மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 05

மனோன்மணீயம் தொகு

அங்கம் நான்கு தொகு

ஐந்தாம் களம் தொகு

இடம்: அரண்மனையில் ஒருசார்.
காலம்: மாலை.

(சீவகனும் சுந்தரமுனிவரும் மந்திராலோசனை.)

நேரிசை ஆசிரியப்பா-01

அருஞ்சொற்பொருள்

வேய் (1)= மூங்கில்;
கிளர் காற்று(2)= மேலெழுகின்ற காற்று;
முளை(3)= மூங்கில்;
காழ்பெறும்(4)= வயிரம்பெற்றுள்ள;
தருக்கள்(4)= மரங்கள்;
இறினும்(6)= முறிந்தாலும்;
காழ் அறும்(8)= வயிரம் இல்லாத;
தீக்குருவி(14)= நெருப்புக்கோழி;
கயவர்(20)= இழிந்தகுணமுள்ளவர்;
மான(23)= போல, ஒப்ப;
இலக்கமில்(25)= கணக்கற்ற;
துயர்க்கணம்= துன்பமாகிய கூட்டம்;
வார்கடல்முகட்டில்= பரந்த கடலின்மேலே;
கலன்= கப்பல்;
தியங்குமேல்= கலங்குமானால்;
மீகான் = கப்பலோட்டி/மீகாமன்;
கால் = காற்று;
திமில் = மரக்கலம், படகு;
சுழல்காற்று = (இங்கு) பகைவர்;
சுழி = ஆபத்து;
பாய்மரம் = அமைச்சனாகிய குடிலன்;
துவாதசாந்தம் =பன்னிரண்டின் முடிவு, புருவத்துக்குமேலே பன்னிரண்டு விரற்கிடையுள்ள இடம்; இங்குத் துவாத சாந்தம் என்பதற்கு, மதுரை மாநகரம் என்பது பொருள். பூலோக வடிவமாக இருக்கிற விராட்புருடனுக்குத் துவாதசாந்த இடமாக இருக்கிற இடம் மதுரை என்று கூறுவர்.
நிவாதமா= உறைவிடமாக என்றும், (புயற்)காற்று இல்லாத இடமாக என்றும் இருபொருள் கொள்ளலாம்.
நயப்பிற்கு = அன்பிற்கு;
மயிலை.சீனி.வேங்கடசாமி
நூல்:மனோன்மணீயம்-பதிப்பு

