மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 02

மனோன்மணீயம்- நாடகம் தொகு

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 02 தொகு

இரண்டாம் அங்கம்- இரண்டாங் களம்: கதைச்சுருக்கம் தொகு

காலை வேளையின் இயற்கைக்காட்சிகளைக் கண்டுகொண்டு, நடராசன் நிற்கிறான். அக்காட்சிகளைப் பற்றித் தனக்குத் தானே பேசிக்கொள்கிறான். “ஒன்றும் புலப்படாமல் இருள்மூடிக் கிடந்த இந்த உலகம், சூரியன் ஒளிபரப்பிப் புறப்படுகிற இக்காலை வேளையில், ஓவியன் ஒருவன், கிழிச்சீலையிலே, வர்ணங்களைக் கொண்டு ஓவியம் எழுதிக் காட்டுவதுபோலக் காணப்படும் காட்சி, அழகானது. சுரைக்கொடி படர்ந்த வீட்டுக்கூரையின் மேலே ஏறி ஒய்யாரமாக நிற்கிற சேவல், சிறகை அடித்துக்கொண்டு ‘கொக்கரக்கோ’ என்று கூவுவதும், கருநிறக் காகங்கள், சூரியன் தம்மையும் இருட்கூட்டங்கள் என்று கருதித் துரத்துவானோ என்று ஐயங்கொண்டு, ‘நாங்கள் காக்கைகள், இருட்கூட்டம் அல்ல’ என்று சொல்லுவது போலக் ’கா கா’ என்று கூவிக்கொண்டு, நாற்புறமும் பறந்துசெல்லும் காட்சியும், பறவைக்கூட்டங்கள் பன்னிறம் அமைந்த தமது சிறகுகளைத் தாளம்போடுவது போல் அசைத்து, இனிய குரல்களினால் பாடுவதும், காண்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானது.
இதோ, நீரோடும் இந்த வாய்க்காலில், ஆணும் பெண்ணுமான இரண்டு நாரைகள், அன்புடன் காதல் செலுத்துகின்றன. வாணி! நற்குணம் வாய்ந்த நங்காய்! அன்றொருநாள், நாம் இருவரும் அன்பு செலுத்திய இடமும், இதுதானே! புத்தம் புதிய குவளைமலரைப் பறித்து, அன்று உன்னிடம் கொடுத்தபோது, அதனை நீ, உன் கூந்தலில் சூட்டிக்கொள்ளாமல், ஓடுகிற நீரில் விட்டு வேடிக்கை பார்த்தனை. உடனே, நான் என்ன எண்ணுவேனோ என அஞ்சி, நீ, நெஞ்சம் கலங்கினாய். அந்தக் காட்சி, இன்னும் என் மனக்கண்ணில் நிற்கிறது. வாணி! கவலைப்படாதே! நீ, வேண்டாமென்று அப்படிச்செய்யவில்லை என்பதை நான் அறிவேன். உன் உள்ளமும் என் உள்ளமும் ஒன்றுபட்டபின்னர், உன் கருத்து என்ன என்பதை நான் அறியேனா?” இவ்வாறு, நடராசன், தனக்குள் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, யாரோ கூறிய ‘வாணி’ என்னுஞ் சொல், அவன் காதில் விழுந்தது. அச்சொல் வழியே திரும்பிப் பார்த்தான். ஒருபுறத்தில் பலதேவனும், அவனுடைய தோழனும், நற்றாய் ஒருத்தியும் நின்று பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான். கண்டு, மறைந்து நின்று, அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கிறான்.
“நீ என் மகளைக் கெடுத்தாய். உன்னை நம்பி, அவள் கெட்டாள். அவளுடைய வாழ்வு அழிந்தது. வாணியை நீ மணம் செய்துகொள்ளப் போகிறாய். அன்று, என் மகள்தலையை உன்கையினால் தொட்டு ஆணையிட்டாய். இன்றுநீ, வாணியை மணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறுகிறார்கள். என்மகள் சாகக்கிடக்கிறாள். எங்கள் வீட்டுக்கு வரமாட்டாயா? இதோ, இந்தக் கடிதத்தைப் படித்து, என் மகளின் துயரத்தைத் தெரிந்துகொள்” என்று அந்தத் தாய் பேசினாள்.
“அந்தக் கதைகளையெல்லாம் நீ நம்பாதே. அந்தக் கிழவன் பணத்தாசைகொண்டு, வாணியை எனக்கு மணஞ்செய்து கொடுக்கத் துடிக்கிறான். எனக்கு அலுவல் இருந்தபடியால் வரமுடியவில்லை. இதோ, இந்தத் தங்க வளையல்களைக் கொண்டுபோய் உன் மகளுக்குக் கொடு. நான், இன்று, திருவனந்தபுரம் போகிறேன். இன்னும் இரண்டு நாளில், திரும்பி வருவேன். வந்தவுடன், உன் வீட்டுக்கு வருகிறேன்” என்று பலதேவன் விடைகூறினான். அந்தத் தாய், பொன் வளைகளைப் பெற்றுக்கொண்டு போகிறாள்.
தோழன், பலதேவனைப் பார்த்து, “இது எத்தனையாவது இடம்? ஐந்தோ, ஆறோ? வாணியை மணம்செய்து விலங்கு மாட்டிக்கொண்ட பிறகு, இதெல்லாம் போய்விடும்” என்று கூறினான். “வாணியானால் என்ன, மனோன்மணியானால் என்ன? அதெல்லாம், உலகம் மதிப்பதற்காகக் கலியாணம். காரியத்தில், நமது இட்டம்போல் நடக்கவேண்டும். வா போகலாம்; எனக்காக ஆட்கள் காத்திருப்பார்கள்” என்று கூறிக்கொண்டே பலதேவன், நண்பனை அழைத்துக்கொண்டு போய்விட்டான்.

