மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 04

மனோன்மணீயம் நாடகம் தொகு

அங்கம் 01- நான்காம் களம் தொகு

இடம்: கன்னிமாடம்

காலம்: காலை

(மனோன்மணி சயனித்திருக்க, சீவகன், வாணி, செவிலி சுற்றிநிற்க)

(நேரிசை ஆசிரியப்பா)
சீவகன்
உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே!
உனக்குறு துயரம் எனக்குரை யாததென்?
விரும்பிய தென்னென் றுரைக்கில் விசும்பில்
அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்
வருந்துவ தென்னென வழங்கின் மாய்ப்பன்
உறுத்துங் கூற்றுவ னாயினும் ஒறுத்தே.
தாய்க்கும் ஒளித்த சூலோ? தையால்
வாய்க்கும் ஒளித்த உணவோ? மங்காய்
ஏதா யினுமெனக் கோதா துளதோ?
பளிங்கும் பழித்த நெஞ்சாய்! உனக்கும் (10)
களங்கம் வந்த காரண மெதுவோ?
பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி
இசையது விரித்தோர் பிசித மரமேல்
இருந்து பாடு மெல்லைஓர் வானவன்
திருந்திய இன்னிசை அமுதிற் செப்பிப்
போயது கண்டு சேயதோர் போந்தையில்
தனியே பறந்துபோய்த் தங்கி அங்கவன்
பாடிய இசையே கூவிட உன்னி
நாடி நாடிப் பாடியும் வராது
வாடி வாயது மூடி, மௌனமாய் (20)
வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும்
நேற்றன் றோவெனக் கியம்பினை! நெஞ்சில்
தோற்றிய தெல்லாம் இங்ஙனஞ் சொல்லும்
பேதாய்! இன்றெனக் கென்னோ
ஓதாய் உன்றன் உளமுறு துயரே! (பா-1)
செவிலி
உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச்
சொல்லாய் என்னில் துப்பிதழ் துடித்துச்
சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில்
யாம்படுந் துயரம் அறிந்துங்
காம்படு தோளீ! கருதாய் போன்மே. (30) (பா-2)
சீவகன்
ஐயோ இதற்கென் செய்வேன்? ஆ!ஆ!
பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்?
பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற்
சோறே போலப் பேரே யன்றி
வேறே என்பயன் விளைக்கும் என்றுனி
நெடுநாள் நைந்து நைந்து கெடுவேன்!
பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி
வந்துழி யகலும் பனியெனச் சுந்தர
முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக்
கனியென வுனைநான் கண்டநாள் தொட்டு (40)
நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும்
என்மிகை நீக்கி இன்ப மெய்தி
உன்மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற
உயிர்தரித் திருந்தேன்! செயிர்தீ ரறமும்,
வாய்மையும், மாறா நேசமுந், தூய்மையும்
தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன்
எங்கும் கலந்த இயல்பா லன்றோ
மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்!
உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில்
எதுவோ உறுதி யியம்பாய்? (50)
மதிகுலம் விளங்க வருமனோன் மணியே! (பா-3)
மனோன்மணி
(கண்ணீர் துளும்பி)
எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு
வந்த தன்று;மேல் வருவது மிலை,இலை
உரைக்கற் பாற்றதொன் றில்லை
உரைப்ப தெப்படியான் உணரா தொழியிலே? (பா-4)
சீவகன்
குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ;
அழுவையேல் ஆற்றேன்; நீயழல் இதுவரைக்
கண்டது மிலை;யான் கேட்டது மிலையே.
பெண்களின் பேதைமை என்னே, தங்களைப்
பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும், (60)
விழுமம் விளைத்துத் தாமே யழுவர்.
என்னே அவர்தம் ஏழைமை! மின்னேய்
(வாணியை நோக்கி)
மருங்குல் வாணீ! வாராய் இப்புறம்.
அருங்கலை யாய்ந்தநின் தந்தைசொன் மதியும்
உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்?
நலமே சிறந்த குலமே பிறந்த
பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன்
தன்னைநீ விடுத்துப் பின்னையோர் பித்தனை
நச்சிய தென்னை? சீச்சீ!
நகையே யாகும் நீசெயும் வகையே? (பா-5) (70)

