வேங்கடம் முதல் குமரி வரை 5/015-019

15. கொடுங்கோளூர் பகவதி

ட இந்தியாவிற்குப் போய் அங்குள்ள இமயத்தின் சிகரத்திலேயே ஏறி அன்றைய வைஸ்ராயின் வாசஸ் தலமான சிம்லாவை அடைந்தால், அங்கு கோயில் கொண்டிருக்கும் பாதாள தெய்வம் சியாமளா என்றும், அவள் பெயரே சிம்லா என்று திரிந்து வழங்குகிறதென்றும் காண்போம். அந்த சிம்லாவிற்குச் செல்லும் வழியில் உள்ள' கால்கா, காளிகா தேவியின் இருப்பிடம். இன்றைய பஞ்சாபின் தலைநகரான சண்டிகரின் காவல் தெய்வம் சண்டிகா.

நமக்குத் தெரியும் காளிகட்டமே கல்கத்தா என்று மாறியதென்று, இப்படி காளிதேவியின் வழிபாடு வட நாட்டில் மலிந்திருக்க, அந்த காளிதேவி வழிபாடே தமிழ் நாட்டிலே துர்க்கை, பிடாரி, மாரியம்மன் வழிபாடாக பரவி இருக்கிறதென்று. இந்த வழிபாடு எல்லாம் தமிழ்நாட்டிலே நடப்பதற்கு காரணமாயிருந்தவள், சிலப்பதிகாரத்து காவிய நாயகியான கண்ணகி என்றும் கூறுவர். கோவலனும் கண்ணகியும் மதுரை செல்லும் வழியில் வேட்டுவர் ஊரில் உள்ள கொற்றவை கோயிலில் தங்கியிருக்கின்றனர். அப்போது அங்கு வேட்டுவர், பூசை போடத் துவங்கியிருக்கின்றனர். துர்க்கையை வணங்கும் பூசாரி ஆவேசம் வந்து ஆடத் தொடங்கியிருக்கிறான். அப்போது அவன் அங்கு வந்திருந்த கண்ணகியைப் பார்த்து,

இவளோ கொங்கச் செல்வி
குடமலையாட்டி

தென் தமிழ்ப் பாவை
செய்தவக் கொழுந்து
ஒருமா மணியாய்
உலகுக்கோங்கிய
திருமாமணி

என்று ஏத்திப் புகழ்கிறான் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். இப்படி - இவளைத் தெய்வமாகவே கொண்டாடும் பான்மையினாலே, இவள் துர்க்கையின் அம்சமாகவே பிறந்தாள் என்று சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் எழுதுகிறார்.

இதனால்தான் கண்ணகியை பிற்காலத்தவர் காளி அம்சமாகவே கொண்டிருக்கின்றனர். கோவலன் கதை என்ற பெயரில் வழங்கும் அம்மானைப் பாடல் ஒன்றில் கண்ணகி திருவொற்றியூரில் வட்டபுரியம்மன் என்ற பெயரால் ஆராதிக்கப்பட்டு வந்திருக்கிறாள் என்றும் தெரிகிறது. இப்படி காளியாகவும் துர்க்கையாகவும் தமிழ்நாட்டில் வழிபடப் பெறும் கண்ணகியே, மலையாள நாட்டில், பகவதியாக வழிபடப் பெறுகிறாள். கொடுங் கோளூரில் உள்ள பகவதியை அங்குள்ள மக்கள் கண்ணகித் தெய்வமாகவே பாராட்டி வழிபடுகிறார்கள். அந்த பகவதி கோயில் கொண்டிருக்கும் பகவதி கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

கொடுங்கோளூர் செல்ல சென்னை கொச்சி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் ஷோரனூரைக் கடந்து, இரிஞ்ஞாலக் குடா என்ற ஸ்டேஷனில் இறங்க வேணும். அவகாசம் இருந்தால் அந்த ஊரில் உள்ள பரதன் கோயிலுக்குச் சென்று, தவக்கோலத்தில் இருக்கும் பர்தனைக் கண்டு வணங்கலாம். அந்த ஊரிலிருந்து இரண்டு மைல் மேற்கே சென்றால் ஓர் உப்பங்கழி இடையிடும். முன்னர் எல்லாம் இந்த உப்பங்கழியைக் கடக்க, படகுகளைத்தான் நம்பியிருக்க வேண்டும். ஒன்றிரண்டு மணி நேரம் அங்கே . காத்துக் கிடக்க வேணும்.

