9.கோடேறிக் குடிமுடித்த படலம்

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் தொகு

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் தொகு

ஓர் அங்கதக் காவியம் தொகு

9. கோடேறிக் குடிமுடித்த படலம் தொகு

(வரிகள்: 01-50) தொகு

ஐயோ! ஐயோ! அடங்கா வீர
பத்திரப் பிள்ளை, (அப்பாவி பாதக,என்
குடியைக் கெடுத்த கொடிய சண்டாளன்
அரக்கன் ஏழரை ஆண்டைச் சனியன்)
விரைவில் ஓடி வீட்டில் சென்று, (05)
மனைவியை அழைத்து மண்டையைக் காட்டிஉன்
அண்ணன் அடித்த அடிகளைப் பாரடி!
இன்றைக்கு
உயிர்போ காமல் இருந்தது உன்தாலிப்
பாக்கியம் தானடி, பகவான் செயலடி! (10)
அவன், எண்ணிப் பாராது ஏசின ஏச்சில்
கடுகள வேனும்உன் காதில் விழுந்தால்நீ
நஞ்சைத் தின்பாய் நான்று சாவாய்
நாக்கைப் பிடுங்கி நடுங்கி இறப்பாய்
ஆற்றில் குளத்தில் அலறி விழுவாய்,
சங்கிலித் துறைபோய்ச் சாடி யொழிவாய்,
இதற்கோர் ஐயம் இல்லையே!
என்னைப்
பறைப்பயல் பள்ளப் பயலினும் கேடாய்
நினைத்துப் பேசின நீசன் இவனை (20)
வாயில் மண்ணை வாரி யடித்து
வீட்டை விட்டு வெளியி லிறக்கின
அன்றைக்(கு) அல்லவோ ஆண்பிள்ளை யாவேன்?
என்று பற்பல இன்னும் சொல்லிக்
கோபா வேசம் கொண்டவ னானான். (25)
கூட இருந்த குசும்பன் சாமி
போதா தென்று புகையும் போட்டான்
வீணாய்க் கதையை விரிப்பதேன்? அம்மா!
அப்பனும் மகனும் அண்டை வீட்டுக்
குசும்பன் சாமியும் குண்டுணிச் சுப்புவும் (30)
கோட்டு மாடன் பிள்ளையுங் கூடி
இரவும் முழுதும்இருந்து யோசனை
பலவும் செய்து, பலபல வென்று
விடியு முன்னம் விரைவா யெழுந்து
பானையில் கிடந்த பழவோ லைகளும் (35)
முறிப்பெட்டி யிலுள்ள முன்னோ லைகளும்
கைச்சீட் டுகளும் கடச்சீட் டுகளும்
கைச்சாத் துகளும் பொய்ச்சாத் துகளும்
பத்திரச் சுருளும் பகர்ப்புச் சுருளும்
எல்லாம் சுமடாய்க் கட்டி இரண்டொரு (40)
முண்டைப் போட்டு மூடிப் பொதிந்து
தோளில் வைத்துச் சுமந்து கொண்டு
நாகையம் பதியை நாடிச் சென்றனர்
அங்கு
நீதிக் கெல்லாம் நிலைய மாகியும் (45)
உண்மைக் கெல்லாம் உறைவிட மாகியும்
கருணைக் கெல்லாம் களஞ்சிய மாகியும்
வாழும் நியாய வாதிகள் தங்கும்
வீதியை முற்ற விலகிச் சென்று,வீண்
விவகா ரங்கள் விளைநில மாகியும் (50)