அடிகள்:01-52 தொகு

சுந்தரர்:
வளையும்வேய் நிமிரும்; வளையா நெடுமரம்
கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில்!
சீவகன்:
முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம்
களைகுவர், களைகிலர் காழ்பெறும் தருக்கள்.
சேணுயர் தேக்கு திசையெறி சூறையில், (5)
ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும்
பேணுவர் அதனைப் பெரியோர்! யாரே
காணுவர் காழறு நாணமில் நாணலை?
ஓருயிர்ப் பேனும் உண்டேல், அடிகாள்!
போரிடைப் போக்குவன்; புகழெனக் கதுவே!
(10)
சுந்தரர்:
பொறுபொறு! சீவக! வெறுமொழி புகலேல்!
அரியது செய்வதே ஆண்மையும் புகழும்!
அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி!
வேட்டையா ரோட்டிட வெருவு தீக்குருவி
நீட்டிய தன்சிர நீள்மணற் புதைத்துத் (15)
தனதுகண் காணாத் தன்மையாற் பிறரும்
தனதுடல் காணார் எனநினை வதுபோல்
என்னையிம் மயக்கம் மன்னவ! உனக்கும்!
சிறுபசி தாங்காச் சிறுமியர் பற்பலர்;
அறவழி இதுவென அறியாக் கயவர்; (20)
பிறர்பொருள் வௌவியும் பிறவுயிர் கவர்ந்தும்
அலையும் தீமையர் அநேகர், அகப்படின்
மலைவற மரணமும் வெருவார் மான,
கலக்கமொன் றின்றிக் கழுவே றிடுதல்
புலப்படக் கண்டுளாய் இலக்கமின் முறையே, (25)
துரத்திடும் துயர்க்கணம் வருத்திடும் காலை
மரித்தலோ அவையெலாம் சகித்தலோ தகுதி?
தன்னுயிர் ஈவர் தக்கோர் சார்ந்த
மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல்.
வார்கடல் முகட்டில், மாநிதி வழிஞர் (30)
ஆர்கலன் அலையெறி புயல்கால் ஆதியாற்
சேர்திசை திரிந்து தயங்குமேல், மீகான்
களமும் காலமும் கருதி தனக்குறு
தளர்வுபா ராட்டுதல் தவிர்த்து, சாய்ந்து,மற்
றெதிருறு காற்றிற் கிசைவுற வதிந்து (35)
தன்றிசை செல்லத் தக்ககால் வரும்வரை
சென்றொரு கரைசேர்ந் தொன்றுவ னல்லால்,
உவப்புறு நிதிகெட உழையுளார் களும்பரி
தவித்திட மரக்கலம் துறப்பனோ சாற்றாய்.
தக்கோர் செயலெலாம் தமக்கா அலவே! (40)
முக்கியம் புகழோ, தக்கவுன் கடமையோ?
அதனால் சீவக! அகற்றந் நினைப்பு
மதிகுலம் வந்த மதிவலோர் பலரும்
செலாவழி நின்திமில் செலுத்தினை; தீங்காய்
உலாவிய சுழல்காற் றோடொரு சுழியிடைப் (45)
பட்டனை, நம்பிய பாய்மரம் பழுது.
விட்டிடிக் கோட்டையாம் வெளிக்கட லோட்டம்
மண்டிய பெருங்காற் றடங்கும் வரையும்
அண்டையில் உளதோர் கைவழி அதனில்
ஒண்டிநீ ஒதுங்கி உன்தொல் நகராம் (50)
துவாத சாந்தத் துறைபோய்
நிவாதமா நிலைபெற லேநெறி முறையே! (பா-1)

அடிகள்:53-100 தொகு

நேரிசை ஆசிரியப்பா-02

சீவகன்
என்குல முனிவ! இயம்பிய மாற்றம்
நன்கே. உன்றன் நயப்பிற் கென்செய!
கழுமரக் கதையதைக் கண்டேன் இன்றே. (55)
பழுதுபாய் மரமெனப் பகர்ந்ததும் உண்மை!
வழுவெனக் கண்டது மாற்றினன் அநேக
வந்தனம் வந்தனம்! ஆயினும் ஒருசொல்
சிந்தையிற் சேர்த்தெனைத் தெருட்டிட வேண்டும்.
வேற்றுமை உருவாய் விளங்கிய காலம் (60)

