பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

156

அரசியலமைப்புத் திட்டங்கள்

மானிடவியலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் விளங்கும்.

பிளேட்டோ என்னும் கிரேக்க அறிஞர் அரசியலைத் தத்துவசாஸ்திர அடிப்படையில் அமைக்க முயன்றுள்ளார். ஆதலால் அவருடைய அரசியற் கருத்துக்கள் பெரும்பாலும் சிந்தனை முறையில் அமைந்துள்ளவை. பிளேட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டில் உயிரியல் (Biology) அடிப்படையில் அரசியலை விளக்குகின்றார். மனிதன் உயிர் வாழ்வதற்கே அரசியல் வாழ்க்கை தேவையாயிருக்கிறது என்னும் கொள்கையைப் பின்பற்றி அரிஸ்டாட்டில் கூறுவதால், அவர் முறையை உயிரியல் முறை என்று கூறலாம். ஐரோப்பாவில் இடைக்காலத்திலும் ஏனைய நாடுகளில் நெடுங்காலமாகவும் அரசியல் நிலையங்களுக்கு இறையியலையே (Theology) ஆதாரமாக அறிஞர்கள் கூறிவந்துள்ளனர். கிறிஸ்தவ அறிஞர்களுடைய கொள்கைகள் இம்முறையையே பின்பற்றி வந்துள்ளன. இவ்வுலகப் பொருள்களுக்கும் அவ்வுலக அருளுக்கும் திருவள்ளுவர் தொடர்பு கூறியிருப்பதுபோல, மக்களுக்கும் இறைவனுக்கும் தொடர்பு கூறியவர் செயின்ட் அகஸ்டின் என்னும் கிறிஸ்தவ அறிஞர். 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்த சில அறிஞர்கள் இராச்சியத்தின்தோற்றம் சமூக ஒப்பந்தத்தின்மூலம் ஏற்படுவது என்று கூறத்தொடங்கியபோது, அரசியலுக்குச் சட்ட முறையில் ஓர் ஆதாரம் கற்பிக்கப்பட்டது. அரசியல் உரிமைகள், கடமைகள் முதலியவற்றைப் பற்றிய பிற்கால ஆராய்ச்சி முழுவதும் சட்டத்திற்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்புபற்றி யெழுந்ததாகும்.

சென்ற சில நூற்றாண்டுகளாக விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிபுகள் அரசியல் ஆராய்ச்சியையும் பாதித்திருக்கின்றன. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திருந்த டார்வின் என்னும் உயிரியல் அறிஞர் இயற்கைத் தத்துவத்தைப் பரிணாம முறையில் விளக்க முயன்றார். இப்பரிணாமக் கொள்கை விஞ்ஞான ஆராய்ச்சியில் ஓர் அடிப்படைக் கொள்கையாக அமைந்ததால், அது எல்லாக் கலைகளுக்கும் பரவத் தொடங்கிற்று. அரசியல் ஆராய்ச்சியாளரும் மானிடவியல் முடிபுகளை மேற்கொண்டு, பரிணாம முறையில் மனித சமூகத்தின் அரசியல் வளர்ச்சியை விளக்க முற்பட்டனர். அவ்வாறே தற்காலத்தில் உள்ள ஐரோப்பியப் பேரறிஞரான ஐன்ஸ்டைன் என்பவரது சார்புக்கொள்கை (Relativity) எல்லாக் கலைகளையும் பாதித்துள்ளது. இதற்கு அரசியல் ஒரு விலக்கன்று. சார்புமுறையில் அரசியல் கோட்பாடுகளை நிருணயிப்பதும், பிரச்சினைகளை விளக்க முயலுவதும் தற்காலத்தில் அரசியல் ஆராய்ச்சியின் முயற்சியாயிருப்பது கவனிக்கத்தக்கது. மனிதன் செயல்களும் எண்ணங்களும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதை எல்லோரும் அறிவர். மனித உள்ளத்தின் பல தளங்களையும் ஆராயும் உளவியல் (Psychology) இன்று பீராய்டு விளக்கிய புதுக்கருத்துக்களைப் பின்பற்றி மிக முன்னேறியிருப்பதால், குடும்பம் இராச்சியம் வரையுள்ள பல குழுக்களில் செயலாற்றும் மனிதன் அடிப்படை எண்ணங்களையும் கற்பனைகளையும், அவன்றியாமலே அவனை இயக்கும் மனோ சக்திகளையும் நாம் அறிந்து, சோதனை வாயிலாகத் தெளிவாக்க முடிகிறது. இந்நிலையில் அடிப்படையான மனித குணம், சமூகப்பண்பாடு ஆகிய இவற்றை உணரவேண்டிய அரசியலாராய்ச்சியாளருக்குத் தற்கால உளவியல் மற்றெல்லா வியல்களுக்கும் மேலான வழிகாட்டியாய் கூதவுகிறது. அவ்வக் காலங்களில் மனிதனது கருத்துக்களைப் பெரும்பான்மை பாதித்துவரும் கோட்பாடுகள் அவ்வக்கால அரசியற் கொள்கைகளையும் பாதித்து வந்திருப்பது மேற்கூறியவற்றால் புலனாகும். ரா. பா.