(வரிகள்: 51-100) தொகு

பொய்கள் அடைக்கல புகுமிட மாகியும்
குதர்க்கம் கடிகொளும் குகையிட மாகியும்
திருஅவ தாரம் செய்தன் றிருந்தவோர்
அண்டப் புரட்டன் வக்கீல் ஆபீசில்
ஆனைப் பொய்யன் குமஸ்தனை அறிந்து (55)
காரியம் சொன்னார், கதைகளும் சொன்னார்
‘காரண வனைப்பல காரணத் தாலே
மாற்றும் படிக்கு வந்தோம்’ என்றார்
புற்றை விட்டுப் புறம்போ காமல்
பட்டினி கிடக்கும் பாம்பின் வாயில் (60)
தேரை குதித்துச் சென்று விழுவது
நாகம் முன்செய்த நல்வினைப் பயனோ?
தேரை முன்செய்த தீவினைப் பயனோ?
ஈதெனச் சொல்ல எவரால் ஆகும்?
செல்லும் செலவு செய்திட, ரூபாய்
நூற்றைம் பதுக்கோர் நோட்டு, வக்கீல்
மைத்துனன் முத்து வாத்தியார் பேர்க்கு
எழுதி முடித்தார், எடுத்து வந்த
ஆதா ரங்கள் அனைத்தும் கொடுத்தார்,
இவரிவர் சாட்சிகள் என்றும் சொன்னார்; (70)
வெள்ளை மடத்துக் கள்ள பிரானெனும்
மூத்த பிள்ளையே முதலாம் சாட்சி;
மாத்தால் கணக்கு மகாரா சன்மகன்
பிச்சைக் காரன் பின்னொரு சாட்சி;
இருக ணில்லா இருளப் பன்மகன் (75)
முத்தொளி மறவன் மூன்றாம் சாட்சி,
ஐயம் பிள்ளை அண்ணாவி புதல்வன்
நல்ல பிள்ளை நாலாம் சாட்சி;
பொய்சொலா மெய்யன் புத்திரன் மாறி
யாடும் பெருமாள் ஐந்தாம் சாட்சி; (80)
நம்பர் பதித்த நாலாம் மாதம்
ஒருநாள் காலை உறக்கப் பாயில்
எழுந்(து)என் கணவர் இருக்கும் பொழுது
கருப்பன் கட்டையன் கப்படா மீசைக்
காரன் ஒருவன் காலனைப் போல (85)
கோர்ட்டு சம்மனைக் கொண்டு வந்தான்!
நச்சுவா யண்ணன் நாச காலன்
வீர பத்திரன், வெட்டையாய்ப் போவான்,
எண்ணியது போல எல்லாம் ஆச்சுதே,
நினைத்தது போல நேரம் விடிந்ததே! (90)
இந்நாள் இங்கு யான்படும் பாடெலாம்
நாளை
அவரும் மக்களும் அனுபவிப் பார்கள்
யாதும் தடையிலை, யாதும் தடையிலை;
பத்தினி என்சொல் பழுதா காது, (95)
உத்தமி யென்சொல் ஊரையும் சுடுமே!
கேட்கும் கேட்கும், தெய்வம் கேட்கும்!
சேவகன் வந்த காரியம் தெரிந்தோ,
இயல்பாய்த் தானோ, (யாதோ அறியேன்)
மேல வீட்டிருந்து வெள்ளையம் பிள்ளை (100)

(வரிகள்: 101-150) தொகு

அண்ணனும் அப்பொழு(து) அங்கு வந்து,
‘யார்இவன்’ என்றனர், ‘இன்னார்’
சம்மனைப் படித்துச் சங்கதி யறிந்துஎன்
புருஷனை நோக்கி, “போன தெல்லாம்
போகட்டும் ஐயா! பொய்கைப் பற்றில்
ஆறு தடியும் அணஞ்சி விளையும்
துலுக்கன் தோப்பும, தொட்டிச்சி மேடும்
மேலத் தெருவில் மேடை வீடும்,
ஈரணை ஏரும் ஏழு பசுவும்,
யாதொரு கடனும் இல்லா மல்நீர் (110)
இருக்கு மட்டும் யாப்பிய மாகவும்
அப்பால் அவற்றைஉம் அருமை மக்கள்
ஒன்று விடா(து)உகந் துடைமை யாகவும்
எடுத்துக் கொள்ள ஓர்ஓலை யெழுதி
உம்மை மக்களோடு ஒதுக்கி விடுவரேல் (115)
வாங்கிக் கொண்டு வழக்கில் லாமல்
சும்மா இருப்பது மெத்தச் சுகமாம்
இப்படி ராஜி எழுதிக் கொடுக்க
உமக்குச் சம்மத முண்டோ? சொல்லும்.
வியாச்சிய மென்னும் சுழியில் விழுந்து (120)
கறகற வென்று கறங்கி மயங்கி
கைப்பொருள் இழந்து கடனும் வாங்கி
வீணாய்த் துன்பம் விளைத்திட வேண்டாம்!
அல்லலை விருந்துக்கு அழைத்திட வேண்டாம்!
தொல்லைக்குத் தூது சொல்லிட வேண்டாம்! (125)
ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
பண்டொரு நீதி பதிதம் கோர்ட்டு
வாயிலின் வந்த மனித ரெல்லாம்
உடைந்த ஓட்டை ஒருகையி லேந்தி (130)
வழக்கு இழந்தவன் வாடி நிற்பதையும்
தாட்பொதி யொன்று தலையிற் சுமந்து
வென்றவன் உடலம் மெலிந்து நிற்பதையும்
கண்களால் கண்டு, கண்டு நாளும்
நல்லறிவு எய்திட நடைநடை தோறும் (135)
இருபுறச் சுவரிலும் இரண்டு உருவங்கள்
செய்து வைத்த கதைதெரி யாதோ?
இழந்தவர் வென்றவர் இருவர் மீதியும்
இவைக ளன்றிவே(று) எவையும் உண்டோ?
புத்தி யில்லாஇரு பூனைகள் பண்டு (140)
வானரத் திடம்போய் வழக்குச் சொல்லி
உள்ளதும் இழந்துவே றுணவும் இன்றி
வெறுங்கை யாகி வெட்கி மீண்டதாய்
நாம்,
பள்ளியில் பாடம் படிக்க வில்லையோ? (145)
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்.
அரையடிச் சுவருக் காகஐக் கோர்ட்டு
வரையிலும் ஏறி, வழக்குப் பேசி
அந்தி புரத்து மந்திரம் பிள்ளை
அடியொடு கெட்டது அறியமாட் டீரோ? (150)

