நளவெண்பா/சுயம்வர காண்டம்/பாடல் 55 முதல் 110


புகழேந்திப்புலவர் பாடிய நளவெண்பா தொகு

சுயம்வர காண்டம் தொகு

(பாடல்கள் 55 முதல் 110 முடிய)
வீமன் தமயந்திக்குச் சுயம்வரம் ஏற்படுத்தியது

55. பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன்மேல்

நீரரும்பத் தன்பேதை நின்றாளைப் - பாராக்

குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்மை

மலர்வேய்ந்து கொள்ளும் மணம்.

56. மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம்

எங்கும் அறைகென் றியம்பினான் - பைங்கமுகின்

கூந்தன்மேற் கங்கைக் கொழுந்எதாடும் நன்னாடன்

வேந்தர்மேல் தூதோட விட்டு.

சுயம்வரத்திற்கு அரசர்களின் வருகை

57. மாமுத்த வெண்குடையான் மால்களிற்றான் வண்டிசைக்கும்

தாமத் தரிச்சந் திரன்சுவர்க்கி - நாமத்தால்

பாவேய்ந்த செந்தமிழா மென்னப் பரந்ததே

கோவேந்தர் செல்வக் குழாம்.

58. புள்ளுறையுஞ் சோலைகளும் பூங்கமல வாவிகளும்

உள்ளும் புறமு மினிதுறைந்தார் - தெள்ளரிக்கண்

பூமகளைப் பொன்னைப் பொருவேல் விதர்ப்பன்றன்

கோமகளைத் தம்மனத்தே கொண்டு.

நளன் அன்னம் திரும்பிவரக் கண்டது

59. வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம

மொழிமேற் செவிவைத்து மோகச் - சுழிமேல்தா

நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்

மஞ்சோட அன்னம் வர.

60. முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்

அகம்பார்க்கு மற்றாரைப் போல - மிகுங்காதல்

கேளா விருந்திட்டா னன்னத்தைக் கேளாரை

வாளால் விருந்திட்ட மன்.

நளனது வினாவும் அன்னத்தின் மறுமொழியும்

61. அன்னக் குலத்தி னரசே அழிகின்ற

என்னுயிரை மீள வெனக்களித்தாய் - முன்னுரைத்த

தேமொழிக்குத் தீதிலவே யென்றான் திருந்தாரை

ஏமொழிக்கும் வேலா னெடுத்து.

62. கொற்றவன்ற னேவலினாற் போயக் குலக்கொடிபால்

உற்றதும் ஆங்கவள்தான் உற்றதுவும் - முற்றும்

மொழிந்ததே அன்னம் மொழிகேட் டரசற்

கழிந்ததே யுள்ள அறிவு.

நளனது காதல் நோய் நிலை

63. கேட்ட செவிவழியே கேளா துணர்வோட

ஓட்டை மனத்தோ டுயிர்தாங்கி - மீட்டும்

குழியிற் படுகரிபோற் கோமான் கிடந்தான்

தழலிற் படுதளிர்போற் சாய்ந்து.

வீமராசன் விடுத்த தூதர் நளனிடம் வந்தது

64. கோதை சுயம்வரநாள் கொற்றவனுக் குற்றுரைப்ப

ஏதமிலாக் காட்சியர்வந் தெய்தினார் - போதில்

பெடையொடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன்

அடையாத வாயி லகம்.

65. காவலன்றன் தூதர் கடைக்கா வலர்க்கறிவித்

தேவலிற்போ யீதென் றியம்புதலும் - மாவில்

பொலிந்ததேர் பூட்டென்றான் பூவாளி பாய

மெலிந்ததோள் வேந்தன் விரைந்து.

நளன் தேரூர்ந்து குண்டினபுரம் சென்றது

66. கெட்ட சிறுமருங்குற் கீழ்மகளிர் நீள்வரம்பில்

இட்ட பசுங்குவளை யேரடித்த - கட்டி

கரையத்தே னூறுங் கடல்நாட னூர்க்கு

விரையத்தே ரூரென்றான் வேந்து.

