அகநானூறு/111 முதல் 120 முடிய

அகநானூறு பக்கங்கள்


1. களிற்றியானை நிரை தொகு

பாடல்: 111 (உள்ளாங்கு) தொகு

உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச்சொல் நாணி
வருவர் - வாழி, தோழி!- அரச
யானை கொண்ட துகிற்கொடி போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி 5
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர
மழைஎன மருண்ட மம்மர் பலஉடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங்கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற்கோள் 10
செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக்,
குருதி ஆரும் எருவைச் செஞ்செவி,
மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண்தேர் விளக்கின், தோன்றும்
விண்தோய் பிறங்கல் மலைஇறந் தோரோ! 15

பாடல்: 112 (கூனலெண்கின்) தொகு

கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி
சிதலை செய்த செந்நிலைப் புற்றின்
மண்புனை நெடுங்கோடு உடைய வாங்கி,
இரைநசைப் பரிக்கும் அரைநாட் கங்குல்
ஈன்றுஅணி வயவுப்பிணப் பசித்தென மறப்புலி 5
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஅட்டுக் குழுமும்
பனிஇருஞ் சோலை எமியம் என்னாய்
தீங்குசெய் தனையே, ஈங்குவந் தோயே;
நாள்இடைப் படின், என் தோழி வாழாள்;
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; 10
கழியக் காதலர் ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ?- வான்தோய் வெற்ப!-
கணக்கலை இகுக்கும் கறிஇவர் சிலம்பின்
மணப்புஅருங் காமம் புணர்ந்தமை அறியார், 15
தொன்றுஇயல் மரபின் மன்றல் அயரப்
பெண்கோள் ஒழுக்கம் கண்கொள் நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புதுநாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே! 19

பாடல்: 113 (நன்றல் காலையும்) தொகு

நன்றுஅல் காலையும் நட்பின் கோடார்,
சென்று வழிப்படூஉம் திரிபுஇல் சூழ்ச்சியிற்,
புன்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
அமர்வீசு வண்மகிழ் அஃதைப் போற்றிக்,
காப்புக் கைந்நிறுத்த பல்வேற் கோசர் 5
இளங்கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
வளம்கெழு நன்னாடு அன்னஎன் தோள்மணந்து,
அழுங்கன் மூதூர் அலர்எடுத்து அரற்ற,
நல்காது துறந்த காதலர், 'என்றும்
கல்பொரூஉ மெலியாப் பாடின் நோன்அடியன் 10
அல்கு வன்சுரைப் பெய்த வல்சியர்
இகந்தன ஆயினும், இடம்பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பிற்
குவைஇமில் விடைய வேற்றுஆ ஒய்யும்
கனைஇருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல் 15
விழவுஅயர்ந் தன்ன கொழும்பல் திற்றி
எழாஅப் பாணன் நன்னாட்டு உம்பர்,
நெறிசெல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறிபடை கழீஇய சேயரிச் சின்னீர்
அறுதுறை அயிர்மணற் படுகரைப் போகிச், 20
சேயர்' என்றலின், சிறுமை உற்றஎன்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம் - பராரை
அலங்கல் அம்சினைக் குடம்பை புல்லெனப்
புலம்பெயர் மருங்கிற் புள்எழுந் தாங்கு, 25
மெய்இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கிற் செலீஇயர், என் உயிரே! 27

பாடல்: 114 (கேளாயெல்ல) தொகு

கேளாய், எல்ல! தோழி! வேலன்
வெறிஅயர் களத்துச் சிறுபல தாஅய
விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவின்,
உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு,
அரவுநுங்கு மதியின், ஐயென மறையும் 5
சிறுபுன் மாலையும் உள்ளார், அவர்என
நம்புலந்து உறையும் எவ்வம், நீங்க
நூல்அறி வலவ! கடவுமதி, உவக்காண்
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை,
யாமம் கொள்பவர் நாட்டிய நளிசுடர் 10
வானக மீனின் விளங்கித் தோன்றும்,
அருங்கடிக் காப்பின், அஞ்சுவரு மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசுஇல் கற்பின்,
அரிமதர் மழைக்கண், அமைபுரை பணைத்தோள்,
அணங்குசால், அரிவையைக் காண்குவம்-
பொலம்படைக் கலிமாப் பூண்ட தேரே! 16

பாடல்: 115 (அழியாவிழவி்ன்) தொகு

அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழிஇலர் ஆயினும், பலர்புறங் கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர், வெஞ்சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன் 5
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோய்இல ராக, நம் காதலர் - வாய்வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின்முன் பரித்துஇடூஉப் பழிச்சிய
வள்உயிர் வணர்மருப்பு அன்ன, ஒள்இணர்ச் 10
சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடைப்,
பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானை,
சினம்மிகு முன்பின், வாமான், அஞ்சி
இனம்கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை 15
நன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டு
நம்நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடா மையின், நீடி யோரே! 18