இப்போதெல்லாம் அந்த சிரமம் இல்லை. கழியில் நல்ல பாலம் ஒன்று அமைத்து விட்டார்கள். ஆதலால் நடந்து சென்றாலும் காரில் சென்றாலும், எளிதாக அந்தக் கழியைக் கடக்கலாம். எங்கே பார்த்தாலும் ஒரே தென்னஞ் சோலையாக இருக்கும். கொடுங்கோளூர் பகுதிக்கு வந்து சேரலாம். ஒரே ஒரு தெருவைக் கடந்ததும், ஒரு பெரிய மைதானத்தில் வந்து சேருவோம். அந்த மைதானத்தின் மத்தியில் இருப்பதுதான் கொடுங்கோளூர் பகவதி கோயில்

இக்கோயிலை அணுகும்போது வேட்டு வெடிச் சப்தம் பலமாகக் கேட்கும். இதென்ன, தீபாவளி சமயம் இல்லையே இங்கு வேட்டு வெடிப்பானேன் என்று கேட்டால் பகவதிக்கு வேட்டு வெடிப்பதில் நிரம்பப் பிரியம் என்றும், பிரார்த்தனை செய்து கொள்ளுகிறவர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறினால், 10 வெடி 20 வெடி வெடிக்கச் செய்வதாக பிரார்த்தித்துக் கொள்ளுவார்களாம். அதன்படியே சேவார்த்திகள் வேட்டு வெடிக்கிறார்கள் என்பார்கள்.

நமக்கும், நமது யாத்திரையெல்லாம் விக்கினமில்லாமல், நிறைவேற வேணுமே! ஆதலால் நாமும் ஆளுக்கு 4 வெடி என்று வெடிக்கலாம். நாலு வெடிக்கும் அங்குள்ளவர்கள் 4 அணாத்தான் வாங்கியிருக்கிறார்கள். கோயில் வாயிலை குறிப்பிட்ட காலங்கள் தவிர மற்ற நேரங்களில் மூடியே வைத்திருப்பார்கள்.

ஆதலால் கோயில் வாயிலைத் திறக்கும் வரை கோயிலை ஒரு சுற்று சுற்றலாம். சந்நிதிக்குக் கீழ்புறம் திறந்த வெளியில் சண்டிகேஸ்வரியின் சிலை இருக்கிறது. இந்த சண்டிகேஸ்வரிக்கு தவிடே அபிஷேகம்.

இந்த தவிட்டை கோயிலில் வளர்க்கப்படும் ஆடுகள் நாவால் நக்கி உண்ணுகின்றன. இந்த ஆடுகளையே பின்னர் பகவதிக்கு பலியிடுவது வழக்கம் என்கிறார்கள். இப்படிச் சுற்றிக் கொண்டிருக்கும் போது கோயில் மணி அடிக்கும். சந்நிதிக் கதவைத் திறந்து விட்டதற்கு அறிகுறி இது. உடனே விரைந்து கோயில் வாயிலுள் நுழைந்து, பகவதியின் சந்நிதி சேரலாம்.

பகவதி எட்டுக் கரங்களும், மூன்று கண்களும், கோரப் பற்களும் உடையவளாய் வீற்றிருக்கிறாள். பகவதி திருமுன்னர் - விளக்குகள் நிறைய இருக்கின்றன. இன்னும் யந்திரம், திருவாசி முதலியனவும் வைத்து வழிபடுகிறார்கள். இந்த சந்நிதிக்கு வலப்புறம் ஒரு கருவறை இருக்கிறது. பகவதியின் கருவறையிலிருந்து அதற்கு வாயிலும் இருக்கிறது.