(வரிகள்: 151-200) தொகு

வடக்கு வீட்டு மச்சம் பியும்அவர்
மருமக் களுமாய் வருசம்எட் டாக
மாறி மாறி வாதம் செய்து,
யாவையும் போக்கி, இரவா வண்ணம்
இரந்து திரிவதை இவ்வூ ரில்நாம் (155)
கண்ணால் இன்று காண வில்லையோ?
வேலுப்பிள்ளை வீட்டு நம்பரில்
ஐந்தாம் சாட்சி ஆண்டி அவனை
அழஅழப் படுத்தி, அறுபது ரூபாய்
வாங்கிக் கொண்டு, மேல்வாயிதாத் தோறும் (160)
‘வீட்டுக் காரியம் வெட்ட வெளிச்சம்
முட்டப் பஞ்சம், மூதேவி வாசம்
பானையி லேபத் தரிசி இல்லை!
உப்போ புளியோ ஒன்று மில்லை!
உச்சிக்கு எண்ணெய் ஒருதுளி யில்லை! (165)
தொட்டில் கட்டத் துணியு மில்லை,
காந்தி மதிக்குக் கண்டாங்கி இல்லை,
எனக்கும் வேட்டி யாதொன்று மில்லை,
இப்படி யிருக்க, எப்படி உமக்காய்
கோர்ட்டில் மொழிநான் கொடுக்க வருவே?’ (170)
என்று சொல்லி, எத்தனை பணத்தைத்
தட்டிப் பறித்தான் சண்டாளன், அப்பா!
முளைய நல்லூர் முதல்பிடிப் பிள்ளை
அண்ணனும் இப்படி யாகக் காரணம்,
விளாத்திக் கோண விவகார மல்லவோ? (175)
எத்தனை வகையை இழந்தார், அப்பா!
மூக்கறை யன்விளை மூலையில் நிற்கும்
பலாமர மொன்றுமே பத்துக் குடும்பம்
தாங்கி,மீதியும் தருமே, அப்பா!
அந்த,
மதினி கழுத்தில் மங்கிலியம் தவிர
எல்லா நகையும் இறக்கிவிட் டாளே!
ஒவ்வொரு காதிலும் உழக்குழக் குப்பொன்
இட்டிருந் தாளே! எல்லாம் போச்சே!
ஆளும் வேற்றாள் ஆகி விட்டதே! (185)
கருந்தாளி உலக்கை கையில் எடுத்(து)அவள்
கோவில் நெல்லைக் குத்துவாள் என்று
யாவ ராயினும் எண்ணினது உண்டா?
என்ன செய்வாள், ஏழை! பாவம்!
நட்டியும் குட்டியும் நாழியும் உழக்குமாய் (190)
ஏழு மக்களை எப்படி வளர்ப்பாள்?
கோர்ட்டு வழக்குக் கொஞ்சமா செய்யும்?
இதுவும்செய்யும் மேலே எதுவும் செய்யும்;
கட்டுக் கட்டாய்க் காய்கறி யனுப்பவும்
வல்லம் வல்லமாய் மாம்பழம் அனுப்பவும் (195
பானை பானையாய்ப் பால்நெய் யனுப்பவும்
மந்தை மந்தையாய் மாடுகள் அனுப்பவும்
வண்டி வண்டியாய் வைக்கோல் அனுப்பவும்
யாரால் முடியும்? யாரால் முடியும்?
எந்தக் குடும்பம் ஈடு நிற்கும்? (200)