பாடல்: 116 (எரியகைந்தன்ன) தொகு

எரியகைந் தன்ன தாமரை இடைஇடை
அரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர்
கட்கொண்டு மறுகும் சாகாடு அளற்றுஉறின்,
ஆய்கடும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
பெரிய நாண்இலை மன்ற; பொரிஎனப் 5
புன்குஅவிழ் அகன்துறைப் பொலிய, ஒள்நுதல்,
நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல்
மாழை நோக்கின், காழ்இயன் வனமுலை,
எஃகுடை எழில்நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே, 10
பொய்புறம் பொதிந்துயாம் கரப்பவும் கையிகந்து
அலர்ஆ கின்றால் தானே; மலர் தார்,
மையணி யானை, மறப்போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
உடன்இயைந்து எழுந்த இருபெரு வேந்தர் 15
கடன்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழியப், பரந்துஅவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடுகொள் வியன்களத்து ஆர்ப்பினும் பெரிதே! 19

பாடல்: 117 (மௌவலொடு) தொகு

மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்,
அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர்வினை
வளம்கெழு திருநகர் புலம்பப் போகி,
வெருவரு கவலை ஆங்கண், அருள்வரக், 5
கருங்கால் ஓமை ஏறி, வெண்தலைப்
பருந்து பெடைபயிரும் பாழ்நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச், சேவடிச்
சிலம்புநக இயலிச் சென்றஎன் மகட்கே-
சாந்துஉளர் வணர்குரல் வாரி, வகைவகுத்து 10
யான்போது துணைப்பத், தகரம் மண்ணாள்,
தன்ஓ ரன்ன தகைவெங் காதலன்
வெறிகமழ் பன்மலர் புனையப் பின்னுவிடச்
சிறுபுறம் புதைய நெறிபுதாழ்ந் தனகொல்-
நெடுங்கால் மாஅத்து ஊழுறு வெண்பழம் 15
கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம்நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? 19

பாடல்: 118 (கறங்குவெள்ளருவி) தொகு

கறங்குவெள் அருவி பிறங்குமலைக் கவாஅன்,
தேங்கமழ் இணர வேங்கை சூடித்,
தொண்டகப் பறைச்சீர்ப் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
இயல்முருகு ஒப்பினை, வயநாய் பிற்பட 5
பகல்வரின் கவ்வை அஞ்சுதும்; இகல்கொள,
இரும்பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப்,
பெருங்கை யானைக் கோள்பிழைத்து, இரீஇய
அடுபுலி வழங்கும் ஆர்இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்; 10
என்ஆ குவள்கொல் தானே? பல்நாள்
புணர்குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளிகடி பாடலும் ஒழிந்தனள்;
அளியள் தான்,நின் அளி அலது இலளே! 14

பாடல்: 119 (நுதலுந்தோளும்) தொகு

'நுதலும், தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும் வாட
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
'வரைவுநன்று' என்னாது அகலினும், அவர் - வறிது,
ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை, 5
ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப,
நெறியயல் திரங்கும் அத்தம்; வெறிகொள,
உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில்,
நோன்சிலை மழவர் ஊன்புழுக்கு அயரும்
சுரன்வழக்கு அற்றது என்னாது, உரஞ்சிறந்து, 10
நெய்தல் உருவின் ஐதுஇலங்கு அகல்இலைத்,
தொடைஅமை பீலிப் பொலிந்த கடிகை,
மடைஅமை திண்சுரை, மரக்காழ் வேலொடு
தணிஅமர் அழுவம் தம்மொடு துணைப்பத்,
துணிகுவர் கொல்லோ தாமே - துணிகொள 15
மறப்புலி உழந்த வசிபடு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டிப்
படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
கைதோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை,
மைதோய் சிமைய, மலைமுதல் ஆறே! 20

பாடல்: 120 (நெடுவேள்) தொகு

நெடுவேள் மார்பின் ஆரம் போலச்,
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப,
எல்லை பைப்பய கழிப்பிக், குடவயின்
கல்சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு - 5
மதர்எழில் மழைக்கண் கலுழ, இவளே
பெருநாண் அணிந்த நறுமென் சாயல்
மாண்நலம் சிதைய ஏங்கி, ஆனாது
அழல்தொடங் கினளே - பெரும;- அதனால்
கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி 10
நெடுநீர் இருங்கழி பரிமெலிந்து அசைஇ,
வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ -
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
சிறுகுரல் நெய்தல்எம் பெருங்கழி நாட்டே! 16

சங்கச் சான்றோர் பாடியருளிய அகநானூற்றின் 'களிற்றியானை நிரை' முற்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/111_முதல்_120_முடிய&oldid=480915" இலிருந்து மீள்விக்கப்பட்டது