ஆனால் அந்த வாயிலை அடைத்து வைத்திருக்கிறார்கள், வாயிலுக்கு முன் திரு வாசியை வைத்திருக்கிறார்கள். கருவறைக்கு வெளியில் மூடப்பட்டிருக்கும் கோயிலுக்கு விமானம் இருக்கிறது. இந்த மூடப்பட்ட கோயில் உள்ளே ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனுடைய சாந்நித்யம் மிகவும் உக்கிரமாக இருந்ததால் சந்நிதியை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். பகவதிக்கு அருகே இடது பக்கத்தில் சப்தமாதாக்கள் சந்நிதி இருக்கிறது. அவர்களோடு விநாயகரும் இருக்கிறார்.

இந்த சந்நிதியை அடுத்த தெற்கு நோக்கிய கோயிலிலே கோடிலிங்க புரேசர் என்ற திருப்பெயரொடு சிவபெருமான் லிங்க உருவில் இருக்கிறார். அவரை வலம் வரக் கூடாதென்கிறார்கள். பகவதியை வலம் வந்து கோடிலிங்க புரேசரது இடப்பக்கமாகவே சுற்றி வெளியில் வர வேண்டும்.

ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. கோயிலுள் செல்லும் போதே வாயில் முன்புள்ள கடையில் மிளகு பாக்கெட்டுகள் வாங்கி உள்ளே பகவதிக்கு பூசை செய்யும் அர்ச்சகரிடம் கொடுத்து விடலாம். அதையே அவர் நமது ஆராதனைப் பொருளாக ஏற்று நைவேத்தியம் செய்து விடுவார். இப்படி கொடுங்கோளூர் பகவதிக்கு, வணக்கம் செலுத்தி விட்டு வெளியே வந்தால், அந்தக் கோயிலுக்கு இடப்புறம் ஒரு சிறு கோயிலைப் பார்ப்போம். அங்கு சென்று பார்த்தால் அங்கு கோயில் கொண்டிருப்பவர் க்ஷேத்திரபாலர் என்று அறிவோம்.

க்ஷேத்திரபாலர், பைரவ மூர்த்தங்களில் ஒன்று. பெரிய கம்பீரமான வடிவம், எட்டு ஒன்பதடி உயரம், அதற்கேற்ற காத்திரம், அவரையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம்.

கொடுங்கோளூர் பகவதியைக் கண்ணகி என்பவர்கள், இந்த க்ஷேத்திரபாலரை கோவலன் என்கிறார்கள். கோவலனுக்கும், க்ஷேத்திர பாலருக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை. இனி ஒரே ஒரு கேள்வி. உண்மையிலேயே கொடுங்கோரூர் பகவதி கண்ணகியின் வடிவந்தானா? சோழ நாட்டில் உள்ள புகாரில் பிறந்து வளர்ந்து, கோவலனை மணந்து, பின்னர் அவனுடன் பாண்டிய நாட்டிற்கு வந்து அங்கு அவனை இழந்து, பின்னர் சேர நாடு சென்று விண்ணேறிய பத்தினிக் கடவுள் கண்ணகி, இவளே துர்க்கையின் அவதாரம் என்று எண்ணுவதற்கு சிலப்பதிகாரம் இடம் தருகிறது.

சேரமன்னனாகிய செங்குட்டுவன் வடதிசைக்கு படை கொண்டு, அங்கு தமிழ் மன்னரை இழித்துக் கூறிய கனக விசயர்களை வென்று, இமயத்தில் கல்லெடுத்து, அதைக் கனக விசயர் தலை மீது ஏற்றி, தன் தலைநகரான வஞ்சிக்குத் திரும்பி, அங்கு கண்ணகிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி வழிபட்டான் என்பது வரலாறு. இதனையே சிலப்பதிகாரத்து வஞ்சிக்காண்டம் விரிவாகக் கூறுகிறது.

