நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/35. கீழ்மை

35. தாழ்ச்சி நீக்குக
(கீழ்மை)

தட்டு ஒன்று தேடி அரிசியும் பொட்டும் வைத்து ஊட்டினாலும் கோழி குப்பையைத் தேடிச் சீக்கி அதைக் கிளறிப் புழுவும் பூச்சியும் தின் பதிலேயே நாட்டம் செலுத்தும், நாயைக் குளிப்பாட்டி நடுவிட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு புழைக் கடைக்குத்தான் போகும். பிச்சைக்காரி அவளை வீட்டுக்கு அழைத்துத் தட்டு நிறைய சோறு போட்டாலும் அவள் மாடத்தில் அங்கங்கே ஒர் உருண்டை வைத்துவிட்டு “அம்மா தாயே” என்று கேட்டு மறுபடியும் ஒன்று சேர்த்துத்தான் சாப்பிடுவாள். இப்படி ஒரு பழைய கதை. எவ்வளவு நல்ல நூல்களைத் தந்து ‘படி’ என்று கொடுத்தாலும் கீழ்மக்கள் அவற்றைப் புரட்டிப் பார்க்கமாட்டார்கள் குப்பைக் கூளங்களையே அற்ப காசுக்கு வாங்கி மனத்தை அழுக்காக்கிக் கொள்ளுவர்; மாதம் ஒரு நாவல் இவற்றையே விரும்புவர். கொலை, கொள்ளை விறுவிறுப்பாகப் படித்துச் சுறுசுறுப்பாகப் படிப்பதில் ஆர்வம் காட்டுவர். ‘ஆபாசம்’ அவர்களை இழுத்துப் பிடிக்கிறது. இஃது இன்று இளைஞர் மனம் கெடுவதற்குத் துணை செய்கின்றது. மட்டமான உணர்வுகளைத் துண்டும் காதற் கதைகளைப் படித்துக் காம உணர்வுக்குத் தீனி போடுவர். இன்று சிந்தனையைத் தூண்டும் எழுத்துத் தேவைப்படுகிறது; அந்தப் பக்கம் இவர்கள் திரும்புவது இல்லை.

அருமையான நூல்; அதை விவரித்து அதில் உள்ள விழுமிய கருத்துகளை எடுத்து உரைக்கக் கற்றவர் அழைத்தால் மற்று அதனைச் செவி மடுக்க அஞ்சுகிறான். கருத்துள்ள செய்திகளை எடுத்துச் சொன்னால், “அவை தேவை இல்லை” என்கிறான். “தூக்கம் வருகிறது என்னை விட்டு விடுங்கள்” என்று கூறித் தப்பித்துக் கொள்கிறான். அதிகமாகப் பேசினால் அவன் வம்புக்கு இழுத்து வாதங்கள் புரிகிறான்; “மேலோர் கூறிய கருத்துக்கள் எல்லாம் தீயவை” என்று கூறுகிறான். “மக்களை அடிமைப்படுத்த மடையர்கள் எழுதியவை” என்று வாதாடுகிறான். “வேலை வெட்டி இல்லாத புலவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதியவை எல்லாம் இன்று நூல்கள் என்று படிக்கிறார்கள். இவர்கள் எழுத்து மகிழ்ச்சியை மட்டுப்படுத்துவன; இன்பமாக வாழவழி கூறாதவை” என்று வாதிடுகிறான். “காம சாத்திரம் தந்தால் அதைத் தான் படிக்கத் தயார்” என்று கூறுகிறான். தனக்கு அத்தகைய நூல்களே பிடிக்கும் என்று கூறுகிறான். வாயைத் திறந்தாலே உப்பங்கழி நாற்றம் வீசுகிறது. என் செய்வது?

சில சமயம் எதிர்பாராத வகையில் எங்கிருந்தோ செல்வம் வந்து குவிந்துவிடுகிறது. அதனால் வாழ்க்கைத் தரம் மாறிவிடுகிறது. நேற்றுவரை கலகலப்பாகப் பழகியவன் இன்று சலசலப்புக் காட்டுகிறான் பேசுவதற்கு நேரம் இல்லை ‘நேரம் இல்லை’ என்று சொல்லிவிட்டுப் போகிறான்; மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், “புதுப் பணக்காரன் அப்படித்தான் இருப்பான்” என்று விமரிசிப்பதைப் பார்க்கிறோம். பணக்காரர்களில் இருவகை உண்டு என்று தெரிகிறது. பழையவர் பண்புடையவராக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் வெறும் தோற்றம்தான். பணத்துக்கும் குணத்துக்கும் தொடர்பே இருப்பது இல்லை பண்பட்டவர் செல்வம் பெற்றாலும் தம் இயல்பில் மாறுவது இல்லை; பழகியவரிடம் அன்பும் நண்பும் பாராட்டுவர்; பண்படாத கீழ்மையோர் ஒசி டிக்குச் சுற்றிய நாளில் காசில்லாமல் இருந்தபோது எப்படிப் பிறர் கையேந்தி வாழ்ந்தார்களோ அப்படித்தான் செல்வம் வந்தபோதும் பிறரைச் சுரண்டியே வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து எந்த நன்மையும் வெளிப்படுவது இல்லை.