67. சடைச்செந்நெல் பொன்விளைக்குந் தன்னாடு பின்னாகக்

கடல்தானை முன்னாகக் கண்டான் - அடற்கமைந்த

வல்லியரும் பொற்றாம வீமன் திருமகளாம்

நல்லுயிரும் வாழும் நகர்.

நாரதமுனிவர் வானுலகு சென்றது

68. நெற்றித் தனிக்கண் நெருப்பைக் குளிர்விக்கும்

கொற்றத் தனியாழ்க் குலமுனிவன் - உற்றடைந்தான்

தேனாடுந் தெய்வத் தருவுந் திருமணியும்

வானாடுங் காத்தான் மருங்கு.

இந்திரன் நாரதரை வினாவியது

69. வீரர் விறல்வேந்தர் விண்ணாடு சேர்கின்றார்

ஆரு மிலராலென் றையுற்று - நாரதனார்

நன்முகமே நோக்கினான் நாகஞ் சிறகரிந்த

மின்முகவேற் கையான் விரைந்து.

நாரதர், தமயந்தி சுயம்வரத்தையும் அவளது எழிற் சிறப்பையும் கூறியது

70. வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்த

தாமம் புனைவான் சயம்வரத்து - மாமன்னர்

போயினா ரென்றான் புரந்தரற்குப் பொய்யாத

வாயினான் மாதவத்தோர் மன்.

71. அழகு சுமந்திள்த்த ஆகத்தாள் வண்டு

பழகு கருங்கூந்தற் பாவை - மழகளிற்று

வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே

காமன் திருவுக்கோர் காப்பு.

அச்சுயம்வரத்திற்கு இந்திரன் முதலிய தேவர்கள் புறப்பட்டது

72. மால்வரையை வச்சிரத்தா லீர்ந்தானும் வானவரும்

கோல்வளைதன் மாலை குறித்தெழுந்தார் - சால்புடைய

விண்ணாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு

மண்ணாடு நோக்கி மகிழ்ந்து.

நளனைத் தேவர்கள் வழியில் கண்டது

73. பைந்தெரியல் வேல்வேந்தன் பாவைபாற் போயினதன்

சிந்தை கெடுத்தனைத் தேடுவான் - முந்தி

வருவான்போல் தேர்மேல் வருவானைக் கண்டார்

பெருவானிற் றேவர் பெரிது.

இந்திரன் நளனைத் தமயந்திபால் தூதுசெல்ல வேண்டியது

74. காவற் குடைவேந்தைக் கண்ணுற்ற விண்ணவர்கோன்

ஏவற் றொழிலுக் கிசையென்றான் - ஏவற்கு

மன்னவனும் நேர்ந்தான் மனத்தினான் மற்றதனை

இன்னதென றோரா திசைந்து.

75. செங்கண் மதயானைத் தேர்வேந்தே தேமாலை

எங்களிலே சூட்ட இயல்வீமன் - மங்கைபால்

தூதாக வென்றானத் தோகையைத்தன் ஆகத்தால்

கோதாக வென்றானக் கோ.

76. தேவர் பணிதலைமேற் செல்லுந் திரிந்தொருகால்

மேவுமிளங் கன்னிபால் மீண்டேகும் - பாவில்

குழல்போல நின்றுழலுங் கொள்கைத்தே பூவின்

நிழல்போலுந் தண்குடையான் நெஞ்சு.

77. ஆவ துரைத்தா யதுவே தலைநின்றேன்

தேவர்கோ னேயத் திருநகரிற் - காவல்

கடக்குமா றென்னென்றான் காமநீ ராழி

அடக்குமா றுள்ளத் தவன்.

78. வார்வெஞ் சிலையொழிய வச்சிரத்தால் மால்வரையைப்

போர்வெஞ் சிறகறிந்த பொற்றோளான் - யாருமுனைக்

காணார்போய் மற்றவளைக் காணென்றான் கார்வண்டின்

பாணாறுந் தாரானைப் பார்த்து.

நளன் தூது சென்றதும், தமயந்தியைக் கண்டதும்

79. இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்

திசைமுகந்தா லன்ன தெருவும் - வசையிறந்த

பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே போர்விதர்ப்ப

நன்னாடற் கோமாந்தன் நாடு.

80. தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்

பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு

மதுநோக்குந் தாரானும் வாள்நுதலுந் தம்மில்

பொதுநோக் கெதிர்நோக்கும் போது.

நளனைக் கண்ட தமயந்தி நிலை

81. நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று

தீண்டு மளவில் திறந்ததே - பூண்டதோர்

அற்பின்தாழ் கூந்தலாள் வேட்கை யகத்தடக்கிக்

கற்பின்தாழ் வீழ்ந்த கதவு.

82. உய்ஞ்சு கரையேற வொட்டுங்கொ லொண்டொடியாள்

நெஞ்சு தடவும் நெடுங்கண்கள் - விஞ்சவே

நீண்டதோ வங்ஙனே யிங்ஙனே நீள்மலராள்

ஆண்டதோள் மன்ன னழகு.

83. மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்

பொன்னாணும் புக்கொளிப்பப் புல்லுவனென் - றுன்னா

எடுத்தபே ரன்பை யிடையே புகுந்து

தடுத்ததே நாணாந் தறி.

தமயந்தி நளனை யாவனென வினாவியது

84. காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய்

யாவனோ விஞ்சைக் கிறைவனோ - தேவனோ

உள்ளவா சொல்லென்றா ளூசற் குழைமீது

வெள்ளவாள் நீர்சோர விட்டு.

நளனது மறுமொழி

85. தீராத காமத் தழலைத்தன் செம்மையெனும்

நீரா லவித்துக் கொடுநின்று - வாராத

பொன்னாட ரேவலுடன் போந்தவா சொல்லித்தன்

நன்னாடுஞ் சொன்னான் நளன்.

86. என்னுரையை யாதென் றிகழா திமையவர்வாழ்

பொன்னுலகங் காக்கும் புரவலனை - மென்மாலை

சூட்டுவா யென்றான் தொடையில் தேன்தும்பிக்கே

ஊட்டுவா னெல்லா முரைத்து.

தமயந்தி கூறிய உறுதிமொழி

87. இயமரநின் றார்ப்ப இனவளைநின் றேங்க

வயமருதோள் மன்னா வகுத்த - சுயம்வரந்தான்

நின்பொருட்டா லென்று நினைகென்றா நீள்குடையான்

தன்பொருட்டால் நைவாள் தளர்ந்து.

88. போதரிக்கண் மாதராள் பொன்மாலை சூட்டத்தான்

ஆதரித்தார் தம்மோ டவையகத்தே - சோதிச்

செழுந்தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும்

எழுந்தருள்க வென்றா ளெடுத்து.

89. வானவர்கோ னேவல் வழிச்சென்று வாணுதலைத்

தானணுகி மீண்டபடி சாற்றவே - தேன்முரலும்

வண்டார் நளன்போந்து வச்சிராயு தற்றொழுதான்

கண்டா ருவப்பக் கலந்து.

நளனுக்கு அத்தேவர்கள் அளித்த வரங்கள்

90. விண்ணவர்தம் ஏவலுடன் வீமன் திருமகள்பால்

நண்ணு புகழ்நளனும் நன்குரைத்த - பெண்ணங்கின்

வன்மொழியுந் தேவர் மனமகிழத் தான்மொழிந்த

மென்மொழியுஞ் சென்றுரைத்தான் மீண்டு.

91. அங்கி யமுதம்நீ ரம்பூ அணியாடை

எங்குநீ வேண்டினைமற் றவ்விடத்தே - சங்கையறப்

பெற்றா யெனவருண ஆகலண்டன் தருமன்

மற்றோனு மீந்தார் வரம்.

தமயந்தியின் துயர நிலை

92. தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த

மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் - யாதும்

அயிர்த்தா ளுயிர்த்தா ளணிவதன மெல்லாம்

வியர்த்தா ளுரைமறந்தாள் வீழ்ந்து.

93. உள்ளம்போய் நாண்போ யுரைபோய் வரிநெடுங்கண்

வெள்ளம்போய் வேகின்ற மென்றளிர்போல் - பிள்ளைமீன்

புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி

உள்ளரிக்கச் சோர்ந்தா ளுயிர்.

94. பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்

ஆவியார் போனாலு மவ்வழியே - பாவியேன்

ஆசைபோ காதென் றழிந்தா ளணியாழின்

ஓசைபோற் சொல்லா ளுயிர்த்து.

சூரியன் அத்தமித்தல்

95. வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பப்

பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப் - பையவே

செவ்வாய அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்

வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு.

96. மாயிரு ஞாலத் துயிர்காண வானரங்கில்

பாயிரு ளென்னும் படாம்வாங்கிச் - சேய்நின்

றறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன்

மறைந்தான் குடபால் வரை.

மாலைப்பொழுதின் வரவு

97. மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு

வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்

மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே

புன்மாலை யந்திப் பொழுது.

98. புற்கென்றா ரந்தி புனைமலர்க்கண் நீரரும்ப

நிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் - முற்கொண்

டடைகின்ற வேந்தர்க்கு மாண்டஞ்சி னோர்க்கும்

இடைநின்ற காலம்போ லின்று.

பிறையின் தோற்றம்

99. பைந்தொடியா ளாவி பருகுவான் நிற்கின்ற

அந்தி முறுவலித்த தாமென்ன - வந்ததால்

மையார்வேற் கண்ணாள் வனமுலைமே லாரழலைப்

பெய்வா னமைந்த பிறை.

100. கூட்டுமைபோற் சிறந்த கூரிருளைக் கூன்கோட்டால்

கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள் - ஈட்டுமணிப்

பூணிலா மென்முலைமேற் போதச் சொரிந்ததே

நீணிலா வென்னும் நெருப்பு.

தமயந்தியின் துயர நிலை

101. அன்னங்காள் நீங்களுமவ் வாதித்தன் தானும்போய்

மன்னும் படியகலா வல்லிரவின் - மின்னும்

மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள்

பிழைத்தால்வந் தேனென்னும் பேர்.

102. செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்

கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுது

மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ

தேன்பொதிந்த வாயால் தெரிந்து.

103. கானுந் தடங்காவுங் காமன் படைவீடு

வானுந்தேர் வீதி மறிகடலும் - மீனக்

கொடியாடை வையமெலாங் கோதண்ட சாலை

பொடியாடிக் கொன்றதெல்லாம் பொய்.

104. கொள்ளைபோ கின்ற துயிரென்னும் கோளரவின்

முள்ளெயிறோ மூரி நிலாவென்னும் - உள்ளம்

கொடிதிரா வென்னுங் குழையுந் தழல்போல்

நெடிதிரா வாய்புலர நின்று.

105. வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ

கொங்கை யனலிற் கொளுந்தியோ - திங்கள்

விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ

எரிகின்ற தென்னோ இரா.

106. ஊழி பலவோ ரிரவாயிற் றோவென்னும்

கோழி குரலடைத்த தோவென்னும் - ஆழி

துயிலாதோ வென்னுஞ் சுடர்மதியங் கான்ற

வெயிலா லுடலுருகா வீழ்ந்து.

107. ஆடி வரிவண் டருகே பறக்கவே

வாடி மெலிவாள் வனமுலைமேல் - ஓடிப்

பொறையாகச் சோர்வாள் பொறுக்குமோ மோகத்

துறைவா யடங்காத் துயர்.

108. ஈர மதியே! இளநிலவே யிங்ஙமேன

சோர்குழலின் மீதே சொரிவதெவன் - மாரன்

பொரவளித்தான் கண்ணி யுனக்குப் புலரா

இரவளித்தா னல்லனோ இன்று.

109. தாங்கு நிலவின் தழல்போய்த் தலைக்கொள்ளத்

தேங்குழல்சேர் வண்டு சிறைவெதும்ப - ஓங்குயிர்ப்பின்

தாமங் கரியாத் தனியே தளர்கின்றாள்

யாமங் கரியாக இன்று.

110. மையிட்ட கண்ணருவி வார வளைசோரக்

கையிற் கபோலத் தலம்வைத்து - மெய்வருந்தி

தேனிருந்த பூங்கணையே தீயாகத் தேமொழியாள்

தானிருந்து செய்வாள் தவம்.