(வரிகள்: 201-250 தொகு

ஐயா,
வழக்கும் இழந்து, வகையும் இழந்து
யாவும் இழந்து உளம்ஏங்கி யிருக்கும்
கைலாசம் பிள்ளைக் கரையாளன் வீட்டை
வக்கீல் பீஸு பாக்கி வகையில் (205)
எழுபது ரூபாய்க்கு ஏலம் கூறிக்
கொட்டிக் கொட்டிக் கொண்டு போனதும்
நேற்றுத் தானே, நினைவு மில்லையோ?
இந்த மாசம் எட்டாந் தேதி
மேலத் தெருவில் .... வீட்டில் (210)
ஜப்திக்கு வந்த தலைவன், ஐயோ
எள்ளள வேனும் இரக்கமில் லாமல்
அந்தக்
கிழவனைத் தூக்கிக் கீழே போட்டுக்
கட்டிலை வெளியில் கடத்தச் சொன்னதும், (215)
தண்ணீர் குடிக்கும் சமயம் பார்த்துப்
பிள்ளைக் கெண்டியைப் பிடுங்கச் செய்ததும்
சருவப் பானை சட்டுவம் அகப்பை
குட்டுவம் செம்பு குழியல் முதலாய்
உப்பொடு சிரட்டை ஒன்றுமில் லாமல் (220)
எல்லாம் வண்டியில் ஏற்றிச் சென்றதும்
நாம்
கண்ணாற் கண்டதோ? கனவோ? ஐயா!
நாமெலாம் சேர்ந்து நடத்தின கட்சிக்
கொடையில், மாடன் கொண்டாடி நம்பி (225)
சந்தனம் பூசிச் சல்லடம் கட்டிப்
பூவை யெடுக்கப் போன பொழுது
வாரண்டுக் காரன் வந்ததை யறிந்து
குட்டிச் சுவரெலாம் குதித்துச் சாடி,
வாய்க்கால் வழியே வடக்கே யோடி (230)
ஒருவரும் காணாது, ஓச்சன் குளத்து
மடைக்குட் சென்று மறைந்து கொண்டதும்
‘சாமி சுடலைச்சாம்பலி லாடி
விளையா டுதற்கு வேகமாய்ப் போகிறார்’
என்று நினைத்து அங்கிருந்தவ ரெல்லாம் (235)
எழுந்து போனதும், எங்கும் தேடிக்
காணா தானதும், கடைசியில் உண்மை
தெரிய வந்ததும், செலவோடு செலவென்று
ஏழு ரூபாய் எண்ணிக் கொடுத்து
வாரண்டை அன்று மடக்கி விட்டதும் (240)
நடந்த காரியமோ? நாடகந் தானோ?
வியாச்சியம் வேண்டாம் வியாச்சியம் வேண்டாம்,
தேடின முதலைத் தெருவில் வாரி
இறைக்க வேண்டாம், இறைக்க வேண்டாம்.
அல்லும் பகலும் அலுப்பில் லாமல் (2450
ஆஆ என்(று)அலை ஆமீன் வாயில்
அகப்பட் டார்வெளி யாவது முண்டோ?
சுறா மீனையுமே தூக்கி விழுங்கும்
பொல்லா மீன்இது போலொரு மீனைக்
கடலிலும் கூடக் கண்டவ ரில்லை. (250)

(வரிகள்: 251-300) தொகு

‘எவரினும் பெரியவன் யானே ஆவேன்,
எப்பெரு வேலையும் எளிதில் முடிப்பேன்
இம்மிருகத் தையும் எடுத்தொரு நொடியில்
வானெலாம் சுற்றி வருவதற் குள்ள
ஆற்றலு முடையேன், ஆனால், அத்திறம் (255)
அனைத்தையும் வெளிப்படை யாகக் காட்ட
அற்பமும் ஆசை எனக்கிலை, அன்றியும்
உருவமோ, நீளமோ, உயரமோ கண்டே
மூட உலகம் மோசம் போகும்;
ஆதலால் ஒருவரும் அறியா திருந்(து)இந் (260)
நாலுகை யானை நடத்து கின்றேன்’
என்றுதன் முதுகி லிருக்கும் ஈயொன்று
எண்ணா(து) டம்பம் எடுத்துரைப் பதுபோல்,
‘இரவும் பகலும் இடைவிடாமல்
பற்பல வருசம் படித்து பீ.எல்
எம்.எல் பட்டம் எல்லாம் பெற்று
வந்திடும் பெரிய வக்கீல் மாரும்
யாங்க ளில்லையேல் என்செய் வார்?’எனப்
புத்தி யில்லாது புலம்பித் திரியும்
குமாஸ்தா வெனும்ஈக் கூட்டம் உம்மைக் (270)
குத்தி ரத்தம் குடித்திடும், ஐயா!
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!
குதித்துக் குடியைக் கெடுத்திட வேண்டாம்!
இன்ன படியென்று எழுதி விட்ட
சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன், (275)
விதியினுக்கு ஆயிரம் விக்கினம் சொல்வேன்,
வருகிற வழியாய் வந்(து)எனைக் கண்டால்
சிக்கெலாம் போக்கித் தீர்ப்பையும் நடத்தித்
தருவேன்’ என்று சற்றும்வாய் கூசாது
உரைக்கும் அந்த உத்தம புருசன் (280)
நிறையா வயிற்றை நிறைந்திடக் கடலைத்
திறந்துவிட் டாலும் திகையுமோ? ஐயா!
வீட்டை விட்டு வெளிவரா உமக்குக்
கோர்ட்டுக் காரியம் கொஞ்சமும் தெரியுமோ?
பாரப் படிகளும் பட்டிகைப் படிகளும் (285)
சாட்சிப் படிகளும் சமன்சுப் படிகளும்
கணக்கி லடங்காக் கமிசன் படிகளும்
ஜப்திப் படிகளும் லேலப் படிகளும்
வாரண்டுப் படிகளும் வாசற் படிகளும்
ஏணிப் படிகளும், இப்படி அப்படி (290)
எல்லாப் படிகளும் ஏறி இறங்கி
வாணாள் கொடுத்து வாண தீர்த்தம்
ஆட ஆளும் நீரோ? ஐயா!
கோர்ட்டுப் பீசு குமாஸ்தாப் பீசு
கூடிக் காப்பி குடிக்கப் பீசு (295)
வெற்றிலை வாங்கிட வேறொரு பீசு
வக்கீல் பீசு மகைமைப் பீசு
வக்கா லத்து வகைக்கொரு பீசு
எழுதப் பீசு சொல்லப் பீசு
எழுதிய தாளை எடுக்கப் பீசு (300)

