அகநானூறு/181 முதல் 190 முடிய

அகநானூறு பக்கங்கள்


2. மணிமிடை பவளம் தொகு

181 பூங்கண் வேங்கைப் பொன்னிணர் மிலைந்து,
வாங்கமை நோன்சிலை எருத்தத்து இரீஇ,
தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்
வீளைஅம்பின் இளையரொடு மாந்தி,
ஓட்டியல் பிழையா வயநாய் பிற்பட, 5
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர,
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாடே!
அரவுஎறி உருமோடு ஒன்றிக் கால்வீழ்த்து
உரவுமழை பொழிந்த பானாட் கங்குல், 10
தனியை வந்த ஆறுநினைந்து அல்கலும்,
பனியொடுகலுழும் இவள் கண்ணே: அதனால்,
கடும்பகல் வருதல் வேண்டும் - தெய்ய
அதிர்குரல் முதுகலை கறிமுறி முனைஇ,
உயர்சிமை நெடுங்கோட்டு உகள, உக்க 15
கமழ்இதழ் அலரி தாஅய் வேலன்
வெறிஅயர் வியன்களம் கடுக்கும்
பெருவரை நண்ணிய சார லானே. 18

182 'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ்வரி வாடவும்,
அத்தம்ஆர் அழுவம் நத்துறந்து அருளார்
சென்றுசேண் இடையர் ஆயினும், நன்றும்
நீடலர், என்றி - தோழி !- பாடுஆன்று 5
பனித்துறைப் பெருங்கடல் இறந்து, நீர் பருகி,
குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்குஏர்பு,
வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே - மாலைக் 10
குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி
வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற,
பனிஅலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? 15

183 கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்ன ராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிதுஆ கின்றால், சிறக்க, நின் ஆயுள்!
அருந்தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு 5
சுரும்புஇமிர் மலர கானம் பிற்பட
வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளிப்
புன்தலை புதைத்த கொழுங்கொடி முல்லை
ஆர்கழல் புதுப்பூ உயிர்ப்பின் நீக்கித், 10
தெள்அறல் பருகிய திரிமருப்பு எழிற்கலை
புள்ளிஅம் பிணையொடு வதியும் ஆங்கண்,
கோடுடைக் கையர், துளர்எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்கச்,
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் 15
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
கற்பால் அருவியின் ஒலிக்கும் நற்றேர்த்
தார்மணி பலஉடன் இயம்ப-
சீர்மிகு குருசில்!- நீ வந்துநின் றதுவே. 19

184 எல்வளை ஞெகிழச் சாஅய், ஆய்இழை
நல்எழிற் பணைத்தோள் இருங்கவின் அழிய,
பெருங்கை யற்ற நெஞ்சமொடு நத்துறந்து,
இரும்பின் இன்உயிர் உடையோர் போல,
வலித்து வல்லினர், காதலர்: வாடல் 5
ஒலிகழை நிவந்த நெல்லுடை நெடுவெதிர்
கலிகொள் மள்ளர் வில்விசையின் உடைய,
பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண், வான்உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில் 10
பெருவிழா விளக்கம் போலப், பலவுடன்
இலைஇல மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல் மலைஇறந் தோரே. 13
185 வானம் வேண்டா வறனில் வாழ்க்கை
நோன்ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்
மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகலிலை
இருங்கயம் துளங்கக், கால்உறு தொறும் 5
பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே: நட்பே,
கொழுங்கோல் வேழத்துப் புணைதுணை யாகப்
புனல்ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
ஒண்தொடி மகளிர் பண்டையாழ் பாட, 10
ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண்நறுஞ் சாந்தம் கமழும் தோள்மணந்து,
இன்னும் பிறள்வயி னானே: மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப, வென்வேல்
மாரி அம்பின், மழைத்தோற் பழையன் 15
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலனே: உரிதினின்
யாம்தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்
திருநுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும், தன் உடன்உறை பகையே. 20

186 தோள்புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள்பல நீடிய கரந்துஉறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கிச், சேய்நாட்டு
அரும்பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
நம் உயர்வு உள்ளினர் காதலர் - கறுத்தோர் . 5
தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி,
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன,
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ - தோழி !- சேண்ஓங்கு 10
அலந்தலை ஞெமையத்து ஆள்இல் ஆங்கண்,
கல்சேர்பு இருந்த சில்குடிப் பாக்கத்து,
எல்விருந்து அயர, ஏமத்து அல்கி,
மனைஉறை கோழி அணல்தாழ்பு அன்ன
கவைஒண் தளிர கருங்கால் யாஅத்து 15
வேனில் வெற்பின் கானம் காய,
முனைஎழுந்து ஓடிய கெடுநாட்டு ஆர்இடை,
பனைவெளிறு அருந்து பைங்கண் யானை
ஒண்சுடர் முதிரா இளங்கதிர் அமையத்து,
கண்படு பாயல் கைஒடுங்கு அசைநிலை 20
வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீந்தி,
நாள்வேட்டு எழுந்த நயன்இல் பரதவர்
வைகுகடல் அம்பியின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே? 24

187 பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!
இருண்டுஉயர் விசும்பின் வலன்ஏர்பு வளைஇப்,
போர்ப்புஉறு முரசின் இரங்கி, முறைபுரிந்து
அறன்நெறி பிழையாத் திறன்அறி மன்னர்
அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர் 5
கழித்துஎறி வாளின், நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
கொன்னே செய்தியோ, அரவம்? பொன்னென
மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்,
பொலிந்த ஆயமொடு காண்தக இயலித், 10
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
அழலேர் செயலை அம்தழை அசைஇயும்,
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ? வாழிய, மழையே! 14
188 பசும்பழப் பலவின் கானம் வெம்பி,
விசும்புகண் அழிய, வேனில் நீடிக்,
கயம்கண் அற்ற கல்லோங்கு வைப்பின்
நாறுஉயிர் மடப்பிடி தழீஇ, வேறுநாட்டு
விழவுப்படர் மள்ளரின் முழவெடுத்து உயரிக், 5
களிறுஅதர்ப் படுத்த கல்லுயர் 'கவாஅன்
வெவ்வரை அத்தம் சுட்டிப்' பையென,
வயல்அம் பிணையல் வார்ந்த கவாஅன்
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் 10
படர்மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
மனைமருண்டு இருந்த என்னினும், நனைமகிழ்
நன்ன ராளர் கூடுகொள் இன்னியம்
தேர்ஊர் தெருவில் ததும்பும்
ஊர்இழந் தன்று, தன் வீழ்வுஉறு பொருளே. 15

189 திரைஉழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எற்பட,
வருதிமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
ஒருதன் கொடுமையின் அலர்பா டும்மே;
அலமரல் மழைக்கண் அமர்ந்து நோக்காள்; 5
அலையல் - வாழி ! வேண்டு, அன்னை!- உயர்சிமைப்
பொதும்பில், புன்னைச் சினைசேர்பு இருந்த
வம்ப நாரை இரிய, ஒருநாள்,
பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை 10
இருங்கழி புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச்சுறா எறிந்தென: வலவன் அழிப்ப,
எழிற்பயம் குன்றிய சிறைஅழி தொழில
நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
இழுமென் கானல் விழுமணல் அசைஇ, 15
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றே இலனே! 17

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/181_முதல்_190_முடிய&oldid=480925" இலிருந்து மீள்விக்கப்பட்டது