தாது நகரத்திலே ஏற்படுத்தப்பட்ட பாக்தாது நிசாமியா என்ற ஆராய்ச்சிக் கழகத்திலே, கணிதப் பேராசிரியராக இருப்பவன் தான் என்றும், தன் பெயர் மைமன் இபின்நஜிப் ஆல்வாஸிட்டி என்றும் கூறினான். உமார் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவனுடைய அமைதியைக் கண்ட மைமன் வியப்புடன் மீண்டும் கரகரத்த குரலிலே பேசத் தொடங்கினான்.

“பேரறிஞர் டோலமி அவர்களின் நட்சத்திர அட்டவணையும், அறிஞர் அலிசென்னா அவர்கள் பயன்படுத்தி வந்த வெண்கலப் பூகோள உருண்டையும் நிசாம் அவர்கள் ஆணையிட்டபடி கொண்டு வந்திருக்கிறேன்” என்றான்.

“நல்லது” என்று உமார் எங்கோ கவனமாகப் பதில் சொன்னான். வெயிலின் வெப்பமும், பாலைவனத்து மணற்குடும் உடலின் காய்ச்சலும் வாட்டியபின் இங்கு வந்ததும் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதியின் இடையே மைமன் கரகரத்தகுரல் என்னவோ மாதிரியிருந்தது.

ஆமையின் முதுகோட்டிலே தவறுதலாக ஏறிவிட்ட நாரைபோல, வெகு வேகமாகப் பின்வாங்கி அந்த இடத்தைவிட்டுச் சென்றான் மைமன் என்ற அந்தக்கணிதப் பேராசிரியன். ஆனால், இரவு நெடுநேரத்திற்குப்பிறகு, கோபுரத்தின் உச்சியிலேயிருந்த தளத்தில் உமார் உலவிக் கொண்டிருந்தபொழுது, அந்த முதிய பேராசிரியன் மைமன் தான் கொண்டு வந்த கருவிகளை நோக்கிச் செல்லாமல் இருக்க முடியவில்லை. அங்கே சென்று, உமார் கவனிக்காமல் இருக்கும்போதே, அந்தப் பூகோள உருண்டையின் நான்கு புறமும் இருந்த விளக்குகளை ஏற்றினான். அந்த உருண்டையின் மேல்பாதியில் வெளிச்சம் படும்படிக்கு அந்த விளக்குகளை ஒழுங்குபடுத்தினான்.

அப்பொழுது, உலாவிக் கொண்டிருந்த உமார் திரும்பிப் பார்த்தான். மெருகேறிய அந்த வெண்கல உருண்டையின் மீது அவன் கண்கள் பதிந்தன. அருகில் வந்து அதை நன்றாக உற்றுக் கவனித்தான். நட்சத்திரங்கள் இருக்கும் இடங்களின் எடுத்துக்காட்டுக்கள் அதில்வலை பின்னியது போல் சிறுசிறு உருவங்களில் வரையப்பட்டிருந்தன.

படிமம்:Page113 உமார் கயாம் (புதினம்).jpg

எத்தனையோ பேர் அந்த உருண்டையைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். பழைய கோடுகளையும், புதிதாக அதில் சேர்க்கப்பட்டிருந்த கோடுகளையும் உமார் கவனித்தான். அடிவானத்தை நோக்கி வலப்புறத்தையும், இடப்புறத்தையும் கவனித்துவிட்டு உமார், பூகோள உருண்டையை மெதுவாகச் சுற்றிக்கொண்டு வந்து, தன் தலைக்கு நேரே உள்ள வானத்தோடு பொருந்தும் நிலைமையில் அதை நிறுத்தினான். பொத்தானைத் தடவி, அழுத்தி அந்த நிலையில் அதை நிலைபெறும்படி செய்தான். பெரும் பேராசிரியர்கள் கண்டுபிடித்த கருவிகளும், பாக்தாது நகரத்துக் கணிதப் பேராசிரியன் ஒருவனும், அறிஞர் அலிசென்னாவின் ஆராய்ச்சிகளின் பலனும், அனைத்தும் உமாரின் கையிலே இப்பொழுது சேர்ந்திருக்கின்றன. இருப்பினும் அவன் அதனால் கர்வமடையவில்லை.