அருஞ்சொற்பொருள்

அடி 55-56: முனிவர் பொதுவாகக் கூறிய கழுமர உவமையை, நாராயணன் கழுமரம் ஏற உடன்பட்டதைச் சுட்டுகிறதாகவும், குடிலனைச் சுட்டிக் கூறிய பாய்மரம், நாராயணனைக் குறித்துக் கூறியதாகவும் அரசன் மயங்கிக் கூறும் சொற்கள்.
தெருட்டி = தெளிவுபடுத்த;
வேற்றுமை உருவாய் - மாறுபாடு உடையதாய்;
73/காலக்கரப்பு = காலத்தினால் ஏற்படும் மறைப்பு;
81-பொன்றினும் = அழிந்தாலும்;
81-பொறித்த = நிறுவிய;
83/அற்ற = தலையற்ற;
83/கவந்தம் = தலையில்லாத உடம்பு;போர்க்களத்தில் தலைவெட்டப்பட்ட போர்வீரரின் உடம்பு, கவந்தம் எனப்படும், அது சிலநேரம் போர்செய்வதும் உண்டு.
84-பெற்றிபோல் =தன்மைபோல;
92-உனி = உன்னி, நினைத்து;
94-தொடரியல் என = சங்கிலித் தொடர்போல;
98-மருங்கு- இடம்;
100-மனத்திற்கொண்டது;
மயிலை.சீனி.வேங்கடசாமி
நூல்:மனோன்மணீயம்-பதிப்பு
காற்றினும் கடுகிய கடுநடை உடைய
தன்றோ? அதிலகப் பட்டார் முந்திச்
சென்றால் நின்றார்! சிறிதுசிந் தித்து
நிற்பரேற் பெரிதும் பிற்பட் டொழிவர்.
ஆதலால், அடிகாள்! பூதலத் துயர்ந்த (65)
மேதையின் மிகுந்த மானிடர்க் கரசாய்
வந்தவர் தந்தமக் குற்ற மதித்திறம்
எட்டிய மட்டும் குற்றம் விடுத்துக்
கால கதிக்கநு கூலமாய் நவீனச்
சீர்பல திருத்தி ஓரியல் புதிதா (70)
நாட்டித் தமது நாட்டுளோர் சுகம்பா
ராட்டில ரேல்அவ ராண்ட நாட்கெல்லை
காட்டுமோ கொடிய காலக் கரப்பே!
இவ்வழி தனக்கெனத் துணிந்ததோர் இயல்பே
அவ்வர சனுக்காம் யாக்கை. அஃதின் (75)
அழிவே யவன தொழிவாம். அதனால்
எல்லாம் அறிந்த இறைவ!இவ் விடத்தியான்
பல்லா யிரநாட் பரிவுடன் உழைத்தே
அமைத்தவிப் புரியும் சமைத்தவிவ் வரணும்
நன்றே ஆயினும் ஆகுக, அன்றிப் (80)
பொன்றினும் பொன்றுக. பொறித்தவென் அரசியல்
மற்றவை தம்மொடு மாண்டிடும். மாண்டபின்
அற்றதோர் கவந்தம் அமர்க்களத் தாடும்
பெற்றிபோல் மூச்செறி பிணமா யானும்
நடித்தலோ உன்திரு வடித்தா மரையைப் (85)
பிடித்ததற் கழகாம் பேசாய் விடுத்தே!
சுந்தரமுனிவர்
எடுத்ததன் முயற்சி யாதே யாகுக
முடித்திடு முன்ன ரடுத்ததன் மதியால்
தீங்கெனத் தேர்ந்திடின் ஆங்கவற் றுட்பின்
வாங்கலே யார்க்கும் ஆம்பணி யென்ப. (90)
தீமைகை விடற்கு வேளைசிந் திப்போர்
சேய்மை உனிமனை திரும்பார் ஒப்பர்.
ஆதலால், சீவக! தீதென வருதற்
கியாதோர் ஐயமும் இலைநீ தொடரியல்
எனவின் றெய்தி யவற்றால் உனது
மனத்திடை மயக்கற மதித்துளை ஆயின்,
ஒழுங்கா விவையெலாம் ஒழித்தியான் குறித்த
மருங்கே அணைந்து வாழலே கருமம்.
வேறிலை தேறு மார்க்கம்
கூறுதி அதனால் உன்மனக் கோளே. (100) (பா-2)

அடிகள்:101-163 தொகு

நேரிசை ஆசிரியப்பா- 03. (101-123)

சீவகன்
ஐய!யான் உரைப்பதென்? அடுத்தவை இவையெலாம்
கைவிடில் என்னுயிர் கழியும், அதனில்
இன்றியான் பட்ட இகழ்ச்சி முழுதும்
பொன்றிடப் பொருதுபின் பொன்றுதல் அன்றோ
சிறப்பது செப்புதி! சிறியேன் ஒருசொல் (105)
மறுத்தது பொறுத்தருள் மாதவக் கொழுந்தே!