(வரிகள்: 301-350) தொகு

நிற்கப் பீசு, இருக்கப் பீசு
நீட்டின கையை மடக்கப் பீசு
பாரப் பீசு கீரப் பீசு
பார இழவு பயிற்றுப் பீசு
கண்டு பீசு, காணாப் பீசு (305
முண்டுத் துணிக்கொரு முழுமல் பீசு
அந்தப் பீசு, இந்தப் பீசு
ஆனைப் பீசு, பூனைப் பீசு
ஏறப் பீசு இறங்கப் பீசு
இப்படி யாக என்றென் றைக்கும் (310)
பீசு பீசாகப் பிச்சி எடுக்கும்
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!
குதித்துக் குடியை முடித்திட வேண்டாம்!
மூவலகேத்து மூவரும் நாணப்
பொது‘ரிக் கார்ட்டு’ப் புரையில் தனியாய் (315)
ஓர்மூலையில் இருந்து முத்தொழில் இயற்றும்
தெய்வத் தின்இரு சேவடி நிதமும்
கண்டும் தொழுது காணிக்கை யிட்டு
வணங்கா தவர்க்கு வருந்தோ சங்கள்
இத்தனை யென்றிட யாரால் முடியும்? (320)
இதற்கெலாம் முதலுக்கு எங்கே போவீர்?
வஞ்சியை முறித்து வாரப் போவீரா?
வாதி பாகத்து வக்கீல் உம்மைக்
கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்க்
‘கிராசு’ கேட்டுக் கிடுக்கி விடுவான் (325)
சந்தேக மில்லை, சந்தேக மில்லை
நீர்,
அண்டப் புரட்டனை அறிய மாட்டீர்,
புத்தியில் பெரியவர், பொல்லாத வம்பர்;
ஆளும் தரமும் அறிந்திட வல்லவர் (330)
சீரும் திறமும் தெரிந்திடச் சமர்த்தர்
ஆடிக் கறப்பதை ஆடிக் கறப்பவர்,
பாடிக் கறப்பதைப் பாடிக் கறப்பவர்,
தயவாய்ச் சொல்லுவார், தக்கில் கேட்பார்,
இரைந்து சொல்லுவார், எச்சில் எழுப்புவார், (335)
பார்ப்பார் என்பார், பல்லைக் கடிப்பார்
போருக்கு நிற்பார், புலிபோல் பாய்வார்,
அங்கும் இங்கும் அசையாதே என்பார்,
குனியாதே என்பார், கோட்டைப்பார் என்பார்,
கோட்டையும் கூடக் கூட்டாக் காமல் (340)
கேள்விகள் பலவும் கேட்க வருவார்.
ஓடும் குதிரைக்கு உச்சியில் கொம்புகள்
ஒன்றா? இரண்டா? உடன்சொலும் என்பார்!
நாம்
‘குதிரைக்கு ஏது கொம்புகள்?’ என்றால்
அது
கோர்ட்டு அலட்சியக் குற்றம் என்பார்,
‘கேள்வியை நன்றாய்க் கேட்டுச் சொல்லும்
இரண்டா? ஒன்றா? என்பதுஎன் கேள்வி;
உண்டா? இல்லையா? என்றுநான் உம்மிடம் (350)

