நளவெண்பா/கலிதொடர் காண்டம்/பாடல் 221 முதல் 270


நகரமாந்தரின் வேண்டுகோள் தொகு

221. ஆருயிரின் தாயே அறத்தின் பெருந்தவமே

பேரருளின் கண்ணே பெருமானே - பாரிடத்தை

யார்காக்கப் போவதுநீ யாங்கென்றார் தங்கண்ணின்

நீர்வார்த்துக் கால்கழுவா நின்று.

222. வேலை கரையிழந்தால் வேத நெறிபிறழ்ந்தால்

ஞாலம் முழுதும் நடுவிழந்தால் - சீலம்

ஒழிவரோ செம்மை யுரைதிறம்பாச் செய்கை

அழிவரோ செங்கோ லவர்.

223. வடியேறு கூரிலைவேன் மன்னாவோ வுன்றன்

அடியேங்கட் காதரவு தீரக் - கொடிநகரில்

இன்றிருந்து நாளை யெழுந்தருள்க வென்றுரைத்தார்

வென்றிருந்த தோளான்றாள் வீழ்ந்து.

224. மன்றலிளங் கோதை முகநோக்கி மாநகர்வாய்

நின்றுருகு வார்கண்ணி னீர்நோக்கி - இன்றிங்

கிருத்துமோ வென்றா னிளங்குதலை வாயாள்

வருத்தமே தன்மனத்தில் வைத்து.

புட்கரன் நளனை ஆதரிப்பார் கொல்லப்படுவார் என முரசறைவித்தது தொகு

225. வண்டாடுந் தார்நளனை மாநகரில் யாரேனும்

கொண்டாடி னார்தம்மைக் கொல்லென்று - தண்டா

முரசறைவா யாங்கென்றான் முன்னே முனிந்தாங்

கரசறியா வேந்த னழன்று.

வென்றிருந்த தோளான்றாள் வீழ்ந்து தொகு

224. மன்றலிளங் கோதை முகநோக்கி மாநகர்வாய்

நின்றுருகு வார்கண்ணி னீர்நோக்கி - இன்றிங்

கிருத்துமோ வென்றா னிளங்குதலை வாயாள்

வருத்தமே தன்மனத்தில் வைத்து.

புட்கரன் நளனை ஆதரிப்பார் கொல்லப்படுவார் என முரசறைவித்தது தொகு

225. வண்டாடுந் தார்நளனை மாநகரில் யாரேனும்

கொண்டாடி னார்தம்மைக் கொல்லென்று - தண்டா

முரசறைவா யாங்கென்றான் முன்னே முனிந்தாங்

கரசறியா வேந்த னழன்று.

226. அறையும் பறையரவங் கேட்டழிந்து நைந்து

பிறைநுதலாள் பேதைமையை நோக்கி - முறுவலியா

இந்நகர்க்கீ தென்பொருட்டா வந்த தெனவுரைத்தான்

மன்னகற்றுங் கூரிலைவேன் மன்.

நளன், தமயந்தியும் மக்களும் தொடர நகர் நீங்கியது தொகு

227. தன்வாயில் மென்மொழியே தாங்கினான் ஓங்குநகர்ப்

பொன்வாயில் பின்னாகப் போயினான் - முன்னாளில்

பூமகளைப் பாரினொடு புல்லினான் கன்மகனைக்

கோமகளைத் தேவியொடுங் கொண்டு.

நகரின் துயர நிலை தொகு

228. கொற்றவன்பாற் செல்வாரைக் கொல்வான் முரசறைந்து

வெற்றியொடு புட்கரனும் வீற்றிருப்ப - முற்றும்

இழவு படுமாபோ லில்லங்க டோ றும்

குழவிபா லுண்டிலவே கொண்டு.

நளனுடைய மக்களின் துயரநிலை தொகு

229. சந்தக் கழற்றா மரையுஞ் சதங்கையணி

பைந்தளிரு நோவப் பதைத்துருகி - எந்தாய்

வடந்தோய் களிற்றாய் வழியான தெல்லாம்

கடந்தோமோ வென்றார் கலுழ்ந்து.

230. தூயதன் மக்கள் துயர்நோக்கிச் சூழ்கின்ற

மாய விதியின் வலிநோக்கி - யாதும்

தெரியாது சித்திரம்போல் நின்றிட்டான் செம்மை

புரிவான் துயரால் புலர்ந்து.

நளன் தமயந்தியை மக்களுடன் குண்டினபுரம் ஏகக் கூறியது தொகு

231. காத லிருவரையும் கொண்டு கடுஞ்சுரம்போக்

கேத முடைத்திவரைக் கொண்டுநீ - மாதராய்

வீமன் திருநகர்க்கே மீளென்றான் விண்ணவர்முன்

தாமம் புனைந்தாளைத் தான்.

