சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.


25 (1)
பாசனம் மென்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும்
வாசமே யிருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசாம்
கோசமே மதிலுருப் பாண்குறி முட்டை முறை பண்டாரம்
தேசிகன் வணிகன் றேசாந்திரியொடு குருவுமாமே.

26 (2)
மூசல் மொய்த்திடல் சாவென்ப முடலையே திரட்சி யுண்டை
கீசகங் குரங்கு வேயாங் கேழ் நிறமொளி யொப்பாகும்
வீசலேயெறிதலீவாம் வெம்மை யுட்டணம் விருப்பம்
கேசர மகிழ்பூந்தாதாங் கிருட்டியொ ரீற்றாப் பன்றி.

27 (3)
அசி படைக்கலமே வாளே அவமதிச் சிரிப்பு முப்பேர்
நிசி யிரா மஞ்சள் பொன்னாம் நீர் புனல் குணம் பூராடம்
பிசியென்ப பொய்யும் சோறும் பேசரும் பொருளு முப்பேர்
சுசி கோடைசுத்தந் தீயாஞ் சுடர் விளக் கிரவி யங்கி.

28 (4)
ஆசென்ப விரைவு குற்றம் அற்ப மெய்க்கவச நாற்பேர்
காசென்ப கோழை குற்றங் கதிர்விடு மணி முப்பேரே
ஆசினி பலாவிசேடம் மரவுரி மரக்காழ் விண்ணாம்
தேசிக மழகு காந்தி திசைச்சொல் லோர்கூத்துச் செம்பொன்.

29 (5)
பச்சையே மரகதம் தோல் பரிமளப் புதல் மால் புந்தி
கச்சை யென்பது தழும்பு கயிறொடு கவச முப்பேர்
செச்சைமை வெட்சி தேய் வைதிகையென்ப திசை சுணங்காம்
மிச்சையே பொய்த்தாலாகு மிடித்தலஞ் ஞானமுப்பேர்.

30 (6)
பிச்ச மாண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையுமாகும்
கச்சம் யானைக்கழுத்திற் கய றளவொடு மரக்கால்
எச்சமே குறை சேயாக மிகமென்ப மரக்கோடி யானை
அச்சமே யகத்தியைம் மை யஞ்சலிம்முப் பேராமே.

31 (7)
ஆசையே திசை பொன் அன்பாம் ஆகுலம் வருத்த மோசை
காசையே காயா நாணல் காமர் தா னழகு காதல்
பாசமே கயிறு கூளி பக ரூசித்துளை அன்பாகும்
தூசென்ப தாடை யானைப் புரசை தூசிப்படைப் பேர்.

32 (8)
தாசியே பரணி சூளை தளியென்பது துளியே கோயில்
வேசரி கழுதையே கோவேறு வேசரி யுமாகும்
ஆசுகம் பகழி காற்றாம் அந்தரி யுமையே துர்க்கை
கோசிகஞ் சாம வேதங் கூறு பட்டாடைக்கும் பேர்.

33 (9)
பசுவேறு சீவனாவாம் பாரதி வாணி தோணி
வசுவே ஆன்கன்றும் பொன்னும் வசுக்களுந் தீயு நாற்பேர்
அச மூவாண்டுறு நெல் லாடாம் அணை யென்ப கரையே மெத்தை
சசி யென்ப கர்ப்பூரஞ் சந்திர னயிராணி முப்பேர்.

34 (10)
விசும்பு பொன் னுலகு மேகம் விண்ணொடு திசையு நாற்பேர்
தசும்பு நற்குட மிடாவாஞ் சாத்தனே அருகன் ஐயன்
இசை புகழ் கிளவி பாட்டாம் ஏங்கலே யொலி யிரங்கல்
பிசுனனே கோளன் பொய்யன் உலோபனும் பேசு முப்பேர்.

35 (11)
வச்சிரங் சதுரக்கள்ளி வைரமே குலிச முப்பேர்
நொச்சியே சிந்து வார மதில் சிற்றூர் நுவலலாமே
தச்சனே சித்திரைப்பேர் தபதி யென்றானுமாகும்
உச்சி நண்பகலுச் சிப்பேர் உறுப் பவயவ முடம்பாம்.

36 (12)
பாசென்ப பசுமை மூங்கில் பப்பென்ப பரப்போ டொப்பாம்
மாசென்ப சிறுமை குற்றம் மழை அழுக்கொடு நாற்பேரே
கேசம் பெண்மயிற்கும் ஆண்பாற் மயிற்குங் கிளத்தலாகும்
வாசியே குழன் முன்னா ண்மா வாசி யென் னேவ னாற்பேர்.

37 (13)
மிசையென்ப துணவு மேடு மீமிசைச் சொல்லு முப்பேர்
விசயமே வென்றி வெல்லம் வெங்கதிர் மண்டலப்பேர்
முசலியே யுடும்பு தாழை முந்திய ராம னோந்தி
வசதி நல்லிட மூர் வீடாம் வர னயன் பரமன் காந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சூடாமணி_நிகண்டு/4-19&oldid=29066" இலிருந்து மீள்விக்கப்பட்டது