தொகு

மறைவாக இருந்த நடராசன், கோபம் பொங்கத் தனக்குள்ளே பேசிக் கொள்கிறான்; “இவ்வளவு கொடியவர்கள் இவ்வுலகத்தில் இருக்கிறார்களா? பாதகன்! கயவன்! நற்குணமுள்ள வாணிக்குத் தகுந்தவனா இவன்? இவன் ஏன் திருவனந்தபுரம் போகிறான்?” இவ்வாறு தனக்குள்ளே சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, அவன் நண்பன் நாராயணன், அங்கு வருகிறான். வந்த நாராயணனிடம், பலதேவன் திருவனந்தபுரம் போகிற காரியம் என்னவென்று கேட்க, மனோன்மணியின் திருமணத்தைப் பற்றித் தூதுபோகிறதாகக் கூறினான். பிறகு, பலதேவனை மணக்கும்படி அரசன் வாணியை வற்புறுத்திக் கூறினான் என்றும், அதற்கு அவள், ‘செத்தாலும் அவனை மணஞ்செய்து கொள்ளமாட்டேன்’ என்று கூறியதாகவும், நடராசனிடன் தெரிவிக்கிறான். “அப்படியா? சற்று முன்பு, அவளைப் பற்றி, வேறுவிதமாக எண்ணினேன்” என்றான் நடராசன்.
நாராயணன் “பெண்மனத்தை எப்படி நம்புவது? ‘செத்தாலும் மணக்கமாட்டேன்” என்று கூறினாளே தவிர, உன்னை மணப்பதாக அவள் அரசனிடம் கூறவில்லையே? நீதான் அவளைப்பற்றி உருகுகிறாய்” என்றான்.
“இல்லை; புருடரே தீயர், இரக்கமில்லா இருளுடைய நெஞ்சர்; காதகர், கடையர்” என்றான், நடராசன்.
“மாதர்கள் எவ்வளவுதான் ஓதியுணர்ந்தவரானாலும், உறுதியான மனமில்லாதவர்கள், கடலில் அலைவீசுவதுபோல, அவர்கள் உள்ளம் நிலைத்திராமல் அலைந்துகொண்டேயிருக்கும்” என்றான் நாராயணன்.
“நடராசன் கூறுகிறான்: கடலில் அலையடிப்பது, கரையோத்திலேதான்; நடுக்கடலில் அலையில்லாமல், அமைதியாக இருக்கும். பம்பரம் சுழன்று சுழன்று ஆடினாலும், அது ஓர்இடத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டுதான் சுழல்கிறது. அதுபோலப் பெண்களின் மனம் புறத்தில் உறுதியற்றதுபோலத் தோன்றினாலும், அகத்தில், நிலைத்த உறுதியுள்ளவர்கள். அப்படியல்லர் ஆண்கள்; திருமணத்தை ஒரு வாணிகமாகக் கொள்கின்றனர். வாழ்க்கை எனும் கடலில் ஓடுவது, ஆடவர் 'நெஞ்சம்' என்னும் படகு. இந்த நெஞ்சமாகிய படகைப் பாதுகாப்புள்ள நல்லதுறையில் போய்ச் சேராதபடி, 'எண்ணம்' என்னும் காற்று அடித்து, அப்படகைத் திசைகள் எங்கும் ஓடி அலையச் செய்கிறது. இவ்வாறு, திசைதெரியாமல் அலைந்துதிரியும் ஆடவர் நெஞ்சமாகிய படகைப் பாதுகாப்பான குடாக்கடலில் செலுத்தி, 'அறத்துறை' என்னும் துறைமுகத்தை