வேகமாக உள்ளே நுழைந்த டுன்டுஷ் “அடேயப்பா! மிருக ராஜ்யத்திலிருந்து வந்த முனிபுங்கவர் மாதிரியிருக்கிறாயே! உன்னை எங்கெங்கே தேடுவது? நெருப்புப்போல பறக்கும் நிசாம் அவர்களின் கோபத்தை நீ எப்படித் தவிர்க்கப் போகிறாய்? என்ன பதில் சொல்லப் போகிறாய்? சரி, சரி இப்பொழுது இங்கு வந்து சேர்ந்தாயே, அதுவே பெரிது!” என்றான்.

“நான் வெளியேறிச் சென்றிருந்தபோது, யாஸ்மி எதாவது செய்தி அல்லது அடையாளம் அனுப்பியிருந்தாளா?” என்று உமார் அவனை வினவினான்.

ஒற்றர்களின் தலைவனான அந்த டுன்டுஷ் விழிக் கோணத்தாலேயே சிரித்தபடி, “ஓ அந்தப் பெண்ணா, அவளைப்பற்றி நான் ஒன்றும் கேள்விப்படவில்லையே!” என்றான்.

“உன்னுடைய ஆட்களுக்கு ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டுமே!”

டுன்டுஷ் தலையை அசைத்துக் கொண்டே, ‘ஊஹாம்! ஒரு தகவலும் இல்லை. என்னுடைய ஆட்கள் எவ்வளவோ முயற்சிசெய்து தேடிப்பார்த்தார்கள் பயனில்லை. நீ ஏன் இதற்காக இத்தனை கவலைப்படுகின்றாய்? அவள் போய்விட்டால் இந்த உலகத்திலே பெண்களே இல்லாமலா போய்விட்டார்கள்? பாரசீகத்துப் பைங்கிளிகளும் சீனத்துச் சிங்காரிகளும் எத்தனையோ பெண்கள் அடிமைச் சந்தையிலே இருக்கின்றார்கள். எடுப்பும் அழகும் வாய்ந்த ஒருத்தியை எளிதில் தேர்ந்தெடுத்து உன்னுடையவள் ஆக்கிக் கொள்ளலாம். அதற்கு வேண்டிய ஏற்பாட்டை நான் கவனித்துக் கொள்கிறேன். ஆனால், நிசாம் இப்பொழுது கோபமாக இருக்கிறார். அவரைச் சமாதானப் படுத்துவதற்கு ஏதாவது இங்கு வேலை நடந்ததாக நீ காண்பித்துக் கொள்ள வேண்டும். அவர் எதிரிலே ஏதாவது ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும். என்ன செய்யப் போகிறாய்?” என்று டுன்டுஷ் உமாரைக் குடைந்தான். உமார் பேசாமலிருந்தான் அவனிடம் எந்த விதமான திட்டமோ அதைப்பற்றிய எண்ணமோ கிடையாது.

“அவர் உன் ஆதரவாளர் என்பதை மறந்துவிடாதே! அவர் மனம் சமாதானம் அடையத் தக்கசெயல் ஏதாவது நீ செய்திருக்க வேண்டும். உன்னால் ஏதாவது பயன் இருப்பதாக அவர் கருத வேண்டும். உன்னுடைய அறிவினால், அறிவின் திறமையால் செய்யக்கூடிய ஒரு திட்டத்தைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் உன்னைப் பயன் உள்ளவனென்று கருதுவார்.”

“சரி! ஒரு புதிய பஞ்சாங்கம் அமைக்கப் போவதாக அவரிடம் அறிவிப்போம்!” என்றான் உமார். “என்ன? என்ன சொல்கிறாய்?” என்று தன்னையே நம்பமுடியாத குரலில் அதிர்ந்து போய்க் கேட்டான் டுன்டுஷ்.

“இப்பொழுதுள்ள பஞ்சாங்கத்தின்படி நாம் பலமணி நேரங்களை இழந்து வருகிறோம். தவறுதல் எதுவும் இல்லாமல் காலத்தைக் கணக்கிடுவதற்குரிய ஒரு முறையை நாம் ஏற்படுத்துவோம் என்று நான் சொல்கிறேன்” என்று சொன்னான் உமார் கம்பீரமாக.