அரசியல்-கட்டுரைகள் : பார்க்க: அடிப்படை உரிமைகள், அதிகாரப் பிரிவினை, அமைப்பிற்குட்பட்ட அரசாங்கம், அரசாங்க அமைப்பு, அரசாங்கம், அரசியல் அமைப்புத் திட்டங்கள், அரசியற் கருத்துக்கள், ஆதிபத்தியக் கோட்பாடு, ஆட்சிவேண்டாக்கொள்கை, இராச்சியத்தின் தன்மை, ஏகாதிபத்தியம், ஒற்றாடல், கம்யூனிசம், குடியரசு, குடியுரிமை, கூட்டாட்சி, சர்வாதிகாரத்துவம், சிண்டிகலிசம், சோவியத் அமைப்பு, சோஷலிசம், தல ஆட்சி, பாசிசம், பார்லிமெண்டு நடைமுறை, மார்க்சிசம், வரவுசெலவுத் திட்டம், வாக்குரிமை, விகிதப் பிரதிநிதித்துவம், ஜனநாயகம் முதலியன.

அரசியலமைப்புத் திட்டங்கள்: அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க அறிஞர் அற்சியல் அமைப்பே இராச்சியத்தின் உயிர் என்று கூறியுள்ளார். அரசாங்கம் எந்த நாட்டிற்கும் இன்றியமையாததாகையால், அரசியலமைப்பும் இன்றியமையாதது என்பதை முற்காலத்தவர்களும் அறிந்திருந்தனர். அரசியலமைப் பின் முக்கியமான அமிசங்களை அந்தந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இச்சட்டங்கள். பொதுமக்களின் பிரதிநிதிகளடங்கிய அரசியல் நிர்ணய சபைகளால் இயற்றப்பட்டவை. அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்சு ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு. ஜெர்மனியின் 1919ஆம் ஆண்டின் வைமார் அரசியலமைப்பு, ஆஸ்திரேலியக் கூட்டாட்சி அரசியலமைப்பு, இந்திய அரசியலமைப்பு, இவற்றையெல்லாம் உதாரணங்களாக எடுத்துக்காட்டலாம். இங்கிலாந்தைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும் அரசியலமைப்பின் விவரங்கள் ஒரு பத்திரத்திலோ பல பத்திரங்களிலோ எழுதப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்தின் அரசியலில் முக்கியமான அமிசங்களுக்குப் பத்திரங்கள் அல்லது இயற்றிய சட்டங்கள் ஆதாரங்களாக இல்லை. இந்த வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்புக்களைப் பத்திரம் கண்ட அரசியலமைப்புக்களென்றும், பத்திரம் காணாத அரசியலமைப்புக்களென்றும் ஒரு பாகுபாடு வழங்குகிறது. ஆனால் இது ஒழுங்கான பாகுபாடன்று. இங்கிலாந்தின் அரசியலுக்குப் பெரும்பாலும் சம்பிரதாயங்களும் வழக்கங்களும் முக்கியமான ஆதாரங்களாயிருந்தபோதிலும், அரசியலின் சில அமிசங்கள் பார்லிமென்டால் இயற்றப்பட்ட சட்டங்களில்தான் காணப்படும். பார்லிமென்டு மந்திரிசபை முறை, மந்திரிசபையின் கூட்டுப் பொறுப்பு, மன்னர் வீட்டோ (Veto) சலுகையை உபயோகப்படுத்தாமை, மசோதா சட்டமாயியற்றப்படுவதற்கு முன் மூன்று முறை ஒவ்வொரு சபையிலும் படிக்கப்பட வேண்டுமென்பது முதலானவையெல்லாம் சம்பிரதாயங்கள். பார்லிமென்டுச் சீர்திருத்த முறைகள், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஐக்கியம் முதலியவைகளுக்கெல்லாம் ஆதாரங்கள் பார்லிமென்டுச் சட்டங்களேயாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பு 1789-ல் கூடிய பிலடெல்பியா அரசியல் நிர்ணய சபையில் இயற்றப்பட்ட சட்டத்தில்தான் அடங்கியிருக்கிறது. அப்படியிருந்தும் சம்பிரதாயங்களாலும் வழக்கங்களினாலும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களாலும் அச்சட்டத்தில் முக்கியமான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அரசியல் திட்டப்படி மாகாணங்களால்தேர்ந்தெடுக்கபட்ட வாக்காளர் மன்றத்தின் மூலமாய் நிருவாகத் தலைவர், மறைமுகமாக நியமிக்கப்படவேண்டும் என்பது