அடையச்செய்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்துகிறவர், ஆடவரை மணந்த மங்கையர். அன்றியும் ஆடவர் வாழ்க்கையில் செயல்படும்போது, பொய்யும் வழுவுமான வழிகளில் மோதுண்டு, 'ஆசை' என்னும் திசைகளில் அலைந்து திரியாமல், ஆடவராகிய மரக்கலத்தை நல்வழியில் செலுத்தும் சுக்கான் போன்றவர், மங்கையர். இதனை அறியாத ஆண்கள், விலங்குகளிலும் தாழ்ந்தவராய்ச் சிற்றின்பத்தையே விரும்பித் தமது வாழ்க்கைத் துணைவியையும் தம்மையும் அழுந்தச் செய்யும் சேறாக மாறுகிறார்கள். தவஞ்செய்து மந்திரவாளைப் பெற்றவன், அவ்வாளினால் பகைவரை அழித்து நன்மையடையாமல், தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளவும், தனக்குத் துணையாயுள்ளவர்களைத் துன்புறுத்தவும் அவ்வாளைப் பயன்படுத்துவது போல, அவர்கள், பாலையும் நஞ்சாகச் செய்யும் அறிவிலிகள். அன்பும் நல்ல குணமும் உள்ளவர்கள் இல்வாழ்க்கைத் துணைவர்களானால், அவர்களுக்கு உலகத்தில் இல்லாதது யாது? அவர்களே கல்வியும் நல்லறிவும் உடையவர்களானால், பொன்மலர் மணம்பெற்றது போலாவர்.
கேட்டதெல்லாம் தருகிற ‘கற்பகமரம்’ என்னும் தெய்விக மரத்தை, அதன் அருமைபெருமை தெரிந்து, அதனைத் தகுந்தபடி பயன்படுத்தத் தெரியாமல், ஒருவன், அதனை வெட்டிச் சுட்டுக் கரியாக்கி உலைக்களத்துக்குப் பயன்படுத்துவது போல, மனிதரின் மடமை இருந்தவாறு என்னே! தனக்கென வாழும் விலங்கு மனப்பான்மையை நீக்கிப் பிறர்க்கென வாழும் பேரறிவாளனை, நான், எனது என்னும் செருக்கை அகற்றி, மனத்தை அமைதிப்படுத்திப் பேரின்ப வெள்ளத்தில் முழுகச்செய்ய மனத்தைப் பக்குவப்படுத்தும் பாடசாலையாக இருப்பது, இல்லற வாழ்க்கை. இதனை இவ்வாறு கருதும் நல்லறிவு இல்லாதவர், தினவுகொண்ட விலங்குகள், தனது தினவைத் தீர்த்துக்கொள்ள உராயும் மரக்கட்டைபோல, மடத்தனத்தினால், தம்மையும் மற்றவரையும் கெடுக்கும் கெடுமதியை என்னென்பது? நாராயணா! இன்று நான் கண்டதும் கேட்டதும் எனக்குத் தீராத் துயரத்தைத் தருகின்றன. நான் போய்வருகிறேன். ஏதேனும் நிகழ்ந்தால், முனிவர் ஆசிரமத்தில் இருப்பேன் அங்கு வந்து சொல்லு” என்று கூறி நடராசன் போகிறான்.
“இது என்ன புதுமை! போகிற இடத்திலெல்லாம், நான் காண்பதும் கேட்பதும் கதைகதையாக இருக்கிறது. சரி, நடப்பது நடக்கட்டும்; நேரமாயிற்று” என்று சொல்லிக் கொண்டே நாராயணன் போகிறான்.

இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம் கதைச்சுருக்கம் முற்றிற்று தொகு

இரண்டாம் அங்கம் தொகு

இரண்டாம் களம் தொகு

இடம்: ஊர்ப்புறத்து ஒரு சார்.
காலம்: வைகறை.
(நடராசன் அருணோதயங் கண்டு நிற்க)
(இணைக்குறள் ஆசிரியப்பா)
நடராசன்
(தனிமொழி)
பரிதியின் உதயம் பார்க்கக் கருதில்
இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ்
செவ்விதிற் கண்டுபின் செல்வோம்.
ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில்
தீட்டுவான் புகுந்த சித்திரம். நீட்டுந்
தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல
சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட
உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து
கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து
சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் (வரி-10)
தோன்றுமித் தோற்றம் நன்றே!
சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ்
வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின்
இருசிறை யடித்து நெடுவா யங்காந்து
ஒருமுறை கூறி உழையுளார் புகழ
உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும்,
இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங்
கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக்
கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி
மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம் (20)
பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும்
பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி
தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டமாய்
அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை
அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில்
இசையறி மாக்களின் ஈட்டம் போல
வசையறு பாடல் வழங்கலும் இனிதே!
அதுவென்! ஆகா! அலகா லடிக்கடி
ததையுந் தஞ்சிறை தடவி விளக்கிக்
கதுவுங் காத லாணையிட் டறைந்து (30)
பின்புசென் றோயா தன்புபா ராட்டும்
இவ்விரு குருகுங் காதலர்!
கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த்
துண்டங் கொண்டு பரலைச் சொரிந்த
பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி
உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக்
கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே!
ஆடவர் காத லறைதலுந் தையலர்
கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்!
வாணீ! மங்காய்! வாழி நின்குணம்! (40)
ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி
முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத்
தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு
வாங்கியும், மதியா தவள்போ லாங்கே
ஒடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச்
சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை.
ஏதியா னெண்ணுவ னோவென வுடன்நீ
கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும்
அழுங்கலை வாணீ! அறிவேன்! அறிவேன்!
உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் (50)
வியர்த்தமே செய்கையும் மொழியும்-
“வாணி” என்றபேர் கேட்டனன்! யாரது?

(உற்றுச் செவிகொடுத்து)

காணின் நன்றாம். காரிகை யார்கொல்?

(பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலைவில் வர)

சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து.