வஞ்சி என்பது, திருவஞ்சைக்களம் கொடுங்கோளூர் முதலிய ஊர்கள் சேர்ந்த பகுதியே என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டியிருக்கின்றனர். சேர மன்னனாகிய சேரமான் பெருமான் இருந்து அரசாண்ட இடமும் கொடுங்கோளூரே. ஆகவே சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு எடுப்பித்த கோயில் இதுவாக இருக்கலாம். ஆனால் இன்று கட்டப்பட்டிருக்கும் கோயில் எல்லாம் பிந்திய காலத்தில் கூறை வேய்ந்து கட்டப்பட்டவையே. கொடுங்கோளூர் பகவதியே பழய கண்ணகி என்று கொண்டாலும், இன்று வழிபடப் பெறும் வடிவமே சேரன் செங்குட்டுவன் பாரதிஷ்டை செய்த வடிவம் என்று கொள்ள வேண்டியதில்லை, அக்கோயில் உள்ளேயே கருவறையை ஒட்டி மூடிக் கிடக்கும் அறையில் ஒருக்கால் அந்தப் பழைய வடிவம் இருந்தாலும் இருக்கலாம்.

இன்னும் கண்ணகியை இலங்கை மக்கள் பத்தினிக் கடவுளாக இன்று வழிபடுகின்றனர் என்கிறார்கள். அப்பத்தினிக் கடவுளை பௌத்தர்களும் இந்துக்களும் சேர்ந்தே வணங்குகிறார்கள் என்பர். தமிழ்நாட்டில் முதல் முதல் இப்பத்தினிக் கடவுளுக்கு கோயில் எடுப்பித்தவன் சேரன் செங்குட்டுவனே. அந்தக் கண்ணகி பிரதிஷ்டைக்கு கடல் சூழ் இலங்கைக் கயவாகு மன்னனும் வந்திருந்திருக்கிறான். பின்னர் அவனே கண்ணகி வழிபாட்டை இலங்கையிலும் ஆரம்பித்திருக்கிறான். அவனுடன் வஞ்சிக்கு வந்த பௌத்தர்கள் சும்மா இராமல் தங்கள் சமயப் பிரசாரத்தையும் ஆரம்பித்திருக்க வேணும்.

அதனால் அன்றைய சேர நாட்டு மக்கள் பௌத்தர்கள் பேரில் கோபமுற்று அவர்களைத் திட்டிப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். கேரள நாட்டில் அந்தப் பாடல்கள் பிரசித்தம். இன்னும் கொடுங்கோளூர் கோவிலுக்கு வரும் பௌத்தர்களை, கேரள மக்கள் பச்சை பச்சையாகத் திட்டி பாடல்கள் பாடுகிறார்களாம். நல்ல காலம்! நான் அங்கு போயிருந்த போது பௌத்தர்கள் ஒருவரும் வரவில்லை. அந்த திட்டுகளையும் கேட்க முடியவில்லை.

பராசக்தியின் அம்சமே காளி, பகவதி என்பவள் எல்லாம். வேண்டுவார் வேண்டுவன எல்லாம் தருபவள் அவள். அதே சமயத்தில் தவறு செய்தால் அவர்களைத் தண்டிக்கவும் அவள் தவறுவதில்லை. அதனாலேயே அவளை கண்கண்ட தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். இக்கண் கண்ட தெய்வங்களின் ஜாபிதாவை ஒரு புரட்டு புரட்டினால், அங்கு திருச்செங்குன்றூர் பகவதி, கொடுங்கோளூர் ஒற்றை முலைச்சி, கருவூர் வஞ்சி, ஒற்றியூர் வட்டப் பாறை அம்மன், நாகப்பட்டினம் பத்திரகாளி, நாட்டரசன் கோட்டை. கண்ணாத்தாள், முப்பந்தல் பேச்சி, ஆலங்காட்டுக் காளி எல்லோருமே வருவர். கொடுங்கோளூர் ஒற்றை முலைச்சி என்றும் கொடுங்கோளூர் பகவதி பெயர் பெற்றிருக்கிற காரணத்தால், அவளே அந்தச் சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகி என்றும் தெளியலாம். அந்த பத்தினித் தெய்வத்திற்கு வணக்கம் செலுத்தி ஊர் திரும்பலாம்.