வைகையும் வால்காவும்/அடுங்கோலன்

அடுங்கோலன்


சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே,
மற்றின்பம் வேண்டு பவர், என்னும்- சொற்கின்பம்
காட்டப் பொது நலமே கண்ணானான்; மூச்சானான்
வேட்டிலன்வே றின்பம் லெனின். 17

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின் பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு என்றே- ஓதுமொழி
பாழ்முத லாளியும், செல்வக் குடியினரும்
ஊழ்த்துணரச் செய்தான் லெனின். 18

சொல்லுக சொல்லில் பயனுடைய, சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்; என்ற-சொல்லாய்ப்
பொதுமக்கள் வாழ்வில் பொருளுடைமை எய்தப்
புதுக்கருத்தைச் சொன்னான் லெனின். 19

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்; எனவே- தீய
கொடுங்கோன்மை, சாதி, மதம் கோயிலிவை எல்லாம்
அடுங்கோலன் ஆனான் லெனின். 20