தமயந்தியின் மறுமொழி தொகு

232. குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தரையும்

பெற்றுக் கொளலாம் பெறலாமோ - கொற்றவனே

கோக்கா தலனைக் குலமகளுக் கென்றுரைத்தாள்

நோக்கான் மழைபொழியா நொந்து.

நளன் மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறியது தொகு

233. கைதவந்தான் நீக்கிக் கருத்திற் கறையகற்றிச்

செய்தவந்தா னெத்தனையுஞ் செய்தாலும் - மைதீர்

மகப்பெறா மானிடர்கள் வானவர்தம் மூர்க்குப்

புகப்பெறார் மாதராய் போந்து.

234. பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்

றென்னுடைய ரேனு முடையரோ - இன்னடிசில்

புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்

மக்களையிங் கில்லாத வர்.

235. சொன்ன கலையின் துறையனைத்துந் தோய்ந்தாலும்

என்ன பயனுடைத்தா மின்முகத்து - முன்னம்

குறுகுதலைக் கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வாய்ச்

சிறுகுதலை கேளாச் செவி.

தமயந்தி நளனைத் தன் தந்தை நகருக்கு வருமாறு அழைத்தது தொகு

236. போற்றரிய செல்வம் புனனாட் டொடும்போகத்

தோற்றமையும் யாவர்க்குந் தோற்றாதே - ஆற்றலாய்

எம்பதிக்கே போந்தருளு கென்றா ளெழிற்கமலச்

செம்பதிக்கே வீற்றிருந்த தேன்.

நளன் அதற்கு உடன்படாது உரைத்தது தொகு

237. சினக்கதிர்வேற் கண்மடவாய் செல்வர்பாற் சென்றீ

எனக்கென்னு மிம்மாற்றங் கண்டாய் - தனக்குரிய

தானந் துடைத்துத் தருமத்தை வேர்பறித்து

மானந் துடைப்பதோர் வாள்.

238. மன்னராய் மன்னர் தமையடைந்து வாழ்வெய்தி

இன்னமுதந் தேக்கி யிருப்பரேல் - சொன்ன

பெரும்பே டிகளலரேற் பித்தரே யன்றோ

வரும்பேடை மானே யவர்.

தமயந்தி மக்களையேனும் தன் தந்தையிடம் அனுப்ப வேண்டிக்கொண்டது தொகு

239. செங்கோலா யுன்றன் திருவுள்ளம் ஈதாயின்

எங்கோன் விதர்ப்ப னெழினகர்க்கே - நங்கோலக்

காதலரைப் போக்கி யருளென்றாள் காதலருக்

கேதிலரைப் போல வெடுத்து.

நளன் தன் மக்களை அனுப்ப உடன்பட்டது தொகு

240. பேதை பிரியப் பிரியாத பேரன்பின்

காதலரைக் கொண்டுபோய்க் காதலிதன் - தாதைக்குக்

காட்டுநீ யென்றான் கலங்காத வுள்ளத்தை

வாட்டுநீர் கண்ணிலே வைத்து.

மக்களின் பிரிவாற்றாத் துயரநிலை தொகு

241. தந்தை திருமுகத்தை நோக்கித் தமைப்பயந்தாள்

இந்து முகத்தை யெதிர்நோக்கி - எந்தம்மை

வேறாகப் போக்குதிரோ வென்றார் விழிவழியே

ஆறாகக் கண்ணீ ரழுது.

242. அஞ்சனந்தோய் கண்ணி லருவிநீ ராங்கவர்க்கு

மஞ்சனநீ ராக வழிந்தோட - நெஞ்சுருகி

வல்லிவிடா மெல்லிடையாண் மக்களைத்தன் மார்போடும்

புல்லிவிடா நின்றாள் புலர்ந்து.

மக்களை ஒரு மறையோன் அழைத்துச் சென்றது தொகு

243. இருவ ருயிரு மிருகையான் வாங்கி

ஒருவன்கொண் டேகுவா னொத்து - அருமறையோன்

கோமைந்த னோடிளைய கோதையைக்கொண் டேகினான்

வீமன் நகர்க்கே விரைந்து.

244. காத லவர்மேலே கண்ணோட விண்ணோடும்

ஊதை யெனநின் றுயிர்ப்போட - யாதும்

உரையாடா துள்ள மொடுங்கினான் வண்டு

விரையாடுந் தாரான் மெலிந்து.

