நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார் தொகு

உரை: களத்தூர் வேதகிரி முதலியார் தொகு

அறத்துப்பால்: துறவறவியல் தொகு

நான்காம் அதிகாரம் அறன் வலியுறுத்தல்

[அஃதாவது, தருமத்தின் பலனை அறிவித்தலாம்]

பாடல்: 31 (அகத்தாரே) தொகு

அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்| அகத்தாரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கிப்

புகத்தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி| புகத் தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி

மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்| மிகத் தாம் வருந்தி யிருப்பரே மேலைத்

தவத்தாற் றவஞ்செய்யா தார். (01)| தவத்தால் தவம் செய்யாதார்.

பதவுரை
மேலை= முற்பிறப்பில்;
தவத்தால்= தவங்காரணமாக;
தவம்= நற்றவம்;
செய்யாதார்= செய்யாதவர்கள்;
அகத்தாரே= இல்வாழ்க்கையாரே;
வாழ்வார் என்று= வாழ்பவர்கள் என்று;
அண்ணாந்து= தலைநிமிர்ந்து;
நோக்கி= பார்த்து;
தாம்புக= தாம் உள்ளே நுழைய;
பெறார்= பெறாதவர்களாய்;
புறங்கடை= தலைவாயிலை;
பற்றி= பிடித்துநின்று;
மிக= மிகவும்;
தாம்= தாங்கள்;
வருந்தி= வருத்தப்பட்டு;
இருப்பர்= இருப்பார்கள்.
கருத்துரை
முற்பிறப்பில் தவஞ்செய்யாதார் இப்பிறப்பில் இல்வாழ்க்கையாரே வாழ்பவர்கள் என்று தலைவாயிலைப்பற்றி உள்ளே நுழையாதவர்களாய் வருத்தப்பட்டிருப்பார்கள்.
விசேடவுரை
தவஞ்செய்யாதார்- எழுவாய், இருப்பர்-பயனிலை, அண்ணார்த்தல் என்னுந் தொழிற்பெயர் வினையாங்கால் அண்ணாருகிறது என்றாகும். அண்ணார்ந்து இதில் ஒற்றுக்கெட்டது.
தொல்காப்பியம்- பெயரியல்- 30ஆம் சூத்திரம்.
“தாமென் கிளவி பன்மைக் குரித்தே.”


பாடல்: 32 (ஆவாதா) தொகு

ஆவாநா மாக்க நசைஇ யறமறந்து | ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து
போவாநா மென்னாப் புலைநெஞ்சே - யோவாது | போவாம் நாம் என்னாப் புலை நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி யெனினுநின் வாழ்நாள்கள் | நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ் நாள்கள்
சென்றன செய்வ துரை. (02) |சென்றன செய்வது உரை.
பதவுரை
ஆவாம்= வாழக்கடவோம்;
நாம்= யாமென்று;
ஆக்கம்= செல்வத்தை;
நசைஇ= இச்சித்து;
அறம்= தருமத்தை;
மறந்து= மறந்துவிட்டு;
போவாம்= இறந்துபோவோம்;
நாம் என்னா= நாம் என்று எண்ணாத;
புலை- இழிவான;
நெஞ்சே= மனமே;
ஓவாது= இடைவிடாது;
நின்று= நிலைபெற்று;
உஞற்றி= முயற்சி செய்து;
வாழ்தி எனினும்= வாழ்வாயானாலும்;
நின்= உன்னுடைய;
வாழ்நாள்கள்= ஆயுள்கள்;
சென்றன= போயின;
செய்வது= (இனி நீ) செய்வதென்ன?
உரை= சொல்.
கருத்துரை
மனமே! பல முயற்சிகள் செய்து வாழ்வாயானாலும், உன்னுடைய ஆயுள்கள் போயின; இனி நீ செய்வதென்ன சொல்.
விசேடவுரை
நீ- எழுவாய், உரை- பயனிலை, செய்வது- செயப்படுபொருள்.