தொகு

( ‘ஆசிரியத்துறை’ச் செய்யுள்கள் மூன்றும், தன் மகளுடன் களவொழுக்கம் கொண்டிருந்த பலதேவன்,
இப்போது, அவன் வாணியை மணம் செய்யப்போகும் வதந்தியைக் கேட்ட ஒரு தாயின் கூற்று.)
(ஆசிரியத்துறை)
நற்றாய்
நாணமு மென்மகள் நன்னல மும்முகுத் துன்னைநம்பி
வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே;
பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால்
வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ! (செய்யுள்-1)
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
நடராசன்
(தனதுள்)
ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்!
(ஆசிரியத்துறை)
நற்றாய்
நாணிக் கவிழ்ந்தவள் தன்றலை தொட்டு நவின்ற வுன்றன்
ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம்
காணப் பிறர்பொருள் கள்ளல மாதலினால்
வாணிக் குரித்தெனக் கேட்டபின் வௌவலம் வாரலையோ. (செய். 2)
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
நடராசன்
(தனதுள்)
நாரா யணன்அன் றுரைத்தது மெய்யே!
(ஆசிரியத்துறை)
நற்றாய்
நாண மிலாமகள் சாவுக் கினிவெகு நாள்களில்லை
காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டுகொள்வை!
பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால்
வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ. (செய். 3)
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
நடராசன்
(தனதுள்)
ஆயினும் இத்தனை பாதகனோ இவன்!
பலதேவன்
எவருனக் குரைத்தார், இத்தனை பழங்கதை!
சவமவ ளெனக்கேன்? இவள்சுக மெங்கே?
பொய்பொய் நம்பலை. ஐயமெல் லாம்விடு. (60)
பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது.
சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச்
சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன்.
இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு
வருகுவன் ஈதோ! மறக்கன்மின் என்னை!
(நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க)
தோழன்
செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை
ஐந்தோ! ஆறோ!
பலதேவன்
---- ----- அறியேன். போ! போ!
இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில்.
தோழன்
வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு.
பலதேவன்
வாணியாயினென்? மனோன்மணி யாயினென்? (70)
அதைவிடப் படித்த அலகையா யினுமென்?
கணிசத் திற்கது; காரியத் திற்கிது.
வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ்
சேவக ராதியர் செய்குவ ரையம்
எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு?
ஏகுவம் விரைவில், இனிதா மதமிலை.
(பலதேவனும் தோழனும் போக)
நடராசன்
கொடுமை! கொடுமை!இக் கொடும்பா தகன்சொல்.
கடுவெனப் பரந்தென் கைகால் நடுங்கின.
கைத்ததென் கண்ணுங் காதும்.
இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? (80)
ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்!
நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க.
மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி?
இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்!
ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க
ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை!
தீண்டவும் வேண்டுமோ தீயனை?
என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்?
யாருடன் வினவ? நாரண னோஅது?
(நாராயணன் வர)
வாவா, நாரணா! .... .... (90)