அருஞ்சொற்பொருள்

மயிலை.சீனி.வேங்கடசாமி
நூல்:மனோன்மணீயம்-பதிப்பு

சுந்தரர்:
சங்கரா! சற்றோ தாதான் மியபலம்!
வெங்கரா பிடித்தவை விடினும் விடுமோ!
நல்லது சீவக! நண்டெனும் புல்லிய
அற்பமாம் சிற்றுயிர் அரியதன் உடலையும் (110)
பிற்கிளைக் கிரையென வீந்தவை பேணல்
கண்டும் புகழிற் கொண்டனை பிராந்தி
இவ்வுயி ரியலுல கியற்கையென் றெண்ணினேன்.
செவ்விதின் நின்னிலை தேர்ந்தபின் ஐயம்
வருவது அதனால், மதிகுலம் வந்த (115)
ஒருமலர் நின்னுழை உள்ளது, தமிழர்
ஆவோர் யார்க்கும் அஃதுரித் தாம்நீ
காவா யாகிற் காப்பதெம் கடனே.
சீவகன்:
இதுபோ லில்லை அடிகள் செய்யும்
உதவி தமியேற் குளதுயர் இதுவே! (120)
கண்மணி தனையெணிப் புண்படும் உள்ளம்.
அருளுதி காக்கும் உபாயம்,
இருணிறை இடுக்கணுக் கியைந்திடு மருந்தே. (பா-3)

நேரிசை ஆசிரியப்பா-04 (124-358)

சுந்தரர்:
நல்லது கேட்டி! சொல்லுதும், உரியநீர்
விட்டான் முதலையும், விரும்பிய திலகப் (125)
பட்டாற் களிறும் பலமில ஆகி
விடுமென அறிந்த கெடுவினை யாளர்
தொடர்பினால், அவரிடு தூண்டிலிற் சிக்கி
இடமது பெயர்ந்துழி, எடுத்தவெவ் வினைக்கும்
கேடுமுன் கருதிக் கோடலே முறையெனும், (130)
அறிவோர் மொழிய்யர்ந் திறுமாப் பகத்துட்
கொண்டுநீ நின்றதைக் கண்டிக் கடிபுரி
தொட்டென் உறையுள் மட்டுமோர் சுருங்கை
அதிரக சியமாய் அமைத்துளேன். அவ்வழி,
சதமென நம்புமிச் சாலி புரமும் (135)
அதன்புறம் ஊன்றிய அடர்புலப் படையும்
அறிந்திடா வகையவை கடந்துசென் றுன்னை
மறந்திடா மாபதி அடைந்திடச் செயுமே.
சீவகன்:
தேவரீர் செய்யும் திருவரு ளுக்குமா
றாவதும் உளதோ? ஆஆ! அடிகாள்! (140)
வழுதியர் பலர்பலர் வழிவழி காக்கும்
முழுமதித் தொழுகுலத் தெய்வநீ போலும்.
பழுதற நீயிவண் பகர்ந்ததோர் வழியிது
திருத்திட எடுத்த வருத்தமெத் தகைத்தே!
சுந்தரர்:
நல்லது! முகமன் நவின்றனை. நிற்க! (145)
சொல்லிய சுருங்கை உனக்குமிவ் விடுக்கணில்
உதவுமோ அன்றோ, உரைக்குதி விரைந்தே.
சீவகன்:
அடியேன் ஆசை திருவடி அறியும்.
கடிபுரி விடிலுயிர் நொடியுமிங் கிராது.
பாண்டியர் குலமெனும் பாற்கடல் உதித்த (150)
காண்டகு கன்னியை இவ்வழி உன்திரு
உளப்படி கொடுபோய் அளித்தரு ளுதியேல்,
இந்துவின் குலமெனும் முந்திய பெயர்போய்ச்
சுந்தரன் குலமெனச் சந்ததம் வழங்கும்
நீங்கா திதுகா றென்னுளம் நிறைந்த (155)
தாங்காப் பெருஞ்சுமை தவிர்தலால், யானும்
ஒருமனம் உடையனாய் மறலியும் வெருவ
ஆற்றுவன் அரும்போர். அதனியை யமபுரம்
ஏற்றுவன், எங்குலம் தூற்றிய சேரனை!
வென்றிடின் மீளுவன், அன்றெனிற் பண்டே(160)
அனையிலாத் தனையளுக் கம்மையும் அப்பனும்
தயாநிதி! நின்றிருச் சரணமே என்ன
வியாகுல மறவே விடுவனென் உயிரே.