பாடல்: 33 (வினைப்பயன்) தொகு

வினைப்பயன் வந்தக்கால் வெய்ய வுயிரா () வினைப் பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தி னழியுமாம் பேதை - நினைத்ததனைத் ()மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்து அதனைத்
தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத் () தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து
தெல்லை யிகந்தொருவு வார். (03) எல்லை இகந்து ஒருவுவார்.
பதவுரை
பேதை= அறிவில்லாதவன்;
வினைப் பயன்= தீவினைப் பயன்;
வந்தக்கால்= வந்தால்;
வெய்ய= கொடிதாக;
உயிரா= பெருமூச்செறிந்து;
மனத்தின்= மனத்தினால் நினைந்து;
அழியும்= அழிவான்;
அதனை= அத்தீவினைப் பலனை;
நினைத்து= ஆராய்ந்து;
தொல்லையது என்று= முற்பிறப்பிற் செய்தது என்று;
உணர்வாரே= அறிபவர்களே;
தடுமாற்றத்து= பிறவித்துன்பத்தின்;
எல்லை= பிரமாணத்தை;
இகந்து ஒருவுவார்= கடந்து போவார்.
கருத்துரை
அறிவில்லாதவன் தீவினை வந்தால் மனத்தில் நினைத்து அழிவான். அத்தீவினை முன்வினை என்று அறிந்தவர்களே பிறவித் துன்பத்து அளவைக் கடப்பார்கள்.
விசேடவுரை
பேதை- எழுவாய், அழியும்- பயனிலை, உணர்வார்- எழுவாய், ஒருவுவார்- பயனிலை.
யாப்பருங்கலம்
“வெண்பா முதலா நால்வகைப் பாவு
மெஞ்சா நாற்பால் வருணர்க் குரிய.”
-இவ்விதியால் வெண்பா பிராமணசாதியாம். தொன்னூல் விளக்கத்தினுங் காண்க.

பாடல்: 34 (அரும்பெறல்) தொகு

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தாற் () அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனு மாற்றவே கொள்க - கரும்பூர்ந்த ()பெரும் பயனும் ஆற்றவே கொள்க - கரும்பு ஊர்ந்த
சாலவும் பின்னுதவி மற்றதன் () சாறு போல் சாலவும் பின் உதவி மற்று அதன்
கோதுபோற் போகு முடம்பு. (04) கோது போல் போகும் உடம்பு.
பதவுரை


பெறல்= பெறுதற்கு;
அரும்= அரிய;
யாக்கையை= உடலை;
பெற்ற= அடைந்த;
பயத்தால்= பலனால்;
பெரும்= பெரிய;
பயனும்= கருமப்பலனையும்;
ஆற்றவே= மிகவும்;
கொள்க= கொள்ளக்கடவீர்கள்;
கரும்பு= கரும்பிலிருந்து;
ஊர்ந்த= (ஆலையாற்) பரவிய;
சாறுபோல்= சாற்றைப் போல;
சாலவும் = மிகவும்;
பின் உதவி = (அத்தருமப் பலன்) பிற்காலத்து உதவியாம்;
அதன் = அக்கரும்பின்;
கோதுபோல் = சக்கை போல;
உடம்பு= உடல்;
போகும் = அழிந்து போகும்.


கருத்துரை
பெறுதற்கரிய உடல் அடைந்த பலனால் தருமப்பலனைக் கொள்ளக்கடவீர்கள். அப்பலன் கருப்பஞ்சாற்றைப் போலாம்; உடல் அதன் சக்கை போலாம்.
விசேடவுரை
(நீங்கள்)- தோன்றா எழுவாய், கொள்க- பயனிலை, பயன்-செயப்படுபொருள். மற்று-அசை. எவ்வகைப் பிறப்பிலு மக்கட் பிறப்பு மேலாகையால், ‘அரும்பெறல் யாக்கை’ என்றார்.

பாடல்: 35 (கரும்பாட்டிக்) தொகு

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் () கரும்பு ஆட்டி கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேங்காற் றுயராண் - டுழவார் ()துரும்பு எழுந்து வேம் கால் துயர் ஆண்டு - உழவார்
வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம் () வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம்
வருங்காற் பரிவ திலர். (05) வரும் கால் பரிவது இலர்.
பதவுரை
கரும்பு= கரும்பை,
ஆட்டி= ஆலையில் ஆட்டி,
கட்டி= வெல்லக் கட்டியை,
சிறுகாலை= முற்காலத்தில்,
கொண்டார்= கொண்டவர்கள்,
துரும்பு= அக்கரும்பின் துரும்பு,
எழுந்து= தீயால் எழுந்து,
வேம்கால்= வேகுங் காலத்து,
ஆண்டு= அவ்விடத்து,
துயர்= துன்பத்தால்,
உழவார்= வருந்தார்;
(அதுபோல) உடம்பின்= உடம்பாலாகிய,
பயன்= தருமப்பலனை,
வருந்தி= பிரயாசப்பட்டு,
கொண்டார்= கைக்கொண்டவர்கள்,
கூற்றம்= இயமன்,
வருங்கால்= வரும்போது,
பரிவது= வருந்துவது,
இலர்= இல்லாதவர்களாவார்கள்.
கருத்துரை
வெல்லக்கட்டியைக் கொண்டவர்கள், கரும்பின் சக்கை வேங்காலத்து விசனப்படமாட்டார்கள்; அதுபோல, உடம்பாலாகிய தருமப்பலனைக் கொண்டவர்கள் இயமன் வரும்போது விசனப்பட மாட்டார்கள்.
விசேடவுரை
பயன்கொண்டார்- எழுவாய், பரிவதிலர்- பயனிலை.