டுன்டுஷ் அச்சங்கலந்த உள்ளத்துடன் உமாரை நோக்கினான். ஏற்கெனவே, வேலைக்காரர்கள் தங்கள் தலைவரின் விசித்திரப் போக்கைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள். இப்பொழுது உமாரின் விசித்திரப் போக்கைத் தானே நேரில் காண நேர்ந்ததும் அவனுக்குப் பயமாயிருந்தது. அவனுடைய பேச்சு பைத்தியக்காரத்தனம்ாக அவனுக்குத் தோன்றியது. இருந்தாலும் சிரித்துக் கொண்டே, “நான் பேசுவதில் ஏதும் தவறிருந்தால், கருணைகாட்டி மன்னித்து விடு. அல்லாவினால் படைக்கப்பட்ட நிலவு நமக்கிருக்கிறது. ஒவ்வொரு முறையும் முதற் பிறையுடன் அது வெளித் தோன்றும்பொழுது நம்முடைய மாதத்தின் முதல் நாள் தொடங்குகிறது. நிலவைக் காட்டிலும் சிறந்த காலத்தை அளக்கும் கருவியை எந்த மனிதனாலும் செய்யமுடியாதல்லவா? என்று கேட்டான் டுன்டுஷ்.

“ஏன் செய்ய முடியாது? எகிப்தியர்கள் செய்திருக்கிறார்கள்! கிறிஸ்துவர்களும் கூடச் செய்திருக்கிறார்களே! இதோ நீ இங்கே ஊன்றி வைத்திருக்கிறாயே, மரத்துண், அது ஓடும் காலத்தை அளப்பதற்கு உதவாது. விளையாடும் சிறுவர்க்கு வேண்டுமானால் பயன்படும்! வந்து பார்” என்று ஆத்திரமாகக் கூறிவிட்டு, டுன்டுஷை இழுத்துக் கொண்டு போனான். வெயிலின் மூலமாக நேரத்தை அறிந்து கொள்வதற்காகப் பூசிமெழுகிய தரையின் நடுவிலே டுன்டுஷ் மிகுந்த முயற்சிகொண்டு ஓர் அழகிய மரக்கம்பத்தை நட்டு வைத்திருந்தான். வெயில் பட்டு விழும் கம்பத்தின் நிழல் மூலமாக நேரத்தையறியலாம் என்பது டுன்டுஷ் நினைப்பு. பழங்காலத்தில் மக்கள் அவ்வாறே நேரத்தை அளந்து வந்தார்கள். கோபத்துடன் அவனை இழுத்துச் சென்ற உமார், தன் தோளை அந்தக் கம்பத்தின் மீது மோதி, இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஒரே மூச்சில் பிடுங்கிக் கீழே சாய்த்தான். அந்தப் பாலைவனத்துப் பறவையின் உள்ளத்திலே கோபத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.

“இந்தக் கம்பம் காற்றிலே வளைந்து வெயிலில் சுருங்கி உருமாறிப் போய்விடுமே! நாம் என்ன விளையாட்டுப் பிள்ளைகளா? கண்டதையெல்லாம் நம்புவதற்கு? மத விரோதிகளான கிறிஸ்துவர்கள் வைத்திருப்பதைப் போன்ற தூண் இருக்க வேண்டும். ஐந்து ஆள் உயரமுள்ள பளிங்குக்கல் தூண்வேண்டும். அது கை நகத்தைப் போல் சுற்றிலும் சம வளைவுள்ளதாகவும், தேய்த்து மெருகு தீட்டப் பெற்றதாகவும், நீர் மட்டத்தோடு பொருந்தியதாகவும், செப்பினால் நேராகப் பொருத்தப்பட்டும் இருக்கவேண்டும். பருவ மாறுதல்களால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் அந்தப் பளிங்குத் தூண்! அதன் பக்கத்திலே ஒரு நீர்க்கடிகாரமும் இருக்கவேண்டும். கொத்தர்களையும் தச்சர்களையும் என்னிடம் அனுப்பு. எப்படிச் செய்யவேண்டுமென்று நான் அவர்களிடம் விளக்குகிறேன்” என்று கடகடவென்று பேசினான் உமார்.

“மதத் துரோகத்தின் சின்னத்தை நிலைநாட்டுவதுபோல் இது எனக்குத் தோற்றமளிக்கிறது. ஆகவே நிசாம் அவர்களின் ஒப்புதலை முதலில் பெற்றுக் கொள்ளவேண்டுமென்று நினைக்கிறேன்” என்று முணுமுணுத்த குரலில் டுன்டுஷ் கூறினான்.

