விநோதரசமஞ்சரி

விநோத ரச மஞ்சரி

வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்

முகவுரை

தமிழ்ப் பாஷையினுள் நூல்கள் அனைத்தும் சாதாரணமாக உணர்தற்கரிய செய்யுள் ரூபமாக இருத்தலின், அவை ஐயந்திரிபறக் கற்றோர்க்கன்றி மற்றோர்க்கு எளிதில்புலப்படாமை நோக்கி, வசன நடையாயிருந்தால் யாவருக்கும் உபயோகமாகுமென்று கருதி, சென்னைத் துரைத்தன வித்தியாசாலையில் திராவிடாந்திர பாஷா போதகராயிருந்த பெர்ஸிவல் துரை யவர்களுடைய அனுமதி கொண்டு, அவ்வித்தியாசாலையில் பிரதம தமிழ்ப் பண்டிதராயிருந்த அஷ்டாவதானம் - வீராசாமி செட்டியாரவர்கள், ஆண் பெண் இருபாலரும் ஆவசியமாக அறிய வேண்டிய நூற்களிலுள்ள கருத்துக்களைத் தெய்வங் கொள்கை, கற்பு நிலைமை, கற்றாய்ந்தொழுகல், நன்றி மறவாமை, கீத வாத்திய விநோதம், பயனிலுழவு முதலிய வகுப்பினுட் படுத்தி எடுத்து விளக்கியும், முற்காலத்திலிருந்த கம்பர், ஔவையார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேக முதலிய வித்துவான்களின் சரித்திரங்களிலும், அவர்கள் பாடிய பாடல்களிலும் சிலவற்றைத் தொகுத்தும், அப்பாடல்களுக்கு உசிதமாக உரையெழுதியும், அவற்றால் உலக வழக்குச் செய்யுள் வழக்குகளை ஒருவாறு விளக்கியும் அவற்றின் இடையிடையே சமயோசிதமும் சாதுரியமுமாகிய பற்பல பழமொழிகளைச் சேர்த்தும் வாசிப்பவர்களுடைய நாவிற்கு நயமும், செவிக்கின்பமும், மனதிற்கு மகிழ்ச்சியும், அறிவிற்கு விருத்தியும், பொழுது போக்கற்கு உல்லாசமும் தரத்தக்க இனிய செந்தமிழ் வசன நடையில் அவ்விஷயங்களை ஒன்றன்பின்னொன்றாக, அக்காலத்தில் இச் சென்னை மாகாணத்தில் பிரசுரிக்கப்பட்டு வந்த தினவர்த்தமானி என்னும் பத்திரிகையில் வெளிப்படுத்தி வந்தார்கள். அவை அப் பத்திரிகையின் கையொப்பக்காரர்களுக்கேயன்றி ஏனையோர்க்குப் பயன்படாததையும், கையொப்பக்காரர்களிலும் பெரும்பான்மையோர் அப்போதுக்கப்போது பார்த்தும் பாராமலும் கைவிட்டதையும் குறித்துணர்ந்து, அவற்றையெல்லாம் தொகுத்து வேறு சில விஷயங்களையும் நூதனமாகச் சேர்த்து ஒரே புத்தக வடிவமாய் அச்சிட்டு அப்புத்தகத்திற்கு, விநோதரச மஞ்சரி என்னும் பெயருமிட்டார். இப்புத்தகம் அப்போதைக்கப்போது பிரசுரிக்கப்பட்டு வந்த காலத்தில் பலவகையிலும் திருத்தமடைந்து கொண்டே வந்தது. ஆயினும் இக்காலத்து வெளிவந்துலவும் பிரதிகளிற் காணப்படும் பலவித வழுக்களை நீக்கி, விஷயங்கள் முன் பின் நிற்க வேண்டிய முறையையு மனுசரித்து வேறு விநோதக் கதைகளையுஞ் சேர்த்து, ஒரு நூதனப் பதிப்பு வெளிக்குக் கொண்டுவர வேண்டுமென்று விரும்பிய பல நேயர்களுடைய விருப்பத்தை முன்னிட்டு கவிரத்ந சிந்தாமணி என்னும் ‘காளிதாஸப் புலவர் சரித்திர’மும், ‘ஓர் பதிவிரதை சரித்திர’முஞ் சேர்த்து வெளிப்படுத்தலாயிற்று.

பதிப்பாளர்.

[குறிப்பு: இம்முகவுரையும், இந்நூலின் கட்டுரைகளும் பதிப்பாளர், பி.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள், (பி. இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ், (புத்தக வியாபாரிகள்), 57, வெங்கட்ராமய்யர் தெரு, மின்ட் போஸ்ட், சென்னை-1) வெளியிட்ட (சென்னை, சூளை, ஸ்ரீ பாரதி அச்சகத்தில் அச்சிடப்பட்ட) விநோதரச மஞ்சரி எனும் நூலின் 1969-ஆம் ஆண்டுப் பதிப்பில் கண்டுள்ளபடி பதிவிடப் பெற்றது.]

பொருளடக்கம்

வெளியிணைப்பு தொகு

"https://ta.wikisource.org/w/index.php?title=விநோதரசமஞ்சரி&oldid=1526086" இலிருந்து மீள்விக்கப்பட்டது