தொகு

வாணி
அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே!
நிகழுமென் சிறிய நினைவெலாம் விரித்து
விநயமாய் நின்பால் விளம்ப, எனது
நாணம் நாவெழா தடக்கு மாயினும்
பேணி யொருமொழி பேசுவன்,
நேசமில் வதுவை நாசகா ரணமே. (பா-6)
சீவகன்
புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப்
பெற்றா ராற்றுவர்; ஆற்றிய வழியே
தையலார் மையலாய் நேயம் பூண்டு
வாழ்வது கடமை. அதனில் (80)
தாழ்வது தகுதியோ தருமமோ? சாற்றே. (பா-7)
வாணி
கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்;
ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும்
ஆக்கப்படும் பொருளாமோ? நோக்கில்
துன்பமே நிறையும் மன்பே ருலகாம்
எரியுங் கானல் விரியும் பாலையில்
திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது
தங்கி அங்கவர் அங்கங் குளிரத்
தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில்
நேருந் தாகம் நீக்குவான் நிமல (90)
ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும்,
ஆறலை கள்வர் அறுபகை மீறில்
உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும்,
முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில்
ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும்,
இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி
இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி,
பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய்,
இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய்,
நின்ற காதலின் நிலைமை நினையில், (100)
இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல்
இருவர் சிந்தையும் இயல்பா யுருகி
ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால்
ஆக்கப் படும்பொரு ளாமோ?
வீக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே! (பா-8)
சீவகன்
ஆமோ அன்றோ யாமஃ தறியேம்.
பிஞ்சிற் பழுத்த பேச்சொழி, மிஞ்சலை.
மங்கைய ரென்றும் சுதந்தர பங்கர்,
பேதையர், எளிதிற் பிறழ்ந்திடும் உளத்தர்,
முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ (110)
பெரிது?மற் றவர்தமில் உன்னயம் பேண
உரியவர் யாவர்? ஓதிய படியே
பலதே வனுக்கே யுடன்படல் கடமை.
வாணி
இல்லையெனில்? -- -- --
சீவகன்
-- கன்னியா யிருப்பாய் என்றும்.
வாணி
சம்மதம். -- -- --
சீவகன்
-- கிணற்றிலோர் மதிகொடு சாடில்
எம்மதி கொடுநீ யெழுவாய்? பேதாய்!
கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்?
அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்?
வாணி
விரைதரு மோசிறு கறையா னரிக்கில்?
சீவகன்
நானே பிடித்த முயற்கு மூன்றுகால் (120)
ஆனால் எங்ஙனம்? ---- ----
வாணி
---- ---- அரிவையர் பிழைப்பர்?
(சேடி வர)
சேடி
சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில்,
கால நோக்கினர். --- ---
சீவகன்
--- ---- சாலவு மினிதே;
ஆசனங் கொணர்தி. -- --
(வாணியை நோக்கி) -- -- யோசனை வேண்டாம்;
எப்படி யாயினுஞ் சகடர் சொற்படி
நடத்துவம் மன்றல், நன்குநீ யுணர்தி.
ஆயினும் தந்தனம் ஐந்துநாள்,
ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே. (பா-9)
வாணி
இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன்.
பொறுத்தருள் யானிவண் புகன்ற (130)
மறுத்துரை யனைத்தும் மாற்றலர் ஏறே. (பா-10)
(சுந்தர முனிவர் வர)