“நிழலின் மூலமாக ஒரு மயிரிழையளவு காலத்தையும் கணக்கிடுவதற்குரிய ஒரே வழி அதுதான்!” “மயிரிழையளவு காலத்தையும்” டுன்டுவின் வாய் முணுமுணுத்தது. அவனால் இதை நம்ப முடியவில்லை. அருகில் நின்ற குவஜா மைமன் பக்கம் திரும்பி நோக்கினான். அவன் இதை நம்புகிறானா என்ற கேள்வி அவன் கண்களிலே தோன்றியது. இவன் கருத்தைப் புரிந்துகொண்ட அந்தக் கணிதப் பேராசிரியன், மைமன் “அவர் குழப்பத்துடன்தான் பேசுகிறாரோ என்னவோ, அது தெரியவில்லை. ஆனால், அவர் கணிதங்களைச் செய்வதிலே மூடரல்ல. அவர் விளக்குகிறபடியான கால அளவுத் தூண் நிச்சயமாகச் சரியானதாகவேயிருக்கும். சரியான முறையில் அவர் கூறுகிறபடி தூண் அமைக்கப்பட்டால் அறிஞர் அலி சென்னாவின் பூகோள உருண்டை எவ்வளவு சரியானதோ, அவ்வளவு சரியாக அந்தத் தூணும் இருக்கும். இதில் ஐயமில்லை!” என்றான். எந்த முடிவுக்கும் வரத் தோன்றாது அவ்விடத்தைவிட்டு அகன்றான் டுன்டுஷ்.

டுன்டுஷ் கூறிய இந்தக் குழப்பமான கதையை நிசாம், வெறுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். உமாரை வைத்துக்கொண்டு செய்வதற்கிருந்த அவருடைய திட்டங்களெல்லாம்கூட அவன் மறைவினால் தவிடு பொடியாகியிருந்தன. அந்தக் கோபத்துடன் குவாஜா மைமன் வேறு, உமாரின் இந்தப் புதிய பஞ்சாங்க முறையை ஒப்புக்கொள்கிறான் என்பதும் சிந்திக்கவேண்டிய விஷயமாக இருந்தது.

“புதுப் பஞ்சாங்கமா? அது நம் பழக்க வழக்கத்திற்கு மாறுபட்டதாயிற்றே! மதத் தலைவர்களின் உலோமா சபை எதிர்க்குமே! - கிறிஸ்துவர்களுக்கு எனத் தனியே ஒரு பஞ்சாங்கம் இருக்கிறது! காத்தாணியர்களுக்கு வட்டப் பஞ்சாங்கம் இருக்கிறது. பாரசீகர்களாகிய நமக்கு, இஸ்லாமிய ஆட்சிக்கு முன்னிருந்தே இந்தப் பஞ்சாங்க முறையிருந்து வருகிறது இதில் மாறுதல் செய்வதென்பது ஆபத்தாயிற்றே!”

நிசாமின் இந்த ஆராய்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த டுன்டுஷ் கண்களை முடிப் பெருமூச்சு விட்டபடியே “உமார் காலம் ஒன்றே ஒன்றுதான் என்று கூறுகிறான். நாட்டின் காவலராகிய தாங்களோ, நான்கு காலங்களைப் பற்றிக் கூறுகிறீர்கள் எனக்கு மூளை குழம்புகிறது.” "நான்கு காலங்கள் அல்ல; நான்கு பஞ்சாங்கங்கள்! சுல்தான் மாலிக்ஷா இவனைக் கொண்டு வரச் சொல்லி இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறாறே!”

“மாலிக்ஷா இவனைக் கொண்டுவா என்கிறார். இவன் காலத்தை அளக்கப் புதிய கருவியைக் கொண்டு வா என்கிறான். இந்தக் கருவியை வைத்துக் கொண்டு என்னதான் செய்வதோ தெரியவில்லை. விழித்தெழுந்ததிலிருந்து தூக்கம் வரும்வரை ஒவ்வொரு வினாடியையும் அளந்து கொண்டிருப்பான் போலிருக்கிறது” என்று டுன்டுஷ் சலித்துக் கொண்டான்.