அடிகள்: 164-229 தொகு

சுந்தரர்:
விடுகிலை. ஆகிலும் வெளிக்கடல் ஓட்டம்.
நடுநிசி நாமினி வருகுதும். கொடிய (165)
கடிபுரிக் கனலிடைக் காய்ந்திடும் உன்றன்
சிறுகொடி மறுவிடம் பெயர்த்துதும், சிறந்த
அந்தமில் செழியரைத் தந்திட உரித்தே. (எழுந்து)
சீவகன்:
கட்டளைப் படியே? கட்டிய கற்படை
கண்டிட ஆசையொன் றுண்டடி யேற்கு.
(170)
சுந்தரர்:
காட்டுதும் இன்றிரா கற்படை சேர்முறை.
ஒருவர் ஒருபொருள் அறியில் இரகசியம்;
இருவர் அறிந்திடிற் பரசியம் என்ப.
கைக்கெட் டியதுதன் வாய்க்கெட் டுதற்குள்
வந்துறும் அந்தமில் பிரதிபந் தங்களே. (175)
(முனிவர் போக)

அருஞ்சொற்பொருள்

மயிலை.சீனி.வேங்கடசாமி
நூல்:மனோன்மணீயம்-பதிப்பு

சீவகன்:
வந்தனம், வந்தனம் அடிகாள்! வந்தனம். (தனிமொழி)
என்னே என்னே! இந்நாள் இயன்றவை!
கொன்னே கழிந்தன் றோரிமை கொட்டும்.
குகுநாள் மழையொடு மிகுகாற் றெறிந்த
பரவையின் பாடெலாம் பட்டதென் உளமே. (180)
இரவினில் வருபவை எவையெலாம் கொல்லோ?
தாயே தாயே சார்வன சற்றும்
ஆயேன், எங்ஙனம் பிரிந்துயிர் ஆற்றுவேன்?
விடுக்குமா றெவனென் விளக்கே? உன்னைக்
கெடுக்குமா றெவனிக் கிளர்ப்போ ரிடை?அது (185)
தடுக்குமா றெவனினி? சமழ்ப்பற் றுடலம்
பொறுக்குமா றெவன்?இப் பொல்லா வல்லுயிர்
துறக்குமா றெவனுனைத் துணையற விடுத்தே?
அந்தோ அந்தோ! என்றன் தலைவிதி!
நாற்புற நெருப்புறின் நளியும் தனது (190)
வாற்புற நஞ்சால் மாய்ந்திடும் என்ப.
நரனலன் நரேந்திரன், நானது போற்சுதந்
தரனலன் எனிலென் தலைவிதி கொடிதே!
பிரிவென என்னுளம் கருதிடு முனமே
பிரையுறு பாலென உறைவதென் உதிரம். (195)
நாணா துன்முகம் காணுவ தெவ்விதம்?
நடுநிசிப் பொழுது தொடுகற் படைவழி
முனிவரன் பிறகுனைத் தனிவழி விடுத்திவண்
தங்குவன் யானும்! தங்குவை நீயும்!
இங்கதற் கிசையேன் இறக்கினும் நன்றே! (200)
(மௌனம்)
கற்படை இதுதான், எப்புறத் ததுவோ!
உரைத்திலர் முனிவர் ஒளித்தனர், இஃதும்
உளதோ? இலதோ? உணர்பவர் யாவர்?
களவழி இதுமுனி கட்டற் பாற்றோ
முனமே முனிவன் மொழிமணம் அன்றோ? (205)
இனையவிப் போர்க்கெலாம் ஏதுவாய் நின்றது!
கூடிய தன்றது! ஏஏ! குடிலனை
ஓடியிங் கழையாய்! (சேவகன் வர)(சேவகன் போக)
.... .... உண்மையெப் படியென
நாடுமுன் வாடி நலிதல் என்பயன்?
நம்புதல் எல்லாம் துன்பமே தருவது. (210)
நம்பினோம் நாரா யணனை, அதற்கா
வம்பே செய்தான் மாபா தகனவன்
நட்பே நமக்கிங் குட்பகை யானது!
முனிவரோ முதுநகர் விடுத்தநாள் முதலா
மனத்திடைக் களங்கம் வைத்துளர், அஃதவர் (215)
விளம்பிய மொழியே விளக்கிடும், நன்றாய்
ஆரா யாமுனம் அனுப்புதல் தவறே.
(குடிலன் வர)
வாராய் குடில! மந்திரி உனக்கு
நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை அறிவைகொல்?
சுந்தர முனிவரோர் சுருங்கைதொட் டுளராம்; (220)
நந்தமை அழைத்தனர் ஒளித்திட அவ்வழி;
மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென
ஒறுத்தவர் வேண்டினர், உரியநம் குலமுனி
ஆதலின் ஆமென இசைந்தோம்; அவ்வழி
யாதென வினாயதற் கோதா தேகினர்; (225)
பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை
மெய்யோ பொய்யோ? மெய்யினில் எவ்வயின்
உளதென உணர்தியோ? ஒழுங்குகொல், நமது
இளவர சியையங் கனுப்புதல்?