தொகு

நாராயணன்
.... .... ஏ!ஏ! என்னை!
சிந்தனை தனியாய்? .... ....
நடராசன்
---- -----ஏன்இத் தீயவன்
அனந்தைக் கேகுங் காரணம்? ....
நாராயணன்
---- ----- ----- யார்?யார்?
நடராசன்
அறிவை! நீவிளை யாடலை; அறைதி.
நாராயணன்
வதுவை, மனோன்மணி தனக்கு வழங்கிட...
நடராசன்
அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்!
நாராயணன்
அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன்
நடராசன்
விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்;
விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி.
உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை.
நாராயணன்
முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் (100)
வதுவையவ் வழியே யாற்றிட வாணியை
அதட்டினன், .... .... ....
நடராசன்
---- அதற்கவள்?
நாராயணன்
---- ----- மறுத்தனள்.
நடராசன்
---- ---- ----- எங்ஙனம்?
நாராயணன்
‘இறக்கினும் அதற்கியா னிசையேன்’ என்றாள்.
நடராசன்
அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி.
நாராயணன்
என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல்
நீர்மே லெழுத்தாம், யாரறி வாருளம்?
மாறி நாடொறும் வேறுபா டுறுமதி
யெண்ணுட் பட்டு நிண்ணயங் கூடலாற்
பெண்கள் நிலையிற் பெரிதுந் திடனே!
பெண்கொள் நெஞ்சொடு புலம்புகின் றாய்மிக. (110)
முதலா மூழிக் கனன்முன் வையாய்,
மாதரார் கட்டுரை மாயா தென்செயும்?
அக்கண முற்ற துக்கந் தூண்டக்
கன்னியா யிருப்ப னென்றா ளன்றி
யன்ன தவள்கருத் தாமோ?
நடராசன்
---- ---- ---- அறியாய்!
புருடரே புலையர்; நிலையிலாப் பதடிகள்;
இருளுடை நெஞ்சினர்; ஈரமி லுளத்தர்;
ஆணையு மவர்க்கொரு வீணுரை; அறிந்தேன்
தந்நய மின்றிப் பின்னொன் றறியாக்
காதகர், கடையர், கல்வியில் கசடர். (120)
நாராயணன்
ஓதி யுணரினும் மாத ருள்ளம்
அலையெறி கடலினுஞ் சலன மென்ப.
நடராசன்
திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி
கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை!
தியக்கமும் மயக்கமுஞ் செறிவ தரிவையர்
உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி,
பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை
விள்ளா முரணும்; மெய்ம்மையில் தெளிவும்
உள்ளார்; அவர்தம் உறுதிநீ யுணராய்.
சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் (130)
பற்றியே சுழலும்,அப் படியலர் புருடர்
கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண்(டு)
அலைதருங் கொடியவிவ் வகைகள் வழியே,
புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய்
மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர்.
அவாவிற் களவிலை, அன்போ அறியார்.
மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ!
சீ!சீ! என்இத் தீயவர் செய்கை!
மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை
ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம் (140)
ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று
நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம்
நிண்ணய மற்ற எண்ணம் இயக்கச்
சென்றுழிச் சென்று நன்றறி வின்றி
அலையா வண்ணம், அறத்துறைக் குடாவில்
நிலைபெற நிறுத்துநங் கூரமாய், பின்னுஞ்
செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக்(கு)
எற்றுண் டகன்று, பற்றொன் றின்றி
ஆசையாம் திசைதொறும் அலைந்து திரிந்து,
கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் (150)
அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச்
சிறம்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய்,
நின்றது மங்கையர் நிலைமை யென்று
நினையா மனிதர், விலங்கினுங் கீழாய்
அனையார் தருசிற் றின்பமே யவாவி
வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத்
தாழ்த்துஞ் சேறா மாற்றுவர். தவத்தால்
மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது
அந்தோ! தம்மெய் அரிவார் போலத்
தனியே தளருந் தமக்குத் துணையாய் (160)
வருபவர் தமையும் பகைவராய் நலிந்து
பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம்
மதிகே டென்னே! துதிபெறு மன்புநற்
குணமு முளார்இல் துணைவ ராயின்
இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர்
நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம்
பெற்றவா றன்றோ? எற்றே மடமை!
கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங்
கற்பக தருவென அற்பமுங் கருதாது
அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் (170)
கரிபெற முயன்ற கம்மிய னேயென,
தனக்கென வாழுந் தனிமிரு கத்தின்
மனக்கோள் நிமிர்த்து, மற்றைய ரின்பமுந்
துன்பமுந் தனதா அன்புபா ராட்ட,
மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப்
பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச்
சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத்
தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும்
ஓய்வுறச் செய்து,மற் றொன்றாய் நின்ற
எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் (180)
முங்கி யதனுள் மூழ்கிட யாரையும்
பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை,இவ்
இல்லறம் என்பதோர் நல்லுணர் வின்றி
உடல்தின(வு) அடக்குமா உரைஞ்சிடு தடியென
மடத்தனங் கருதித் தம்மையும் பிறரையுங்
கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே!
நாரணா! இவ்வயிற் கேட்டதும் கண்டதுந்
தீராத் துயரமே செய்வது, செல்குவன்.
ஏதா யினுமினி எய்தில்,
ஓதாய் முனிவர் உறையு ளுற்றே. (190) (பா-1)

(நடராசன் போக)

(நேரிசை ஆசிரியப்பா)

நாராயணன்

(தனிமொழி)

நல்லது மிகவும்! செல்லிடந் தோறும்
கதையா யிருந்தது. கண்டதென்? கேட்டதென்?
புதுமையிங் கிதுவும்! பொருந்துவ(து)
எதுவா யினுஞ்சரி. ஏகுவம் மனைக்கே. (பா-2)

(நாராயணன் போக)

இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. தொகு

பார்க்க தொகு

II. இரண்டாம் அங்கம் தொகு

மனோன்மணீயம்-இரண்டாம்அங்கம்/கதைச்சுருக்கம்

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 03

மனோன்மணீயம்- ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.

I தொகு

II:01 * II:02 * II:03 * II:04 * II:05

III தொகு

III:01 * III:02 * III:03 * III:04

IV தொகு

IV:01 * IV:02 * IV:03 * IV:04 * IV:05

V தொகு

V:01 * V:02 * V:03