“இல்லையில்லை இளவேனிற் காலத்திலும் முன்பனிக் காலத்திலும் இரவும் பகலும் சரி சமமாக இருக்கும் ஒரு நாளை அவன் கண்டுபிடிக்க முடியும். இந்தப் பெருந்துணின் துணையால் கதிரவனின் நிழல் மிக மிக நீண்டு விழும். குளிர் காலத்தின் ஒரு நாளில் நிழல் மிக மிகக் குறுகி விழும். கோடைகாலத்தின் ஒரு நாளையும் அவன் முடிவு செய்ய முடியும்.

இந்த ஆராய்ச்சிகளையும், விண்மீன்களின் இயக்கத்தைப் பற்றி அவன் செய்திருக்கும் ஆராய்ச்சிகளையும் பயன்படுத்தி அவன் புதுமையான ஒரு காலக் கணித முறையை ஏற்படுத்த முடியும். அவன் என்ன செய்வானென்பது எனக்குப் புரிகிறது” என்று நிசாம் ஓர் ஆராய்ச்சியே நடத்தினார்.

“அல்லல்லா! ஆண்டவன் அருள் பாலிப்பானாக!” என்றான் டுன்டுஷ்.

“ஆண்டவன் அருள் பாலித்தால், மாலிக் ஷா அவர்களின் ஆட்சியில் நாம் ஒரு புதிய பஞ்சாங்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.”

இது ஓர் அருமையான ஏற்பாடாக நிசாம் அவர்களின் மூளையில் தோன்றியது. மாலிக் ஷாவின் ஆட்சியில் அவருக்கே சொந்தமான ஒரு பஞ்சாங்க முறை அமுலுக்கு வந்தால், அவருக்குப் பெருமையாக இருக்கும். பெருமையின் பூரிப்பால் அவர் முதன் முதலாக அரசாங்க வானநூல் கலைஞராக அமர்த்திக் கொள்வார். இது சரியான ஏற்பாடு என்று தோன்றியது. “அவன் கேட்டபடியே காலம் அளக்கும் கருவியை அமைத்துக் கொடுப்போம். ஆனால், அவன் ஏன் அப்படி அலைந்து சுற்றிக் கொண்டிருந்தான்!” என்று நிசாம் கேட்டார்.

“அது ஆண்டவனுக்குத்தான் தெரியும் ! தங்கள் அடியவனுக்கு எதுவும் தெரியாது!” என்று உள்ளத்தை மறைக்கும் ஒரு புன்சிரிப்புடன் டுன்டுஷ் கூறினான்.

“அவன் மறுபடியும் சுற்றியலையாமல் பார்த்துக் கொள்வதை உன் வேலையாக வைத்துக் கொள். அவன் இங்கேயிருக்க வேண்டியது இன்றியமையாதது” என்று ஆணையிட்டு, அவனுக்கு விடைகொடுத்தார் நிசாம்.

தன் வீட்டுக்குச் சென்ற டுன்டுஷ் அங்கிருந்து ஓரிடத்திற்குச் சென்றான். அந்த இடம் ஒரு பழைய கிட்டங்கி. அது கடைத் தெருவை நோக்கிக் கொண்டிருந்தது. தான் மறைந்து கொள்வதற்காகவும், தன் வசம் கிடைத்த பிறர் பார்க்கக் கூடாத பொருள்களை மறைத்து வைப்பதற்காகவும் அந்தக் கிட்டங்கியை அவன் பயன்படுத்தி வந்தான். எகிப்திய ஊமையொருவன் அதைக் காவல் புரிவதற்காக வைக்கப்பட்டிருந்தான். அவன், தானே அந்தக் கிட்டங்கிக்கு உரிமையாளன்போல நடித்து வந்தான். அங்கே சென்ற டுன்டுஷ், ஒரு மூலையிலேயிருந்த பெட்டகத்தின் மூன்று பூட்டுக்களையும் திறந்து உள்ளேயிருந்து ஒரு பொருளையெடுத்தான். நீலக்கல் பதித்த ஒரு சோடி வெள்ளி வளையலே அது. அந்த வளையலை ஒரு கூனன் கொண்டு வந்து கொடுத்தாள். அவன், இறந்துபோன சுல்தானின் அன்புக்குரிய விகடனாக இருந்தவன், மேற்குத் திசையில் அலப்போ நகரை நோக்கிச் செல்லும் சாலை வழியில், கொண்டு செல்லப்பட்ட யாஸ்மி என்ற பெண், அன்பின் அடையாளமாக உமார் என்பவனுக்கு அனுப்பிய பொருளே இந்த வளையல் என்று அந்தக் கூனன் கூறினான். இந்த வளையல் மட்டும் உமார் கையில் கிடைத்தால், அலெப்போ நகர் நோக்கிப் பறந்து விடுவான். பிறகு நிசாம் அவர்கள் பெருங் கோப்த்திற்குத் தான் ஆளாக நேரிடும். இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்த டுன்டுஷ், அந்த வளையல்களைத் தன் மடிக்குள்ளே எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு ஓர் ஊற்றுக்கிணற்றை நோக்கி வந்தான்.