அடிகள்: 229-280 தொகு

குடிலன்:
: .... .... .... இறைவ!
முன்னர்நாம் ஒருநாள் இன்னகர் காண (230)
அழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை
இழைத்திட வோரறை இரந்தனர்.

அருஞ்சொற்பொருள்

மயிலை.சீனி.வேங்கடசாமி
நூல்:மனோன்மணீயம்-பதிப்பு

சீவகன்:
.... .... .... ஆம்ஆம்!
குடிலன்:
அவ்வறை எவ்வறை?
சீவகன்:
: .... .... அதுயான் அறிவேன்.
செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம்
மறுமுறி மணவறை. (235)
குடிலன்:

(தனதுள்)

:.... .... அறிவிது வெகுநலம், (சீவகனை நோக்கி)
உறுவதங் கென்னென உணர்ந்தனை?
சீவகன்:
:.... .... .... உணர்ந்திலேன்.
குடிலன்:
அதுவே கற்படை அறிந்துளேன் பழுது.
செயத்தகு வினையல ஆதலில் திருவுளம்
உணர்த்திலேன் முனிவர் ஓதிய திதுவே.
இவ்வரண் முற்றும் இயற்றிய நமக்குச் (240)
செவ்விதில் இதுவோ செய்தற் கரியது?
சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென
நொந்துதாம் உழைத்ததை நோக்கிடின் நகைப்பே!
சீவகன்:
நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும்
பண்டே கண்டுளோம். பாங்கோ அனுப்புதல்? (245)
குடிலன்:
பழுதல, பாலுணும் குழவிகை யிருப்ப
மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே?
அனையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய
பினையிலை கவலையும் பீதியும் பிறவும்.
உட்பகை வெளிப்பகை எப்பகை யாயினென்? (250)
கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்?
ஆதலால் முனிவர் ஓதிய படியே
அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே.
ஆனால், அறியா அரசகன் னியர்கள்
தேனார் தெரியல் சூடுமுன் இரவில் (255)
தனிவழி யநியர்பால் தங்குதல்....?
சீவகன்:
:.... .... .... தவறே.
குடிலன்:
முநிவரே ஆயினும் அநியரே. உலகம்
பைத்தியம் பழித்திடும், சத்தியம் உணராது.
சீவகன்:
மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல்.
குடிலன்:
அனுப்பினும் அதனால் ஆம்பயன் என்னே? (260)
மனத்துள கவலை மாறுமோ? கவலை
முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும்.
சீவகன்:
அதுவே சரிசரி! ஐயமொன் றில்லை
வதுவைக் கிதுவோ தருணம்?
குடிலன்:
: .... .... .... மன்னவ!
அடியேன் அறிவிப் பதுவுமிங் கதுவே! (265)
கொடிதே நம்நிலை. குற்றமெப் புறமும்.
அடிகள் அறைந்தவா றனுப்பா திருக்கில்
உட்பகைச் சதியால் ஒருகால் வெற்றி
தப்பிடின் நங்குலம் எப்படி ஆமோ?
வைப்பிடம் எங்குபின்? எய்ப்பிடம் எங்கே? (270)
திருமா முனிவரோ கருநா உடையர்,
நம்பிய தலைவரோ வம்பினர், துரோகர்.
இத்தனை பொழுதுமங் கெத்தனை கூச்சல்!
எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்!
முருகனும் நாரா யணனும் மொழிந்த (275)
அருவருப் புரையிங் கறையேன். அவர்தாம்
சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல்
ஏவினர்; அதற்கவர் இசைந்திலர், பிழைத்தேன்!
வேண்டினர் பின்னையும், தூண்டினர் உன்னெதிர்.
சீவகன்:
காண்டும் காண்டும்! கடுஞ்சிறை சேர்த்தனை? (280)