தொகு

சீவகன்
(முனிவரைத் தொழுது)
வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி
இருந்தரு ளுதியெம் இறைவ!
பரிந்து வந்ததெம் பாக்கியப் பயனே. (பா-11)
சுந்தர முனிவர்
(மனோன்மணியை நோக்கி)
தீதிலை யாதும்? க்ஷேமமே போலும்.
ஏதோ மனோன்மணி! ஓதாய்
வேறுபா டாய்நீ விளங்கு மாறே. (பா-12)
மனோன்மணி
(வணங்கி)
கருணையே உருவாய் வருமுனீ சுரரே!
எல்லாம் அறியும் உம்பாற்
சொல்ல வல்லதொன் றில்லை, சுகமே. (பா-13) (140)
செவிலி
(மனோன்மணியை நோக்கி)
கரும்பே, யாங்கள் விரும்பும் கனியே!
முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு
யார்வயி னுரைப்பாய்? ஐயோ! இதுவென்?
(முனிவரை நோக்கி)
ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள்
தேசிக வடிவே! செப்புமா றறிகிலம்
மாசறு மனோன்மணி தன்னுரு மாறி
நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம்
மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்;
நண்ணாள் ஊசலும், எண்ணாள் பந்தும்;
முடியாள் குழலும், படியாள் இசையும்; (150)
தடவாள் யாழும், நடவாள் பொழிலும்;
அணியாள் பணியும், பணியாள் ஏவலும்;
மறந்தாள் கிளியும், துறந்தாள் அனமும்;
தூங்குவள் போன்றே ஏங்குவள்; எளியை!
நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை;
கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்;
மீட்டும் கேட்பள், மீட்டும் பார்ப்பள்;
தனியே யிருப்பள், தனியே சிரிப்பள்!
விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்;
இங்ஙன மிருக்கில் எங்ஙனம் ஆமோ? (160)
வாணியும் யானும் வருந்திக் கேட்டும்
பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள்.
அரசன் கேட்டும் உரைத்திலள், அன்பாய்
முனிவநீ வினவியும் மொழியா ளாயின்,
எவருடன் இனிமேல் இசைப்பள்?
தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே? (பா-14)
சுந்தரமுனிவர்
(சீவகனை நோக்கி)
குழவிப் பருவம் நழுவுங் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம்.
காதல் வெள்ளங் கதித்துப் பரந்து (170)
மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட
இருகரை புரண்டு பெருமூச் செறியில்,
எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை?
தாதா அன்பு போதா தாகும்!
காலம் கன்னியர்க் குளதெனும் பெற்றி
சாலவும் மறந்தனை போலும்! தழைத்துப்
படர்கொடி பருவம் அணையில், நட்ட
இடமது துறந்துநல் லின்ப மெய்த
அருகுள தருவை யவாவும்! அடையின்
முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும் (180)
அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்;
இலையெனில் நலமிழந் தொல்கும், அதனால்
நிசிதவே லரசா டவியில்
உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. (பா-15)
சீவகன்
எங்குல குருவே! இயம்பிய தொவ்வும்
எங்குள திக்கொடிக் கிசைந்த
பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. (பா-16)
சுந்தரமுனிவர்
உலகுள மற்றை யரசெலாம் நலமில்
கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய,
சகமெலாந் தங்க நிழலது பரப்பித் (190)
தொலைவிலாத் துன்னலர் வரினும், அவர்தலை
யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து,
புகழ்மணங் கமழும் குணம்பல பூத்து,
துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்
கனியுங் கருணையே கனியாக் காய்த்து,
தருமநா டென்னும் ஒருநா மங்கொள்
திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப்
புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன்
நீங்கி லில்லை நினது
பூங்கொடி படரப் பாங்காந் தருவே. (பா-17) (200)
சீவகன்
நல்லது! தேவரீர் சொல்லிய படியே,
இடுக்கண் களைந்த இறைவ!
நடத்துவன் யோசனை பண்ணி நன்றே. (பா-18)
சுந்தரமுனிவர்
யோசனை வேண்டிய தன்று, நடேசன்
என்றுளன் ஒருவன். ஏவில்
சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. (பா-19)
சீவகன்
கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி....
சுந்தரமுனிவர்
(எழுந்து)
அரகர! குருபர! கிருபா நிதியே!
காவாய் காவலன் ஈன்ற
பாவையை நீயே காவாய் பசுபதே! (பா-20) (210)
(சுந்தர முனிவர் போக)
சீவகன்
தொழுதோம்! தொழுதோம்! செவிலி! அவ்வறைக்
கெழுதுங் கருவிகள் கொணராய்
பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே. (பா-21)
(சீவகன் முதலியோர் போக)

முதல் அங்கம் நான்காம் களம் முற்றிற்று தொகு

பார்க்க

I. முதல் அங்கம் தொகு

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 01
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 02
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 03
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 05
மனோன்மணீயம்(ஆசிரிய முகவுரை, கதைச்சுருக்கம்.)
மனோன்மணீயம் மூலம் (அங்கம் 01- பாயிரம்)

II தொகு

II:01 ^ II:02 ^ II:03

III தொகு

III:01 ^ III:02 ^ III:03 ^ III:04

IV தொகு

IV:01 ^ IV:02 ^ IV:03 ^ IV:04 ^ IV:05

V தொகு

V:01 ^ V:02 ^ V:03