பாடல் 36 (இன்றுகொல்) தொகு

இன்றுகொ லன்றுகொ லென்றுகொ லென்னாது () இன்று கொல் அன்று கொல் என்று கொல் என்னாது
பின்னையே நின்றது கூற்றமென் - றெண்ணி ()பின்னையே நின்றது கூற்றம் என்று- எண்ணி
யொருவுமின் றீயவை யொல்லும் வகையான் () ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டா ரறம். (06) மருவுமின் மாண்டார் அறம்.
பதவுரை
இன்றுகொல்= இன்றைக்கோ?
அன்று கொல்= நாளைக்கோ?
என்று கொல்= என்றைக்கோ?
என்னாது= எண்ணாது,
பின்றையே= பின்னையே,
நின்றது= நிற்கின்றது,
கூற்றம் என்று= இயமன் என்று,
எண்ணி= நினைத்து,
தீயவை= பாவங்களை,
ஒருவுமின்= நீக்குங்கள்,
மாண்டார்= பெரியோராற் சொல்லிய,
அறம்= தருமங்களை,
ஒல்லும் வகையால்= கூடியமாத்திரம்,
மருவுமின்= பொருந்தும்படி செய்யுங்கள்.
கருத்துரை
இயமன், பின்னே நிற்கிறான் என்று எண்ணி அதருமத்தை நீக்கித் தருமத்தைச் செய்யுங்கள்.
விசேடவுரை
(நீங்கள்)- தோன்றா எழுவாய், ஒருவுமின்- பயனிலை, தீயவை- செயப்படுபொருள், நீங்கள்- எழுவாய், மருவுமின்- பயனிலை, அறம்- செயப்படுபொருள்.

பாடல் 37 (மக்களா) தொகு

மக்களா லாய பெரும்பயனு மாயுங்கா () மக்களால் ஆய பெரும் பயனும் ஆயும் கால்
லெத்துணையு மாற்றப் பலவானால் - தொக்க ()எத்துணையும் ஆற்றப் பல ஆனால் - தொக்க
வுடம்பிற்கே யொப்புரவு செய்தொழுகா தும்பர்க் () உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது உம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும். (07) கிடந்து உண்ணப்படும்.
பதவுரை
மக்களால்= மனிதர்களால்,
ஆய= உண்டாய,
பெரும்= பெரிய,
பயனும்= விளைவும்,
ஆயுங்கால்= ஆராயுமிடத்து,
எத்துணையும்= எவ்வளவும்,
ஆற்ற= மிக,
பல ஆனால்= பலவாயிருந்தால்,
தொக்க= பொருந்திய,
உடம்பிற்கே= உடலுக்கே,
ஒப்புரவு= தருமத்தை,
செய்து= பண்ணி,
ஒழுகாது= நடவாமால்,
உம்பர்= சுவர்க்கத்தில்,
கிடந்து= இருந்து,
உண்ண=அநுபவிக்க,
பண்ண= தருமங்கள் செய்ய,
படும்= தகும்.
கருத்துரை
நீங்கள் உங்கள் உடலுக்குத் தருமத்தைச் செய்யாது சுவர்க்கத்தில் இருந்து அநுபவிக்கத் தருமத்தைச் செய்யுங்கள்.
விசேடவுரை
(நீங்கள்) தோன்றா எழுவாய், பண்ணப்படும்- பயனிலை, அறங்களை- செயப்படுபொருள்.

பாடல் 38 (உறக்குந்) தொகு

உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி () உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி
யிறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந் ()இறப்ப நிழல் பயந்தாங்கு - அறப் பயனும்
தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் () தான் சிறிது ஆயினும் தக்கார் கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும். (08) வான் சிறிதாப் போர்த்து விடும்.
பதவுரை
உறக்கும்= கிள்ளியெடுக்கும்,
துணையது= அளவினையுடையது,
ஓர்= ஒரு,
ஆலம் வித்து= ஆலம் விதையானது,
ஈண்டி= நெருங்க வளர்ந்து,
இறப்ப= மிகவும்,
நிழல்= நிழலை,
பயந்தாங்கு= கொடுத்தாற் போல,
அறம்= தருமத்தின்,
பயனும்= பலனும்,
தான்= தான்,
சிறிது ஆயினும்= சிறியதாயிருந்தாலும்,
தக்கார்= பெரியோர்கள்,
கைபட்டக்கால்= கையிற்பட்டால்,
வான்= ஆகாயம்,
சிறிதாக= சிறியதாக,
போர்த்துவிடும்= மூடிவிடும்.
கருத்துரை
ஒரு ஆலம் விதை வளர்ந்து மிகவும் நிழலைக் கொடுத்தாற்போலத், தருமப்பலன் சிறியதானாலும் பெரியோர் கையிற் கொடுக்கப்பட்டால் அப்பலன் வானினும் பெரியதாயிருக்கும்.
விசேடவுரை
அறப்பயன்- எழுவாய், போர்த்துவிடும்- பயனிலை, உறக்கும் என்பதை உறங்கும் எனக் கூறினும் பொருந்தும்.