(வரிகள்: 351-400) தொகு

கேட்டே னாஓய்? காதுகேட் காதோ?’
என்றெலாம் சொல்லி ஏமாற்றி விடுவார்,
குண்டில் விழுந்த குள்ள நரியைப்
படுத்தும் பாடெலாம் உம்மைப் படுத்துவார்,
இவர்,
ஈரங் கிகளை எடுத்துச் சொன்னால்
பீரங்கிகளும் பின்னிட் டோடும்
பொல்லாதவர்அவர், பொல்லா தவர்அவர்.
‘இந்த வக்கீலுக்கு ஏழரை நாட்டனும்
இணையா வாரோ! இணையா வாரோ? (360)
அறிந்து பிழையும் அறிந்து பிழையும்
சொந்த வீட்டில துரும்பையும் தூக்கி
எறியச் சற்றும் இயலாது என்பவர்,
வக்கீல் வீட்டில் வரிக்கல் பிடுங்கப்
போவதும் எத்தனை புத்திகேடு ஐயா! (365)
தங்கை மக்கள் தரித்திரம் அடைந்து
வயிற்றுக்கு இன்றி வாடி யலைய
வருக்கை மாம்பழமும் வாழைப் பழமும்
பெட்டிப் பாலும் பிஸ்கோத் துகளும்
ஊரார் மக்கள் உண்டு களித்திட (370)
வாங்கிச் செல்வது மதியுளோர் செயலோ?
மேடும் காடும் ‘வெட்டித் திருத்திப்
பாறையும் உடைத்துப் படுநில மாக்கிப்
பருவம் அறிந்து பண்பட உழுது
மண்ணலம் உணர்ந்து வளமிகப் பெய்து (375)
வாசிறை மீண்டான் வளரச் செய்து
சம்பாப் பயிரைத் தழைக்கச் செய்து
காலா காலத்தில் களைகள் எடுத்து
வேலியைக் கட்டி விலங்கினம் விலக்கிப்
பறைகளைக் கொட்டிப் பறவையை ஓட்டி, (380)
நீரும் பாய்ச்சி, நிதமும் இராப்பகல்
உறக்க மின்றி உழைப்ப தனாலே
விளையச் செய்த மேனிநெல் எல்லாம்
வக்கீல் வீட்டு வாயிலிற் கொண்டுபோய்
விரித்துக் காய்ச்சி வீசித் தூற்றி (385)
அளந்து வாரி அறைக்குட் போட்டு
வெறுங்கை யோடு வீடுபோய்ச் சேரும்
நம்மவர் போலிம் மாநிலத் தெங்கும்
ஒருவ ரேனும் உண்டோ? ஐயா!
மூச்சை யடக்கி முக்குளி போட்டுக் (390)
கீழுலகம் போய்க் கிடைத்த சிப்பியை
வாரி யெடுத்து மேலே வந்திடும்
முழுக்கா ளியிடனிடம் முத்தொன் றேனும்
இருப்பதும் உண்டோ? எண்ணிப் பாரும்!
படிப்பிலார் தேடும் பற்பல பொருளும் (395)
படித்தவர் வீட்டையே பார்த்துச் செல்லும்;
மூடர் முதலெலாம் வக்கீல் முதலாம்!
ஐயம் இதற்கிலை, ஐயம் இதற்கிலை!
ஐயா! ராஜி ஆவதே உத்தமம்!
ஐயா! ராஜி ஆவதே உத்தமம்! (400)