நளதமயந்தியர் ஒரு பாலைநிலத்தைக் கண்ணுற்றது தொகு

245. சேலுற்ற வாவித் திருநாடு பின்னொழியக்

காலிற்போய்க் தேவியொடுங் கண்ணுற்றான் - ஞாலஞ்சேர்

கள்ளிவே கத்தரவுங் கண்மணிகள் தாம்பொடியாய்த்

துள்ளிவே கின்ற சுரம்.

கலி ஒரு பொற்புள்ளாய் அங்கு தோன்றியது தொகு

246. கன்னிறத்த சிந்தைக் கலியுமவன் முன்பாகப்

பொன்னிறத்த புள்வடிவாய்ப் போந்திருந்தான் - நன்னெறிக்கே

அஞ்சிப்பா ரீந்த அரசனையுந் தேவியையும்

வஞ்சிப்பான் வேண்டி வனத்து.

அப்பொற்புள்ளைத் தமயந்தி விரும்பியது தொகு

247. தேன்பிடிக்குந் தண்துழாய்ச் செங்கட் கருமுகிலை

மான்பிடிக்கச் சொன்ன மயிலேபோல் - தான்பிடிக்கப்

பொற்புள்ளைப் பற்றித்தா வென்றாள் புதுமழலைச்

சொற்கிள்ளை வாயாள் தொழுது.

நளன் அப்பறவைஅயிப் பிடிக்க முயலுதல் தொகு

248. பொற்புள் ளதனைப் பிடிப்பான் நளன்புகுதக்

கைக்குள்வரு மாபோற் கழன்றோடி எய்க்கும்

இளைக்குமா போல இருந்ததுகண் டன்றே

வளைக்குமா றெண்ணினான் மன்.

249. கொற்றக் கயற்கட் கொடியே யிருவோரும்

ஒற்றைத் துகிலா லுடைபுனைந்து - மற்றிந்த

பொற்றுகிலாற் புள்வளைக்கப் போதுவோ மென்றுரைத்தான்

பற்றகலா வுள்ளம் பரிந்து.

நளன் தன் ஆடையால் புள் வளைத்தது தொகு

250. எற்றித் திரைபொரநொந் தேறி யிளமணலில்

பற்றிப் பவழம் படர்நிழற்கீழ் - முத்தீன்று

வெள்வளைத்தா யோடுநீர் வேலைத் திருநாடன்

புள்வளைத்தா னாடையாற் போந்து.

அப்புள் வானில் அவ்வாடையுடன் எழுந்து கூறியது தொகு

251. கூந்த லிளங்குயிலுங் கோமானுங் கொண்டணைத்த

பூந்துகில்கொண் டந்தரத்தே போய்நின்று - வேந்தனே

நன்னாடு தோற்பித்தோண் நானேகா ணென்றதே

பொன்னாடு மாநிறத்த புள்.

நளதமயந்தியர் இருவரும் ஓராடையே கொண்டமை தொகு

252. காவிபோற் கண்ணிக்குங் கண்ணியந்தோட் காளைக்கும்

ஆவிபோ லாடையுமொன் றானதே - பூவிரியக்

கள்வேட்டு வண்டுழலுங் கானத் திடைக்கனகப்

புள்வேட்டை யாதரித்த போது.

தமயந்தி கலியைச் சபித்தது தொகு

253. அறம்பிழைத்தார் பொய்த்தா ரருள்சிதைத்தார் மானத்

திறம்பிழைத்தார் தெய்வ மிகழ்ந்தார் - புறங்கடையில்

சென்றார் புகுநரகஞ் சேர்வாய்கொ லென்றழியா

நின்றாள் விதியை நினைந்து.

தமயந்தி, தாம் அவ்விடம்விட்டு நீங்க விரும்பியது தொகு

254. வையந் துயருழப்ப மாயம் பலசூழ்ந்து

தெய்வங் கெடுத்தாற் செயலுண்டோ - மெய்வகையே

சேர்ந்தருளி நின்றதனிச் செங்கோலா யிங்கொழியப்

போந்தருளு கென்றாள் புலந்து.

சூரியாத்தமயம் தொகு

255. அந்த நெடுஞ்சுரத்தின் மீதேக வாங்கழலும்

வெந்தழலை யாற்றுவான் மேற்கடற்கே - எந்தை

குளிப்பான்போற் சென்றடைந்தான் கூரிருளால் பாரை

ஒளிப்பான்போற் பொற்றே ருடன்.

நளதமயந்தியர் இருளூடே கானிற் சென்றது தொகு

256. பானு நெடுந்தேர் படுகடலிற் பாய்ந்ததற்பின்

கான வடம்பின் கவட்டிலைகள் - மானின்

குளம்பேய்க்கும் நன்னாடன் கோதையொடுஞ் சென்றான்

இளம்பேய்க்குந் தோன்றா விருள்.

