சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.


38 (1)
துஞ்சலே நிலை பேறாகுந் துயில் சோம்பு சாவுமாகும்
பஞ்சரஞ் செருந்தி கூடாம் பரதரே கழியர் நாய்கர்
கஞ்சமே தாளங் குல்லை கமல வெண்கலம் வட்டப்பம்
குஞ்சம் ஈயோட்டி நாழி குறள் குன்றி குறளைச் சொல்லே.

39 (2)
நெஞ்சென்ப மன மார்பின்பேர் நிழல் செல்வங் குளிர்ச்சி சாயை
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முது கிவ்வைந்தே
வஞ்சி மேற்செல வோரூர் பா வல்லி மென்மருங்குற் பெண்ணாம்
தஞ்சமே எளிமை யென்ப தரு பற்றுக்கோடுமாமே.

40 (3)
அஞ்சனங் கறுப்பு மை திக்கானையி லொன்று முப்பேர்
மஞ்சரியே பூங்கெத்து மாலை செந்தளிருமாகும்
அஞ்சலி வணங்கல் வாவற்பறவையு மாகுமென்ப
இஞ்சியே புரிசை யிஞ்சி யெறுழென்ப வலி தண்டாமே.

41 (4)
கிஞ்சுக முருக்குச் செம்மை கிருட்டினன்தான் மால் பார்த்தன்
கஞ்சமே கண்ணாடி கரிக்குருவிக்கும் பேரே
பஞ்சமே சிறுமை யைந்தாம் பகழி யம்பிதன் குதைப்பேர்
வஞ்சனை மாயை பொய்யா மாயன் மால் கருநிறத்தோன்.

42 (5)
குஞ்சியாண் மயிர் புட் பார்ப்புக் குன்றியின் கொடிமுப்பேரே
வஞ்சமே கபடம் வாளா மாயம் வஞ்சனை பொய் யென்ப
கஞ்சனே குறளன் வேதன் களங்கந்தான் அழுக்குக் குற்றம்
கஞ்சிகை சிவிகை யாடை கட்டிடு திரையுமாமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=சூடாமணி_நிகண்டு/5-19&oldid=29067" இலிருந்து மீள்விக்கப்பட்டது