யாரும் கவனியாத சமயம் பார்த்து, அந்த வளையல்களை கிணற்றுக்குள்ளே போட்டு விட்டுப் பட்படவென்று நடந்து அந்த இடத்தை விட்டுச் சென்றான். ஆராய்ச்சிக் கூடத்தில் வேலைகள் சுறுசுறுப்பாய் நடப்பதைக் கண்டு நிசாம் அல்முல்க் மிக மகிழ்ச்சியடைந்தார். கோடைக்காலம் முடியும் தருவாயில் நீர்க்கடிகாரமும் பளிங்குக்கல் தூணும் அமைக்கப் பெற்றுவிட்டன. நீர்க் கடிகாரத்தில், மணிக்கு அறுபது முறை சுற்றுகிற ஒரு சிறு சக்கரம் அமைக்கப் பெற்றிருந்தது. மணிக்கு ஒரு முறை அசைகின்ற ஒரு பெரிய சக்கரமும் அதில் பொருத்தப் பெற்றிருந்தது. ஈட்டி முனை போன்ற ஒரு வெள்ளி முனை அளவு படுத்தப்பட்ட ஒரு கோட்டின் மீது ஒவ்வொரு மத்தியானத்திற்கு ஒரு முறை நகர்ந்து சென்றது. ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப அந்தக் கோட்டின் மீது நகர்ந்து கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் பார்த்த டுன்டுஷ் எவ்வளவு சரியாக எவ்வளவு போற்றத்தக்கதாக இருக்கிறது என்று வியப்படைந்தான். ஆனால், கணிதப் பேராசிரியன் மைமன், ஓர் ஆண்டின் முடிவில்தான் உண்மை நேரத்திற்கும், இதற்கும் உள்ள வேற்றுமை தெளிவுபடும் என்று விளக்கினான். கோட்டையில் நாளைக் கணக்கிடுவதற்கு, வேல்பிடித்தவீரன் ஒருவன் இருப்பதுபோல், இங்கேயும் ஒருவன் இல்லாததுதான் பெருங்குறையென்று டுன்டுஷ் கருதினான். அவனுடைய அறியாமைக்காகப் பேராசிரியன் மைமன் இரக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்தான்.

எல்லாம் ஆயத்தமான பிறகு, ஆராய்ச்சியாளர் நால்வர் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். தங்கள் வேலையைத் தொடங்குவதற்கு எல்லோரும் ஆயத்தமாகினர். ஏழெட்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகே இதன் முடிவு தெரியும் என்று மைமன் கருதினான். நான்கைந்து ஆண்டுகள் போதுமென்று உமார் கூறினான்.

“அடேயப்பா! நாலைந்து வாரத்தில் ஒரு பெரிய அரண்மனையே கட்டிவிடலாமே! இந்த வேலைக்கு வருடக் கணக்கில் ஆகுமா? என்ன பயன்?” என்றான் டுன்டுஷ்.

“உன்னுடைய அரண்மனை காலப்போக்கில் மண்ணோடு மண்ணாகப் போய்விடும். என்னுடைய பஞ்சாங்கம் என்றென்றும் பயன்படும். போபோ!” என்று உறுமினான் உமார்.

சூரியனுக்கு நேராய் பூமி இருக்கக்கூடிய முன்பனிக்காலத்தில் ஒரு நாள் தங்கள் வேலையைத் தொடங்க ஆறு வான நூல் ஆராய்ச்சியாளர்கள் ஆயத்தமாக இருப்பதாக ஒரு வாரம் முன்பாகவே உமார், நிசாம் அவர்களுக்குத் தெரிவித்தான். பேரரசர் சுல்தான் அவர்கள் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிடுவதற்கு வேண்டிய வேலைகளையும், அவர் எதிரில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் நாடகம் போல் நடத்திக் காட்ட நிசாம் ஏற்பாடு செய்தார்.