பொன் தட்டிலே சோறு போட்டு ஊட்டினாலும் சொரிநாய் அஃது ஊர் சுற்றி எச்சில் இலைக்குத் தாவிச் செல்லும். எங்காவது விருந்து உண்டு அவர்கள் போடுகின்ற எச்சில் இலைக்குப்பை அங்கே மிச்சிலை நோக்கி வெறிபிடித்துச் செல்லும். அதுபோல ஒரு சிலருக்கு நல்வாழ்வு அமைத்துக் கொடுத்தாலும் அவர்கள் அந்தப் பழைய கும்பலை விட்டு வரமாட்டார்கள். சூதாடும் களம், மாது ஆடும் களம் இப்படிக் களம் காணும் வீரராகவே செயல்படுவர்; உளங்காணும் முறையில் உவகை பெறவே விழைவர்.

அடுக்கிய கோடி தன்னை வந்து மிடுக்கினாலும் தகைமை சான்றவர் அதனை வெளிக்குக் காட்டார். அவர்கள் தம் செல்வச் செருக்கால் தலைக் கிறுக்கு அடைவதில்லை.

ஒன்றும் இல்லாதவன் முன்னையை விடக் கொஞ்சம் கூடுதலாகச் சம்பாதித்துவிட்டால் அவனுக்குத் தலை கால் தெரிவது இல்லை. வீட்டில் மனைவியை அதிகாரம் செய்வான்; வெளியே அளவுக்கு மீறிய ஆடம்பரம் தலைகாட்டும்; அவனைப் பிடிக்கவே முடியாது.

ஒருவன் காலுக்குச் செருப்பு வாங்கச் செல்கிறான்; அவன் நடக்காத கடை இல்லை, பார்க்காத செருப்பு இல்லை; ஒன்று கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. எவ்வளவு விலை உயர்ந்த செருப்பாக இருந்தாலும் என்ன? அதைக் காலில்தான் போட்டுக் கொள்ளப்போகிறான். கண்ட இடத்தில் நடக்கப் போகிறான். தேவைக்கு மேல் ஆடம்பரம் விரும்புபவர் பலர் உள்ளனர். இன்று அது நாகரிகம் ஆகிவிட்டது. பணம் கொஞ்சம் வந்துவிட்டால் இப்படி வீண் ஆடம்பரத்துக்குச் செலவு செய்கின்றனர். இவர்கள் மேன்மை என்று இவற்றைக் கருதுகின்றனர்; இது தாழ்மை என்றே கருதப்படும்.

ஒரு சிலர் ‘சிடு சிடு’ என்று சீற்றம் காட்டுவர்; அவர்களுக்கு அமைதியாக நடந்து கொள்ளவே தெரியாது. எரிச்சல், எதிலும் உளைச்சல்; அதுமட்டும் அன்று; கருணை காட்டமாட்டார்கள். பிறர் துன்பப்பட்டால் அதைக் கண்டு மகிழ்வர். எடுத்ததற்கு எல்லாம் சினம் கொள்வர்; இவர்கள் கீழ்மைக் குணம் படைத்தவர் ஆவர்.

பழமை பாராட்டும் பண்பு சான்றோர்பால் காணப்படும்; சிறுவயதிலிருந்து தெரியும். நல்ல பழக்கம்: அதனால் சில நன்மைகள் தேடி இவரிடம் வந்தால் தம்மாலான உதவிகளைச் செய்வர். இவர்கள் சால்பு உடையவர்; கீழ்மக்கள் எரிந்து விழுவர்! உன்னை யார் இங்கு வரச் சொன்னது?” என்று கேட்பர். பழமையைக் கிளறுவதை அவர்கள் ‘உளறுவதை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. மேன்மக்கள் பழமை பாராட்டுவர். கீழ்மக்கள் அதனை மறப்பர்; நண்பரைத் துறப்பர்.

புல்லைக் கொண்டு வந்து போட்டுக் கொழுக்க வளர்த்தாலும் எருது எருதுதான். அதனைத் தேரில் பூட்ட இயலாது; ஏர் உழத்தான் பயன்படும். கீழ் மகனை எவ்வளவு தூரம் மேலுக்குக் கொண்டு வந்தாலும் அவன் அந்த இடத்துக்குப் பயன்படமாட்டான். உயர்வுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளமாட்டான். யார்யாரை எங்கு வைக்கவேண்டுமோ அங்கு வைத்தால்தான் அவர்கள் செயல்படுவர்.