அடிகள்:281- 358. தொகு

குடிலன்:
சேரா திவரைமற் றியாரே விடுவர்.
ஆயினும் தலைவர் நிலைமை இஃதே!
வெல்லுவ தெலாநம் வீரமே அல்லால்
இல்லை அவர்துணை என்பது தெளிவே.
அல்லொடு பகல்போல் அல்லல்செய் கவலையும் (285)
வீரமும் எங்ஙனம் சேருமோ அறியேன்.
கவலைதீர் உபாயம் கருதில், நுவல்தரு
கல்லறை நன்றே கடிமண முடியின்...
கடிமண மதற்கோ, முடிபுனை மன்னர்
வேண்டுமன் றன்றோ ஆண்டகை நினைத்துளை? (290)
வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே,
ஒருநலம் காணின் ஒருநலம் காணேம்
ஏற்ற குணமெலாம் இருப்பினும் இதுபோல்
மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்?
பிரிதலே அரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின் (295)
பொருதலே ஆய்விடிற் பொறுப்பளோ தனியள்!
பூருவ புண்ணியம் அன்றோ, மன்றல்
நேருமுன் இங்ஙனம் நெறியிலான் துர்க்குணம்
வெளியா யினதும்? எளிதோ இறைவ!
வேந்தராப் பிறந்தோர்க் குனைப்போற் சாந்தமும் (300)
பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா
அறம்நிறை அகமும் அறிவும் அமைதல்.
பாண்டமேல் மாற்றலாம் கொண்டபின்! என்செய!
ஆண்டுகள் பழகியும் அறிகிலம் சிலரை.
ஐயோ! இனிநாம் அந்நிய ராயின் (305)
நன்றாய் உசாவியே நடத்துதல் வேண்டும்.
அன்றேற் பெரும்பிழை!
சீவகன்:
... .... ஆஆ! சரியே!
<குடிலன்:dt>
ஆதலின் இறைவ! ஆய்விடத் தெங்கும்
ஏதமே தோன்றுவ தென்னே இந்நிலை?
சீவகன்:
அரசல எனினமக் காம்பிழை என்னை? (310)
குடிலன்:
திருவுளப் பிரியம். தீங்கென் அதனில்?
உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று
முடிமன் னவர்பலர் அடிதொழ நினது
தோழமை பூண்டுநல் ஊழியம் இயற்றும்
வீரமும் மேதையும் தீரமும் திறமும்
குலமும் நலமும் குணமும் கொள்கையும்
நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய்
நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்?
அற்பமோ ஐய!நின் அடிச்சே வகமே?
சீவகன்:
என்னோ மனோன்மணிக் கிச்சை? யறிகிலேன்! (320)
குடிலன்:
மன்னோ மற்றது வெளிப்படை அன்றோ?
அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும்
இருப்பதே என்பதற் கென்தடை? அதற்கு
விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற்
பேணியே கலுழுநள் போலும். பிறர்பால்
நாணியிங்(கு) ஓதாள். வாணியேல் நவில்வள்.
சீவகன்:
உத்தமம்! உத்தமம்! மெத்தவும் உத்தமம்!
பலதே வன்தன் நலமவள் கண்டுளாள்?
குடிலன்:
பலகால் கண்டுளாள். கண்டுளான் இவனும்.
ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண்
‘மனோன்மணி மனோன்மணி’, எனுமந் திரத்தால்
ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன்
சாற்றலும் சற்றுமுன் சாடையாய்க் கேட்டேன்.
ஆயினும் அரச! பேயுல கென்குணம்
அறியா ததனால் வறிதே பலவும்
சாற்றும், தன்னயம் கருதல்போற் பிறர்க்குத்
தோற்றும். அதனால் தூற்றுவர். அதுவும்
மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி.
ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக...
சீவகன்:
ஓதலை, ஓதலை. உனதன் றத்தொழில் (340)
தனையைக் குரியது தந்தையே உணருவன்,
இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும்
அரசனா யாய்கினும் சரியிம் முடிபு.
மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும்
தகைமையில் தகுவதும் இதுவே. அதனால், (345)
குடிலா! மறுக்கலை.
குடிலன்:
.... .... அடியேன், அடியேன்.
சீவகன்:
இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ
முன்னநாம் வைத்த முகூர்த்தம்?
குடிலன்:
.... .... .... ஆம்ஆம்!
சீவகன்:
செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே!
ஆவா எவ்வள வாறின தென்னுளம்! (350)
ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே!
பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர்.
குடிலன்:
.... .... .... பிரிந்துநீர்
இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள்
வெல்லுதும் காண்டி! மீட்குதும் உடனே.
சீவகன்:
நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம் (355)
ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ
வருகுதும் அதற்குள் வதுவைக்
கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே.
(சீவகன் போக)