அரும்பதக் கொத்து: “உறக்கல் கறத்தல் விரலாற் கிள்ளுதல்.”

பாடல் 39 (வைகலும்) தொகு

வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் ()வைகலும் வைகல் வரக் கண்டும் அஃது உணரார்
வைகலும் வைகலை வைகுமென் - றின்புறுவர் () வைகலும் வைகலை வைகும் என்று - இன்புறுவர்
வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல் (09) வைகலும் வைகல் தம் வாழ் நாள் மேல் வைகுதல்
வைகலும் வைத்துணரா தார். (09) வைகலும் வைத்து உணராதார்.
பதவுரை
வைகலும் = நாள்தோறும்,
வைகல்= நாள் கழிதலை,
தம்= தம்முடைய,
வாழ்நாள்மேல்= ஆயுள்களின் மேல்,
வைகுதல் வைத்து= செலவுநாளாக வைத்து,
வைகலை= அந்த நாட்களை,
உணராதார்= அறியாதார்,
வைகலும்= நாள் தோறும்,
வைகல் வர= தம் வாழ்நாள் கழிவுவர,
கண்டும்= பார்த்தும்,
அஃது= அதனை,
உணரார்= அறியார்,
வைகலும்= நாள்தோறும்,
வைகலை= நாள்களை,
வைகும் என்று= கழியும் என்று,
இன்புறுவர்= இன்பத்தை அடைவர்.
கருத்துரை
நாள்தோறும் நாள் செல்லுதலைத் தம் வாழ்நாள் செலவுவரக்கண்டு அதையறியாமல் நாள்தோறும் நாள் செல்லுதலுக்கு இன்பத்தை யடைவர்.
விசேடவுரை
உணராதார்- எழுவாய், இன்புறுவர்- பயனிலை.

யாப்பருங்கலம்:(அகவல் வெண்பா)

“அகவல் வெண்பா வடிநிலை பெற்றுச்
சீர்நிலை பெறூஉந் தொடைநிலை தெரியாது
நடைவையி னோடி நெய்வார்ந் தன்ன
நயமுடைத் தாகி பொருளொடு புணர்ந்து
வெழுத்தறி யாதே.”
-என்றது யாப்பருங்கல மேற்கோளாதல் அறிக. அணியியலிலுங் காண்க.

பாடல் 40 (மானவருங்) தொகு

மான வருங்கல நீக்கி யிரவென்னு () மான அரும் கலம் நீக்கி இரவு என்னும்
மீன விளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தா ()ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
லூட்டியக் கண்ணு முறுதிசேர்ந் திவ்வுடம்பு () ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து இவ் உடம்பு
நீட்டித்து நிற்கு மெனின். (10) நீட்டித்து நிற்கும் எனின்.
பதவுரை
ஈனத்தால்= இழிவால்,
ஊட்டி= ஊட்டியக்கண்ணும்= இரந்து ஊட்டிய இடத்தும்,
உறுதி= வலிமை,
சேர்ந்து= பொருந்தி,
இ உடம்பு= இவ்வுடல்,
நீட்டித்து= நெடுநாள்,
நிற்கும் எனின்= நிற்குமானால்,
மானம்= அபிமானமாகிய,
அரும்= அரிய,
கலம்= ஆபரணத்தை,
நீக்கி= தள்ளி,
இரவு என்னும்= யாசகம் என்னும்,
ஈனம்= கனவீனமான,
இளிவினால்= அவமதிப்பால்,
வாழ்வேன்மன்= உயிர் வாழ்வேன்.
கருத்துரை
இரந்து ஊட்டிய விடத்து, இவ்வுடம்பு நிலைநிற்குமானால் அபிமானம் என்கிற ஆபரணத்தைத் தள்ளிக் கனவீனமாகிய அவமதிப்பினால் உயிர் வாழ்வேன்.
விசேடவுரை
யான்- எழுவாய், வாழ்வேன்- பயனிலை, மன்- ஒழியிசை.

அறன் வலியுறுத்தல் முற்றிற்று தொகு

பார்க்க தொகு

நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்
நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
2.இளமைநிலையாமை
3.யாக்கைநிலையாமை
5.தூய்தன்மை
6.துறவு
[[]]
[[]]
[[]]
[[]]
[[]] :[[]] :[[]]