(வரிகள்: 401-450) தொகு

மருமக் கள்வழி வழங்கும்இந் நாட்டில்
வீடுவீ டாயொரு கோடிருந் தாலும்
வழக்குகட்கு ஓய்வு வருமோ ஐயா?”
என்(று)இவை யெல்லாம் எடுத்துச் சொல்லி
இறங்கிப் போனார், இக்கதை யெல்லாம் (405)
நாலாம் மனைவி நாடகக் காரியின்
மாமன் மகன்ஒரு வக்கீல் குமஸ்தன்
அறிந்து வந்தான், “அண்ணே! அந்த
வெள்ளையம் பிள்ளைக்கு வேலை யில்லை,
காடு கூப்பிடுது காலம் வரவில்லை; (410)
வீடுபோக் கிடுது! வேளைவர வில்லை!
கூனக் கிழவன் கோர்ட்டு வழக்கில்
என்ன அறிவான்? இவன்பேச் சையும்ஒரு
காரிய மாகக் கருதிட லாமோ?
செல்வமும் கல்வியும் செழித்த நாட்டில் (415)
வியாபா ரங்கள் மிகுந்த நாட்டில்
உழைப்புகள் பற்பல ஓங்கிய நாட்டில்,
வழக்குகள் நிதமும் வளர்ந்து வருவது
சகஜம் என்று ஸ்தாபித் திடநான்
‘அத்தா ரிட்டிகள்’ ஆயிரம் காட்டுவேன். (420)
அண்டப் புரட்டன் வக்கீல், என்ன
ஆளைத் தூக்கி விழுங்கிடு வாரோ?
இவர்வீச் செல்லாம் யாரிடம் செல்லும்?
ஏழை பாவம் யாவ ரேனும்
வந்தால், கொஞ்சம் வாலை முறுக்குவார், (425)
அன்றி,
பதிவு சாட்சி பலவேசம் பிள்ளை
கூட்டா ளிகளைக் கூட்டிற் கண்டால்
வாயைத் திறவார், மௌனம் கொள்வார்!
பேடியைக் கண்ட பீஷ்மரும் ஆவார்!
அண்டமும் கோழி அண்ட மாய்விடும்,
உருட்டும் புரட்டும் ஒழிந்து போய்விடும்,
அண்ணன் எதற்கும் அஞ்ச வேண்டாம்
எதுவந் தாலும் யானிருக் கின்றேன்!
என்னை,
அண்ணன் நன்றாய் அறிய மாட்டீர்,
இந்து லாவில் எழுத்துக்கள் இத்தனை,
மகம்மது லாவில் வரிகள் இத்தனை,
என்று சொல்ல எனக்குத் தெரியும்!
தி.பி. கோ.வைத் திருப்பித் திருப்பிப் (440)
பாரா இரவும் பகலும் இல்லை,
சுருக்கி உம்மிடம் சொன்னால் போதுமே!
சட்ட மெனக்குத் தலைகீழாய்த் தெரியும்!
நடைபடி யெல்லாம் நன்றாய்த் தெரியும்;
இரண்டு கையால் எழுதத் தெரியும்; (445)
அரைநிமி சத்தில் அநியா யங்கள்
ஐம்பத்தைக் கோர்ட்டில் ஆக்கத் தெரியும்,
பட்டிகை எழுதப் பாரம் போடக்
கெட்டி கெட்டி என்ற பேர்கேட்ட
ஏட்டுக் குமஸ்தன் யானே யாவேன். (450)

(வரிகள்: 451-500) தொகு

சாடை காட்டிச் சாட்சி களுக்குத்
தெரியாத காரியம் தெரியச் செய்ய
என்னைப் போல்இங்கு யாருண்டு? ஐயா!
கட்சிகள் வந்துஎன் கையில் தந்த
பணத்தைச் சொந்தப் பணம்போல் எண்ணி (455)
வாங்கிப் பெட்டியில் வைத்துக் கொள்வேன்
சிறிது மோசஞ் செய்திட மாட்டேன்,
வக்கீல் குமஸ்தன் சத்திய வாசகன்,
இன்னார் என்றுஇந் நாடெலாம் அறியும்!
ராஜியும் வேண்டாம்! கீஜியும் வேண்டாம்! (460)
நானே கேசு நடத்தி ஜயமும்
வாங்கித் தருகிறேன், மலைக்க வேண்டாம்!
என்
வக்கீல் பேர்க்குஒரு வக்கா லத்தை
எழுதிப் போடும்” என்றெலாம் சொல்லி (465)
இந்திர சாலம் மந்திர சாலம்
மகேந்திர சாலமும் வல்லஇம் மனிதன்
நாட்பண மாக நாலு ரூபாயும்
வக்கா லத்தும் வாங்கிச் சென்றான்;
‘அர்ஜி கொடுத்தேன், அவதி மாற்றினேன் (470)
பிரதி யுத்தரமும் பேஷாய்க் கொடுத்தேன்,
கேசில் ஜயமும் கிடைக்கும் நிச்சயம்’
என்று வார்த்தைகள் இதமாய்க் கூறி,
இடையிடை ரூபாய் இருபது முப்பது
தட்டிக் கொள்வான்! (தலைவிதி! தலைவிதி!) (475)
கொடுத்துவைத் தவர்கள் கொண்டுபோ னார்கள்
என்விதி யானும் இப்படி யானேன்!
நாகைக் கோர்ட்டில் கேசு நடந்தது;
நடந்தது நடந்தது நாலரை வருசம்!
ஐயோ! தெய்வமே! ஐயோ தெய்வமே! (480)
இரவும் பகலும் இன்றிஎன் கணவர்
பட்டபா டெலாம் பகர்வதும் எளிதோ?
திங்கட் கிழமை தெரிசனம் போச்சு!
திண்டாட் டங்கள் தீரா தாச்சு!
வெள்ளிக் கிழமை விரதம் போச்சு!
விவகா ரங்கள் மிகவே யாச்சு,
குளியும் போச்சு, கும்பிடும் போச்சு
கோர்ட்டு வாசல் குடியிருப் பாச்சு!
மாதாந் தங்கள் மறந்தே போச்சு!
வக்கீ லாபீஸ் வாழிடம் ஆச்சு! (490)
உயர்ந்த மேடை உறைவிடம் போச்சு,
ஒட்டுத் திண்ணை உறங்கிட மாச்சு,
மெத்தை திண்டு விதானம் போச்சு,
விரிக்கும் பாய்அவர் மேல்முண் டாச்சு!
துப்பட் டாவும் தொங்கலும் போச்சு, (495)
துவர்த்து முண்டும் துணியுமே யாச்சு!
புட்டும் பழமும் காப்பியும் போச்சு,
புளித்த காடியே போதுமென் றாச்சு!
தோசை இட்டலி தோய்ப்பனும் போச்சு,
தொந்தியும் கரைந்து சுருங்குவ தாச்சு! (500)