அடிகள் 359-385 தொகு

ஆசிரியப்பா, 05.

குடிலன்:
தப்பினன் நாரணன்; சாற்றற் கிடமிலை. (தனிமொழி)
இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்? (360)
முனிவரன் வந்ததும், நனிநலம் நமக்கே!
மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள்
வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும்
மொழியாள். சம்மதக் குறியே மௌனம்.
அழுவாள். அதுவும் பிரிவாற் றாமையே (365)
ஆய்விடும். அரச னாய்விலா உளத்துள்
நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம்
முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்?
ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்!
வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை. (370)
(மௌனம்)
ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி
யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல
துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா
றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும்.
(மௌனம்)
சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு (375)
செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே!
எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்!
அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர்,
நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும்
உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன. (380)
என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்?
எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான்!
கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம்
நடுவழி வந்ததும்! விடுகிலம்.
கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே. (பா-5)
(கலித்துறை)
அரிதா நினைத்ததன் அங்கங்கள் யாவும் அழிந்தபின்னும்
புரியே பொருளெனப் போற்றிய சீவகன் புந்தியென்னே!
பிரியாத சார்பு பெயர்ந்து விராகம் பிறந்திடினும்
தெரியாது தன்னிலை ஆணவம் செய்யும் திறஞ்சிறிதே!

நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று. தொகு

ஆசிரியப்பா 12/க்கு அடி 1297
வஞ்சிப்பா 1/க்கு அடி 14
கலித்தாழிசை 3/க்கு அடி 12
கலித்துறை 1/க்கு அடி 04
ஆக அங்கம் 4/க்குப் பா. 17/க்கு அடி 1327.

பார்க்க: தொகு

மனோன்மணீயம்: நான்காம்அங்கம், ஐந்தாங்களத்தின் கதைச்சுருக்கம்

IV:01

IV:02

IV:03

IV:04

I

மனோன்மணீயம் மூலம்(முதல்அங்கம்-பாயிரம்)/

I:1-I:2-I:3-I:4-I:5.

II

II:1-II:2-II:3.

III

III:1-III:2-III:3-III:4.

V

V:1-V:2-V:3-