ஒரு பாழ்மண்டபம் அடைந்தது தொகு

257. எங்காம் புகலிடமென் றெண்ணி யிருள்வழிபோய்

வெங்கா னகந்திரியும் வேளைதனில் - அங்கேயோர்

பாழ்மண் டபங்கண்டான் பால்வெண் குடைநிழற்கீழ்

வாழ்மண் டபங்கண்டான் வந்து.

258. மூரி யிரவும்போய் முற்றிருளாய் மூண்டதால்

சாரு மிடமற்றுத் தானில்லை - சோர்கூந்தல்

மாதராய் நாமிந்த மண்டபத்தே கண்டுயிலப்

போதரா யென்றான் புலர்ந்து.

தமயந்தியின் துயரநிலை தொகு

259. வைய முடையான் மகரயாழ் கேட்டருளும்

தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் - இவ்விரவில்

கேட்டவா வென்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்

தோட்டவார் கோதையாள் சோர்ந்து.

நளன் தமயந்தியைத் தேற்றியது தொகு

260. பண்டை வினைப்பயனைப் பாரிடத்தி லார்கடப்பார்

கொண்டல் நிழலிற் குழைதடவும் - கெண்டை

வழியனீ ரென்றான் மனநடுங்கி வெய்துற்

றழியனீ யென்றா னரசு.

மீண்டும் தமயந்தி வருந்தியது தொகு

261. விரைமலர்ப்பூ மெல்லணையு மெய்காவல் பூண்ட

பரிசனமும் பள்ளி யறையும் - அரசேநான்

காணேனிங் கென்னாக் கலங்கினாள் கண்பனிப்பப்

பூணேர் முலையாள் புலர்ந்து.

நளன் தமயந்தியைக் கண்ணுறங்குமாறு கூறியது தொகு

262. தீய வனமுந் துயின்று திசைஎட்டுமேதுயின்று

பேயுந் துயின்றதாற் பேர்யாமம் - நீயுமினிக்

கண்மேற் துயில்கை கடனென்றான் கைகொடுத்து

மண்மேற் றிருமேனி வைத்து.

நளனது துயரம் தொகு

263. புன்கண்கூர் யாமத்துப் பூழிமேற் றான்படுத்துத்

தன்கண் துயில்வாளைத் தான்கண்டும் - என்கண்

பொடியாதா லுள்ளாவி போகாதால் நெஞ்சம்

வெடியாதா லென்றான் விழுந்து.

தமயந்தியின் துயரம் தொகு

264. முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி

இன்று துயில இறைவனுக்கே - என்றனது

கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்

மைபுகுந்த கண்ணீர் வர.

மீண்டும் நளனது துயரம் தொகு

265. வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலாத்

தாம மெனக்களித்த தையலாள் - யாமத்துப்

பாரே யணையாப் படைக்கண் துயின்றாள்மற்

றாரோ துயரடையா ராங்கு.

கலி நளன் மன உறுதியைக் கலைத்தது தொகு

266. பெய்ம்மலர்ப்பூங் கோதை பிரியப் பிரியாத

செம்மை யுடைமனத்தான் செங்கோலான் - பொய்ம்மை

விலக்கினா னெஞ்சத்தை வேறாக்கி நின்று

கலக்கினான் வஞ்சக் கலி.

267. வஞ்சக் கலிவலியான் மாகத் தராவளைக்கும்

செஞ்சுடரின் வந்த கருஞ்சுடர்போல் - விஞ்ச

மதித்ததேர்த் தானை வயவேந்த னெஞ்சத்

துதித்ததே வேறோ ருணர்வு.

268. காரிகைதன் வெந்துயரங் காணாமல் நீத்தந்தக்

கூரிருளிற் போவான் குறித்தெழுந்து - நேரே

இருவர்க்கு மோருயிர்போ லெய்தியதோ ராடை

அரிதற் கவனினைந்தா னாங்கு.

269. எண்ணிய எண்ணம் முடிப்ப இகல்வேந்தன்

கண்ணி யதையறிந்து காய்கலியும் - பண்ணினுக்குக்

கேளான தேமொழியை நீக்கக் கிளரொளிசேர்

வாளாய் மருங்கிருந்தான் வந்து.

நளன் ஆடையை அரிந்தது தொகு

270. ஒற்றைத் துகிலு முயிரு மிரண்டாக

முற்றுந்தன் னன்பை முதலோடும் - பற்றி

அரிந்தா னரிந்திட் டவள்நிலைமை நெஞ்சில்

தெரிந்தா னிருந்தான் திகைத்து.