(வரிகள்: 501-510) தொகு

சுகந்தத் தூளும் சோப்பும் போச்சு
சும்மா சிரங்கு சொறிவது மாச்சு
சீலைக் குடையும் செருப்பும் போச்சு
தினமும் வெயிலில் திரிவது மாச்சு
அரைவண் டியுமாடும் அனைத்தும் போச்சு! (505)
அஞ்ச லோட்டம் அவர்க்கே யாச்சு
மட்டிலாக் கவலை மனங்குடி கொண்டது,
அளவிலாத் துன்பங்கள் அடிமை செய்தது!
ஐயோ! யாங்கள் அனைவரும் அந்நாள்
அடைந்த துயரெலாம் யாரே அறிவார்?


தாழிசை தொகு

குலக்குறத்தி வரினுமொரு கோடங்கி வரினும்
குறிகேட்டுப் பொருள்விரித்துக் கொண்டிருந்தோம் அம்மா!
துலக்கமுறப் பரல்பரத்திச் சோசியர்கள் கணித்துச்
சொன்னவைகள் உண்மையென்று துணிந்திருந்தோம், அம்மா! (01)
பதியிருக்கும் பதியெங்கும் பதிவாகச் சென்று
பால்வைத்துக் கணக்குகளும் பார்த்து வந்தோம் அம்மா!
கதிகிடைக்கும் எனக்காளி கொடைநடக்கும் காலம்
கடாத்தறித்துப் பொங்கலிட்டுக் காத்திருந்தோம் அம்மா! (02)
குறத்திசொன்ன குறியெல்லாம் குறிதவறிப் போச்சே!
கோடங்கி குறியாலும் குணமில்லா தாச்சே!
நிறுத்துரைக்கும் நிமித்திகரின் நிமித்தங்கள் இந்நாள்
நினைக்கும்போ துளம்வெந்து நீறாகு தம்மா! (03)
பதித்தலத்துப் பால்வைத்தும் பயனடைந்தோ மில்லை!
பலிகொடுத்தும் தேவிஅருள் பாலித்தா ளில்லை!
விதித்தவிதி தான்இருக்க வேறுவிதி வருமோ?
விம்மியினி அழுவதெலாம் வீணலவோ அம்மா! (04)

வேறு தொகு

இப்பெருங் கஷ்டம் யாரே படுவர்?
கணவர்,
அல்லும் பகலும் அலைந்து சடைத்தார்,
எலும்பும் தோலு மாக இளைத்தார்
இருமல் இழுப்புக்கு இருப்பிட மானார்,
எதிலும் விருப்ப மில்லா தானார்!
வெளியூர்ப் போக்கை விட்டே விட்டார்,
உள்ளூர் மட்டும் உலாவி வந்தார்,
சிலநாள் பின்னும் செல்லச் செல்ல
தெருவில் மாத்திரம் திரியவா ராயினர்! (10)
படிப்படி யாய்இப் படியவர் பாடு
குறைந்து குறைந்து கொண்டே வந்தது
அண்டைவீ டாகி அறைப்புரை யாகி,
படிப்புரை யாகிப் பாயிலும் ஆனார்!
எழுந்து நடக்க இயலா தானார்,
நடந்தவர் கீழே கிடந்தா ரம்மா! (15)

ஒன்பதாவது, கோடேறிக் குடிமுடித்த படலம் முற்றியது தொகு

பார்க்க தொகு

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
1.குலமுறை கிளத்துப் படலம்
2.மாமி அரசியற் படலம்
3.கேலிப் படலம்
4.கடலாடு படலம்
5.பரிகலப் படலம்
6.நாகாஸ்திரப் படலம்
7.கருடாஸ்திரப் படலம்
8.வாழ்த்துப் படலம்
10.யாத்திரைப் படலம்
11.கும்பியெரிச்சல் படலம்